seevagachinthamani - 11



10 மண்மகள் இலம்பகம்


 
#2102
குடம் புரை செருத்தல் குவளை மேய் கய வாய் குவி முலை படர் மருப்பு எருமை
நடந்த வாய் எல்லாம் நறு மலர் மரையின் நாகு இலை சொரிந்த அம் தீம் பால்
தடம் சிறை அன்னம் குருகொடு நாரை பார்ப்பு இனம் ஓம்பு தண் மருதம்
மடங்கல் போல் திறலார் மா மணி கறங்க வள வயல் புள் எழ கழிந்தார்

#2103
புரி வளை அலறி பூசல் இட்டு ஈன்ற பொழி கதிர் நித்திலம் உழக்கி
வரி வளை சூழும் வலம்புரி இனத்துள் சலஞ்சலம் மேய்வன நோக்கி
அரிது உணர் அன்னம் பெடை என தழுவி அன்மையின் அலமரல் எய்தி
திரிதரு நோக்கம் தீது இலார் நோக்கி நெய்தலும் கைவலத்து ஒழிந்தார்

#2104
கோட்டு இளம் கலையும் கூடும் மென் பிணையும் கொழும் கதிர் மணி விளக்கு எறிப்ப
சேட்டு இளம் கொன்றை திரு நிழல் துஞ்ச செம் பொறி வண்டு அவற்று அயலே
நாட்டு இளம் பிடியார் நகை முகம் பருகும் நல்லவர் போல் மலர் பருகும்
மோட்டு இள முல்லை மொய் மலர் கானம் முருகு வந்து எதிர்கொள நடந்தார்

#2105
குழவி வெண் திங்கள் கோட்டின் மேல் பாய குளிர் புனல் சடை விரித்து ஏற்கும்
அழல் அவிர் சூலத்து அண்ணலே போல அருவி நீர் மருப்பினின் எறிய
கழை வளர் குன்றில் களிறு நின்று ஆடும் கடி நறும் சந்தன சாரல்
இழை வளர் முலையார் சாயல் போல் தோகை இறை கொள் பூம் குறிஞ்சியும் இறந்தார்
#2106
ஊன் தலை பொடித்த ஆங்கு அனைய செம் சூட்டின் ஒளி மயிர் வாரணம் ஒருங்கே
கான்ற பூம் கடம்பின் கவட்டு-இடை வளை வாய் பருந்தொடு கவர் குரல் பயிற்றும்
ஆன்ற வெம் பாலை அழல் மிதித்து அன்ன அரும் சுரம் சுடர் மறை பொழுதின்
ஊன்றினார் பாய்மா ஒளி மதி கதிர் போல் சந்தனம் ஒருங்கு மெய் புதைத்தே
#2107
நிலை இலா உலகில் நின்ற வண் புகழை வேட்டவன் நிதியமே போன்றும்
இலை குலாம் பைம் பூண் இள முலை தூதின் இன் கனி தொண்டை அம் துவர் வாய்
கலை வலார் நெஞ்சில் காமமே போன்றும் கடவுளர் வெகுளியே போன்றும்
உலைவு இலார் நில்லாது ஒரு பகலுள்ளே உருப்பு அவிர் வெம் சுரம் கடந்தார்
#2108
புது கலம் போலும் பூம் கனி ஆலும் பொன் இணர் பிண்டியும் பொருந்தி
மது கலந்து ஊழ்த்து சிலம்பி வீழ்வன போல் மலர் சொரி வகுளமும் மயங்கி
கதிர்த்த தண் பூணி கம்புள் தாழ் பீலி கனை குரல் நாரை வண்டானம்
எதிர்த்த தண் புனல் சூழ் இன் நதி கரை மேல் இளையவர் அயா உயிர்த்து எழுந்தார்
#2109
அள் இலை பலவின் அளிந்து வீழ் சுளையும் கனிந்து வீழ் வாழையின் பழனும்
புள்ளி வாழ் அலவன் பொறி வரி கமம் சூல் ஞெண்டினுக்கு உய்த்து நோய் தணிப்பான்
பள்ளி வாய் நந்தும் ஆமையும் பணித்து பல் மலர் வழிபட குறைக்கும்
