seevagachinthamani - 14

13 முத்தி இலம்பகம்
 
 
 
 
#2599
நீர் ஏந்தி நெய்ம் மிதந்து நிணம் வாய் பில்கி அழல் விம்மி
போர் ஏந்தி பூ அணிந்து புலவு நாறும் புகழ் வேலோன்
கார் ஏந்து இடி முரசம் ஆர்ப்ப காய் பொன் கலன் சிந்தி
பார் ஏந்தி செல்லும் நாள் பட்டதாம் நாம் பகர்வதே

#2600
விண்-பால் சுடர் விலக்கி மேகம் போழ்ந்து விசும்பு ஏந்தி
மண்-பால் திலகம் ஆய் வான் பூத்து ஆங்கு மணி மல்கி
பண்-பால் வரி வண்டும் தேனும் பாடும் பொழில் பிண்டி
எண் பால் இகந்து உயர்ந்தாற்கு இசைந்த கோயில் இயன்றதே

#2601
அடிசில் கலம் கழீஇ கருனை ஆர்ந்த இள வாளை
மடுவில் மதர்த்து உணரா வாழை தண்டில் பல துஞ்சும்
நெடு நீர் கழனி சூழ் நியமம் சேர்த்தி விழவு அயர்ந்து
வடி நீர் நெடும் கண்ணார் கூத்தும் பாட்டும் வகுத்தாரே

#2602
அல்லி அரும் பதமும் அடகும் காயும் குள நெல்லும்
நல்ல கொழும் பழனும் கிழங்கும் தந்து நவை தீர்த்தார்க்கு
இல்லையே கைம்மாறு என்று இன்பம் எல்லாம் அவர்க்கு ஈந்தாள்
வில்லோன் பெருமாட்டி விளங்கு வேல் கண் விசயையே

#2603
தனியே துயர் உழந்து தாழ்ந்து வீழ்ந்த சுடுகாட்டுள்
இனியாள் இடர் நீக்கி ஏமம் சேர்த்தி உயக்கொண்ட
கனியார் மொழியாட்கும் மயிற்கும் காமர் பதி நல்கி
முனியாது தான் காண மொய் கொள் மாடத்து எழுதுவித்தாள்

#2604
அண்ணல் பிறந்த ஆங்கு ஐந்நூற்று ஐவர்க்கு அளந்து ஆன் பால்
வண்ண சுவை அமுதம் வைக நாளும் கோவிந்தன்
வெண்ணெய் உருக்கி நெய் வெள்ளம் ஆக சொரிந்து ஊட்ட
பண்ணி பரிவு அகன்றாள் பைம் தார் வேந்தன் பயந்தாளே

#2605
தோடு ஆர் புனை கோதை சுநந்தை சேர்ந்து தொழுதாளை
பீடு ஆர் பெரும் சிறுவர் பயந்தீர் வம்-மின் என புல்லி
நாடு ஆர் புகழாளை நாண மொழிகள் பல கூறி
கோடா குருகுலத்தை விளக்கிட்டாளை விளக்கினாள்

#2606
மறை ஒன்று உரைப்பன போல் மலர்ந்து நீண்டு செவி வாய் வைத்து
உறைகின்ற ஓடு அரி கண் உருவ கொம்பின் எண்மரும்
இறைவி அடி பணிய எடுத்து புல்லி உலகு ஆளும்
சிறுவர் பயந்து இறைவன் தெளிவீர் என்றாள் திரு அன்னாள்

#2607
பொங்கும் மணி முடி மேல் பொலிந்து எண் கோதை தொகை ஆகி
கங்குல் கனவு அகத்தே கண்ணுள் தோன்றி வந்தீர் நீர்
எங்கும் பிரியற்பீர் என்று கண்கள் மலர்ந்து இருந்து
கொங்கு உண் நறும் பைம் தார் கோமான் இங்கே வருக என்றாள்
#2608
சிங்கம் நடப்பது போல் சேர்ந்து பூ தூய் பலர் வாழ்த்த
தங்கா விருப்பின் தம் பெருமான் பாதம் முடி தீட்டி
எங்கோ பணி என்னா அஞ்சா நடுங்கா இரு வில் கண்
பொங்க இடு தவிசில் இருந்தான் போர் ஏறு அனையானே

#2609
கொற்றவி மகனை நோக்கி கூறினள் என்ப நும் கோக்கு
உற்றதை பிறர்கள் கூற உணர்ந்தனை-ஆயின் நானும்
இற்று என உரைப்ப கேண்மோ இலங்கு பூண் அலங்கல் மார்பின்
செற்றவர் செகுத்த வை வேல் சீவகசாமி என்றாள்

#2610
நாகத்தால் விழுங்கப்பட்ட நகை மதி கடவுள் போல
போகத்தால் விழுங்கப்பட்டு புறப்படான் புன்சொல் நாணான்
ஆகத்தான் அமைச்சர் நுண் நூல் தோட்டியால் அழுத்தி வெல்லும்
பாகர்க்கும் தொடக்க நில்லா பகடு போல் பொங்கியிட்டான்

#2611
நுண் மதி போன்று தோன்றா நுணுகிய நுசுப்பினார்-தம்
கண் வலை பட்ட-போழ்தே கடு நவை அரவோடு ஒக்கும்
பெண்மையை பெண்மை என்னார் பேர் உணர்வு உடைய நீரார்
அண்ணலை தெருட்டல் தேற்றாது அமைச்சரும் அகன்றுவிட்டார்

#2612
கல் சிறை அழித்து வெள்ளம் கடற்கு அவாய் ஆங்கு கற்றோர்
சொல் சிறை அழித்து வேந்தன் துணை முலை துறத்தல் செல்லான்
வில் சிறை கொண்ட போலும் புருவத்து விளங்கு வேல் கண்
நல் சிறை பட்டு நாடும் நகரமும் காவல் விட்டான்

#2613
பிளிறுவார் முரசத்தானை பெருமகன் பிழைப்பு நாடி
களிறு மென்று உமிழப்பட்ட கவழம் போல் தகர்ந்து நில்லாது
ஒளிறு வேல் சுற்றம் எல்லாம் உடைந்த பின் ஒருவன் ஆனான்
வெளிறு முன் வித்தி பின்னை வச்சிரம் விளைத்தலாமோ

#2614
வனை கல குயவன் நாணின் மன்னரை அறுத்து முற்றி
கனை குரல் உருமின் ஆர்ப்ப காவலன் நின்னை வேண்டி
வினை மயில் பொறியில் என்னை போக்கி விண் விரும்ப புக்கான்
புனை முடி வேந்த போவல் போற்று என மயங்கி வீழ்ந்தான்

#2615
சீத நீர் தெளித்து செம்பொன் திருந்து சாந்து ஆற்றி தம்மால்
மாதரார் பலரும் வீச வளர்ந்து எழு சிங்கம் போல
போதொடு கலங்கள் சோர எழுந்து பொன் ஆர மார்பன்
யாது எனக்கு அடிகள் முன்னே அருளியது என்ன சொன்னாள்

#2616
பிறந்து நாம் பெற்ற வாழ்நாள் இத்துணை என்பது ஒன்றும்
அறிந்திலம் வாழ்தும் என்னும் அவாவினுள் அழுந்துகின்றாம்
கறந்து கூற்று உண்ணும் ஞான்று கண் புதைத்து இரங்கின் அல்லால்
இறந்த நாள் யாவர் மீட்பார் இற்று என பெயர்க்கலாமோ
#2617
சுமை தயிர் வேய்ந்த சோற்றின் துய்த்து இனிது ஆக நம்மை
அமைத்த நாள் என்னும் நாகம் விழுங்கப்பட்டு அன்னது அங்கண்
இமைத்த கண் விழித்தல் அன்றி இறந்து பாடு எய்துகின்றாம்
உமைத்துழி சொறியப்பெற்றாம் ஊதியம் பெரிதும் பெற்றாம்
#2618
கடு வளி புடைக்கப்பட்ட கண மழை குழாத்தின் நாமும்
விடு வினை புடைக்க பாறி வீற்றுவீற்று-ஆயின் அல்லால்
உடன் உறை பழக்கம் இல்லை ஒழி மதியத்தை காதல்
வடு உடைத்து என்று பின்னும் மாபெரும்தேவி சொன்னாள்
#2619
இருந்து இளமை கள் உண்டு இடை தெரிதல் இன்றி
கரும் தலைகள் வெண் தலைகள் ஆய் கழியும் முன்னே
அரும் தவமும் தானமும் ஆற்று-மினே கண்டீர்
முருந்து அனைய தூ முறுவல் முற்று_இழையார் சேரி
#2620
உடற்றும் பிணி தீ உடம்பின் உயிர் பெய்திட்டு
அடுத்து உணர்வு நெய் ஆக ஆற்றல் துவை ஆக
குடித்து உண்ணும் கூற்றம் குடில் பிரியா முன்னே
கொடுத்து உண்-மின் கண்டீர் குணம் புரி-மின் கண்டீர்
#2621
உழந்தாலும் புத்து அச்சு ஒன்று இட்டு ஊர்தல் தேற்றாது
இழந்தார் பலரால் இடும்பை நீர் யாற்றுள்
அழுந்துமால் அ பண்டி அச்சு இறா முன்னே
கொழும் சீலம் கூலியா கொண்டு ஊர்-மின் பாகீர்
#2622
பிறந்தவர்கள் எல்லாம் அவா பெரியர் ஆகி
துறந்து புகழ் வேண்டார் ஓர் துற்று அவிழும் ஈயார்
அறம் கரிது சேய்த்து என்பது யாதும் அறியாரேல்
வெறும் பொருள் அது அம்மா விடுத்திடு-மின் என்றாள்
#2623
முல்லை முகை சொரிந்தால் போன்று இனிய பால் அடிசில் மகளிர் ஏந்த
நல்ல கருனையால் நாள்வாயும் பொன் கலத்து நயந்து உண்டார்கள்
அல்லல் அடைய அடகு இடு-மின் ஓட்டு அகத்து என்று அயில்வார் கண்டும்
செல்வம் நமரங்காள் நினையன்-மின் செய் தவமே நினை-மின் கண்டீர்
#2624
அம் பொன் கலத்து அடு பால் அமர்ந்து உண்ணா அரிவை அந்தோ
வெம்பி பசி நலிய வெம் வினையின் வேறாய் ஓர் அகல் கை ஏந்தி
கொம்பின் கொள ஒசிந்து பிச்சை என கூறி நிற்பாள் கண்டு
நம்பன்-மின் செல்வ நமரங்காள் நல் அறமே நினை-மின் கண்டீர்
#2625
வண்ண துகில் உடுப்பின் வாய்விட்டு அழுவது போல் வருந்தும் அல்குல்
நண்ணா சிறு கூறை பாகம் ஓர் கை பாகம் உடுத்து நாளும்
அண்ணாந்து அடகு உரீஇ அந்தோ வினையே என்று அழுவாள் கண்டும்
நண்ணன்-மின் செல்வ நமரங்காள் நல் அறமே நினை-மின் கண்டீர்
#2626
மை திரண்ட வார் குழல் மேல் வண்டு ஆர்ப்ப மல்லிகை மெல் மாலை சூடி
கை திரண்ட வேல் ஏந்தி காமன் போல் காரிகையார் மருள சென்றார்
ஐ திரண்டு கண்டம் குரைப்ப ஓர் தண்டு ஊன்றி அறிவின் தள்ளி
நெய் திரண்டால் போல் உமிழ்ந்து நிற்கும் இளமையோ நிலையாதே காண்
#2627
என்றலும் சுநந்தை சொல்லும் இறைவி-தான் கண்டது ஐயா
நன்றும் அஃது ஆக அன்றே-ஆயினும் ஆக யானும்
ஒன்றினன் துறப்பல் என்ன ஓள் எரி தவழ்ந்த வெண்ணெய்
குன்று போல் யாதும் இன்றி குழைந்து மெய்ம்மறந்து நின்றான்
#2628
ஓர் உயிர் ஒழித்து இரண்டு உடம்பு போவ போல்
ஆரியன் ஒழிய அங்கு ஒளவைமார்கள் தாம்
சீரிய துறவொடு சிவிகை ஏறினார்
மாரியின் மடந்தைமார் கண்கள் வார்ந்தவே
#2629
நல் மயில் பொறின் மேல் போய நாளினும்
புன்மை உற்று அழுகுரல் மயங்கி பூ பரிந்து
இ நகர் கால் பொரு கடலின் எங்கணும்
மன்னனில் ஆகுலம் மயங்கிற்று என்பவே
#2630
அழுது பின் அணி நகர் செல்ல ஆயிரம்
தொழு தகு சிவிகைகள் சூழ போய பின்
இழுது அமை எரி சுடர் விளக்கு இட்ட அன்னவள்
பழுது இல் சீர் பம்மை தன் பள்ளி நண்ணினாள்
#2631
அரும் தவ கொடி குழாம் சூழ அல்லி போல்
இருந்து அறம் பகர்வுழி இழிந்து கைதொழுது
ஒருங்கு எமை உய கொண்-மின் அடிகள் என்றாள்
கரும் கயல் நெடும் தடம் கண்ணி என்பவே
#2632
ஆர் அழல் முளரி அன்ன அரும் தவம் அரிது தானம்
சீர் கெழு நிலத்து வித்தி சீல நீர் கொடுப்பின் தீம் தேன்
பார் கெழு நிலத்துள் நாறி பல் புகழ் ஈன்று பின்னால்
தார் கெழு தேவர் இன்பம் தையலாய் விளைக்கும் என்றாள்
#2633
அறவுரை பின்னை கேட்டும் அடிகள் மற்று எமக்கு வல்லே
துறவு தந்து அருளுக என்ன தூ நகர் இழைத்து மேலால்
நற விரி தாமம் நாற்றி வானகம் விதானித்து ஆய்ந்து
திறவிதின் தவிசு தூபம் திரு சுடர் விளக்கு இட்டாரே
#2634
பாலினால் சீறடி கழுவி பைம் துகில்
நூலினால் இயன்றன நுனித்த வெண்மைய
காலனை கண்புதைத்து ஆங்கு வெம் முலை
மேல் வளாய் வீக்கினார் விதியின் என்பவே
#2635
தேன் உலாம் மாலையும் கலனும் சிந்துபு
பால் நிலா கதிர் அன அம் மென் பைம் துகில்
தான் உலாய் தட முலை முற்றம் சூழ்ந்து-அரோ
வேனிலான் வரு நெறி வெண் முள் வித்தினார்
#2636
முன்னுபு கீழ் திசை நோக்கி மொய் மலர்
நல் நிற தவிசின் மேல் இருந்த நங்கைமார்
இன் மயிர் உகுக்கிய இருந்த தோகைய
பன் மயில் குழாம் ஒத்தார் பாவைமார்களே
#2637
மணி இயல் சீப்பு இட சிவக்கும் வாள் நுதல்
அணி இரும் கூந்தலை ஒளவைமார்கள் தாம்
பணிவு இலர் பறித்தனர் பரமன் சொன்ன நூல்
துணிபொருள் சிந்தியா துறத்தல் மேயினார்
#2638
கன்னியர் ஆயிரர் காய் பொன் கொம்பு அனார்
பொன் இயல் படலிகை ஏந்தி பொன் மயிர்
நல் நிலம் படாமையே அடக்கி நங்கைமார்
தொல் மயிர் உகுத்த நல் மயிலின் தோன்றினார்
#2639
பொன் குடம் திரு மணி பொழிய பெய்த போல்
எற்பு உடம்பு எண் இலா குணங்களான் நிறைத்து
உற்று உடன் உயிர்க்கு அருள் பரப்பி ஓம்பினார்
முற்று உடன் உணர்ந்தவன் அமுதம் முன்னினார்
#2640
புகழ்ந்து உரை மகிழ்ச்சியும் பொற்பு இல் பல் சனம்
இகழ்ந்து உரைக்கு இரக்கமும் இன்றி அங்க நூல்
அகழ்ந்து கொண்டு அரும் பொருள் பொதிந்த நெஞ்சினார்
திகழ்ந்து எரி விளக்கு என திலகம் ஆயினார்
#2641
அலை மணி கவரி மான் தேர் அடு களி யானை பாய்மா
நிலம் நெளி கடல் அம் தானை நிரந்து பூ சுமப்ப மன்னன்
சில மலர் தானும் ஏந்தி சென்று சீர் பெருக வாழ்த்தி
இல மலர் பஞ்சி பாதத்து எழில் முடி தீட்டினானே
#2642
கடியவை முன்பு செய்தேன் கண்ணினால் காண சில் நாள்
அடிகள் இ நகரின் உள்ளே உறைக என அண்ணல் கூற
முடி கெழு மன்னற்கு ஒன்று மறுமொழி கொடாது தேவி
படிமம் போன்று இருப்ப நோக்கி பம்மை தான் சொல்லினாளே
#2643
காதலன் அல்லை நீயும் காவல நினக்கு யாமும்
ஏதிலம் என்று கண்டாய் இருந்தது நங்கை என்ன
தாது அலர் தாம மார்பன் உரிமையும் தானும் மாதோ
போது அவிழ் கண்ணி ஈர்த்து புனல் வர புலம்பினானே
#2644
ஏதிலன் ஆயினாலும் இறைவர் தம் அறத்தை நோக்க
காதலன் அடிகள் என்ன கண் கனிந்து உருகி காசு இல்
மா தவ மகளிர் எல்லாம் மா பெரும் தேவியாரை
ஏதம் ஒன்று இல்லை நம்பிக்கு இன் உரை கொடு-மின் என்றார்
#2645
திரை வளர் இப்பி ஈன்ற திரு மணி ஆர மார்பின்
வரை வளர் சாந்தம் ஆர்ந்த வைர குன்று அனைய திண் தோள்
விரை வளர் கோதை வேலோய் வேண்டிய வேண்டினேம் என்று
உரை விளைத்து உரைப்ப காளை உள்ளகம் குளிர்ந்து சொன்னான்
#2646
அடிகளோ துறக்க ஒன்றும் உற்றவர் யாதும் அல்லர்
சுடு துயர் என்-கண் செய்தாய் சுநந்தை நீ ஒளவை அல்லை
கொடியை நீ கொடிய செய்தாய் கொடியையோ கொடியை என்னா
இடர் உற்று ஓர் சிங்கம் தாய் முன் இருந்து அழுகின்றது ஒத்தான்
#2647
சென்றதோ செல்க இப்பால் திருமகள் அனைய நங்கை
இன்று இவள் துறப்ப யான் நின் அரசு உவந்து இருப்பேன்-ஆயின்
என்று எனக்கு ஒழியும் அம்மா பழி என இலங்கு செம்பொன்
குன்று அனான் குளிர்ப்ப கூறி கோயில் புக்கு அருளுக என்றான்
#2648
பந்து அட்ட விரலினார் தம் படா முலை கிழித்த பைம் தார்
நந்தட்டன் தன்னை நோக்கி நங்கையார் அடிகள் சொன்னார்
நொந்திட்டு முனிய வேண்டா துறந்திலம் நும்மை என்ன
கந்து அட்ட திணி திண் தோளான் கற்பகம் மலர்ந்தது ஒத்தான்
#2649
துறந்த இ நங்கைமார் தம் தூ மலர் அனைய பாதம்
உறைந்த என் சென்னி போதின் மிசைய என்று ஒப்ப ஏத்தி
கறந்த பால் அனைய கந்தி கொம்பு அடுத்து உருவ பைம் பூண்
பிறங்கு தார் மார்பன் போந்து பெரு மண கோயில் புக்கான்
#2650
வடி நிரை நெடிய கண்ணார் மாமிமார் விடுப்ப ஏகி
கடி நிரை சிவிகை ஏறி கதிர் மணி குடை பின் செல்ல
உடை திரை பரவை அன்ன ஒளிறு வேல் மறவர் காப்ப
கொடி நிரை கோயில் புக்கார் குங்கும கொடி அனாரே
 
