seevagachinthamani - 9


8 விமலையார் இலம்பகம்


 
#1889
முருகு கொப்புளிக்கும் கண்ணி முறி மிடை படலை மாலை
குருதி கொப்புளிக்கும் வேலான் கூந்தல்மா இவர்ந்து செல்ல
உருவ வெம் சிலையினார்க்கு தம்பி இஃது உரைக்கும் ஒண் பொன்
பருகு பை கழலினாருள் பதுமுகன் கேட்க என்றே

#1890
விழு மணி மாசு மூழ்கி கிடந்தது இ உலகம் விற்ப
கழுவினீர் பொதிந்து சிக்க கதிர் ஒளி மறைய காப்பின்
தழுவினீர் உலகம் எல்லாம் தாமரை உறையும் செய்யாள்
வழுவினார்-தம்மை புல்லாள் வாழ்க நும் கண்ணி-மாதோ

#1891
தொழுத தம் கையினுள்ளும் துறு முடி அகத்தும் சோர
அழுத கண்ணீரினுள்ளும் அணிகலத்து அகத்தும் ஆய்ந்து
பழுது கண்ணரிந்து கொல்லும் படை உடன் ஒடுங்கும் பற்றாது
ஒழிக யார்-கண்ணும் தேற்றம் தெளிகுற்றார் விளிகுற்றாரே

#1892
தோய் தகை மகளிர் தோயில் மெய் அணி நீக்கி தூ நீர்
ஆய் முதுமகளிர்-தம்மால் அரில் தப திமிரி ஆட்டி
வேய் நிற தோளினார்க்கு வெண் துகில் மாலை சாந்தம்
தான் நல கலங்கள் சேர்த்தி தட முலை தோய்க என்றான்

#1893
வண்ண பூ மாலை சாந்தம் வால் அணிகலன்கள் ஆடை
கண் முகத்து உறுத்தி தூய்மை கண்டலால் கொள்ள வேண்டா
அண்ணல் அம் புள்ளோடு அல்லா ஆயிரம் பேடை சேவல்
உண்ணும் நீர் அமிழ்தம் காக்க யூகமோடு ஆய்க என்றான்

#1894
அஞ்சன கோலின் ஆற்றா நாகம் ஓர் அருவி குன்றின்
குஞ்சரம் புலம்பி வீழ கூர் நுதி எயிற்றில் கொல்லும்
பஞ்சியின் மெல்லிதேனும் பகை சிறிது என்ன வேண்டா
அஞ்சி தற்காத்தல் வேண்டும் அரும் பொருளாக என்றான்

#1895
பொருந்தலால் பல்லி போன்றும் போற்றலால் தாயர் ஒத்தும்
அரும் தவர் போன்று காத்தும் அடங்கலால் ஆமை போன்றும்
திருந்து வேல் தெவ்வர் போல தீது அற எறிந்தும் இன்ப
அருந்தினால் மனைவி ஒத்தும் மதலையை கா-மின் என்றான்

#1896
பூம் துகில் மாலை சாந்தம் புனை கலம் பஞ்ச வாச
ஆய்ந்து அளந்து இயற்றப்பட்ட அடிசில் நீர் இன்ன எல்லாம்
மாந்தரின் மடங்கல் ஆற்றல் பதுமுகன் காக்க என்று ஆங்கு
ஏந்து பூண் மார்பன் ஏவ இன்னணம் இயற்றினானே

#1897
சிறு கண் யானையின் இனம் சேர்ந்து சேவகம் கொள
துறுகல் என்று உணர்கலா துள்ளி மந்தி மக
நறிய சந்தின் துணி நாற வெந்தனகள் கொண்டு
எறிய எள்கி மயிர் கவரிமா இரியுமே

#1898
புகழ் வரை சென்னி மேல் பூசையில் பெரியன
பவழமே அனையன பல் மயிர் பேர் எலி
அகழும் இங்குலிகம் அஞ்சன வரை சொரிவன
கவழ யானையின் நுதல் தவழும் கச்சு ஒத்தவே

#1899
அண்ணல் அம் குன்றின் மேல் வருடை பாய்ந்து உழக்கலின்
ஒண் மணி பல உடைந்து ஒருங்கு அவை தூளியாய்
விண் உளு உண்டு என வீழும் மா நில மிசை
கண் அகல் மரம் எலாம் கற்பகம் ஒத்தவே

#1900
மானிடம் பழுத்தன கிலுத்தம் மற்று அவற்று அயல்
பால் முரண் பயம்பு-இடை பனை மடிந்து அனையன
கான்-இடை பாந்தள் கண்படுப்பன துயில் எழ
ஊன் உடை பொன் முழை யாளி நின்று உலம்புமே

 
 