வெள்ள நீர் படப்பை விதையம் வந்து அடைந்தே வேந்தனுக்கு உணர்த்த முன் விடுத்தார்
#2110
வீட்டு இடம்-தோறும் வில்லக விரல் போல் பொருந்தி நின்று ஒருங்கு எதிர்கொள்க என்று
ஏட்டின் மேல் தீட்டி திரு எழுத்து இட்டு ஆங்கு இறைவனும் தமர்களை பணிப்ப
நாட்டகத்து அமிர்தும் நளி கடல் அமிர்தும் நல் வரை அமிர்தமும் அல்லா
காட்டு அகத்து அமிர்தும் காண்வர குவவி கண் அகன் புறவு எதிர்கொண்டார்
#2111
பொரு மத யானை புணர் மருப்பு ஏய்ப்ப பொன் சுமந்து ஏந்திய முலையார்
எரி மலர் செ வாய் திறந்து தேன் ஊற ஏத்துவார் பூக்கள் தூய் தொழுவார்
வரு குலை கமுகும் வாழையும் நடுவார் வரை உமிழ் ஆவி போல் மாடத்து
அரு நறும் புகையும் ஏந்துவார் ஊர்-தோறு அமரர்-தம் உலகம் ஒத்ததுவே
#2112
பாடு இன் அருவி பயம் கெழு மா மலை
மாட நகரத்து வாயிலும் கோயிலும்
ஆடு அம்பலமும் அரங்கமும் சாலையும்
சேடனை காணிய சென்று தொக்கதுவே
#2113
பல் கதிர் ஆரமும் பூணும் பருமித்து
கொல் சின வெம் தொழில் கோடு ஏந்து இள முலை
நல் எழில் மங்கையர் நல் நுதல் சூட்டிய
வெல் கதிர் பட்டம் விளங்கிற்று ஒருபால்
#2114
சுண்ணமும் சூட்டும் சொரிந்து வார் குழல்
கண்ணி மகாரோடு கால் சிலம்பு ஆர்த்து எழ
அண்ணலை காணிய ஆர்வத்தின் போதரும்
வண்ண மகளிர் வனப்பிற்று ஒருபால்
#2115
எதிர் நல பூம் கொடி எள்ளிய சாயல்
கதிர் நல மங்கையர் கால் தொடர்ந்து ஓட
முதிரா இள முலை முத்தொடு பொங்க
அதிர் அரி கிண்கிணி ஆர்க்கும் ஒருபால்
#2116
கரும் கண் இள முலை கச்சு அற வீக்கி
மருங்குல் தளர மழை மருள் மாடம்
நெருங்க இறைகொண்ட நேர்_இழையார்-தம்
பெரும் கண் அலமரும் பெற்றித்து ஒருபால்
#2117
மின்னு குழையினர் கோதையர் மின் உயர்
பொன் வரை மாடம் புதைய பொறி மயில்
துன்னிய தோகை குழாம் என தொக்கவர்
மன்னிய கோலம் மலிந்தது ஒருபால்
#2118
பாடல் மகளிரும் பல் கலை ஏந்து அல்குல்
ஆடல் மகளிரும் ஆவண வீதி-தொறும்
ஓட உதிர்ந்த அணிகலம் உக்கவை
நீடு இருள் போழும் நிலைமத்து ஒருபால்
#2119
கோதையும் தாரும் பிணங்க கொடும் குழை
காதல் மகளிரும் மைந்தரும் காணிய
வீதியும் மேலும் மிடைந்து மிடை மலர்
தாது அடுத்து எங்கும் தவிசு ஒத்ததுவே
#2120
மான கவரி மணி வண்டு அகற்ற அங்கு
ஆனை எருத்தத்து அமர குமரனின்
சேனை கடல் இடை செல்வனை கண்டு உவந்து
ஏனையவரும் எடுத்து உரைக்கின்றார்
#2121
தே மலர் அம் கண் திருவே புகுதக
மா மலர் கோதை மணாளன் புகுதக
காமன் புகுதக காளை புகுதக
நாம எழில் விஞ்சை நம்பி புகுதக
#2122
மின் தோய் வரை கொன்ற வேலோன் புகுதக
இன் தேன் கமழ் தார் இயக்கன் புகுதக
வென்றோன் புகுதக வீரன் புகுதக
என்றே நகரம் எதிர்கொண்டதுவே
#2123
இடி நறும் சுண்ணம் சிதறி எச்சாரும்
