seevagachinthamani - 13

12 இலக்கணையார் இலம்பகம்
 
 
#2378
அலங்கல் ஏந்திய குங்கும அரு வரை மார்பன்
கலந்த காரிகையவர்களை தருக என அருள
இலங்கு மாலை வெள் அருவிய எழில் வரை மணந்த
புலம்பு நீள் சுரம் போய் கொணர்ந்து அருளொடும் கொடுத்தார்

#2379
மோடு கொள் நிலா முளைத்து எழு பருதி கண்டு அறியா
பாடு வண்டொடு பறவையும் நடுக்குறும் காப்பின்
மாட மா மணி சிவிகையின் மயில் என இழிந்தார்
வீடு கண்டவர் போன்று மின்னிடு கொடி அனையார்

#2380
அன்று சூடிய மாலையர் ஆடிய சாந்தர்
பொன்றி வாடிய மேனியர் பொன் நிறை சுருங்கார்
சென்று காதலன் திரு விரி மரை மலர் அடி மேல்
ஒன்றி வீழ்ந்தனர் குவளை கண் உவகை முத்து உகவே

#2381
இலங்கு பூண் வரை மார்பு உற எடுத்து அவன் முயங்க
மலங்கி வாள் கண்கள் வரு பனி சுமந்து உடன் வெருவி
கலங்கு நீர் இடை கலக்குறு கரும் கயல் இணை போல்
புலம்பி ஓடின செவியுற நெடியன பொலிந்தே

#2382
வேனல் வாய்ப்பட்டு விரி முகை தளிரொடு கரிந்த
கான கார் முல்லை கார் மழைக்கு எதிர்ந்தன போல
மான மங்கையர் வாட்டமும் பரிவும் தம் கணவன்
தேன் நெய் மார்பகம் தீண்டலும் தீர்ந்து ஒளி சிறந்தார்

#2383
சேல் உண் கண்ணியர் சிலம்பொடு திலகமும் திருத்தி
மாலை நல்லன மது கமழ் தகையன மிலைச்சி
கோல மென் முலை குங்குமம் இடு கொடி எழுதி
சோலை வேய் மருள் தோள் முத்தும் தொழுதக அணிந்தார்
#2384
நஞ்சு மேய்ந்து இளம் களி கயல் மதர்ப்பன போல
அஞ்சி வாள் கண்கள் மதர்த்தன அலர்ந்து உடன் பிறழ
பஞ்சு சூழ் மணி மேகலை பரிந்து அவை சொரிய
வஞ்சி நுண் இடை கவின் பெற வைகினன் மாதோ
#2385
அரி பொன் கிண்கிணி அணி கிளர் சிலம்பொடு சிலம்பும்
திருவ சீறடி செழு மலர் கொழும் கயல் மழை கண்
உருவ நுண் இடை ஒளி மணி வரு முலை உரு ஆர்
எரி பொன் மேகலை இலக்கணை கடிவினை நொடிவாம்
#2386
ஆழி மால் கடல் அகன் பெரும் கேள்விகள் துறைபோய்
ஊழின் அன்றியும் உறுவினை ஓரையின் முடிப்பான்
சூழி யானையும் துளங்கு பொன் சிவிகையும் உடையான்
வேழ வேந்தற்கு விழு பெரும் கணி விரித்து உரைத்தான்
#2387
ஓங்கு கொற்றவற்கு ஓதிய உயர் பெருநாளால்
வீங்கு வெள்ளி அம் குன்று என விளங்கு ஒளி உடைய
தேம் கொள் மாலையும் திலகமும் அணிந்த திண் குணத்த
பாங்கின் பண்ணின நூற்றெட்டு படு மத களிறே
#2388
விளங்கு வெண் துகில் உடுத்து வெண் சாந்து மெய் பூசி
துளங்கு மஞ்சிகை துளை சிறு காதினுள் துளங்க
வளம் கொள் மாலைகள் சூடி முத்து அணிந்து வண் முரசம்
களம் கொள் வேழத்தின் ஏற்றினர் கடி முரசு அறைவான்
#2389
கேள்-மின் கேள்-மின்கள் யாவரும் இனியன கேள்-மின்
பூண்-மின் நித்தில மணி வடம் பூசு-மின் சாந்தம்
வாள் மின் நுண் இடை வருந்தினும் சூட்டு அணிந்து அழகு ஆர்
ஆணம் ஆகிய அரு விலை வண்ண பட்டு உடு-மின்
#2390
பிள்ளை வெண் பிறை சிறு நுதல் பெரும் பட்டம் அணி-மின்
உள்ள மேனியும் ஒளிர் மணி கலங்களின் புனை-மின்
வள்ளல் வாய்மொழி ஆன் படு பால் அமிர்து அல்லால்
உள்ளம் மேவினும் பிற உண பெறீர் எழு நாளும்
#2391
வாழை மல்கிய மணி குலை கமுகொடு நடு-மின்
தாழ நாற்று-மின் தாமங்கள் அகில் குடம் பரப்பி
யாழின் பாடலும் ஆடலும் அரங்கு-தோறும் இயற்றி
போழும் மால் விசும்பு என பல பொலம் கொடி எடு-மின்
#2392
மாலை வாள் முடி மன்னவன் மணவினை எழு நாள்
சீலம் இல்லன சின களிறு அகற்றுக என்று அணிந்த
கோலம் ஆர் முரசு இடி உமிழ் தழங்கு என முழங்க
நீல மா கடல் நெடு நகர் வாழ்க என அறைந்தார்
#2393
முரசம் ஆர்ந்த பின் மூ இரு நாள்கள் போய்
விரைவோடு எங்கணும் வெள் வளை விம்மின
புரை இல் பொன் மணி யாழ் குழல் தண்ணுமை
அரவ வானின் அதிர்ந்த அணி முழா
#2394
விண் விளக்குவ போல் விரி பூம் துகள்
கண் விளக்கி கலந்த வெண் சாந்தினால்
மண் விளக்கி மலர் பலி சிந்தினார்
பண் விளக்கிய பைங்கிளி இன் சொலார்
#2395
ஆய்ந்த மோட்டின ஆன்-படு பால் உலை
போந்து பொங்கிய ஆவியினால் பொலிந்து
ஏந்து மாடங்கள் தாம் இழின் என்பன
பூம் துகில் புறம் போர்த்தன போன்றவே
#2396
திருவின் நல்லவர் செம் மலர் சீறடி
பரவி ஊட்டிய பஞ்சு அரத்த களி
விரவி மீ நிலம் சேர்ந்து ஒளி பூத்து உராய்
குருதி வான் நிலம் கொண்டது போன்றதே
#2397
பால் வெண் திங்கள் மணி கை படுத்தவை
போலும் ஆடியில் நோக்கி பொலம் கல
கோலம் செய்பவர் கோல வெறிப்பினால்
மாலை வண்டினம் மாலை கண் கொண்டவே
#2398
போக மா மழை போழ்ந்து புத-தொறும்
மாகம் ஏந்துவ போல் மணி தோரணம்
ஆக நாற்றின தாமம் மணி குடம்
ஏக மாநகர் வீதி நிரைத்தவே
#2399
ஆடல் மங்கையர் கிண்கிணி ஆர்ப்பு ஒலி
பாடல் இன் ஒலி பண் அமை யாழ் ஒலி
மோடு கொள் முழவின் முழக்கு ஈண்டிய
மாட மாநகர் மா கடல் ஒத்ததே
#2400
சுந்தர துகள் பூம் துகள் பொன் துகள்
அந்தரத்து எழும் இன் புகையால்-அரோ
இந்திரன் நகர் சாறு அயர்ந்து இவ்வழி
வந்து இருந்தது போல் மலிவு உற்றதே
 