மேல்
 
#2651
முழுது உலகு எழில் ஏத்தும் மூரி வேல் தானை மன்னன்
தொழுதகு பெருமாட்டி தூ மணி பாவை அன்னாள்
பொழிதரு மழை மொக்குள் போகம் விட்டு ஆசை நீக்கி
வழி வரு தவம் எய்தி வைகினள் தெய்வம் அன்னாள்
#2652
உடை திரை முத்தம் சிந்த ஓசனிக்கின்ற அன்னம்
படர் கதிர் திங்கள் ஆக பரந்து வான் பூத்தது என்னா
அடர் பிணி அவிழும் ஆம்பல் அலை கடல் கானல் சேர்ப்பன்
குடை கெழு வேந்தற்கு இப்பால் உற்றது கூறல் உற்றேன்
#2653
துறவின் பால் படர்தல் அஞ்சி தொத்து ஒளி முத்து தாமம்
உறைகின்ற உருவ கோல சிகழிகை மகளிர் இன்பத்து
இறைவனை மகிழ்ச்சி செய்து மயக்குவான் அமைச்சர் எண்ணி
நிறைய நீர் வாவி சாந்தம் கலந்து உடன் பூரித்தாரே
#2654
நீர் அணி மாட வாவி நேர்ம் புணை நிறைத்து நீள் நீர்
போர் அணி மாலை சாந்தம் புனை மணி சிவிறி சுண்ணம்
வார் அணி முலையினார்க்கும் மன்னர்க்கும் வகுத்து வாவி
ஏர் அணி கொண்ட இ நீர் இறைவ கண்டு அருளுக என்றார்
#2655
கண மலை அரசன் மங்கை கட்டியங்காரன் ஆக
பணை முலை மகளிர் எல்லாம் பவித்திரன் படையது ஆக
இணை மலர் மாலை சுண்ணம் எரி மணி சிவிறி ஏந்தி
புணை புறம் தழுவி தூ நீர் போர் தொழில் தொடங்கினாரே
#2656
தூ மலர் மாலை வாளா சுரும்பு எழ புடைத்தும் தேன் சோர்
தாமரை சதங்கை மாலை சக்கரம் என்ன வீழ்த்தும்
காமரு கணையம் ஆக கண்ணிகள் ஒழுகவிட்டும்
தோமரம் ஆக தொங்கல் சிதறுபு மயங்கினாரே
#2657
அரக்கு நீர் சிவிறி ஏந்தி ஆயிரம் தாரை செல்ல
பரப்பினாள் பாவை தத்தை பைம் தொடி மகளிர் எல்லாம்
தரிக்கிலர் ஆகி தாழ்ந்து தட முகில் குளிக்கும் மின் போல்
செருக்கிய நெடும் கண் சேப்ப சீத நீர் மூழ்கினாரே
#2658
தானக மாடம் ஏறி தையலார் ததும்ப பாய்வார்
வானகத்து இழியும் தோகை மட மயில் குழாங்கள் ஒத்தார்
தேன் இனம் இரிய தெண் நீர் குளித்து எழும் திருவின் அன்னார்
பால் மிசை சொரியும் திங்கள் பனி கடல் முளைத்தது ஒத்தார்
#2659
கண்ணி கொண்டு எறிய அஞ்சி கால் தளர்ந்து அசைந்து சோர்வார்
சுண்ணமும் சாந்தும் வீழ தொழுதனர் இரந்து நிற்பார்
ஒண் மலர் மாலை ஓச்ச ஒசிந்து கண் பிறழ ஒல்கி
வெண்ணெயின் குழைந்து நிற்பார் வேல் கணார் ஆயினாரே
#2660
கூந்தலை ஒரு கை ஏந்தி குங்கும தாரை பாய
பூம் துகில் ஒரு கை ஏந்தி புகும் இடம் காண்டல் செல்லார்
வேந்தனை சரண் என்று எய்த விம்முறு துயரம் நோக்கி
காய்ந்து பொன் சிவிறி ஏந்தி கார் மழை பொழிவது ஒத்தான்
#2661
வீக்கினான் தாரை வெய்தா சந்தன தளிர் நல் மாலை
ஓக்கினார் கண்ணி சுண்ணம் உடற்றினார் உருவ சாந்தின்
பூ கமழ் துகிலும் தோடும் மாலையும் சொரிய போர் தோற்று
ஆக்கிய அநங்கன் சேனை ஆறு அல் ஆறு ஆயிற்று அன்றே
#2662
அன்னங்கள் ஆகி அம் பூம் தாமரை அல்லி மேய்வார்
பொன் மயில் ஆகி கூந்தல் போர்த்தனர் குனிந்து நிற்பார்
இன் மலர் கமலம் ஆகி பூ முகம் பொருந்த வைப்பார்
மின்னும் மேகலையும் தோடும் கொடுத்து அடி தொழுது நிற்பார்
#2663
பண் உரை மகளிர் மாலை பைம் துகில் கவர்ந்து கொள்ள
கண் உரை மகளிர் சேர்ந்து கார் இருள் திவளும் மின் போல்
பெண் உரை பிடி கை கூந்தல் பொன் அரி மாலை தாழ
வெண் நுரை உடுத்து நின்றார் வேந்தன் நோக்கு உண்ண நின்றார்
#2664
தன் படை உடைய தத்தை சந்தன தாரை வீக்கி
ஒன்பது முகத்தின் ஓடி உறு வலி அகலம் பாய
பொன் படு சுணங்கு போர்த்த பொங்கு இள முலையில் தூவான்
முன்பு அடு குலிக தாரை முழு வலி முறுக்கல் உற்றான்
#2665
மெய்ப்படு தாரை வீழின் நோம் இவட்கு என்ன அஞ்சி
கைப்படை மன்னன் நிற்ப கதுப்பு அயல் மாலை வாங்கி
செப்பட முன்கை யாப்ப திருமகன் தொலைந்து நின்றான்
பை புடை அல்குலாளை பாழியால் படுக்கல் உற்றே
#2666
அடுத்த சாந்து அலங்கல் சுண்ணம் அரும் புனல் கவர அஞ்சி
உடுத்த பட்டு ஒளிப்ப ஒண் பொன் மேகலை ஒன்றும் பேசா
கிடப்ப மற்று அரசன் நோக்கி கெட்டது உன் துகில் மற்று என்ன
மடத்தகை நாணி புல்லி மின்னு சேர் பருதி ஒத்தான்
#2667
விம் அகில் புகையின் மேவி உடம்பினை வேது செய்து
கொம்மென நாவி நாறும் கூந்தலை உலர்த்தி நொய்ய
அம் மலர் உரோம பூம் பட்டு உடுத்த பின் அனிச்ச மாலை
செம் மலர் திருவின் அன்னார் சிகழிகை சேர்த்தினாரே
#2668
கார் கொள் குன்று அன கண் கவர் தோளினான்
நீர் கொள் நீர் அணி நின்று கனற்றலின்
வார் கொள் மென் முலை வம்பு அணி கோதையார்
ஏர் கொள் சாயல் உண்டாடும் மற்று என்பவே
#2669
வேனில் வாய் கதிர் வெம்பலின் மேல் நிலை
தேன் உலாம் குளிர் சந்தன சேற்று-இடை
தான் உலாய் தடம் மென் முலை தங்கினான்
பால் நிலா கதிர் பாய்தரு பள்ளியே
#2670
முழுதும் மெய்ந்நலம் மூழ்கலின் நீர் சுமந்து
எழுது கண் இரங்க புருவ கொடி
தொழுவ போல் முரிய சொரி பூம் சிகை
அழுவ போன்று அணி நித்திலம் உக்கவே
#2671
எழுத்தின் பாடலும் ஆடலும் என்று இவை
பழுத்த கற்பக பன் மணி கொம்பு அனார்
அழுத்தி அன்ன அணி வளை தோள் மிசை
கழிக்கும் ஐங்கணை காமற்கும் காமனே
#2672
நீர் துளும்பு வயிற்றின் நிழல் முகில்
பார் துளும்ப முழங்கலின் பல் கலை
ஏர் துளும்ப வெரீஇ இறைவன் தழீஇ
கார் துளும்பு கொம்பின் கவின் எய்தினார்
#2673
இழிந்து கீழ் நிலை இன் அகில் சேக்கை மேல்
கிழிந்து சாந்து அழிய கிளர் மென் முலை
தொழிந்து மட்டு ஒழுக துதை தார் பொர
அழிந்த மேகலை அம் சிலம்பு ஆர்த்தவே
#2674
தேன் இறால் அன தீம் சுவை இன் அடை
ஆன் அறா முலை பால் அமுது அல்லது ஒன்றானும்
மேவலர் அச்சுறவு எய்திய
மான் அறா மட நோக்கியர் என்பவே
#2675
கூதிர் வந்து உலாவலின் குவவு மென் முலை
வேது செய் சாந்தமும் வெய்ய தேறலும்
போது அவிழ் மாலையும் புகையும் சுண்ணமும்
காதலித்தார் கரும் குவளை கண்ணினார்
#2676
சுரும்பு நின்று அறா மலர் தொங்கலார் கவின்
அரும்புகின்றார் கடல் அமிர்தமே எனா
விரும்புகின்றான் இளவேனில் வேந்தன் ஐம்
சரங்கள் சென்று அழுத்தலின் தரணி மன்னனே
#2677
குழை முகம் இட-வயின் கோட்டி ஏந்திய
அழல் நிற தேறல் உள் மதி கண்டு ஐயென
நிழல் முக பகை கெட பருகி நீள் விசும்பு
உழல் எனா நோக்குவாள் மதி கண்டு ஊடினாள்
#2678
பருகினேற்கு ஒளித்து நீ பசலை நோயொடும்
உருகி போய் இன்னும் அற்று உளை என்று உள் சுட
குருதி கண் கொள குணமாலை ஊடினாள்
உருவ தார் உற தழீஇ உடற்றி நீக்குவான்
#2679
நங்கை நின் முக ஒளி எறிப்ப நன் மதி
அங்கு அதோ உள் கருத்து அழகின் தேய்ந்தது
மங்கை நின் மனத்தினால் வருந்தல் என்று அவள்
பொங்கு இள வன முலை பொருந்தினான்-அரோ
#2680
கொங்கு விம்மு பூம் கோதை மாதரார்
பங்கய பகை பருவம் வந்து என
எங்கும் இல்லன எலி மயிர் தொழில்
பொங்கு பூம் புகை போர்வை மேயினார்
#2681
கூந்தல் இன் புகை குவவு மென் முலை
சாந்தம் ஏந்திய தமால மாலையும்
ஆய்ந்து தாங்கினார் அரவ மேகலை
காய்ந்து நித்திலம் கடிய சிந்தினார்
#2682
அளிந்த தீம் பழம் இஞ்சி ஆர்ந்த நீர்
விளைந்த வல் விளைவு அரிசி வேரியும்
வளைந்த மின் அனார் மகிழ்ந்து சண்பகம்
உளைந்து மல்லிகை ஒலியல் சூடினார்
#2683
தொத்து உடை மலர் தொங்கல் கண் பொர
முத்து உடை முலை கண் கண் நொந்த என்று
எய்த்து அடி சிலம்பு இரங்கும் இன் குரல்
கைத்து எடுத்தலின் காமம் தாழ்ந்ததே
#2684
பொன் பனிப்புறும் பொற்பினார் நலம்
அன்பன் இத்தலை அணங்க அத்தலை
முன்பனி தலை முழுதும் நீங்கி போய்
பின்பனி தலை பேண வந்ததே
#2685
வெள்ளிலோத்திரம் விளங்கும் வெண் மலர்
கள் செய் மாலையார் கண் கொளா துகில்
அள்ளி ஏந்திய அரத்த அல்குலார்
ஒள் எரி மணி உருவ பூணினார்
#2686
செம் நெருப்பு உணும் செ எலி மயிர்
அ நெருப்பு அளவு ஆய் பொன் கம்பலம்
மன்னர் உய்ப்பன மகிழ்ந்து தாங்கினார்
என்னர் ஒப்பும் இல்லவர்கள் என்பவே
#2687
ஆடல் இன் சுவை அமர்ந்து நாள்-தொறும்
பாடல் மெய்ந்நிறீஇ பருகி பண் சுவைத்து
ஓடு மா மதி உரிஞ்சும் ஒண் பொனின்
மாட கீழ் நிலை மகிழ்ந்து வைகினார்
#2688
புரி குழல் மடந்தையர் பொம்மல் வெம் முலை
திரு கழல் குருசில் தார் திளைக்கும் போரினுள்
செரு குரல் சிறுபறை சிலம்பு கிண்கிணி
அரி பறை மேகலை ஆகி ஆர்த்தவே
#2689
ஏ செயா சிலை நுதல் ஏழைமார் முலை
தூ செயா குங்குமம் துதைந்த வண்டு இனம்
வாய்ச்சியால் இட்டிகை செத்தும் மாந்தர்-தம்
பூ செயா மேனி போல் பொலிந்து தோன்றுமே
#2690
குரவம் பாவை கொப்புளித்து குளிர் சங்கு ஈர்ந்த துகளே போல்
மரவம் பாவை வயிறு ஆர பருகி வாடை அது நடப்ப
விரவி தென்றல் விடு தூதா வேனிலாற்கு விருந்து ஏந்தி
வரவு நோக்கி வயா மரங்கள் இலை ஊழ்த்து இணர் ஈன்று அலர்ந்தனவே
#2691
இளி வாய் பிரசம் யாழ் ஆக இரும் கண் தும்பி குழல் ஆக
களி வாய் குயில்கள் முழவு ஆக கடி பூம் பொழில்கள் அரங்கு ஆக
தளிர் போல் மடவார் தணந்தார் தம் தடம் தோள் வளையும் மாமையும்
விளியா கொண்டு இங்கு இள வேனில் விருந்தா ஆடல் தொடங்கினான்
#2692
வேனில் ஆடும் விருப்பினால் வியன் காய் நெல்லி சாந்து அரைத்து
நான எண்ணெய் கதுப்பு உரைத்து நறுநீர் ஆடி அமிர்து உயிர்க்கும்
தேன் ஆர் அகிலின் புகை சேர்த்தி வகுத்து நாவி குழம்பு உறீஇ
ஆனா பளித நறும் சுண்ணம் உகிரின் உழுது ஆங்கு அணிந்தாரே
#2693
முத்தார் மருப்பின் இடை வளைத்த முரண் கொள் யானை தட கையின்
ஒத்தேர் உடைய மல்லிகையின் ஒலியல் மாலை உறுப்பு அடக்கி
வைத்தார் மணி நூற்றன ஐம்பால் வளைய முடித்து வான் கழுநீர்
உய்த்து ஆங்கு அதனுள் கொள அழுத்தி குவளை செவி தாது உறுத்தாரே
#2694
புகை ஆர் வண்ண பட்டு உடுத்து பொன் அம் கலைகள் புறம் சூழ்ந்து
நகை ஆர் கவுள கிண்கிணியும் சிலம்பும் நாய் நா சீறடி மேல்
பகை கொண்டார் போல் சுமாஅய் கண்பின் பரூஉ காம்பு அனைய கணை கால் சூழ்ந்து
அகை ஆர்ந்து இலங்கும் பரியகம் தாமே கவின சேர்த்தினார்
#2695
பிடி கை வென்று கடைந்தன போல் பஞ்சி ஆர்ந்த திரள் குறங்கு
கடித்து கிடந்து கவின் வளரும் காய் பொன் மகரம் கதிர் முலை மேல்
உடுத்த சாந்தின் மிசை செக்கர் ஒளி கொள் முந்நாள் பிறை ஏய்ப்ப
துடிக்கும் கதிர் சேர் துணை முத்தம் திருவில் உமிழ்ந்து சுடர்ந்தனவே
#2696
குழிய பெரிய கோல் முன்கை மணி ஆர் காந்தள் குவி விரல் மேல்
கழிய பெரிய அரு விலைய சிறிய மணி மோதிரம் கனல
தழிய பெரிய தட மென் தோள் சலாகை மின்ன தாழ்ந்து இலங்கும்
விழி கண் மகர குண்டலமும் தோடும் காதில் மிளர்ந்தனவே
#2697
நாண் உள் இட்டு சுடர் வீச நல் மாணிக்க நகு தாலி
பேணி நல்லார் கழுத்து அணிந்து பெரும் கண் கருமை விருந்து ஊட்டி
நீள் நீர் முத்தம் நிரை முறுவல் கடு சுட்டு உரிஞ்ச கதிர் உமிழ்ந்து
தோள் நீர் கடலுள் பவள வாய் தொண்டை கனிகள் தொழுதனவே
#2698
மாலை மகளிர் அணிந்ததன் பின் பஞ்ச வாசம் கவுள் கொண்டு
சோலை மஞ்ஞை தொழுதி போல் தோகை செம்பொன் நிலம் திவள
காலில் சிலம்பும் கிண்கிணியும் கலையும் ஏங்க கதிர் வேலும்
நீல குவளை நிரையும் போல் கண்ணார் காவில் இருந்தாரே
#2699
மணி வண்டு ஒன்றே நலம் பருக மலர்ந்த செந்தாமரை தடம் போல
அணி வேல் மன்னன் நலம் பருக அலர்ந்த அம்பு ஆர் மழை கண்ணார்
பணி ஆர் பண்ணு பிடி ஊர்ந்து பரூஉ கால் செம் நெல் கதிர் சூடி
தணியார் கழனி விளையாடி தகை பாராட்ட தங்கினார்
#2700
எண்ணற்கு அரிய குங்கும சேற்று எழுந்து நான நீர் வளர்ந்து
வண்ண குவளை மலர் அளைஇ மணி கோல் வள்ளத்து அவன் ஏந்த
உண்ணற்கு இனிய மது மகிழ்ந்தார் ஒலியல் மாலை புறம் தாழ
கண்ண கழு நீர் மெல் விரலால் கிழித்து மோந்தார் கனி வாயார்
 
 
#2701
இவ்வாறு எங்கும் விளையாடி இளையான் மார்பின் நலம் பருகி
செ வாய் விளர்த்து தோள் மெலிந்து செய்ய முலையின் முகம் கருகி
அம் வாய் வயிறு கால் வீங்கி அனிச்ச மலரும் பொறை ஆகி
ஒவ்வா பஞ்சி மெல் அணை மேல் அசைந்தார் ஒண் பொன் கொடி அன்னார்
#2702
தீம் பால் சுமந்து முலை வீங்கி திரு முத்து ஈன்ற வலம்புரி போல்
காம்பு ஏர் தோளார் களிறு ஈன்றார் கடைகள்-தோறும் கடி முரசம்
தம் பால் பட்ட தனி செம் கோல் தரணி மன்னன் மகிழ் தூங்கி
ஓம்பாது ஒண் பொன் சொரி மாரி உலகம் உண்ண சிதறினான்
#2703
காடி ஆட்டி தராய் சாறும் கன்னல் மணியும் நறு நெய்யும்
கூட செம்பொன் கொள தேய்த்து கொண்டு நாளும் வாய் உறீஇ
பாடற்கு இனிய பகு வாயும் கண்ணும் பெருக உகிர் உறுத்தி
தேடி தீம் தேன் திப்பிலி தேய்த்து அண்ணா உரிஞ்சி மூக்கு உயர்த்தார்
#2704
யாழும் குழலும் அணி முழவும் அரங்கம் எல்லாம் பரந்து இசைப்ப
தோழன் விண்ணோன் அவண் தோன்றி வயங்கா கூத்து வயங்கிய பின்
காழ் ஆர் வெள்ளி மலை மேலும் காவல் மன்னர் கடி நகர்க்கும்
வீழா ஓகை அவன் விட்டான் விண் பெற்றாரின் விரும்பினார்
#2705
தத்தம் நிலனும் உயர்வு இழிவும் பகையும் நட்பும் தம் தசையும்
வைத்து வழு இல் சாதகமும் வகுத்த பின்னர் தொகுத்த நாள்
சச்சந்தனனே சுதஞ்சணனே தரணி கந்து கடன் விசயன்
தத்தன் பரதன் கோவிந்தன் என்று நாமம் தரித்தாரே
#2706
ஐ ஆண்டு எய்தி மை ஆடி அறிந்தார் கலைகள் படை நவின்றார்
கொய் பூ மாலை குழல் மின்னும் கொழும் பொன் தோடும் குண்டலமும்
ஐயன்மார்கள் துளக்கு இன்றி ஆலும் கலிமா வெகுண்டு ஊர்ந்தார்
மொய்யார் அலங்கல் மார்பற்கு முப்பது ஆகி நிறைந்ததே
#2707
பூ நிறை செய்த செம்பொன் கோடிகம் புரையும் அல்குல்
வீ நிறை கொடி அனாரும் வேந்தனும் இருந்த-போழ்தில்
தூ நிற துகிலின் மூடி படலிகை கொண்டு வாழ்த்தி
மா நிற தளிர் நல் மேனி மல்லிகை மாலை சொன்னாள்
#2708
தட முலை முகங்கள் சாடி சாந்து அகம் கிழிந்த மார்பின்
குட வரை அனைய கோல குங்கும குவவு தோளாய்
தொடை மலர் வெறுக்கை ஏந்தி துன்னினன் வேனில் வேந்தன்
இடம் அது காண்க என்றாள் இறைவனும் எழுக என்றான்
#2709
முடி தலை முத்தம் மின்னும் முகிழ் முலை முற்றம் எல்லாம்
பொடித்து பொன் பிதிர்ந்த ஆகத்து இளையவர் புகழ்ந்து சூழ
கடுத்த வாள் கனல ஏந்தி கன்னியர் காவல் ஓம்ப
இடி குரல் சீயம் ஒப்பான் இழை ஒளி விளங்க புக்கான்
#2710
இலங்கு பொன் ஆரம் மார்பின் இந்திரன் உரிமை சூழ
கலந்த பொன் காவு காண்பான் காமுற புக்கதே போல்
அலங்கு பொன் கொம்பு அனாரும் மன்னனும் ஆட மாதோ
நலம் கவின் கொண்ட காவு நல் ஒளி நந்திற்று அன்றே
#2711
புலவியுள் மகளிர் கூந்தல் போது உகுக்கின்றதே போல்
குலவிய சிறகர் செம் கண் கரும் குயில் குடைய கொம்பர்
நிலவிய தாது பொங்க நீள் மலர் மணலில் போர்த்து
கலவியில் படுத்த காய் பொன் கம்பலம் ஒத்தது அன்றே
#2712
காசு நூல் பரிந்து சிந்தி கம்பலத்து உக்கதே போல்
மூசு தேன் வண்டு மொய்த்து முருகு உண்டு துயில மஞ்ஞை
மாசு இல் பூம் பள்ளி வைகி வளர்ந்து எழு மகளிர் ஒப்ப
தூசு போல் சிறகர் அன்னம் தொழுதியோடு இரிய சேர்ந்தார்
#2713
காதி கண் அரிந்து வென்ற உலகு உணர் கடவுள் காலத்து
ஆதி கண் மரங்கள் போன்ற அம் சொலீர் இதனின் உங்கள்
காதலின் காணலுற்ற இடம் எலாம் காண்-மின் என்றான்
நீதி கண் நின்ற செம் கோல் நிலவு வீற்று இருந்த பூணான்
#2714
வானவர் மகளிர் என்ன வார் கயிற்று ஊசல் ஊர்ந்தும்
கானவர் மகளிர் என்ன கடி மலர் நல்ல கொய்தும்
தேன் இமிர் குன்றம் ஏறி சிலம்பு எதிர் சென்று கூயும்
கோன் அமர் மகளிர் கானில் குழாம் மயில் பிரிவது ஒத்தார்
#2715
நெடு வரை அருவி ஆடி சந்தனம் நிவந்த சோலை
படு மதம் கவரும் வண்டு பைம் தளிர் கவரி ஏந்தி
பிடி மகிழ்ந்து ஓப்ப நின்ற பெரும் களிற்று அரசு நோக்கி
வடி மதர் மழை கண் நல்லார் மன்னனை மகிழ்ந்து நின்றார்
#2716
கொழு மடல் குமரி வாழை துகில் சுருள் கொண்டு தோன்ற
செழு மலர் காமவல்லி செரு கயல் சிற்பம் ஆக
கழு மணி செம்பொன் ஆழி கை விரல் உகிரின் கிள்ளி
விழு முலை சூட்டி நின்றார் விண்ணவர் மகளிர் ஒத்தார்
#2717
கடை தயிர் குரல வேங்கை கண்ணுற சென்று நண்ணி
மிடை மயிர் கவரி நல் ஆன் கன்று உண கண்டு நிற்பார்
புடை திரண்டு எழுந்த பொம்மல் வன முலை பொறுக்கல் ஆற்றார்
நடை மெலிந்து இகலி அன்ன நல் நடை நயந்து நிற்பார்
#2718
எம்-வயின் வருக வேந்தன் இங்கு என இரங்கு நல்லியாழ்
வெம்மையின் விழைய பண்ணி எஃகு நுண் செவிகள் வீழ
செம்மையின் கனிந்த காம தூது விட்டு ஓத முத்தம்
வெம் முலை மகளிர் வீழ் பூம் பொதும்பருள் விதும்பினாரே
#2719
பிடி மருள் நடையினார்-தம் பெரும் கவின் குழைய புல்லி
தொடை மலர் கண்ணி சேர்த்தி சுரும்பு உண மலர்ந்த மாலை
உடை மது ஒழுக சூட்டி உருவ தார் குழைய வைகி
கடி மலர் மகளிர் ஒத்தார் காவலன் களி வண்டு ஒத்தான்
#2720
இழைந்தவர் நலத்தை எய்தி இனம் திரி ஏறு போல
குழைந்த தார் நெகிழ்ந்த தானை கொற்றவன் பெயர்ந்து போகி
வழிந்து தேன் வார்ந்து சோரும் வருக்கையின் நீழல் சேர்ந்தான்
விழைந்த அ கடுவன் ஆங்கு ஓர் மந்தியை விளித்தது அன்றே
#2721
அளித்து இள மந்தி-தன்னை ஆர்வத்தால் விடாது புல்லி
ஒளித்து ஒரு பொதும்பர் சேர்ந்து ஆங்கு ஒரு சிறை மகிழ்ச்சி ஆர்ந்து
தளிர் தலை பொதும்பர் நீங்கி தம் இனம் இரண்டும் சேர்ந்த
களி தலை கூட்டம் காதல் மந்தி கண்டு இருந்தது அன்றே
#2722
பரத்தையர் தோய்ந்த மார்பம் பத்தினி மகளிர் தீண்டார்
திருத்தகைத்து அன்று தெள் நீர் ஆடி நீர் வம்-மின் என்ன
உரைத்தது என் மனத்தில் இல்லை உயர் வரை தேனை உண்பார்
வருத்தும் காஞ்சிரமும் வேம்பும் வாய் கொள்வார் யாவர் சொல்லாய்
#2723
ஈகு இனி என்னை நோக்கி எவன் செய்தி எனக்கு வாழ்நாள்
நீங்கிற்று சிறிது நிற்பின் காண்டியால் நீயும் என்ன
தூங்கி தான் துளங்க மந்தி தொழுத்தையேன் செய்தது என்று
தாங்குபு தழுவிக்கொண்டு தன்னை தான் பழித்தது அன்றே
#2724
கண்ணினால் குற்றம் கண்டும் காதலன் தெளிப்ப தேறி
பெண்மையால் பழித்த மந்தி பெரு மகிழ் உவகை செய்வான்
திண் நிலை பலவின் தேம் கொள் பெரும் பழம் கொண்டு கீறி
பண் உறு சுளைகள் கையால் பகுத்து உண கொடுத்தது அன்றே
#2725
இன் கனி கவரும் மந்தி கடுவனோடு இரிய ஆட்டி
நன் கனி சிலதன் உண்ண நச்சு வேல் மன்னன் நோக்கி
என்பொடு மிடைந்த காமம் இழிபொடு வெறுத்து நின்றான்
அன்பு உடை அரிவை கூட்டம் பிறன் உழை கண்டது ஒத்ததே
#2726
கைப்பழம் இழந்த மந்தி கட்டியங்காரன் ஒத்தது
இ பழம் துரந்து கொண்ட சிலதனும் என்னை ஒத்தான்
இ பழம் இன்று போகத்து இன்பமே போலும் என்று
மெய்ப்பட உணர்வு தோன்றி மீட்டு இது கூறினானே
#2727
மெலியவர் பெற்ற செல்வம் வேரொடும் கீழ்ந்து வெளவி
வலியவர் கொண்டு மேலை வரம்பு இகந்து அரம்பு செய்யும்
கலி அது பிறவி கண்டாம் காலத்தால் அடங்கி நோற்று
நலிவு இலா உலகம் எய்தல் நல்லதே போலும் என்றான்
#2728
நல்வினை என்னும் நன் பொன் கற்பக மகளிர் என்னும்
பல் பழ மணி கொம்பு ஈன்று பரிசில் வண்டு உண்ண பூத்து
செல்வ பொன் சிறுவர் என்னும் தாமங்கள் தாழ்ந்து நின்றது
ஒல்கி போம் பாவ காற்றின் ஒழிக இ புணர்ச்சி என்றான்
#2729
வேட்கைமை என்னும் நாவின் காம வெம் தேறல் மாந்தி
மாட்சி ஒன்றானும் இன்றி மயங்கினேற்கு இருளை நீங்க
காட்டினார் தேவர் ஆவர் கை விளக்கு அதனை என்று
தோட்டியால் தொடக்க பட்ட சொரி மத களிற்றின் மீண்டான்
#2730
கை நிறை எஃகம் ஏந்தி கன மணி குழை வில் வீச
மை நிற மணி வண்டு ஆர்ப்ப வார் தளிர் கவரி வீச
மெய்ந்நெறி மகிழ்ந்து நின்றான் வேனில் வாய் காமன் ஒத்தான்
மொய் நிற மாலை வேய்ந்து முருகு உலாம் முடியினானே
#2731
நடு சிகை முத்துத்தாமம் வாள் நுதல் நான்று நக்க
படுத்தனர் பைம்பொன் கட்டில் பாடினார் கீதம் தூபம்
எடுத்தனர் எழுந்து தேன் ஆர் எரி மணி வீணை ஆர்த்த
கொடி பல பூத்து சூழ்ந்த குங்கும குன்றம் ஒத்தான்
#2732
மெள்ளவே புருவம் கோலி விலங்கி கண் பிறழ நோக்கி
முள் எயிறு இலங்க செ வாய் முறுவல் தூது ஆதி ஆக
அள்ளிக்கொண்டு உண்ண காமம் கனிவித்தார் பனிவில் தாழ்ந்த
வள் இதழ் மாலை மார்பன் வச்சிர மனத்தன் ஆனான்
#2733
முலை முகம் சுமந்த முத்த தொத்து ஒளிர் மாலையாரும்
மலை முகந்து அனைய மார்பின் மன்னனும் இருந்த-போழ்தில்
கொலை முக களிறு அனாற்கு நாழிகை சென்று கூற
கலை முக மல்லர் புல்லி கமழும் நீர் ஆட்டினாரே
#2734
வெண் துகில் மாலை சாந்தம் விழு கலம் வீதியில் சேர்த்தி
நுண் துகில் திரைகள் சேர்ந்த நூற்று உலா மண்டபத்து
கண் திரள் முத்தம் மென் தோள் காவி கண் மகளிர் போற்றி
எண் திசை மருங்கும் ஏத்த இனிதினின் ஏறினானே
#2735
நெய் வளம் கனிந்து வாசம் நிறைந்து வான் வறைகள் ஆர்ந்து
குய் வளம் கழுமி வெம்மை தீம் சுவை குன்றல் இன்றி
ஐவருள் ஒருவன் அன்ன அடிசில் நூல் மடையன் ஏந்த
மை வரை மாலை மார்பன் வான் சுவை அமிர்தம் உண்டான்
#2736
கைப்பொடி சாந்தம் ஏந்தி கரக நீர் வீதியில் பூசி
மை படு மழை கண் நல்லார் மணி செப்பின் வாசம் நீட்ட
செப்பு அடு பஞ்சவாசம் திசை எலாம் கமழ வாய்க்கொண்டு
ஒப்பு உடை உறுவர் கோயில் வணங்குதும் எழுக என்றான்
#2737
ஒரு பகல் பூசின் ஓர் ஆண்டு ஒழிவு இன்றி விடாது நாறும்
பெரியவர் கேண்மை போலும் பெறற்கு அரும் வாச எண்ணெய்
அரிவையர் பூசி ஆடி அகில் புகை ஆவி ஊட்டி
திரு விழை துகிலும் பூணும் திறப்பட தாங்கினாரே
#2738
நல் தவம் செய்த வீரர் உள வழி நயந்து நாடும்
பொற்ற தாமரையினாளின் பூம் சிகை முத்தம் மின்ன
கொற்றவன் தொழுது சேர்ந்தார் கொம்பு அனார் வாமன் கோயில்
மற்று அவன் மகிழ்ந்து புக்கு மணி முடி துளக்கினானே
#2739
கடி மலர் பிண்டி கடவுள் கமலத்து
அடி மலர் சூடியவர் உலகில் யாரே
அடி மலர் சூடியவர் உலகம் ஏத்த
வடி மலர் தூவ வருகின்றார் அன்றே
#2740
முத்து அணிந்த முக்குடை கீழ் மூர்த்தி திருவடியை
பத்திமையால் நாளும் பணிகின்றார் யாரே
பத்திமையால் நாளும் பணிவார் பகட்டு எருத்தின்
நித்தில வெண்குடை கீழ் நீங்காதார் அன்றே
#2741
கரும கடல் கடந்த கை வல செல்வன்
எரி மலர் சேவடியை ஏத்துவார் யாரே
எரி மலர் சேவடியை ஏத்துவார் வான் தோய்
திரு முத்து அவிர் ஆழி செல்வரே அன்றே
#2742
வண்ண மா மலர் மாலை வாய்ந்தன
சுண்ணம் குங்குமம் தூமத்தால் புனைந்து
அண்ணல் சேவடி அருச்சித்தான்-அரோ
விண் இல் இன்பமே விழைந்த வேட்கையான்
#2743
இலங்கு குங்கும மார்பன் ஏந்து சீர்
நலம் கொள் சாரணர் நாதன் கோயிலை
வலம் கொண்டு ஆய் மலர் பிண்டி மா நிழல்
கலந்த கல் மிசை கண்டு வாழ்த்தினான்
#2744
உரிமை-தன்னொடும் வலம்கொண்டு ஓங்கு சீர்
திருமகன் பணிந்து இருப்ப செய்தவர்
இரு நிலம் மனற்கு இன்பமே என
பெரு நிலம் மனன் பெரிதும் வாழ்த்தினான்
#2745
தெருளலேன் செய்த தீவினை எனும்
இருள் விலங்க நின்று எரியும் நீள் சுடர்
அருளு-மின் எனக்கு அடிகள் என்றனன்
மருள் விலங்கிய மன்னர் மன்னனே
#2746
பால்கடல் பனி மதி பரவை தீம் கதிர்
மேல் பட மிக நனி சொரிவது ஒப்பவே
நூல் கடன் மாதவன் நுனித்த நல் அறம்
கோல் கடன் மன்னனுக்கு உரைக்கும் என்பவே
#2747
தேன் நெய் தோய்ந்தன தீவிய திரு மணி அனைய
வானின் உய்ப்பன வரகதி தருவன மதியோர்
ஏனை யாவரும் அமுது என பருகுவ புகல்வ
மானம் இல் உயர் மணிவண்ணன் நுவலிய வலித்தான்
#2748
அருமையின் எய்தும் யாக்கையும் யாக்கையது அழிவும்
திரு மெய் நீங்கிய துன்பமும் தெளிபொருள் துணிவும்
குருமை எய்திய குண நிலை கொடை பெறு பயனும்
பெருமை வீட்டொடும் பேசுவல் கேள் இது பெரியோய்
#2749
பரவை வெண் திரை வட கடல் படு நுக துளையுள்
திரை செய் தென் கடல் இட்டது ஓர் நோன் கழி சிவணி
அரச அ துளை அக-வயின் செறிந்து என அரிதால்
பெரிய யோனிகள் பிழைத்து இவண் மானிடம் பெறலே
#2750
விண்டு வேய் நரல் ஊன் விளை கானவர் இடனும்
கொண்டு கூர்ம் பனி குலைத்திடும் நிலைக்கள குறும்பும்
உண்டு நீர் என உரையினும் அரியன ஒருவி
மண்டு தீம் புனல் வளம் கெழு நாடு எய்தல் அரிதே
 