கடி கமழ் மாலையும் கண்ணியும் சிந்தி
துடி அடு நுண் இடை தொண்டை அம் செ வாய்
வடி அடு கண்ணியர் வாழ்த்துபு நிற்பார்
#2124
சுரும்பு இமிர் மாலை தொழுவனர் நீட்டி
இரும் பிடி நின் நடை கற்ற எமக்கு
விரும்பினை-ஆய்விடின் மெல்ல நடமோ
கரும் கணில் காமனை காண மற்று என்பார்
#2125
மட நடை பெண்மை வனப்பு என்பது ஓராய்
கடு நடை கற்றாய் கணவன் இழப்பாய்
பிடி அலை பாவி என பூண் பிறழ்ந்து
புடை முலை விம்ம புலந்தனர் நிற்பார்
#2126
மயிர் வாய் சிறு கண் பெரும் செவி மா தாள்
செயிர் தீர் திரள் கை சிறு பிடி கேள்வன்
அயிராவணத்தொடு சூள் உறும் ஐயன்
உயிர் காவலன் கொண்டு உதவ நில் என்பார்
#2127
கருனை கவளம் தருதும் கமழ் தார்
அருமை அழகிற்கு அரசனை நாளை
திரு மலி வீதி எம் சேரி கொணர்மோ
எரி மணி மாலை இளம் பிடி என்பார்
#2128
என்னோர் மருங்கினும் ஏத்தி எரி மணி
பொன் ஆர் கலையினர் பொன் பூம் சிலம்பினர்
மின் ஆர் குழையினர் கோதையர் வீதியுள்
மன்னகுமரனை வாழ்த்தி மகிழ்ந்தார்
#2129
விளங்கு பால்கடலில் பொங்கி வெண் திரை எழுவவே போல்
துளங்கு ஒளி மாடத்து உச்சி துகில் கொடி நுடங்கும் வீதி
உளம் கழித்து உருவ பைம் தார் மன்னவன் கோவில் சேர்ந்தான்
இளம் கதிர் பருதி பௌவத்து இறுவரை இருந்தது ஒத்தான்
#2130
இழை ஒளி பரந்த கோயிலின் இன மலர் குவளை பொன் பூ
விழை தகு கமல வட்டத்து இடை விராய் பூத்தவே போல்
குழை ஒளி முகமும் கோல கொழும் கயல் கண்ணும் தோன்ற
மழை மின்னு குழாத்தின் மாலை மங்கையர் மயங்கி நின்றார்
#2131
எரி குழாம் சுடரும் வை வேல் ஏந்தலை கண்டு கோயில்
திரு குழாம் அனைய பட்டத்தேவியர் மகிழ்ந்து செய்ய
வரி குழாம் நெடும் கண் ஆர கொப்புளித்து உமிழ அம் பூ
விரை குழாம் மாலை தேனும் வண்டும் உண்டு ஒழுக நின்றார்
#2132
அலங்கல் தாது அவிழ்ந்து சோர அல்குல் பொன் தோரை மின்ன
சிலம்பின் மேல் பஞ்சி ஆர்ந்த சீறடி வலத்தது ஊன்றி
நலம் துறைபோய நங்கை தோழியை புல்லி நின்றாள்
இலங்கு ஒளி மணி தொத்து ஈன்ற ஏந்து பொன் கொடியோடு ஒப்பாள்
#2133
தாமரை போதில் பூத்த தண் நறும் குவளை பூ போல்
காமரு முகத்தில் பூத்த கரு மழை தடம் கண் தம்மால்
தே மலர் மார்பினானை நோக்கினாள் செல்வன் மற்று அ
பூ மலர் கோதை நெஞ்சம் மூழ்கி புக்கு ஒளித்திட்டானே
#2134
விண்ணாறு செல்வார் மனம் பேது உற போந்து வீங்கி
பண்ணாறு சொல்லாள் முலை பாரித்த என்று நோக்க
கண்ணாறு சென்ற களி ஐங்கணை காமன் அன்ன
புண்ணாறு வேலான் மனம் மூழ்கினள் பொன் அனாளே
#2135
மை தோய் வரையின் இழியும் புலி போல மைந்தன்
பெய் தாம மாலை பிடியின் இழிந்து ஏகி மன்னர்
கொய் தாம மாலை கொழும் பொன் முடி தேய்த்து இலங்கும்