 
#2401
நிரந்து கன்னலும் நெய்யும் நீந்த பெய்து
இரந்து பால் அமிர்து எங்கும் ஊட்டுவார்
பரந்து பூம் துகில் பல் மணி கலம்
சுரந்து கொள்க என சுமக்க நல்குவார்
#2402
வருக்கையின் பழம் வாழையின் கனி
திரு கொள் மாங்கனி தெளித்த தேறலை
கருப்பு சாற்றொடு கலந்து கைசெய்து
புரிந்த தெங்கு இளநீரும் பூரிப்பார்
#2403
கூந்தல் ஏந்திய கமுகம் காய் குலை
ஆய்ந்த மெல் இலை பளிதம் ஆதியா
மாந்தர் கொள்ளை கொண்டு உண்ண மா நிலம்
ஏந்தலாம் படித்து அன்றி ஈட்டுவார்
#2404
தூமம் ஆர்ந்தன துப்புரவுகள்
ஏமம் ஆயின ஏந்தி நிற்றலால்
நாம நல் நகர் நல் பொன் கற்பகம்
காமவல்லியும் களம் கொண்டிட்டதே
#2405
வழு இல் மாந்தரும் மாவும் மல்கிய
தொழுதி தன்னை யான் சுமக்கலேன் எனா
முழுதும் மண்மகள் முற்றும் வாய் திறந்து
அழுதிட்டாள் நெய்யும் பாலும் ஆகவே
#2406
கொடி எழுந்து அலமரும் கோயில் வாயில்கள்
மடல் எழுந்து அலமரும் கமுகும் வாழையும்
மடி இரும் துகில் உடை மா கணாடியும்
புடை திரள் பூரண குடமும் பூத்தவே
#2407
கடி மலர் மங்கையர் காய் பொன் கிண்கிணி
உடை மணி பொன் சிலம்பு ஒலிக்கும் கோயிலுள்
குடை நிழல் மன்னர் தம் கோதை தாது வேய்ந்து
அடி நிலம் பெறாதது ஓர் செல்வம் ஆர்ந்ததே
#2408
துளங்கு பொன் குழைகளும் தோடும் சுண்ணமும்
கிளர்ந்து அகில் சாந்து பூ கமழ்ந்து கேழ் கிளர்
இளம் கதிர் எறி மணி பூணும் ஆரமும்
விளங்கி மேல் உலகினை வெறுப்பித்திட்டதே
#2409
விரிந்து வான் பூத்து என விதானித்து ஆய் கதிர்
அரும் கல பொடியினால் ஆய் பொன் பூ மகள்
மருங்குல் போல் குயிற்றிய நகரில் மங்கல
பெரும் தவிசு அடுத்தனர் பிணையல் மாலையார்
#2410
நலம் கிளர் காணமும் மணியும் நன் பொனும்
வலம்புரி முத்தமும் குவித்த மங்கலம்
இலங்கின மணி விளக்கு எழுந்த தீம் புகை
கலந்த ஆயிரத்து எண்மர் கவரி ஏந்தினர்
#2411
மங்கல பெரும் கணி வகுத்த ஓரையால்
மங்கல மன்னவன் வாழ்த்த ஏறலும்
மங்கல அச்சுதம் தெளித்து வாய் மொழி
மங்கல கருவி முன் உறுத்தி வாழ்த்தினார்
#2412
முழங்கின இன்னியம் மொய்த்தது ஏத்து ஒலி
கொழும் கயல் கண்ணினார் கொண்டு பொன் அகல்
இழிந்தனர் திரு மயிர் ஏற்ப நீரதில்
நிழன்றன சாமரை நிரை சங்கு ஆர்த்தவே
#2413
பால்கடல் முளைத்த ஓர் பவள பூம் கொடி
போல் சுடர்ந்து இலங்கு ஒளி பொன் செய் கோதையை
நாள் கடி மயிர் வினை நன் பொன் தாமரை
பூ கடி கோயிலாள் புலம்ப ஆக்கினார்
#2414
விரை தலை மாலை சூட்டி மின் அனார் அம் கை சேப்ப
அரைத்த சாந்து அணிந்த கோட்ட ஆயிரத்து எட்டு வேழம்
நிரைத்தன மண்ணு நீர்க்கு முரசொடு முழவம் விம்ம
வரை தலை துவலை போன்று மதம் நிலம் நனைப்ப அன்றே
#2415
கான் முகம் புதைத்த தெள் நீர் கவர்ந்து பொன் குடங்கள் ஆர்த்தி
ஊன் முகம் புதைத்த வேல் கண்ணவர் களிற்று உச்சி ஏற்றி
வான் முகம் புதைத்த பல் மீன் மதி என மருண்டு நோக்க
தேன் முகம் புதைத்த மாலை குடை நிழல் திருவில் தந்தார்
#2416
இழைத்த பொன் நகரின் வெள்ளி இடு மணை மன்னர் ஏத்த
குழை பொலிந்து இலங்கு காதின் கொற்றவன் இருந்த பின்றை
மழை கவின்று எழுந்த வார் கொள் மணி நிற அறுகை நெய் தோய்த்து
எழில் குழை திருவில் வீச மகளிர் நெய் ஏற்றுகின்றார்
#2417
மின் உமிழ் வைர கோட்டு விளங்கு ஒளி இமயம் என்னும்
பொன் நெடும் குன்றம் போல பூமி மேல் நிலவி வையம்
நின் அடி நிழலின் வைக நேமி அம் செல்வன் ஆகி
மன்னுவாய் திருவோடு என்று வாழ்த்தி நெய் ஏற்றினாரே
#2418
நீடு நீர் மணி நீரும் அல்லவும்
ஆடு நீரன அத்தும் மண்களும்
ஊடு மின் அனார் உரிஞ்சி ஆட்டினார்
கூடி இன்னியம் குழுமி ஆர்த்தவே
#2419
திருவ மன்னவன் சென்னி தேர் மன்னர்
பொரு வெண் பொன் குடம் உமிழும் பொங்கு நீர்
பருதி தன் ஒளி மறைய பால் மதி
சொரியும் தீம் கதிர் தோற்றம் ஒத்தவே
#2420
துளங்கு மா மணி தூண்கள் நான்கினால்
விளங்கு வெள்ளி வேய்ந்து ஆய்ந்த மாலை சூழ்
வளம் கொள் மா மணி கூடம் சேர்த்தினார்
இளம் கதிர்-கொலோ இருந்தது என்னவே
#2421
ஆய்ந்த பால் நிறம் ஆய் பொன் கம்பலம்
வேய்ந்த பொங்கு அணை வெண் பொன் கட்டில் மேல்
நீந்து நித்தில விதான நீழலாற்கு
ஏந்தினார் அணி ஏந்து நீர்மையார்
#2422
ஈரம் கொன்ற பின் இருள் மணி சுடர்
நீர வாய் நிழல் உமிழும் குஞ்சியை
ஆர் அகில் புகை வெறியினால் அமைத்து
ஏர்பட செய்தார் எழுதிற்று என்னவே
#2423
ஈடு இல் சந்தனம் ஏந்து தாமரை
தோடின் பயில்வினால் பூசி தூ மலர்
வீடு பெற்றன இன்றொடு என்னவே
சூடினான்-அரோ சுரும்பு உண் கண்ணியே
#2424
மல் பக மலர்ந்து அகன்ற மார்பின் மேல்
வில் பக குலாய் ஆரம் வில்லிட
கற்பகம் மலர்ந்து அகன்றதோ என
பொற்பு அக பொலம் கலங்கள் தாங்கினான்
#2425
உருவம் ஆர்ந்தன உரோம பட்டு உடுத்து
எரியும் வார் குழை சுடர இந்திர
திருவில் அன்ன தார் திளைப்ப தேம் குழல்
அரி பெய் கண்ணியர்க்கு அநங்கன் ஆயினான்
#2426
தா இல் தாழ் வடம் தயங்க நீர் உறீஇ
மேவி அச்சுதம் தெளித்த பின் விரைந்து
ஆவியும் புகை சுழற்றி ஆடியும்
வீவு இல் வெம் சுடர் விளக்கு காட்டினார்
#2427
உவரி மா கடல் ஒல்லென் வெண் திரை
இவரி எழுவ போன்று இலங்கு வெண் மயிர்
கவரி தொகை பல வீசும் காவலர்
இவர் இ தொகை என்பது இன்றி ஆயினார்
#2428
அறுகு வெண் மலர் அளாய வாச நீர்
இறைவன் சேவடி கழுவி ஏந்திய
மறு இல் மங்கலம் காட்டினார் மண
குறைவு இல் கைவினை கோலம் ஆர்ந்ததே
#2429
ஊன் நிமிர் கதிர் வெள் வேல் உறை கழித்தன போலும்
தேன் இமிர் குவளை கண் திருமகள் அனையாளை
பால் நிமிர் கதிர் வெள்ளி மணை மிசை பலர் வாழ்த்தி
வான் நிமிர் கொடி அன்னார் மணி அணை மிசை வைத்தார்
#2430
வரை விளை வளர் பொன்னே வலம்புரி ஒரு மணியே
திரை விளை அமிர்தமே திரு விழை என ஏத்தி
வரை வளை முழ விம்ம மணி கிளர் ஒலி ஐம்பால்
அரை விளை கலை நல்லார் அறுகின் நெய் அணிந்தனரே
#2431
கள் அவிழ் கமழ் கோதை காவலன் திருமகளை
வெள் அணி மத யானை விழு மணி குடம் ஏற்றி
தெள் அறல் மண்ணு நீர் ஆட்டினர் தே மலர் மேல்
ஒள் இழையவள் ஒத்தாள் உருவ நுண் நுசுப்பினாள்
#2432
வான் மலர் நுரை சூடி மணி அணி கலன் சிந்தா
தான் இள மணல் எக்கர் தவழ் கதிர் மணி ஆரம்
ஏனைய நறும் சுண்ணம் குங்குமம் இடும் களியா
தேன் இனம் இசை பாட தீம் புனல் நடந்ததே
#2433
நான்ற பொன் மணி மாலை நகு கதிர் பவள தூண்
ஊன்றின ஒளி முத்த மண்டபத்து ஒளிர் திங்கள்
கான்றன கதிர் காய்த்தும் வட்டணை கதிர் முத்தம்
ஈன்ற பொன் விதானத்தின் நீழல் உய்த்து இரீஇயினரே
#2434
மை அணி மத யானை மத்தக அகல் அல்குல்
நெய் அணி குழல் மாலை நிழல் உமிழ் குழை மங்கை
மெய் அணி கலன் மாலை மின் இரும் துகில் ஏந்தி
கை அணி குழல் மாலை கதிரி முலையவர் சூழ்ந்தார்
#2435
அம் வளை அவிர் ஆழி கால் பொலிந்து அழகார்ந்த
மை விளை கழுநீர் கண் விலாசியும் அணி அல்குல்
கை வளை அலங்காரமாலையும் கமழ் கோதை
நைவளம் மிகு சாயல் நங்கையை புனைகின்றார்
#2436
யானையுள் அரசன் தன் அணி கிளர் வல மருப்பு ஈர்ந்து
ஊனம் இல் ஒளிர் செம்பொன் பதித்து ஒளி மணி அழுத்தி
வான் மணம் உற செய்த மங்கல மணி சீப்பு
தான் முகில் கழி மதி போல் தன் உறை நீக்கினாளே
#2437
மை நூற்று அனைய மா வீழ் ஓதி வகுத்தும் தொகுத்தும் விரித்தும்
கை நூல் திறத்தின் கலப்ப வாரி கமழும் நான கலவை
ஐ நூல் திறத்தின் அகிலின் ஆவி அளைந்து கமழ ஊட்டி
எ நூல் திறமும் உணர்வாள் எழில் ஏற்று இமிலின் ஏற்ப முடித்தாள்
#2438
கரும்பும் தேனும் அமிழ்தும் பாலும் கலந்த தீம் சொல் மடவாட்கு
அரும்பும் இலையும் மயக்கி ஆய்ந்த முல்லை சூட்டு மிலைச்சி
திருந்து திங்கள் சூழ்ந்த மின்னின் செம்பொன் பட்டம் சேர்த்தி
விரும்பும் முத்தம் மாலை நான்ற விழு பொன் மகரம் செறித்தாள்
#2439
கள்ளும் தேனும் ஒழுகும் குவளை கமழ் பூ நெரித்து வாங்கி
கிள்ளை வளை வாய் உகிரின் கிள்ளி திலகம் திகழ பொறித்து
தெள்ளும் மணி செய் சுண்ணம் இலங்க திரு நீர் நுதலின் அப்பி
உள்ளம் பருகி மதர்த்த வாள் கண் உருவம் மையில் புனைந்தாள்
#2440
நாகம் மருப்பின் இயன்ற தோடும் நலம் கொள் சுறவு குழையும்
போக நீக்கி பொருவில் திருவில் உமிழ்ந்து மின்னு பொழியும்
ஏகம் ஆகி எரியும் மணியின் இயன்ற கடிப்பு வாங்கி
மேக விசும்பின் தேவர் விழைய விளங்க சேர்த்தினாளே
#2441
விலங்கு அரம் பொருத சங்கின் வெள் வளை தெளிர்க்கும் முன்கை
நலம் கிளர் பவளம் நன் பொன் விரல் மணி ஆழி மின்ன
கலம் தின்று பணைத்த தோளும் கவின் வளர் கழுத்தும் ஆர்ந்த
வலம்புரி ஈன்ற முத்தம் மணி நிலா நக்க அன்றே
#2442
மா மணி முகடு வேய்ந்த மரகத மணி செப்பு அன்ன
தூ மணி முலைகள் தம்மை தொழுதக கமழும் சாந்தின்
காமரு காமவல்லி கொடி கவின் கொண்டு பூத்து
தூ மணி கொழுந்து மென் தோள் துயல் வர எழுதினாளே
#2443
நாண் சுமக்கலாத நங்கை நகை மின்னு நுசுப்பு நோவ
பூண் சுமக்கலாத பொன் ஞாண் வடத்தொடு புரள நோக்கி
பாண் குலாய் வண்டு பாடும் படு கணை மறந்து காமன்
காண்கிலேன் கடிய என்னா உருகி மெய் கரந்திட்டானே
#2444
அவா கிடந்து அகன்ற அல்குல் அணி கிளர் திருவில் பூப்ப
தவா கதிர் காசு கண்டார் ஆவியை தளர சூட்டி
கவாய் கிடந்து அணங்கு நாறும் கண் கொளா பட்டு உடுத்தாள்
உவா கதிர் திங்கள் அம் மென் கதிர் விரித்து உடுத்தது ஒத்தாள்
#2445
இடை செறி குறங்கு கௌவி கிம்புரி இளக மின்னும்
புடை சிறு பரடு புல்லி கிண்கிணி சிலம்போடு ஆர்ப்ப
நடை சிறு பாதம் கோல மணி விரல் அணிந்து நாகத்து
உடை சிறு நாவின் தோகை இரீஇயினள் மாலை சேர்ந்தாள்
#2446
அம் மலர் அடியும் கையும் அணி கிளர் பவழ வாயும்
செம் மலர் நுதலும் நாவும் திருந்து ஒளி உகிரோடு அம் கேழ்
விம்மிதப்பட்டு வீழ அலத்தகம் எழுதியிட்டாள்
அம் மலர் கண்டம் உள் இட்டு அரிவையை தெரிவை தானே
#2447
வாள் மதர் மழை கண் நோக்கி வரு முலை தடமும் நோக்கி
காண் வர அகன்ற அல்குல் கண் விருப்புற்று நோக்கி
பாணு வண்டு அரற்றும் கோல சிகழிகை படியும் நோக்கி
ஆண் விருப்புற்று நின்றார் அம் வளை தோளினாரே
#2448
தெருள்கலான் படைத்தவன் காணில் செவ்வனே
மருள்கலாதவர்களும் மருள்வர் மம்மர் நோய்
இருள் இலார் எங்ஙனம் உய்வர் இன்னதால்
அருள் இலார் அவள் நலம் அணிந்த வண்ணமே
#2449
அலர்ந்த அம் தாமரை அல்லி பாவையை
புலந்து கண் சிவந்தன போன்று நீர் பிரிந்து
இலங்கி மின் உமிழ்ந்து உலாம் மேனி ஏந்து பொன்
மலர்ந்தது ஓர் கற்பக மணி கொம்பு ஆயினாள்
#2450
இருள் துணித்து இடைஇடை இயற்றி வெண்ணிலா
சுருள் துணித்து ஒரு வழி தொகுத்தது ஒத்ததே
மருள் தகு மல்லிகை மாலை வல்லவன்
பொருள் தக தொடுத்தன புனைந்த பூஞ்சிகை
 
