seevagachinthamani - 3



2 கோவிந்தையார் இலம்பகம்
 
 
#409
ஆர்வ வேர் அவிந்து அச்சணந்தி போய்
வீரன் தாள் நிழல் விளங்க நோற்ற பின்
மாரி மொக்குளின் மாய்ந்து விண் தொழ
சோர்வு இல் கொள்கையான் தோற்றம் நீங்கினான்
#410
நம்பன் இத்தலை நாக நல் நகர்
பைம்பொன் ஓடை சூழ் பரும யானையும்
செம்பொன் நீள் கொடி தேரும் வாசியும்
வெம்ப ஊர்ந்து உலாம் வேனிலானினே
#411
கலையினது அகலமும் காட்சிக்கு இன்பமும்
சிலையினது அகலமும் வீணை செல்வமும்
மலையினின் அகலிய மார்பன் அல்லது இ
உலகினில் இலை என ஒருவன் ஆயினான்
#412
நாம வென்றி வேல் நகை கொள் மார்பனை
காமனே என கன்னி மங்கையர்
தாமரை கணால் பருக தாழ்ந்து உலாம்
கோமகன் திறத்து உற்ற கூறுவாம்
#413
சில் அம் போழ்தின் மேல் திரைந்து தேன் உலாம்
முல்லை கார் என பூப்ப மொய் நிரை
புல்லு கன்று உளி பொழிந்து பால் படும்
கல்லென் சும்மை ஓர் கடலின் மிக்கதே
#414
மிக்க நாளினால் வேழம் மு மதம்
உக்க தேனினோடு ஊறி வார் சுனை
ஒக்க வாய் நிறைந்து ஒழுகு குன்றின் மேல்
மக்கள் ஈண்டினார் மடங்கல் மொய்ம்பினார்
#415
மன்னவன் நிரை வந்து நண்ணுறும்
இன்ன நாளினால் கோடும் நாம் என
சொன்ன வாயுளே ஒருவன் புள் குரல்
முன்னம் கூறினான் முது உணர்வினான்
#416
அடைதும் நாம் நிரை அடைந்த-காலையே
குடையும் பிச்சமும் ஒழிய கோன் படை
உடையும் பின்னரே ஒருவன் தேரினால்
உடைதும் சுடுவில் தேன் உடைந்த வண்ணமே
#417
என்று கூறலும் ஏழை வேட்டுவீர்
ஒன்று தேரினால் ஒருவன் கூற்றமே
என்று கூறினும் ஒருவன் என் செயும்
இன்று கோடும் நாம் எழுக என்று ஏகினார்
#418
வண்டு மூசு அறா நறவம் ஆர்ந்தவர்
தொண்டக பறை துடியோடு ஆர்த்து எழ
விண்டு தெய்வதம் வணங்கி வெல்க என
மண்டினார் நிரை மணந்த-காலையே
#419
பூத்த கோங்கு போல் பொன் சுமந்து உளார்
ஆய்த்தியர் நலக்கு ஆ செல் தூண் அனான்
கோத்த நித்தில கோதை மார்பினான்
வாய்த்த அ நிரை வள்ளுவன் சொனான்
#420
பிள்ளை உள் புகுந்து அழித்தது ஆதலால்
எள்ளன்-மின் நிரை இன்று நீர் என
வெள்ளி வள்ளியின் விளங்கு தோள் நலார்
முள்கும் ஆயரும் மொய்ம்பொடு ஏகினார்
#421
காய மீன் என கலந்து கான் நிரை
மேய வெம் தொழில் வேடர் ஆர்த்து உடன்
பாய மாரி போல் பகழி சிந்தினார்
ஆயர் மத்து எறி தயிரின் ஆயினார்
#422
குழலும் நவியமும் ஒழிய கோவலர்
சுழல காடு போய் கன்று தாம்பு அரிந்து
உழலை பாய்ந்து உலா முன்றில் பள்ளியுள்
மழலை தீம் சொல்லார் மறுக வாய்விட்டார்
#423
மத்தம் புல்லிய கயிற்றின் மற்று அவர்
அத்தலை விடின் இத்தலை விடார்
உய்த்தனர் என உடை தயிர் புளி
மொய்த்த தோள் நலார் முழுதும் ஈண்டினார்
#424
வலை படு மான் என மஞ்ஞை என தம்
