seevagachinthamani - 7


6 கேமசரியார் இலம்பகம்


 
#1412
வானின் வழங்கும் வண் கை மணி செய் ஆர மார்பின்
தேனும் வழங்கும் பைம் தார் விசையை சிறுவன் தேம் கொள்
நானம் வழங்கும் கோதை நைய வெய்ய ஆய
கானம் வழங்கல் மேவி காலின் ஏகினானே

#1413
சிலை கொள் நாணின் தீரா திருந்து கற்பின்னவர்-தம்
இலை கொள் பூம் தார் உழுத இன்ப வருத்தம் நீங்க
முலை கொள் கண்கள் கண்ணின் எழுதி முள்கு மொய்ம்பன்
மலை கொள் கானம் முன்னி மகிழ்வோடு ஏகுகின்றான்

#1414
கனி கொள் வாழை காட்டுள் கருமை மெழுகியவை போன்று
இனிய அல்லா முகத்த முசுவும் குரங்கும் இரிய
துனிவு தீர நோக்கி தோன்றல் செல்லும் முன்னால்
பனி வெண் திரை சூழ் கடல் போல் பழுவம் தோன்றிற்று அவணே

#1415
பருகுவாரின் புல்லி பயம் கண்மாற துறக்கும்
முருகு விம்மு குழலார் போல மொய் கொள் தும்பி
உருவ பூம் கொம்பு ஒசிய புல்லி தீம் தேன் பருகி
அருகு வாய்விட்டு ஆர்ப்ப வண்ணன் மெல்ல சென்றான்

#1416
செல்வர் மனத்தின் ஓங்கி திரு இல் மாந்தர் நெஞ்சின்
எல்லை இருளிற்று ஆகி பூம் தாது இனிதின் ஒழுகி
கொல்லும் அரவின் மயங்கி சிறியார் கொண்ட தொடர்பின்
செல்ல செல்ல அஃகும் நெறி சேர் சிலம்பு சேர்ந்தான்

#1417
சுனைகள் கண்கள் ஆக சூழ்ந்த குவளை விழியா
அனையல் ஆகா உருவ நோக்கி மைந்தற்கு இரங்கி
இனைவ போலும் அருவியின் அருவி இனிதின் ஆடி
நனை கொள் போது வேய்ந்து நாதன் பாடுகின்றான்

#1418
செய்தான் இருவினையின் பயத்தை சேரும் சென்று என்றி
எய்தான் அதன் பயத்தை பிறனே துய்த்தல் இயல்பு என்றி
கொய் தாமம் தாழ்ந்து ஒசிந்த குளிர் பூம் பிண்டி கோமனே
இஃதே நின் சொல் இயல்பு என்றால் அடியேன் நின்னை தொழுதேனே

#1419
உண்டே தனது இயல்பின் உணரும்-காலை உயிர் என்றி
உண்டாய அ உயிரே பிறிதின் இல்லை என உரைத்தி
வண்டு ஆர்ந்து நால் காதம் வண்ண மாலை சுமந்து ஒசிந்து
கொண்டு ஏந்து பூம் பிண்டி கோமான் நின்னை தொழுதேனே

#1420
காதலால் எண் வினையும் கழிப என்றி அ காதல்
ஆதலால் எண் வினையும் கழியா என்றும் அறைதியால்
போது உலாய் தேன் துளித்து பொழிந்து வண்டு திவண்டு உலாம்
கோதை தாழ் பூம் பிண்டி கோமன் நின்னை தொழுதேனே

#1421
இனிதின் இங்ஙனம் ஏத்தி வலம்கொண்டு
முனிவர் சித்திர கூடம் முனாது என
தனிதின் ஏகுபு தாபதர் வாழ்வது ஓர்
பனி கொள் பூம் பொழில் பள்ளி கண்டான்-அரோ

#1422
புல்லும் அல்லியும் போகு உயர் நீள் கழை
நெல்லும் நீர் விளை கேழலும் தோரையும்
அல்ல தீம் பழம் காய் கிழங்கு ஆதியா
நல்லவே நுகர்வார் பள்ளி நண்ணினான்

#1423
அரிய கொள்கையர் ஆர் அழல் ஐந்தினுள்
மருவி வீடு வளைக்குறும் மாட்சியர்
விரிய வேதம் விளம்பிய நாவினர்
தெரிவு இல் தீ தொழில் சிந்தையின் மேயினார்

#1424
வள்ளி இன் அமுதும் வரை வாழையின்
தெள்ளு தீம் கனியும் சில தந்த பின்
வெள்ள மாரி அனாய் விருந்து ஆர்க என
உள்ள மாட்சியினார் உவந்து ஓம்பினார்

#1425
பாங்கின் மாதவர் பால் மதி போன்று இவன்
வீங்கு கல்வியன் மெய்ப்பொருள் கேள்வியன்
ஆங்கு நாமும் அளக்குவம் என்று தம்
ஓங்கு கட்டுரை ஒன்று இரண்டு ஓதினார்

#1426
ஐயர் கூறலும் அண்ணலும் கூறுவான்
சையம் பூண்டு சமுத்திரம் நீந்துவான்
உய்யுமேல் தொடர்ப்பாட்டின் இங்கு யாவையும்
எய்தினார்களும் உய்ப என்று ஓதினான்