 
#2451
கோ மகள் உருவம் ஆய் கூற்றம் போந்தது
போ-மின் உம் உயிர் உய கொண்டு போய் மனம்
கா-மினம் என கலை சிலம்பு கிண்கிணி
தாம் மனும் வாயினால் சாற்றுகின்றவே
#2452
அருள் இலார் இவள் தமர் அன்னர்-ஆயினும்
உருள் திரை உலகு எலாம் உருளும் இன்று என
கருதின கவரி சாந்து ஆற்றி வெண்குடை
அரிவையை மறைத்தன ஆலவட்டமே
#2453
கரும்பே தேனே அமிர்தே காமர் மணி யாழே
அரும்பு ஆர் மலர் மேல் அணங்கே மழலை அன்னமே
சுரும்பு ஆர் சோலை மயிலே குயிலே சுடர் வீசும்
பெரும் பூண் மன்னன் பாவாய் பூவாய் பிணை மானே
#2454
அம் மெல் அனிச்சம் மலரும் அன்ன தூவியும்
வெம்மை ஆம் என்று அஞ்சி மெல்ல மிதியாத
பொம்மென் இலவ பூம் போது அன நின் அடி போற்றி
இம்மென் கலையார் இடு என்று ஏத்த ஒதுங்கினாள்
#2455
தூ மாண் தூம குடம் ஆயிரம் ஆய் சுடர் பொன் தூண்
தாம் ஆயிரம் ஆய் தகையார் மணி தூண் ஒரு நூறு ஆய்
பூ மாண் தாம தொகையால் பொலிந்த குளிர் பந்தர்
வேமானியர் தம் மகளின் விரும்ப நனி சேர்ந்தாள்
#2456
தேன் ஆர் காமன் சிலையும் கணையும் திறை கொண்ட
வான் ஆர் மதி வாள் முகமும் மட மான் மதர் நோக்கும்
கோனார் மகள் தன் வடிவும் நோக்கி குடை மன்னர்
ஆனார் கண் ஊடு அழல் போய் அமையார் ஆனாரே
#2457
வண்டு அலர் கோதை வாள் கண் வன முலை வளர்த்த தாயர்
கண்டு உயிர் உண்ணும் கூற்றம் கயிறு உரீஇ காட்டியிட்டார்
உண்டு உயிர் சிலர் கண் வாழ்க என்று உத்தரா சங்கம் வைத்தார்
தெண் திரை வேலி எங்கும் தீதினது ஆக மாதோ
#2458
கண்ணினால் இன்று கண்டாம் கூற்றினை காமர் செ வாய்
ஒள் நுதல் உருவ கோலத்து ஒரு பிடி நுசுப்பின் தீம் சொல்
வண்ணித்தல் ஆவது இல்லா வரு முலை மதர்வை நோக்கின்
பெண் உடை பேதை நீர்மை பெரும் தடம் கண்ணிற்று அம்மா
#2459
அரத்தகம் அகம் மருளி செய்த சீறடி அளிய தம்மால்
குரல் சிலம்பு ஒலிப்ப சென்னி குஞ்சி மேல் மிதிப்ப நோற்றான்
திருக்குலாய் கிடந்த மார்பின் சீவகன் நாங்கள் எல்லாம்
தரித்திலம் தவத்தை என்று தார் மன்னர் ஏமுற்றாரே
#2460
கோவிந்தன் என்னும் செம்பொன் குன்றின் மேல் பிறந்து கூர் வேல்
சீவகன் என்னும் செம் நீர் பவள மா கடலுள் பாய்வான்
பூ உந்தி அமுத யாறு பூம் கொடி நுடங்க போந்து
தா இரி வேள்வி சாலை மடுவினுள் தாழ்ந்தது அன்றே
#2461
சாண் இடை நெடிய வாள் கண் தளை அவிழ் குவளை பூப்ப
பூண் உடை முலையின் பாரம் பொறுக்கலா சுளிவின் மேலும்
நாண் அட நடுங்கி கையால் நகை முகம் புதைத்த தோற்றம்
சேண் இடை அரவு சேர்ந்த திங்களை ஒத்தது அன்றே
#2462
முத்து உமிழ் திரைகள் அங்கம் மொய் கொள் பாதாலம் முத்தீ
ஒத்தன வேலை வேள்வி ஒலி கடல் நான்கும் நாண
வைத்த நான் மறையும் நீந்தி வான் குணம் என்னும் சாலி
வித்தி மேல் உலகத்து இன்பம் விளைத்து மெய்கண்டநீரார்
#2463
தரு மணல் தருப்பை ஆர்ந்த சமிதை இ மூன்றினானும்
விரி மலர் அணிந்த கோல வேதிகை இயற்றி ஆன் நெய்
ஒரு மணி அகலுள் பெய்தோர் பொன் அகல் ஆர்ந்த தூபம்
இரு மணி அகலுள் நீர் பெய்து இட-வயின் இரீஇயினாரே
#2464
நெல் பொரி நிறைய பெய்து நிழல் உமிழ் செம்பொன் மூழி
கல் புரி கடவுள் ஆன் பால் அவியொடு கலப்ப வைத்து
முன் பெரியானை ஆக தருப்பையான் முடிந்து மூன்று
பொன் புரி வரையும் பொய்தீர் சமிதைகள் இரண்டும் வைத்தார்
#2465
மந்திர விதியின் மாண்ட சிறு விரல் தருப்பை சூழ்ந்து
முந்து நாம் மொழிந்த நெய்யை முனை முதிர் தருப்பை தன்னால்
மந்திரித்து அமைய முக்கால் மண்ணி மற்று அதனை நீக்கி
சிந்தித்து மறையின் செம் தீ தண்டிலத்து அங்கண் வைத்தார்
#2466
தண்டிலத்து அகத்தில் சாண் மேல் எண் விரல் சமிதை நானான்கு
எண்திசையவரும் ஏத்த துடுப்பு நெய் சொரிதலோடும்
கொண்டு அழல் கடவுள் பொங்கி வலம் சுழன்று எழுந்தது என்ப
தெண் திரை வேலி எங்கும் திரு விளையாட மாதோ
#2467
கரை உடை துகிலில் தோன்றும் காஞ்சன வட்டின் முந்நீர்
திரை இடை வியாழம் தோன்ற திண் பிணி முழவும் சங்கும்
முரசொடு முழங்கி ஆர்ப்ப மொய் கொள் வேல் மன்னர் ஆர்ப்ப
அரசருள் அரசன் ஆய் பொன் கலச நீர் அங்கை ஏற்றான்
#2468
குளிர் மதி கொண்ட நாகம் கோள் விடுக்கின்றதே போல்
தளிர் புரை கோதை மாதர் தாமரை முகத்தை சேர்ந்த
ஒளிர் வளை கையை செல்வன் விடுத்து அவள் இடக்கை பற்றி
வளர் எரி வலம் கொண்டு ஆய் பொன் கட்டில் தான் ஏறினானே
#2469
விளங்கு ஒளி விசும்பில் பூத்த அருந்ததி காட்டி ஆன் பால்
வளம் கொள பூத்த கோல மலர் அடி கழீஇய பின்றை
இளம் கதிர் கலத்தின் ஏந்த அயினி கண்டு அமர்ந்து இருந்தான்
துளங்கு எயிற்று உழுவை தொல் சீர் தோகையோடு இருந்தது ஒத்தான்
#2470
பொன் அம் காழில் பொலிந்த முத்து விதானம் புணர்ந்து தேன்
மன்னு மாலை பல தாழ்ந்து மண புகை விம்மி மல்கிய
அன்ன தூவி அடர் பஞ்சி அவிர் மயிர் ஆதி ஆக
பன்னி சொன்ன பதினைந்தும் படுத்தார் பாவைமார்களே
#2471
பனி மயிர் குளிர்ப்பன பஞ்சின் மெல்லிய
கனி மயிர் குளிர்ப்பன கண் கொளாதன
எலி மயிர் போர்வை வைத்து எழினி வாங்கினார்
ஒலி மயிர் சிகழிகை உருவ கொம்பு அனார்
#2472
விழுத்தகு மணி செவி வெண்பொன் கைவினை
எழில் பொலி படியகம் இரண்டு பக்கமும்
தொழில்பட வைத்தனர் துளும்பும் மேகலை
கழித்த வேல் இரண்டு கண்டு அனைய கண்ணினார்
#2473
அம் கருங்காலி சீவி ஊறவைத்து அமைக்கப்பட்ட
செம் களி விராய காயும் செம் பழு காயும் தீம் தேன்
எங்கணும் குளிர்ந்த இன் நீர் இளம் பசும் காயும் மூன்றும்
தம் களி செய்ய கூட்டி தையலார் கைசெய்தாரே
#2474
கைசெய்து கமழும் நூறும் காழ்க்கும் வெள் இலையும் காமம்
எய்த நன்கு உணர்ந்த நீரார் இன் முக வாசம் ஊட்டி
பெய்த பொன் செப்பும் மாலை பெரு மணி செப்பும் சுண்ணம்
தொய் அற பெய்த தூ நீர் தொடு கடல் பவள செப்பும்