 
#2751
வில்லின் மா கொன்று வெள் நிண தடி விளிம்பு அடுத்த
பல்லினார்களும் படு கடல் பரதவர் முதலா
எல்லை நீங்கிய இழி தொழில் இழி குலம் ஒருவி
நல்ல தொல் குலம் பெறுதலும் நரபதி அரிதே
#2752
கருவி மா மழை கனை பெயல் பொழிந்து என வழிநாள்
அருவி போல் தொடர்ந்து அறாதன அரும் பிணி அழலுள்
கருவில் காய்த்திய கட்டளை படிமையில் பிழையாது
உருவின் மிக்கது ஓர் உடம்பது பெறுதலும் அரிதே
#2753
காமன் அன்னது ஓர் கழி வனப்பு அறிவொடு பெறினும்
நாம நால் கதி நவைதரு நெறி பல ஒருவி
வாமன் நூல் நெறி வழு அற தழுவினர் ஒழுகல்
ஏம வெண்குடை இறைவ மற்று யாவதும் அரிதே
#2754
இன்ன தன்மையின் அருமையின் எய்திய பொழுதே
பொன்னும் வெள்ளியும் புணர்ந்து என வயிற்று அகம் பொருந்தி
மின்னும் மொக்குளும் என நனி வீயினும் வீயும்
பின்னை வெண்ணெயின் திரண்ட பின் பிழைக்கவும் பெறுமே
#2755
வெண்ணெய் ஆயது வீங்குபு கூன் புற யாமை
வண்ணம் எய்தலும் வழுக்கவும் பெறும் அது வழுக்காது
ஒண்மை வாள் மதி உருவொடு திரு என தோன்றி
கண் அனார் அழ கவிழினும் கவிழும் மற்று அறி நீ
#2756
அழிதல் இன்றி அங்கு அரு நிதி இரவலர்க்கு ஆர்த்தி
முழுதும் பேர் பெறும் எல்லையுள் முரியினும் முரியும்
வழு இல் பொய்கையுள் மலர் என வளர்ந்து மை ஆடி
கெழீஇயினாரொடும் கிளை அழ கெடுதலும் கெடுமே
#2757
கெடுதல் அவ்வழி இல் எனின் கேள்விகள் துறைபோய்
வடி கொள் கண்ணியர் மனம் குழைந்து அநங்கன் என்று இரங்க
கொடையும் கோலமும் குழகும் தம் அழகும் கண்டு ஏத்த
விடையில் செல்வுழி விளியினும் விளியும் மற்று அறி நீ
#2758
எரி பொன் மேகலை இலங்கு அரி சிலம்பொடு சிலம்பும்
அரி பொன் கிண்கிணி அணி இழை அரிவையர் புணர்ந்து
தெரிவு இல் போகத்து கூற்றுவன் செகுத்திட சிதைந்து
முரியும் பல் சன முகம் புடைத்து அகம் குழைந்து அழவே
#2759
கோதை மங்கையர் குவி முலை தடத்து-இடை குளித்து
காதல் மக்களை கண்டு உவந்து இனிதினில் கழிப்ப
பேது செய் பிணி பெரும் புலி பாய்ந்திட பிணம் ஆம்
ஓத மா கடல் உடை கலத்தவர் உற்றது உறவே
#2760
காமம் பை பய கழிய தம் கடை பிடி சுருங்கி
ஊமர் போல தம் உரை அவிந்து உறுப்பினில் உரையா
தூய்மையில் குளம் தூம்பு விட்டு ஆம் பொருள் உணர்த்தி
ஈமம் ஏறுதல் ஒருதலை இகல் அமர் கடந்தோய்
#2761
தேம் கொள் பூம் கண்ணி திரு முடி திலக வெண்குடையோய்
ஈங்கு இது அன்றியும் இமையவர் அமையலர் கடந்த
தாங்கும் மா வண் கை சக்கரம் மிக்கு உயர் பிறரும்
யாங்கணார் அவர் ஊரொடு பேர் எமக்கு உரையாய்
#2762
வெவ்வினை செய்யும் மாந்தர் உயிர் எனும் நிலத்து வித்தி
அ வினை விளையுள் உண்ணும் அவ்விடத்து அவர்கள் துன்பம்
இவ்வென உரைத்தும் என்று நினைப்பினும் பனிக்கும் உள்ளம்
செவ்விதின் சிறிது கூற கேள்-மதி செல்வ வேந்தே
#2763
ஊழ் வினை துரப்ப ஓடி ஒன்றும் மூழ்த்தத்தின் உள்ளே
சூழ் குலை பெண்ணை நெற்றி தொடுத்த தீம் கனிகள் ஊழ்த்து
வீழ்வன போல வீழ்ந்து வெருவர தக்க துன்பத்து
ஆழ் துயர் உழப்ப ஊணும் அரு நவை நஞ்சு கண்டாய்
#2764
இட்டி வேல் குந்தம் கூர் வாள் எரி நுனை சுரிகை கூட
நட்டவை நிரைத்த பூமி நவை உடை நரகர் பொங்கி
உட்பட எழுந்து வீழ்ந்து ஆங்கு ஊன் தகர்த்திட்ட வண்ணம்
எட்டு எலா திசையும் சிந்தி கிடப்பவால் அடக்கம் இல்லார்
#2765
வெம் தடி தின்ற வெம் நோய் வேகத்தால் மீட்டு மாலை
பைம் தொடி மகளிர் ஆடும் பந்து என எழுந்து பொங்கி
வந்து உடைந்து உருகி வீழ்ந்து மாழ்குபு கிடப்பர் கண்டாய்
கந்து அடு வெகுளி வேக கடா முக களிற்று வேந்தே
#2766
வயிர முள் நிரைத்து நீண்ட வார் சினை இலவம் ஏற்றி
செயிரில் தீ மடுப்பர் கீழால் செல் நுனை கழுவில் ஏற்றி
மயிருக்கு ஒன்று ஆக வாங்கி அகைத்து அகைத்திடுவர் மன்னா
உயிரை பேதுறுத்தும் மாந்தர் உயிரை பேதுறுக்கும் ஆறே
#2767
துடி குரல் குரல பேழ் வாய் தொடர் பிணி உறுத்த செந்நாய்
மடுத்திட வைர ஊசி வாள் எயிறு அழுந்த கௌவி
புடைத்திட அலறி ஆற்றார் பொன்றினும் பொன்றல் செல்லார்
உடுப்பு இனம் வேட்டம் செய்தார் உழப்பவால் துன்பம் மாதோ
#2768
வாளை மீன் தடிகள் தின்றார் வருக என உருக வெந்த
பாளத்தை கொடிற்றின் ஏந்தி பகுத்து வாய் புகுத்தல் ஆற்றார்
ஊளை கொண்டு ஓடுகின்றார் உள் அடி ஊசி பாய
தாள் ஒற்றி தப்பி வீழ்ந்தார் தறி வலை மானின் பட்டார்
#2769
காதலாள் கரிந்து நைய கடியவே கனைந்து கன்றி
ஏதிலான் தாரம் நம்பி எளிது என இறந்த பாவத்து
ஊது உலை உருக வெந்த ஒள் அழல் செப்பு பாவை
ஆ தகாது என்ன புல்லி அலறுமால் யானை வேந்தே
#2770
சிலையினால் மாக்கள் கொன்று செழும் கடல் வேட்டம் ஆடி
வலையினால் மீன்கள் வாரி வாழ் உயிர் கூற்றம் ஆன
கொலைநரை கும்பி தன்னுள் கொந்து அழல் அழுத்தி இட்டு
நலிகுவர் நாளும் நாளும் நரகரை நாம வேலோய்
#2771
பாரகம் கழுநர் போல பரூஉ தடி பலரும் ஏந்தி
வீர நோய் வெகுளி தோற்றி விழுப்பு அற அதுக்கி இட்டு
காரகல் பொரிப்பர் கண்ணுள் சுரிகையை நடுவர் நெஞ்சில்
பார கூர் தறிகள் நட்டு பனை என பிளப்பர் மாதோ
#2772
நா புடை பெயர்த்தல் ஆற்றார் நயந்து நீர் வேட்டு நோக்கி
பூ புடை அணிந்த பொய்கை புக்கு நீர் உண்ணல் உற்றால்
சீப்படு குழம்பது ஆகி செல்லல் உற்று அந்தோ என்ன
கூப்பிடு குரலாய் நிற்பர் குறை பனை குழாங்கள் ஒத்தே
#2773
நறு மலர் தாமம் நான்று நான நீர் பிலிற்றும் பந்தர்
குறுகலும் குட நெய் பெய்த கொந்து அழல் போன்று பொங்கி
பறை அலகு அனைய வெண் பல் பசும் கழல் குண்டு பைம் கண்
உறு துயர் நரகர் தம்மை உருக சுட்டிடுங்கள் அன்றே
#2774
வெந்து உருக்குற்ற செம்பின் விதவையுள் அழுத்தி இட்டும்
எந்திர ஊசல் ஏற்றி எரி உண மடுத்தும் செக்கில்
சுந்து எழுந்து அரைத்தும் போக சுண்ணமா நுணுக்கி இட்டும்
மந்தரத்து அனைய துன்பம் வைகலும் உழப்ப மாதோ
#2775
உழும் பகட்டு எருது போல உரன் அறு தாளர் ஆகி
கொழும் களி அளற்றுள் வீழ்ந்தும் கொழும் புகை மடுக்க பட்டும்
அழுந்தும் இ நரகம் தன்னுள் செல்பவர் யார்-கொல் என்னின்
எழுந்து வண்டு இமிரும் பைம் தார் இறைவ நீ கேண்மோ என்றான்
#2776
கொல்வதே கன்றி நின்றார் கொடியவர் கடிய நீரார்
இல்லையே இம்மை அல்லால் உம்மையும் உயிரும் என்பார்
அல்லதும் தவமும் இல்லை தானமும் இழவு என்பாரும்
செல்ப அ நரகம்-தன்னுள் தீவினை தேர்கள் ஊர்ந்தே
#2777
எரி நீரவே நரகம் அ நரக துன்பத்து
ஒரு நீரவே விலங்கு தாம் உடைய துன்பம்
பெரு நீர வாள் தடம் கண் பெண் அணங்கு பூம் தார்
அரு நீர வேந்து அடர்த்த அச்சு அணங்கு வேலோய்
#2778
கழை பொதிர்ப்ப தேன் சொரிந்து காய் தினைகள் ஆர்த்தும்
மழை தவமும் குன்றில் வயமா முழங்க
உழை அளிய தாம் உறூஉம் துன்பங்கள் நின் மேல்
விழைவு அயரா வேந்து உறூஉம் துன்பமே கண்டாய்
#2779
நிணம் பிலிற்றும் வாயர் நெருப்பு இமைக்கும் கண்ணர்
குணன் நஞ்சர் கூற்று அனைய கோள் நாய் மடுப்ப
கண மஞ்ஞை அஞ்சி கழுத்து ஒளிப்ப கண்டாய்
மணம் மல்கு பூம் தார் மழை தழீஇய கையாய்
#2780
மண் ஆர மஞ்சள் உரிஞ்சி மலர் சூட்டி
கண் ஆர் மறி அறுத்து கையால் உதிரம் தூய்
உண்ணீரே தேவீர் உவந்து என்பது இ உலகம்
நண்ணார் கடந்தோய் நமன் உலகின் நால் மடங்கே
#2781
மங்கை மனா அனைய மென் சூல் மட உடும்பு
செம் கண் வரி வரால் செம் நீர் இள வாளை
வெம் கருனை புல்லுதற்கு வேறு வேறா குறைப்ப
அங்காந்து அழுகின்றது ஆர் கண்ணே நோக்குமே
#2782
கடல் அரணம் ஆகாது காடு அரணம் ஆகா
குடல் அரணம் ஆகாது குன்று அரணம் ஆகா
அடு துயரம் ஊர்ந்து அலைப்ப ஆங்கு அரணம் காணா
படு துயரத்தாலே பதைத்து அளிய வேமே
#2783
முழு பதகர் தாள் துரந்து முள் தாற்றில் குத்தி
உழப்பு எருது பொன்ற புடைத்து உழுது விட்டால்
கழித்து உண்ணும் காக்கை கடிவோரும் இன்றி
புழு சொரிய துன்பம் பொறுக்கலா பொன்றும்
#2784
நிரம்பாத நீர் யாற்று இடுமணலுள் ஆழ்ந்து
பெரும் பார ஆடவர் போல் பெய் பண்டம் தாங்கி
மருங்கு ஒற்றி மூக்கு ஊன்றி தாள் தவழ்ந்து வாங்கி
உரம் கெட்டு உறுப்பு அழுகி புல் உண்ணா பொன்றும்
#2785
போழ் மதி போல் கூர் இரும்பின் பூ நுதல்கள் போழ்ந்திடவும்
காழ் நுதியின் குத்துண்டும் கார் மழை போல் நின்று அதிர்ந்தும்
வீழ் பிடிகள் சிந்தித்தும் வெம் நோய் தம் உள் சுட வெந்து
ஆழ்த்த கந்து இளக யானை அலம் வருமே
#2786
எரி வளைப்ப வெம் புகை உண்டு இன் உயிர் விட்டு ஏகும்
அரி வளைப்ப குஞ்சரமும் ஆலி போல் நீராம்
வரி வளைக்கும் வெண் மயிர்க்கும் முத்திற்கும் மாந்தர்
திரு வளைத்த மார்ப செகுத்திடுவர் தேங்கார்
#2787
வேள்வி-வாய் கண்படுத்தும் வெவ்வினை செய் ஆடவர் கை
வாளின்-வாய் கண்படுத்தும் வாரணத்தின் ஈர் உரி போல்
கோள் இமிழ்ப்பு நீள் வலை-வாய் கண்படுத்தும் இன்னணமே
நாள் உலப்பித்திட்டார் நமர் அலாதார் எல்லாம்
#2788
கொல்வாரும் கூட்டுள் செறிப்பாரும் ஆடவர்கள்
அல்லாரும் நாய் வேட்டம் ஆடாத மாத்திரையே
அல்லாத பைம் கிளியும் பூவையும் ஆதியா
எல்லாம் கிளை பிரித்திட்டு ஏமுறு நோய் செய்பவே
#2789
மல்லல் மலை அனைய மாதவரை வைது உரைக்கும்
பல்லவரே அன்றி பகுத்து உணா பாவிகளும்
அல்குல் விலை பகரும் ஆய் தொடியர் ஆதியார்
வில் பொரு தோள் மன்னா விலங்காய் பிறப்பவே
#2790
தம்மை நிழல் நோக்கி தாங்கார் மகிழ் தூங்கி
செம்மை மலர் மார்பம் மட்டித்து இளையார் தோள்
கொம்மை குழகு ஆடும் கோல வரை மார்பர்
வெம்மை மிகு துன்பம் வேந்தே சில கேளாய்
#2791
ஈருள் தடி மூடி ஈண்டும் மல பண்ட
போர்வை புழு மொய்ப்ப பொல்லா குடர் சூடி
சார்தற்கு அரிது ஆகி தான் நின்று அறா அள்ளல்
நீர்-வாய் சுரம் போந்தார் தம்மை நினையாரோ
#2792
அம் சொல் மடவார் தம் ஆர்வ களி பொங்க
நெஞ்சத்து அயில் ஏற்றும் நீள் வெம் கழு ஊர்ந்தும்
குஞ்சி களி யானை கோட்டால் உழப்பட்டும்
துஞ்சிற்று உலகு அந்தோ துன்ப கடலுள்ளே
#2793
பண்ணார் களிறே போல் பாய் ஓங்கு உயர் நாவாய்
கண்ணார் கடல் மண்டி காற்றில் கவிழுங்கால்
மண்ணார் மணி பூணோய் மக்கள் உறும் துன்பம்
நண்ணா நரகத்தின் நான்காம் மடி அன்றே
#2794
செம் தீ புகை உண்டும் சேற்றுள் நிலை நின்றும்
அந்தோ என மாற்றால் ஆற்ற புடை உண்டும்
தந்தீக எனா முன் கை வீக்க தளர்வுற்றும்
நொந்தார் குடி செல்வர் நோன்மை நுகம் பூண்டார்
#2795
கண் சூன்றிடப்பட்டும் கால் கை களைந்து ஆங்கே
அண் பல் இற கையால் ஆற்ற தகர் பெற்றும்
நுண் சாந்து அரைப்பார் போல் நோவ முழங்கையால்
புண் செய்திடப்பட்டும் புன்கண் உழப்பவே
#2796
மாலை குடை மன்னர் வையம் அகற்றுவான்
காலை கதி துன்பம் காவல் பெரும் துன்பம்
சோலை மயில் அன்னார் தோள் சேர்விலர்-ஆயின்
வேலை கடலே போல் துன்பம் விளையுமே
#2797
ஊன் சேர் உடம்பு என்னும் ஓங்கல் மர சோலை
தான் சேர் பிணி என்னும் செம் தீ கொடி தங்கி
கான் சேர் கவின் என்னும் காமர் மலர் வாட
தேன் சேர் மலர் மார்ப தீத்திட்டு இறக்குமே
#2798
கொட்டு பிடி போலும் கூனும் குறள் ஆமை
விட்டு நடப்பன போல் சிந்தும் விளைந்து சீ
அட்டும் உயவு நோய் அல்லா பிற நோயும்
பட்டார் உறு துன்பம் பன்னி சொலலாமோ
#2799
வேட்டன பெறாமை துன்பம் விழை நரை பிரிதல் துன்பம்
மோட்டு எழில் இளமை நீங்க மூப்பு வந்து அடைதல் துன்பம்
ஏட்டு எழுத்து அறிதல் இன்றி எள்ளற்பாடு உள்ளிட்டு எல்லாம்
சூட்டு அணிந்து இலங்கும் வேலோய் துன்பமே மாந்தர்க்கு என்றான்
#2800
திருவில் போல் குலாய தேம் தார் தேவர் தம் தன்மை செப்பின்
கருவத்து சென்று தோன்றார் கால் நிலம் தோய்தல் செல்லார்
உருவ மேல் எழுதல் ஆகா ஒளி உமிழ்ந்து இலங்கும் மேனி
பருதியின் இயன்றது ஒக்கும் பன் மலர் கண்ணி வாடா
 