செய் பூம் கழலை தொழுதான் சென்னி சேர்த்தினானே
#2136
பொன் அம் குவட்டின் பொலிவு எய்தி திரண்ட திண் தோள்
மன்னன் மகிழ்ந்து மருமானை விடாது புல்லி
தன் அன்புகூர தடம் தாமரை செம் கண் முத்தம்
மின்னும் மணி பூண் விரை மார்ப நனைப்ப நின்றான்
#2137
ஆனாது வேந்தன் கலுழ்ந்தான் என கோயில் எல்லாம்
தான் யாதும் இன்றி மயங்கி தடம் கண் பெய் மாரி
தேன் ஆர் மலர் ஈர்த்து ஒழுக சிலம்பில் சிலம்பும்
கான் ஆர் மயிலின் கணம் போல் கலுழ்வுற்றது அன்றே
#2138
பகை நரம்பு இசையும் கேளா பைம் கதிர் பசும்பொன் கோயில்
வகை நலம் வாடி எங்கும் அழுகுரல் மயங்கி முந்நீர்
அக மடை திறந்ததே போல் அலற கோக்கு இளைய நங்கை
மிகை நல தேவி-தானே விலாவணை நீக்கினாளே
#2139
பல் கதிர் மணியும் பொன்னும் பவழமும் குயிற்றி செய்த
செல்வ பொன் கிடுகு சூழ்ந்த சித்திரக்கூடம் எங்கும்
மல்கு பூம் தாமம் தாழ்ந்து மணி புகை கமழ வேந்தன்
வெல் புகழ் பரவ-மாதோ விதியுளி எய்தினானே
#2140
எரி மணி அடைப்பை செம்பொன் படியகம் இலங்கு பொன் வாள்
கரு மணி முகடு வேய்ந்த கஞ்சனை கவரி கொண்ட
வரு முலை மகளிர் வைத்து வான் தவிசு அடுத்து நீங்க
பெருமகன் எண்ணம் கொள்வான் அமைச்சரோடு ஏறினானே
#2141
உலந்த நாள் அவர்க்கு தோன்றாது ஒளிக்கும் மீன் குளிக்கும் கற்பின்
புலந்த வேல் நெடும் கண் செ வாய் புதவி நாள் பயந்த நம்பி
சிலம்பும் நீர் கடல் அம் தானை சீதத்தற்கு அரசு நாட்டி
குலம் தரு கொற்ற வேலான் கொடி நகர் காக்க என்றான்
#2142
மாற்றவன் ஒற்றர் ஒற்றா வகையினில் மறைய நம்பிக்கு
ஆற்றின தோழர்க்கு எல்லாம் அணிகலம் அடிசில் ஆடை
வேற்றுமை இன்றி வேண்டு ஊட்டு அமைத்தனன் அருளி இப்பால்
ஏற்று உரி முரசம் நாண எறி திரை முழக்கின் சொன்னான்
#2143
கட்டியங்காரன் நம்மை காண்பதே கருமம் ஆக
ஓட்டித்தான் விடுத்த ஓலை உள பொருள் உரை-மின் என்ன
தொட்டு மேல் பொறியை நீக்கி மன்னனை தொழுது தோன்ற
விட்டு அலர் நாக பைம் தார் விரிசிகன் கூறும் அன்றே
#2144
விதையத்தார் வேந்தன் காண்க கட்டியங்காரன் ஓலை
புதைய இ பொழிலை போர்த்து ஓர் பொய் பழி பரந்தது என் மேல்
கதை என கருதல் செய்யான் மெய் என தானும் கொண்டான்
சிதைய என் நெஞ்சம் போழ்ந்து தெளிப்பினும் தெளிநர் யாரே
#2145
படு மணி பைம்பொன் சூழி பகட்டு இனம் இரிய பாய்ந்து
கொடி நெடும் தேர்கள் நூறி கொய் உளை மாக்கள் குத்தி
இடு கொடி அணிந்த மார்பர் இரு விசும்பு ஏற சீறி
அடு களிற்று அசனி வேகம் அலமர அதனை நோனான்
#2146
நூற்றுவர் பாகர் தம்மை பிளந்து உயிர் உண்டது என்னும்
மாற்றத்தை கேட்டு சென்று மத களிறு அடக்கி மேல் கொண்டு
ஆற்றல் அம் கந்து சேர்த்தி யாப்புற வீக்கும்-போழ்தில்