#1427
வீடு வேண்டி விழு சடை நீட்டல் மெய்
மூடு கூறையின் மூடுதல் வெண் தலை
ஓடு கோடல் உடுத்தல் என்று இன்னவை
பீடு இலா பிறவிக்கு வித்து என்பவே
#1428
ஏம நல் நெறி எ நெறி அ நெறி
தூய்மை இல் நெறி யாமும் துணிகுவம்
காமன் தாதை நெறியின்-கண் காளை நீ
தீமை உண்டு எனில் செப்பு என செப்பினான்
#1429
தூங்கு உறி கிடந்து காயும் பழங்களும் துய்ப்ப நில்லா
பாங்கு அலா வினைகள் என்றார் பகவனார் எங்கட்கு என்னின்
ஓங்கு நீள் மரத்தில் தூங்கும் ஒண் சிறை ஒடுங்கல் வாவல்
பாங்கரில் பழங்கள் துய்ப்ப பழ வினை பரியும் அன்றே
#1430
அல்லியும் புல்லும் உண்டு ஆங்கு ஆர் அழல் ஐந்துள் நின்று
சொல்லிய வகையின் நோற்ப துணியும் வெம் வினைகள் என்னின்
கல் உண்டு கடிய வெம்பும் கான் உறை புறவம் எல்லாம்
புல்லிய வினையை வென்று புறக்கொடை காணும் அன்றே
#1431
நீட்டிய சடையம் ஆகி நீர் மூழ்கி நிலத்தில் சேர்ந்து
வாட்டிய உடம்பின் யாங்கள் வரகதி விளைத்தும் என்னின்
காட்டு-இடை கரடி போகி கய மூழ்கி காட்டில் நின்று
வீட்டினை விளைக்க வேண்டும் வெளிற்று உரை விடு-மின் என்றான்
#1432
கலை வளர் கிளவியார்-தம் காமர் மென் சேக்கை நீங்கி
இலை வளர் குரம்பை அங்கண் இரு நிலம் சேக்கை ஆக
முலை வளர் ஆகம் தோய முழு வினை முரியும்-ஆயின்
மலை வளர் குறவர்க்கு அ மா வினைகளும் மாயும் அன்றே
#1433
வெள் நிற துகிலின் ஆங்கண் வீழ்ந்து மாசு ஆகி நின்ற
ஒள் நிற உதிரம்-தன்னை உதிரத்தால் ஒழிக்கலாமே
பண் நிற கிளவியார்-தம் பசையினால் பிறந்த பாவம்
கண் நிற முலையினார்-தம் கலவியால் கழிக்கலாமே
#1434
நுண் துகில் வேதல் அஞ்சி நெருப்பு அகம் பொதிந்து நோக்கி
கொண்டுபோய் மறைய வைத்தால் கொந்து அழல் சுடாதும் ஆமே
கண்டத்தின் நாவியார் தம் கடி மனை துறந்து காட்டுள்
பண்டை செய் தொழிலின் பாவம் பறைக்குற்றால் பறைக்கலாமே
#1435
நோய் முதிர் குரங்கு போல நுகர்ச்சி நீர் நோக்கல் வேண்டா
காய் முதிர் கனியின் ஊழ்த்து வீழும் இ யாக்கை இன்னே
வேய் முதிர் வனத்தின் வென்றான் உருவொடு விளங்க நோற்று
போய் முதிர் துறக்கத்து இன்பம் பருகுவ புரி-மின் என்றான்
#1436
மெய்வகை தெரிதல் ஞானம் விளங்கிய பொருள்கள் தம்மை
பொய் வகை இன்றி தேறல் காட்சி ஐம்பொறியும் வாட்டி
உய் வகை உயிரை தேயாது ஒழுகுதல் ஒழுக்கம் மூன்றும்
இ வகை நிறைந்த போழ்தே இருவினை கழியும் என்றான்
#1437
குன்று அனான் உரைப்ப கேட்டே பாகத்தார் குடும்பம் நீக்கி
இன்று கண்விடுக்கப்பட்டேம் யாம் என எழுந்து போகி
வென்றவன் பாதம் சேர்ந்து வீட்டு நன்னெறியை பெற்றார்
சென்றது பருதிவட்டம் செம்மலும் அசைவு தீர்ந்தான்
#1438
அசைவு தீர்ந்து இருள் அஃகிய காலையே
வசையின் நீங்கியினார் வழி காட்டலின்
திசையும் யாறும் தெரிந்துகொண்டு ஏகினான்
மிசையும் இல்லது ஓர் மெய்ப்பொறி யாக்கையான்
#1439
படம் புனைந்து எழுதிய வடிவில் பங்கய
தடம் பல தழீஇயது தக்க நாடு அது
வடம் கெழு வரு முலை மகளிர் மாமை போன்று
இடம் பெரிது இனிது அதன் எல்லை எய்தினான்
#1440
தேம் கயத்து அணி மலர் தெகிழ்த்த நாற்றமும்
பூம் குழல் மடந்தையர் புனைந்த சாந்தமும்
ஆங்கு எலாம் அகில் புகை அளாய வசமும்
தாங்கலால் தக்க நாடு ஆயது என்பவே
#1441
சண்பக நறு மலர் மாலை நாறு சாந்து
ஒண் பழுக்காயினோடு உருவம் மெல் இலை
உண்பதம் யாவர்க்கும் ஊனம் இல்லது
வண் புகழ் நாட்டாது வண்ணம் இன்னதே
#1442
கரும்பு அணி வள வயல் காமர் தாமரை
வரம்பு அணைந்து அதன் நுதல் கிடந்த வார் செந்நெல்
அரங்கு அணி நாடக மகளிர் ஆய் நுதல்
சுரும்பு சூழ் இலம்பக தோற்றம் ஒத்ததே
#1443
வண்டு வாழ் கொடும் துறை கன்னி வாளை மேல்
நண்டு உகிர் உற்றென நடுங்கி நாணினால்
விண்டு ஒளித்து ஊண் துறந்து ஒடுங்கும் வீழ் புனல்
கொண்ட பூம் கிடங்கு அணி நகரம் கூறுவாம்
#1444
அகழ் கிடங்கு அம் துகில் ஆர்ந்த பாம்புரி
புகழ் தகு மேகலை நாயில் பூண் முலை
திகழ் மணி கோபுரம் திங்கள் வாள் முகம்
சிகழிகை நெடும் கொடி செல்விக்கு என்பவே
#1445
நாட்டிய மணி வரை கடைந்து நல் அமிர்து
ஊட்டினும் அதனை விட்டு உறைநர் இன்மையால்
ஈட்டிய வள நிதி இறைகொள் மா நகர்
சூட்டு வைத்து அனையது அ சுடர் பொன் இஞ்சியே
#1446
எறி சுறாவு இளையவர் ஏந்து பூம் கொடி
மறி திரை வரை புரை மாடம் மா கலம்
பெறல் அரும் திரு அனார் அமுதம் பேர் ஒலி
அறை கடல் வள நகர் ஆயது என்பவே
#1447
மதி அகடு உரிஞ்சும் சென்னி மாடம் நீள் மறுகு-தோறும்
பொதி அவிழ் மாலை வீழ்ந்து பொன் செய் நன் கலன்கள் சிந்தி
நிதி அறை திறந்து நோக்கி அன்னது ஓர் நீர்மை எய்தி
புதியவர்க்கு இயங்கல் ஆகா பொற்போடு பொலிந்தது அன்றே
#1448
கேமமாபுரம் எனும் கேடு இல் நல் இசை
பூமி மேல் திலகம் வைத்து அனைய பொன் நகர்
தாமம் நீள் நெடும் குடை தரணி காவலன்
நாமம் வேல் நரபதி தேவன் என்பவே
#1449
அ நகர்க்கு அரசனே அனைய ஆண்டகை
மெய் நிகர் இலாதவன் வேத வாணிகன்
கை நிகர் அமைந்த வேல் கமழும் தாரினான்
மை நிகர் மழை கணார் மருட்ட வைகுவான்
#1450
வார் சிலை வடிப்ப வீங்கி வரை என திரண்ட தோளான்
சோர் புயல் தொலைத்த வண் கை சுபத்திரன் மனைவி பெற்ற
சீர் நலம் கடந்து கேமசரி என திசைகள் எல்லாம்
பேர் நலம் பொறித்த பெண்மை பெரு விளக்கு ஆகி நின்றாள்
 