 
#2801
அம் கையும் அடியும் நோக்கில் தாமரை அலர்ந்தது ஒக்கும்
பங்கயம் அனைய செம் கண் பகு ஒளி பவழம் செ வாய்
செம் கதிர் முறுவல் முத்தின் தெளி நகை திகழும் செய்யாள்
வெம் கடை மழை கண் நோக்கி வெய்துற திரண்ட அன்றே
#2802
தாள் நெடும் குவளை கண்ணி தளை அவிழ் கோதை மாலை
வாள் முடி வைர வில்லும் வார் குழை சுடரும் மார்பில்
பூண் இடை நிலவும் மேனி மின்னொடு பொலிந்த தேவர்
ஊண் உடை அமிர்தம் வேட்டால் உண்பது மனத்தினாலே
#2803
சிதர் அரி ஒழுகி ஓடி செவியுற போழ்ந்து நீண்ட
மதர் அரி மழை கண் அம்பா வாங்கு வில் புருவம் ஆக
துதை மணி கலாபம் மின்ன தொல் மலர் காமன் அம்பு
புதை மலர் மார்பத்து எய்ய பூ அணை மயங்கி வீழ்வார்
#2804
பூ ததை கொம்பு போன்று பொன் இழை சுடரும் மேனி
ஏ தரும் கொடி அனாரை இரு நடு ஆக புல்லி
காய்த்தியிட்டு உள்ளம் வெம்பி கடைந்திடுகின்ற காமம்
நீத்து நீர் கடலை நீந்தும் புணை என விடுத்தல் செல்லார்
#2805
பொங்கல் வெம் முலைகள் என்னும் போதொடு பொருது பூம் தார்
அம் கலம் தொடையல் மாலை கிழிந்து அழகு அழிய வைகி
கொங்கு அலர் கோதை நல்லார் குரை கடல் அமிர்தம் ஆக
தங்கலர் பருகி ஆரார் தாழ்ந்து கண் இமைத்தல் செல்லார்
#2806
கருவியின் இசைகள் ஆர்ப்ப கற்பக மரத்தின் நீழல்
பொரு கயல் அனைய கண்ணும் புருவமும் அரவம் செய்ய
அரவ மேகலைகள் அம் பொன் கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்ப
திரு அனார் ஆடல் கண்டும் திருவொடு திளைத்தும் ஆனார்
#2807
பனி முகில் முளைத்த நான்கு பசும் கதிர் திங்கள் ஒப்ப
குனி மருப்பு உழுது மேகம் குஞ்சரம் குனிந்து குத்த
இனிதினின் இலங்கு பொன் தோடு ஏற்று-மின் குழைகள் பொங்க
துனிவு இலர் களிற்றோடு ஆடி தொழுதக கழிப்பர் வேந்தே
#2808
கடிகை வாள் ஆரம் மின்ன கற்பக காவு கண்டும்
தொடி கவின் அறாத மென் தோள் தேவியர் சூழ வாமன்
அடி கையின் தொழுது பூ தூய் அஞ்சலி செய்து வீடே
முடிக இ பிறவி வேண்டேம் முனைவ என்று இரப்ப அன்றே
#2809
மலம் குவித்து ஆவி வாட்டி வாய் நிறை அமிர்தம் பெய்த
இலங்கு பொன் கலசம் அன்ன எரி மணி முலைகள் பாய
கலந்தனர் சென்ற பின் நாள் கதிர் கழன்று இருந்த வெய்யோன்
புலம்பு போல் புலம்பி தேவர் பொற்பு உகுத்து இருப்ப அன்றே
#2810
எல்லை மூ_ஐந்து நாள்கள் உள என இமைக்கும் கண்ணும்
நல் எழில் மாலை வாடும் நஞ்சு உடை அமிர்து உண்டாரின்
பல் பகல் துய்த்த இன்பம் பழுது என கவல்ப கண்டாய்
பில்கி தேன் ஒழுகும் பைம் தார் பெரு நில வேந்தர் வேந்தே
#2811
தேவரே தாமும் ஆகி தேவரால் தொழிக்கப்பட்டும்
ஏவல் செய்து இறைஞ்சி கேட்டும் அணிகம் மா பணிகள் செய்தும்
நோவது பெரிதும் துன்ப நோயினுள் பிறத்தல் துன்பம்
யாவதும் துன்பம் மன்னோ யாக்கை கொண்டவர்கட்கு என்றான்
#2812
கொங்கு விம்மு குளிர் பிண்டி குழவி ஞாயிற்று எழில் ஏய்ப்ப
சிங்கம் சுமந்த மணி அணை மேல் தேவர் ஏத்தி சிறப்பு அயர
எங்கும் உலகம் இருள் நீங்க இருந்த எந்தை பெருமானார்
தங்கு செந்தாமரை அடி என் தலையவே என் தலையவே
#2813
இலங்கு செம்பொன் எயில் மூன்றும் எரி பொன் முத்த குடை மூன்றும்
வலம் கொண்டு அலர் தூஉய் அடி ஏத்தும் வையம் மூன்றும் படை மூன்றும்
கலங்காது உயர்ந்த அதிசயங்கள் மூன்றும் காமர் நூல் மூன்றும்
நலம் கொள் தீம் பால் குண கடலும் உடையார் நம்மை உடையாரே
#2814
மன்றல் நாறும் அணி முடி மேல் மலிந்த சூளாமணி போலும்
வென்றோர் பெருமான் அறவாழி வேந்தன் விரி பூம் தாமரை மேல்
சென்ற திருவார் அடி ஏத்தி தெளியும் பொருள்கள் ஓர் ஐந்தும்
அன்றி ஆறும் ஒன்பானும் ஆகும் என்பார் அறவோரே
#2815
பெரிய இன்பத்து இந்திரனும் பெட்ட செய்கை சிறு குரங்கும்
உரிய செய்கை வினை பயத்தை உண்ணும் எனவே உணர்ந்து அவனை
அரியர் என்ன மகிழாதும் எளியர் என்ன இகழாதும்
இருசார் வினையும் தெளிந்தாரே இறைவன் நூலும் தெளிந்தாரே
#2816
உறுவர் பேணல் உவர்ப்பு இன்மை உலையா இன்பம் தலை நிற்றல்
அறிவர் சிறப்பிற்கு எதிர் விரும்பல் அழிந்தோர் நிறுத்தல் அறம் பகர்தல்
சிறியார் இனத்து சேர்வு இன்மை சினம் கைவிடுதல் செருக்கு அவித்தல்
இறைவன் அறத்து உளார்க்கு எல்லாம் இனியர் ஆதல் இது தெளிவே
#2817
செறிய சொன்ன பொருள் தெளிந்தார் சேரார் விலங்கில் பெண் ஆகார்
குறுகார் நரகம் ஓர் ஏழும் கீழ் முத்தேவர் குழாம் தீண்டார்
அறியாது உரைத்தேன் அது நிற்க ஆறே நரகம் ஆகாத
பொறியார் போக பூமியுள் விலங்கும் ஆவர் ஒரு சாரார்
#2818
ஏத்தரும் திரு மணி இலங்கு நீர்மைய
கோத்தன போல் குணம் நூற்று கோடியும்
காத்தன காவல பதினெண்ணாயிரம்
பாத்தன பண்ணவர் சீலம் என்பவே
#2819
மொய் அமர் ஞாட்பினுள் முரண் கொள் மன்னவர்
மெய் புகு பொன் அணி கவசம் ஒப்பன
மையல் ஐம்பொறி மதம் வாட்டி வைகலும்
செய் வினை நுணுக்குவ சீலம் என்பவே
#2820
மணி துணர் அனைய தம் குஞ்சி வண் கையால்
பணித்தனர் பறித்தலின் பரவை மா நிலம்
துணித்து ஒரு துணி சுமந்து அனைய திண் பொறை
அணித்தகு முடியினாய் ஆதி ஆகவே
#2821
பெரிய வாள் தடம் கண் செ வாய் பிறர் மனை பிழைக்கும் மாந்தர்
மரீஇ அவாய் புறம் சொல் கூர் முள் மத்திகை புடையும் அன்றி
ஒருவர் வாய் உமிழ பட்ட தம்பலம் ஒருவர் வாய் கொண்டு
அரியவை செய்ப வையத்து ஆண் பிறந்தார்கள் அன்றே
#2822
ஒழுக்கமே அன்றி தங்கள் உள் உணர்வு அழிக்கும் மட்டும்
புழு பயில் தேனும் அன்றி பிறவற்றின் புண்ணும் மாந்தி
விழு பயன் இழக்கும் மாந்தர் வெறு விலங்கு என்று மிக்கார்
பழித்தன ஒழித்தல் சீலம் பார் மிசை அவர்கட்கு என்றான்
#2823
நல் நிலத்து இட்ட வித்தின் நயம் வர விளைந்து செல்வம்
பின் நிலம் பெருக ஈனும் பெறல் அரும் கொடையும் பேசின்
புன் நிலத்து இட்ட வித்தின் புற்கென விளைந்து போகம்
மின் என துறக்கும் தானத்து இயற்கையும் விரித்தும் அன்றே
#2824
ஐவகை பொறியும் வாட்டி யாமையின் அடங்கி ஐந்தின்
மெய் வகை தெரியும் சிந்தை விளக்கு நின்று எரிய விட்டு
பொய் கொலை களவு காமம் அவா இருள் புகாது போற்றி
செய் தவம் நுனித்த சீல கனை கதிர் திங்கள் ஒப்பார்
#2825
வாய்ச்சி வாய் உறுத்தி மாந்தர் மயிர்-தொறும் செத்தினாலும்
பூச்சுறு சாந்தம் ஏந்தி புகழ்ந்து அடி பணிந்த போதும்
தூக்கி இ இரண்டும் நோக்கி தொல் வினை என்று தேறி
நா செறு பராவு கொள்ளார் நமர் பிறர் என்றும் உள்ளார்
#2826
பால் கதிர் திங்கள் கொட்பின் பருமித்த களிறு போல
நூல் கதி கொண்டு கண்ணால் நுகத்து அளவு எல்லை நோக்கி
மேல் கதிக்கு ஏணி ஆய விழுத்தவர் மனையில் வந்தால்
காற்கு ஒசி கொம்பு போல கைதொழுது இறைஞ்சி மாதோ
#2827
தொடி கையால் தொழுது வாழ்த்தி தூ மணி நிலத்துள் ஏற்றி
பொடி புனை துகிலின் நீக்கி புகழ்ந்து அடி கழீஇய பின்றை
அடுத்த சாந்து அகிலின் ஆவி ஆய் மலர் அருச்சித்து ஆனார்
கொடுப்பர் நால் அமிர்தம் மூன்றின் குணம் புரிந்து அடங்கினார்க்கே
#2828
ஒன்பது வகையின் ஓதிற்று உத்தமர்க்கு ஆகும் ஆர்ந்த
இன் பதம் அருளி ஈதல் இடை என மொழிப யார்க்கும்
துன்புற விலங்கு கொன்று சொரிந்து சோறு ஊட்டினார்க்கும்
நன் பொருள் வழங்கினார்க்கும் பயன் நமக்கு அறியல் ஆகா
#2829
கூற்று நா அலறுவது அனைய கூர் இலை
ஏற்ற நீர் துளும்பு வாள் இறைவ ஈங்கு இனி
போற்றினை கேள்-மதி பொரு இல் புண்ணியர்க்கு
ஆற்றிய கொடை பயன் அறிய கூறுவாம்
#2830
கடிப்பு வார் அங்குலி கொளீஇய கை துரந்து
அடுத்து வார் மயிர் துதி அலற ஊதலின்
பொடித்த பொன் தாமரை அனைய பொங்கு அழல்
இடை கிடந்து எவ்வளவு இரும்பு காய்ந்ததுவே
#2831
காய்ந்த அ அளவினால் கௌவும் நீரது ஒத்து
ஆய்ந்து அறி கொடையினது அளவில் புண்ணியம்
தோய்ந்து உயிர் உடம்பு இவண் ஒழிய தொக்க நாள்
வீந்து போய் வயிற்று அகம் விதியின் எய்துமே
#2832
திங்கள் ஒன்பதும் வயிற்றில் சேர்ந்த பின்
வங்க வான் துகில் பொதி மணி செய் பாவை போல்
அங்கு அவர் இரட்டைகள் ஆகி தோன்றலும்
சிங்கினார் இருமுதுகுரவர் என்பவே
#2833
இற்று அவர் தேவராய் பிறப்ப ஈண்டு உடல்
பற்றிய விசும்பு-இடை பரவும் மா முகில்
தெற்றென வீந்து என சிதைந்து போகுமால்
மற்ற அ மக்கள் தம் வண்ணம் செப்புவாம்
#2834
பிறந்த அ குழவிகள் பிறர்கள் யாவரும்
புறந்தரல் இன்றியே வளர்ந்து செல்லும் நாள்
அறைந்தனர் ஒன்று இலா ஐம்பது ஆயிடை
நிறைந்தனர் கலை குணம் உறுப்பு நீரவே
#2835
சோலை மீன் அரும்பி திங்கள் சுடரொடு பூத்ததே போல்
மாலையும் கலனும் ஈன்று வடகமும் துகிலும் நான்று
காலையும் இரவும் இல்லா கற்பக மரத்தின் நீழல்
பாலை யாழ் மழலை வேறாய் பல் மணி கொம்பின் நின்றாள்
#2836
இலங்கு பொன் குவடு சாந்தம் எழுதியது அனைய தோள் மேல்
நலம் கிளர் குழைகள் நான்று சாந்தின் வாய் நக்கி மின்ன
கலம் கலந்து அகன்ற மார்பில் கற்பக மாலை தாழ
விலங்கு அரசு அனைய காளை வேனில் வேந்து என்ன சேர்ந்தான்
#2837
குண்டலம் குலவி மின்ன பொன் அரி மாலை தாழ
தெண் கடல் அமிர்தின் செய்த பாவையின் பாவை நிற்ப
விண்டு அலர் மாலை மார்பன் விதியினால் சென்று மாதோ
கண்டனன் கலந்த உள்ளம் காதலின் ஒருவர் ஆனார்
#2838
கொதி நுனை காமன் அம்பு கொப்புளித்து உமிழ்ந்து காமம்
மது நிறை பெய்து விம்மும் மணி குடம் இரண்டு போல
நுதி முகம் முத்தம் சூடி நோக்குநர் ஆவி வாட்ட
விதி முலை வெய்ய ஆகி தாரொடு மிடைந்த அன்றே
#2839
இமைத்த நும் கண்கள் என்னை இகழ்ந்தனிர் என்று சீற
அமைத்து நின் அழகு கோலம் ஆர உண்டு அறுக்கல் ஆற்றாது
இமைத்தன வஞ்சி என்ன இளையவள் சிலம்பில் குஞ்சி
நமைத்த பூம் தாமம் தோய நகை முக விருந்து பெற்றான்
#2840
இன் அகில் ஆவி விம்மும் எழு நிலை மாடம் சேர்ந்தும்
பொன் மலர் காவு புக்கும் புரி மணி வீணை ஓர்த்தும்
நன் மலர் நான வாவி நீர் அணி நயந்தும் செல்வ
தொல் நலம் பருகி காம தொங்கலால் பிணிக்கப்பட்டார்
#2841
பூ முற்றும் தடம் கண்ணாளும் பொன் நெடும் குன்று அனானும்
காமுற்று நினைந்த எல்லாம் கற்பக மரங்கள் ஏந்த
தாம் உற்று கழிப்பர் தானம் இடையது செய்த நீரார்
ஏமுற்று கரும பூமி இருநிதி கிழமை வேந்தே
#2842
அடங்கலர்க்கு ஈந்த தான பயத்தினால் அலறும் முந்நீர்
தடம் கடல் நடுவுள் தீவு பல உள அவற்றுள் தோன்றி
உடம்பொடு முகங்கள் ஒவ்வார் ஊழ் கனி மாந்தி வாழ்வர்
மடங்கல் அம் சீற்ற துப்பின் மான வேல் மன்னர் ஏறே
#2843
செப்பிய சீலம் என்னும் திரு மணி மாலை சூழ்ந்தார்
கப்பத்துள் அமரர் ஆவர் காட்சி இன் அமிர்தம் உண்டார்
ஒப்ப நீர் உலகம் எல்லாம் ஒரு குடை நிழற்றி இன்பம்
கை படுத்து அலங்கல் ஆழி காவலர் ஆவர் கோவே
#2844
வீட்டினது இயற்கை நாம் விளம்பின் தீம் கதிர்
பாட்டு அரும் பனி மதி பழித்த முக்குடை
மோட்டு இரும் கொழு மலர் பிண்டி மூர்த்தி நூல்
ஈட்டிய பொருள் அகத்து இயன்றது என்பவே
#2845
உள் பொருள் இது என உணர்தல் ஞானம் ஆம்
தெள்ளிதின் அ பொருள் தெளிதல் காட்சி ஆம்
விள்ளற இருமையும் விளங்க தன் உளே
ஒள்ளிதின் தரித்தலை ஒழுக்கம் என்பவே
#2846
கூடிய மும்மையும் சுடர்ந்த கொந்து அழல்
நீடிய வினை மரம் நிரைத்து சுட்டிட
வீடு எனப்படும் வினை விடுதல் பெற்றது அங்கு
ஆடு எழில் தோளினாய் அநந்த நான்மையே
#2847
கடை இலா அறிவொடு காட்சி வீரியம்
கிடை இலா இன்பமும் கிளந்த அல்லவும்
உடைய தம் குணங்களோடு ஓங்கி விண் தொழ
அடைதலான் மேல் உலகு அறியப்பட்டதே
#2848
மாதவன் என பெயர் வரையின் அம் வரை
ஏதம் இல் எயிறு அணி பவள வாய் தொடுத்து
ஆதியில் அறவுரை அருவி வீழ்ந்து என
மா துயர் மலம் கெட மன்னன் ஆடினான்
#2849
எல்லையில் அறவுரை இனிய கேட்ட பின்
தொல்லை எம் பிறவியும் தொகுத்த பாவமும்
வல்லையே பணி-மின் அம் அடிகள் என்றனன்
மல்லை வென்று அகன்று பொன் மலர்ந்த மார்பினான்
#2850
கதிர் விடு திரு மணி அம் கை கொண்டது ஒத்து
எதிர்வதும் இறந்ததும் எய்தி நின்றதும்
அதிர்வு அறு தவ விளக்கு எறிப்ப கண்டவன்
பதர் அறு திரு மொழி பணிக்கும் என்பவே
 