முலை படு முத்தொடு மொய் குழல் வேய்ந்த
தலை படு தண் மலர் மாலை பிணங்க
அலைத்த வயிற்றினராய் அழுதிட்டார்
#425
எம் அனைமார் இனி எங்ஙனம் வாழ்குவிர்
நும் அனைமார்களை நோவ அதுக்கி
வெம் முனை வேட்டுவர் உய்த்தனரோ என
தம் மனை கன்றொடு தாம் புலம்புற்றார்
#426
பாறை படு தயிர் பாலொடு நெய் பொருது
ஆறு மட பள்ளி ஆகுலம் ஆக
மாறு பட மலைந்து ஆய் படை நெக்கது
சேறு படு மலர் சிந்த விரைந்தே
#427
புறவு அணி பூ விரி புன்புலம் போகி
நறவு அணி தாமரை நாட்டகம் நீந்தி
சுறவு அணி சூழ் கிடங்கு ஆர் எயில் மூதூர்
இறை அணி கேட்க உய்த்திட்டனர் பூசல்
#428
கொடு மர எயினர் ஈண்டி கோட்டு இமில் ஏறு சூழ்ந்த
படு மணி நிரையை வாரி பைம் துகில் அருவி நெற்றி
நெடு மலை அத்தம் சென்றார் என்று நெய் பொதிந்த பித்தை
வடி மலர் ஆயர் பூசல் வள நகர் பரப்பினாரே
#429
காசு இல் மா மணி சாமரை கன்னியர்
வீசு மா மகர குழை வில் இட
வாச வான் கழுநீர் பிடித்து ஆங்கு அரி
ஆசனத்து இருந்தான் அடல் மொய்ம்பினான்
#430
கொண்ட வாளொடும் கோலொடும் கூப்புபு
சண்ட மன்னனை தாள் தொழுது ஆயிடை
உண்டு ஓர் பூசல் என்றாற்கு உரையாய் என
கொண்டனர் நிரை போற்று என கூறினான்
#431
செம் கண் புன் மயிர் தோல் திரை செம் முகம்
வெம் கண் நோக்கின் குப்பாய மிலேச்சனை
செம் கண் தீ விழியா தெழித்தான் கையுள்
அம் கண் போது பிசைந்து அடு கூற்று அனான்
#432
கூற்றின் இடிக்கும் கொலை வேலவன் கோவலர் வாய்
மாற்றம் உணர்ந்து மறம் கூர் கடல் தானை நோக்கி
காற்றின் விரைந்து தொறு மீட்க என காவல் மன்னன்
ஏற்றை அரிமான் இடி போல இயம்பினானே
#433
கார் விளை மேகம் அன்ன கவுள் அழி கடாத்த வேழம்
போர் விளை இவுளி திண் தேர் புனை மயிர் புரவி காலாள்
வார் விளை முரசம் விம்ம வான் உலா போந்ததே போல்
நீர் விளை சுரி சங்கு ஆர்ப்ப நிலம் நெளி பரந்த அன்றே
#434
கால் அகம் புடைப்ப முந்நீர் கடல் கிளர்ந்து எழுந்ததே போல்
வேல் அகம் மிடைந்த தானை வெம் சின எயினர் தாக்க
வால் வளை அலற வாய்விட்டு இரலையும் துடியும் ஆர்ப்ப
பால் வளைந்து இரவு செற்று பகலொடு மலைவது ஒத்தார்
#435
வில் பழுத்து உமிழ்ந்த வெய்ய வெம் நுனை பகழி மைந்தர்
மல் பழுத்து அகன்ற மார்பத்து இடம் கொண்டு வைக செம் நா
சொல் பழுத்தவர்க்கும் ஆண்மை சொல்லலாம் தன்மைத்து அன்றி
கொல் பழுத்து எரியும் வேலார் கொடும் சிலை குழைவித்தாரே
#436
வாள் படை அனுங்க வேடர் வண் சிலை வளைய வாங்கி
கோள் புலி இனத்தின் மொய்த்தார் கொதி நுனை பகழி-தம்மால்
வீட்டினார் மைந்தர்-தம்மை விளிந்த மா கவிழ்ந்த திண் தேர்
பாட்டு அரும் பகடு வீழ்ந்த பனி வரை குனிவது ஒத்தே
#437
வென்றி நாம் கோடும் இன்னே வெள்ளிடை படுத்து என்று எண்ணி