#2475
தா மணி நான செப்பும் சலஞ்சல கலன் பெய் செப்பும்
தூ மணி துகில்கள் ஆர்த்த வலம்புரி துலங்கு செப்பும்
காம நீர் காமவல்லி கவின் கொண்டு வளர்ந்ததே போல்
நாம வேல் நெடும் கண் பாவை நயப்பன ஏந்தினாரே
#2476
விரி கதிர் ஆரம் மின்னி தார் எனும் திருவில் வீசி
குரிசில் மா மேகம் பெய்த கொழும் புயல் காம மாரி
அரிவை-தன் நெஞ்சம் என்னும் அகன் குளம் நிறைந்து வாள் கண்
கரி அமை சேறு சிந்தி கலிங்குகள் திறந்த அன்றே
#2477
தோக்கை அம் துகிலினாள் தன் துணை முலை பொருது சேந்த
ஏக்கு ஒசிவு இலாத வில்லான் இடு கொடி அகலம் இன் தேன்
தேக்கி வண்டு இமிரும் கோதை செல்வன் தார் உழக்க நைந்து
பூ கொய்து துவண்ட கொம்பின் பொற்பினள் ஆயினாளே
#2478
அணி தகு பவளம் ஏற்ப கடைந்து முத்து அழுத்தி அம் பொன்
துணித்து அடி விளிம்பு சேர்த்தி தொழுதக செய்த வண் கை
மணி சிரல் சிறகு நாண வகுத்த சாந்து ஆலவட்டம்
பணி தகு மகளிர் வீசி பாவையை குளிர்ப்பித்தாரே
#2479
சேந்து நீண்ட செழும் தாமரை கண்களின்
ஏந்தி மாண்ட முலை கண்களின் எழுதி
சாந்தம் ஆகம் எழுதி தகை மா மலர்
ஆய்ந்து சூட்டி அவன் அஞ்சலி செய்தான்
#2480
மணிசெய் வீணை மழலை குழல் பாண்டிலொடு
அணி செய் கோதையவர் பாடிய கீதம்
பணிவு இல் சாயல் பருகி பவள கொடி
மணியும் முத்தும் மலர்ந்திட்டது ஒத்தாளே
#2481
எய்த்து நீர் சிலம்பு இன் குரல் மேகலை
வித்தி மாதர் வருத்தம் விளைத்தாள் என
தத்து நீர் தவளை குரல் கிண்கிணி
உய்த்து ஓர் பூசல் உடன் இட்டன அன்றே
#2482
ஏந்தி நாங்கள் உடனே இடு பூசலை
வேந்தர் வேந்தன் கொடும் கோலினன் ஆகி
ஆய்ந்து கேட்டும் அருளான் என்று அவிந்தன
சாந்தம் ஏந்து முலையாள் கலம்-தாமே
#2483
வீடு மலி உலகினவர் போல விளையாடும்
தோடு மலி கோதையொடு துதைந்த வரை மின் போல்
ஆடு கொடி அணிந்த உயர் அலங்கல் வரை மார்பன்
கூடு மயிர் களையும் வகை கூறலுறுகின்றேன்
#2484
உச்சி வரை வளர்ந்து இளமை ஒழிந்த உயர் திண் காழ்
இ சவிய அல்ல என எழுதியவை ஊன்றி
கச்சு விளிம்பு அணிந்த தொழில் கம்பல விதானம்
நச்சு மணி நாகர் உறை நாகம் என விரித்தார்
#2485
முத்து அகம் நிறைந்த முளை எயிற்று மத யானை
மத்தகமும் திருமகள் தன் வடிவும்பட மாதோ
ஒத்த அகலம் எண் முழம் என்று ஓதி நகர் இழைத்தார்
மொய்த்து எரி செம்பொன் துகளின் நூல் முடிவு கண்டார்
#2486
உழுந்து பயறு உப்பு அரிசி அப்பம் அரும் கலங்கள்
கொழுந்து பட கூப்பி நனி ஆயிர மரக்கால்
செழுந்துபட செந்நெல் நிறைத்து அம் நுண் கொடி அறுகின்
கொழுந்து குறைத்து அணிந்து கொலை வேல் கணவர் அமைத்தார்
#2487
செம் கயல் இரட்டை திருவார் சுடர் கணாடி
பொங்கு கொடி வார் முரசம் தோட்டி புணர் கும்பம்
மங்கலங்கள் எட்டும் இவை மணியின் புனைந்து ஏந்தி
அம் கயல் கண் அரிவையர்கள் தென்கிழக்கில் நின்றார்
#2488
வெள் உருவ மாலை வட கீழ் இருவர் மின் போல்
ஒள் உருவ வாள் உருவி நின்றனர் தென்மேல்-பால்
உள் உருக நோக்கி உயர் உழுத்து அகலும் ஏந்தி
கள் உருவ மாலையவர் கைதொழுது நின்றார்
#2489
தோரை மலர் நீர் அறுகு துளும்பும் மணி தாலம்
ஆர வட மேல் திசை-கண் இருந்த அவிர் பஞ்சி
சீர் நிறைய வரை அகலம் திருத்த திரு நோக்கும்
வார முறை கருவி வடக்கு இருந்தன கண் மாதோ
#2490
பால் நுரையின் நொய்ய அணை பைம் கதிர்கள் சிந்தி
தான் இரவி திங்களொடு சார்ந்து இருந்ததே போல்
வேல் நிரை செய் கண்ணியொடு மெல் என இருந்தான்
வான் உயர ஓங்கு குடை மன்னர் பெருமானே
#2491
குள நெல் முன்றில் கனி தேன் சொரி சோலை குளிர் மணி
வளமை மல்கி எரிய மட மந்தி கை காய்த்துவான்
இளமை ஆடி இருக்கும் வனத்து ஈர்ம் சடை மா முனி
கிளையை நீங்கி கிளர் சாபத்தின் நாவிதன் ஆயினான்
#2492
ஆய்ந்த கேள்வி அவன் கான் முளையாய் வழி தோன்றினான்
தோய்ந்த கேள்வி துறைபோய் அலங்காரமும் தோற்றினான்
வேந்தன் தன்னால் களிற்று ஊர்தி சிறப்பொடு மேயினான்
வாய்ந்த கோலம் உடையான் பெரு மஞ்சிகர்க்கு ஏறு அனான்
#2493
நித்தில வடமும் பூணும் ஆரமும் நிழன்று தாழ
ஒத்து ஒளிர் குழைகள் காதில் நான்று பொன் ஊசல் ஆட
பைத்து அரவு அல்குல் பாவை கரக நீர் சொரிய பாங்கின்
வித்தகன் பூசி வெள் வேல் வேந்தனுக்கு இறைஞ்சினானே
#2494
நச்சு எயிற்று அரவின் நோக்கின் மன்னரை நடுங்க நோக்கி
வச்சிர வண்ணன் காப்ப வாழியர் ஊழி என்னா
அச்சுதம் கொண்டு மன்னன் அடி முடி தெளித்து நங்கை
உச்சி வண்டு இமிரும் மாலை ஒளி முடி சிதறினனே
#2495
வாக்கினில் செய்த பொன் வாள் மங்கல விதியின் ஏந்தி
ஆக்கிய மூர்த்தத்து அண்ணல் வல கவுள் உறுத்தி ஆர்ந்த
தேன் கண் இன் அகிலின் ஆவி தேக்கிடும் குழலினாளை
நோக்கலன் நுனித்து நொய்தா இட கவுள் உறுத்தினானே
#2496
ஆய்ந்த பொன் வாளை நீக்கி அவிர் மதி பாக கல் மேல்
காய்ந்த வாள் கலப்ப தேய்த்து பூ நிறீஇ காமர் பொன் ஞாண்
தோய்ந்த தன் குறங்கில் வைத்து துகிலினில் துடைத்து தூய்தா
வாய்ந்த கை புரட்டி மாதோ மருள்தக பற்றினானே
#2497
ஏற்றியும் இழித்தும் இடை ஒற்றியும்
போற்றி சந்தனம் பூசுகின்றான் என
கூற்று அனான் முகம் கோலம் செய்தான் கடல்
தோற்றும் செம் சுடர் போல சுடர்ந்ததே
#2498
கோதை பாரத்தினாலும் தன் நாணினும்
ஏதிலான் முகம் நோக்கும் இளிவினும்
பாதம் நோக்கிய பால் மதி வாள் முகம்
ஏதம் இன்றி எடுத்தனள் மெல்லவே
#2499
உருவ செம் கயல் ஒள் நிற புள் வெரீஇ
இரியல் உற்றன போன்று இணை கண் மலர்
வெருவி ஓட விசும்பில் குலாவிய
திருவில் போல் புருவங்கள் திருத்தினான்
#2500
ஆரம் மின்ன அரும் குயம் தான் களைந்து
ஓரும் ஒண் திறல் கத்தரிகை தொழில்
நீரின் செய்து அடி ஏத்துபு நீங்கினான்
தாரன் மாலை தயங்கு இணர் கண்ணியான்
 