மேல்
 
#2851
முழு நீர் வளை மேய்தலின் முத்து ஒழுகி
பொழி நீர் நிலவின் இருள் போழ்ந்து அரிசி
கழு நீர் ஒழுக கழு நீர் மலரும்
தழு நீரது தாதகி என்று உளதே
#2852
கயல் பாய்ந்து உகள கடி அன்னம் வெரீஇ
வியன் நீள் சுடர் வெண் மதி சேர்வது போல்
அயலே அலர் தாமரை சேர்ந்து உறையும்
வயல் சூழ்ந்தன ஊர் வளம் ஆர்ந்தனவே
#2853
அவணத்தவர் கூந்தல் அகில் புகையை
சிவணி சிறுகால் கமுகம் பொழில் சேர்ந்து
உவண் உய்த்திட மஞ்சு என நின்று உலவும்
பவணத்து ஒரு பாங்கினதால் அளிதோ
#2854
மதியும் சுடரும் வழி காணல் உறா
பொதியும் அகிலின் புகையும் கொடியும்
நிதியின் கிழவன் இனிதா உறையும்
பதி பொன் நகரின் படி கொண்டதுவே
#2855
ஏமம் ஆகிய துப்புரவு எய்திய
பூமி மா திலகம் எனும் பொன் கிளர்
நாம நல் நகர் வீதிகள் தாம் எலாம்
காமவல்லி கிடந்தன போன்றவே
#2856
பைம் கழல் மன்னர் மன்னன் பவணமாதேவன் என்பான்
சங்கினுள் முத்தம் ஒப்பாள் சயமதி பயந்த நம்பி
ஐங்கணை காமன் அன்னான் அசோதரன் அரச சீயம்
தங்கிய கேள்வியாற்கு தையலார் சேர்த்தினாரே
#2857
இள முலை பொருது தேம் தார் எழில் குழைந்து அழிய வைகி
கிளை நரம்பு இசையும் கூத்தும் கிளர்ந்தவை கனற்ற நாளும்
வளை மயங்கு உருவ மென் தோள் வாய் நலம் பருகி மைந்தன்
விளை மது தேறல் மாந்தி வெற்றி போர் அநங்கன் ஆனான்
#2858
இலங்கு அரி பரந்த வாள் கண் இளையவர் புலவி நீங்க
சிலம்பு எனும் வண்டு பாட சீறடி போது புல்லி
அலங்கல் வாய் சென்னி சேர்த்தி அரி மதர் மழை கண் பில்க
நலம் கவர்ந்து உண்டு நண்ணார் நாமுற கழிக்கும் மாதோ
#2859
மங்கையர் தம்மொடு மடங்கல் மொய்ம்பினான்
பங்கய பனி தடம் சேர பார்ப்பு அனம்
செம் கயல் பேர் இனம் இரிய செவ்வனே
பொங்கி மேல் பறந்து விண் புதைந்தது என்பவே
#2860
வேய்ந்த வெண் தாமரை கோதை போல விசும்பில் பறக்கின்ற வெள்ளை அன்னம்
ஆய்ந்த முகில் ஆடை திங்கள் கண்ணி ஆகாயம் என்னும் அரிவை சாயல்
தோய்ந்த தன் காதலன் பற்ற அற்று சொரிகின்ற மேகலை போல் வீழ்ந்த வாளை
பாய்ந்து துகைப்ப கிழிந்த கூழை பனி தாமரை சூழ் பகல் கோயிலே
#2861
விரும்பு பொன் தட்டு-இடை வெள்ளி கிண்ணம் ஆர்ந்து
இருந்தன போன்று இள அன்ன பார்ப்பு இனம்
பொருந்து பொன் தாமரை ஒடுங்கி புக்கு ஒளித்து
இருந்த கண்டான் இளம் கோக்கள் நம்பியே
#2862
உரிமையுள் பட்டிருந்து ஒளிக்கின்றார்களை
பெரும நீ கொணர்க என பேசு காஞ்சுகி
ஒரு மகற்கு ஈந்தனன் கோயில் புக்கனன்
எரி முயங்கு இலங்கு வேல் காளை என்பவே
#2863
வட மலை பொன் அனார் மகிழ்ந்து தாமரை
தடம் உறைவீர்க்கு இவை தடங்கள் அல்லவே
வட முலை என நடாய் வருடி பால் அமுது
உடன் உறீஇ ஓம்பினார் தேம் பெய் கோதையார்
#2864
கண்டான் ஒரு நாள் கதிர் மா முடி மன்னர் மன்னன்
தண் தாமரை சூழ் தடத்தின் பிரித்தார்கள் யாரே
ஒண் தார் இளங்கோ என்று உழையவர் கூற வல்லே
கொண்டு ஈங்கு வம்-மின் கொலை வேலவன் தன்னை என்றான்
#2865
படு கண் முழவும் பசும்பொன் மணி யாழும் ஏங்க
இடுகும் நுசுப்பினவர் ஆட இருந்த நம்பி
அடிகட்கு அடிகள் அருள் இற்று என்று இறைஞ்ச வல்லே
கடி விம்மு தாரான் கழல் கையின் தொழுது சேர்ந்தான்
#2866
அணி சேர் இட கை விரலால் வல தோள்
மணி சேர் வளை வாய்வதின் வைத்து வலத்து
அணி மோதிரம் சூழ் விரல் வாய் புதையா
பணியா முடியால் பணிந்தான் இளையோன்
#2867
கிளை பிரிவு அரும் சிறை இரண்டும் கேட்டியேல்
விளைக்கிய வித்து அனாய் இரு மற்று ஈங்கு என
திளைக்கும் மா மணி குழை சுடர செப்பினான்
வளை கையார் கவரி கொண்டு எறிய மன்னனே
#2868
அறம் பெரிய கூறின் அலங்கல் அணி வேலோய்
மறம் புரி கொள் நெஞ்சம் வழியா புகுந்து ஈண்டி
செறும் பெரிய தீ வினைகள் சென்று கடிது ஓடி
உறும் பெரிய துன்பம் உயிர் கொலையும் வேண்டா
#2869
மெய் உரை விளங்கும் மணி மேல் உலக கோபுரங்கள்
ஐயம் இலை நின்ற புகழ் வையகத்து மன்னும்
மையல் விளை மா நரக கோபுரங்கள் கண்டீர்
பொய் உரையும் வேண்டா புறத்து இடு-மின் என்றான்
#2870
முளரி முகம் நாக முளை எயிறு உழுது கீற
அளவில் துயர் செய்வர் இவண் மன்னர் அதனாலும்
விளைவு அரிய மா துயரம் வீழ் கதியுள் உய்க்கும்
களவு கடன் ஆக கடிந்திடுதல் சூதே
#2871
மடத்தகைய நல்லார் மனம் கரிய மாற்றார்
பிடர்த்தலை ஒள் வாள் போல் பிறர் மனைகள் சேரின்
எடுப்ப அரிய துன்பத்து இடை படுவர் இன்னா
நடுக்கு உடைய காமம் விடுத்திடுதல் நன்றே
#2872
தெருளின் பொருள் வான் உலகம் ஏறுதற்கு செம்பொன்
இருளில் படு கால் புகழ் வித்து இல்லை எனின் எல்லா
அருளும் நக வையம் நக ஐம்பொறியும் நைய
பொருளும் நக ஈட்டும் பொருள் யாதும் பொருள் அன்றே
#2873
பொய்யொடு மிடைந்த பொருள் ஆசை உருள் ஆயம்
மை படும் வினை துகள் வழக்கு நெறி மாயம்
செய்த பொருள் பெய்த கலன் செம்மை சுடு செம் தீ
கை தவம் நுனித்த கவறு ஆடல் ஒழிக என்றான்
#2874
காமம் உடையார் கறுவொடு ஆர்வம் உடையாரும்
தாமமொடு சாந்து புனைவார் பசியின் உண்பார்
ஏமம் உடையார்கள் இவர் அல்லர் இவை இல்லா
வாமன் அடி அல்ல பிற வந்தியன்-மின் என்றான்
#2875
பூவை கிளி தோகை புணர் அன்னமொடு பன் மா
யாவை அவை தம் கிளையின் நீங்கி அழ வாங்கி
காவல் செய்து வைத்தவர்கள் தம் கிளையின் நீங்கி
போவர் புகழ் நம்பி இது பொற்பு இலது கண்டாய்
#2876
அல்லி தாள் அற்ற-போதும் அறாத நூல்-அதனை போல
தொல்லை தம் உடம்பு நீங்க தீவினை தொடர்ந்து நீங்கா
புல்லி கொண்டு உயிரை சூழ்ந்து புக்குழி புக்கு பின்னின்று
எல்லையில் துன்ப வெம் தீ சுட்டு எரித்திடுங்கள் அன்றே
#2877
அறவிய மனத்தர் ஆகி ஆருயிர்க்கு அருளை செய்யின்
பறவையும் நிழலும் போல பழவினை உயிரோடு ஆடி
மறவி ஒன்றானும் இன்றி மனத்ததே சுரக்கும் பால
கறவையின் கறக்கும் தம்மால் காமுறப்பட்ட எல்லாம்
#2878
நெடு மணி யூபத்து இட்ட தவழ் நடை யாமை நீள் நீர்
தொடு மணி குவளை பட்டம் துணையொடு நினைப்பதே போல்
கடு மணி கயல் கண் நல்லார் காமமும் பொருளும் சிந்தித்து
அடு மணி ஆவி நீப்பார் அறிவினால் சிறிய நீரார்
#2879
வீறு அழி வினை செய் காலன் வைர வாள் வலையில் பட்டால்
சாறு அழி குவளை மாலையவரையும் தனமும் நீக்கி
ஆறு இழி வரையின் தோன்றும் அறம் நனி நினைப்பர் செம்பொன்
ஏறு எழில் நெறியின் ஏறி இரு விசும்பு ஆளும் நீரார்
#2880
துன்னி மற்று அறத்தை கேட்டே துகில் நெருப்பு உற்றதே போல்
மின்னு தார் மார்பன் மெய் வெந்து ஆலியின் உருகி பெண்-பால்
அன்ன பார்ப்பு அன்று கொண்ட தடத்து-இடை விடுவித்து இட்டான்
பின்னை தன் கிளைகள் கூட்டம் பெருந்தகை வித்தினானே
#2881
மெய்ப்படு முது புண் தீர்ப்பான் மேவிய முயற்சி போல
ஒப்பு உடை காமம் தன்னை உவர்ப்பினோடு ஒழித்து பாவம்
இப்படித்து இது என்று அஞ்சி பிறவி நோய் வெருவினானே
மைப்படு மழை கண் நல்லார் வாய் கொண்ட அமுதம் ஒப்பான்
#2882
ஆளியால் பாயப்பட்ட அடு களி யானை போல
வாளி வில் தட கை மைந்தன் வாய்விட்டு புலம்பி காம
நாளினும் நஞ்சு துய்த்தேன் நச்சு அறை ஆக நன் பொன்
தோளியர் துறந்து தூய்தா தவம் செய்வல் அடிகள் என்றான்
#2883
சிறுவன் வாய்மொழியை கேட்டே தேர் மன்னன்-தானும் சொன்னான்
உறு களிற்று உழவ மற்று உன் ஒளி முடி தாயம் எய்தி
அறை கடல் வேலி காத்து உன் அலங்கல் வேல் தாயம் எல்லாம்
பெறு தகு புதல்வற்கு ஈந்து பின்னை நீ துறத்தி என்றான்
#2884
கொலை சிறை உய்ந்து போகும் ஒருவனை குறுக ஓடி
அலைத்தனர் கொண்டு பற்றி அரும் சிறை அழுத்துகின்றார்
தொலைப்பரும் சுற்றத்தாரோ பகைவரோ அடிகள் என்ன
விலை பெரு மணியை முந்நீர் நடு கடல் வீழ்த்தது ஒத்தான்
#2885
காதலம் அல்லம் மேல் நாள் கழிந்த நம் பிறவி தம்முள்
ஏதிலம் யாங்கள் எல்லாம் இனி கொளும் உடம்பினானும்
ஆதலால் சுற்றம் இல்லை அது பட்டவாறு என்று அம் பூம்
தாது அலர் மார்பன் அற்பு தளை அற பரிந்திட்டானே
#2886
நல் பொறி குயிற்றி வல்லான் செய்தது ஓர் நன் பொன் பாவை
பொன் பொறி கழல எல்லா பொறிகளும் கழல்வதே போல்
சொல் பொறி சோர எல்லா பொறிகளும் சோர்ந்து நம்பன்
இல் பொறி இன்பம் நீக்கி இராயிரர் சூழ சென்றான்
#2887
தணக்கு இற பறித்த போதும் தான் அளை விடுத்தல் செல்லா
நிணம் புடை உடும்பு அனாரை யாதினால் நீக்கல் ஆகும்
மணம் புடை மாலை மார்பன் ஒரு சொலே ஏது ஆக
கணை கவின் அழித்த கண்ணார் துறந்து போய் கடவுள் ஆனான்
#2888
தூமம் ஆர்ந்து அணங்கு நாறும் சுரும்பு சூழ் தாரினானும்
தாமம் ஆர் ஒலியல் ஐம்பால் சயமதி திருவும் ஆர்ந்த
காமம் மாசு உண்ட காதல் கதிர் வளை தோளினாரும்
நாமம் நால் கதியும் அஞ்சி நல் தவத்து உச்சி கொண்டார்
#2889
ஆசாரம் நாண தவம் செய்து அலர் கற்பக தார்
சாசாரன் என்னும் தகைசால் ஒளி தேவர் கோவாய்
மாசாரம் ஆய மணி வான் உலகு ஆண்டு வந்தாய்
தூசு ஆர்ந்த அல்குல் துளும்பும் நலத்தாரொடு என்றான்
#2890
மின் ஆர் சிலம்பின் சிலம்பும் குரல் அன்னம் மேல் நாள்
மன்னா பிரித்தாய் பிரிந்தாய் சிறைவைத்ததனால்
பொன் ஆர மார்ப சிறைப்பட்டனை போலும் என்றான்
இன்னா பிறவி பிணிக்கு இன் மருந்து ஆய சொல்லான்
#2891
மஞ்சு இவர் மணி வரை அனைய மாதவன்
வஞ்சம் இல் அறவுரை பொதிந்த வாய்மொழி
அஞ்சினன் இருந்துழி அம்பு வீழ்ந்து என
நஞ்சு உமிழ் வேலினான் நடுங்க வீழ்ந்ததே
#2892
வார் அணி மணி துடி மருட்டும் நுண் இடை
கார் அணி மயில் அனார் சூழ காவலன்
ஏர் அணி மணி முடி இறைஞ்சி ஏத்தினான்
சீர் அணி மாதவர் செழும் பொன் பாதமே
#2893
நல திரு மடமகள் நயந்த தாமரை
நிலத்து இருந்து இரு சுடர் நிமிர்ந்து செல்வ போல்
உலப்பரும் தவத்தினால் ஓங்கு சாரணர்
செல திரு விசும்பு ஒளி சிறந்தது என்பவே
#2894
சாரணர் போய பின் சாந்தம் ஏந்திய
வார் அணி வன முலை வஞ்சி கொம்பு அனார்
போர் அணி புலவு வேல் கண்கள் பூத்தன
நீர் அணி குவளை நீர் நிறைந்த போன்றவே
#2895
பொன் வரை நிலா கதிர் பொழிந்து போர்த்த போல்
தென் வரை சந்தனம் திளைக்கும் மார்பினான்
மின் இவர் நுசுப்பினார் மெலிய மெல்லவே
இன் உரை கொடான் கொடி கோயில் எய்தினான்
#2896
அம் சுரை பொழிந்த பால் அன்ன மென் மயிர்
பஞ்சி மெல் அணையின் மேல் பரவை அல்குலார்
மஞ்சு இவர் மதி முகம் மழுங்க வைகினார்
நஞ்சு உயிர்த்து அணி நலம் கரிந்து நையவே
#2897
வெள் எயிற்று அரவு மேய்ந்த மிச்சிலின் மெலிந்து மேக
புள்-வயின் பிறந்த புள் போல் ஒன்று அலாது உரைத்தல் தேற்றார்
கள் வயிற்று அலர்ந்த கோதை கலாப வில் உமிழும் அல்குல்
ஒள் எயிற்றவர்கள் பொன் பூத்து ஒளி மணி உருவம் நீத்தார்
#2898
கிளி சொலின் இனிய சொல்லார் கிண்கிணி சிலம்பொடு ஏங்க
குளித்து நீர் இரண்டு கோல கொழும் கயல் பிறழ்பவே போல்
களித்து நீர் சுமந்து வாள் கண் கலாஅய் பிறழ்ந்து அலமந்து ஆட
அளித்த தார் அலங்கல் ஆழி அவன் துறவு உரைத்தும் அன்றே
#2899
புனை மருப்பு அழுந்த குத்தி புலியொடு பொருது வென்ற
கனை குரல் உருமு சீற்ற கதழ் விடை உரிவை போர்த்த
துனை குரல் முரச தானை தோன்றலை தம்-மின் என்றான்
நனை மலர் அலங்கல் கண்ணி நந்தனும் தொழுது சேர்ந்தான்
#2900
கொடி அணி அலங்கல் மார்பில் குங்கும குன்றம் அன்னான்
அடி பணிந்து அருளு வாழி அரசருள் அரச என்ன
படு சின வெகுளி நாக பை தலை பனித்து மாழ்க
இடி உமிழ் முரசம் நாண இன்னணம் இயம்பினானே
 
மேல்
 
#2901
ஊன் உடை கோட்டு நாகு ஆன் சுரி முக ஏற்றை ஊர்ந்து
தேன் உடை குவளை செம் கேழ் நாகு இளம் தேரை புல்லி
கான் உடை கழனி செந்நெல் கதிர் அணை துஞ்சும் நாடு
வேல் மிடை தானை தாயம் வீற்று இருந்து ஆள்மோ என்றான்
#2902
கரும்பு அலால் காடு ஒன்று இல்லா கழனி சூழ் பழன நாடும்
சுரும்பு உலாம் கண்ணி விண்ணோர் துறக்கமும் வீடும் வேண்டேன்
அரும்பு உலாய் அலர்ந்த அம் மென் தாமரை அனைய பாதம்
விரும்பி யான் வழிபட்டு அன்றோ வாழ்வது என் வாழ்க்கை என்றான்
#2903
குன்று என மருண்டு கோல மணி வண்டும் குழாம் கொள் தேனும்
சென்று மொய்த்து இமிரும் யானை சீவகற்கு இளைய நம்பி
மன்றல் வீற்று இருந்து மின்னும் மணி குவடு அனைய தோளான்
ஒன்றும் மற்று அரசு வேண்டான் உவப்பதே வேண்டினானே
#2904
பொலிவு உடைத்து ஆகுமேனும் பொள்ளல் இ உடம்பு என்று எண்ணி
வலி உடை மருப்பின் அல்லால் வாரணம் தட கை வையாது
ஒலி உடை உருமு போன்று நிலப்படாது ஊன்றின் வை வேல்
கலி கடிந்து உலகம் காக்கும் காளையை கொணர்-மின் என்றான்
#2905
கழு மணி ஆர மார்பின் காவலன் மக்கள் காய் பொன்
எழு வளர்ந்து அனைய திண் தோள் இளையவர் தம்முள் மூத்த
தழு மலர் கொம்பு போலும் தத்தை நாள் பயந்த நம்பி
விழு மணி பூணினான் வீற்று இரீஇ விதியின் சொன்னான்
#2906
பால் வளை பரந்து மேயும் படு கடல் வளாகம் எல்லாம்
கோல் வளையாமல் காத்து உன் குடை_நிழல் துஞ்ச நோக்கி
நூல் விளைந்து அனைய நுண் சொல் புலவரோடு அறத்தை ஓம்பின்
மேல் விளையாத இன்பம் வேந்த மற்று இல்லை கண்டாய்
#2907
வாய்ப்படும் கேடும் இன்றாம் வரிசையின் அரிந்து நாளும்
காய்த்த நெல் கவளம் தீற்றின் களிறு தான் கழனி மேயின்
வாய்ப்படல் இன்றி பொன்றும் வல்லன் ஆய் மன்னன் கொள்ளின்
நீத்த நீர் ஞாலம் எல்லாம் நிதி நின்று சுரக்கும் அன்றே
#2908
நெல் உயிர் மாந்தர்க்கு எல்லாம் நீர் உயிர் இரண்டும் செப்பின்
புல் உயிர் புகைந்து பொங்கு முழங்கு அழல் இலங்கு வாள் கை
மல்லல் அம் களிற்று மாலை வெண்குடை மன்னர் கண்டாய்
நல் உயிர் ஞாலம் தன்னுள் நாம வேல் நம்பி என்றான்
#2909
ஆர் வலம் சூழ்ந்த ஆழி அலை மணி தேரை வல்லான்
நேர் நிலத்து ஊரும் ஆயின் நீடு பல் காலம் செல்லும்
ஊர் நிலம் அறிதல் தேற்றாது ஊருமேல் முறிந்து வீழும்
தார் நில மார்ப வேந்தர் தன்மையும் அன்னது ஆமே
#2910
காய்ந்து எறி கடும் கல் தன்னை கவுள் கொண்ட களிறு போல
ஆய்ந்த அறிவுடையர் ஆகி அருளொடு வெகுளி மாற்றி
வேந்தர் தாம் விழைப எல்லாம் வெளிப்படார் மறைத்தல் கண்டாய்
நாந்தக உழவர் ஏறே நன் பொருள் ஆவது என்றான்
#2911
குடின் பழியாமை ஓம்பின் கொற்ற வேல் மன்னர் மற்று உன்
அடி வழி படுவர் கண்டாய் அரும் புகழ் கெடுதல் அஞ்சி
நொடியல் ஓர் எழுத்தும் பொய்யை நுண் கலை நீத்தம் நீந்தி
கொடி எடுத்தவர்க்கு நல்கு கொழித்து உணர் குமர என்றான்
#2912
சேல் நடந்தாங்கும் ஓடி சென்று உலாய் பிறழும் வாள் கண்
மான் மட நோக்கின் மாதர் மாலை நாள் பயந்த மைந்தன்
கால் நடந்து அனைய மான் தேர் காளையை காவல் மன்னன்
தான் உடன் அணிந்து தன் போல் இளவரசு ஆக்கினானே
#2913
கூர் எயிறு அணிந்த கொவ்வை கொழும் கனி கோல செ வாய்
ஏர் அணி மயில் அம் சாயல் இலக்கணை ஈன்ற சிங்கம்
சீர் உடை செம்பொன் கண்ணி சிறுவனை செம்பொன் மாரி
பேர் அறைந்து உலகம் உண்ண பெரு நம்பி ஆக வென்றான்
#2914
தன் கழல் தொழாத மன்னர் தாம் சுமந்து ஏத்தி நின்ற
பொன் திகழ் உருவில் தம்பி புதல்வனை தந்து போற்றி
மின் திகழ் முடியும் சூட்டி வீற்று இரீஇ வேந்து செய்தான்
குன்று இனம் குழீஇய போலும் குஞ்சர குழாத்தினானே
#2915
நிலம் செதிள் எடுக்கும் மான் தேர் நித்திலம் விளைந்து முற்றி
நலம் செய்த வைர கோட்ட நாறும் மும்மதத்த நாகம்
குலம் செய்த குமரர்க்கு எல்லாம் கொடுத்தனன் நிதியும் நாடும்
உலம் செய்த வைர குன்றம் ஓர் இரண்டு அனைய தோளான்
#2916
நூற்கு இடம் கொடுத்த கேள்வி நுண் செவி மண் கொள் ஞாட்பில்
வேற்கு இடம் கொடுத்த மார்பின் வில் வலான் தோழர் மக்கள்
நால் கடல் வளாகம் காக்கும் நம்பி-தன் கண்கள் ஆக
பால்கடல் கேள்வி யாரை பழிப்பு அற நாட்டினானே
#2917
காவலர் அகலம் என்னும் கழனியுள் உழுது காமர்
மா வலம் விளைத்த கோட்டு மழ களிற்று அரசன் அன்னான்
பூ அலர் கொடி அனாரை விடுக்கிய கோயில் புக்கான்
தூ அலர் ஒலியலார் தம் வல கண்கள் துடித்த அன்றே
#2918
செம்பொனால் செறிய வேய்ந்து திரு மணி முகடு கொண்ட
வெம்பு நீள் சுடரும் சென்னி விலங்கிய மாடம் எய்தி
அம் பொனால் தெளிந்த பாவை அனையவர் தம்-மின் என்றான்
பைம்பொனால் வளர்க்கப்பட்ட பனை திரண்டு அனைய தோளான்
#2919
தின் பளித மாலை திரள் தாமம் திகழ் தீம் பூ
நன்கு ஒளி செய் தாமம் நறும் பூ நவின்ற தாமம்
பொன் தெளித்த தாமம் புரி முத்தம் மிளர் தாமம்
மின் தெளித்த மின்னு மணி வீழ்ந்த திரள் தாமம்
#2920
ஈன்ற மயில் போல் நெடிய தாமத்து-இடை எங்கும்
மான்று மணம் விம்மு புகை மல்கி நுரையே போல்
தோன்றும் மணி கால் அமளி தூ அணையின் மேலார்
மூன்றுலகம் விற்கும் முலை முற்று_இழையினாரே
#2921
இன்னது அருள் என்று இளையர் ஏத்த ஞிமிறு ஆர்ப்ப
மின்னின் இடை நோவ மிளிர் மேகலைகள் மின்ன
பொன் அரிய கிண்கிணியும் பூம் சிலம்பும் ஏங்க
மன்னன் அடி சேர்ந்து இறைஞ்சி வாழி என நின்றார்
#2922
கலவ மயில் கால் குவித்த போலும் கமழ் ஐம்பால்
நிலவும் மணி மேகலை நிலா உமிழும் பைம் பூண்
இலவ மலர் வாயின் அணி கூர் எயிற்றினீரே
உலவும் மனம் வைத்து உறுதி கேண்-மின் இது என்றான்
#2923
வாய் அழல் உயிர்க்கும் ஆழி மன்னவன் குறிப்பு நோக்கி
வேய் அழ திரண்ட மென் தோள் வெம் முலை பரவை அல்குல்
தோய் பிழி அலங்கலார்-தம் தொல் நலம் தொலைந்து வாடி
காய் அழல் கொடியை சேர்ந்த கற்பக மாலை ஒத்தார்
#2924
கரும் கடல் பிறப்பின் அல்லால் வலம்புரி காணும்-காலை
பெரும் குளத்து என்றும் தோன்றா பிறை நுதல் பிணை அனீரே
அரும் கொடை தானம் ஆய்ந்த அரும் தவம் தெரியின் மண் மேல்
மருங்கு உடையவர்கட்கு அல்லால் மற்றையர்க்கு ஆவது உண்டே
#2925
விட்டு நீர் வினவி கேள்-மின் விழுத்தகை அவர்கள் அல்லால்
பட்டது பகுத்து உண்பார் இ பார் மிசை இல்லை கண்டீர்
அட்டு நீர் அருவி குன்றத்து அல்லது வைரம் தோன்றா
குட்ட நீர் குளத்தின் அல்லால் குப்பை மேல் குவளை பூவா
#2926
நரம்பு ஒலி பரந்த கோயில் நல் நுதல் மகளிர் தூவும்
பெரும் பலி சோற்றின் ஈதல் பெரிது அரிது ஆகுமேனும்
சுரும்பு ஒலி கோதையார் தம் மனை-வயின் தூண்-தொறு ஊட்டும்
அரும் பலி அனைத்தும் ஈயின் அது பொருள் குன்று கண்டீர்
#2927
அற்றவர் வருத்தம் நீக்கி ஆருயிர் கொண்டு நிற்கும்
துற்ற அவிழ் ஈதல் செம்பொன் துறக்கத்திற்கு ஏணி ஆகும்
முற்று உயிர் ஓம்பி தீம் தேன் ஊனொடு துறப்பின் யார்க்கும்
மற்று உரை இல்லை மண்ணும் விண்ணும் நும் அடிய அன்றே
#2928
மாலை பந்தும் மாலையும் ஏந்தி மது வார் பூம்
சோலை மஞ்ஞை சூழ் வளையார் தோள் விளையாடி
ஞாலம் காக்கும் மன்னவர் ஆவார் நறவு உண்ணா
சீலம் காக்கும் சிறு உபகாரம் உடையாரே
#2929
மாசி திங்கள் மாசின சின்ன துணி முள்ளின்
ஊசி துன்னம் மூசிய ஆடை உடை ஆக
பேசி பாவாய் பிச்சை என கை அகல் ஏந்தி
கூசிக்கூசி நிற்பர் கொடுத்து உண்டு அறியாதார்
#2930
காட்டு அகத்து ஒரு மகன் துரக்கும் மா கலை
ஓட்டு உடைத்தாம் எனின் உய்யும் நங்களை
ஆட்டியிட்டு ஆருயிர் அளைந்து கூற்றுவன்
ஈட்டிய விளை மது போல உண்ணுமே
#2931
புள்ளுவர் கையினும் உய்யும் புள் உள
கள் அவிழ் கோதையீர் காண்-மின் நல் வினை
ஒள்ளியான் ஒரு மகன் உரைத்தது என்னன்-மின்
தெள்ளியீர் அறத்திறம் தெரிந்து கொள்-மினே
#2932
மாய்தலும் பிறத்தலும் வளர்ந்து வீங்கலும்
தேய்தலும் உடைமையை திங்கள் செப்புமால்
வாய் புக பெய்யினும் வழுக்கி நல்லறம்
காய்வது கலதிமை-பாலது ஆகுமே
#2933
புள்ளி நீர் வீழ்ந்தது பெருகி புன் புலால்
உள் வளர்ந்து ஒரு வழி தோன்றி பேர் அறம்
உள்குமேல் முழு புலால் குரம்பை உய்ந்து போய்
வெள்ள நீர் இன்பமே விளைக்கும் என்பவே
#2934
பாற்றுளி பவளநீர் பெருகி ஊன் திரண்டு
ஊற்று நீர் குறும் புழை உய்ந்து போந்த பின்
சேற்று நீர் குழியுளே அழுந்தி செல்கதிக்கு
ஆற்று உணா பெறாது அழுது அலறி வீழுமே
#2935
திருந்திய நல் அற செம்பொன் கற்பகம்
பொருந்திய பொருளொடு போகம் பூத்தலால்
வருந்தினும் அறத்திறம் மறத்தல் ஓம்பு-மின்
கரும்பு என திரண்ட தோள் கால வேல் கணீர்
#2936
மந்திர மருந்து இவை இல்லையாய் விடின்
ஐம் தலை அரவினை யாவர் தீண்டுவார்
சுந்தர சுரும்பு சூழ் மாலை இல்லையேல்
மைந்தரும் மகளிரை மருங்கு சேர்கிலார்
#2937
பொன் துலாம் பொன் அனீர் தருதும் பாகு நீர்
தின்று அலால் சிறுவரை யானும் சொல் சில
இன்று எலாம் எம் மருங்கு இருந்து பேசினால்
வென்று உலாம் வேல் கணீர் விழுத்தக்கீர்களே
#2938
மெய் படு சாந்தும் பூவும் மிக நனி கமழுமேனும்
கைப்படு சாந்தும் பூவும் கொண்டு அலால் கலக்கல் ஆகா
ஐ படு பித்து நெய்த்தோர் அசும்பு சோர் அழுகல் புன் தோல்
பொய் பட உரைத்தது உண்டோ பொன் அனீர் நம்முள் நாமால்
#2939
அனிச்சத்து அம் போது போல தொடுப்பவே குழைந்து மாழ்கி
இனி செத்தாம் பிறந்த-போழ்தே என்று நாம் இதனை எண்ணி
தனி சித்தம் வைத்தல் தேற்றாம் தளர்ந்து கண் பரப்பி நோக்கி
பனித்தும் என்று உற்ற-போழ்தே பழுது இலா அறிவின் என் ஆம்
#2940
நீல் நிறம் கொண்ட ஐம்பால் நிழல் மணி உருவம் நீங்கி
பால் நிறம் கொண்டு வெய்ய படா முலை பையின் தூங்கி
வேல் நிற மழை கண் தாமும் இமை குறைந்து அழுகி மேனி
தான் நிறம் கரக்கும் காலம் தையலீர் மெய்யது அன்றே
#2941
குஞ்சரம் அயா உயிர்த்து அனைய குய் கமழ்
அம் சுவை அடிசிலை அமர்ந்து உண்டார்கள் தாம்
இஞ்சி மாநகர் இடும் பிச்சை ஏற்றலால்
அஞ்சினேன் துறப்பல் யான் ஆர்வம் இல்லையே
#2942
ஒருவர் தம் வலி கெடும் உடன்று பொங்கி மேல்
இருவர் மற்று இயைந்து எழுந்து இருப்பின் என்ப போல்
உருவ நுண் நுசுப்பு இற இருந்த ஒண் மணி
பரிய கண் படா முலை பைம்பொன் கொம்பு அனீர்
#2943
காதலம் கழிந்த நாள் இதனின் இப்புறம்
ஏதிலம் என்ற சொல் செவி சென்று எய்தலும்
மாதரார் மழை மலர் தடம் கண் மல்கு நீர்
போது உலாம் மார்பின் வாய் பொழிந்து வீழ்ந்தவே
#2944
செருக்கி நிணம் தின்று சிவந்து மன்னர் உயிர் செற்ற
நெருப்பு தலை நெடு வேல் கண்ணார் கண்ணீர் நிழல் மணி பூண்
பரப்பின்-இடை பாய்ந்து குளம் ஆய் பால் ஆர் படா முலையை
வருத்தி மணி நெடும் கோட்டு அருவி போல வீழ்ந்தனவே
#2945
அழல் ஏந்து வெம் கடும் சொல் உரும் ஏறு உண்டு ஆங்கு அலர் சிந்தி
நிழல் ஏந்து பூம் கொடிகள் நிலம் சேர்ந்து ஆங்கு நிலம் சேர்ந்து
கழல் ஏந்து சேவடி கீழ் கண்ணீர் வெள்ளம் கலம் நிரப்ப
குழல் ஏங்குமாறு ஏங்கி அழுதார் கோதை மடவாரே
#2946
குலிக அம் சேற்றுள் நாறி குங்கும நீருள் ஓங்கி
பொலிக என வண்டு பாட பூத்த தாமரைகள் போலும்
ஒலி கழல் அடிகள் நும் கீழ் பிழைத்தது என் உரை-மின் என்ன
புலி நிழல் பட்ட மான் போல் போகு உயிர் ஆகி நின்றார்
#2947
அரும் தவிசு ஆகி எம்மை சுமந்து அயா உயிர்த்த ஆண்மை
பெரும் தகு குறங்குகாள் நீர் பெண் உயிர் அளியதாமே
வருந்துமால் என்று நோக்கீர் வாடுமால் ஆவி என்னீர்
விருந்தினர் போல நின்றீர் வெற்று உடல் காண்-மின் என்பார்
#2948
கோதையும் துகிலும் ஏந்தி குங்குமம் எழுதி கொய் பூம்
தாது கொண்டு அளகத்து அப்பி தட முலை வருடி சேர்ந்து
காதல் கொண்டு இருந்த காமர் கை விரல் அளிய நீரும்
ஏதிலர் ஆகி கோமான் எண்ணமே எண்ணினீரே
#2949
பஞ்சி கொண்டு எழுதி ஆர்ந்த சீறடி பனித்தல் அஞ்சி
குஞ்சி மேல் ஏற்ற கோமான் கொப்புளித்திட்ட எம்மை
வஞ்சித்தீர் மணி செய் தோள்காள் வாங்குபு தழுவி கொள்ளீர்
நெஞ்சம் நீர் வலியீர் ஆகி நிற்பீரோ நீரும் என்பார்
#2950
முட்டு வட்டு அனைய கோல முத்து உலாய் கிடந்து மின்ன
மட்டு விட்டு அலர்ந்த கோதை மதுவொடு மயங்கி நாளும்
ஒட்டி இட்டு உறைய எங்கட்கு உயர் அணை ஆய மார்ப
நட்பு விட்டு ஒழியும்-ஆயின் நன்மை யார் கண்ணது அம்மா
 