ஒன்றி உள் வாங்குக என்ன ஒலி கடல் உடைந்ததே போல்
பொன் தவழ் களிறு பாய் மா புன மயில் குஞ்சி பிச்சம்
மின் தவழ் கொடியொடு இட்டு வேல் படை உடைந்த அன்றே
#438
பல்லினால் சுகிர்ந்த நாரில் பனி மலர் பயில பெய்த
முல்லை அம் கண்ணி சிந்த கால் விசை முறுக்கி ஆயர்
ஒல் என ஒலிப்ப ஓடி படை உடைந்திட்டது என்ன
அல்லல் உற்று அழுங்கி நெஞ்சில் கட்டியங்காரன் ஆழ்ந்தான்
#439
வம்பு கொண்டு இருந்த மாதர் வன முலை மாலை தேன் சோர்
கொம்பு கொண்டு அன்ன நல்லார் கொழும் கயல் தடம் கண் போலும்
அம்பு கொண்டு அரசர் மீண்டார் ஆ கொண்டு மறவர் போனார்
செம்பு கொண்டு அன்ன இஞ்சி திருநகர் செல்வ என்றார்
#440
மன் நிரை பெயர்த்து மைந்தர் வந்தனர் கொள்க வாள் கண்
பொன் இழை சுடரும் மேனி பூம் கொடி அனைய பொற்பில்
கன்னியை தருதும் என்று கடி முரசு இயம்ப கொட்டி
நல் நகர் வீதி-தோறும் நந்தகோன் அறைவித்தானே
#441
வெதிர்ம் குதை சாபம் கான்ற வெம் நுனை பகழி மூழ்க
உதிர்ந்தது சேனை ஈட்டம் கூற்றொடு பொருது கொள்ளும்
கரும் தடம் கண்ணி அன்றி காயம் ஆறு ஆக ஏகும்
அரும் பெறல் அவளும் ஆகென்று ஆடவர் தொழுது விட்டார்
#442
கார் விரி மின் அனார் மேல் காமுகர் நெஞ்சின் ஓடும்
தேர் பரி கடாவி தேம் தார் சீவகன் அருளில் போகி
தார் பொலி புரவி வட்டம் தான் புக காட்டுகின்றாற்கு
ஊர் பரிவுற்றது எல்லாம் ஒரு மகன் உணர்த்தினானே
#443
தன் பால் மனையாள் அயலான் தலை கண்டு பின்னும்
இன் பால் அடிசில் இவர்கின்ற கை பேடி போலாம்
நன்பால் பசுவே துறந்தார் பெண்டிர் பாலர் பார்ப்பார்
என்பாரை ஓம்பேன் எனின் யான் அவன் ஆக என்றான்
#444
போர் பண் அமைத்து நுகம் பூட்டி புரவி பண்ணி
தேர் பண் அமைத்து சிலை கோலி பகழி ஆய்ந்து
கார் கொண்மூ மின்னி நிமிர்ந்தான் கலிமான் குளம்பில்
பார் கண் எழுந்த துகளால் பகல் மாய்ந்தது அன்றே
#445
இழுது ஒன்று வாள் கண் இளையார் இளையார்-கண் நோக்கின்
பழுது இன்றி மூழ்கும் பகழி தொழில் வல்ல காளை
முழுது ஒன்று திண் தேர் முகம் செய்தவன் தன்னொடு ஏற்கும்
பொழுது அன்று போதும் என புள்_மொழிந்தான் மொழிந்தான்
#446
மோட்டும் முது நீர் முதலைக்கு வலியது உண்டேல்
காட்டுள் நமக்கு வலியாரையும் காண்டும் நாம் என்று
ஏட்டை பசியின் இரை கவ்விய நாகம் போல்
வேட்டு அ நிரையை விடல் இன்றி விரைந்தது அன்றே
#447
கடல் படை அனுங்க வென்ற கானவர் என்னும் கூற்றத்து
இடை படாது ஓடி போ-மின் உய்ய என்று இரலை வாய் வைத்து
எடுத்தனர் விளியும் சங்கும் வீளையும் பறையும் கோடும்
கடத்து-இடை முழங்க காரும் கடலும் ஒத்து எழுந்த அன்றே
#448
கை விசை முறுக்கி வீசும் கொள்ளியும் கறங்கும் ஏய்ப்ப
செய் கழல் குருசில் திண் தேர் விசையொடு திசைகள் எல்லாம்