 
#2501
அன்ன பெடை நடுக்கி அசைந்து தேற்றா நடையாளும்
மன்னர் குடை நடுக்கும் மாலை வெள் வேல் மறவோனும்
மின்னும் மணி குடத்தின் வேந்தர் ஏந்த புனல் ஆடி
பொன் அம் கடி மலரும் துகிலும் சாந்தும் புனைந்தாரே
#2502
எம் சுற்றம் என்று இரங்காது ஆகம் எல்லாம் கவர்ந்து இருந்து
தம் சுற்றம் வேண்டாத முலை கீழ் வாழ்வு தளர்கின்ற
நஞ்சு உற்ற வேல் நெடும் கண் பாவை நல்கூர் சிறு நுசுப்பிற்கு
அஞ்சு உற்றுழி புலர்ந்து ஆங்கு அணிந்தார் அம் மணி வடமே
#2503
சுடுமண் மிசை மாரி சொரிய சூழ்ந்து சுமந்து எழுந்து
நெடு நல் நிமிர் ஆவி நாறும் நெய் தோய் தளிர் மேனி
துடி நுண் இடை பெரும் தோள் துவர் வாய் ஏழை மலர் மார்பன்
கடி நல் மலர் பள்ளி களிப்ப காம கடல் ஆழ்ந்தான்
#2504
வழங்கு தாரவன் மார்பு இடை மட்டு உக
புழுங்கு கோதை பொற்பின் திறம் பேசலாம்
விழுங்கு மேகம் விடாது தழீஇ கிடந்து
ஒழிந்த மின்னு கொடி ஒத்து ஒழிந்திட்டாள்
#2505
தாம மார்பனும் தையலும் மெய் உணர்வு
ஆம் இது என்று அறியாது களித்தவர்
தூமம் கொப்புளிக்கும் துகில் சேக்கை மேல்
காமன் அப்பு அணை கள் உக வைகினார்
#2506
மாதர் தன் வனப்பு நோக்கி மகிழ்ந்து கண் இமைத்தல் செல்லான்
காதலித்து இருப்ப கண்கள் கரிந்து நீர் வர கண்டு அம்ம
பேதைமை பிறரை உள்ளி அழுபவர் சேர்தல் என்றாள்
வேதனை பெருகி வேல் கண் தீ உமிழ்ந்திட்ட அன்றே
#2507
நாறு சாந்து அழித்து மாலை பரிந்து நன் கலன்கள் சிந்தி
சீறுபு செம்பொன் ஆழி மணி விரல் நெரித்து விம்மா
ஏறியும் இழிந்தும் ஊழ்ஊழ் புருவங்கள் முரிய நொந்து
தேறு நீர் பூத்த செந்தாமரை முகம் வியர்த்து நின்றாள்
#2508
இற்றது என் ஆவி என்னா எரி மணி இமைக்கும் பஞ்சி
சிற்றடி போது புல்லி திருமகன் கிடப்ப சேந்து
பொற்ற தாமரையின் போந்து கரு முத்தம் பொழிபவே போல்
உற்று மை கலந்து கண்கள் வெம் பனி உகுத்த அன்றே
#2509
கொண்ட பூண் நின்னை சார்ந்து குலாய் கொழுந்து ஈன்ற கொம்பே
கண்டு கண் கரிந்து நீராய் உகுவது கரக்கலாமே
பண்டு யான் செய்த பாவ பயத்தை யார்க்கு உரைப்பென் தேன்காள்
வண்டுகாள் வருடி நங்கை வரம் தர மொழி-மின் என்றான்
#2510
பூவையும் கிளியும் கேட்டு புழை முகம் வைத்து நோக்கி
காவலன் மடந்தை உள்ளம் கல்-கொலோ இரும்பு-கொலோ
சாவம் யாம் உருகி ஒன்றும் தவறு இலன் அருளும் நங்கை
பாவை என்று இரத்தும் என்ற பறவைகள் தம்முள் தாமே
#2511
பெற்ற கூழ் உண்டு நாளும் பிணி உழந்து இருத்தும் பேதாய்
முற்றிமை சொல்லின் நங்கை மூன்று நாள் அடிசில் காட்டாள்
பொன்_தொடி தத்தையீரே பொத்தும் நும் வாயை என்றே
கற்பித்தார் பூவையார் தம் காரண கிளவி தம்மால்
#2512
பழியொடு மிடைந்த தேனும் சீறடி பரவினாற்கு
வழிபடு தெய்வம் ஆகி வரம் கொடுத்து அருளல் வேண்டும்
ஒழி படை களிறு போல உயங்கவும் உருகி நோக்கா
பிழிபடு கோதை போல் ஆம் பெண்டிரை கெட பிறந்தாள்
#2513
ஈன்ற தாய் யானும் ஆக இதனை கண்டு உயிரை வாழேன்
நான்று யான் சாவல் என்றே நல கிளி நூலின் யாப்ப
மான்ற அவள் மருண்டு நக்காள் வாழிய வரம் பெற்றேன் என்று
ஆன்று அவன் ஆர புல்லி அணி நலம் பரவினானே
#2514
நிறை ஓத நீர் நின்று நீள் தவமே செய்யினும் வாழி நீலம்
அறையோ அரிவை வரி நெடும் கண் ஓக்கிலையால் வாழி நீலம்
கண் ஒவ்வாயேனும் களித்து நகுதி நின்
வண்ணம் இதுவோ மது உண்பார் சேரியையோ வாழி நீலம்
#2515
பாண்குலாய் படுக்கல் வேண்டா பைங்கிளி பூவை என்னும்
மாண்பு இலாதாரை வைத்தார் என் உறார் என்று நக்கு
நாண் குலாய் கிடந்த நங்கை நகை முக அமுதம் ஈந்தாள்
பூண் குலாய் கிடந்த மார்பின் பொன் நெடும் குன்று அனாற்கே
#2516
நலம் குவித்த அனைய மாதர் நல் நலம் ஆய எல்லாம்
புலம்புவித்து அருளின் நீங்கி பகைப்புலம் புக்க வேந்தின்
கலங்குவித்த அனைய நம்பி கவர்ந்திட கலாபம் ஏங்க
சிலம்பு நொந்து இரங்க தேன் தார் பரிந்து தேன் எழுந்தது அன்றே
#2517
திரு நிற காமவல்லி திரு கவின் கொண்டு பூத்து
பெரு நிறம் கவினி ஆர்ந்த கற்பகம் பிணைந்ததே போல்
அரு நிற குருசில் மார்பத்து அசைந்தனள் அலங்கல் வேலும்
நெரி புற தடற்று வாளும் நீலமும் நிகர்த்த கண்ணாள்
#2518
மணி கண் மா மயில் சாயல் மாதரும்
அணி கந்து அன்ன தோள் அரச சீயமும்
பிணித்த காதலால் பின்னி செல்வுழி
கணித்த நாள்கள் ஏழ் கழிந்த காலையே
#2519
சூட்டும் சுண்ணமும் அணிந்து சுந்தரம்
ஓட்டி ஒண் பொன் நூல் ஓங்கு தாரொடு
பூட்டி குண்டலம் பொற்ப பெய்த பின்
மோட்டு முத்து ஒளிர் வடம் வளாயினார்
#2520
பால் நுரை அன பைம் துகில் அணிந்து
ஆன் நிரை இனத்து அலங்கல் ஏறு அனான்
மான் நிரை இனம் மருளும் நோக்கினார்
ஊன் உயிர் உணும் ஒருவன் ஆயினான்
#2521
சுநந்தை தன் மகன் சுடர் பொன் சூழி தேன்
இனம் கவர்ந்து உண இலிற்றும் மும்மதத்து
அநந்தன் அன்ன கை யானை ஏறினான்
குனிந்த சாமரை குளிர் சங்கு ஆர்த்தவே
#2522
இரும் பிடி நூறு சூழ இறுவரை நின்றதே போல்
கரும்பொடு காய் நெல் துற்றி கருப்புர கந்தில் நின்ற
சுரும்பு சூழ் மதத்த சூளாமணி எனும் சூழி யானை
பெரும் தகை பிணையல் மன்னர் முடி மிதித்து ஏறினானே
#2523
சட்டகம் பொன்னில் செய்து தண் கதிர் வெள்ளி வேய்ந்து
வட்ட நல் வைரம் வாய்ப்ப நிரைத்து மேல் மணிகள் சேர்த்தி
சுட்டுதற்கு அரிய முத்தின் தொத்து வாய் நாற்ற முந்நீர்
பட்ட வான் பவள காம்பின் குடை நிழல் பருதி ஒத்தான்
#2524
மடல் பனை குழாத்தின் பிச்சம் நிரைத்தன மன்னர் சூழ்ந்து
புடை களிறு ஏறி திங்கள் பொழி கதிர் குப்பை அன்ன
எடுத்து எறி கவரி வீச இயம் பல முழங்கி ஆர்ப்ப
கடல் படை வெள்ளம் சூழ காவலன் வீதி சேர்ந்தான்
#2525
அடி நிலம் உறுதல் நாணி அருவருத்து அமரின் ஆலித்து
இடு மயிர் சிறகர் ஆக எழுந்து மேல் பறப்ப போல
படு மழை துளியின் பாய்மா பரந்தன நிரந்த பொன் தேர்
இடை நிலம் இன்றி வேழம் ஈண்டின மள்ளர் தொக்கார்
#2526
கொழு மடல் பெண்ணை ஈன்ற குரும்பையும் செப்பும் கொன்ற
இழை முலை தடத்தினாள் தன் கணவனை காண ஏகி