கூற்று என முழங்கி வீழ்த்து கொல்ல கோல் இளகிற்று அன்றே
#2147
தனக்கு யான் உயிரும் ஈவேன் தான் வர பழியும் நீங்கும்
எனக்கு இனி இறைவன் தானே இரு நில கிழமை வேண்டி
நினைத்து தான் நெடிதல் செல்லாது என் சொலே தெளிந்து நொய்தா
சின களி யானை மன்னன் வருக என செப்பினானே
#2148
ஓலையுள் பொருளை கேட்டே ஒள் எயிறு இலங்கு நக்க
காலனை அளியன் தானே கையினால் விளிக்கும் என்னா
நூல்வலீர் இவனை கொல்லும் நுண் மதி சூழ்ச்சி ஈதே
போல்வது ஒன்று இல்லை என்றான் புனை மணி பொன் செய் பூணான்
#2149
கள்ளத்தால் நம்மை கொல்ல கருதினான் நாமும் தன்னை
கள்ளத்தால் உயிரை உண்ண கருதினேம் இதனை யாரும்
உள்ளத்தால் உமிழ வேண்டா உறு படை வந்து கூட
வள்ளுவார் முரசம் மூதூர் அறைக என அருளினானே
#2150
கட்டியங்காரனோடு காவலன் ஒருவன் ஆனான்
விட்டு நீர் நெல்லும் பொன்னும் வழங்கு-மின் விளைவ கூறின்
ஒட்டலன் இறைவன் சொன்னீர் நா நும அல்ல என்ன
கொட்டினான் தடம் கண் வள் வார் குளிறு இடி முரசம் அன்றே
 
 
#2151
விண்டவர் உடலம் கீறி சுளித்து நின்று அழலும் வேழம்
ஒண் கொடி உருவ திண் தேர் ஒளி மயிர் புரவி பண்ணி
வண் கழல் அணிந்து மள்ளர் வாள் வலம் பிடித்து நாளை
தெண் திரை பரப்பு நாண திருநகர் தொகுக என்றான்
#2152
ஏற்று உரி போர்த்த வள் வார் இடி முரசு அறைந்த பின் நாள்
காற்று எறி கடலின் சங்கும் முழவமும் முரசும் ஆர்ப்ப
கூற்று உடன்று அனைய தானை கொழு நிலம் நெளிய ஈண்டி
பால்கடல் பரப்பின் வெள் வாள் சுடர் ஒளி பரந்த அன்றே
#2153
புதை இருள் இரிய பொங்கி குங்கும கதிர்கள் ஓக்கி
உதையத்தின் நெற்றி சேர்ந்த ஒண் சுடர் பருதி போல
சுதை ஒளி மாடத்து உச்சி வெண்குடை நீழல் தோன்றி
விதையத்தார் வென்றி வேந்தன் விழு படை காணும் அன்றே
#2154
அரும் பனை தட கை அபரகாத்திரம் வாய் வால் எயிறு ஐந்தினும் கொல்வ
கரும் கடல் சங்கும் கறந்த ஆன் பாலும் கனற்றிய கால் உகிர் உடைய
பெரும் புலி முழக்கின் மாறு எதிர் முழங்கி பெரு வரை கீண்டிடும் திறல
திருந்தி ஏழுறுப்பும் திண் நிலம் தோய்வ தீ உமிழ் தறுகணின் சிறந்த
#2155
கவிழ் மணி புடைய கண் நிழல் நாறின் கனன்று தம் நிழலொடு மலைவ
அவிழ் புயல் மேகம் அனைய மும்மதத்த அறுபதிற்று அறுபதாம் நாகம்
புகழ் பருந்து ஆர்ப்ப பூ மதம் பொழிவான் நின்றன இராயிரம் கவுள் வண்டு
இகழ் மதம் செறித்த இராயிரத்து ஐஞ்நூறு இளையவும் அ துணை களிறே
#2156
குந்தமே அயில் வாள் குனி சிலை மூன்றும் குறைவிலார் கூற்றொடும் பொருவார்
அந்தரம் ஆறா யானை கொண்டு ஏற பறக்க எனில் பறந்திடும் திறலார்
முந்து அமர் தம்முள் முழு மெயும் இரும்பு மேய்ந்திட வெம் சமம் விளைத்தார்