ஐ என வளைப்ப வீரர் ஆர்த்தனர் அவரும் ஆர்த்தார்
மொய் அமர் நாள்செய்து ஐயன் முதல் விளையாடினானே
#449
ஆழியான் ஊர்தி புள்ளின் அம் சிறகு ஒலியின் நாகம்
மாழ்கி பை அவிந்த வண்ணம் வள்ளல் தேர் முழக்கினானும்
சூழ் துகள் மயக்கத்தானும் புளிஞர் உள் சுருங்கி சேக்கை
கோழி போல் குறைந்து நெஞ்சின் அறம் என மறமும் விட்டார்
#450
புள் ஒன்றே சொல்லும் என்று இ புன் தலை வேடன் பொய்த்தான்
வெள்ளம் தேர் வளைந்த நம்மை வென்றி ஈங்கு அரிது வெய்தா
உள்ளம் போல் போது நாம் ஓர் எடுப்பு எடுத்து உய்ய என்னா
வள்ளல் மேல் அப்பு மாரி ஆர்ப்பொடு சிதறினாரே
 
#451
மால் வரை தொடுத்து வீழ்ந்த மணி நிற மாரி-தன்னை
கால் இரைத்து எழுந்து பாற கல்லென புடைத்ததே போல்
மேல் நிரைத்து எழுந்த வேடர் வெம் நுனை அப்பு மாரி
கோல் நிரைத்து உமிழும் வில்லால் கோமகன் விலக்கினானே
#452
கானவர் இரிய வில்-வாய் கடும் கணை தொடுத்தலோடும்
ஆன் நிரை பெயர்ந்த ஆயர் ஆர்த்தனர் அணி செய் திண் தோள்
தான் ஒன்று முடங்கிற்று ஒன்று நிமிர்ந்தது சரம் பெய் மாரி
போல் நின்ற என்ப மற்று அ பொருவரு சிலையினார்க்கே
#453
ஐந்நூறு நூறு தலை இட்ட ஆறாயிரவர்
மெய் நூறுநூறு நுதி வெம் கணை தூவி வேடர்
கை நூறு வில்லும் கணையும் அறுத்தான் கணத்தின்
மை நூறு வேல் கண் மடவார் மனம் போல மாய்ந்தார்
#454
வாள் வாயும் இன்றி வடி வெம் கணை வாயும் இன்றி
கோள் வாய் மதியம் நெடியான் விடுத்த ஆங்கு மைந்தன்
தோள் வாய் சிலையின் ஒலியால் தொறு மீட்டு மீள்வான்
நாள் வாய் நிறைந்த நகை வெண் மதி செல்வது ஒத்தான்
#455
ஆள் அற்றம் இன்றி அலர் தார் அவன் தோழரோடும்
கோள் உற்ற கோவன் நிரை மீட்டனன் என்று கூற
வாள் உற்ற புண்ணுள் வடிவேல் எறிந்திற்றதே போல்
நாள் உற்று உலந்தான் வெகுண்டான் நகர் ஆர்த்தது அன்றே
#456
இரவி தோய் கொடி கொள் மாடத்து இடு புகை தவழ சுண்ணம்
விரவி பூம் தாமம் நாற்றி விரை தெளித்து ஆரம் தாங்கி
அரவு உயர் கொடியினான் தன் அகன் படை அனுங்க வென்ற
புரவி தேர் காளை அன்ன காளையை பொலிக என்றார்
#457
இன் அமுது அனைய செ வாய் இளம் கிளி மழலை அம் சொல்
பொன் அவிர் சுணங்கு பூத்த பொங்கு இள முலையினார் தம்
மின் இவர் நுசுப்பு நோவ விடலையை காண ஓடி
அன்னமும் மயிலும் போல அணி நகர் வீதி கொண்டார்
#458
சில் அரி சிலம்பின் வள் வார் சிறுபறை கறங்க செம்பொன்
அல்குல் தேர் அணிந்து கொம்மை முலை எனும் புரவி பூட்டி
நெல் எழில் நெடும் கண் அம்பு ஆ புருவ வில் உருவ கோலி
செல்வ போர் காமன் சேனை செம்மல் மேல் எழுந்தது அன்றே
#459
நூல் பொர அரிய நுண்மை நுசுப்பினை ஒசிய வீங்கி
கால் பரந்து இருந்த வெம் கண் கதிர் முலை கச்சின் வீக்கி