 
#2951
மா கவின் வளர தீண்டி மணி நகை நக்கு நாளும்
பூ கவின் ஆர்ந்த பைம் தார் புனை மது தேனொடு ஏந்தி
தாக்கி எம் முலைகள் தம்மை நெருக்கினாய் தரணி மன்னின்
நீக்கி நீ எம்மை நோக்காய் நீத்தியோ நீயும் என்பார்
#2952
அன்னமே தோகை நல் யாழ் அமுதமே ஆய்ந்த தீம் தேன்
இன்னரே நங்கைமார் என்று ஏத்திய பவள செம் நா
என்னை நீ கண்டது எம்மை இரண்டு நா ஆயினாயே
மன்னன் போல் ஈரம் இன்றி வலித்தனை வாழி என்பார்
#2953
பூணினால் நெருங்க நொந்து பொதிர்த்தன வெம்பி என்று
நாணினால் வருத்தம் தீர்ப்பான் நல் முலை கண்கள் தம்மை
பேணி நீர் எழுதி ஓம்பி பேர் இன்பம் கொண்டு தந்தீர்
காண்-மினோ இன்று எம் வண்ணம் கண்ணிலீர் கண்கள் என்பார்
#2954
சென்னி மேல் மிதித்த அம் செம் சீறடி திருவில் வீச
மின்னி வாள் ஆரம் சிந்த வெறு நிலத்து உறைந்து நீ எம்
இன் நகை முறுவல் பார்த்தாய் இன்று எமது ஆவி பார்த்தாய்
மன்னிய மாலை வண்டார் மணி முடி வாழி என்பார்
#2955
வீங்கு பால்கடலும் நஞ்சாய் விளைந்ததால் விரிந்த வெய்யோன்
பாங்கு இலா இருளை ஈன்று பார் மறைத்து இட்டதாலோ
தீம் கதிர் திங்கள் செம் தீ சொரிந்ததால் திசைகள் எல்லாம்
தாங்குமாறு என்னை ஆவி தரிக்கிலேம் தேவீர்காளோ
#2956
விண்ணோர் மடமகள்-கொல் விஞ்சைமகளே-கொல்
கண்ணார் கழி வனப்பில் காந்தருவதத்தை என்று
எண் ஆய வான் நெடும் கண் மெய் கொள்ள ஏமுற்று
பண்ணால் பயின்றீர் இனி என் பயில்வீரே
#2957
கொல் வேல் நெடும் கண் குணமாலை குஞ்சரத்தால்
அல்லல் நோய் உற்றாளுக்கு அன்று களிறு அடர்த்து
புல்லி புணர் முலையின் பூம் குவட்டின் மேல் உறைந்தாய்
எல்லே மற்று எம் பெருமாற்கு இன்று இவளும் மின்னாளோ
#2958
தூம்பு உடைய வெள் எயிற்று துத்தி அழல் நாக
பாம்பு உடைய நோக்கி பதுமை பவள வாய்
தேம்பு உடைய இன் அமுதா சேர்ந்தாய்க்கு இனி அதுவே
ஆம்புடைய நஞ்சு அடங்கிற்று இன்று ஊறிற்று ஆகாதே
#2959
தாழ்ந்து உலவி மென் முலை மேல் தண் ஆரம் வில் விலங்க
போழ்ந்து அகன்ற கண்ணினால் ஏ பெற்று போகலாய்
தாழ்ந்து அமரர் இன் அமிர்தம் தக்க நாட்டு ஆகாதே
வீழ்ந்தது என வீழ்ந்தாய் நீ இன்று அதுவும் விட்டாயோ
#2960
கண்ணோ கயலோ கழுநீரோ காவியோ
பெண்ணோ அமுதோ பிணையோ என பிதற்றி
துண்ணென் சிலை தொழிலும் காட்டி முன் இன்புற்றீர்
புண் மேல் கிழி போல் துறத்தல் பொருள் ஆமோ
#2961
பொன் நகர வீதி புகுந்தீர் பொழி முகிலின்
மின்னின் இடை நுடங்க நின்றாள் தன் வேல் நெடும் கண்
மன்னன் நகர் எல்லாம் போர்ப்ப வலைப்பட்டீர்க்கு
இன்னே ஒளி இழந்த இன்னா இடுகினவோ
#2962
செம் கச்சு இள முலையார் திண் கறை ஊர் பல்லினார்
மங்கையர்கள் காப்ப மகிழ்ந்தாளை நீ மகிழ்ந்து
பங்கயமே போல்வாளை பார்ப்பானாய் பண் அணைத்து
தங்கினாய் கோவே துறத்த தகவு ஆமோ
#2963
புல்லார் உயிர் செகுத்த பொன் அம் திணி தோளாய்
மல் ஆர் அகன் மார்ப மட்டு ஏந்தி வாய் மடுத்திட்டு
எல்லாரும் காண இலக்கணையோடு ஆடினாய்
அல்லாந்து அவள் நடுங்க அன்பின் அகல்வாயோ
#2964
கல்லோ மரனும் இரங்க கலுழ்ந்து உருகி
எல்லா திசை-தோறும் ஈண்டி இன மயில் போல்
சொல்லா துயர்வார் தொழுவார் அழுவார் ஆய்
அல்லாந்து அகன் கோயில் ஆழ் கடல் போல் ஆயிற்றே
#2965
பூ பரிவார் பொன் செய் கலம் பரிவார் பொன் வளையை
நீப்பிர் என புடைப்பார் நீள் தாமம் சிந்துவார்
ஏ பெற்ற மான் பிணை போல் ஏங்குவார் இன் உயிரை
காப்பரேல் காவலனார் காவாரோ இன்று என்பார்
#2966
கழுநீரும் தாமரையும் கண்டனவே போலும்
முழு நீர் வேல் கண்ணும் முகமும் உலறி
செழு நீர் மணி கொடிகள் காழகம் சேர் கொம்பாய்
அழு நீர வாய் அலறி அல்லாப்ப போன்றாரே
#2967
பண்ணார் பணை முழவம் பாடு அவிந்து பல் மணி யாழ் மழலை நீங்கி
புண்ணார் புனை குழலும் ஏங்கா புனை பாண்டில் இரங்கா வான் பூம்
கண்ணார் ஒலி கவுள கிண்கிணியும் அம் சிலம்பும் கலையும் ஆரா
மண்ணார் வலம்புரியும் வாய் மடங்கி கோன் கோயில் மடிந்தது அன்றே
#2968
அணியார் மணி அரக்கு வட்டு அழுத்தி வைத்து அனைய செம் கண் மா தாள்
பிணியார் பெரும் துருத்தி அன்ன பெரும் கவுள பிறை ஏர் கோட்ட
பணியார் கமழ் கடாத்து அண்ணல் அரசுவா பண்ணார் பாய்மா
இணையாதும் இல்லாத கண்ணீர் வீழ்த்து உண்ணா நின்று இனைந்ததாமே
#2969
கழித்த கடி பிணையும் கை வளையும் மாலையும் களைந்து முத்தும்
தொழித்த நறும் சாந்தும் சுண்ணமும் பல் மணியும் கலனும் சிந்தி
விழித்து வியன் கோயில் பன் மீன் பரந்து இமைக்கும் பனியார் வானம்
பழித்து பசும்பொன் உலகு குடி போயிற்று ஒத்தது அன்றே
#2970
அழலார் சுரை எயிற்று வெம் சின ஐம் தலை சுமந்த வெகுளி நாகம்
நிழலார் திரு மணியும் தேவர் திரு முடி மேல் நிலவி வீசும்
சுழல் ஆர் பசும்பொன்னும் வேய்ந்து சொரி கதிர் மென் பஞ்சி ஆர்ந்த
கழலான் நகரம் அமுது கடை கடல் போல் கலங்கிற்று அன்றே
#2971
நீர் நிறை குளத்து மாரி சொரிந்து என நறு நெய் துள்ளும்
நேர் நிறை பொரியும் குய்யும் வறைகளும் நிவந்த வாசம்
பார் நிறை அடிசில் பள்ளி தளியொடு சாலை எல்லாம்
ஊர் நிறை உயிர்த்தல் இன்றி உயிர் சென்ற போன்ற அன்றே
#2972
கோள் புலி சுழல் கண் அன்ன கொழும் சுவை கருனை முல்லை
மோட்டு இள முகையின் மொய் கொள் கொக்கு உகிர் நிமிரல் வெண் சோறு
ஊட்டுறு கறி கொள் தேமாங்கனி சுவை தயிரொடு ஏந்தி
வேட்டவர் பெறாது வீதி வெறு நிலம் கிடந்த அன்றே
#2973
மைந்தர் தம் வண் கையால் முன் மணி வள்ளத்து எடுத்த தேறல்
பைம் துகில் மகளிர் மேவார் பாசிழை பசும்பொன் மாலை
சிந்தியே கரந்தார் சொல் போல் மெய்யின் கண் சேர்தல் இன்றாய்
சந்தன சாந்தொடு ஆரம் தாம் கவின் இழந்த அன்றே
#2974
தாழி வாய் மறைக்கும் தண் என் தடம் பெரும் குவளை கண்ணார்
மூழி வாய் முல்லை மாலை முலை முகம் முரிந்து நக்க
யாழின் வாய் முழவம் விம்ம ஆட்டு ஒழிந்து அயர்ந்து தீம் தேன்
ஊழி வாய் கொண்டது ஒக்கும் பாடலும் ஒழிந்தது அன்றே
#2975
அரும் கலம் நிறைந்த அம் பூம் பவழ கால் திகழும் பைம்பொன்
பெரும் கிடுகு என்னும் கோல பேர் இமை பொருந்தி மெல்ல
ஒருங்கு உடன் நகரம் எல்லாம் உறங்குவது ஒத்தது ஒல்லென்
கரும் கடல் கல் என் சும்மை கரந்ததும் ஒத்தது அன்றே
#2976
கலை உலாய் நிமிர்ந்த அல்குல் கடல் விளை அமுதம் அன்னார்
முலை உலாய் நிமிர்ந்த மொய் தார் முழவு முத்து உரிஞ்சி மின்ன
சிலை உலாய் நிமிர்ந்த மார்பன் திருநகர் தெருள்கலாதாய்
நிலை இலா உலகின் தன்மை நீர்மை மீக்கூறிற்று அன்றே
#2977
கூந்தல் அகில் புகையும் வேள்வி கொழும் புகையும்
ஏந்து துகில் புகையும் மாலைக்கு இடும் புகையும்
ஆய்ந்த பொருள் ஒருவர்க்கு ஈயா அதிலோப
மாந்தர் புகழே போல் தோன்றா மறைந்தனவே
#2978
புல் உண் புரவி புலம்பு விடு குரல் போல்
நல்ல வளை போழ் அரவம் நாரை நரல் குரல் போல்
கல்லா இளையர் கலங்கா சிரிப்பு ஒலியும்
கொல் யானை சங்கு ஒலியும் கூடாது ஒழிந்தனவே
#2979
பொற்பு உடைய பூ மாலை சாந்தம் புனை கலன்கள்
கற்பு உடைய மங்கையரின் காவல் அவை இழந்த
நற்பு உடைய தேன் ஆர் நறவு நயம் புல்லார்
சொல் பொருள் போல் வேட்கப்படா சோர்ந்து ஒழிந்தனவே
#2980
தீம் பால் கிளி மறந்து தேவர் அவி மடங்கி
தூம்பு ஆர் நெடும் கைம்மா தீம் கரும்பு துற்றாவாய்
ஆம் பால் உரை மடங்கி யாரும் பிறர்பிறராய்
காம்பு ஆர் நடு இருள் கண் காடே போல் ஆயிற்றே
#2981
நீர் முழங்கு நீல நெடு மேக மால் யானை
தேர் முழங்கு தானை திருமாலின் முன் துறப்பான்
பார் முழங்கு தெண் திரை போல் செல்வம் தம் பாலர்க்கு ஈந்து
ஊர் முழுது நாடும் உரவோன் தாள் சேர்ந்தவே
#2982
கொல் உலை பொங்கு அழல் கிடந்த கூர் இலை
மல்லல் வேல் இரண்டு ஒரு மதியுள் வைத்த போல்
செல்ல நீண்டு அகன்று அகம் சிவந்த கண்ணினார்
அல்லல் உற்று அழுபவர்க்கு அரசன் சொல்லினான்
#2983
நல் தவம் பரவை ஞாலம் நாம் உடன் நிறுப்பின் வையம்
அற்றம் இல் தவத்திற்கு என்றும் ஐயவி அனைத்தும் ஆற்றாது
இற்று என உணர்ந்து நிற்பின் திருமகள் என்றும் நீங்காள்
பற்றோடே நிற்பின் என்றும் திருமகள் பற்றல் செல்லாள்
#2984
உப்பு இலி புழுக்கல் காட்டுள் புலை மகன் உகுப்ப ஏக
கை பலி உண்டியானும் வெள்ளில் மேல் கவிழ நீரும்
மை பொலி கண்ணின் நீரால் மனை அகம் மெழுகி வாழ
இ பொருள் வேண்டுகின்றீர் இதனை நீர் கேண்-மின் என்றான்
#2985
கொல் சின யானை பார்க்கும் கூர் உகிர் தறுகண் ஆளி
இல் எலி பார்த்து நோக்கி இறப்பின் கீழ் இருத்தல் உண்டே
பல் வினை வெள்ளம் நீந்தி பகா இன்பம் பருகின் அல்லால்
நல்வினை விளையுள் என்னும் நஞ்சினுள் குளித்தல் உண்டே
#2986
ஆற்றிய மக்கள் என்னும் அரும் தவம் இலார்கள்-ஆகின்
போற்றிய மணியும் பொன்னும் பின் செலா பொன் அனீரே
வேற்றுவர் என்று நில்லா விழு பொருள் பரவை ஞாலம்
நோற்பவர்க்கு உரிய ஆகும் நோன்-மின் நீரும் என்றான்
#2987
காதல் அம் சேற்றுள் பாய்ந்த மதி எனும் கலங்கல் நீரை
ஊது வண்டு உடுத்த தாரான் உவர்ப்பினின் உரிஞ்சி தேற்ற
மாதரார் நெஞ்சம் தேறி மா தவம் செய்தும் என்றார்
காதலான் காதல் என்னும் நிகளத்தால் நெடும் கணாரே
#2988
தூமம் சால் கோதையீரே தொல் வினை நீத்தம் நீந்தி
நாமம் சால் கதியின் நீங்கி நன் பொன் மேல் உலகின் உச்சி
ஏமம் சால் இன்பம் வேண்டின் என்னொடும் வம்-மின் என்றான்
காமம் சாய்த்து அடர்த்து வென்ற காஞ்சன குன்றம் அன்னான்
#2989
நாடகம் நயந்து காண்பார் நலம் கிளர் கண்கள் சூன்றும்
ஆடக கலத்துள் ஆன் பால் அமிர்தினை நயந்து உண்பாரை
நீடு அகம் வெகுண்டும் கையால் பிடித்து நீறு அட்டி இட்டேம்
கோடகம் அணிந்த கோல முடியினாய் துறத்தும் என்றார்
#2990
சாந்தம் கிழிய முயங்கி தட மலரால்
கூந்தல் வழிபட்ட கோவே நீ செல் உலகில்
வாய்ந்து அடியேம் வந்து உன் வழிபடும் நாள் இன்றே போல்
காய்ந்து அருளல் கண்டாய் என தொழுதார் காரிகையார்
#2991
தெண் திரை நீத்தம் நீந்தி தீம் கதிர் சுமந்து திங்கள்
விண் படர்ந்து அனைய மாலை வெண்குடை வேந்தர் வேந்தன்
கண் திரள் முத்த மாலை கதிர் முலை நங்கைமாரை
வெண் திரை வியக்கும் கேள்வி விசயை-கண் அபயம் வைத்தான்
#2992
கடி மலர் நிறைந்து பூத்த கற்பக கொம்பும் காமர்
வடி மலர் மலர்ந்த காமவல்லியும் தம்மை தாமே
உடை மலர் கொய்து போக உகுத்திடுகின்றது ஒத்தார்
படை மலர் நெடும் கண் நல்லார் பாசிழை நீக்குகின்றார்
#2993
தழு மலர் தாமம் நான்று சந்து அகில் மணந்து விம்மும்
செழு மணி நிலத்து செம்பொன் திரு முத்த விதான நீழல்
எழுமையும் பெறுக என்னும் எழில் முலை நெற்றி சூழ்ந்தார்
கழுமிய துகிலின் காமன் கண் புடைத்து இரங்க மாதோ
#2994
நறும் புகை நான நாவி குழம்பொடு பளித சுண்ணம்
அறிந்தவர் ஆய்ந்த மாலை அணிந்த பைம் கூந்தலாய் பொன்
நிறம் தரு கொம்பு நீல கதிர் கற்றை உமிழ்வவே போல்
செறிந்து இருந்து உகுத்து செம்பொன் குண கொடி ஆயினாரே
#2995
இலம் பெரிது என இரந்தவர்கட்கு ஏந்திய
கலம் சொரி காவலன் கடக கை இணை
புலம் புரிந்து உயர்ந்தன இரண்டு பொன் நிற
வலம்புரி மணி சொரிகின்ற போன்றவே
#2996
என்பு அரிந்து எரி தலைக்கொள்ள ஈண்டிய
அன்பு அரிந்து இடுகலா உலகம் ஆர்க என
மின் சொரி வெண் கலம் வீசும் வண் கைகள்
பொன் சொரி தாமரை போது போன்றவே
#2997
பூம் துகில் புனை கலம் மாலை பூசு சாந்து
ஆய்ந்து உலகு உண உவந்து அருளி மா மணி
காந்திய கற்பக கானம் ஆயினான்
ஏந்திய மணி முடி இறைவன் என்பவே
#2998
தேய் பிறை உருவ கேணி தேறு நீர் மலர்ந்த தேனார்
ஆய் நிற குவளை அஞ்சி குறு விழி கொள்ளும் வாள் கண்
வேய் நிறை அழித்த மென் தோள் விசயையை தொழுது வாழ்த்தி
சேய் நிற சிவிகை சேர்ந்தான் தேவர் கொண்டு ஏகினாரே
#2999
நரம்பு எழுந்து இரங்கின வீணை நன் குழல்
பரந்து பண் உயிர்த்தன பைய மெல்லவே
விருந்துபட்டு இயம்பின முழவம் வீங்கு ஒலி
சுரந்தன சுடர் மணி பாண்டில் என்பவே
#3000
மங்குலாய் அகில் புகை மணந்து கற்பக
பொங்கு பூ மாலைகள் பொலிந்து பூஞ்சுணம்
தங்கி இ தரணியும் விசும்பும் தாமரோ
செம் கதிர் திரு மணி செப்பு போன்றவே
 