#1901
சாரல் அம் திமிசு இடை சந்தன தழை-வயின்
நீர தீம்பூ மரம் நிரந்த தக்கோலமும்
ஏர் இலவங்கமும் இன் கருப்பூரமும்
ஓரும் நாவி கலந்து ஓசனை கமழுமே

#1902
மைந்தரை பார்ப்பன மா மகள் மா குழாம்
சந்தனம் மேய்வன தவழ் மத களிற்று இனம்
அம் தழை காடு எலாம் திளைப்ப ஆமான் இனம்
சிந்த வால் வெடிப்பன சிங்கம் எங்கும் உள

#1903
வருக்கையின் கனி-தொறும் வானரம் பாய்ந்து உராய்
பொருப்பு எலாம் பொன் கிடந்து ஒழுகி மேல் திருவில் வீழ்ந்து
ஒருங்கு குலாய் நில மிசை மிளிர்வது ஒத்து ஒளிர் மணி
திரு கிளர் ஒளி குலாய் வானகம் செகுக்குமே

#1904
வீழ் பனி பாறைகள் நெறி எலாம் வெம் வெயில்
போழ்தலின் வெண்ணெய் போல் பொழிந்து மட்டு ஒழுகுவ
தாழ் முகில் சூழ் பொழில் சந்தன காற்று அசைந்து
ஆழ் துயர் செய்யும் அ அரு வரை சாரலே
#1905
கூகையும் கோட்டமும் குங்குமமும் பரந்து
ஏகல் ஆகா நிலத்து அல்கி விட்டு எழுந்து போய்
தோகையும் அன்னமும் தொக்கு உடன் ஆர்ப்பது ஓர்
நாக நல் காவினுள் நயந்துவிட்டார்களே
#1906
பூத்து அகில் தவழும் போர்வை பூசு சாந்து ஆற்றி பொன் நூல்
கோத்து நீர் பிலிற்றும் காந்தம் குங்கும வைர பொன் கோய்
சாத்துறி பவழ கன்னல் சந்தன ஆலவட்டம்
நீத்தவர் இடத்து நாற்றி நிழல் மணி உலகம் செய்தார்
#1907
நித்தில முலையினார் தம் நெடும் கணால் நோக்கப்பெற்றும்
கைத்தலம் தீண்டப்பெற்றும் கனிந்தன மலர்ந்த காண்க
வைத்து அலர் கொய்ய தாழ்ந்த மரம் உயிர் இல்லை என்பார்
பித்து அலர்-ஆயின் பேய்கள் என்று அலால் பேசலாமோ
#1908
பொறி மயில் இழியும் பொன் தார் முருகனின் பொலிந்து மாவின்
நெறிமையின் இழிந்து மைந்தன் மணி கை மத்திகையை நீக்கி
வெறுமையினவரை போக்கி வெள்ளிடை படாத நீரால்
அறி மயில் அகவும் கோயில் அடிகளை செவ்வி என்றான்
#1909
எல் இருள் கனவில் கண்டேன் கண் இடன் ஆடும் இன்னே
பல்லியும் பட்ட பாங்கர் வரும்-கொலோ நம்பி என்று
சொல்லினள் தேவி நிற்ப பதுமுகன் தொழுது சேர்ந்து
நல் அடி பணிந்து நம்பி வந்தனன் அடிகள் என்றான்
#1910
எங்கணான் ஐயன் என்றாட்கு அடியன் யான் அடிகள் என்னா
பொங்கி வில் உமிழ்ந்து மின்னும் புனை மணி கடம் ஆர்ந்த
தங்கு ஒளி தட கை கூப்பி தொழுது அடி தழுவி வீழ்ந்தான்
அங்கு இரண்டு அற்பு முன் நீர் அலை கடல் கலந்தது ஒத்தார்
#1911
திருவடி தொழுது வீழ்ந்த சிறுவனை கண்ட-போழ்தே
வரு பனி சுமந்த வாள் கண் வன முலை பொழிந்த தீம் பால்
முருகு உடை மார்பின் பாய்ந்து முழு மெயும் நனைப்ப மாதர்
வருக என் களிறு என்று ஏத்தி வாங்குபு தழுவிக்கொண்டாள்
#1912
காளை ஆம் பருவம் ஓராள் காதல் மீக்கூர்தலாலே
வாளை ஆம் நெடிய கண்ணாள் மகனை மார்பு ஒடுங்க புல்லி