கோல் பொர சிவந்த கோல மணி விரல் கோதை தாங்கி
மேல் வரல் கருதி நின்றார் விண்ணவர் மகளிர் ஒத்தார்
#460
ஆகமும் இடையும் அஃக அடி பரந்து எழுந்து வீங்கி
போகமும் பொருளும் ஈன்ற புணர் முலை தடங்கல் தோன்ற
பாகமே மறைய நின்ற படை மலர் தடம் கண் நல்லார்
நாகம் விட்டு எழுந்து போந்த நாகர்-தம் மகளிர் ஒத்தார்
#461
வாள் அரம் துடைத்த வை வேல் இரண்டு உடன் மலைந்தவே போல்
ஆள் வழக்கு ஒழிய நீண்ட அணி மலர் தடம் கண் எல்லாம்
நீள் சுடர் நெறியை நோக்கும் நிரை இதழ் நெருஞ்சி பூ போல்
காளை-தன் தேர் செல் வீதி கலந்து உடன் தொக்கது அன்றே
#462
வடகமும் துகிலும் தோடும் மாலையும் மணியும் முத்தும்
கடகமும் குழையும் பூணும் கதிர் ஒளி கலந்து மூதூர்
இடவகை எல்லை எல்லாம் மின் நிரைத்து இட்டதே போல்
பட அரவு அல்குலாரை பயந்தன மாடம் எல்லாம்
#463
மாது உகு மயிலின் நல்லார் மங்கல மரபு கூறி
போதக நம்பி என்பார் பூமியும் புணர்க என்பார்
தோதகம் ஆக எங்கும் சுண்ணம் மேல் சொரிந்து தண்ணென்
தாது உகு பிணையல் வீசி சாந்து கொண்டு எறிந்து நிற்பார்
#464
கொடையுளும் ஒருவன் கொல்லும் கூற்றினும் கொடிய வாள் போர்
படையுளும் ஒருவன் என்று பயம் கெழு பனுவல் நுண் நூல்
நடையுளார் சொல்லிற்று எல்லாம் நம்பி சீவகன்-கண் கண்டாம்
தொடையல் அம் கோதை என்று சொல்லுபு தொழுது நிற்பார்
#465
செம்மலை பயந்த நற்றாய் செய் தவம் உடையாள் என்பார்
எம் மலை தவம் செய்தாள்-கொல் எய்துவம் யாமும் என்பார்
அம் முலை அமுதம் அன்னார் அகம் புலர்ந்து அமர்ந்து நோக்கி
தம் உறு விழும வெம் நோய் தம் துணைக்கு உரைத்து நிற்பார்
#466
சினவுநர் கடந்த செல்வன் செம் மலர் அகலம் நாளை
கனவினில் அருளி வந்து காட்டி யாம் காண என்பார்
மனவு விரி அல்குலார் தம் மனத்தொடு மயங்கி ஒன்றும்
வினவுநர் இன்றி நின்று வேண்டுவ கூறுவாரும்
#467
விண்ணகத்து உளர்-கொல் மற்று இ வென்றி வேல் குருசில் ஒப்பார்
மண்ணகத்து இவர்கள் ஒவ்வார் மழ களிறு அனைய தோன்றல்
பண் அகத்து உறையும் சொல்லார் நல் நலம் பருக வேண்டி
அண்ணலை தவத்தில் தந்தார் யார்-கொலோ அளியர் என்பார்
#468
வட்டு உடை பொலிந்த தானை வள்ளலை கண்ட-போழ்தே
பட்டு உடை சூழ்ந்த காசு பஞ்சி மெல் அடியை சூழ
அட்ட அரக்கு அனைய செ வாய் அணி நலம் கருகி காம
கட்டு அழல் எறிப்ப நின்றார் கை வளை கழல நின்றார்
#469
வார் செல செல்ல விம்மும் வன முலை மகளிர் நோக்கி
ஏர் செல செல்ல ஏத்தி தொழுது தோள் தூக்க இப்பால்
பார் செல செல்ல சிந்தி பைம்_தொடி சொரிந்த நம்பன்
தேர் செல செல்லும் வீதி பீர் செல செல்லும் அன்றே
#470
வாள் முகத்து அலர்ந்த போலும் மழை மலர் தடம் கண் கோட்டி