மேல்
 
#1451
மாசு இலாள் பிறந்த ஞான்றே மதி வலான் விதியின் எண்ணி
காசு இலாள் கண்ட-போழ்தே கதுமென நாணப்பட்டான்
தூசு உலாம் அல்குலாட்கு துணைவனாம் புணர்-மின் என்று
பேசினான் அன்று கொண்டு பெரு விருந்து ஓம்புகின்றான்
#1452
தாழ்தரு பைம்பொன் மாலை தட மலர் தாமம் மாலை
வீழ் தரு மணி செய் மாலை இவற்றிடை மின்னின் நின்று
சூழ் வளை தோளி செம்பொன் தூணையே சார்ந்து நோக்கும்
ஊழ்படு காதலானை ஒரு பிடி நுசுப்பினாளே
#1453
சே_இழை கணவனாகும் திருமகன் திறத்து நாளும்
ஆயிரத்தெட்டு நேர்ந்த ஆர் அமுது அடிசில் ஊட்டி
ஏயின வகையினாலே ஆறிரண்டு எல்லை ஆண்டு
போயின என்ப மற்று அ பூம் கொடி சாயலாட்கே
#1454
முருக்கு இதழ் குலிகம் ஊட்டி வைத்து அன முறுவல் செ வாய்
திரு கவின் நிறைந்த வெம் கண் பணை முலை தேம் பெய் கோதை
புரி குழல் பொன் செய் பைம் பூண் புனை_இழை கோலம் நோக்கி
தரிக்கிலாது உருகி நையும் தட மலர் கோதை நற்றாய்
#1455
மாவடு மருட்டும் நோக்கின் மதி முகம் மழை கண் மாசு இல்
பூவொடு புரையும் சாயல் புனை நலம் தனித்து வைக
ஏ அடு பிணையின் நோக்கி இறை வளை கழல நின்ற
தாய் படும் துயரம் எல்லாம் தாரவன் நீக்கினானே
#1456
போது வாய் திறந்த போதே பூம் பொறி வண்டு சேர்ந்து ஆங்கு
ஊதுமே மகளிர்க்கு ஒத்த போகமும் அன்னது ஒன்றே
யாதும் நீ கவல வேண்டா ஆர் அழகு உடைய நம்பி
காதலான் தவத்தின் மிக்கான் கண்ணுறும் நாளை என்றான்
#1457
பொன் நிலத்து எழுந்தது ஓர் பொரு இல் பூம் கொடி
மின்னு விட்டு எரிவது ஓர் நலத்தள் வீங்கு இருள்
பின்னிவிட்டு அன குழல் பெரும் கண் பேதை ஊர்
துன்னினன் தொடு கழல் குருசில் என்பவே
#1458
மல்லிகை மணம் கமழ் மாலை வார் குழல்
சில் சுணங்கு இள முலை சிறுமி தந்தையும்
செல்வனை திருநகர் சேட்பட்டான்-அரோ
பல் கதிர் மணி ஒளி பரந்த பூணினான்
#1459
தென் திசை முளைத்தது ஓர் கோல செம் சுடர்
ஒன்றி மற்று உத்தரம் வருவது ஒத்து அவண்
மன்றல் கொள் மார்பினான் வந்து ஒரு ஆல் நிழல்
நன்று உவந்து இருந்தனன் நாதன் சிந்தியா
#1460
குடை கவித்து அனையது கோல மா முடி
அடி இணை யாமையின் வடிவு கொண்டன
புடை திரள் விலாவும் வில் வளைந்த பொற்பின
கடி கமழ் தாமரை கண்ணின் வண்ணமே
#1461
குறங்கு அணி மயிலொடு கோலம் ஆர்ந்தன
பிறங்கிய உறுப்பின் மேல் பெரிய நோக்கின
கறங்கு இசை மணி முழா எருத்தம் காண்தகு
மறம் கெழு பெரும் புலி வாயின் வண்ணமே
#1462
வரை அகல் மார்பு-இடை வரியும் மூன்று உள
புரை தபு பொன் புரை நாவும் முள் உடைத்து
அரு வரை தோள்களும் அமரர் கோன் களிற்று
உருவு கொள் தட கையின் உருவு கொண்டவே
#1463
இலங்கு பொன் இறுவரை அனைய ஏந்தலுக்கு
அலங்கு இதழ் தாமரை கொட்டை அன்னதாய்
வலம் சுழிந்து அமைவர குழிந்த வாய்ப்பொடு
நலம் கிளர் நாபியும் இனிது நாறுமே
#1464
தடித்து இறை திரண்டு தம் அளவிற்கு ஏற்ற சூல்
கெடிற்று அழகு அழிப்பன கிளர் பொன் தோரைய
கடிப்பகை நுழைவு அற கதிர்த்த கை விரல்
அடுத்த மூக்கு அரு மணி வயிர தோட்டியே
#1465
வார்ந்து இலங்கு எயிறு அணி பவழம் மாண்ட வாய்
ஆர்ந்த பூ அங்கையும் அடியும் தாமரை
தேர்ந்தனன் திருமகள் கணவனாம் என
தீர்ந்தனன் சொல் அளைஇ தேர் கொண்டு ஏறினான்
#1466
தேர் இவர் ஊர்ந்தனர் செல்ல இல் தலை
கூர் உகிர் விடுத்தது ஓர் கோலம் மாலையை
பேர் இசை வீணையில் சூட்டி பெண் கொடி
கரிகை உலகு உணர் கடவுள் பாடுமே
#1467
வீங்கு ஓத வண்ணன் விரை ததும்பு பூம் பிண்டி
தேங்கு ஓதம் முக்குடை கீழ் தேவர் பெருமானை
தேவர் பெருமானை தேன் ஆர் மலர் சிதறி
நாவின் நவிற்றாதார் வீட்டுலகம் நண்ணாரே
#1468
அடல் வண்ண ஐம்பொறியும் அட்டு உயர்ந்தோர் கோமான்
கடல் வண்ணன் முக்குடை கீழ் காசு இன்று உணர்ந்தான்
காசு இன்று உணர்ந்தான் கமல மலர் அடியை
மாசு இன்றி பாடாதார் வானுலகம் நண்ணாரே
#1469
பூத்து ஒழியா பிண்டி கீழ் பொங்கு ஓத வண்ணனை
நா தழும்ப ஏத்தாதார் வீட்டுலகம் நண்ணாரே
வீட்டுலகம் நண்ணார் வினை கள்வர் ஆறலைப்ப
ஓட்டிடுப எண் குணனும் கோட்பட்டு உயிராவே
#1470
முத்து உமிழும் முந்நீர் மணி வண்ணன் மூன்று உலகும்
பத்திமையால் பாடப்படுவான் தாள் பாட கேட்டு
ஒத்து அரம்பை அன்னாள் உவந்து இவளொடு ஒப்பான் ஓர்
வித்தகனை இன்னே பெறுக என உரைத்தாள்
#1471
நிலம் தின கிடந்து அன நிதி அ நீள் நகர்
புலம்பு அற பொலிவொடு புக்க-காலையே
இலங்கு பூம் கொடி அன ஏழை நோக்கமும்
உலம் கொள் தோள் உறு வலி நோக்கும் ஒத்தவே
#1472
கண்ணுற காளையை காண்டலும் கை வளை
மண் உற தோய்ந்து அடி வீழ்ந்தன மாமையும்
உள் நிறை நாணும் உடைந்தன வேட்கையும்
ஒள் நிற தீ விளைத்தாள் உருக்குற்றாள்
#1473
வாக்கு அணங்கு ஆர் மணி வீணை வல்லாற்கு அவள்
நோக்கு அணங்காய் மனநோய் செய நொந்து அவன்
வீக்கு அணங்கு ஆர் முலை வேய் நெடும் தோளி ஓர்
தாக்கு அணங்கோ மகளோ என தாழ்ந்தான்
#1474
நல் வளம் தாமரை நாணிய வாள் முகம்
கொல் வளர் வேல் கணினாள் குழைந்தாள் என
சொல் வளர்த்தார் அவள் தோழியர் சோர் குழல்
மல் வளர் மார்பனை வந்து வளைந்தார்
#1475
நினைப்பரு நீள் நிறை நிப்புதி சேர்ந்து ஆங்கு
இனத்து-இடை ஏறு அனையான் எழில் நோக்கி
புன கொடி பொற்பொடு புண்ணிய நம்பி
வனப்பினையே கண்டு வாள் கண் அகன்றாள்
#1476
வள்ளலை வாச நெய் பூசி மணி குடம்