தாள் ஐயா முன்பு செய்த தவத்தது விளைவு இலாதேன்
தோள் அயா தீர்ந்தது என்றாள் தொழு தகு தெய்வம் அன்னாள்
#1913
வாள் திறல் குருசில் தன்னை வாள் அமரகத்துள் நீத்து
காட்டகத்து உம்மை நீத்த கயத்தியேன் காண வந்தீர்
சேடு இளம் பருதி மார்பின் சீவகசாமியீரே
ஊட்டு அரக்கு உண்ட செந்தாமரை அடி நோவ என்றாள்
#1914
கெடலரும்-குரைய கொற்றம் கெட பிறந்ததுவும் அன்றி
நடலையுள் அடிகள் வைக நட்புடையவர்கள் நைய
இடைமகன் கொன்ற இன்னா மரத்தினேன் தந்த துன்ப
கடலகத்து அழுந்த வேண்டா களைக இ கவலை என்றான்
#1915
யான் அலன் ஔவை ஆவாள் சுநந்தையே ஐயற்கு என்றும்
கோன் அலன் தந்தை கந்துக்கடன் என குணத்தின் மிக்க
பால் நிலத்து உறையும் தீம் தேன் அனையவாய் அமிர்தம் ஊற
மான் நலம் கொண்ட நோக்கி மகன் மனம் மகிழ சொன்னாள்
#1916
எனக்கு உயிர் சிறுவன் ஆவான் நந்தனே ஐயன் அல்லை
வனப்பு உடை குமரன் இங்கே வருக என மருங்கு சேர்த்தி
புன கொடி மாலையோடு பூம் குழல் திருத்தி போற்றார்
இனத்து-இடை ஏறு அனானுக்கு இன் அளி விருந்து செய்தாள்
#1917
சிறகரால் பார்ப்பு புல்லி திரு மயில் இருந்ததே போல்
இறைவி தன் சிறுவர்-தம்மை இரு கையினாலும் புல்லி
முறைமுறை குமரர்க்கு எல்லா மொழி அமை முகமன் கூறி
அறுசுவை அமிர்தம் ஊட்டி அறு பகல் கழிந்த பின் நாள்
#1918
மரவம் நாகம் மணம் கமழ் சண்பகம்
குரவம் கோங்கம் குடம் புரை காய் வழை
விரவு பூ பொழில் வேறு இருந்து ஆய் பொருள்
உருவ மாதர் உரைக்கும் இது என்பவே
#1919
நலிவு இல் குன்றொடு காடு உறை நல் பொருள்
புலி அனார் மகள் கோடலும் பூமி மேல்
வலியின் மிக்கவர்-தம் மகள் கோடலும்
நிலை கொள் மன்னர் வழக்கு என நேர்பவே
#1920
நீதியால் அறுத்து அ நிதி ஈட்டுதல்
ஆதி ஆய அரும் பகை நாட்டுதல்
மோதி முள்ளொடு முள் பகை கண்டிடல்
பேது செய்து பிளந்திடல் பெட்டதே
#1921
ஒற்றர்-தங்களை ஒற்றரின் ஆய்தலும்
கற்ற மாந்தரை கண் என கோடலும்
சுற்றம் சூழ்ந்து பெருக்கலும் சூது-அரோ
கொற்றம் கொள் குறி கொற்றவற்கு என்பவே
#1922
வென்றி ஆக்கலும் மேதகவு ஆக்கலும்
அன்றியும் கல்வியோடு அழகு ஆக்கலும்
குன்றினார்களை குன்று என ஆக்கலும்
பொன் துஞ்சு ஆகத்தினாய் பொருள் செய்யுமே
#1923
பொன்னின் ஆகும் பொரு படை அ படை
தன்னின் ஆகும் தரணி தரணியின்
பின்னை ஆகும் பெரும் பொருள் அ பொருள்
துன்னும்-காலை துன்னாதன இல்லையே
#1924
நிலத்தின் நீங்கி நிதியினும் தேய்ந்து நல்
குலத்தின் குன்றிய கொள்கையம் அல்லதூஉம்
கலைக்கணாளரும் இங்கு இல்லை காளை நீ
வலித்தது என் என வள்ளலும் கூறுவான்
#1925
எரியொடு நிகர்க்கும் ஆற்றல் இடி குரல் சிங்கம் ஆங்கு ஓர்
நரியொடு பொருவது என்றால் சூழ்ச்சி நல் துணையொடு என் ஆம்