தோள் முதல் பசலை தீர தோன்றலை பருகுவார் போல்
நாள் முதல் பாசம் தட்ப நடுங்கினார் நிற்ப நில்லான்
கோள் முக புலியோடு ஒப்பான் கொழு நிதி புரிசை புக்கான்
#471
பொன் நுகம் புரவி பூட்டி விட்டு உடன் பந்தி புக்க
மன்னுக வென்றி என்று மணி வள்ளம் நிறைய ஆக்கி
இன் மது பலியும் பூவும் சாந்தமும் விளக்கும் ஏந்தி
மின் உகு செம்பொன் கொட்டில் விளங்கு தேர் புக்கது அன்றே
#472
இட்ட உத்தரியம் மெல்லென்று இடை சுவல் வருத்த ஒல்கி
அட்ட மங்கலமும் ஏந்தி ஆயிரத்து எண்மர் ஈண்டி
பட்டமும் குழையும் மின்ன பல் கலன் ஒலிப்ப சூழ்ந்து
மட்டு அவிழ் கோதை மாதர் மைந்தனை கொண்டு புக்கார்
#473
தாய் உயர் மிக்க தந்தை வந்து எதிர்கொண்டு புக்கு
காய் கதிர் மணி செய் வெள் வேல் காளையை காவல் ஓம்பி
ஆய் கதிர் உமிழும் பைம் பூண் ஆயிர செம் கணான்-தன்
சேய் உயர் உலகம் எய்தி அன்னது ஓர் செல்வம் உற்றார்
#474
தகை மதி எழிலை வாட்டும் தாமரை பூவின் அம் கண்
புகை நுதி அழல வாள் கண் பொன் அனாள் புல்ல நீண்ட
வகை மலி வரை செய் மார்பின் வள்ளலை கண்டு வண் தார்
தொகை மலி தொறுவை ஆளும் தோன்றல் மற்று இன்ன கூறும்
#475
கேட்டு இது மறக்க நம்பி கேள் முதல் கேடு சூழ்ந்த
நாட்டு இறை விசையை என்னும் நாறு பூம் கொம்பு அனாளை
வேட்டு இறை பாரம் எல்லாம் கட்டியங்காரன்-தன்னை
பூட்டி மற்று அவன்-தனாலே பொறி முதல் அடர்க்கப்பட்டான்
#476
கோல் இழுக்கு உற்ற ஞான்றே கொடு முடி வரை ஒன்று ஏறி
கால் இழுக்கு உற்று வீழ்ந்தே கரும் தலை களையல் உற்றேன்
மால் வழி உளது அன்று-ஆயின் வாழ்வினை முடிப்பல் என்றே
ஆலம் வித்து அனையது எண்ணி அழிவினுள் அகன்று நின்றேன்
#477
குலத்தொடு முடிந்த கோன்-தன் குடி வழி வாரா நின்றேன்
நல தகு தொறுவின் உள்ளேன் நாமம் கோவிந்தன் என்பேன்
இலக்கணம் அமைந்த கோதாவரி என இசையில் போந்த
நலத்தகு மனைவி பெற்ற நங்கை கோவிந்தை என்பாள்
#478
வம்பு உடை முலையினாள் என் மட மகள் மதர்வை நோக்கம்
அம்பு அடி இருத்தி நெஞ்சத்து அழுத்தி இட்டு அனையது ஒப்ப
கொம்படு நுசுப்பினாளை குறை இரந்து உழந்து நின்ற
நம் படை-தம்முள் எல்லாம் நகை முகம் அழிந்து நின்றேன்
#479
பாடகம் சுமந்த செம்பொன் சீறடி பரவை அல்குல்
சூடகம் அணிந்த முன்கை சுடர் மணி பூணினாளை
ஆடக செம்பொன் பாவை ஏழுடன் தருவல் ஐய
வாடலில் வதுவை கூடி மணமகன் ஆக என்றான்
#480
வெண்ணெய் போன்று ஊறு இனியள் மேம் பால் போல் தீம் சொல்லள்
உண்ண உருக்கிய வான் நெய் போல் மேனியள்
வண்ண வன முலை மாதர் மட நோக்கி
கண்ணும் கருவிளம் போது இரண்டே கண்டாய்
#481
சேதா நறு நெய்யும் தீம் பால் சுமை தயிரும்
பாதாலம் எல்லா நிறைத்திடுவல் பைம் தாரோய்
போது ஆர் புனை கோதை சூட்டு உன் அடித்தியை