தெள் அறல் நீர் சொரிந்து ஆட்டினர் தேம் புகை
உள்ளுற உண்ட கலிங்கம் உடுத்த பின்
கள் அவிழ் கண்ணி கலத்தொடு அணிந்தார்
#1477
மங்கல வெள்ளை வழித்து முத்து ஈர்த்த பின்
கொங்கு அலர் கோதையர் கண்டு அகம் எய்தி
அம் கதிர் பொன் கலத்து ஆர் அமிர்து ஏந்தினர்
செம் கயல் கண்ணியர் சீரின் அயின்றான்
#1478
பத்தியில் குயிற்றிய பைம்பொன் திண்ணை மேல்
சித்திர தவிசினுள் செல்வன் சீர் பெற
நித்தில மணி உறழ் கரக நீரினால்
அ துறை விடுத்தனன் அலர்ந்த தாரினான்
#1479
இளிந்த காய் கமழ் திரை வாசம் ஈண்டி ஓர்
பளிங்கு போழ்ந்து அருகு பொன் பதித்த பத்தியின்
விளிம்பு முத்து அழுத்திய யவன கைவினை
தெளிந்த பொன் அடைப்பையுள் பாகு சென்றவே
#1480
பாசிலை சுருட்டுபு கறித்து பல்லினை
தேசிகம் பட துடைத்து உமிழ்ந்து தேம் கமழ்
வாசம் வாய்க்கொண்டனன் மணி செய் குண்டலம்
வீசி வில் விலங்கி விட்டு உமிழ என்பவே
#1481
பண் உலாம் கிளவி-தன் பரவை ஏந்து அல்குல்
வண்ண மேகலை இவை வாய்ந்த பூம் துகில்
உள் நிலாய் பசும் கதிர் உமிழ்வ பாவியேன்
கண்ணையும் மனத்தையும் களம் கொண்டிட்டவே
#1482
கடி கமழ் குழலினால் கட்டி மெய் எலாம்
நடு ஒசி நோன் சிலை புருவத்தால் புடைத்து
அடும் மலர் நெடும் கணால் ஆவி போழ்ந்திடா
கொடியவள் இள முலை கொல்லும் கொல்லுமே
#1483
கடியன கச்சினால் கட்டப்பட்டன
கொடியன குங்குமம் கொட்டப்பட்டன
வடி நிலம் பரந்து முத்து அணிந்த வெம் முலை
இடை நிலம் செகுப்பன என்னை என் செயா
#1484
கரிய உள் வெறியன கட்டப்பட்டன
புரிவொடு புறத்து இடப்பட்ட பூம் குழல்
தெரியின் மற்று என் செயா செய்ய நீண்டன
பெரிய கண் போலவும் பேது செய்யுமே
#1485
காதன்மை கண்ணுளே அடக்கி கண் எனும்
தூதினால் துணிபொருள் உணர்த்தி தான் தமர்க்கு
ஏதின்மைபட கரந்திட்ட வாள் கண் நோக்கு
ஓத நீர் அமுதமும் உலகும் விற்குமே
#1486
மிகு கொடா முத்தம் சூட்டி மீளிமை தீர்த்து மின்னும்
நகுகொடா மணிகள் நல்ல தெளித்துக்கொண்டு எழுதி நல் பொன்
முகபடாம் வைப்ப ஆள் செற்று அழன்று கண் கரிந்த முல்லை
தொகு கள் தாம் கோதை வெய்ய துணை மணி முலைகள் தாமே
#1487
தேன் கறி கற்ற கூழை செண்பக மாலை வேல் கண்
ஊன் கறி கற்ற காலன் ஒள் மணி தட கை வை வேல்
கூன் பிறை நுதல் ஓர் கூற்றம் குவி முலை நமன் கை பாசம்
யான் பிறன் அளியன் வாழ்வான் ஆசைப்பட்டிருக்கின்றேனே
#1488
திருவிற்கும் கற்பக தெரியல் மாலையார்
உருவிற்கு ஓர் விளக்கமாம் ஒண் பொன் பூம்_கொடி
முருகற்கும் அநங்கற்கும் எனக்கும் மொய் சடை
ஒருவற்கும் பகைத்தியால் ஒருத்தி வண்ணமே
#1489
கலை தொகை நலம் பல கடந்த காளை-தான்
நலத்தகையவள் நலம் நினைப்ப நாய்கனும்
மலை தொகை மதம் தவழ் யானை மன்னவன்
நிலத்தவர்க்கு அறிவுற நெறியின் செப்பினான்
#1490
இடி உமிழ் எறி திரை முழக்கில் பல்லியம்
கொடி அணி வியல் நகர் குழுமி ஆர்த்து எழ
கடி மணம் இயற்றினார் கடவுள் நாளினால்
வடி மலர் கோதையை மைந்தற்கு என்பவே
#1491
மணி குடம் அழுத்தி வைத்த அனைய தோளினான்
கணிக்கு இடம் கொடா நலம் கதிர்த்த காரிகை
அணிக்கு இடன் ஆகிய அரிவை தன்னொடும்
பிணித்து இடைவிடாது அவன் பெற்ற இன்பமே
#1492
பூம் துகில் பொரு திரை பொம்மல் வெம் முலை
ஏந்திய மணி வரை இரக்கம் நீர்த்தரங்கு
ஆய்ந்த வன் தோள் இணை நாகம் ஆக வைத்து
ஈந்தது அ கடல் அவற்கு அமுதம் என்பவே
#1493
சந்தன சேற்று-இடை தாம வார் குழல்
பைம் தொடி படா முலை குளிப்ப பாய்தலின்
மைந்தன தார் குழைந்து உடைய வாய் திறந்து
அம் சிலம்பு அணி அல்குல் கலையொடு ஆர்த்தவே
#1494
கோதையும் குழலும் பொங்க குவி முலை குழங்கன் மாலை
போது உக பொருது பூணும் பொரு கடல் முத்தும் மூழ்க
காதலும் களிப்பும் மிக்கு கங்குலும் பகலும் விள்ளார்
சாதலும் பிறப்பும் இல்லா தன்மை பெற்றவர்கள் ஒத்தார்
#1495
புனை மலர் தாரினானும் போது அணி கொம்பு அனாளும்
நனை மலர் காவும் அம் தண் வாவியும் நல்ல ஆடி
சுனை மலர் குவளை குற்று சூழ் மலர் கண்ணி சூட்டி
வினை நலம் நுகர்ந்து செல்வார் விதியினால் மிக்க நீரார்
#1496
பொழிந்து உகு காதல் பூண்டு புல்லுகை விடாது செல்ல
கழிந்தன இரண்டு திங்கள் காளையும் மற்றோர் நாளால்
பிழிந்து கொள்வு அனைய பெண்மை பெய் வளை தோளி-தன்னோடு
அழிந்து வீழ் அருவி குன்றில் ஆய் மலர் காவு புக்கான்
#1497
காஞ்சன கமுகு காய் பொன் கனி குலை வாழை சூழ்ந்து
பூம் சினை நாகம் தீம் பூ மரம் கருப்பூர சோலை
மா சினை மயில்கள் ஆட சண்பக மலர்கள் சிந்தும்
தீம் சுனை அருவி குன்றம் சீர் பெற ஏறினானே
#1498
தினை விளை சாரல் செ வாய் சிறு கிளி மாதர் ஓப்ப
புனை வளை தோளி சொல்லை கிளி என கிள்ளை போகா
நனை விளை கோதை நாணி பொன் அரி மாலை ஓச்ச
கனை கழல் குருசில் நண்ணி கவர் கிளி ஓப்பினானே
#1499
கொந்து அழல் வேல் கணால் என் ஆவி கூட்டுண்ட கொம்பே
செம் தழை அலங்கல் ஏந்தி சீறடி பரவ வந்தேன்
உய்ந்து இனி பணி செய்வேனோ உடம்பு ஒழித்து ஏகுவேனோ
பைம் தழை அல்குல் பாவாய் பணி என பரவினானே
#1500
வீணையும் குழலும் பாலும் அமுதமும் கரும்பும் தேனும்
பாணி யாழ் கனியும் வென்ற பைம் கிளி மழலை தீம் சொல்
வாணிக மகளிர் தாமே வாணிகம் வல்லர் என்னா
பூண் முலை பொதிர்ப்ப புல்லி புனை நலம் பருகினானே
 