பரிவொடு கவல வேண்டா பாம்பு அவன் கலுழன் ஆகும்
சொரி மது சுரும்பு உண் கண்ணி சூழ் கழல் நந்தன் என்றான்
#1926
கெலுழனோ நந்தன் என்னா கிளர் ஒளி வனப்பினானை
கலுழ தன் கையால் தீண்டி காதலின் களித்து நோக்கி
வலி கெழு வயிர தூண் போல் திரண்டு நீண்டு அமைந்த திண் தோள்
கலி கெழு நிலத்தை காவாது ஒழியுமோ காளைக்கு என்றாள்
#1927
இடத்தொடு பொழுதும் நாடி எ வினை-கண்ணும் அஞ்சார்
மடப்படல் இன்றி சூழும் மதி வல்லார்க்கு அரியது உண்டோ
கடத்து-இடை காக்கை ஒன்றே ஆயிரம் கோடி கூகை
இடத்து-இடை அழுங்க சென்று ஆங்கு இன்னுயிர் செகுத்தது அன்றே
#1928
இழை பொறை ஆற்றகில்லாது இட்டிடை தளர நின்ற
குழை நிற முகத்தினார் போல் குறித்ததே துணிந்து செய்யார்
முழை உறை சிங்கம் பொங்கி முழங்கி மேல் பாய்ந்து மை தோய்
வழை உறை வனத்து வன்கண் நரி வலைப்பட்டது அன்றே
#1929
ஊழி-வாய் தீயொடு ஒப்பான் பதுமுகன் உரைக்கும் ஒன்னார்
ஆழி-வாய் துஞ்ச மற்று எம் ஆற்றலால் நெருங்கி வென்று
மாழை நீள் நிதியம் துஞ்சும் மா நில கிழமை எய்தும்
பாழியால் பிறரை வேண்டேம் பணிப்பதே பாணி என்றான்
#1930
பொருவரும்-குரைய மைந்தர் பொம்மென உரறி மற்று இ
திரு இருந்து அகன்ற மார்பன் சேவடி சேர்ந்த யாங்கள்
எரி இருந்து அயரும் நீர்மை இரும் கதிர் ஏற்ற தெவ்வர்
வரு பனி இருளும் ஆக மதிக்க எம் அடிகள் என்றார்
#1931
கார் தோன்றவே மலரும் முல்லை கமலம் வெய்யோன்
தேர் தோன்றவே மலரும் செம்மல் நின் மாமன் மற்று உன்
சீர் தோன்றவே மலரும் சென்று அவன் சொல்லினோடே
பார் தோன்ற நின்ற பகையை செறல்-பாலை என்றாள்
#1932
நன்று அ பொருளே வலித்தேன் மற்று அடிகள் நாளை
சென்று அ பதியுள் எமர்க்கே எனது உண்மை காட்டி
அன்றை பகலே அடியேன் வந்து அடைவல் நீமே
வென்றி களிற்றானுழை செல்வது வேண்டும் என்றான்
#1933
வேல் தைவந்து அன்ன நுதி வெம் பரல் கானம் முன்னி
நூற்றைவரோடு நடந்தாள் நுதி வல் வில் மைந்தன்
காற்றில் பரிக்கும் கலிமான் மிசை காவல் ஓம்பி
ஆற்றற்கு அமைந்த படையோடு அதர் முன்னினானே
#1934
மன்றற்கு இடனாம் மணி மால் வரை மார்பன் வான் கண்
நின்று எ திசையும் அருவி புனல் நீத்தம் ஓவா
குன்றும் குளிர் நீர் தடம் சூழ்ந்தன கோல யாறும்
சென்று அ பழனம் படப்பை புனல் நாடு சேர்ந்தான்
#1935
காவின் மேல் கடி மலர் தெகிழ்ந்த நாற்றமும்
வாவியுள் இன மலர் உயிர்த்த வாசமும்
பூ விரி கோதையர் புனைந்த சாந்தமும்
ஏவலாற்கு எதிரெதிர் விருந்து செய்தவே
#1936
கரும்பின் மேல் தொடுத்த தேன் கலி கொள் தாமரை
சுரும்பின் வாய் துளித்தலின் துவைத்த வண்டொடு
திருந்தி யாழ் முரல்வது ஓர் தெய்வ பூம் பொழில்