யாது ஆவது எல்லாம் அறிந்து அருளி என்றான்
#482
குலம் நினையல் நம்பி கொழும் கயல் கண் வள்ளி
நலன் நுகர்ந்தான் அன்றே நறும் தார் முருகன்
நில மகட்கு கேள்வனும் நீள் நிரை நப்பின்னை
இலவு அலர் வாய் இன் அமிர்தம் எய்தினான் அன்றே
#483
கன்னியர் குலத்தின் மிக்கார் கதிர் முலை கன்னி மார்பம்
முன்னினர் முயங்கின் அல்லான் முறி மிடை படலை மாலை
பொன் இழை மகளிர் ஒவ்வாதவரை முன் புணர்தல் செல்லார்
இன்னதான் முறைமை மாந்தர்க்கு என மனத்து எண்ணினானே
#484
கோட்டு இளம் களிறு போல்வான் நந்தகோன் முகத்தை நோக்கி
மோட்டு இள முலையினாள் நின் மட மகள் எனக்கு மாமான்
சூட்டொடு கண்ணி அன்றே என் செய்வான் இவைகள் சொல்லி
நீட்டித்தல் குணமோ என்று நெஞ்சகம் குளிர்ப்ப சொன்னான்
#485
தேன் சொரி முல்லை கண்ணி செம் துவர் ஆடை ஆயர்
கோன் பெரிது உவந்து போகி குடை தயிர் குழும புக்கு
மான் கறி கற்ற கூழை மௌவல் சூழ் மயிலை பந்தர்
கான் சொரி முல்லை தாரான் கடிவினை முடிக என்றான்
#486
கனி வளர் கிளவி காமர் சிறு நுதல் புருவம் காமன்
குனி வளர் சிலையை கொன்ற குவளை கண் கயலை கொன்ற
இனி உளர் அல்லர் ஆயர் என சிலம்பு அரற்ற தந்து
பனி வளர் கோதை மாதர் பாவையை பரவி வைத்தார்
#487
நாழியுள் இழுது நாகு ஆன் கன்று தின்று ஒழிந்த புல் தோய்த்து
ஊழி-தோறு ஆவும் தோழும் போன்று உடன் மூக்க என்று
தாழ் இரும் குழலினாளை நெய் தலைப்பெய்து வாழ்த்தி
மூழை நீர் சொரிந்து மொய் கொள் ஆய்த்தியர் ஆட்டினாரே
#488
நெய் விலை பசும்பொன் தோடும் நிழல் மணி குழையும் நீவி
மை விரி குழலினாளை மங்கல கடிப்பு சேர்த்தி
பெய்தனர் பிணையல் மாலை ஓர் இலை சாந்து பூசி
செய்தனர் சிறு புன் கோலம் தொறுத்தியர் திகைத்து நின்றார்
#489
ஏறம் கோள் முழங்க ஆயர் எடுத்து கொண்டு ஏகி மூதூர்
சாறு எங்கும் அயர புக்கு நந்தகோன் தன் கை ஏந்தி
வீறு உயர் கலசம் நல் நீர் சொரிந்தனன் வீரன் ஏற்றான்
பாறு கொள் பருதி வை வேல் பதுமுக குமரற்கு என்றே
#490
நல தகை அவட்கு நாகு ஆன் ஆயிரம் திரட்டி நன் பொன்
இலக்கண பாவை ஏழும் கொடுத்தனன் போல இப்பால்
அலைத்தது காமன் சேனை அரு நுனை அம்பு மூழ்க
முலை குவட்டு இடை பட்டு ஆற்றான் முத்து உக முயங்கினானே
#491
கள் வாய் விரிந்த கழுநீர் பிணைந்து அன்ன ஆகி
வெள் வேல் மிளிர்ந்த நெடும் கண் விரை நாறு கோதை
முள் வாய் எயிற்று ஊறு அமுதம் முனியாது மாந்தி
கொள்ளாத இன்ப கடல் பட்டனன் கோதை வேலான்
#492
தீம் பால்கடலை திரை பொங்க கடைந்து தேவர்
தாம் பால் படுத்த அமிர்தோ தட மாலை வேய் தோள்
ஆம் பால் குடவர் மகளோ என்று அரிவை நைய
ஓம்பா ஒழுக்கத்து உணர்வு ஒன்று இலன் ஆயினானே

No comments:

Post a Comment