கழும் ஒலி அரவ வானம் கனை பெயல் கடல் பெய்து அன்ன
குழும் ஒலி அரவம் ஈண்டி கொடி நகர் பொலிந்தது அன்றே
#2527
ஒள் இலை சூலம் தெள் நீர் உலா முகில் கிழிக்கும் மாட
கொள் கொடி குழாத்தினாலும் கொழு நறும் புகையினாலும்
தெள்ளுறு சுண்ணத்தாலும் தேன் மலர் துகளினாலும்
புள் இனம் பொழுது காணா புலம்பி கூடு அடைந்த அன்றே
#2528
பைம் தொடி மகளிர் பாங்கர் பரிந்து நூல் சொரிந்த காசு
சிந்தின தழல் என்று அஞ்சி சிறை அன்னம் நிலத்தை சேரா
இந்திரகோபம் ஆம் என்று இள மயில் குனிந்து குத்தி
சிந்தையில் தேம்ப தாமே திரு மணி நக்க அன்றே
#2529
வெள்ளைமை கலந்த நோக்கின் கிண்கிணி மிழற்றி ஆர்ப்ப
பிள்ளைமை காதல் கூர பிறழ்ந்து பொன் தோடு வீழ
துள்ளுபு செலீஇய தோற்றம் தொடு கழல் காமன் காமத்து
உள் உயிர் அறிய பெண்ணாய் பிறந்தது ஓர் தோற்றம் ஒத்தார்
#2530
தன் நெறி வளர காமன் தான் முலை இரண்டும் ஆகி
முன்னரே வளர்கின்றால் போல் முகிழ் முலை முத்தம் ஏந்தி
பொன் எறி மணியின் பொங்கி குழல் புறம் புடைப்ப ஓடி
பின் நிறீஇ வைத்த போல பெதும்பையர் விதும்பி நின்றார்
#2531
அணி நிலா வீசும் மாலை அரங்கு புல் என போகி
துணி நிலா வீசும் மாலை பிறை நுதல் தோழி சேர்ந்து
மணி நிலா வீசும் மாலை மங்கையர் மயங்கி நின்றார்
பணி நிலா வீசும் பைம்பொன் கொடி மணி மலர்ந்தது ஒத்தார்
#2532
வள் உகிர் வரித்த சாந்தின் வன முலை கோக்கினாரை
உள் உயிர் உண்ணும் கூற்றின் உடன்று கண் கரிந்து பொங்க
கள் உயிர் உண்ணும் மாலை கதுப்பு ஒரு கையின் ஏந்தி
நள்ளிருள் விளக்கு இட்டு அன்ன நங்கைமார் மல்கினாரே
#2533
மட்டு ஒளித்து உண்ணும் மாந்தர் மாண்பு போல் மறைந்து வண்ண
பட்டு ஒளித்து ஒழிய அல்குல் பசும் கதிர் கலாபம் தோன்ற
குட்ட நீர் குவளை கண்கள் விருந்து உண விரும்பி நின்றார்
அட்டும் தேன் அணிந்த மாலை பவள கொம்பு அணிந்தது ஒத்தார்
#2534
பெரும் பொருள் நீதி செங்கோல் பெருமகன் ஆக்கம் போல
பரந்து இடம் இன்றி மேலால் படா முலை குவிந்த கீழால்
அரும் பொருள் நீதி கேளா அரசனின் சுருங்கி நந்தும்
மருங்கு நொந்து ஒழிய வீதி மடந்தையர் இடம் கொண்டாரே
#2535
செல்வர்க்கே சிறப்பு செய்யும் திருந்து நீர் மாந்தர் போல
அல்குற்கும் முலைக்கும் ஈந்தார் அணிகம் ஆய எல்லாம்
நல்கூர்ந்தார்க்கு இல்லை சுற்றம் என்று நுண் நுசுப்பு நைய
ஒல்கி போய் மாடம் சேர்ந்தார் ஒரு தடம் குடங்கை கண்ணார்
#2536
கார் வளர் மின்னு வீசும் குண்டலம் காய் பொன் ஓலை
ஏர் வளர் பட்டம் ஏற்ப அணிந்து இருள் சுமந்து திங்கள்
நீர் வளர் நீலம் பூத்து நிரைத்த போல் நிரைத்த மேலால்
வார் வளர் முலையினார்-தம் மாழை வாள் முகங்கள் மாதோ
#2537
குறை அணி கொண்டவாறே கோதை கால் தொடர ஓடி
சிறை அழி செம்பொன் உந்தி தேன் பொழிந்து ஒழுக ஏந்தி
பறை இசை வண்டு பாட பாகமே மறைய நின்றார்
பிறை அணி கொண்ட அண்ணல் பெண் ஓர்பால் கொண்டது ஒத்தார்
#2538
பொன் அரி மாலை பூண்டு பூஞ்சிகை குலாவி முன்கை
மின் அரி சிலம்பு தொட்டு விருப்பொடு விரைந்து போவான்
கன்னியர் ஆடி நோக்கி தம்மை தாம் கண்டு நாணி
பின் அவை அணிந்து செல்வார் இடம் பெறாது ஒழிந்து போனார்
#2539
முத்து உலாய் நடந்த கோல முலை முதல் முற்றம் எல்லாம்
வித்திய வேங்கை வீயும் விழு பொனும் விளங்க காம
தொத்து நின்று எரிந்து கண்டார் கண் சுட சுடர்ந்து நின்றார்
ஒத்து ஒளிர் காமவல்லி ஒருங்கு பூத்து உதிர்ந்தது ஒத்தார்
#2540
உகிர் வினை செய்து பஞ்சி ஒள் ஒளி அரத்தம் ஊட்டி
அகில் கமழ் அங்கை சேப்ப அரிவையர் அலங்கல் தாங்கி
வகிர்படு மழை கண் சின்னீர் மா கயல் எதிர்ந்தவே போல்
முகில் கிழி மின்னின் நோக்கி முரிந்து இடை குழைந்து நின்றார்
#2541
முனி தலை கண்ணி நெற்றி சிறார் முலை முழாலின் பில்கி
புனிற்று பால் பிலிற்றி தேமா வடு இறுத்து ஆங்கு பாய
நுனித்து கண் அரக்கி நோக்காது ஒசிந்து நின்றார்கள் அன்றே
கனி பொறை மலிந்து நின்ற கற்பக பூம் கொம்பு ஒத்தார்
#2542
அவிர் இழை சுடர முல்லை அலங்கல் அம் கூந்தல் சோர
தவிர் வெய்ய காமம் தாங்கி தட முலை கால்கள் சாய
இவர் தரு பிறவி எல்லாம் இன்னம் ஆக என்று நின்றார்
சுவர் செய்து ஆங்கு எழுதப்பட்ட துகிலிகை பாவை ஒத்தார்
#2543
மாரி மா மயில் அனாரும் மைந்தரும் மயங்கினாரே
வேரி நாறு அலங்கல் மாலை மின் இழை மயங்கி எங்கும்
பூரித்து புதவம்-தோறும் குவளையும் மரையும் பூத்து
பாரித்து பைம்பொன் நாகர் உலகு இவண் வீழ்ந்ததே போல்
#2544
கோதை தாழ் குடையின் நீழல் கொற்றவன் பருதி ஆக
மாதரார் முகங்கள் என்னும் தாமரை மலர்ந்த தெள் நீர்
காதம் நான்கு அகன்ற பொய்கை கடி நகர் குவளை பூத்து
பேதுறுகின்ற போன்ற பெரு மழை கண்கள் மாதோ
#2545
மாந்தரும் மாவும் செல்ல மயங்கி மேல் எழுந்த நீறு
தேம் தரு கோதையார் தம் தெள் மட்டு துவலை மாற்ற
ஆய்ந்த பொன் நகரம் எங்கும் அணிகல ஒளியினாலே
காய்ந்து கண் கலக்க பூத்த கற்பகம் ஒத்தது அன்றே
#2546
பெண் பெற்ற பொலிசை பெற்றார் பிணை அனார் பெரிய யாமும்
கண் பெற்ற பொலிசை பெற்றாம் இன்று என கரைந்து முந்நீர்
மண் பெற்ற ஆயுள் பெற்று மன்னுவாய் மன்ன என்னா
புண் பெற்ற வேலினான் மேல் பூ மழை தூவினாரே
#2547
சுண்ணம் மேல் சொரிவார் தொழுது தொங்கல் வீழ்ப்பார்
தண்ணென் சந்தன நீர் ஆர்ந்து தேன் துளும்பும்
வண்ண பந்து எறிவார் வளை ஒலிப்ப ஓச்சி
கண்ணி இட்டு எறிவார் கலவை நீர் தெளிப்பார்
#2548
முந்து சூர் தடிந்த முருகன் நம்பி என்பார்
ஐந்துருவ அம்பின் அநங்கன் என்று அயர்வார்
கந்துகன் வளர்த்த சிங்கம் காண்-மின் என்பார்
சிந்தையில் களிப்பார் சேண் நெடிய கண்ணார்
#2549
தேசிக முடியும் திருந்து பட்டு உடையும்
பாசம் ஆக நின்று பல் மலர் கழுநீர்
மூசி வண்டு இமிரும் மொய் அலங்கல் தாழ
காசு இல் காமம் செப்பி கண்ணினால் இரப்பார்
#2550
வண்டு அறைந்த தாரான் வண்ணம் கண்ட பின்றை
கண்டிலேன் என் மாமை கை வளையொடு என்பார்
ஒண்_தொடி இவன் தன் உருவு கண்டு வாழ்வார்
பெண்டிராய் பிறந்தார் பெரியர் போத என்பார்
 