பொருந்தினான் புனை மணி பொன் செய் பூணினான்
#1937
பொறை விலங்கு உயிர்த்தன பொன் செய் மா மணி
செறி கழல் இளைஞரும் செல்லல் நீங்கினார்
நறை விரி கோதையர் நாமவேலினாற்கு
அறுசுவை நால் வகை அமுதம் ஆக்கினார்
#1938
கட்டியின் அரிசியும் புழுக்கும் காணமும்
புட்டில்-வாய் செறித்தனர் புரவிக்கு அல்லவும்
நெட்டு இரும் கரும்பொடு செந்நெல் மேய்ந்து நீர்
பட்டன வள நிழல் பரிவு தீர்ந்தவே
#1939
குழி மது குவளை அம் கண்ணி வார் குழல்
பிழி மது கோதையர் பேண இன் அமுது
அழி மத களிறு அனான் அயின்ற பின்னரே
கழி மலர் விழித்த கண் கமலம் பட்டவே
#1940
எரி மணி இமைத்தன எழுந்த தீ புகை
புரி நரம்பு இரங்கின புகன்ற தீம் குழல்
திரு மணி முழவமும் செம்பொன் பாண்டிலும்
அரு மணியின் குரல் அரவம் செய்தவே
#1941
தெளித்த இன் முறுவல் அம் பவளம் செற்றவாய்
களி கயல் மழை கணார் காமம் காழ் கொளீஇ
விளித்த இன் அமிர்து உறழ் கீதம் வேனலான்
அளித்த பின் அமளி அம் சேக்கை எய்தினான்
#1942
தீம் கரும்பு அனுக்கிய திருந்து தோள்களும்
வீங்கு எழில் தோள்களும் மிடைந்து வெம் முலை
பூ குளிர் தாரொடு பொருது பொன் உக
ஈங்கனம் கனை இருள் எல்லை நீந்தினான்
#1943
கனை கதிர் கடவுள் கண் விழித்த-காலையே
நனை மலர் தாமரை நக்க வண் கையால்
புனை கதிர் திருமுகம் கழுவி பூ மழை
முனைவனுக்கு இறைஞ்சினான் முருகவேள் அனான்
#1944
நாள்கடன் கழித்த பின் நாமவேலினான்
வாள் கடி எழில் நகர் வண்மை கணிய
தோள் பொலி மணி வளை தொய்யின் மாதரார்
வேட்பது ஓர் வடிவொடு விரைவின் எய்தினான்
#1945
அலத்தக கொழும் களி இழுக்கி அம் சொலார்
புலத்தலின் களைந்த பூண் இடறி பொன் இதழ்
நிலத்து உகும் மாலை கால் தொடர்ந்து நீள் நகர்
செல குறைபடாதது ஓர் செல்வம் மிக்கதே
#1946
கத்திகை கழுநீர் கமழ் கோதையர்
பத்தியிற்படு சாந்து அணி வெம் முலை
சித்தியில் படர் சிந்தையினாரையும்
இ திசை படர்வித்திடு நீரவே
#1947
வஞ்சி வாட்டிய வாள் மின் நுசுப்பினார்
பஞ்சி ஊட்டிய பாடக சீறடி
குஞ்சி சூட்டிய மைந்தர் குழாம் அலால்
இஞ்சி வட்டம் இடம் பிறிது இல்லையே
#1948
மின்னின் நீள் கடம்பின் நெடுவேள்-கொலோ
மன்னும் ஐ கணை வார் சிலை மைந்தனோ
என்னனோ அறியோம் உரையீர் எனா
பொன் அம் கொம்பு அனையார் புலம்பு எய்தினார்
#1949
விண்ணகத்து இளையான் அன்ன மெய்ப்பொறி
அண்ணலை கழி மீன் கவர் புள் என
வண்ண ஆர் குழல் ஏழையர் வாள் நெடும்
கண் எலாம் கவர்ந்து உண்டிடுகின்றவே
#1950
புலா தலை திகழும் வை வேல் பூ கழல் காலினானை
நிலா தலை திகழும் பைம் பூண் நிழல் மணி வடத்தோடு ஏந்தி
குலாய் தலை கிடந்து மின்னும் குவி முலை பாய வெய்தாய்
கலாய் தொலை பருகுவார் போல் கன்னியர் துவன்றினாரே
 