கொந்து அழல் அஞ்சா குஞ்சரம் இவர்ந்தார் கோடியே விருத்தியா உடையார்
#2157
குங்கும நறு நீர் பந்தி நின்று ஆடும் குதிரை ஆறு ஆயிரத்து இரட்டி
பொங்கு வெண் மயிர் சூழ் பொன் படை பொலிந்த அறுபதின் ஆயிரம் புரவி
வெம் கணை தவிர்ப்ப வெள்ளி வெண் படைய வாய்விடின் நிலவரை நில்லா
பைம் கதிர் கொட்டை கவரி சூழ்ந்து அணிந்த பகரின் அ தொகையன பாய்மா
#2158
வேய் நிற கரும்பின் வெண் நிற பூ போல் மிடைந்து ஒளிர் குந்தமும் வாளும்
தோம் நிலை அரவின் தோற்றமே போலும் சிலைகளும் பிறகளும் துறைபோய்
ஊனம் ஒன்று இல்லார் உயர் குடி பிறந்தார் ஆயிரம் அடுகளம் கண்டார்
பால் நிலா பூணார் படை தொழில் கலிமா பண் உறுத்து ஏறினார் அவரே
#2159
தறுகண் ஆண்மைய தாமரை நிறத்தன தகைசால்
மறு இல் வான் குளம்பு உடையன மாளவத்து அகத்த
பறையின் ஆலுவ படு சினை நாவலின் கனி போல்
குறைவு இல் கோலத்த குளிர் புனல் சிந்துவின் கரைய
#2160
பாரசூரவம் பல்லவம் எனும் பதி பிறந்த
வீர ஆற்றல விளை கடும் தேறலின் நிறத்த
பாரில் தேர் செலின் பழி பெரிது உடைத்து என நாணி
சோரும் வார் புயல் துளங்க விண் புகுவன துரகம்
#2161
பீலி மா மயில் எருத்து என பெரு வனப்பு உடைய
மாலை மாரட்டத்து அகத்தன வளர் இளம் கிளியே
போலும் மேனிய பொரு கடல் கலத்தின் வந்து இழிந்த
கோல நீர் பவள குளம்பு உடையன குதிரை
#2162
இன்ன பொங்கு உளை புரவி பண் உறுத்தன இயல் தேர்
பொன்னும் வெள்ளியும் மணியினும் பொலிந்து வெண் மதியம்
தன்னை ஊர் கொண்ட தகையன தொகை சொலின் அறுநூறு
என்னும் ஈறு உடை இருபதினாயிரம் இறையே
#2163
நொச்சி மா மலர் நிறத்தன நொடி வரும் முந்நீர்
உச்சி மா கதிர் போல் சுடும் ஒளி திகழ் அயில் வாள்
எச்சத்து அல்லவும் எறி படை பயின்று தம் ஒன்னார்
நிச்சம் கூற்றினுக்கு இடுபவர் தேர் மிசை அவரே
#2164
எயிற்று படை ஆண்மையினின் இடிக்கும் புலி ஒப்பார்
பயிற்றிய வில் வாள் பணிக்கும் வேலொடு உடன் வல்லார்
துயிற்றிய பல் கேள்வியினர் தூற்றிக்கொளப்பட்டார்
அயில் துப்பு அடையார்கள் மத யானை கதன் அறுப்பார்
#2165
காலனொடு சூழ்ந்த கடு நோய்களையும் ஒப்பார்
ஆலும் கடல் தூர்த்தல் மலை அகழ்தல் இவை வல்லார்
ஞாலம் அறி ஆண் தொழிலர் நான்கு இலக்கம் உள்ளார்
மேலும் நுமரால் உரிமையுள் சிறப்பு பெற்றார்
#2166
சிங்கத்து உரி போர்த்த செழும் கேடகமும் வாளும்
பொங்கும் அயில் வேலும் பொரு வில்லும் உடன் பரப்பி
மங்குல் இடை மின்னும் மதியும் சுடரும் போல
வெம் கண் தொழில் கூற்றும் அரண் சேர விரிந்து அன்றே
#2167
செம்பொன் நீள் முடி தேர் மன்னர் மன்னற்கு
பைம்பொன் ஆழி தொட்டான் படை காட்டினான்
அம் பொன் ஒண் கழலான் அயிராவணம்
வெம்ப ஏறினன் வெல்க என வாழ்த்தினார்
#2168