 
#1501
திங்கள் அம் குளவி செ வான்-இடை கிடந்து இமைப்பதே போல்
குங்குமம் மார்பில் பூண்ட குளிர் கதிர் ஆரம் மின்ன
மங்கையோடு இருந்த போழ்து ஓர் மணி வண்டு கண்டு சொன்னான்
கங்குல் தான் நீங்கலுற்று கமழ் மலர் அணிந்த தாரான்
#1502
மணி வண்டு இ மாதர் கோதை மது உண வந்த போழ்து அங்கு
இணை வண்டு அங்கு இறந்து பாடு இன்று இருக்குமே இரங்கல் இன்றாய்
துணை வண்டு துஞ்சின் நீயும் துஞ்சுவை என்று நின்-கண்
பணிகொண்டது இன்மையால் தான் பரிவொடும் இருக்கும் அன்றே
#1503
குழவியாய் பிறந்து வெய்யோன் குமரனாய் முறுகி இப்பால்
விழைவு தீர் கிழவன் ஆகி விழு கதிர் உலந்து வீழ
மழலை வண்டு உழல நக்க மல்லிகை அலங்கல் சூட்டி
குழல் புரை கிளவியோடும் கொழும் புகை அமளி சேர்ந்தான்
#1504
திரு துயில் பெற்ற மார்பன் திருந்து தார் உழக்க இன்ப
வருத்தமுற்று அசைந்த கோதை வாள் ஒளி தடம் கண் நீலம்
பொருத்தலும் பொன் அனாளை புறக்கணித்து எழுந்து போகி
பரு சுதர் பவழம் நோன் தாழ் பல் மணி கதவு சேர்ந்தான்
#1505
அல்லியுள் பாவை அன்னாள் அறிவுறா வகையின் ஒற்றி
மெல்லவே திறந்து நீக்கி மின்னுவிட்டு இலங்கு பைம் பூண்
கொல் சின மடங்கல் அன்னான் கொழு நிதி மாடம் நீந்தி
பல் கதிர் பருதி போல பாய் இருள் ஏகினானே
#1506
தாள் உடை தடம் கொள் செவ்வி தாமரை போது போலும்
வாள் உடை முகத்தினாள் தன் வரு முலை தடத்தின் வைகி
நாளினும் பெருகுகின்ற நகை மதி அனைய காதல்
கேள்வனை கனவில் காணாள் கிளர் மணி பூணினாளே
#1507
அரம் தின பிறந்த பைம்பொன் அரும்பிய முலையினாளை
கரந்தவன் கங்குல் நீங்க கதிர் வளை அணங்கும் மென் தோள்
வரம் தரு தெய்வம் அன்னாள் வைகு இருள் அனந்தல் தேறி
பரந்து எலா திசையும் நோக்கி பையவே பரிவு கொண்டாள்
#1508
திரு மணி குயின்ற செம்பொன் திருந்து பூம் கொம்பு அனாள் தன்
கரு மணி பாவை அன்னான் கரந்துழி காண்டல் செல்லாள்
எரி மணி விளக்கம் மாடத்து இருள் அறு-காறும் ஓடி
அரு மணி இழந்து ஓர் நாகம் அலமருகின்றது ஒத்தாள்
#1509
யாண்டையாய் ஐய அஞ்சினென் ஆருயிர்
ஈண்டு உடம்பு ஒழித்து ஏக வலிக்குமால்
நீண்ட தோளவனே நிறை யான் இலேன்
தீண்டு வந்து என தேனின் மிழற்றினாள்
#1510
கனி கொள் காமம் கலந்து உயிர் ஒன்றலின்
இனியர் மங்கையர் என்பது கூறுவாய்
பனி கொள் மா மதி போல் பசப்பு ஊர யான்
தனியள் ஆவது தக்கதுவோ சொலாய்
#1511
கழலும் நெஞ்சொடு கை வளை சோருமால்
சுழலும் கண்களும் சூடு உறு பொன் என
அழலும் மேனியும் ஆற்றலென் ஐயவோ
நிழலின் நீப்பரும் காதலும் நீத்தியோ
#1512
திருந்தும் மல்லிகை தேம் கமழ் மாலை யான்
புரிந்து சூடினும் பூம் கொடி நுண் இடை
வருந்துமால் மடவாய் எனும் வஞ்ச நீ
கரிந்து யான் நைய காண்டலும் வல்லையோ
#1513
தொண்டை வாய் இவள் தொய்யில் வன முலை
கண்டு தேவர் கனிப என்று ஏத்துவாய்
வண்டு கூறிய வண்ணம் அறிந்திலேன்
விண்டு தேன் துளிக்கும் விரை தாரினாய்
#1514
முலை வைத்த தடத்து-இடை முள்கலுறின்
தலை வைத்து நிலத்து அடி தைவருவாய்
சிலை வித்தகனே தெருளேன் அருளாய்
உலைவித்தனை என் உயிர் காவலனே
#1515
கடல் நித்திலம் வைத்த கதிர் முலையின்
இடன் எத்துணை அத்துணையும் எழுதி
உடன் ஒத்து உறைவான் உழை வாரலனேல்
மடன் ஒத்து உளது என் உயிர் வாழ்வதுவே
#1516
பெறும் அன்பினள் என்பது பேசின் அலால்
அறும் அன்பினள் என்று அறைவார் இலையால்
இறும் என்பொடு இனைந்து நைவேற்கு அருளி
நறு மென் கமழ் தாரவனே நணுகாய்
#1517
நுன சீறடி நோவ நடந்து செலேல்
எனது ஆவி அகத்து உறைவாய் எனும் நீ
புனை தாரவனே பொய் உரைத்தனையால்
வினையேன் ஒழிய தனி ஏகினையே
#1518
பரு முத்து உறையும் பணை வெம் முலை நின்
திரு முத்து அகலம் திளையாது அமையா
எரி மொய்த்து அனலும் இகல் வேல் எரி புண்
மருமத்து அனலும் வகை செய்தனையே
#1519
புன மா மயிலே பொழிலே புனலே
வனம் ஆர் வழையே வரையே திரையே
இன மா மணி சூழ் எரி பூணவனை
துன யான் பெறுகோ தொழுதேன் உரையீர்
#1520
கொடு வெம் சிலை வாய் கணையில் கொடிதாய்
நடுநாள் இரவின் நவை-தான் மிகுமால்
நெடு வெள் நிலவின் நிமிர் தேர் பரியாது