மேல்
 
#1951
வேல் நெடும் கண்கள் அம்பா வில் படை சாற்றி எங்கும்
தேன் நெடும் கோதை நல்லார் மைந்தனை தெருவில் எய்ய
மான் நெடு மழை கண் நோக்கி வானவர் மகளும் ஒப்பாள்
பால் நெடும் தீம் சொலாள் ஓர் பாவை பந்து ஆடுகின்றாள்
#1952
குழல் மலிந்த கோதை மாலை பொங்க வெம் கதிர் முலை
நிழல் மலிந்த நேர் வடம் நிழல் பட புடைத்தர
எழில் மணி குழை வில் வீச இன் பொன் ஓலை மின் செய
அழல் மணி கலாபம் அம் சிலம்பொடு ஆர்ப்ப ஆடுமே
#1953
அங்கை அம் தலத்து அகத்த ஐந்து பந்து அமர்ந்தவை
மங்கை ஆட மாலை சூழும் வண்டு போல வந்து உடன்
பொங்கி மீது எழுந்து போய் பிறழ்ந்து பாய்தல் இன்றியே
செம் கயல் கண் புருவம் தம்முள் உருவம் செய்ய திரியுமே
#1954
மாலையுள் கரந்த பந்து வந்து கை தலத்தவாம்
ஏலம் நாறு இரும் குழல் புறத்த வாள் முகத்தவாம்
நூலின் நேர் நுசுப்பு நோவ உச்சி மாலை உள்ளவாம்
மேல் எழுந்த மீ நிலத்த விரல கைய ஆகுமே
#1955
கொண்டு நீங்கல் கோதை வேய்தல் குங்குமம் அணிந்து உராய்
எண் திசையும் ஏணி ஏற்று இலங்க நிற்றல் பத்தியின்
மண்டிலம் வர புடைத்தல் மயிலின் பொங்கி இன்னணம்
வண்டும் தேனும் பாட மாதர் பந்து மைந்துற்று ஆடுமே
#1956
பந்து மைந்துற்று ஆடுவாள் பணை முலையின் குங்குமம்
சுந்தர பொடி தெளித்த செம்பொன் சுண்ணம் வாள் நுதல்
தந்து சுட்டி இட்ட சாந்தம் வேரின் வார்ந்து இடை முலை
இந்திர திருவில் நெக்கு உருகி என்ன வீழ்ந்தவே
#1957
நல் மணி சிலம்பினோடு கிண்கிணி நக நகும்
மின் மலர்ந்த முல்லை மாலை நக்கி மிக்கு இறந்து எழுந்து
பொன் மலர்ந்த கோதை பந்து பொங்கி ஒன்று போந்து பாய்ந்து
மின் மலர்ந்த வேலினான் முன் வீதி புக்கு வீழ்ந்ததே
#1958
வீழ்ந்த பந்தின் மேல் விரைந்து மின்னின் நுண் நுசுப்பினாள்
சூழ்ந்த காசு தோன்ற அம் துகில் நெகிழ்ந்து பூம் குழல்
தாழ்ந்து கோதை பொங்கி வீழ்ந்து வெம் முலைகள் தைவர
போழ்ந்து அகன்ற கண்ணி வந்து பூம் கொடியின் நோக்கினாள்
#1959
மந்தார மலை மலர் வேய்ந்து மகிழ்ந்து தீம் தேன்
கந்தாரம் செய்து களி வண்டு முரன்று பாட
பந்து ஆர்வம் செய்து குவளை கண் பரப்பி நின்றாள்
செந்தாமரை மேல் திருவின் உரு எய்தி நின்றாள்
#1960
நீர் தங்கு திங்கள் மணி நீள் நிலம் தன்னுள் ஓங்கி
சீர் தங்கு கங்கை திரு நீர் தண் துவலை மாந்தி
கார் தங்கி நின்ற கொடி காளையை காண்டலோடு
பீர் தங்கி பெய்யா மலரின் பிறிது ஆயினாளே
#1961
பெண்பாலவர்கட்கு அணியாய் பிரியாத நாணும்
திண்-பால் நிறையும் திரு மாமையும் சேர்ந்த சாயல்
கண்-பால் கவினும் வளையும் கவர்ந்திட்ட கள்வன்
மண்-பால் இழிந்த மலர் ஐ கணை மைந்தன் என்றாள்
#1962
என்றாள் நினைந்தாள் இது போலும் இ வேட்கை வண்ணம்
சென்றே படினும் சிறந்தார்க்கும் உரைக்கலாவது
அன்றாய் அரிதாய் அகத்தே சுட்டு உருக்கும் வெம் தீ
ஒன்றே உலகத்து உறு நோய் மருந்து இல்லது என்றாள்
#1963
நிறை யாதும் இல்லை நெருப்பின் சுடும் காமம் உண்டேல்
குறையா நிறையின் ஒரு குன்றியும் காமம் இல்லை
பறையாய் அறையும் பசப்பு என்று பகர்ந்து வாடி
அறைவாய் கடல் போல் அகன் காமம் அலைப்ப நின்றாள்
#1964
நெஞ்சம் கலங்கி நிறை ஆற்றுப்படுத்து நின்றாள்
அம் செம் கழுநீர் அலர்ந்த மதி வாள் முகத்தே
வஞ்சம் வழங்காதவன் கண்களின் நோக்க-மாதோ
தஞ்சம் வழங்கி தலைக்கொண்டது காம வெம் தீ