மேல்
 
#3001
திலக முக்குடை செல்வன் திருநகர்
பலரும் ஏத்தினர் பாடினர் ஆடினர்
குலவு பல்லியம் கூடி குழுமி நின்று
உலக வெள்ளம் ஒலிப்பது போன்றவே
#3002
கான் நிரைத்தன காவொடு பூம் பொய்கை
தேன் நிரைத்தன செம்பொன் நெடு மதில்
மேல் நிரைத்தன வெண் கொடி அ கொடி
வான் உரிப்பன போன்று மணந்தவே
#3003
கோலம் முற்றிய கோடு உயர் தூபையும்
சூலம் நெற்றிய கோபுர தோற்றமும்
ஞாலம் முற்றிய பொன் வரை நன்று-அரோ
காலம் உற்று உடன் கண்ணுற்ற போன்றவே
#3004
வாயில் தோரணம் கற்பக மாலை தாழ்ந்து
ஏயிற்று இந்திரன் பொன் நகரின் புறம்
போயிற்றே அகிலின் புகை போர்த்து உராய்
ஞாயிற்று ஒள் ஒளி நைய நடந்ததுவே
#3005
செய்ய தாமரை பூவினுள் தேம் கமழ்
பொய் இல் சீர்த்தி வெண் தாமரை பூத்த போன்று
ஐயம் செய்து அடு பால் நிற புள் இனம்
மை இல் தாமரை மத்தகம் சேர்ந்தவே
#3006
மல்லன் மா கடல் அன்ன கிடங்கு அணிந்து
ஒல்லென் சும்மைய புள் ஒலித்து ஓங்கிய
செல்வ நீர் திரு கோயில் இ மண் மிசை
இல்லையேல் துறக்கம் இனிது என்பவே
#3007
விளங்கு ஒளி விசும்பு அறுத்து இழிந்து மின்னு தார்
துளங்கு ஒளி மணிவண்ணன் தொழுது துன்னினான்
வளம் கெழு மணி வரை நெற்றி பால்கடல்
இளம் கதிர் பருதி ஒத்து இறைவன் தோன்றினான்
#3008
வினை உதிர்த்தவர் வடிவு இன்னது என்னவே
வனை கதிர் தட கை வைத்து இருந்த வாமனார்
கனை கதிர் திரு முகம் அருக்கன் ஆக வான்
புனை மலர் தாமரை பூத்தது ஒத்தவே
#3009
இரிந்தன இருவினை இலிர்த்த மெய் மயிர்
சொரிந்தன கண் பனி துதித்து காதலால்
அரிந்தது மணி மிடறு அலர் பெய்ம் மாரி தூஉய்
திரிந்தனன் வல முறை திலக மன்னனே
#3010
முத்து ஒளிர் தாமமும் உருவ மா மணி
தொத்து ஒளிர் தாமமும் சொரி பொன் தாமமும்
தத்து நீர் தண் கடல் பவழ தாமமும்
வைத்த பூம் தாமமும் மலிந்து தாழ்ந்தவே
#3011
மணி வரை எறி திரை மணந்து சூழ்ந்த போல்
அணி மயிர் கவரிகள் அமரர் ஏந்தினார்
துணி மணி முக்குடை சொரிந்த தீம் கதிர்
பணி மணி காரிருள் பருகுகின்றதே
#3012
முழா திரள் மொய் மலர் தாமம் தாழ்ந்து மேல்
வழா திரு மலர் எலாம் மலர்ந்து வண்டு இனம்
குழாத்தொடும் இறைகொள குனிந்து கூய் குயில்
விழா கொள விரிந்தது வீரன் பிண்டியே
#3013
பிண்டியின் கொழு நிழல் பிறவி நோய் கெட
விண்டு அலர் கனை கதிர் வீரன் தோன்றினான்
உண்டு இவண் அற அமிர்து உண்-மினோ என
கொண்டன கோடணை கொற்ற முற்றமே
#3014
வானவர் மலர் மழை சொரிய மன்னிய
ஊன் இவர் பிறவியை ஒழிக்கும் உத்தமன்
தேன் இமிர் தாமரை திளைக்கும் சேவடி
கோன் அமர்ந்து ஏத்திய குறுகினான்-அரோ
#3015
குரு குலம் சீவககுமரன் கோத்திரம்
அருகல் இல் காசிபம் அடிகள் வாழி என்று
எரி மணி முடி நிலம் உறுத்தி ஏத்தினான்
புரி மணி வீணைகள் புலம்ப என்பவே
#3016
மன்னவன் துறவு என துறத்தல் மாண்பு என
பொன் வரை வாய் திறந்த ஆங்கு புங்கவன்
இன் உரை எயிறு வில் உமிழ வீழ்ந்தது
மின்னி ஓர் வியன் மழை முழங்கிற்று ஒத்ததே
#3017
காய் களிற்றின் இடை மருப்பின் கவளம் போன்று ஏமாரா கதியுள் தோன்றி
ஆய் களிய வெம் வினையின் அல்லாப்பு உற்று அஞ்சினேன் அறிந்தார் கோவே
வேய் களிய வண்டு அறைய விரிந்து அலர்ந்த தாமரையின் விரை சேர் போதின்
வாய் ஒளியே பெற நடந்த மலர் அடியை வலம் கொண்டார் வருந்தார் போலும்
#3018
சேடு ஆர் பொன் திரு மணி வைர தொத்து அணிந்து உலகு ஓம்பும்
வாடா மாலை வார் தளிர் பிண்டி வாம நின் குணம் நாளும்
பாடாதாரை பாடாது உலகம் பண்ணவர் நின் அடி பூ
சூடாதார் தாள் சூடார் மாலை சுடர் மணி நெடு முடியே
#3019
வையம் மூன்றும் உடன் ஏத்த வளரும் திங்கள் வாள் எயிற்று
ஐய அரிமான் மணி அணை மேல் அமர்ந்தோய் நின்னை அமராதார்
வெய்ய வெம் நோய் வினை உதைப்ப வீழ்ந்து துன்ப கடல் அழுந்தி
நெய்யும் நுண் நூல் நாழிகையின் நிரம்பா நின்று சுழல்வாரே
#3020
தொழுதி பன் மீன் குழாம் சூழ துளும்பாது இருந்த திங்கள் போல்
முழுதும் வையம் உடன் ஏத்த முதுவாய் வலவையாய் இருந்து
அழுது வினைகள் அல்லாப்ப அறைந்தோய் நின் சொல் அறைந்தார்கள்
பழுது இல் நறு நெய் கடல் சுடர் போல் பல்லாண்டு எல்லாம் பரியாரே
#3021
செழும் பொன் வேய்ந்து மணி அழுத்தி திருவார் வைரம் நிரைத்து அதனுள்
கொழுந்து மலரும் கொள குயிற்றி குலாய சிங்காதனத்தின் மேல்
எழுந்த பருதி இருந்தால் போல் இருந்த எந்தை பெருமானே
அழுந்தேன் வந்து உன் அடி அடைந்தேன் அருவாய் போதல் அழகிதோ
#3022
குண்டலமும் பொன் தோடும் பைம் தாரும் குளிர் முத்தும்
வண்டு அலம்பு மாலையும் மணி தொத்தும் நிலம் திவள
விண்டு அலர் பூம் தாமரையின் விரை ததும்ப மேல் நடந்த
வண்டு அலர் பூம் திருவடியை மணி முடியின் வணங்கினான்
#3023
நில விலகி உயிர் ஓம்பி நிமிர்ந்து ஒளிர்ந்து பசி பகை நோய்
உலகம் இருள் கெட விழிக்கும் ஒண் மணி அறவாழி
அலகை இலா குண கடலை அகல் ஞான வரம்பானை
விலை இலா மணி முடியான் விண் வியப்ப இறைஞ்சினான்
#3024
தூய் திரள் மணி தாமம் சொரிந்து பொன் நிலம் நக்க
பூ திரள் மணி மாலை போர் சிங்கம் போதகம் போல்
ஏத்தரிய குண கடலை இகல் இன்ப வரம்பானை
தோத்திரத்தால் தொழுது இறைஞ்சி துறப்பேன் என்று எழுந்திருந்தான்
#3025
முடி அணி அமரரும் முலை நல்லார்களும்
புடை பணிந்து இருந்த அ புலவன் பொன் நகர்
கடி மலர் கற்பகம் காமவல்லியோடு
இடை விராய் எங்கணும் பூத்தது ஒத்ததே
#3026
ஒத்து ஒளி பெருகிய உருவ பொன் நகர்
வித்தகன் வலம்செய்து விழு பொன் பூமி போய்
மத்தக மயிர் என வளர்த்த கைவினை
சித்திர காவகம் செல்வன் எய்தினான்
#3027
ஏம நீர் உலகம் ஓர் இம்மி பால் என
நாம வேல் நரபதி நீக்கி நன் கலம்
தூமம் ஆர் மாலையும் துறக்கின்றான்-அரோ
காமனார் கலம் கழிக்கின்றது ஒத்ததே
#3028
மணி உறை கழிப்பது போல மங்கல
பணி வரு பைம் துகில் நீக்கி பால்கடல்
அணிபெற அரும்பிய அருக்கன் ஆம் என
திணி நிலத்து இயன்றது ஓர் திலகம் ஆயினான்
#3029
மலிந்த நல் மாலைகள் வண்ண பூம் துகில்
நலிந்து மின் நகு மணி நன் பொன் பேர் இழை
மெலிந்தனென் சுமந்து என நீக்கி மேல் நிலை
பொலிந்தது ஓர் கற்பகம் போல தோன்றினான்
#3030
திருந்திய கீழ் திசை நோக்கி செவ்வனே
இருந்தது ஓர் இடி குரல் சிங்கம் பொங்கி மேல்
சுரிந்த தன் உளை மயிர் துறப்பது ஒத்தனன்
எரிந்து எழும் இளம் சுடர் இலங்கும் மார்பினான்
#3031
அம் சுடர் தாமரை கையினான் மணி
குஞ்சி வெண் படலிகை குமரன் நீப்பது
செம் சுடர் கரும் கதிர் கற்றை தேறு நீர்
மஞ்சு உடை மதியினுள் சொரிவது ஒத்ததே
#3032
வேலை வாய் மணி இலை ஊழ்த்து வீழ்ப்பது ஓர்
காலை-வாய் கற்பக மரத்தின் காவலன்
மாலை-வாய் அகில் தவழ் குஞ்சி மாற்றலின்
சோலை-வாய் சுரும்பு இனம் தொழுது சொன்னவே
#3033
தம் கிடை இலா திரு கேசம் தன்னையும்
கொங்கு உடை கோதையும் கொய்து நீக்கினாய்
நும் கடை நோக்கி நாம் வாழும் வாழ்க்கையம்
எம் கிடையவர் இனி எங்கு செல்பவே
#3034
என்றன தேன் இனம் இரங்கு வண்டொடு
சென்றன விடுக்கிய செல்வன் பொன் மயிர்
இன்றொடு தொழுதனம் நும்மை யாம் என
மன்றல் உண்டு அவை வலம் கொண்டு சென்றவே
#3035
மேல் படு கற்பக மாலை வேய்ந்து பொன்
ஏற்பு உடை படலிகை எடுத்து கொண்டு போய்
நால் கடல் கடந்து அவன் நமோ என்று இட்டிட
பால்கடல் பனி மதி போல வீழ்ந்ததே
#3036
ஏவா இருந்த அடிகள் இவர் வாய் சொல்
கோவா மணி கொழித்து கொண்டாலே போலுமால்
சாவா கிடந்தார் செவி சார்த்தின் அப்பொழுதே
மூவா அமரர் ஆய் முத்து அணிந்து தோன்றுவரே
#3037
தோளா மணி குவித்தால் போன்று இலங்கு தொல் குலத்து
சூளாமணியாய் சுடர இருந்தானை
வாள் ஆர் முடி வைர வில் திளைத்து வண்டு அரற்றும்
தாள் ஆர ஏத்தி போய் தன் கோயில் புக்கானே
#3038
புக்கான் சுதஞ்சணனும் பொன் தாமரை மகளிர்
தொக்காலே போலும் தன் தேவி குழாம் சூழ
மிக்கான் குணம் பாடி ஆடி மிகு தீம் பால்
தொக்க கடல் போல் சுதங்கள் நிறைந்தனவே
#3039
பற்று ஆர்வம் செற்றம் முதலாக பாம்பு உரி போல்
முற்ற துறந்து முனிகளாய் எல்லாரும்
உற்று உயிர்க்கு தீம் பால் சுரந்து ஓம்பி உள்ளத்து
மற்று இருள் சேரா மணி விளக்கு வைத்தாரே
#3040
கோமான் அடி சார குஞ்சரங்கள் செல்வன போல்
பூ மாண் திரு கோயில் புங்கவன் தாள் சேர்ந்து ஏத்தி
தாம் ஆர்ந்த சீல கடல் ஆடி சங்கு இனத்துள்
தூ மாண் வலம்புரியின் தோற்றம் போல் புக்காரே
#3041
மட்டு அலர் வன மலர் பிண்டி வாமனார்
விட்டு அலர் தாமரை பாதம் வீங்கு இருள்
அட்டு அலர் பருதியின் அளிக்க செல்லும் நாள்
பட்டது ஓர் பொருளின் இனி பழிச்சுகின்றதே
#3042
கயல் இனம் உகளி பாய முல்லை அம் பொதும்பில் காமர்
புயல் இனம் மொக்குள் வன்கண் குறு முயல் புலம்பி குன்றத்து
அயல் வளர்கின்ற ஆமான் குழவியோடு இரிந்து செந்நெல்
வயல் வளர் கரும்பில் பாயும் மகதநாடு என்பது உண்டே
#3043
இரும் பிடி தழீஇய யானை இழி மதம் கலந்து சேறாய்
சுரும்பொடு மணி வண்டு ஆர்க்கும் துகில் கொடி மாட வீதி
பெரும் கடி நகரம் பேசின் இராசமாகிருகம் என்பர்
அரும் கடி அமரர் கோமான் அணி நகர் ஆயது ஒன்றே
#3044
எரி மிடைந்து அனைய மாலை இன மணி திருவில் வீசும்
திரு முடி ஆர மார்பின் சேணிகன் என்ப நாமம்
அரு முடி மன்னர் சூழ அலர் அணி பிண்டி வேந்தன்
திருவடி விருந்து செய்வான் திரள் முரசு அறைவித்தானே
#3045
பொன் நா வழியால் புகழ் நா வழித்து ஆய்ந்த மெல் கோல்
மின் ஆர் மணி பூணவன் மேவி விண்-காறும் நாறும்
முன்னோர் வகுத்த முக வாசம் பொதிந்த வெந்நீர்
மன் ஆர வாய் கொண்டு உமிழ்ந்தான் மணி மாலை வேலோன்
#3046
தீம் பால் நுரை போல் திகழ் வெண் பட்டு உடுத்து வண்டு ஆர்
தேம் பாய சாந்தம் மெழுகி கலன் தேறல் மாலை
தாம் பால தாங்கி புகழ் தாமரை குன்றம் அன்ன
ஆம் பால் மயிர் வேய்ந்து அயிராவணம் ஏறினானே
#3047
எறி சுரும்பு அரற்றும் மாலை எரி மணி செப்பு வெள்ளம்
பொறி வரி வண்டு பாடும் பூம் சுண்ணம் நிறைந்த பொன் செப்பு
அறிவரிது உணர்வு நாணி தலை பனித்து அஞ்சும் சாந்தம்
செறி இரும் பவழ செப்பு தெண் கடல் திரையின் நேரே
#3048
வந்து தேன் மயங்கி மூசு மலய செம் சாந்தம் ஆர்ந்த
சந்தன செப்பும் கங்கை தரு மணல் அலகை ஆற்றா
சுந்தரம் பெய்த யானை தூ மருப்பு இயன்ற வெண் செப்பு
அந்தரத்து அலர்ந்த பன் மீன் எனைத்து உள அனைத்தும் மாதோ
#3049
மை பொதி குவளை வாள் கண் மல்லிகை கோதை நல்லார்
நெய் பொதி நெஞ்சின் மன்னர் நிலம் பிறக்கிடுவ போலும்
கொய் சுவல் புரவி மான் தேர் குழு மணி ஓடை யானை
மெய் பொதிந்து உயர்ந்த கோமான் விரை பலி சுமந்த அன்றே
#3050
கொடி குழாம் குஞ்சி பிச்ச குழாம் நிறை கோல மாலை
முடி குழாம் மூரி வானம் பால் சொரிகின்றது ஒக்கும்
குடை குழாம் இவற்றின் பாங்கர் குளித்தது குளிர் சங்கு ஆர்க்கும்
படை குழாம் பாரில் செல்லும் பால்கடல் பழித்த அன்றே
 
 
#3051
கனை கடல் கவர செல்லும் கண மழை தொகுதி போலும்
நனை மலர் பிண்டி நாதன் நல் அறம் கொள்ளை சாற்றி
புனை முடி மன்னர் ஈண்டி பொன் எயில் புறத்து விட்டார்
வினை உடைத்து இன்ப வெள்ளம் விரும்பிய வேட்கையானே
#3052
வண்டு சூழ் பூ பலி சுமந்து தான் வலம்
கொண்டு சூழ்ந்து எழு முறை இறைஞ்சி கோன் அடி
எண்திசையவர்களும் மருள ஏத்தினான்
வெண் திரை புணரி சூழ் வேலி வேந்தனே
#3053
பகல் வளர் பவழ செம் தீ பருதி முன் பட்டதே போல்
இகல் வினை எறிந்த கோமான் இணை அடி ஒளியின் தோன்றாது
அகல் விசும்பு உறையும் தேவர் ஒளி அவிந்து இருப்ப மன்னன்
முகில் கிழி மதியம் போலும் முனி குழாம் நோக்கினானே
#3054
கண் வெறி போக ஆங்கு ஓர் கடும் தவன் உருவம் நோக்கி
ஒண் நெறி ஒருவி கோமான் ஒளி திரண்டு இருந்ததாம்-கொல்
விண் நெறி வழுவி வீழ்ந்த விண்ணவன் ஒருவன்-கொல் என்று
எண் நெறி யாதும் ஓராது இருந்து இது கூறினானே
#3055
விளங்கு ஒளி விசும்பு அறுத்து இழிந்து விண்ணவன்
இளம் கதிர் என துறந்து இருப்ப கண்டனம்
வளம் கெழு முக்குடை அடிகள் வாய்மொழி
துளங்கினன் என தொழுது இறைஞ்சினான்-அரோ
#3056
மன்னவ கேள்-மதி வானில் வாழ்பவர்
பொன் இயல் கற்பக போக பூமியார்
என்னதும் துறவலர் இறைவன் வாய்மொழி
சொன்ன ஆறு அல்லது எப்பொருளும் தோன்றுமே
#3057
அடிகளுக்கு இடம் மருங்கு இருந்த ஆய் மலர்
கடி கமழ் தாமரை கண்ணினான் இவன்
வடிவமே வாய் திறந்து உரைக்கும் வானவன்
ஒடிவறு பேர் ஒளி உட்கத்தக்கதே
#3058
திருவினோடு அகன்ற மார்பின் சீவகசாமி என்பான்
உருவினோடு ஒளியும் நோக்கின் ஒப்புமை உலகின் இல்லை
மருவினார் இமைத்து நோக்கின் மனம் பிறிது ஆகி நிற்பார்
அரிது இவன் முகத்து நோக்கல் அழகு ஒளி அன்ன என்றான்
#3059
மாதவன் சரிதமும் துறந்த வண்ணமும்
ஏதம் இன்று இயம்பு-மின் அடிகளோ என
போது அலர் புனை முடி இறைஞ்சி ஏத்தினான்
காதலின் கணம் தொழ காவல் மன்னனே
#3060
பாட்டு அரும் கேவல பரவை மா கடல்
கூட்டரும் கொழும் திரை முகந்து மா முனி
மோட்டு இரு மணி முகில் முழங்கி பெய்தலின்
ஊட்டரும் அற அமிர்து உலகம் உண்டதே
#3061
சீவகன் திருவினம் ஆக யாம் என
நா அகம் தழும்ப நின்று ஏத்தி நன்று-அரோ
காவலன் ஆதியா கணங்கள் கைதொழ
பாவம் இல் சுதன்மரால் பாடப்பட்டதே
#3062
முல்லை சூழ் முல்லை வேலி முயலொடு கவரி மேயும்
கொல்லை சூழ் குன்றத்து உச்சி குருசில் நோற்று உயர்ந்தவாறும்
வில் உமிழ்ந்து இலங்கு மேனி விழு தவ நங்கைமார்கள்
மல்லல் அம் குமரர் வான் மேல் சென்றதும் வகுக்கல் உற்றேன்
#3063
முழுதும் முந்திரிகை பழ சோலை தேன்
ஒழுகி நின்று அசும்பும் உயர் சந்தன
தொழுதி குன்றம் துளும்ப சென்று எய்தினான்
பழுது இல் வாய்மொழி பண்ணவன் என்பவே
#3064
நணிதின் எண் வினை இன்னவை கண் நிறீஇ
துணிய ஈர்ந்திடும் துப்பு அமை சிந்தையான்
மணியின் மேல் மணி கட்டியது ஒத்து அதற்கு
அணியும் ஆய் அலர் ஞாயிறும் ஆயினான்
#3065
குன்றின் வீழ் அருவி குரல் கோடு அணை
சென்று எலா திசையும் சிலம்பின் மிசை
நின்றனன் இறை வம்-மினம் நீர் என
ஒன்றி நின்று அதிரும் ஒருபால் எலாம்
#3066
செம்பொன் பின்னிய போல் தினை காவலர்
வெம்பு மும்மத வேழம் விலக்குவார்
தம் புனத்து எறி மா மணி சந்து பாய்ந்து
உம்பர் மீன் என தோன்றும் ஓர்பால் எலாம்
#3067
யானை குங்குமம் ஆடி அரு வரை
தேன் நெய் வார் சுனை உண்டு திளைத்து உடன்
கான மா பிடி கன்றொடு நாடகம்
ஊனம் இன்றி நின்று ஆடும் ஓர்பால் எலாம்
#3068
வரிய நாக மணி சுடர் மல்கிய
பொரு இல் பொன் முழை போர் புலி போதகம்
அரிய கின்னரர் பாட அமர்ந்து தம்
உருவம் தோன்ற உறங்கும் ஓர்பால் எலாம்
#3069
பழுத்த தீம் பலவின் கனி வாழையின்
விழு குலை கனி மாங்கனி வீழ்ந்தவை
தொழித்து மந்தி துணங்கை அயர்ந்து தேன்
அழிக்கும் அம் சுனை ஆடும் ஓர்பால் எலாம்
#3070
நளி சிலம்பதனின் உச்சி நாட்டிய பொன் செய் கந்தின்
ஒளியொடு சுடர வெம்பி உருத்து எழு கனலி வட்டம்
தெளி கடல் சுடுவது ஒத்து தீ உமிழ் திங்கள் நான்கும்
விளிவரும்-குரைய ஞான வேழம் மேல் கொண்டு நின்றான்
#3071
பார் கடல் பருகி மேகம் பாம்பு இனம் பதைப்ப மின்னி
வார் பிணி முரசின் ஆர்த்து மண் பக இடித்து வானம்
நீர் திரள் பளிக்கு தூணி சொரிந்திட நின்று வென்றான்
மூர்த்தி ஆய் முனிவர் ஏத்தும் முனி களிறு அனைய கோமான்
#3072
திங்கள் நான்கு அவையும் நீங்க திசை செல்வார் மடிந்து தேம் கொள்
பங்கய பகை வந்து என்ன பனி வரை உருவி வீசும்
மங்குல் சூழ் வாடைக்கு ஒல்கான் வெள்ளிடை வதிந்து மாதோ
இங்கு நான்கு ஆய திங்களின் உயிர் ஓம்பினானே
#3073
வடி மலர் நெடும் கணாரும் மைந்தரும் வரவு பார்த்து அங்கு
அடி மலர் பரவ ஏறி ஆர் அமிர்து அரிதின் கொள்வான்
கடி மலர் கமலத்து அன்ன கையினை மறித்து கொள்ளான்
முடி தவ கடலை நீந்தி இன்னணம் முற்றினானே
#3074
ஒளிறு தேர் ஞானம் பாய்மா இன் உயிர் ஓம்பல் ஓடை
களிறு நல் சிந்தை காலாள் கருணை ஆம் கவசம் சீலம்
வெளிறு இல் வாள் விளங்கு செம்பொன் வட்டம் மெய் பொருள்களாக
பிளிறு செய் கரும தெவ்வர் பெரு மதில் முற்றினானே
#3075
உறக்கு எனும் ஓடை யானை ஊண் எனும் உருவ திண் தேர்
மறப்பு எனும் புரவி வெள்ளம் வந்து அடை பிணி செய் காலாள்
திறப்பட பண்ணி பொல்லா சிந்தனை வாயில் போந்து
சுற கடல் அனைய தானை துளங்க போர் செய்தது அன்றே
#3076
தெளிவு அறுத்து எழுவர் பட்டார் ஈர்_எண்மர் திளைத்து வீழ்ந்தார்
களிறு கால் உதைப்ப எண்மர் கவிழ்ந்தனர் களத்தின் உள்ளே
பிளிறி வீழ் பேடி பெண் நோய் அறு வகை துவர்ப்பும் பேசின்
அளிபடு சிந்தை என்னும் ஆழி-வாய் வீழ்ந்த அன்றே
#3077
மயக்க போர் மன்னன் மக்கள் மந்திரியவரும் வீழ
வியப்புறு வேத வில் வாய் வேட்கை அம்பு எடுத்திட்டு எய்ய
கலக்கம் இல் அசுபம் என்னும் குந்தத்தால் கணை பெய்ம் மாரி
விலக்கி திண் வெறுப்பு வாளால் விரைந்து உயிர் அவனை உண்டான்
#3078
கரும்பு எறி கடிகை போன்றும் கதலிகை போழ்கள் போன்றும்
அரும் பொறி பகைவர் தம்மை உறுப்பு அற துணித்தும் ஈர்ந்தும்
மருந்து எறி பிணியை கொல்லும் மருத்துவன் போன்று மாதோ
இருந்து எறிந்து எறியும் மூவர் மேல் படை இயற்றினானே
#3079
செழு மலர் ஆவி நீங்கும் எல்லையில் செறிந்து காயம்
கழுமிய உதிரம் போல இமைப்பினுள் கரந்து நீங்க
கொழு மலர் குவளை கண்ணி கூற்று உயிர் உண்பதே போல்
விழுமிய தெவ்வர் வாழ்நாள் வீழ்ந்து உக வெம்பினானே
#3080
குரோதனே மானன் மாயன் கூர்ப்பு உடை உலோபன் என்பார்
விரோதித்து விரலின் சுட்டி வெருவர தாக்க வீரன்
நிரோதனை அம்பின் கொன்றான் நித்தை நீள் பசலை பேரோர்
விராகு எனும் வேலின் வீழ வெகுண்டனன் அவரும் வீழ்ந்தார்
#3081
புணரி போல் சிறு புன் கேள்வி படையொடு புகைந்து பொங்கி
உணர்வொடு காட்சி பேறு என்று இடை உறு கோக்கள் ஏற்றார்
இணர் எரி முழக்கம் அன்ன சுக்கில தியானம் என்னும்
கணை எறிந்து உகைப்ப வீழ்ந்து கால்படை சூழ பட்டார்
#3082
காதி போர் மன்னர் வீழ கணை எரி சிதறி வெய்யோன்
ஓதிய வகையின் ஒன்றி உலகு உச்சி முளைத்ததே போல்
வீதி போய் உலகம் மூன்றும் விழுங்கியிட்டு அலோகம் நுங்கி
ஆதி அந்த அகன்ற நான்மை கொடியெடுத்து இறைமை கொண்டான்
#3083
பசும்பொனின் உலகில் தேவர் பயிர் வளை முரசம் ஆர்ப்ப
அசும்பு சேர் களிறு திண் தேர் அலை மணி புரவி வேங்கை
விசும்பு இயங்கு அரியோடு ஆளி விடை மயில் அன்னம் நாகம்
நயந்தவை பிறவும் ஊர்ந்து நாதன் தாள் கோயில் கொண்டார்
#3084
நறு மலர் மாலை சாந்தம் பரூஉ துளி துவலை நல் நீர்
கறை முகில் சொரிய காய் பொன் கற்பக மாலை ஏந்தி
சிறகு உற பரப்பி அன்னம் பறப்பன போல ஈண்டி
நிறை கடல் விஞ்சை வேந்தர் நீள் நில மன்னர் சேர்ந்தார்
#3085
விண் இயங்கு அருக்கன் வீழ்ந்து மீன் நிலம் கொள்வதே போல்
மண் எலாம் பைம்பொன் மாரி மலர் மழை சொரிந்து வாழ்த்தி
எண் இலா தொழில்கள் தோற்றி இந்திரர் மருள ஆடி
கண் முழுதும் உடம்பில் தோன்றி சுதஞ்சணன் களிப்புற்றானே
#3086
குளித்து எழு வயிர முத்த தொத்து எரி கொண்டு மின்ன
அளித்து உலகு ஓம்பும் மாலை அகன் குடை கவித்தது ஆங்கு
வளி பொர உளரும் திங்கள் கதிர் என கவரி பொங்க
தெளித்து வில் உமிழும் செம்பொன் ஆசனம் சேர்ந்தது அன்றே
#3087
மணி உமிழ் திரு கேசம் வானவர் அகில் புகையும்
பிணி அவிழ்ந்த கற்பகமும் பெயர்ந்து ஓட கமழுமால்
துணியரு வினை எறிந்தாற்கு அது நாற்றம் சொல்லலாம்
அணி திகழ் அரசுவா அதன் கடாம் சாற்றாதோ
#3088
முழங்கு திரு மணி முறுவல் முருக்கு இதழ் கொடி பவழத்து
தழங்கு குரல் வாய் தளை அவிழ்ந்த மந்தாரம் தவ நாறும்
அழுங்கல் சூழ் வினை வெறுத்தாற்கு அது நாற்றம் அறியலாம்
வழங்கு பொன் வரை வளரும் பைம் கண் மா உரையாதோ
#3089
உறுப்பு எலாம் ஒளி உமிழ்ந்து உணர்வு அரிதாய் இரு சுடரும்
குறைத்து அடுக்கி குவித்தது ஓர் குன்றே போன்று இலங்குமால்
வெறுத்து இருவினை உதிர்த்தாற்கு அது வண்ணம் விளம்பலாம்
கறுப்பு ஒழிந்த கனை எரி வாய் கார் இரும்பே கரி அன்றே
#3090
வானோர் ஏந்து மலர் மாரி வண்ண சாந்தம் பூஞ்சுண்ணம்
கான் ஆர் பிண்டி கமழ் தாமம் கறை ஆர் முகிலின் நிறம் காட்டும்
தேன் ஆர் புகைகள் இவை எல்லாம் திகைப்ப திசைகள் மணம் நாறி
ஆனா கமழும் திருவடி போது அமரர் முடி மேல் அணிந்தாரே
#3091
சுறவு கொடி கடவுளொடு காலன் தொலைத்தோய் எம்
பிறவி அறுக என்று பிற சிந்தை இலர் ஆகி
நறவ மலர் வேய்ந்து நறும் சாந்து நிலம் மெழுகி
துறவு நெறி கடவுள் அடி தூமமொடு தொழுதார்
#3092
பால் அனைய சிந்தை சுடர படர் செய் காதி
நாலும் உடனே அரிந்து நான்மை வரம்பு ஆகி
காலம் ஒரு மூன்றும் உடனே உணர்ந்த கடவுள்
கோல மலர் சேவடிகள் கொண்டு தொழுதும் யாம்
#3093
முழங்கு கடல் நெற்றி முளைத்து எழுந்த சுடரே போல்
அழுங்கல் வினை அலற நிமிர்ந்து ஆங்கு உலகம் மூன்றும்
விழுங்கி உமிழாது குணம் வித்தி இருந்தோய் நின்
இழுங்கு இல் குண சேவடிகள் ஏத்தி தொழுதும் யாம்
#3094
ஏத்தரிய பல் குணங்கட்கு எல்லை வரம்பு ஆகி
நீத்த அருள் இந்திரனை நின்று தொழுது அமரர்
நா தழும்ப ஏத்தி தவ நங்கையவர் நண்ணி
தோத்திரங்கள் ஓதி துகள் மாசு துணிக்கின்றார்
#3095
செய்தவனே வினை சேரும் அதற்கு எனும்
ஐயம் இன்றாய் அலர் தாமரை மேல் அடி
மொய் மலர் தூய் முனியாது வணங்குதும்
மெய் உலகிற்கு விளம்பிய வேந்தே
#3096
நல்லனவே என நாடி ஓர் புடை
அல்லனவே அறைகின்ற புன் நாதர்கள்
பல் வினைக்கும் முலை தாய் பயந்தார் அவர்
சொல்லுவ நீ சுகதா உரையாயே
#3097
மதி அறியா குணத்தோன் அடி வாழ்த்தி
நிதி அறை போல் நிறைந்தார் நிகர் இல்லா
துதி அறையா தொழுதார் மலர் சிந்தா
விதி அறியும் படி வீரனை மாதோ
#3098
தீவினை குழவி செற்றம் எனும் பெயர் செவிலி கையுள்
வீ வினை இன்றி காம முலை உண்டு வளர்ந்து வீங்கி
தா வினை இன்றி வெம் நோய் கதிகளுள் தவழும் என்ற
கோவினை அன்றி எம் நா கோதையர் கூறல் உண்டே
#3099
நல் வினை குழவி நல் நீர் தயா எனும் செவிலி நாளும்
புல்லி கொண்டு எடுப்ப பொம்மென் மணி முலை கவர்ந்து வீங்கி
செல்லுமால் தேவர் கோவாய் எனும் இருள் கழிந்த சொல்லால்
அல்லி மேல் நடந்த கோவே அச்சத்துள் நீங்கினோமே
#3100
மணியினுக்கு ஒளி அக மலர்க்கு மல்கிய
அணி அமை அம் குளிர் வாசம் அல்லதூஉம்
திணி இமில் ஏற்றினுக்கு ஒதுக்கம் செல்வ நின்
இணை மலர் சேவடி கொடுத்த என்பவே
 
மேல்
 
#3101
இகல் இருள் முழு முதல் துமிய ஈண்டு நீர்
பகல் சுமந்து எழுதரும் பருதி அன்ன நின்
இகல் இரு மரை மலர் அளித்த சேவடி
தொகல் அரும் கரு வினை துணிக்கும் எஃகமே
#3102
மீன் தயங்கு திங்கள் முக நெடும் கண் மெல் இயலார்
தேன் தயங்கு செம் நாவின் சில் மென் கிளி கிளவி
வான் தயங்கு வாமன் குணம் பாட வாழி-அரோ
கான் தயங்கி நில்லா கரு வினை கால் பெய்தனவே
#3103
மதியம் பொழி தீம் கதிர்கள் பருகி மலர் ஆம்பல்
பொதி அவிழ்ந்து தேன் துளிப்ப போன்று பொரு இல்லார்
விதியின் களித்தார் அறிவன் விழு குணங்கள் ஏத்தி
துதியின் தொழுதார் துளங்கு உள்ளம் அது நீத்தார்
#3104
ஆர்ந்த குண செல்வன் அடி தாமரைகள் ஏத்தி
சேர்ந்து தவ வீரர் திசை சிலம்ப துதி ஓதி
தூர்ந்த இருள் துணிக்கும் சுடர் தொழுது அருளுக என்றார்
கூர்ந்து அமிழ்த மாரி என கொற்றவனும் சொன்னான்
#3105
இன்பம் மற்று என்னும் பேர் ஆன் எழுந்த புல் கற்றை தீற்றி
துன்பத்தை சுரக்கும் நான்கு கதி எனும் தொழுவில் தோன்றி
நின்ற பற்று ஆர்வம் நீக்கி நிருமலன் பாதம் சேரின்
அன்பு விற்று உண்டு போகி சிவகதி அடையலாமே
#3106
வாள் கை அம் மைந்தர் ஆயும் வன முலை மகளிர் ஆயும்
வேட்கையை மிகுத்து வித்தி பிறவி நோய் விளைத்து வீயா
தேள் கையில் கொண்டது ஒக்கும் நிச்சம் நோய் செற்ற புன் தோல்
பூட்கையை முனியின் வாமன் பொன் அடி தொழு-மின் என்றான்
#3107
தன் உயிர் தான் பரிந்து ஓம்புமாறு போல்
மன் உயிர் வைகலும் ஓம்பி வாழுமேல்
இன் உயிர்க்கு இறைவனாய் இன்ப மூர்த்தியாய்
பொன் உயிராய் பிறந்து உயர்ந்து போகுமே
#3108
நெருப்பு உயிர்க்கு ஆக்கி நோய் செய்யின் நிச்சமும்
உருப்பு உயிர் இருவினை உதைப்ப வீழ்ந்த பின்
புரிப்புரி கொண்டு போய் பொதிந்து சுட்டிட
இருப்பு உயிர் ஆகி வெம் எரியுள் வீழுமே
#3109
மழை குரல் உருமு உவா ஓத மா கடல்
பிழைத்த ஓர் அரு மணி பெற்றது ஒக்குமால்
குழை தலை பிண்டியான் குளிர் கொள் நல்லறம்
தழை தலை சந்தன பொதும்பர் சார்ந்ததே
#3110
மல்கு பூம் கற்பக மரத்தின் நீழலான்
நல்குவான் ஒருவனை நயந்து நாடுமோ
பில்கு பூம் பிண்டியான் அமிர்து உண்டார் பிறர்
செல்வம் கண்டு அதற்கு அவா சிந்தை செய்யுமோ
#3111
மணி உயிர் பொன் உயிர் மாண்ட வெள்ளியின்
அணி உயிர் செம்பு உயிர் இரும்பு போல ஆம்
பிணி உயிர் இறுதியா பேசினேன் இனி
துணி-மினம் என தொழுது இறைஞ்சி வாழ்த்தினார்
#3112
விண்ணின் மேல் மலர் மழை பொழிய வீங்கு பால்
தெள் நிலா திரு மதி சொரிய தே மலர்
மண்ணின் மேல் மழ கதிர் நடப்பது ஒத்ததே
அண்ணலார் உலாய் நிமிர்ந்து அளித்த வண்ணமே
#3113
பால் மிடை அமிர்து போன்று பருகலாம் பயத்த ஆகி
வான்-இடை முழக்கின் கூறி வால் அற அமிழ்தம் ஊட்டி
தேன் உடை மலர்கள் சிந்தி திசை தொழ சென்ற பின் நாள்
தான் உடை உலகம் கொள்ள சாமி நாள் சார்ந்தது அன்றே
#3114
உழ வித்தி உறுதி கொள்வார் கொண்டு உய்ய போகல் வேண்டி
தொழு வித்தி அறத்தை வைத்து துளங்கு இமில் ஏறு சேர்ந்த
குழவி தண் திங்கள் அன்ன இருக்கையன் ஆகி கோமான்
விழ வித்தாய் வீடு பெற்றான் விளங்கி நால் வினையும் வென்றே
#3115
துந்துபி கறங்க ஆர்த்து துகில் கொடி நுடங்க ஏந்தி
அந்தரம் விளங்க எங்கும் அணிகம் ஊர்ந்து அமரர் ஈண்டி
வந்து பொன் மாரி சிந்தி மலர் மழை சொரிந்து சாந்தும்
கெந்தம் நாறு அகிலும் கூட்டி கிளர் முடி உறுத்தினரே
#3116
முளைத்து எழு பருதி மொய் கொள் முழங்கு அழல் குளித்ததே போல்
திளைத்து எழு கொடிகள் செம் தீ திரு மணி உடம்பு நுங்க
விளைத்த பின் விண்ணும் மண்ணும் மங்கலம் வகையில் செய்து
வளை பொலி கடலின் ஆர்த்து வலம் கொண்டு நடந்த அன்றே
#3117
கேவல மடந்தை என்னும் கேழ் கிளர் நெடிய வாள் கண்
பூ அலர் முல்லை கண்ணி பொன் ஒரு பாகம் ஆக
காவலன் தான் ஓர் கூறா கண் இமையாது புல்லி
மூ உலகு உச்சி இன்ப கடலினுள் மூழ்கினானே
#3118
பிரிதலும் பிணியும் மூப்பும் சாதலும் பிறப்பும் இல்லா
அரிவையை புல்லி அம் பொன் அணி கிளர் மாடத்து இன் தேன்
சொரி மது மாலை சாந்தம் குங்குமம் சுண்ணம் தேம் பாய்
விரி புகை விளக்கு விண்ணோர் ஏந்த மற்று உறையும் அன்றே
#3119
வல்லவன் வடித்த வேல் போல் மலர்ந்து நீண்டு அகன்ற வாள் கண்
மெல்லவே உறவி ஓம்பி ஒதுங்கியும் இருந்தும் நின்றும்
முல்லை அம் சூட்டு வேயின் முரிந்து போம் நுசுப்பின் நல்லார்
மல்லல் குன்று ஏந்தி அன்ன மா தவம் முற்றினாரே
#3120
சூழ் பொன் பாவையை சூழ்ந்து புல்லிய
காழக பச்சை போன்று கண் தெறூஉம்
மாழை நோக்கினார் மேனி மாசு கொண்டு
ஏழை பெண் பிறப்பு இடிய சிந்தித்தார்
#3121
ஆசை ஆர்வமோடு ஐயம் இன்றியே
ஓசை போய் உலகு உண்ண நோற்ற பின்
ஏசு பெண் ஒழித்து இந்திரர்களாய்
தூய ஞானமாய் துறக்கம் எய்தினார்
#3122
காமவல்லிகள் கலந்து புல்லிய
பூ மென் கற்பக பொன் மரங்கள் போல்
தாம வார் குழல் தையலார் முலை
ஏமம் ஆகிய இன்பம் எய்தினார்
#3123
கலவி ஆகிய காமத்தின் பயன்
புலவி ஆதலால் பொன் அம் கொம்பு அனார்
உலவு கண் மலர் ஊடல் செவ்வி நோக்கு
இலை கொள் பூணினார் இதயம் போழ்ந்ததே
#3124
பூவின் உள்ளவள் புகுந்து உம் உள்ளத்தாள்
நாவில் பெண் பெயர் நவிற்றினீர் என
காவி கண் கடை இடுக கால் சிலம்பு
ஆவித்து ஆர்த்தன அம் மென் குஞ்சியே
#3125
நெஞ்சின் நேர் இழை வருந்தும் என்று பூம்
குஞ்சி ஏற்றது குறி கொள் நீ எனா
பஞ்சின் மெல் அடி பாவை பூ_நுதால்
அஞ்சினார்க்கு அது ஓர் தவறது ஆகுமே
#3126
தவளை கிண்கிணி தாமம் சேர்த்தியும்
குவளை கண் மலர் கோலம் வாழ்த்தியும்
இவளை கண்ட கண் இமைக்குமோ எனா
திவள தே மலர் கண்ணி சேர்த்தியும்
#3127
பல் மணி கதிர் பரவை மேகலை
மின் அணிந்து உக திருத்தி வெம் முலை
பொன் அணிந்து பூஞ்சுண்ணம் தைவர
நல் மணி குழை இரண்டும் நக்கவே
#3128
செய்த நீர்மையார் செயப்பட்டார்கள் தாம்
எய்தி யாவையும் உணர்க என்ப போல்
மை அவாம் குழல் மடந்தை குண்டலம்
நைய நின்று எலாம் நாண நக்கவே
#3129
செல்வ கிண்கிணி சிலம்ப தேன் சொரி
முல்லை கண்ணிகள் சிந்த மொய் நலம்
புல்லி பூண்ட தார் புரள மேகலை
அல்குல் வாய் திறந்து ஆவித்து ஆர்த்தவே
#3130
இலங்கு கொம்பு அனார் காமம் என்னும் பேர்
கலந்த கள்ளினை கை செய்து ஐயென
மலர்ந்து வாய் வைத்தார் மணி கொள் வள்ளத்தே
நலம் கொள் சாயலார் நடுங்கி நையவே
#3131
வெம்மை கொண்ட தேன் அமிர்தம் மெல்லவே
அம்மை அம் சொலார் ஆர உண்டவர்
தம்மை தாம் மகிழ்ந்து உறைய இத்தலை
செம்மை மாதவர்க்கு உற்ற செப்புவாம்
#3132
நாள் கண் கூடிய நகை வெண் திங்கள் போல்
காளை நந்தனும் தோழன்மார்களும்
நாளும் நாளினும் நடுங்க நல் தவம்
தாளின் ஈட்டினார் தம்மை தாம் பெற்றார்
#3133
பாவனை மரீஇ பட்டினியொடும்
தீவினை கழூஉம் தீர்த்தன் வந்தியா
பூ உண் வண்டு அன கொட்பின் புண்ணியர்
நாவின் வேட்கையும் நஞ்சின் அஞ்சினார்
#3134
கருவில் கட்டிய காலம் வந்தென
உருவ வெண் பிறை கோட்டின் ஓங்கிய
அருவி குன்றின் மேல் முடித்திட்டு ஐவரும்
திருவின் தோற்றம் போல் தேவர் ஆயினார்
#3135
அனங்கனை தவம் செய அழன்று கண்டவர்
மனங்களை கவர்ந்திடும் மணி கண் வெம் முலை
பொனம் கொடி மயில் அனார் புல்ல மா பிடி
இனம் பயில் கடா களிற்று இன்பம் எய்தினார்
#3136
காது அணிந்த தோடு ஒருபால் மின்னு வீச கதிர் மின்னு குழை ஒருபால் திருவில் வீச
தாது அணிந்த தாமங்கள் ஒருபால் சோர தாமரை கண் தாம் இரங்க புருவம் ஆட
மாது அணிந்த நோக்கினார் அல்குல் காசும் மணி மழலை கிண்கிணியும் சிலம்பும் ஏங்க
போது அணிந்த தார் உடைய பொருது பொங்கி புணர் முலைகள் போர்க்களம் தாம் கண்ட அன்றே
#3137
முழுது ஆரம் மின்னும் முலை குவட்டினால் மொய் மார்பில் குங்கும சேறு இழுக்கி வீழ
உழுது ஆர்வம் வித்தி உலப்பு இலாத நுகர்ச்சி விளைத்து அலர்ந்த கற்பகத்தின் கீழ்
எழுது ஆர் மணி குவளை கண் வலையுள் பட்டு இமையார்கள் காமம் அறு சுழியுள் ஆழ்ந்து
இழுதார் மென் பள்ளி பூம் தாது பொங்க இருவர் பாலர் ஆகி இன்புறுபவே
#3138
மண் கனிந்த பொன் முழவ மழையின் விம்ம மா மணி யாழ் தீம் குழல்கள் இரங்க பாண்டில்
பண் கனிய பாவைமார் பைம்பொன் தோடும் குண்டலமும் தாம் பதைப்ப இருந்து பாட
விண் கனிய கிண்கிணியும் சிலம்பும் ஆர்ப்ப முரி புருவ வேல் நெடும் கண் விருந்து செய்ய
கண் கனிய நாடகம் கண்டு அமரர் காம கொழுந்து ஈன்று தம் தவம் தாம் மகிழ்ந்தார் அன்றே
#3139
முருகு உடைந்த பூம் கோதை முத்து அணிந்த தோளார்
ஒரு குடங்கை கண்ணால் உளம் கழிய ஏவுண்டு
அருகு அடைந்த சாந்து அழிய அம் முலை மேல் வீழ்ந்தார்
திரு அடைந்த நீள் மார்பின் தேன் துளிக்கும் தாரார்
#3140
நிலவி ஒளி உமிழும் நீள் இலை வேல் கண்ணார்
கலவி தூது ஆகிய காம கை காய்த்தி
புலவி படை பயில பூ செய்த கோலம்
உலவி துறக்கம் ஒளி பூத்தது அன்றே
#3141
புருவ சிலை நுதல் பொன் துஞ்சும் அல்குல்
உருவ துடி இடையார் ஊடல் உப்பு ஆக
திருவின் திகழ் காம தேன் பருகி தேவர்
பொருவற்கு அரிய புல கடலுள் ஆழ்ந்தார்
#3142
முகடு மணி அழுத்தி முள் வயிரம் உள் வேய்ந்து முத்தம் வாய் சூழ்ந்து
அகடு பசு மணி ஆர்ந்து அங்காந்து இருள் பருகி அடு பால் விம்மி
பகடு பட அடுக்கி பண்ணவனார் தம் ஒளி மேல் நின்றால் போலும்
தகடு படு செம்பொன் முக்குடையான் தாள் இணை என் தலை வைத்தேனே

#3143
முந்நீர் வலம் புரி சோர்ந்து அசைந்து வாய் முரன்று முழங்கி ஈன்ற
மெய் நீர் திரு முத்து இருபத்தேழ் கோத்து உமிழ்ந்து திருவில் வீசும்
செம் நீர் திரள் வடம் போல் சிந்தாமணி ஓதி உணர்ந்தார் கேட்டார்
இ நீரர் ஆய் உயர்வர் ஏந்து பூம் தாமரையாள் காப்பாளாமே

#3144
செந்தாமரைக்கு செழு நாற்றம் கொடுத்த தேம் கொள்
அம் தாமரை ஆள் அகலத்தவன் பாதம் ஏத்தி
சிந்தாமணியின் சரிதம் சிதர்ந்தேன் தெருண்டார்
நந்தாவிளக்கு சுடர் நல் மணி நாட்ட பெற்றே


#3145
செய் வினை என்னும் முந்நீர் திரை-இடை முளைத்து தேம் கொள்
மை வினை மறு இலாத மதி எனும் திங்கள் மாதோ
மொய் வினை இருள் கண் போழும் முக்குடை மூர்த்தி பாதம்
கைவினை செய்த சொல் பூ கைதொழுது ஏத்தினனே

#3146
திங்கள் மும் மாரி பெய்க திரு அறம் வளர்க செங்கோல்
நன்கு இனிது அரசன் ஆள்க நாடு எலாம் விளைக மற்றும்
எங்கு உள அறத்தினோரும் இனிது ஊழி வாழ்க எங்கள்
புங்கவன் பயந்த நன்னூல் புகழொடும் பொலிக மிக்கே
 


No comments:

Post a Comment