அடுமால் வழிநின்று அறனே அருளாய்
#1521
கயலால் இவை என்று கவிழ்ந்து கிடந்து
அயலேன் அறியாமை உரைத்தது எலாம்
இயலாததுவோ இனியேற்கு இனியீர்
உயலாவது கண் மலர்காள் உரையீர்
#1522
நெறிநீர் வளையும் நிழல் நித்திலமும்
பொறி நீர புனைந்து எழுதி புகழும்
வெறி தாரவன் எ வழி ஏகினன் நீர்
அறிவீர் உரையீர் அமர் தோள் இணைகாள்
#1523
இழுது ஆர் சுடர் வேல் இளையான் அகலத்து
உழு நீர் உடன் வெம் முலைகாள் வயிர
தொழுவாய் விடையை தொடர்கிற்றிலிர் என்று
அழுதாள் தடம் ஆக அணங்கு_இழையே
#1524
தகை வாடிய தன் நிழல் கண் உகு நீர்
வகை வாடி வருந்தி அழுவது கண்டு
அகையேல் அமர் தோழி அழேல் அவரோ
பகையாபவர் என்றனள் பால் மொழியே
#1525
வெறி மலைகள் வீழ்ந்து நிலம் புதைய
பொறி மாலை புனை நிழல் காணலளாய்
நெறி நாடிய போயினள் நீடினள் கண்டு
எறி வால் வளை கொண்டுவரும் இனியே
#1526
மட மா மயிலே குயிலே மழலை
நடை மாண் அனமே நலம் ஆர் கிளியே
உடன் ஆடும் என் ஐயனை என்று உருகா
தொடை யாழ் மழலை மொழி சோர்ந்தனளே
#1527
மல் உறை அலங்கல் மார்பன் பிரிவு எனும் எரியுள் வீழ்ந்து
கல் உறை நாகு வேய் தோள் கதிர் மணி முறுவல் செ வாய்
வில் உறை புருவம் மாதர் வெந்தனள் கிடப்ப மின் தோய்
இல் உறை தெய்வம் நோக்கி இரங்கி நின்று உரைக்கும் அன்றே
#1528
புண் அவாம் புலவு வாள் கை பொலன் கழல் புனைந்த பை தார்
கண் அவாம் வனப்பினானை காமனே கண்ட-போழ்தும்
பண் அவாம் பவள செ வாய் படா முலை பரவை அல்குல்
பெண் அவா நிற்கும் என்றால் பிணை அனாட்கு உய்தல் உண்டோ
#1529
கடத்து-இடை கவளம் தேன் நெய் கனியை தோய்த்து இனிய துற்ற
தட கையால் கொடுத்து புல்லும் தவழ் மத களிறு நீங்கின்
மட பிடிக்கு உய்தல் உண்டோ வால் அடி குஞ்சி சூட்டும்
கொடைக்கையான் பிரிந்த பின்றை கோதையாட்கு உய்தல் உண்டோ
#1530
முயங்கினான் சொன்ன வண்டாய் முகிழ் முலை தெய்வம் சேர
உயங்குவாள் உணர்ந்து கேள்வற்கு ஊனமும் பிரிவும் அஞ்சி
இயங்குவான் நின்ற ஆவி தாங்கினள் என்ப போலும்
வயங்கு பொன் ஈன்ற நீல மா மணி முலையினாளே
#1531
வஞ்ச வாய் காமன் சொன்ன மணி நிற வண்டுகாள் நீர்
துஞ்சுவேன் துயரம் தீர தொழு தகு தெய்வம் ஆவீர்
மஞ்சு தோய் செம்பொன் மாடத்து என் மனை-தன்னுள் என்றாள்
பஞ்சி மேல் மிதிக்கும் போதும் பனிக்கும் சீறடியினாளே
#1532
நொந்து எடுக்கலாது வீங்கும் வன முலை நுசுப்பின் தேய்ந்த ஓர்
பந்து எடுக்கலாத நங்கை பால் கடை வெண்ணெய் பாவை
வெந்து உடன் வெயிலுற்ற ஆங்கு மெலிந்து உக விளங்கும் வெள்ளி
வந்து வான் இட்ட சுட்டி வனப்பொடு முளைத்தது அன்றே
#1533
எரி நுதி உற்ற மாவின் இளம் தளிர் போன்று மாழ்கி
புரி நரம்பு இசையின் தள்ளி புன்கணுற்று அழுதலாலே
அரி குரல் கொண்ட பூசல் அகத்தவர்க்கு இசைப்ப ஈண்டி
திரு விரி கோதை நற்றாய் நிப்புதி சேர்ந்து சொன்னாள்
#1534
விழு திணை பிறந்து வெய்ய வேட்கை வேர் அரிந்து மெய் நின்று
இழுக்கம் ஒன்றானும் இன்றி எய்திய தவத்தின் வந்து
வழுக்குதல் இன்றி விண்ணோன் வச்சிர நுதியின் இட்ட
எழுத்து அனான் தந்த இன்பம் இன்னும் நீ பெறுதி என்றாள்
#1535
பிறங்கின கெடுங்கள் யாவும் புணர்ந்தவர் பிரிவர் பேசின்
இறங்கின வீழும் மேலாய் ஓங்கிய எண்ணில் யோனி
பிறந்தவர் சாவர் செத்தார் பிறப்பவே என்ன நோக்கி
கறங்கு இசை வண்டு பாடும் கோதை நீ கவலல் என்றாள்
#1536
எரி தலை கொண்ட காமத்து இன்பம் நீர் புள்ளி அற்றால்
பிரிவின்-கண் பிறந்த துன்பம் பெரும் கடல் அனையது ஒன்றால்
உருகி நைந்து உடம்பு நீங்கின் இம்மையோடு உம்மை இன்றி
இருதலை பயனும் எய்தார் என்று யாம் கேட்டும் அன்றே
#1537
மன்னும் நீர் மொக்குள் ஒக்கும் மானிடர் இளமை இன்பம்
மின்னின் ஒத்து இறக்கும் செல்வம் வெயில் உறு பனியின் நீங்கும்
இன் இசை இரங்கும் நல் யாழ் இளியினும் இனிய சொல்லாய்
அன்னதால் வினையின் ஆக்கம் அழுங்குவது என்னை என்றாள்
#1538
பஞ்சு இறைகொண்ட பைம்பொன் கலை புறம் சூழ்ந்து வைத்து
நஞ்சு இறைகொண்ட நாக படம் பழித்து அகன்ற அல்குல்
வெம் சிறை பள்ளியாக விழு முலை தடத்து வைக
தம் சிறைப்படுக்கலாதார் தம் பரிவு ஒழிக என்றாள்