 
#2551
கொழித்து இரை ஓத வேலி குமரனை பயந்த நங்கை
விழு தவம் உலகம் எல்லாம் விளக்கி நின்றிட்டது என்பார்
பிழி பொலி கோதை போல் ஆம் பெண்டிரில் பெரியள் நோற்றாள்
சுழித்து நின்று அறாத கற்பின் சுநந்தையே ஆக என்பார்
#2552
சாந்து அகம் கிழிய மாலை தட முலை ஞெமுங்க புல்லி
சேர்ந்து எழும் நங்கைமாரே திருநங்கைமார்கள் அல்லார்
கூந்தலும் முலையும் முத்தும் கோதையும் சுமந்து நைவான்
போந்த அ நங்கைமார்கள் பொய்ம் நங்கைமார்கள் என்பார்
#2553
இடம் பட அகன்று நீண்ட இரு மலர் தடம் கண் என்னும்
குடங்கையின் நொண்டு கொண்டு பருகுவார் குவளை கொம்பின்
உடம்பு எலாம் கண்கள்-ஆயின் ஒருவர்க்கும் இன்றி ஏற்ப
அடங்க வாய் வைத்திட்டு ஆர பருகியிட்டு ஈ-மின் என்பார்
#2554
முலை முதல் துறந்த அன்றே மூரித்தாள் ஆளி யானை
தலை நிலம் புரள வெண் கோடு உண்டதே போன்று தன் கை
சிலை இடம் பிடித்த ஞான்றே தெவ்வரை செகுத்த நம்பி
நிலவு உமிழ் குடையின் நீழல் துஞ்சுக வையம் என்பார்
#2555
இ நகர புறம் காட்டில் இவன் பிறந்தவாறும்
தன் நிகர் இல் வாணிகன் இல் தான் வளர்ந்தவாறும்
கை நிகர் இல் வேந்தர் தொழ போந்ததுவும் கண்டால்
என்னை தவம் செய்யாது இகழ்ந்து இருப்பது என்பார்
#2556
பெரு முழங்கு திரை வரைகள் நீந்தி பிணியுறினும்
திரு முயங்கல் இல்லை-எனில் இல்லை பொருள் ஈட்டம்
ஒரு முழமும் சேறல் இலரேனும் பொருள் ஊர்க்கே
வரும் வழி வினாய் உழந்து வாழ்க தவம் மாதோ
#2557
நஞ்சு குடித்தாலும் நவை இன்று தவம் நின்றால்
அஞ்சி ஒளித்தாலும் அரண் இல்லை தவம் உலந்தால்
குஞ்சரத்தின் கோட்டு இடையும் உய்வர் தவம் மிக்கார்
அஞ்சல் இலர் என்றும் அறனே களைகண் என்பார்
#2558
முரல் வாய சூல் சங்கம் முட முள் தாழை முகை விம்மும்
கரை வாய முத்து ஈன்று கானல் மேயும் கடல் சேர்ப்பன்
உரை வாய நகர் பரவ போகி ஒண் பொன் எயில் சூழ்ந்த
விரை வாய பூம் பிண்டி வேந்தன் கோயிற்கு எழுந்தானே
#2559
அருகு மயில் அகவ அன்னம் ஏங்க குயில் கூவ
குருகு பொறை உயிர்க்கும் கொடு முள் தாழை வெண் தோட்டு
முருகு பொறை உயிர்க்கும் மொய் பூங்காவில் படை நீக்கி
திருகு கனை கழலான் செம்பொன் கோயில் சேர்ந்தானே
#2560
திறந்த மணி கதவம் திசைகள் எல்லாம் மணம் தேக்கி
மறைந்த அகில் புகையான் மன்னர் மன்னன் வலம் செய்து
பிறந்தேன் இனி பிறவேன் பிறவா தாயை பெற்றேன் என்று
இறைஞ்சி முடி துளக்கி ஏத்தி கையால் தொழுதானே
#2561
திரு மறு மார்பினை திலக முக்குடையினை
அருமறை தாங்கிய அந்தணர் தாதையை
அருமறை தாங்கிய அந்தணர் தாதை நின்
எரி புரை மரை மலர் இணை அடி தொழுதும்
#2562
உலகு உணர் கடவுளை உருகெழு திறலினை
நில விரி கதிர் அணி நிகர் அறு நெறியினை
நில விரி கதிர் அணி நிகர் அறு நெறியை நின்
அலர் கெழு மரை மலர் இணை அடி தொழுதும்
#2563
மறு அற உணர்ந்தானை மலம் அறு திகிரியை
பொறி வரம்பு ஆகிய புண்ணிய முதல்வனை
பொறி வரம்பு ஆகிய புண்ணிய முதல்வ நின்
நறை விரி மரை மலர் நகும் அடி தொழுதும்
#2564
நந்தாவிளக்கு புறம் ஆக என நான்கு கோடி
நொந்தார் கடந்தான் கொடுத்தான் பின்னை நூறு மூதூர்
கந்து ஆர் கடாத்த களிறும் கொடி தேர்கள் நூறும்
செந்தாமரை மேல் நடந்தான் அடி சேர்த்தினானே
#2565
வாடாத மாலை மணி மாலை பொன் மாலை முத்த
நீடு ஆர மாலை நிழல் மாண்ட பவழ மாலை
மாடு ஆர்ந்து இழியும் அருவி மலர் பொற்ப ஏற்றி
கூடார் கடந்தான் வலம் கொண்டு இடம் சென்று புக்கான்
#2566
உலமரு நெஞ்சின் ஒட்டா மன்னவர் ஊர்ந்த யானை
வல மருப்பு ஈர்ந்து செய்த மணி கிளர் கட்டில் ஏறி
நிலமகள் கணவன் வேந்தர் குழாத்து இடை நிவந்து இருந்தான்
புலமகள் புகழ பொய் தீர் பூ மகள் புணர்ந்து மாதோ
#2567
எ துணை தவம் செய்தான்-கொல் என்று எழுந்து உலகம் ஏத்த
வித்திய புகழினாற்கு விருந்து அரசு இயற்றி நாடும்
ஒத்தன நல்கி தன்னை உழந்தனள் வளர்த்த தாய்க்கு
சித்திர தேவி பட்டம் திருமகன் நல்கினானே
#2568
இன களி யானை மன்னர் இள உடையான் என்று ஏத்த
தனக்கு இளையானை நாட்டி தான் தனக்கு என்று கூறி
சின களி யானை மன்னர் மகளிரை சேர்த்தி நம்பன்
மனக்கு இனிது உறைக என்று வளம் கெழு நாடும் ஈந்தான்
#2569
ஆழ் கடல் வையத்து இல்லா அரு நிதி அரசு நல்ல
சூழ் மணி ஆழி செம்பொன் சூட்டொடு கண்ணி காதல்
தோழர்கட்கு அருளி தொல்லை உழந்தவர் தம்மை தோன்ற
வாழ்க என நிதியும் நாடும் மன்னவன் கொடுப்பித்தானே
#2570
வளர்த்த கை தாயர் தம்மை வருக என அருளி தங்கள்
கிளைக்கு எலாம் சிறப்பு செய்து கேட்டவர் மருள ஐந்து ஊர்
விளைத்து உள கெடாத வைகல் ஆயிரம் இறுப்பு தண்ட
கொள கொடுத்து அயா உயிர்த்தான் கொற்றவன் என்ப அன்றே
#2571
கைத்தலம் மந்தி கொண்ட கைம்மக போன்று தன்-கண்
பத்திமை விடாது மேல் நாள் படை கலம் நவின்ற பொன் தேர்
மைத்துன மன்னர்க்கு எல்லாம் வள நிதி மணி செய் மான் தேர்
தத்து நீர் மிசை செல் மாவும் தவழ் மத களிறும் ஈந்தான்
#2572
கோமகன் கோல மான் தேர் கோவிந்தன் என்னும் கொய்தார்
மாமற்கு மடங்கல் ஆற்றல் கட்டியங்காரன் என்ற
தீமகன் உடைய எல்லாம் தேர்ந்தனன் கொடுத்து செல்வன்
ஓவல் இல் கறவை ஒத்தான் உலோகபாலற்கு மாதோ
#2573
பேர் இடர் தன்-கண் நீக்கி பெரும் புணை ஆய தோழற்கு
ஓர் இடம் செய்து பொன்னால் அவன் உரு இயற்றி ஊரும்
பார் இடம் பரவ நாட்டி அவனது சரிதை எல்லாம்
தார் உடை மார்பன் கூத்து தான் செய்து நடாயினானே
#2574
ஊன் விளையாடும் வை வேல் உறு வலி சிந்தித்து ஏற்ப
தான் விளையாடி மேல் நாள் இருந்தது ஓர் தகை நல் ஆலை
தேன் விளையாடும் மாலை அணிந்து பொன் பீடம் சேர்த்தி
ஆன் விளையாடும் ஐந்து ஊர் அதன் புறம் ஆக்கினானே
#2575
கொட்டமே கமழும் குளிர் தாமரை
மொட்டின் வீங்கிய வெம் முலை மொய் குழல்
அட்டும் தேன் அழியும் மது மாலையார்
பட்டம் எண்மரும் பார் தொழ எய்தினார்
#2576
பஞ்சி சூழ் அல்குல் பல் வளை வீங்கு தோள்
வஞ்சி நுண் இடை வம்பு அணி வெம் முலை
விஞ்சையன் மகள் சீறடி வீழ்ந்தனர்
அம் சில் ஓதி அரும்பு அவிழ் கோதையார்
#2577
வீடு இல் ஐந்தரை கோடி விருத்தி மேல்
நாடி ஆயிரம் நாள்-தொறும் நங்கைமார்க்கு
ஆடு சாந்து அடிசில் புறம் ஆக்கினான்
கோடு வால் ஒளி குங்கும குன்று அனான்
#2578
ஆனை மும்மதம் ஆடிய காடு எலாம்
மானை நோக்கியர் வாய் மது ஆடின
வேனல் மல்கி வெண் தேர் சென்ற வெம் நிலம்
பானல் மல்கி வெண் பால் அன்னம் பாய்ந்தவே
#2579
மாரி மல்கி வளம் கெழு மண்மகள்
வாரி மல்கி வரம்பு இலள் ஆயினாள்
ஆரிய அடிசில் தளி ஆன் நெய் வார்ந்து
ஏரி ஆயின எங்கணும் என்பவே
#2580
ஏக வெண்குடை இன் நிழல் தண் அளி
மாகமாய் கடல் எல்லை நிழற்றலால்
போக பூமியும் பொன் கிளர் பூமியும்
நாகர் நாகமும் நாணி ஒழித்தவே
#2581
வண்டு மேய்ந்து வரி முரல் பூம் சிகை
கெண்டை வென்ற கண்ணார்களும் கேள்வரும்
உண்டு மூத்து இடையூறு இலர் சேறலால்
பண்டை ஊழியின் பார் மலி உற்றதுவே
#2582
செரு நாடு செம் சுடர் வேல் திருகு செம்பொன் கனை கழல் கால்
திரு நாடு தேம் பைம் தார் செல்வன் செவ்வி பெறாது ஒழிந்து
பெரு நாட்டு அரும் கலங்கள் சுமந்து பேரும் இடம் பெறாஅது
ஒரு நாட்டு அரசு உணங்க உரவோன் கொற்றம் உயர்ந்ததே
#2583
வலையவர் முன்றில் பொங்கி வாள் என வாளை பாய
சிலையவர் குரம்பை அம் கண் மான் இனம் சென்று சேப்ப
நிலை திரிந்து ஊழி நீங்கி உத்தர குருவும் ஆகி
கொலை கடிந்து இவறல் இன்றி கோ தொழில் நடாத்தும் அன்றே
#2584
கதம் கனல் யானை நெற்றி கட்டிய பட்டமே போல்
மதம் கமழ் கோதை அல்குல் மனா கிடந்து இமைத்து காம
பதம் பல பார்க்கும் சாயல் பாவை மற்று அநங்க மாலை
விதம்பட கருதி மாதர் விளைத்தது விளம்பலுற்றேன்
#2585
ஈர்ம் தண் கோதை இளையார் குழாத்திடையாள் எம் கோன் அடி சேர்வல் என்று
ஆர்ந்த செந்தாமரை முகத்தினாள் அடிகள் வந்து ஈங்கு அகன் கடை உளாள்
சார்ந்த சாயல் தட மா முலை தையல் வல்லே வருக என்றான்
சேர்ந்து மன்னர் முடி வைர வில் திளைக்கும் செம்பொன் செறி கழலினான்
#2586
அரு விலை நன் கலம் செய் போர்வை அன்னம் நாண அடி ஒதுங்கி சென்று
உருவம் ஒவ்வாது ஒசியும் நுசுப்பு ஒல்கி கோமான் அடி தொழுத பின்
மருவு இன் சாயல் மணி மெல் விரல் கூப்பி ஓலை மரபின் நீட்ட
இரவி என்ன விளங்கும் ஒளி இறைவன் கொண்டு ஆங்கு அது நோக்குமே
#2587
அடிகள் கண்டு ஆங்கு உவந்து அருளுக அநங்கமாலை அடி வீழ்ச்சி முன்
கொடிய வேலான் கொதித்து அரங்கின் நீக்கி கோயில் சிறை வைத்த பின்
கடி செய் பைம் தார் கமழ் மாலை வேல் கந்துகற்கு சிறுவ யான் இ
படி அனல் காய் பசு மணிகள் வேய்ந்து ஓங்கும் பைம்பொன் செறி கழலினாய்
#2588
என்ன நாளும் அரற்ற பொறான் விடுப்ப போகி இன மழைகள் மொய்த்து
அன்னம் துஞ்சும் அடி குடிலினுள் அன்றி யான் கொண்ட நாடகத்தினை
துன்னி நம்பி உருவு தீட்டி தொங்கல் வேய்ந்து தொழுது ஆற்ற நீ
மன்னர் மன்ன மதி தோய் குடையாய் மகளிர் காமம் மறைத்து ஒழிதியோ
#2589
கண்கள் துஞ்சா கதிர் முத்தமே காலும் கை ஆர் வளை கழலுமால்
பண் கொள் சொல்லார் மாமை நீங்கி பைம்பொன் போர்த்த படா முலைகளும்
மண் கொள் வேல் மன்னர் நண்பின்மையை வையக்கு எல்லாம் உடன் அறையவோ
பெண்கள் ஆவி விடுத்து ஒழிபவோ பெரியோர் நண்பு அடைந்தார் பெயர்பவோ
#2590
அறன் நிழல் ஆய் உலகு அளிக்கும் நின் ஆர மாலை அணி வெண்குடை
புறன் நிழலின் அயலேனோ யான் புல்லா மன்னர் நிணம் பொழியும் வேல்
மறன் நிழல் மத யானையாய் வந்த என் தோழி வாமலேகை
திறன் அழியாமை இன்னே விடுத்து அருளுக தேர் வேந்தர் வேந்தனே
#2591
புள்ளும் யாழும் குழலும் ஏங்க புனைந்து வல்லான் நினைந்து இயற்றிய
பள்ளி செம்பொன் படை அமளி மேல் மழலை மணி யாழ் தான் வெளவி
கொள்ளும் தீம் சொல் அலங்கார பூம்_கொடியை புல்லி மணி குவட்டினை
எள்ளி வீங்கி திரண்ட தோள் மேல் குழை வில் வீச இருந்தானே