#1965
பூ உண்ட கண்ணாள் புருவ சிலை கோலி எய்ய
ஏ உண்ட நெஞ்சிற்கு இடு புண் மருந்து என்-கொல் என்னா
மா உண்ட நோக்கின் மடவாளை மறித்து நோக்கி
கோ உண்ட வேலான் குழைந்து ஆற்றலன் ஆயினானே
#1966
காம கடு நோய் கனல் சூழ்ந்து உடம்பு என்னும் மற்று இ
ஈமத்தினோடும் உடனே சுட ஏகல் ஆற்றான்
தூமத்தின் ஆர்ந்த துகில் ஏந்திய அல்குல் தாதை
பூ மொய்த்திருந்த கடை மேல் புலம்புற்று இருந்தான்
#1967
நாவி நோய் செய்த நறும் குழலாள் நாண் நீல
காவி நோய் செய்த கரும் கயல் கண் பூம் கொடி என்
ஆவி நோய் செய்த அணங்கு என்று அறியாதேன்
மேவி நோய் தீர வினா தருவார் இல்லையே
#1968
தெள் நீர் பனி கயத்து மட்டு அவிழ்ந்த தேன் குவளை
கண் நீர்மை காட்டி கடல் போல் அகன்ற என்
உள் நீர்மை எல்லாம் ஒரு நோக்கினின் கவர்ந்த
பெண் நீர்மை மேல் நாள் பிறந்தும் அறியுமோ
#1969
கரும் குழலும் செ வாயும் கண் மலரும் காதும்
அரும்பு ஒழுகு பூண் முலையும் ஆருயிர்க்கே கூற்றம்
விருந்தினராய் வந்தாரை வெற்று உடலாம் நோக்கும்
பெரும் திருவி யார் மகள்-கொல் பேர் யாதாம்-கொல்லோ
#1970
வார் உடுத்த வெம் முலைய வண்டு ஆர் பூ கோதையை
பேர் கொடுத்தார் பெண் என்றார் கூற்றமே என்றிட்டால்
தார் உடுத்த நீள் மார்பர் தம் உயிர்-தாம் வேண்டுபவேல்
நீர் உடுத்த இ நகரை நீத்திட்டு ஒழியாரோ
#1971
பைம் கண் மணி மகர குண்டலமும் பைம் தோடும்
திங்கள் முகத்து இலங்க செ வாய் எயிறு இலங்க
கொங்கு உண் குழல் தாழ கோட்டு எருத்தம் செய்த நோக்கு
எங்கெங்கே நோக்கினும் அங்கங்கே தோன்றுமே
#1972
வாள் ஆர் மதி முகத்த வாளோ வடு பிளவோ
தாள் ஆர் கழுநீரோ நீலமோ தாமரையோ
நீள் வேலோ அம்போ கயலோ நெடும் கண்ணோ
கோள் ஆர்ந்த கூற்றமோ கொல்வான் தொடங்கினவே
#1973
என்றாம்-கொல் மாதர் நலம் எய்துவது என்று சிந்தித்து
ஒன்றார் கடந்தான் புலம்பு உட்கொண்டு இருத்தலோடும்
அன்றே அமைந்த பசும்பொன் அடர் ஆறு கோடி
குன்றாமல் விற்றான் குளிர் சாகரதத்தன் என்பான்
#1974
திரு மல்க வந்த திருவே என சேர்ந்து நாய்கன்
செரு மல்கு வேலாய்க்கு இடமால் இது என்று செப்ப
வரி மல்கி வண்டு உண்டு அறை மா மலர் கண்ணி மைந்தன்
எரி மல்கு செம்பொன் இலம் மாமனொடு ஏறினானே
#1975
நம்பன் சிறிதே இடைதந்து இது கேட்க நாளும்
அம் பொன் நகருள் அமைந்தேன் மற்று எனக்கு அமைந்தாள்
கம்பம் இலாதாள் கமலைக்கு விமலை என்பாள்
செம்பொன் வியக்கும் நிறத்தாள் திரு அன்ன நீராள்
#1976
பூம் பாவை வந்து பிறந்தாள் அ பிறந்த-போழ்தே
ஆம் பால எல்லாம் அறிவார் அன்று எழுதியிட்டார்
தூம்பு யாதும் இல்லா குளம் போன்றது என் தோம் இல் பண்டம்
கூம்பாத செல்வ கொடியே இது கேண்மோ என்றான்
#1977
மங்கைக்கு உரியான் கடை ஏறும் வந்து ஏறலோடும்
வங்கம் நிதியம் உடன் வீழும் மற்று அன்றி வீழா
எங்கும் தனக்கு நிகர் இல்லவன் ஏற்ற மார்பம்
நங்கைக்கு இயன்ற நறும் பூ அணை பள்ளி என்றான்
#1978
ஏழு ஆண்டின் மேலும் இரண்டு ஆண்டு இரண்டு எய்தி நின்றாள்
வீழா நிதியும் உடன் வீழ்ந்தது வில் வலாய்க்கே
ஊழாயிற்று ஒல்கும் நுசுப்பு அஃக உருத்து வீங்கி
சூழ் ஆரம் வைத்த முலையாள் நலம் சூழ்க என்றான்
#1979
ஏற்ற கை தொடி வீழ்ந்து என ஏந்தலை
தேற்றினான் திரு மா நலம் செவ்வனே
தோற்ற மாதரும் தோன்றலை காண்டலும்