#1539
வாசம் மிக்கு உடைய தாரான் வண்டினுக்கு உரைத்த மாற்ற
பாசத்தால் ஆக்கப்பட்ட ஆவியள் அல்லது எல்லாம்
பேசின் ஓர் பிணையல் மாலை பிசைந்திடப்பட்டது ஒத்தாள்
தூசு உலாம் பரவை அல்குல் தூ மணி பாவை அன்னாள்

#1540
பை அர விழுங்கப்பட்ட பசும் கதிர் மதியம் ஒத்து
மெய் எரி துயரின் மூழ்க விதிர்விதிர்த்து உருகி நையும்
மை இரும் குழலினாள் தன் மைந்தனை வலையின் சூழ்ந்து
கை அரிக்கொண்டும் காணாள் காளையும் காலின் சென்றான்

#1541
காழக சேற்றுள் தீம் பால் கதிர் மணி குடத்தின் ஏந்தி
வீழ்தர சொரிவதே போல் விளங்கு ஒளி திங்கள் புத்தேள்
சூழ் இருள் தொழுதி மூழ்க தீ கதிர் சொரிந்து நல்லார்
மாழை கொள் முகத்தின் தோன்றி வளை கடல் முளைத்தது அன்றே

#1542
ஏறு அனாற்கு இருளை நீங்க கைவிளக்கு ஏந்திய ஆங்கு
வீறு உயர் மதியம் தோன்ற விரைவொடு போய பின்றை
மாறு இலா பருதிவட்டம் வரு திரை முளைத்த ஆங்கண்
ஆறு செல் ஒருவற்கு அண்ணல் அணிகலம் அருளலுற்றான்

#1543
எ ஊரீர் எ பதிக்கு போந்தீர் நும் மனைவியர்-தாம் எனைவர் மக்கள்
ஒவ்வாதார்-தாம் எனைவர் ஒப்பார் மற்று எனைவர் நீர் உரை-மின் என்றாற்கு
இ ஊரேன் இ பதிக்கு போந்தேன் என் மனைவியரும் நால்வர் மக்கள்
ஒவ்வாதார்-தாம் இல்லை ஒப்பான் ஒருவன் என உரைத்தான் சான்றோன்
#1544
ஒப்பான் ஒரு மகனே நால்வர் ஒரு வயிற்றுள் பிறந்தான் என்ன
நக்கான் பெரும் சான்றோன் நம்பி போல் யார் உலகில் இனி யார் என்ன
மிக்கான் உரைப்பதுவும் மிக்கதே போலுமால் வினவி கேட்பேன்
தக்காய் குறித்தது உரை என்றான் தான் உரைப்ப கேட்கின்றானே

#1545
நல் தானம் சீலம் நடுங்கா தவம் அறிவர் சிறப்பு இ நான்கும்
மற்று ஆங்கு சொன்ன மனைவியர் இ நால்வரவர் வயிற்றுள் தோன்றி
உற்றான் ஒரு மகனே மேற்கதிக்கு கொண்டுபோம் உரவோன் தன்னை
பெற்றார் மக பெற்றார் அல்லாதார் பிறர் மக்கள் பிறரே கண்டீர்

#1546
பட நாகம் தோல் உரித்தால் போல் துறந்து கண்டவர் மெய் பனிப்ப நோற்றிட்டு
உடன் ஆக ஐம்பொறியும் வென்றார்க்கு உவந்து ஈதல் தானமாகும்
திடனாக தீம் தேனும் தெள் மட்டும் உயிர் குழாம் ஈண்டி நிற்றற்கு
இடன் ஆகும் ஊனும் இவை துறத்தலே சீலம் என்று உரைத்தார் மிக்கார்

#1547
ஓவாது இரண்டு உவவும் அட்டமியும் பட்டினி விட்டு ஒழுக்கம் காத்தல்
தாவா தவம் என்றார் தண் மதி போல் முக்குடை கீழ் தாதை பாதம்
பூவே புகை சாந்தம் சுண்ணம் விளக்கு இவற்றால் புனைதல் நாளும்
ஏவா இவை பிறவும் பூசனை என்று ஈண்டிய நூல் கரைகண்டாரே

#1548
இ நால்வர் துணைவியரா காதல் மகன் இவனா உடையார் போகி
பொன் ஆர மார்பின் புரந்தரராய் பூமி முழுதும் ஆண்டு
மன் ஆகி முக்குடை கீழ் வாமன் சிறப்பு இயற்றி வரம்பு இல் இன்பம்
பின்னா விளைவித்து பிறவா உலகு எய்தல் பேசலாமே
#1549
மட்டு ஆர் பூம் பிண்டி வளம் கெழு முக்குடை கீழ் மாலே கண்டீர்
முட்டாத இன்ப புதா திறக்கும் தாள் உடைய மூர்த்தி பாதம்
எட்டானும் பத்தானும் இல்லாதார்க்கு இ உலகில் இன்பமே போல்
ஒட்டாவே கண்டீர் வினை அவனை தேறாதார்க்கு உணர்ந்தீர் அன்றே

#1550
வேற்றுவர் இல்லா நுமர் ஊர்க்கே செல்லினும் வெகுண்டீர் போல
ஆற்று உணா கொள்ளாது அடி புறத்து வைப்பீரே அல்லீர் போலும்
கூற்றம் கொண்டு ஓட தமியே கொடு நெறி-கண் செல்லும்-போழ்தின்
ஆற்று உணா கொள்ளீர் அழகு அலால் அறிவு ஒன்றும் இலிரே போலும்
 
 
#1551
அளைவது காமம் அடு நறவு நெய் ஒழுகும் ஊனும் பின்னா
விளைவது தீவினையே கண்டீர் இவை மூன்றும் விடு-மின் என்றால்
தளை அவிழ் கோதையார் தாமம் சேர் வெம் முலை போல் வீங்கி கண் சேந்து
உளைய உறுதி உரைப்பாரை ஓ பாவம் உணராரே காண்

#1552
இழுது அன்ன வெள் நிணத்த செம் தடிக்கே ஏட்டைப்பட்டு இரும்பில் போர்த்த
பழுது எண்ணும் வன் மனத்தார் ஓட்டை மர செவியர் கேளார் பால் போன்று
ஒழுகி அமுது ஊறும் நல் அறத்தை ஓர்கிலர் ஊன் செய் கோட்டக்கு
கழுகு உண்ண வள்ளூரமே சுமந்து புள்ளிற்கே புறம் செய்கின்றார்

#1553
கையால் பொதி துணையே காட்ட கயல் கண்ணாள் அதனை காட்டாள்
ஐயா விளாம்பழமே என்கின்றீர் ஆங்கு அதற்கு பருவம் அன்று என்
செய்கோ என சிறந்தாள் போல் சிறவா கட்டுரையால் குறித்த எல்லாம்
பொய்யே பொருள் உரையா முன்னே கொடுத்து உண்டல் புரி-மின் கண்டீர்

#1554
பனி மதியின் கதிர் பருகும் ஆம்பல் போல்
முனி மதி முகத்தியர் முறுவல் நம்பினார்
துனி வளர் கதிகளுள் தோன்றி நாடகம்
கனிய நின்று ஆடுவர் கடையில் காலமே

#1555
நிழல் நிமிர் நெடு மதி நிகர் இல் தீம் கதிர்
பழனம் வெள் தாமரை பனிக்கும் ஆறு போல்
குழல் நிமிர் கிளவியார் கோலம் அஞ்சினார்
தொழ நிமிர்ந்து அமரராய் துறக்கம் ஆள்வரே

#1556
இன்னவாறு உறுதி கூறி எரி மணி வயிரம் ஆர்ந்த
பொன் அவிர் கலங்கள் எல்லாம் பொலிவொடு புகன்று நீட்டி
செல்-மின் நீர் என்று கூற வலம்கொண்டு தொழுது சென்றான்
வில் மரீஇ நீண்ட தோளான் வெயில் கடம் நீந்தலுற்றான்
 


No comments:

Post a Comment