#2592
அம் கை சேப்ப குருகு இரங்க அலங்கல் அம் பூம் குழல் துயல் வர
மங்கை நல்லார் பவழ அம்மி அரைத்த சாந்தம் மலர் பெய் மாலை
பொங்கு தூம கொழு மென் புகை புரிந்த பஞ்சமுக வாசமும்
தங்கு தாம மார்பினாற்கும் தையலாட்கும் கொண்டு ஏந்தினாரே

#2593
அருளும் ஆறு என்னை அநங்கமாலை அடித்தி தோழி அன்றோ என
தெருளலான் செல்வ களி மயக்கின் நால் திசைக்கும் என் அறிவு அளக்கிய கருதி
மருளின் சொன்னாய் மறப்பேனோ யான் நின்னை என்ன மகிழ் ஐங்கணை
உருளும் முத்து ஆர் முகிழ் முலையினாள் உள்ளத்து உவகை தோற்றினாளே

#2594
முறுவல் திங்கள் முக அரங்கின் மேல் முரிந்து நீண்ட புருவ கைகள்
நெறியின் வட்டித்து நீண்ட உண்கண் சென்றும் வந்தும் பிறழ்ந்தும் ஆட
பொறி கொள் பூம் சிலம்பு மேகலைகளும் புணர்ந்த இன்னியங்கள் ஆர்ப்ப வேந்தன்
அறியும் நாடகம் கண்டான் பைம் தார் அலர்ந்து மாதர் நலம் குழைந்ததே

#2595
நால் மருப்பின் மத யானை நறிய பைம் தாமரை மடந்தையை
தேன் மதர்ப்ப திளைத்து ஆங்கு அவன் திருவின் சாயல் நலம் கவர்ந்த பின்
ஊன் மதர்த்த ஒளி வேல் கண்ணார் பரவ இவ்வாறு ஒழுகும் அன்றே
வான் அகத்தும் நிலத்தும் இல்லா-வண்ணம் மிக்க மணி பூணினான்

#2596
நரம்பு மீது இறத்தல் செல்லா நல் இசை முழவும் யாழும்
இரங்கு தீம் குழலும் ஏங்க கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்ப
பரந்த வாள் நெடும் கண் செ வாய் தேசிக பாவை கோல
அரங்கின் மேல் ஆடல் காட்டி அரசனை மகிழ்வித்தாளே

#2597
கடல் படை மன்னர் தம்மை காதலின் விடுத்து காமன்
தொடுத்த கோல் மார்பில் தங்க தூ மலர் கொம்பு அனாளை
வடித்த இன் அமிர்தின் ஆர பருகலின் மழை கண் செ வாய்
துடித்து வண்டு உண்ண தூங்கும் செம் தளிர் ஒத்தது அன்றே

#2598
இளைமை அம் கழனி சாயல் ஏர் உழுது எரி பொன் வேலி
வளை முயங்கு உருவ மென் தோள் வரம்பு போய் வனப்பு வித்தி
கிளை நரம்பு இசையும் கூத்தும் கேழ்த்து எழுந்து ஈன்ற காம
விளை பயன் இனிதின் துய்த்து வீணை வேந்து உறையும் மாதோ
 


No comments:

Post a Comment