ஆற்றினாள் தனது ஆவியும் தாங்கினாள்
#1980
அம் பொன் கொம்பு அனையாளையும் வார் கழல்
செம்பொன் குன்று அனையானையும் சீர் பெற
பைம்பொன் நீள் நகர் பல்லியம் ஆர்த்து எழ
இம்பர் இல்லது ஓர் இன்பம் இயற்றினார்
#1981
கட்டில் ஏறிய காமரு காளையும்
மட்டு வாய் அவிழ் மா மலர் கோதையும்
விட்டு நீங்குதல் இன்மையின் வீவு இலார்
ஒட்டி ஈர் உடம்பு ஓர் உயிர் ஆயினார்
#1982
நிலவு வெண் கதிர் நீர்மைய பூம் துகில்
கலவம் கண் புதையாது கனற்றலின்
உலகம் மூன்றும் உறு விலைத்து என்பவே
புலவு வேல் கண்ணினாள் முலை போகமே
#1983
தேன் அவாம் கமழ் கண்ணியும் தெவ்வர்-தம்
ஊன் அவாம் கதிர் வேலுறு காளையும்
கான் அவாம் கடி நாறும் மென் பள்ளி மேல்
வான் அவாம் வகையால் வைகினார்களே
#1984
வெண் மதி நெற்றி தேய்த்து விழு தழும்பு இருப்ப நீண்ட
அண்ணல் நன் மாடத்து அங்கண் அகில் புகை அமளி ஏறி
பண் அமை மகர வீணை நரம்பு உரீஇ பாவை பாட
மண் அமை முழவு தோளான் மகிழ்ச்சியுள் மயங்கினானே
#1985
இன் அரி சிலம்பொடு ஏங்கி கிண்கிணி இகலி ஆர்ப்ப
பொன் அரி மாலை தாழ பூ சிகை அவிழ்ந்து சோர
மின் இரும் கலாபம் வீங்கி மிளிர்ந்து கண் இரங்க வெம்பி
துன்னரும் களி கொள் காம கொழும் கனி சுவைத்து விள்ளான்
#1986
தொழித்து வண்டு இமிரும் கோதை துணை முலை மூள்க பூம் பட்டு
அழித்து மட்டு ஒழுகும் தாரான் மணி வள்ளத்து ஆய்ந்த தேறல்
எழில் பொலி மாதர்க்கு ஏந்த இனிதினின் நுகர்ந்து காம
கொழித்து இரை கடலுள் மூழ்கி கோதை கண் துயின்ற அன்றே
#1987
பாசிலை சுருட்டி மைந்தன் கொடுக்கிய பரந்து மின்னும்
தூசு உலாம் அல்குல் தீண்ட துயில் கண்கள் விழித்த தோற்றம்
வாச வான் குவளை மெல்ல வாய்விடா நின்றது ஒக்கும்
ஏசுவது ஒன்றும் இல்லா இணை வட முலையினாட்கே
#1988
கங்குல்-பால் புகுந்த கள்வன் இவன் என கதுப்பில் தாழ்ந்த
தொங்கலான் முன்கை யாத்து சொல்லு நீ வந்தது என்ன
நங்கை யான் பசித்து வந்தேன் எ பொருள் நயப்பது என்றாட்கு
அம் கலுழ் மேனியாய் நின் அணி நல அமிழ்தம் என்றான்
#1989
செயிர்த்தவள் சிவந்து நோக்கி சீறடி சென்னி சேர்த்தி
அயிர்ப்பது என் பணி செய்வேனுக்கு அருளிற்று பொருள் அது என்ன
உயிர்ப்பதும் ஓம்பி ஒன்றும் உரையலை ஆகி மற்று இ
பயிர்ப்பு இல் பூம் பள்ளி வைகு பகட்டு எழில் மார்ப என்றாள்
#1990
உள் இழுது உடைய வெம்பி உற்பல உருவு கொண்ட
வெள்ளியின் புனைந்த கோல விளக்கு ஒளி வெறுவிது ஆக
வள் இதழ் கோதை வல்லான் வட்டிகை நுதியின் வாங்கி
பள்ளி மேல் எழுதப்பட்ட பாவை போல் ஆயினாளே
#1991
மங்கையர் பண்ணிய மருத யாழ் குழல்
நங்கையை பிரியும் இ நம்பி இன்று என
அங்கு அதற்கு இரங்கின ஆரும் பேதுற
கங்குல் போய் நாள்கடன் கழிந்தது என்பவே
#1992
ஏந்து பூ கோதைகள் திருத்தி ஏர்பட
சாந்து கொண்டு இள முலை எழுதி தையல் தன்
காந்தள் அம் முகிழ் விரல் கையினால் பிடித்து
ஆய்ந்து அவட்கு இது சொலும் அலங்கல் வேலினான்
#1993
பூவினுள் தாழ் குழல் பொன் செய் ஏந்து அல்குல்
மாவினுள் தாழ் தளிர் மருட்டும் மேனியாய்
காவினுள் தோழரை கண்டு போதர்வேன்
ஏவினுள் தாழ் சிலை எறிந்த கோலினே
#1994
என்று அவன் உரைத்தலும் எழுது கண் மலர்
நின்ற நீர்-இடை மணிப்பாவை நீந்தலின்
மன்றல் நாறு அரிவையை தெருட்டி மா மணி
குன்று அனான் கொடியவள் குழைய ஏகினான்


1 comment: