seevagachinthamani - 6


5 பதுமையார் இலம்பகம்

 
#1166
வீட்டரும் சிறையில் தேவன் விடுத்து உய கொள்ளப்பட்ட
கோட்டம் இல் குணத்தினான் போய் என் செய்கின்றான்-கொல் என்னில்
கூட்டு அரக்கு எறிந்த பஞ்சின் கூடிய பளிங்கில் தோன்றும்
தீட்டரும் படிவம் அன்னான் திறம் கிளந்து உரைத்தும் அன்றே

#1167
விலங்கி வில் உமியும் பூணான் விழு சிறைப்பட்ட-போழ்தும்
அலங்கல் அம் தாரினான் வந்து அரும் சிறைவிடுத்த-போழ்தும்
புலம்பலும் மகிழ்வும் நெஞ்சில் பொலிதலும் இன்றி பொன் ஆர்ந்து
உலம் கலந்து உயர்ந்த தோளான் ஊழ்வினை என்று விட்டான்

#1168
வானரம் உகள நாக மலர் துதைந்து ஒழுக அஞ்சி
தேன் இரைத்து எழுந்து திங்கள் இறால் என சென்று மொய்க்கும்
கான் அமர் அருவி குன்றில் காய் கதிர் சுமந்து ஓர் திங்கள்
மேல் நிமிர்ந்து ஏறி ஆங்கு தேவன் வெற்பு ஏறினானே

#1169
திங்களை தெளித்திட்டு அன்ன பால்கடல் திரை செய் தெண்ணீர்
வெம் கள் விட்டு அலர்ந்த கண்ணி விண்ணவன் உரிமை-தன்னால்
மங்கல வகையின் ஆட்டி மணி அணி கலங்கள் சேர்த்தி
பங்கய நெடும் கணாளை பவித்திர குமரன் என்றான்

#1170
பொன் அணி காம்பு செய்த பொழி கதிர் திங்கள் போலும்
பின்னிய முத்த மாலை பிணையல் தாழ் குடையின் நீழல்
கன்னியர் கவரி வீச கன மணி குழை வில் வீச
இன் இசை கூத்து நோக்கி இருந்தனன் திலகம் அன்னான்
#1171
இரு மலர் குவளை உண்கண் இமைப்பு இலா பயத்தை பெற்ற
அரி மலர் தாரினான் தன் அழகு கண்டு அளிய என்னா
திரு மலர் கோதை ஐம்பால் தேவியர் தொடர்பு கேட்ப
எரி மணி பூணினானும் இன்னணம் இயம்பினானே
#1172
பிணி குலத்து அக-வயின் பிறந்த நோய் கெடுத்து
அணி தகை உடம்பு எனக்கு அருளி நோக்கினான்
கணிப்பு அரும் குண தொகை காளை என்றனன்
மணி கலத்து அகத்து அமிர்து அனைய மாண்பினான்
#1173
கடல் சுறவு உயரிய காளை அன்னவன்
அடற்கு அரும் பகை கெடுத்து அகன்ற நீள் நிலம்
மடத்தகை அவளொடும் வதுவை நாட்டி நாம்
கொடுக்குவம் என தெய்வ மகளிர் கூறினார்
#1174
செரு நிலத்து அவன் உயிர் செகுத்து மற்று எனக்கு
இரு நிலம் இயைவதற்கு எண்ணல் வேண்டுமோ
திருநில கிழமையும் தேவர் தேயமும்
தரும் நிலத்து எமக்கு எனில் தருகும் தன்மையீர்
#1175
மண் மிசை கிடந்தன மலையும் கானமும்
நண்ணுதற்கு அரியன நாடும் பொய்கையும்
கண் மனம் குளிர்ப்பன ஆறும் காண்பதற்கு
எண்ணம் ஒன்று உளது எனக்கு இலங்கு பூணினாய்
#1176
ஆற்றினது அமைதி அங்கு அறிய கூறினான்
ஊற்று நீர் கூவலுள் உறையும் மீன் அனார்
வேற்று நாடு அதன் சுவை விடுத்தல் மேயினார்
போற்று நீ போவல் யான் என்று கூறினாற்கு
#1177
இ மலைக்கு இரண்டு காதம் இறந்த பின் இருண்டு தோன்றும்
அ மலை அரண பாதம் என்ப அதன் தாள் வாய் தோன்றும்
தம் வினை கழுவுகின்றார் சாரணர் தரணி காவல்
வெம்மையின் அகன்று போந்து விழைவு அற துறந்து விட்டார்
#1178
சிந்தையில் பருதி அன்னார் சேவடி இறைஞ்சலோடும்
வெம் திறல் இயக்கி தோன்றி விருந்து எதிர்கொண்டு பேணி
தந்து அவள் அமிர்தம் ஊட்ட உண்டு அவள் பிரிந்த-காலை
சந்து உடை சாரல் சேறி தரணி மேல் திலகம் அன்னாய்
#1179
அங்கு நின்று அகன்ற பின் ஐ ஐம் காவதம்
வெம் களி விடும் மத வேழ பேரினம்
தங்கிய காடு அது தனி செல்வார் இலை
கங்கையின் கரையது கடலின் தோன்றுமே
#1180
புனல் எரி தவழ்ந்து என பூத்த தாமரை
வனம் அது வாள் என வாளை பாய்வன
மனம் மகிழ் பெரும் தடம் வலத்து இட்டு ஏகுதி
இன மலர் தாரினாய் இரண்டு காதமே
#1181
காந்திய மணியொடு வயிரம் பொன் கலந்து
ஏந்தல் நின் தோள் என இரண்டு குன்று போய்
பூம் துகில் மகளிரில் பொலிந்து போர்த்தது ஓர்
பேம் தரு பேய் வனம் பெரிய காண்டியே
#1182
இள வெயில் மணி வரை எறித்திட்டு அன்னது ஓர்
அளவு அரு குங்குமத்து அகன்ற மார்பினாய்
களவினின் அணி நலம் கவர்ந்த கள்வ என்று
உளர் மணி கொம்பனார் உருகி நைபவே
#1183
பழம் குழைந்து அனையது ஓர் மெலிவின் பை என
முழங்கு அழல் வேட்கையின் முறுகி ஊர்தர
தழும் பதம் இது என சார்ந்து புல்லலும்
பிழிந்து உயிர் உண்டிடும் பேய்கள் ஆபவே
#1184
கண்ட பேய் நகரின் நீங்கி காவதம் கடந்து தோன்றும்
வெண் தலை புணரி வீசி கிடந்த பொன் தீவிற்று ஆகி
கொண்டு உலப்ப அரிய செந்நெல் கொடி கரும்பு உடுத்த வேலி
நுண் துகில் நுழைந்த அல்குல் பவளம் ஒத்து இனியது ஒன்றே
#1185
படு மழை பருவம் பொய்யா பல்லவ தேயம் என்னும்
தட மலர் குவளை பட்டம் தழுவிய யாணர் நல் நட்டு
இடை நெறி அசைவு தீர இருந்து அவண் ஏகல் உற்றால்
கட நெறி கடத்தற்கு இன்னா கல் அதர் அத்தம் உண்டே
#1186
நுதி கொண்டன வெம் பரல் நுண் இலை வேல்
பதி கொண்டு பரந்தன போன்று உளவால்
விதி கண்டவர் அல்லது மீது செலார்
வதி கொண்டது ஓர் வெவ் அழல் வாய் சொலின் வேம்
#1187
குழவி பிடி குஞ்சரம் மாழ்கும் என
தழுவி சுடு வெவ் அழல் தாங்குவன
கெழுவி பெடையை கிளர் சேவல் தழீஇ
தொழுதி சிறகில் துயர் ஆற்றுவன
#1188
கலை இன் பிணை கன்றிடும் என்று கசிந்து
இலையின் நிழல் அவ்வயின் இன்மையான்
நிலையின் நிழல் தான் அது நின்று கொடுத்து
உலையும் வெயில் நின்று உருகும் உரவோய்
#1189
கட நாகம் மதம் கலந்து உக்க நிலத்து
உடை நாண் என மின் என ஒண் மணி அம்
பட நாகம் அழன்று பதைத்து வரும்
மடனாம் அயலார் மனம் வைப்பதுவே
#1190
நெறியில் தளர்வார் தம நெஞ்சு உருகி
பொறியில் தளர்வார் புரிவார் சடையார்
அறி மற்றவர் தாபதர் அவ்வழியார்
கறை முற்றிய காமரு வேலவனே
#1191
குலை வாழை பழுத்த கொழும் பழனும்
நிலை மாத்தன தேம் உறும் தீம் கனியும்
பலவு ஈன்றன முள் உடை அள் அமிர்தும்
மலை யாற்று அயல் யாவும் மடுத்து உளவே
#1192
வளர் பைம்பொனும் வாள் ஒளி நீள் மணியும்
ஒளிர்கின்றன ஓசனை நீள் நிலமும்
தளர்வு ஒன்று இலர் தாபதர் தாம் விழையும்
குளிர் கொண்டது ஓர் சித்திர கூடம் அதே
#1193
முழவின் இசை மூரி முழங்கு அருவி
கழையின் துணி சந்தொடு கல் என ஈர்த்து
இழியும் வயிரத்தொடு இனம் மணி கொண்டு
அழியும் புனல் அஞ்சனமாநதியே
#1194
இது பள்ளி இடம் பனி மால் வரைதான்
அது தெள் அறல் யாறு உவை தே மர மா
கதி தள்ளி இராது கடைப்பிடி நீ
மதி தள்ளி இடும் வழை சூழ் பொழிலே
#1195
வருந்தும் நீர்மை அ மாதவர் பள்ளியுள்
குருந்தம் ஏறிய கூர் அரும்பார் முல்லை
பொருந்து கேள்வரை புல்லிய பொன் அனார்
மருங்கு போன்று அணி மா கவின் கொண்டதே
#1196
குரவம் நீடிய கொன்றை அம் கானின் வாய்
வரகு வாளில் தொலைச்சுநர் பாடலின்
அரவ வண்டொடு தேன் இனம் யாழ் செயும்
பரவை மா நிலம் பன்னிரு காதமே
#1197
ஆங்கு அ எல்லை இகந்து அடு தேறலும்
பூம் கள் பொன் குடமும் நிறைத்து ஈண்டிய
ஏங்கு கம்பலத்து இன் இசை சூழ் வயல்
தாங்கு சீர் தக்க நாட்டு அணி காண்டியே
#1198
பாளை வாய் கமுகின் நெற்றி படு பழம் உதிர விண்டு
நீள் கழை கரும்பின் நெற்றி நெய்ம் முதிர் தொடையல் கீறி
வாளை வாய் உறைப்ப நக்கி வராலொடு மறலும் என்ப
காளை நீ கடந்து செல்லும் காமரு கவின் கொள் நாடே
#1199
அங்கு அதன் தனது இடம் கடந்து போம் வழி
பொங்கு பூம் சண்பக போது போர்த்து உராய்
அங்கு அ நாட்டு அரிவையர் கூந்தல் நாறி தேன்
எங்கும் மொய்த்து இழிவது ஓர் யாறு தோன்றுமே
#1200
மின் உடை மணி பல வரன்றி மேதகு
தன் உடை நலம் பகிர்ந்து உலகம் ஊட்டலின்
பொன் உடை கலை அல்குல் கணிகை பூம் புனல்
மன் உடை வேலினாய் வல்லை நீந்தினால்
 
#1201
யானை வெண் மருப்பினால் இயற்றி யாவதும்
மான மா கவரி வெண் மயிரின் வேய்ந்தன
தேன் நெய் ஊன் கிழங்கு காய் பழங்கள் செற்றிய
கானவர் குரம்பை சூழ் காடு தோன்றுமே
#1202
கடும் துடி குரலொடு கடையும் கள் குரல்
நெடும் கை மான் குரல் மணி அருவி நீள் குரல்
அடும் புலி குரலொடு மயங்கி அஞ்சிய
இடும்பை மான் குரல் விளி எங்கும் மிக்கவே
#1203
பொன் அணி திகிரி அம் செல்வன் பொற்பு உடை
கன்னிய மகளிரின் காண்டற்கு அரியன
நல் மணி புரித்தன வாவி நான்கு உள
கல் நவில் தோளினாய் காட்டு-வாயவே
#1204
அரும் கல சே இதழ் ஆர்ந்த வாவி ஒன்று
இரும்பு எரி பொன் செயும் இரத நீரது ஒன்று
ஒருங்கு நோய் தீர்ப்பது ஒன்று அமிர்தம் அல்லது ஒன்று
அரும்பு அவிழ் குவளை நீர் வாவி ஆகுமே
#1205
கை அடு சிலையினர் காட்டுள் வாழ்பவர்
பை உடை யாக்கையர் பாவ மூர்த்தியர்
ஐ என தோன்றுவர் தோன்றி ஆள் அழித்து
உய் வகை அரிது என உடலம் கொள்பவே
#1206
அண்ணல் மேல் அரிவையர் கண்ணின் மொய்த்து அவண்
மண்ணின் மேல் மாந்தர்கள் மொய்க்கும் வாவியை
எண்ணம் ஒன்று இன்றியே இடத்து இட்டு ஏகினால்
துண்ணென சிலையவர் தொழுது காண்பவே
#1207
பாடல் வண்டு யாழ் செயும் பசும்பொன் கிண்கிணி
தோடு அலர் கோதை மின் துளும்பும் மேகலை
ஆடிய கூத்தி தன் அசைந்த சாயல் போல்
ஊடு போக்கு இனியது அங்கு ஓர் ஐம் காதமே
#1208
கோதை வீழ்ந்தது என முல்லை கத்திகை
போது வேய்ந்து இன மலர் பொழிந்து கற்பு உடை
மாதரார் மனம் என கிடந்த செந்நெறி
தாதின் மேல் நடந்தது ஓர் தன்மைத்து என்பவே
#1209
மணி இயல் பாலிகை அனைய மா சுனை
அணி மணி நீள் மலர் அணிந்தது ஆயிடை
இணை மலர் படலிகை போலும் ஈர்ம் பொழில்
கணை உமிழ் சிலையினாய் கண்டு சேறியே
#1210
இலை பொலி பூண் முலை எரி பொன் மேகலை
குலத்தலை மகளிர்-தம் கற்பின் திண்ணிய
அலைத்து வீழ் அருவிகள் ஆர்க்கும் சோலை சூழ்
வலத்தது வனகிரி மதியின் தோன்றுமே
#1211
கரியவன் திருமுடி கவிழ்த்த சேவடி
பெரியவன் திருமொழி பிறழ்தல் இன்றியே
மரியவர் உறைதலின் மதன கீதமே
திரிதர பிறந்தது ஓர் சிலம்பிற்று என்பவே
#1212
ஏற்றரு மணி வரை இறந்து போன பின்
மாற்றரு மண நெறி மகளிர் நெஞ்சமே
போல் பல கவர்களும் பட்டது ஆயிடை
ஆற்றல் சால் செந்நெறி அறிய கூறுவாம்
#1213
சுரும்பு சூழ் குவளை ஓர் சுனை உண்டு அ சுனை
மருங்கில் ஓர் மணி சிலா வட்டம் உண்டு அவண்
விரும்பி வண்டு இமிர்வது ஓர் வேங்கை வேங்கையின்
மருங்கில் ஓர் செந்நெறி வகுக்க பட்டதே
#1214
கை மலர்ந்து அனைய காந்தள் கடி மலர் நாறு கானம்
மொய் மலர் குவளை கண்ணி மொய்ம்ப நீ முழுதும் நீந்தி
வை மலர்த்து இலங்கும் வெள் வேல் மத்திம தேயம் ஆளும்
கொய் மலர் தாரினானை கண்ணுறு குணம் அது என்றான்
#1215
மண்ணகம் காவல் மன்னன் மாதரம் பாவை மாசு இல்
ஒண் நுதல் மகளை தந்து ஈங்கு உறைக என ஒழுகும் நாளுள்
வெண் மதி இழந்த மீன் போல் புல் என எய்தி நின்ற
அண்ணல் நின் தோழர் எல்லாம் அவ்வழி அடைவர் என்றான்
#1216
நெட்டு-இடை நெறிகளும் நிகர் இல் கானமும்
முட்டு உடை முடுக்கரும் மொய் கொள் குன்றமும்
நட்பு உடை இடங்களும் நாடும் பொய்கையும்
உட்பட உரைத்தனன் உறுதி நோக்கினான்
#1217
செல்கதி மந்திரம் செவியில் செப்பிய
மல்லல் அம் குமரனை வாழ நாட்டவே
வல்லவன் மந்திரம் மூன்றும் கொள்க என
சொல்லினன் அவற்றது தொழிலும் தோன்றவே
#1218
கடும் தொடை கவர் கணை காமன் காமுற
படும் குரல் தரும் இது பாம்பும் அல்லவும்
கடும் திறல் நோய்களும் கெடுக்கும் வேண்டிய
உடம்பு இது தரும் என உணர கூறினான்
#1219
கந்து அடு களிறு கொல்லும் கருவரை உழுவை அன்னான்
மந்திரம் மூன்றும் ஓதி வானவில் புரையும் பைம் தார்
இந்திரன் தன்னை நோக்கி இயக்கியர் குழாத்தை நோக்கி
சிந்தையின் செல்வல் என்றான் தேவனும் செலவு நேர்ந்தான்
#1220
மனை பெரும் கிழத்தி மாசு இல் மலை மகள் தன்னை யான் சென்று
எனைத்தொரு மதியின்-ஆம்-கொல் எய்துவது என்று நெஞ்சில்
நினைத்தலும் தோழன் நக்கு நிழல் உமிழ்ந்து இலங்கு செம்பொன்
பனை திரண்டு அனைய தோளாய் பன்னிரு மதியின் என்றான்
#1221
ஆறு இரு மதியின் எய்தி அரட்டனை அடர்த்து மற்று உன்
வீறு உயர் முடியும் சூடி விழு நில கிழமை பூண்டு
சாறு அயர்ந்து இறைவன் பேணி சார்பு அறுத்து உய்தி என்று
கூறினன் கதிர்கள் பொங்கும் குளிர் மணி முடியினானே
#1222
சொல் திறல் சூழ்ச்சி மிக்க சுதஞ்சணன் சுருங்க நாடி
வில் திறல் குருசிற்கு எல்லாம் வேறுவேறு உரைப்ப கேட்டே
சுற்றிய தோழிமாரை விடுத்தனன் தொழுது நின்றான்
கற்பக மரமும் செம்பொன் மாரியும் கடிந்த கையான்
#1223
சேட்டு இளம் செம் கயல் காப்ப செய்து வில்
பூட்டி மேல் வைத்து அன புருவ பூமகள்
தீட்டரும் திரு நுதல் திலகமே என
மோட்டு இரும் கதிர் திரை முளைத்தது என்பவே
#1224
அழல் பொதிந்த நீள் எஃகின் அலர் தார் மார்பற்கு இ மலை மேல்
கழல் பொதிந்த சேவடியால் கடக்கல் ஆகாது என எண்ணி
குழல் பொதிந்த தீம் சொல்லார் குழாத்தின் நீங்கி கொண்டு ஏந்தி
நிழல் பொதிந்த நீள் முடியான் நினைப்பில் போகி நிலத்து இழிந்தான்
#1225
வண் தளிர் சந்தனமும் வழையும் மாவும் வான் தீண்டி
விண்டு ஒழுகு தீம் கனிகள் பலவும் ஆர்ந்த வியன் சோலை
மண் கருதும் வேலானை மறித்தும் காண்க என புல்லி
கொண்டு எழுந்தான் வானவனும் குருசில் தானே செலவு அயர்ந்தான்
#1226
வாள் உழலை பாய்ந்து இளைய வள நாகிட்டு இனம் என்னும்
தாள் ஒழிய போர் ஏறு தனியே போந்தது என எண்ணி
நீள் அருவி கண்ணீர் வீழ்த்து அலறி வண்ணம் கரிந்து உருகி
கோள் உழுவை அன்னாற்கு குன்றமும் நின்று அழுதனவே
#1227
மிக்கார் தம் கேட்டின் கண் மேன்மை இல்லா சிறியார் போல்
நக்கு ஆங்கே எயிறு உடைந்த நறவ முல்லை நாள் வேங்கை
தக்கார் போல் கைம்மறித்த காந்தள் அந்தோ தகாது எனவே
தொக்கார் போல் பல் மாவும் மயிலும் தோன்றி துளங்கினவே
#1228
கொல்லை அகடு அணைந்து குறும்பு சேர்ந்து தமியாரை
முல்லை முறுவலித்து நகுதிர் போலும் இனி நும்மை
பல்லை உகுத்திடுவம் என்று பைம் போது அலர் சிந்தி
தொல்லை நிறம் கருகி தும்பி பாய்ந்து துகைத்தனவே
#1229
தோடு ஏந்து பூம்_கோதை வேண்டேம் கூந்தல் தொடேல் எம் இல்
பீடு ஏந்து அரிவையர் இல் பெயர்க என்று ஊடும் மடவார் போல்
கோடு ஏந்து குஞ்சரங்கள் தெருட்ட கூடா பிடி நிற்கும்
காடு ஏந்து பூம் சாரல் கடந்தான் காலின் கழலானே
#1230
காழகம் ஊட்டப்பட்ட கார் இருள் துணியும் ஒப்பான்
ஆழ் அளை உடும்பு பற்றி பறித்து மார்பு ஒடுங்கி உள்ளான்
வாழ் மயிர் கரடி ஒப்பான் வாய்க்கு இலை அறிதல் இல்லான்
மேழக குரலினான் ஓர் வேட்டுவன் தலைப்பட்டானே
#1231
கொடி முதிர் கிழங்கு தீம் தேன் கொழும் தடி நறவொடு ஏந்தி
பிடி முதிர் முலையினாள் தன் தழை துகில் பெண்ணினோடும்
தொடு மரை தோலன் வில்லன் மரவுரி உடையன் தோன்ற
வடி நுனை வேலினான் கண்டு எ மலை உறைவது என்றான்
#1232
மாலை வெள் அருவி சூடி மற்று இதா தோன்றுகின்ற
சோலை சூழ் வரையின் நெற்றி சூழ் கிளி சுமக்கல் ஆற்றா
மாலை அம் தினைகள் காய்க்கும் வண் புனம் அதற்கு தென்மேல்
மூலை அம் குவட்டுள் வாழும் குறவருள் தலைவன் என்றான்
#1233
ஊழின் நீர் உண்பது என் என்று உரைத்தலும் உவந்து நோக்கி
மோழலம் பன்றியோடு முளவுமா காதி அட்ட
போழ் நிண புழுக்கல் தேன் நெய் பொழிந்து உக பெய்து மாந்தி
தோழ யாம் பெரிதும் உண்டும் தொண்டிக்கள் இதனை என்றான்
#1234
ஊனொடு தேனும் கள்ளும் உண்டு உயிர் கொன்ற பாவத்து
ஈனராய் பிறந்தது இங்ஙன் இனி இவை ஒழி-மின் என்ன
கானில் வாழ் குறவன் சொல்லும் கள்ளொடு ஊன் தேன் கைவிட்டால்
ஏனை எம் உடம்பு வாட்டல் எவன் பிழைத்தும்-கொல் என்றான்
#1235
ஊன் சுவைத்து உடம்பு வீக்கி நரகத்தில் உறைதல் நன்றோ
ஊன் தினாது உடம்பு வாட்டி தேவராய் உறைதல் நன்றோ
ஊன்றி இ இரண்டின் உள்ளும் உறுதி நீ உரைத்திடு என்ன
ஊன் தினாது ஒழிந்து புத்தேள் ஆவதே உறுதி என்றான்
#1236
உறுதி நீ உணர்ந்து சொன்னாய் உயர் கதி சேறி ஏடா
குறுகினாய் இன்ப வெள்ளம் கிழங்கு உண காட்டுள் இன்றே
இறைவன் நூல் காட்சி கொல்லா ஒழுக்கொடு ஊன் துறத்தல் கண்டாய்
இறுதி கண் இன்பம் தூங்கும் இரும் கனி இவை கொள் என்றான்
#1237
என்றலும் தேனும் ஊனும் பிழியலும் இறுக நீக்கி
சென்று அடி தொழுது செல்கு என் தேம் பெய் நீள் குன்றம் என்று
குன்று உறை குறவன் போக கூர் எரி வளைக்கப்பட்ட
பஞ்சவர் போல நின்ற பகட்டு இன பரிவு தீர்த்தான்
#1238
இலங்கு ஒளி மரகதம் இடறி இன் மணி
கலந்து பொன் அசும்பு கான்று ஒழுகி மான் இனம்
சிலம்பு பாய் வருடையொடு உகளும் சென்னி நீள்
விலங்கல் சென்று எய்தினான் விலங்கல் மார்பினான்
#1239
அந்தர அகடு தொட்டு அணவு நீள் புகழ்
வெந்து எரி பசும்பொனின் விழையும் வெல் ஒளி
மந்திர வாய்மொழி மறு இல் மாதவர்
இந்திரர் தொழும் அடி இனிதின் எய்தினான்
#1240
முனிவரும் முயன்று வான் கண் மூப்பு இகந்து இரிய இன்ப
கனி கவர் கணனும் ஏத்த காதி கண் அரிந்த காசு இல்
தனி முதிர் கடவுள் கோயில் தான் வலம் கொண்டு செல்வான்
குனி திரை முளைத்த வெய்யோன் குன்று சூழ்வதனை ஒத்தான்
#1241
தண் கயம் குற்ற போதும் தாழ் சினை இளிந்த வீயும்
வண் கொடி கொய்த பூவும் வார்ந்து மட்டு உயிர்ப்ப ஏந்தி
திண் புகழ் அறிவன் பாதம் திருந்து கைத்தலத்தின் ஏற்றி
பண்பு கொள் குணம் கொள் கீதம் பாணியில் பாடுகின்றான்
#1242
ஆதி வேதம் பயந்தோய் நீ அலர் பெய்ம் மாரி அமைந்தோய் நீ
நீதி நெறியை உணர்ந்தோய் நீ நிகர் இல் காட்சிக்கு இறையோய் நீ
நாதன் என்ன படுவோய் நீ நவை செய் பிறவி கடலகத்து உன்
பாத கமலம் தொழுவேங்கள் பசை யாப்பு அவிழ பணியாயே
#1243
இன்னா பிறவி இகந்தோய் நீ இணை இல் இன்பம் உடையோய் நீ
மன்னா உலகம் மறுத்தோய் நீ வரம்பு இல் காட்சிக்கு இறையோய் நீ
பொன்னார் இஞ்சி புகழ் வேந்தே பொறியின் வேட்கை கடல் அழுந்தி
ஒன்னா வினையின் உழல்வேங்கள் உயப்போம் வண்ணம் உரையாயே
#1244
உலகம் மூன்று உடையோய் நீ ஒண் பொன் இஞ்சி எயிலோய் நீ
திலகம் ஆய திறலோய் நீ தேவர் ஏத்தப்படுவோய் நீ
அலகை இல்லா குண கடலே யாரும் அறியப்படாய் ஆதி
கொலை இல் ஆழி வலன் உயர்த்த குளிர் முக்குடையின் நிழலோய் நீ
#1245
அடி உலகம் ஏத்தி அலர் மாரி தூவ
முடி உலக மூர்த்தி உற நிமிர்ந்தோன் யாரே
முடி உலக மூர்த்தி உற நிமிர்ந்தோன் மூன்று
கடி மதிலும் கட்டு அழித்த காவலன் நீ அன்றே
#1246
முரண் அவிய வென்று உலகம் மூன்றினையும் மூன்றின்
தரணி மேல் தந்து அளித்த தத்துவன்-தான் யாரே
தரணி மேல் தந்து அளித்தான் தண் மதி போல் நேமி
அரண் உலகிற்கு ஆய அறிவரன் நீ அன்றே
#1247
தீரா வினை தீர்த்து தீர்த்தம் தெரிந்து உய்த்து
வாரா கதி உரைத்த வாமன்-தான் யாரே
வாரா கதி உரைத்த வாமன் மலர் ததைந்த
கார் ஆர் பூம் பிண்டி கடவுள் நீ அன்றே
#1248
அ மலை சினகரம் வணங்கி பண்ணவர்
பொன் மலர் சேவடி புகழ்ந்த பின்னரே
வெம் மலை தெய்வதம் விருந்து செய்த பின்
செம்மல் போய் பல்லவ தேயம் நண்ணினான்
#1249
அரியல் ஆர்ந்து அமர்த்தலின் அனந்தர் நோக்கு உடை
கரிய வாய் நெடிய கண் கடைசி மங்கையர்
வரி வரால் பிறழ் வயல் குவளை கட்பவர்
இருவரை வினாய் நகர் நெறியின் முன்னினான்
#1250
அன்னமும் மகன்றிலும் அணிந்து தாமரை
பன் மலர் கிடங்கு சூழ் பசும்பொன் பாம்புரி
கன்னி மூதெயில் கடல் உடுத்த காரிகை
பொன் அணிந்து இருந்து என பொலிந்து தோன்றுமே
 
#1251
அகில் தரு கொழும் புகை மாடத்து ஆய் பொனின்
முகில் தலை விலங்கிய மொய் கொள் நீள் கொடி
பகல் தலை விலங்கு சந்திராபம் பான்மையின்
இகல் தலை விலங்கு வேல் காளை எய்தினான்
#1252
மலர் அணி மணி குடம் மண்ணும் நீரொடு
பலர் நலம் பழிச்சுபு பரவ ஏகினான்
அலர் கதிர் கரும்பிளை மடுப்ப ஆய் நகர்
உலகு அளந்தவன் என உள்புக்கான்-அரோ
#1253
சந்தன காவு சூழ்ந்து சண்பகம் மலர்ந்த சோலை
வந்து வீழ் மாலை நாற்றி மணி அரங்கு அணிந்து வானத்து
இந்திர குமரன் போல இறைமகன் இருந்து காண
அந்தர மகளிர் அன்னார் நாடகம் இயற்றுகின்றார்
#1254
குழல் எடுத்து யாத்து மட்டார் கோதையின் பொலிந்து மின்னும்
அழல் அவிர் செம்பொன் பட்டம் குண்டலம் ஆரம் தாங்கி
நிழல் அவிர் அல்குல் காசு சிலம்பொடு சிலம்ப நீள் தோள்
அழகி கூத்து ஆடுகின்றாள் அரங்கின் மேல் அரம்பை அன்னாள்
#1255
தண்ணுமை முழவம் வீணை குழலொடு குயில தண் பூம்
கண்ணொடு புருவம் கை கால் கலை அல்குல் நுசுப்பு காமர்
ஒள்_நுதல் கொண்ட ஆடல் தொட்டிமை உருவம் நோக்கி
வெண்ணெய் தீ உற்ற வண்ணம் ஆடவர் மெலிகின்றாரே
#1256
பாடலொடு இயைந்த ஆடல் பண் அமை கருவி மூன்றும்
கூடுபு சிவணி நின்று குழைந்து இழைந்து அமிர்தம் ஊற
ஓடு அரி நெடும் கண் அம்பால் உளம் கிழிந்து உருவ எய்யா
ஈடு அமை பசும்பொன் சாந்தம் இலயமா ஆடுகின்றாள்
#1257
வாள் நுதல் பட்டம் மின்ன வார் குழை திருவில் வீச
பூண் முலை பிறழ பொன் தோடு இட-வயின் நுடங்க ஒல்கி
மாண் இழை வளை கை தம்மால் வட்டணை போக்குகின்றாள்
காண் வரு குவளை கண்ணால் காளை மேல் நோக்கினாளே
#1258
நோக்கினாள் நெடும் கண் என்னும் குடங்கையால் நொண்டு கொண்டு
வாக்கு அமை உருவின் மிக்கான் வனப்பினை பருக இப்பால்
ஆக்கிய இலயம் நீங்கிற்று அணங்கு அனாள் நெடும் கண் பில்கி
வீக்கு வார் முலையின் நெற்றி வெண் முத்தம் சொரிந்த அன்றே
#1259
செரு கயல் நெடும் கணாள் அ திருமகன் காண்டல் அஞ்சி
நெருக்கி தன் முலையின் மின்னும் நிழல் மணி வடத்தை மாதர்
பொருக்கு நூல் பரிந்து சிந்தா பூ எலாம் கரிந்து வாட
தரிக்கிலாள் காம செம் தீ தலை கொள சாம்பினாளே
#1260
கன்னிமை கனிந்து முற்றி காமுற கமழும் காமத்து
இன் நறும் கனியை துய்ப்பான் ஏந்தலே பிறர்கள் இல்லை
பொன்னினால் உடையும் கற்பு என்று உரைத்தவர் பொய்யை சொன்னார்
இன் இசை இவற்கு அலால் என் நெஞ்சு இடம் இல்லை என்றாள்
#1261
கரும் சிறை பறவை ஊர்தி காமரு காளை-தான்-கொல்
இரும் சுறவு உயர்த்த தோன்றல் ஏத்த அரும் குருசில்-தான்-கொல்
அரும் பெறல் குமரன் என்று ஆங்கு அறிவு அயர்வுற்று நின்றாள்
திருந்து இழை அணங்கு மென் தோள் தேசிக பாவை அன்னாள்
#1262
போது என கிடந்த வாள் கண் புடை பெயர்ந்து இமைத்தல் செல்லாது
யாது இவள் கண்டது என்று ஆங்கு அரசனும் அமர்ந்து நோக்கி
மீது வண்டு அரற்றும் கண்ணி விடலையை தானும் கண்டான்
காதலில் களித்தது உள்ளம் காளையை கொணர்-மின் என்றான்
#1263
கை வளர் கரும்பு உடை கடவுள் ஆம் எனின்
எய் கணை சிலையினோடு இவன்-கண் இல்லையால்
மெய் வகை இயக்கருள் வேந்தன் ஆகும் என்று
ஐயம் உற்று எவர்களும் அமர்ந்து நோக்கினார்
#1264
மந்திரம் மறந்து வீழ்ந்து மா நிலத்து இயங்குகின்ற
அந்தரகுமரன் என்று ஆங்கு யாவரும் அமர்ந்து நோக்கி
இந்திர திருவற்கு உய்த்தார்க்கு இறைவனும் எதிர்கொண்டு ஓம்பி
மைந்தனை மகிழ்வ கூறி மைத்துன தோழன் என்றான்
#1265
போது அவிழ் தெரியலானும் பூம் கழல் காலினானும்
காதலின் ஒருவர் ஆகி கலந்து உடன் இருந்த-போழ்தின்
ஊது வண்டு உடுத்த மாலை உணர்வு பெற்று இலயம் தாங்கி
போது கண்டு அனைய வாள் கண் புருவத்தால் கலக்குகின்றாள்
#1266
தேன் உகுக்குகின்ற கண்ணி திருமகள் ஆட இப்பால்
ஊன் உகுக்குகின்ற வை வேல் ஒரு மகன் உருமின் தோன்றி
வான் உகுக்குகின்ற மீன் போல் மணி பரந்து இமைக்கும் மார்பில்
கான் உகுக்குகின்ற பைம் தார் காவலன் தொழுது சொன்னான்
#1267
கொய்தகை பொதியில் சோலை குழவிய முல்லை மௌவல்
செய்ய சந்து இமய சாரல் கருப்புரக்கன்று தீம் பூ
கை தரு மணியின் தெள் நீர் மது கலந்து ஊட்டி மாலை
பெய்து ஒளி மறைத்து நங்கை பிறை என வளர்க்கின்றாளே
#1268
பவழம் கொள் கோடு நாட்டி பைம்பொனால் வேலி கோலி
தவழ் கதிர் முத்தம் பாய்த்தி தன் கையால் தீண்டி நல் நாள்
புகழ் கொடி நங்கை தன் பேர் பொறித்தது ஓர் கன்னி முல்லை
அகழ் கடல் தானை வேந்தே அணி எயிறு ஈன்றது அன்றோ
#1269
வம்பு அலர் கோதை சிந்த மயில் என ஒருத்தி ஓடி
கொம்பு அலர் நங்கை பூத்தாள் பொலிக என குனிந்த வில் கீழ்
அம்பு அலர் கண்ணி ஆர நிதி அறைந்து ஒகை போக்கி
கம்பலம் போர்த்த போலும் கடி மலர் காவு புக்காள்
#1270
நற விரி சோலை ஆடி நாள்மலர் குரவம் பாவை
நிறைய பூத்து அணிந்து வண்டும் தேன்களும் நிழன்று பாட
இறைவளை தோளி மற்று என் தோழி ஈது என்று சேர்ந்து
பெறல் அரும் பாவை கொள்வாள் பெரிய தோள் நீட்டினாளே
#1271
நங்கை தன் முகத்தை நோக்கி நகை மதி இது என்று எண்ணி
அங்கு உறை அரவு தீண்டி ஒளவையோ என்று போக
கொங்கு அலர் கோதை நங்கை அடிகளோ என்று கொம்பு ஏர்
செம் கயல் கண்ணி தோழி திருமகள் சென்று சேர்ந்தாள்
#1272
அடிகளுக்கு இறைஞ்சி ஐயன் அடிகளை தொழுது நங்கை
அடிகளை புல்லி ஆர தழுவிக்கொண்டு ஒளவைமாரை
கொடி அனாய் என்னை நாளும் நினை என தழுவிக்கொண்டு
மிடை மின்னின் நிலத்தை சேர்ந்தாள் வேந்த மற்று அருளுக என்றான்
#1273
பதுமையை பாம்பு தீண்டிற்று என்றலும் பையுள் எய்தி
கொதி நுனை வேலினாய் இங்கு இருக்க என குருசில் ஏகி
கதுமென சென்று நோக்கி காய் சினம் கடிதற்கு ஒத்த
மதி மிகுத்து அவலம் நீக்கும் மந்திரம் பலவும் செய்தான்
#1274
வள்ளல் தான் வல்ல எல்லாம் மாட்டினன் மற்றும் ஆங்கண்
உள்ளவர் ஒன்றலாத செயச்செய ஊறு கேளாது
அள் இலை பூணினாளுக்கு ஆவி உண்டு இல்லை என்ன
வெள் எயிற்று அரவு கான்ற வேகம் மிக்கிட்டது அன்றே
#1275
பைம் கதிர் மதியம் என்று பகை அடு வெகுளி நாகம்
நங்கையை செற்றது ஈங்கு தீர்த்து நீர் கொள்-மின் நாடும்
வங்க மா நிதியம் நல்கி மகள் தரும் மணி செய் மான் தேர்
எங்களுக்கு இறைவன் என்று ஆங்கு இடி முரசு எருக்கினானே
#1276
மண்டலி மற்றிது என்பார் இராசமாநாகம் என்பார்
கொண்டது நாகம் என்பார் குறை வளி பித்தொடு ஐயில்
பிண்டித்து பெருகிற்று என்பார் பெரு நவை அறுக்கும் விஞ்சை
எண் தவ பலவும் செய்தாம் என்று கேளாது இது என்பார்
#1277
சிரை ஐந்தும் விடுதும் என்பார் தீற்றுதும் சிருங்கி என்பார்
குரை புனல் இடுதும் என்பார் கொந்து அழல் உறுத்தும் என்பார்
இரை என வருந்த கவ்வி என்புற கடித்தது என்பார்
உரையன்-மின் உதிரம் நீங்கிற்று உய்யலள் நங்கை என்பார்
#1278
கையொடு கண்டம் கோப்பார் கனை சுடர் உறுப்பின் வைப்பார்
தெய்வதம் பரவி எல்லா திசை-தொறும் தொழுது நிற்பார்
உய் வகை இன்றி இன்னே உலகு உடன் கவிழும் என்பார்
மையல் அம் கோயில் மாக்கள் மடைதிறந்திட்டது ஒத்தார்
#1279
வெந்து எரி செம்பொன் பூவும் விளங்கு பொன் நூலும் பெற்றார்
மந்திரம் மறையும் வல்லார் எழாயிரர் மறு இல் வாய்மை
அந்தரத்து அறுவை வைப்பார் அந்தணர் அம் கை கொட்டி
பைம் தொடி பாவை இன்னே பரிவு ஒழிந்து எழுக என்பார்
#1280
பாம்பு எழ பாம்பு கொண்டால் பகவற்கும் அரிது தீர்த்தல்
தேம் பிழி கோதைக்கு இன்று பிறந்தநாள் தெளி-மின் என்று
காம்பு அழி பிச்சம் ஆக கணி எடுத்து உரைப்ப கல்லென்
தூம்பு அழி குளத்தின் கண்ணீர் துகள் நிலத்து இழிந்தது அன்றே
#1281
நங்கைக்கு இன்று இறத்தல் இல்லை நரபதி நீயும் கோண்மோ
கொங்கு அலர் கோங்கின் நெற்றி குவி முகிழ் முகட்டின் அங்கண்
தங்கு தேன் அரவ யாழின் தான் இருந்து ஆந்தை பாடும்
இங்கு நம் இடரை தீர்ப்பான் இளையவன் உளன் மற்று என்றான்
#1282
பன் மணி கடகம் சிந்த பருப்பு உடை பவள தூண் மேல்
மன்னவன் சிறுவன் வண் கை புடைத்து மாழாந்து சொன்னான்
இன்னும் ஒன்று உண்டு சூழ்ச்சி என்னோடு அங்கு இருந்த நம்பி
தன்னை கூய் கொணர்-மின் என்றான் தர வந்து ஆங்கு அவனும் கண்டான்
#1283
பறவை மா நாகம் வீழ்ந்து பல உடன் பதைப்ப போன்றும்
சிறகுற பரப்பி மஞ்ஞை செருக்குபு கிடந்த போன்றும்
கறவை கன்று இழந்த போன்றும் கிடந்து அழுகின்ற கண்ணார்
இறை வளையவரை நோக்கி என் கொடிது உற்றது என்றான்
#1284
ஊறு கொள் சிங்கம் போல உயக்கமோடு இருந்த நம்பி
கூறினான் கொற்ற வேந்தன் கொழு நிதி நிலத்து மற்று உன்
வீறு உயர் புகழை வித்தி கேண்மையை விளைத்தி இன்னே
நாறு பூம் கொம்பு அனாளை நோக்கு என நம்பி சொன்னான்
#1285
புற்று-இடை வெகுளி நாகம் போக்கு அற கொண்டதேனும்
மற்று இடையூறு செய்வான் வானவர் வலித்ததேனும்
பொன்_தொடிக்கு இறத்தல் இல்லை புலம்பு கொண்டு அழேற்க என்றான்
கற்று அடிப்படுத்த விஞ்சை காமரு காமன் அன்னான்
#1286
பொழிந்து நஞ்சு உகுத்தல் அச்சம் இரை பெரு வெகுளி போகம்
கழிந்து மீது ஆடல் காலம் பிழைப்பு என எட்டின் ஆகும்
பிழிந்து உயிர் உண்ணும் தட்டம் அதட்டம் ஆம் பிளிற்றின் உம்பர்
ஒழிந்து எயிறு ஊனம் செய்யும் கோள் என மற்றும் சொன்னான்
#1287
அந்தணன் நாறும் ஆன் பால் அவியினை அலர்ந்த காலை
நந்தியாவட்டம் நாறு நகை முடி அரசன் ஆயின்
தந்தியாம் உரைப்பின் தாழை தட மலர் வணிகன் நாறும்
பந்தியா பழுப்பு நாறின் சூத்திரன்-பாலது என்றான்
#1288
கன்னியை கடித்த நாகம் கன்னியே கன்னி நோக்கம்
அன்னதே அரசர் சாதி மூன்று எயிறு அழுந்தி ஆழ்ந்த
கொன்னும் மா நாகம் கொண்டால் கொப்புள் ஆம் விரலின் தேய்த்தால்
மன்னிய தெள் மட்டு-ஆயின் மண்டலி-பாலது என்றான்
#1289
குன்று இரண்டு அனைய தோளான் கொழு மலர் குவளை போது அங்கு
ஒன்று இரண்டு உருவம் ஓதி உறக்கு-இடை மயில் அனாள் தன்
சென்று இருண்டு அமைந்த கோல சிகழிகை அழுத்தி செல்வன்
நின்று இரண்டு உருவம் ஓதி நேர் முகம் நோக்கினானே
#1290
நெடும்தகை நின்று நோக்க நீள் கடல் பிறந்த கோல
கடும் கதிர் கனலி கோப்ப கார் இருள் உடைந்ததே போல்
உடம்பு-இடை நஞ்சு நீங்கிற்று ஒண்_தொடி உருவம் ஆர்ந்து
குடங்கையின் நெடிய கண்ணால் குமரன் மேல் நோக்கினாளே
#1291
நோக்கினாள் நிறையும் நாணும் மாமையும் கவினும் நொய்தில்
போக்கினாள் வளையும் போர்த்தாள் பொன் நிற பசலை மூழ்கிற்று
ஆக்கினாள் அநங்கன் அப்பு தூணியை அமருள் ஆனாது
ஓக்கிய முருகன் எஃகம் ஓர் இரண்டு அனைய கண்ணாள்
#1292
ஆட்சி ஐம்பொறியாளன் உடம்பு எனும்
பூட்சி நீள் கொடி புற்றின் அகத்து உறை
வாள் கண் நோக்கு எனும் வை எயிற்று ஆர் அழல்
வேட்கை நாகத்தின் மீட்டும் கொளப்பட்டாள்
#1293
மாழ்கி வெய்து உயிர்த்தாள் மடவாள் என
தோழிமார்களும் தாயரும் தொக்கு உடன்
சூழி யானை அன்னாய் தொடின் நஞ்சு அறும்
வாழி என்றனர் வம்பு அலர் கோதையர்
#1294
கண்ணின் காணினும் கட்டுரை கேட்பினும்
நண்ணி தீண்டினும் நல் உயிர் நிற்கும் என்று
எண்ணி ஏந்து_இழை தன்னை உடம்பு எலாம்
தண் என் சாந்தம் வைத்தால் ஒப்ப தைவந்தான்
#1295
மற்ற மாதர் தன் வாள் தடம் கண்களால்
உற்ற நோக்கம் உறாதது ஓர் நோக்கினில்
சுற்றி வள்ளலை சோர்வு இன்றி யாத்திட்டாள்
அற்றம் இல் அமிர்து ஆகிய அம் சொலாள்
#1296
விஞ்சையர் வீரன் என்பார் விண்ணவர் குமரன் என்பார்
எஞ்சிய உயிரை மீட்டான் இவன் அலால் இல்லை என்பார்
மஞ்சு சூழ் இஞ்சி மூதூர் மா முடி குரிசில் நாளை
நஞ்சு சூழ் வேலினாற்கே நங்கையை கொடுக்கும் என்பார்
#1297
விளங்கு ஒளி விசும்பில் வெண் கோட்டு இளம் பிறை சூழ்ந்த மின் போல்
வளம் கெழு வடத்தை சூழ்ந்து வான் பொன் நாண் திளைப்ப சேந்த
இளம் கதிர் முலைகள் தம்மால் இவனை மார்பு எழுதி வைகின்
துளங்கு பெண் பிறப்பும் தோழி இனிது என சொல்லி நிற்பார்
#1298
அரும் தவம் செய்து வந்த ஆய் இழை மகளிர் யார்-கொல்
பெருந்தகை மார்பில் துஞ்சி பெண்மையால் பிணிக்கும் நீரார்
கரும் கணின் யாமும் கண்டாம் காமனை என்று சொல்லி
திருந்து ஒளி முறுவல் செ வாய் தீம் சொலார் மயங்கினாரே
#1299
பல் மலர் படலை கண்ணி குமரனை பாவை நல்லார்
மன்னவன் பணியின் வாழ்த்தி வாச நெய் பூசி நல் நீர்
துன்னினர் ஆட்டி செம்பொன் செப்பினுள் துகிலும் சாந்தும்
இன் நறும் புகையும் பூவும் கலத்தொடும் ஏந்தினாரே
#1300
ஏந்திய ஏற்ப தாங்கி எரி மணி கொட்டை நெற்றி
வாய்ந்த பொன் குயிற்றி செய்த மரவடி ஊர்ந்து போகி
ஆய்ந்த நல் மாலை வேய்ந்த அரும் பெறல் கூடம் சேர்ந்தான்
பூம் தொடி மகளிர் போற்றி பொன் கலம் பரப்பினாரே
 
#1301
கன்னியர் கரக நீரால் தாமரை கழீஇயது ஒப்ப
பொன் அடி கழீஇய பின்றை புரிந்து வாய் நன்கு பூசி
இன் மலர் தவிசின் உச்சி இருந்து அமிர்து இனிதின் கொண்டான்
மின் விரிந்து இலங்கு பைம் பூண் வேல் கணார் வேனிலானே
#1302
வாச நல் பொடியும் நீரும் காட்டிட கொண்டு வாய்ப்ப
பூசறுத்து அம் கை நீரை மும்முறை குடித்து முக்கால்
காசு அற துடைத்த பின்றை கை விரல் உறுப்பு தீட்டி
தூசினால் அம் கை நீவி இருந்தனன் தோற்றம் மிக்கான்
#1303
சீர் கொள செய்த செம்பொன் அடைப்பையுள் பாகு செல்ல
வார் கழல் குருசில் கொண்டு கவுள் அடுத்து இருந்த ஆங்கண்
போர் கொள்வேல் மன்னன் எல்லா கலைகளும் புகன்று கேட்டு
நீர் கொள் மா கடல் அனாற்கு நிகர் இல்லை நிலத்தில் என்றான்
#1304
பரிதி பட்டது பன் மணி நீள் விளக்கு
எரிய விட்டனர் இன்னியம் ஆர்த்தன
அரிய பொங்கு அணை அம் என் அமளி மேல்
குரிசில் ஏறினன் கூர்ந்தது சிந்தையே
#1305
பூம் கண் அவ்வயின் நோக்கம் பொறாத போல்
வீங்கி வெம்மை கொண்டு ஏந்தின வெம் முலை
ஈங்கு இது என் என இட்டு இடை நைந்தது
பாங்கு இலாரின் பரந்து உள அல்குலே
#1306
முருகு வார் குழலாள் முகிழ் மெல் முலை
பெருகு நீர்மையின் பேதுறவு எய்தி நின்று
உருகும் நுண் இடை ஓவிய பாவை-தன்
அருகும் நோக்கம் என் ஆவி அலைக்குமே
#1307
புகை அவாவிய பூம் துகில் ஏந்து அல்குல்
வகைய ஆம் மணி மேகலை வார் மது
முகை அவாவிய மொய் குழல் பாவியேன்
பகைய வாய் படர் நோய் பயக்கின்றவே
#1308
போது உலாம் சிலையோ பொரு வேல் கணோ
மாது உலாம் மொழியோ மட நோக்கமோ
யாது நான் அறியேன் அணங்கு அன்னவள்
காதலால் கடைகின்றது காமமே
#1309
அண்ணல் அவ்வழி ஆழ் துயர் நோய் உற
வண்ண மா மலர் கோதையும் அவ்வழி
வெண்ணெய் வெம் கனல் மீமிசை வைத்தது ஒத்து
உள் நையா உருகா உளள் ஆயினாள்
#1310
பெயல் மழை பிறழும் கொடி மின் இடை
கயல் மணி கணின் நல்லவர் கை தொழ
பயன் இழைத்த மென் பள்ளியுள் பைம் தொடி
மயன் இழைத்த அம் பாவையின் வைகினாள்
#1311
வணங்கு நோன் சிலை வார் கணை காமனோ
மணம் கொள் பூ மிசை மை வரை மைந்தனோ
நிணந்து என் நெஞ்சம் நிறை கொண்ட கள்வனை
அணங்குகாள் அறியேன் உரையீர்களே
#1312
கடை கந்து அன்ன தன் காமரு வீங்கு தோள்
அடைய புல்லினன் போன்று அணி வெம் முலை
உடைய ஆகத்து உறு துயர் மீட்டவன்
இடையது ஆகும் என் ஆரும் இல் ஆவியே
#1313
இறுதி இல் அமிர்து எய்துநர் ஈண்டி அன்று
அறிவின் நாடிய அம் மலை மத்தமா
நெறியின் நின்று கடைந்திடப்பட்ட நீர்
மறுகும் மா கடல் போன்றது என் நெஞ்சமே
#1314
நகை வெண் திங்களும் நார் மடல் அன்றிலும்
தகை வெள் ஏற்று அணல் தாழ் மணி ஓசையும்
பகை கொள் மாலையும் பையுள் செய் ஆம்பலும்
புகை இல் பொங்கு அழல் போல் சுடுகின்றவே
#1315
பூ மென் சேக்கையுள் நாற்றிய பூம் திரள்
தாமம் வாட்டும் தகைய உயிர்ப்பு அளைஇ
காமர் பேதை தன் கண்தரு காமநோய்
யாமத்து எல்லை ஓர் யாண்டு ஒத்து இறந்ததே
#1316
மாது யாழ் மழலை மொழி மாதராள்
தாதி அவ்வையும் தன் அமர் தோழியும்
போது வேய் குழல் பொன் அவிர் சாயலுக்கு
யாது நாம் செயல்-பாலது என்று எண்ணினார்
#1317
அழுது நுண் இடை நைய அலர் முலை
முழுதும் குங்குமம் முத்தொடு அணிந்த பின்
தொழுது கோதையும் கண்ணியும் சூட்டினார்
எழுது கொம்பு அனையார் இளையாளையே
#1318
வேந்து காயினும் வெள் வளை ஆயமோடு
ஏந்து பூம் பொழில் எய்தி அங்கு ஆடுதல்
ஆய்ந்தது என்று கொண்டு அம் மயில் போல் குழீஇ
போந்தது ஆயம் பொழிலும் பொலிந்ததே
#1319
அலங்கல் தான் தொடுப்பார் அலர் பூ கொய்வார்
சிலம்பு சென்று எதிர் கூவுநர் செய் சுனை
கலங்க பாய்ந்து உடன் ஆடுநர் காதலின்
இலங்கு பாவை இரு மணம் சேர்த்துவார்
#1320
தூசு உலாம் நெடும் தோகையின் நல்லவர்
ஊசல் ஆடுநர் ஒண் கழங்கு ஆடுநர்
பாசம் ஆகிய பந்து கொண்டு ஆடுநர்
ஆகி எத்திசையும் அமர்ந்தார்களே
#1321
முருகு விம்மிய மொய் குழல் ஏழை-தன்
உருகும் நோக்கம் உளம் கிழித்து உள் சுட
அரிவை ஆடிய காவகம் காணிய
எரி கொள் வேலவன் ஏகினன் என்பவே
#1322
மயிலின் ஆடலும் மந்தியின் ஊடலும்
குயிலின் பாடலும் கூடி மலிந்து அவண்
வெயிலின் நீங்கிய வெண் மணல் தண் நிழல்
பயிலும் மாதவி பந்தர் ஒன்று எய்தினான்
#1323
காது சேர்ந்த கடி பிணை கையது
தாது மல்கிய தண் கழுநீர் மலர்
ஓத நித்தில வட்டம் ஓர் பொன் செய் நாண்
கோதை வெம் முலை மேல் கொண்ட கோலமே
#1324
விண் புதைப்பன வெண் மலர் வேய்ந்து உளால்
கண் புதைப்பன கார் இரும் பூம் பொழில்
சண்பகத்து அணி கோதை நின்றாள் தனி
நண்பனை நினையா நறு மேனியே
#1325
கறந்த பாலினுள் காசு இல் திரு மணி
நிறம் கிளர்ந்து தன் நீர்மை கெட்டு ஆங்கு அவள்
மறைந்த மாதவி மாமை நிழற்றலின்
சிறந்த செல்வனும் சிந்தையின் நோக்கினான்
#1326
வரையின் மங்கை-கொல் வாங்கு இரும் தூங்கு நீர்
திரையின் செல்வி-கொல் தே மலர் பாவை-கொல்
உரையின் சாயல் இயக்கி-கொல் யார்-கொல் இ
விரை செய் கோலத்து வெள் வளை தோளியே
#1327
மாலை வாடின வாள் கண் இமைத்தன
காலும் பூமியை தோய்ந்தன காரிகை
பாலின் தீம் சொல் பதுமை இ நின்றவள்
சோலை வேய் மருள் சூழ் வளை தோளியே
#1328
தேவர் பண்ணிய தீம் தொடை இன் சுவை
மேவர் தென் தமிழ் மெய் பொருள் ஆதலின்
கோவத்து அன்ன மென் சீறடி கொம்பு அனாள்
பூவர் சோலை புகுவல் என்று எண்ணினான்
#1329
அல்லி சேர் அணங்கு அன்னவட்கு ஆயிடை
புல்லி நின்ற மெய்ந்நாண் புறப்பட்டது
கல் செய் தோளவன் காமரு பேர் உணர்வு
எல்லை நீங்கிற்று இயைந்தனர் என்பவே
#1330
களித்த கண் இணை காம்பு என வீங்கு தோள்
தெளிர்த்த வெள் வளை சேர்ந்தது மாமையும்
தளித்த சுண்ணம் சிதைந்தன குங்குமம்
அளித்த பூம் பட்டு அணிந்து திகழ்ந்ததே
#1331
குவளை ஏய்ந்த கொடும் குழை கூந்தலுள்
திவளும் வாழிய செம் பொறி வண்டுகாள்
இவள கூர் எயிறு ஈனும் தகையவோ
தவள மெல் இணர் தண் கொடி முல்லையே
#1332
பொன் துஞ்சு ஆகத்து பூம் கண்கள் போழ்ந்த புண்
இன்று இ பூண் கொள் இள முலை சாந்து அலால்
அன்றி தீர்ப்பன யாவையும் இல்லையே
என்று மாதர் எழில் நலம் ஏத்தினான்
#1333
கண்ணி வேய்ந்து கரும் குழல் கைசெய்து
வண்ண மாலை நடு சிகையுள் வளைஇ
செண்ண அம் சிலம்பு ஏறு துகள் அவித்து
அண்ணல் இன்புறுத்து ஆற்றலின் ஆற்றினாள்
#1334
திங்களும் மறுவும் என சேர்ந்தது
நங்கள் அன்பு என நாட்டி வலிப்பு உறீஇ
இங்கு ஒளித்திடுவேன் நுமர் எய்தினார்
கொங்கு ஒளிக்கும் குழலாய் என கூறினான்
#1335
மழை-இடை குளித்திட்டது ஓர் வாள் மினின்
தழை-இடை குளித்தான் தகை வேலினான்
இழை-இடை குளித்து ஏந்திய வெம் முலை
வழை-இடை குளித்தார் வந்து தோன்றினார்
#1336
மின் ஒர் பூம் பொழில் மேதக செல்வது ஒத்து
அன்னம் நாண அசைந்து சிலம்பு அடி
மென் மெல மலர் மேல் மிதித்து ஏகினாள்
நல் நலம் அவற்கே வைத்த நங்கையே
#1337
திங்கள் சூழ்ந்த பல் மீன் என செல் நெறி
நங்கை தவ்வையும் தோழியும் நண்ணினார்
அங்கு அ ஆயம் அடிப்பணி செய்த பின்
தங்கள் காதலினால் தகை பாடினார்
#1338
தழையும் கண்ணியும் தண் நறு மாலையும்
விழைவ சேர்த்துபு மெல் என ஏகினார்
முழையுள் மூரி முழங்கு அரி ஏறு அனான்
பழைய நண்பனை பண்புளி எய்தினான்
#1339
பூமியை ஆடற்கு ஒத்த பொறியினன் ஆதலானும்
மா மகள் உயிரை மீட்ட வலத்தினன் ஆதலானும்
நேமியான் சிறுவன் அன்ன நெடும்தகை நேரும் ஆயின்
நாம் அவற்கு அழகிதாக நங்கையை கொடுத்தும் என்றான்
#1340
மதிதரன் என்னும் மாசு இல் மந்திரி சொல்ல கேட்டே
உதிதர உணர்வல் யானும் ஒப்பினும் உருவினானும்
விதி தர வந்தது ஒன்றே விளங்கு பூண் முலையினாளை
கொதி தரு வேலினாற்கே கொடுப்பது கருமம் என்றான்
#1341
உள் விரித்து இதனை எல்லாம் உரைக்க என மொழிந்து விட்டான்
தெள்ளிதின் தெரிய சென்று ஆங்கு உரைத்தலும் குமரன் தேறி
வெள் இலை அணிந்த வேலான் வேண்டியது ஆக என்றான்
அள் இலை வேல் கொள் மன்னற்கு அமைச்சன் அஃது அமைந்தது என்றான்
#1342
பொன்றிய உயிரை மீட்டான் பூஞ்சிகை போது வேய்ந்தான்
அன்றியும் மா மெய் தீண்டி அளித்தனன் அழகின் மிக்கான்
ஒன்றிய மகளிர் தாமே உற்றவர்க்கு உரியர் என்னா
வென்றி கொள் வேலினாற்கே பான்மையும் விளைந்தது அன்றே
#1343
கோப்பெருந்தேவி கொற்ற கோமகன் இவைகள் நாடி
யாப்பு உடைத்து ஐயற்கு இன்றே நங்கையை அமைக்க என்ன
தூ புரி முத்த மாலை தொடக்கொடு தூக்கி எங்கும்
பூ புரிந்து அணிந்து கோயில் புதுவது புனைந்தது அன்றே
#1344
கணி புனைந்து உரைத்த நாளால் கண்ணிய கோயில் தன்னுள்
மணி புனை மகளிர் நல்லார் மங்கல மரபு கூறி
அணி உடை கமலம் அன்ன அம் கை சேர் முன்கை-தன் மேல்
துணிவு உடை காப்பு கட்டி சுற்றுபு தொழுது காத்தார்
#1345
மழ களிற்று எருத்தில் தந்த மணி குடம் மண்ணும் நீரால்
அழகனை மண்ணு பெய்து ஆங்கு அரும் கடிக்கு ஒத்த கோலம்
தொழுதக தோன்ற செய்தார் தூ மணி பாவை அன்னார்
விழு மணி கொடி அனாளும் விண்ணவர் மடந்தை ஒத்தாள்
#1346
கயல் கணாளையும் காமன் அன்னானையும்
இயற்றினார் மணம் எத்தரும் தன்மையார்
மயற்கை இல்லவர் மன்றலின் மன்னிய
இயற்கை அன்பு உடையார் இயைந்தார்களே
#1347
வாளும் வேலும் மலைந்து அரி ஆர்ந்த
கண்ணாளும் வார் கயல் மைந்தனும் ஆயிடை
தோளும் தாளும் பிணைந்து உரு ஒன்று எய்தி
நாளும் நாகர் நுகர்ச்சி நலத்தரோ
#1348
தணிக்கும் தாமரையாள் நலம் தன்னையும்
பிணிக்கும் பீடு இனி என் செயும் பேதை தன்
மணி கண் வெம் முலை தாம் பொர வாய் அவிழ்ந்து
அணி கந்து அன்னவன் தார் அங்கு உடைந்ததே
#1349
பரிந்த மாலை பறைந்தன குங்குமம்
கரிந்த கண்ணி கலந்த மகிழ்ச்சியின்
அரிந்த மேகலை ஆர்த்தன அம் சிலம்பு
பிரிந்த வண்டு இளையார் விளையாடவே
#1350
கொழு மென் இன் அகில் கூட்டுறும் மென் புகை
கழுமு சேக்கையுள் காலையும் மாலையும்
தழுவு காதல் தணப்பு இலர் செல்பவே
எழுமையும் இயைந்து எய்திய அன்பினார்
 
#1351
நாறியும் சுவைத்தும் நரம்பின் இசை
கூறியும் குளிர் நாடகம் நோக்கியும்
ஊறு இன் வெம் முலையால் உழப்பட்டும் அ
ஏறு அனான் வைகும் வைகலும் என்பவே
#1352
விரி கதிர் விளங்கு பன் மீன் கதிரொடு மிடைந்து திங்கள்
தெரி கதிர் திரட்டி வல்லான் தெரிந்து கோத்து அணிந்த போலும்
சொரி கதிர் முத்தம் மின்னும் துணை முலை தடத்தில் வீழ்ந்தான்
புரி கதிர் பொன் செய் மாலை புகை நுதி புலவு வேலான்
#1353
எழில் மாலை என் உயிரை யான் கண்டேன் இத்துணையே முலையிற்று ஆகி
குழல் மாலை கொம்பு ஆகி கூர் எயிறு நா போழ்தல் அஞ்சி அஞ்சி
உழல் மாலை தீம் கிளவி ஒன்று இரண்டு தான் மிழற்றும் ஒரு நாள்-காறும்
நிழல் மாலை வேல் நாண நீண்ட கண்ணே நெய் தோய்ந்த தளிரே மேனி
#1354
மா நீர் மணி முகிலின் மின்னு கொடி நுசுப்பின் மயில் அம் சாயல்
ஏ நீர் இரு புருவம் ஏறி இடை முரிந்து நுடங்க புல்லி
தூ நீர் மலர் மார்பன் தொல் நலம் தான் பருகி துளும்பும் தேறல்
தேனீர் மலர் மாலை தேன் துளித்து மட்டு உயிர்ப்ப சூட்டினானே
#1355
தேன் அடைந்து இருந்த கண்ணி தெண் மட்டு துவலை மாலை
ஊன் அடைந்து இருந்த வேல் கண் ஒண் தொடி உருவ வீணை
தான் அடைந்து இருந்த காவில் பாடினாள் தனிமை தீர்வான்
கூன் அடைந்திருந்த திங்கள் குளிர் முத்த முலையினாளே
#1356
வார் தளிர் ததைந்து போது மல்கி வண்டு உறங்கும் காவில்
சீர் கெழு குருசில் புக்கான் தேசிகப்பாவை என்னும்
கார் கெழு மின்னு வென்ற நுடங்கு இடை கமழ் தண் கோதை
ஏர் கெழு மயில் அனாளை இடை-வயின் எதிர்ப்பட்டானே
#1357
சிலம்பு எனும் வண்டு பாட மேகலை தேன்கள் ஆர்ப்ப
நலம் கவின் போது பூத்த பூம்_கொடி நடுங்கி நாண
கலந்தனன் காம மாலை கலையினது இயல்பில் சூட்ட
புலம்பு போய் சாயல் என்னும் புது தளிர் ஈன்றது அன்றே
#1358
சாந்து-இடை குளித்த வெம் கண் பணை முலை தாம மாலை
பூம் தொடி அரிவை பொய்கை பூமகள் அனைய பொற்பின்
வேந்து அடு குருதி வேல் கண் விளங்கு இழை இவர்கள் நாளும்
ஆய்ந்து அடி பரவ வைகும் அரிவையர்க்கு அநங்கன் அன்னான்
#1359
இங்ஙனம் இரண்டு திங்கள் ஏகலும் ஏக வேலான்
அங்ஙனம் புணர்ந்த அன்பின் அவள் முலை போகம் நீக்கி
எங்ஙனம் எழுந்தது உள்ளம் இருள்-இடை ஏகல் உற்றான்
தங்கிய பொறியின் ஆக்கம் தனக்கோர் தேராக நின்றான்
#1360
தயங்கு இணர் கோதை-தன் மேல் தண் என வைத்த மென் தோள்
வயங்கு இணர் மலிந்த தாரான் வருந்துறா வகையின் நீங்கி
நயம் கிளர் உடம்பு நீங்கி நல் உயிர் போவதே போல்
இயங்கு இடையறுத்த கங்குல் இருள்-இடை ஏகினானே
#1361
நீல் நிற குழல் நேர் வளை தோளியை
தான் உறக்கு-இடை நீத்தலும் தன் பினே
வேல் நிற கண் விழித்தனள் என்பவே
பால் நிற துகில் பை அரவு அல்குலாள்
#1362
ஆக்கை உள் உறை ஆவி கெடுத்து அவண்
யாக்கை நாடி அயர்வது போலவும்
சேக்கை நாடி தன் சேவலை காணிய
பூக்கள் நாடும் ஓர் புள்ளும் ஒத்தாள்-அரோ
#1363
புல்லும் போழ்தின் நும் பூண் உறின் நோம் என
மல்லல் காளையை வைது மிழற்று வாய்
இல்லின் நீக்கம் உரைத்திலை நீ என
செல்வ பைங்கிளி தன்னையும் சீறினாள்
#1364
ஓவிய கொடி ஒப்பு அரும் தன்மை எம்
பாவை பேதுற பாயலின் நீங்கி நீ
போவதோ பொருள் என்றிலை நீ என
பூவையோடும் புலம்பி மிழற்றினாள்
#1365
தன் ஒப்பாரை இல்லானை தலைச்சென்று எம்
பொன் ஒப்பாளொடும் போக என போகடாய்
துன்னி தந்திலை நீ என தூ சிறை
அன்ன பேடையொடு ஆற்ற கழறினாள்
#1366
மை இல் வாள் நெடும் கண் வளராதன
மெய் எலாம் உடையாய் மெய்ம்மை காண்டி நீ
ஐயன் சென்றுழி கூறுக என்று ஆய் மயில்
கையினால் தொழுதாள் கயல் கண்ணினாள்
#1367
வளர்த்த செம்மையை வாலியை வான் பொருள்
விளக்குவாய் விளக்கே விளக்காய் இவண்
அளித்த காதலொடு ஆடும் என் ஆர் உயிர்
ஒளித்தது எங்கு என ஒண் சுடர் நண்ணினாள்
#1368
பருகி பாய் இருள் நிற்பின் அறாது என
கருகி அ இருள் கான்று நின் மெய் எலாம்
எரிய நின்று நடுங்குகின்றாய் எனக்கு
உரியது ஒன்று உரைக்கிற்றி என்று ஊடினாள்
#1369
கோடி நுண் துகிலும் குழையும் நினக்கு
ஆடு சாந்தமும் அல்லவும் நல்குவேன்
மாடமே நெடியாய் மழை தோய்ந்து உளாய்
நாடி நண்பனை நண்ணுக நன்று-அரோ
#1370
ஆடக கொழும் பொன் வரை மார்பனை
கூட புல்லிவையா குற்றம் உண்டு எனா
நீடு எரி திரள் நீள் மணி தூணொடு
சூடக திரள் தோள் அணி வாட்டினாள்
#1371
கொலை கொள் வேலவன் கூடலன் ஏகினான்
இலை கொள் பூண் நுமக்கு என் செயும் ஈங்கு எனா
மலை கொள் சந்தனம் வாய் மெழுக்கிட்ட தன்
முலை கொள் பேர் அணி முற்றிழை சிந்தினாள்
#1372
அரும் கலம் கொடி அன்னவன் ஏகினான்
இருந்து இ ஆகத்து எவன் செய்வீர் நீர் எனா
மருங்குல் நோவ வளர்ந்த வன முலை
கரும் கண் சேந்து கலங்க அதுக்கினாள்
#1373
மஞ்சு சூழ் வரை மார்பனை காணிய
துஞ்சல் ஓம்பு-மின் என்னவும் துஞ்சினீர்
அஞ்சனத்தொடு மை அணி-மின் என
நெஞ்சின் நீள் நெடும் கண் மலர் சீறினாள்
#1374
அரக்கு உண் தாமரை அன்ன தன் கண் மலர்
விருத்தி மாதர் விலக்க வெரீஇ-கொலோ
வருத்தம் உற்றனள் என்று-கொல் மேகலை
குரல் கொடாது குலுங்கி குறைந்ததே
#1375
துனியாயின துன்னுபு செய்து அறியேன்
தனியேன் ஒரு பெண் உயிர் என்னொடு-தான்
இனியான் இங்ஙனே உளனே உரையீர்
பனி ஆர் மலர் மேல் படு வண்டு இனமே
#1376
நிரை வீழ் அருவி நிமிர் பொன் சொரியும்
வரையே புனலே வழையே தழையே
விரையார் பொழிலே விரி வெண் நிலவே
உரையீர் உயிர் காவலன் உள் வழியே
#1377
எரி பொன் உலகின் உறைவீர் இதனை
தெரிவீர் தெரிவில் சிறு மானிடரின்
பரிவு ஒன்றிலிரால் படர் நோய் மிகுமால்
அரிதால் உயிர் காப்பு அமரீர் அருளீர்
#1378
புணர்வின் இனிய புலவி பொழுதும்
கணவன் அகலின் உயிர் கை அகறல்
உணர்வீர் அமரர் மகளீர் அருளி
கொணர்வீர் கொடியேன் உயிரை கொணர்வீர்
#1379
நகை மா மணி மாலை நடை கொடி நின்
வகை மா மணி மேகலை ஆயினதேல்
அகையாது எனது ஆவி தழைக்கும் என
தகை பாட வலாய் தளர்கோ தளர்கோ
#1380
புனை தார் பொர நொந்து பொதிர்ந்த என
வினை ஆர் எரி பூண் முலை கண் குளிர
உன கண் மலரால் உழுது ஓம்ப வலாய்
நினையாது நெடும்தகை நீத்தனையே
#1381
அருள் தேர் வழி நின்று அறனே மொழிவாய்
பொருள் தேர் புலன் எய்திய பூம் கழலாய்
இருள் தேர் வழி நின்று இனைவேற்கு அருளாய்
உருள் தேர் உயர் கொற்றவன் மைத்துனனே
#1382
மிக ஆயது ஒர் மீளிமை செய்தனனோ
உகவா உனது உள்ளம் உவர்த்ததுவோ
இகவா இடர் என்-வயின் நீத்திட நீ
தகவா தகவு அல்லது செய்தனையே
#1383
குளிர் துன்னிய பொன் நிலம் ஏகுதலால்
தளர் அன்ன நடையவள் தாங்கலளாய்
ஒளிர் பொன் அரி மாலை ஒசிந்து இஙனே
மிளிர்-மின் என மின் நிலம் எய்தினளே
#1384
தழும் மாவலி மைந்த என தளரா
எழும் ஏழ் அடி ஊக்கி நடந்து செலா
விழும் மீ நிலம் எய்தி மிளிர்ந்து உருகா
அழுமால் அவலித்து அ அணங்கு_இழையே
#1385
கரப்பு நீர் கங்கை அம் கள் கடி மலர் கமல பள்ளி
திருத்தகு திரைகள் தாக்க சேப்புழி சேவல் நீங்க
பரல் தலை முரம்பின் சில் நீர் வறும் சுனை பற்று விட்ட
அரத்த வாய் பவள செம் தாள் பெடை அன்னம் அழுவது ஒத்தாள்
#1386
மெழுகினால் புனைந்த பாவை வெய்து உறுத்தாங்கு ஓவாது
அழுது நைந்து உருகுகின்ற ஆயிடை தோழி துன்னி
கெழீஇயினாள் கேள்வி நல் யாழ் கிளை நரம்பு அனைய சொல்லாள்
கழி பெரும் கவலை நீங்க காரண நீர சொன்னாள்
#1387
தெள் அறல் யாறு பாய்ந்த திரை தவழ் கடலின் வெஃகி
அள் உற அளிந்த காமம் அகமுற பிணித்ததேனும்
உள்ளுற வெந்த செம்பொன் உற்ற நீர் புள்ளி அற்றால்
கள்ளுற மலர்ந்த கோதாய் காதலர் காதல் என்றாள்
#1388
ஓடு அரி ஒழுகி நீண்ட ஒளி மலர் நெடும் கணாரை
கூடு அரி உழுவை போல முயக்கு இடை குழைய புல்லி
ஆடவர் அழுந்தி வீழ்ந்தும் பிரிவு-இடை அழுங்கல் செல்லார்
பீடு அழிந்து உருகும் பெண்ணின் பேதையார் இல்லை என்றாள்
#1389
பேதைமை என்னும் வித்தில் பிறந்து பின் வினைகள் என்னும்
வேதனை மரங்கள் நாறி வேட்கை வேர் வீழ்த்து முற்றி
காதலும் களிப்பும் என்னும் கவடு விட்டு அவலம் பூத்து
மா துயர் இடும்பை காய்த்து மரணமே கனிந்து நிற்கும்
#1390
தேன் சென்ற நெறியும் தெள் நீர் சிறு திரை போர்வை போர்த்து
மீன் சென்ற நெறியும் போல விழித்து இமைப்பவர்க்கு தோன்றா
மான் சென்ற நோக்கின் மாதே மாய்ந்து போம் மக்கள் யாக்கை
ஊன் சென்று தேய சிந்தித்து உகுவதோ தகுவது என்றாள்
#1391
பிரிந்தவற்கு இரங்கி பேதுற்று அழுத நம் கண்ணின் நீர்கள்
சொரிந்தவை தொகுத்து நோக்கின் தொடு கடல் வெள்ளம் ஆற்றா
முரிந்த நம் பிறவி மேல் நாள் முற்றிழை இன்னும் நோக்காய்
பரிந்து அழுவதற்கு பாவாய் அடியிட்டவாறு கண்டாய்
#1392
அன்பினின் அவலித்து ஆற்றாது அழுவதும் எளிது நங்கள்
என்பினின் ஆவி நீங்க இறுவதும் எளிது சேர்ந்த
துன்பத்தால் துகைக்கப்பட்டார் துகைத்த அ துன்பம் தாங்கி
இன்பம் என்று இருத்தல் போலும் அரியது இ உலகில் என்றாள்
#1393
மயற்கை இ மக்கள் யோனி பிறத்தலும் பிறந்து வந்து ஈங்கு
இயற்கையே பிரிவு சாதல் இமைப்பு-இடை படாதது ஒன்றால்
கயல் கணின் அளவும் கொள்ளார் கவற்சி உள் கவற்சி கொண்டார்
செயற்கை அம் பிறவி நச்சு கடல் அகத்து அழுந்துகின்றார்
#1394
இளமையில் மூப்பும் செல்வத்து இடும்பையும் புணர்ச்சி-போழ்தில்
கிளைநரில் பிரிவும் நோயில் காலத்து நோயும் நோக்கி
விளை மது கமழும் கோதை வேலினும் வெய்ய கண்ணாய்
களை துயர் அவலம் வேண்டா கண் இமைப்பு அளவும் என்றாள்
#1395
முத்து இலங்கு ஆகம் தோய்ந்த மொய் மலர் தாரினான் நம்
கைத்தலத்து அகன்ற பந்தின் கைப்படும் கவல வேண்டா
பொத்து இலத்து உறையும் ஆந்தை புணர்ந்து இருந்து உரைக்கும் பொன்னே
நித்தில முறுவல் உண்டான் நீங்கினான் அல்லன் கண்டாய்
#1396
வடி மலர் காவின் அன்று வண் தளிர் பிண்டி நீழல்
முடி பொருள் பறவை கூற முற்றிழை நின்னை நோக்கி
கடியது ஓர் கௌவை செய்யும் கட்டு எயிற்று அரவின் என்றேன்
கொடியனாய் பிழைப்பு கூறேன் குழையல் என்று எடுத்து கொண்டாள்

#1397
அலங்கலும் குழலும் தோழி அம் கையின் அடைச்சி அம் பூம்
பொலம் கல கொடி அனாள் தன் கண் பொழி கலுழி ஒற்றி
கலந்து அகில் நாறும் அல்குல் கவான் மிசை கொண்டிருந்தாள்
புலர்ந்தது பொழுது நல்லாள் நெஞ்சமும் புலர்ந்தது அன்றே

#1398
கண் கனிந்து இனிய காம செவ்வியுள் காளை நீங்க
தெண் பனி அனைய கண்ணீர் சே_இழை தாயர் எல்லாம்
தண் பனி முருக்கப்பட்ட தாமரை காடு போன்றார்
பண் கனிந்து இனிய பாடல் படு நரம்பு இளகி ஆங்கு

#1399
சில் அரி சிலம்பு சூழ்ந்த சீறடி திருவின் நற்றாய்
முல்லை அம் குழலினாய் நின் முலை முதல் கொழு நன் மேல் நாள்
சொல்லியும் அறிவது உண்டோ என குழைந்து உருகி நைந்து
மெல் இயல் கங்குல் சொல்லிற்று இற்று என மிழற்றுகின்றாள்

#1400
வினைக்கும் செய்பொருட்கும் வெயில் வெம் சுரம்
நினைத்து நீங்குதல் ஆண் கடன் நீங்கினால்
கனைத்து வண்டு உணும் கோதையர் தம் கடன்
மனை கண் வைகுதல் மாண்பொடு என சொன்னாள்
 
#1401
விரை செய் தாமரை மேல் விளையாடிய
அரைச அன்னம் அமர்ந்துள-ஆயினும்
நிரை செய் நீல நினைப்பில என்றனன்
வரை செய் கோல மணம் கமழ் மார்பினான்
#1402
பொன் விளைத்த புணர் முலையாள் சொல
இன் அளி குரல் கேட்ட அசுணமா
அன்னள் ஆய் மகிழ்வு எய்துவித்தாள்-அரோ
மின் வளைத்தன மேகலை அல்குலாள்

#1403
அன்னம் தான் அவன் தாமரை போது நீ
நின்னை நீங்கினன் நீங்கலன் காதலான்
இன்னதால் அவன் கூறிற்று என சொன்னாள்
மன்னன் ஆருயிர் மா பெரும் தேவியே

#1404
சொரி பனி முருக்க நைந்து சுடர் முகம் பெற்ற-போதே
பரிவுறும் நலத்த அன்றே பங்கயம் அன்னதே போல்
வரி வளை தோளி கேள்வன் வரும் என வலித்த சொல்லால்
திரு நலம் பிறந்து சொன்னாள் தேனினும் இனிய சொல்லாள்

#1405
நஞ்சினை அமுதம் என்று நக்கினும் அமுதம் ஆகாது
அம் சிறை கலாப மஞ்ஞை அணங்கு அரவு அட்டதேனும்
அம் சிறை கலுழன் ஆகும் மாட்சி ஒன்றானும் இன்றே
மஞ்சனுக்கு இனைய நீரேன் வாடுவது என்னை என்றாள்

#1406
பொய்கையுள் கமலத்து அம் கண் புள் எனும் முரசம் ஆர்ப்ப
வெய்யவன் கதிர்கள் என்னும் விளங்கு ஒளி தட கை நீட்டி
மை இருள் போர்வை நீக்கி மண்ணக மடந்தை கோலம்
பையவே பரந்து நோக்கி பனி வரை நெற்றி சேர்ந்தான்

#1407
செவ்வழி யாழின் ஊறும் தீம் சொலாட்கு உற்றது எல்லாம்
அவ்வழி அரசற்கு உய்த்தார்க்கு அரசனும் அவலம் எய்தி
எவ்வழியானும் நாடி இமைப்பினது எல்லை உள்ளே
இவ்வழி தம்-மின் என்றான் இவுளி தேர் தானையானே

#1408
மின் உளே பிறந்த ஓர் மின்னின் மேதக
தன் உளே பிறந்தது ஓர் வடிவு தாங்குபு
முன்னினான் வட திசை முகம் செய்து என்பவே
பொன் உளே பிறந்த பொன் அனைய பொற்பினான்
#1409
வீக்கினான் பைம் கழல் நரல வெண் துகில்
ஆக்கினான் இரு துணி அணிந்த பல் கலன்
நீக்கினான் ஒரு மகற்கு அருளி நீள் நெறி
ஊக்கினான் உவவுறும் மதியின் ஒண்மையான்

#1410
வேந்தனால் விடுக்கப்பட்டார் விடலையை கண்டு சொன்னார்
ஏந்தலே பெரிதும் ஒக்கும் இளமையும் வடிவும் இஃதே
போந்ததும் போய கங்குல் போம் வழி கண்டது உண்டேல்
யாம் தலைப்படுதும் ஐய அறியின் ஈங்கு உரைக்க என்றார்

#1411
நெய் கனிந்து இருண்ட ஐம்பால் நெடும் கணாள் காதலானை
_இரு திங்கள் எல்லை அகப்பட காண்பிர் இப்பால்
பொய் உரை அன்று காணீர் போ-மினம் போகி நுங்கள்
மையல் அம் களிற்று வேந்தன் மைந்தனுக்கு உரை-மின் என்றான்
 


No comments:

Post a Comment