சிறு வெண் சங்கு முரன்றன திண் முரசு
அறையும் மா கடல் கார் என ஆர்த்தன
நெறியின் நல்கின புள்ளும் நிமித்தமும்
இறைவன் கண் வலன் ஆடிற்று இயைந்து-அரோ
#2169
மல்லல் யானை கறங்கும் மணி ஒலி
அல்லது ஐம் கதி மான் கொழும் தார் ஒலி
கல் என் ஆர்ப்பு ஒலி மிக்கு ஒளிர் வாள் மினின்
செல்லும் மா கடல் போன்றது சேனையே
#2170
மாலை மா மதி வெண்குடை மல்கிய
கோல குஞ்சி நிழல் குளிர் பிச்சமும்
சோலை ஆய் சொரி மும்மதத்தால் நிலம்
பாலை போய் மருதம் பயந்திட்டதே
#2171
மன்றல் மா மயில் ஆர்த்து எழ மான் இனம்
கன்றினோடு கலங்கின கால் பெய
வென்றி வேல் படை அஞ்சி வனத்தொடு
குன்று எலாம் குடி போவன போன்றவே
#2172
படு கண் முழவின் இமிழ் அருவி வரையும் காடும் பல போகி
இடு மண் முழவின் இசை ஓவா ஏமாங்கத நாட்டு எய்திய பின்
நெடு வெண்ணிலவின் நெற்றி தோய் நிழலால் செம்பொன் புரிசையே
கடி மண் காவல் கருதினான் கோயில் ஆக கருதினான்
#2173
போக மகளிர் வல கண்கள் துடித்த பொல்லா கனா கண்டார்
ஆகம் மன்னற்கு ஒளி மழுங்கிற்று அஞ்சத்தக்க குரலினால்
கூகை கோயில் பகல் குழற கொற்ற முரசம் பாடு அவிந்து
மாகம் நெய்த்தோர் சொரிந்து எங்கும் மண்ணும் விண்ணும் அதிர்ந்தவே
#2174
கூற்றம் வந்து புறத்து இறுத்தது அறியான் கொழும் பொன் உலகு ஆள்வான்
வீற்று இங்கு இருந்தேன் என மகிழ்ந்து வென்றி வேழம் இருநூறும்
காற்றின் பரிக்கும் தேர் நூறும் கடும் கால் இவுளி ஆயிரமும்
போற்றி விடுத்தான் புனை செம்பொன் படையே அணிந்து புனை பூணான்
#2175
மன்னன் ஆங்கு ஓர் மத வேழம் வாரி மணாளன் என்பதூஉம்
மின்னும் கொடி தேர் விசயமும் புரவி பவன வேகமும்
பொன்னின் புனைந்து தான் போக்க நிகழ்வது ஓரான் மகிழ்வு எய்தி
முன் யான் விட்ட இன களிற்றின் இரட்டி விடுத்தான் என புகழ்ந்தான்
#2176
வீங்கு நீர் விதையத்தார் கோன் கட்டியங்காரன் தன்னோடு
ஆங்கு அவன் ஒருவன் ஆகி அன்பு எனும் அயில் கொள் வாளால்
வாங்கிக்கொண்டு உயிரை உண்பான் வஞ்சத்தால் சூழ்ந்த-வண்ணம்
ஓங்கு நீர் ஓத வேலிக்கு உணர யாம் உரைத்தும் அன்றே
#2177
பெருமகன் காதல் பாவை பித்திகை பிணையல் மாலை
ஒரு மகள் நோக்கினாரை உயிரொடும் போகொடாத
திருமகள் அவட்கு பாலான் அரும் திரிபன்றி எய்த
அரு மகன் ஆகும் என்று ஆங்கு அணி முரசு அறைவித்தானே
#2178
ஆய் மத களிறு திண் தேர் அணி மணி புரவி அம் பொன்
காய் கதிர் சிவிகை செற்றி கலந்தவை நுரைகள் ஆக
தோய் மழை உலக வெள்ளம் தொல் நகர் தொக்கதே போல்
ஆய் முடி அரச வெள்ளம் அணி நகர் ஈண்டிற்று அன்றே
#2179
நல்லவள் வனப்பு வாங்க நகை மணி மாலை மார்பர்
வில் அன்றே உவனிப்பாரும் வெம் கணை திருத்துவாரும்
சொல்லு-மின் எமக்கும் ஆங்கு ஓர் சிலை தொட நாள் என்பாரும்
பல் சரம் வழங்குவாரும் பரிவு கொள்பவரும் ஆனார்
#2180
பிறை எயிற்று எரி கண் பேழ் வாய் பெரு மயிர் பைம்பொன் பன்றி
அறை என திரியும் ஆய் பொன் பூமியின் நிறைந்து மன்னர்
உறு கணை ஒன்றும் வில்லும் உடன் பிடித்து உருவ நேமி
பொறி திரிவதனை நோக்கி பூ முடி துளக்கி நின்றார்
#2181
ஏந்து எழில் ஆகம் சாந்தின் இடு கொடி எழுதி காதில்
காய்ந்து எரி செம்பொன் தோடும் கன மணி குழையும் மின்ன
வேந்தருள் வினிதை வேந்தன் வெம் சிலை தளர வாங்கி
ஆய்ந்த பொன் பன்றி நெற்றி அரும் துகள் ஆர்ப்ப எய்தான்
#2182
குடர் தொடர் குருதி கோட்டு குஞ்சர நகரத்தார் கோன்
சுடர் நுதல் பட்டம் மின்ன சுரும்பு இமிர் கண்ணி சிந்த
அடர் கதிர் பைம்பொன் பூணும் ஆரமும் அகலத்து ஒல்க
படர் சிலை குழைய வாங்கி பன்றியை பதைப்ப எய்தான்
#2183
வார் மது துளிக்கும் மாலை மணி முடி தொடுத்து நால
கார் மதம் கடந்த வண் கை காம்பிலி காவல் மன்னன்
ஏர் மத கேழல் எய்வான் ஏறலும் பொறியின் ஏறுண்டு
ஆர் மத களிற்று வேந்தர்க்கு அரு நகையாக வீழ்ந்தான்
#2184
முலை வட்ட பூணும் முத்தும் முள்கலின் கிழிந்து பொல்லா
இலை வட்ட தாம மார்பின் கோசலத்து இறைவன் எய்த
குலை வட்ட குருதி அம்பு வானின் மேல் பூசல் உய்ப்பான்
சிலை வட்டம் நீங்கி விண் மேல் செவ்வனே எழுந்தது அன்றே
#2185
ஊடிய மடந்தை போல உறு சிலை வாங்க வாராது
ஆடு எழு அனைய திண் தோள் அவந்தியன் அதனை நோனான்
நாடு எழுந்து ஆர்ப்ப மற்று அ நன் சிலை முறித்திட்டு அம்பை
வாடினன் பிடித்து நின்றான் மணமகன் போல நின்றான்
#2186
பில்கி தேன் ஒழுகும் கோதை பிறர் மனையாள்-கண் சென்ற
உள்ளத்தை உணர்வின் மிக்கான் ஒழித்திட பெயர்ந்ததே போல்
மல்லல் நீர் மகதராசன் துரந்த கோல் மருள ஓடி
புல்லி அ பொறியை மோந்து புறக்கொடுத்திட்டது அன்றே
#2187
தென் வரை பொதியில் ஆரம் அகிலொடு தேய்த்த தேய்வை
மன் வரை அகலத்து அப்பி மணி வடம் திருவில் வீச
மின் என விட்ட கோலை விழுங்க கண்டு அழுங்கி வேர்த்து
கல் மலிந்து இலங்கு திண் தோள் கலிங்கர்கோன் மெலிந்து மீண்டான்
#2188
கல் மழை பொன் குன்று ஏந்தி கண நிரை அன்று காத்து
மன் உயிர் இன்று காக்கும் வாரணவாசிமன்னன்
மின் இழை சுடர வாங்கி விட்ட கோல் உற்று உறாதாய்
மன் உயிர் நடுங்க நாணி மண் புக்கு மறைந்தது அன்றே
#2189
எரி கதிர் பைம்பொன் சுண்ணம் இலங்க மெய் முழுதும் அப்பி
புரி கழல் அணிந்த நோன் தாள் போதனபுரத்து வேந்தன்
அரிதினில் திகிரி ஏறி திரிந்து கண் கழன்று சோர்ந்து
விரி கதிர் கடவுள் போல வெறு நிலத்து ஒலிப்ப வீழ்ந்தான்
#2190
மலைய செம் சாந்தும் முந்நீர் வலம்புரி ஈன்ற முத்தும்
இலை வைத்த கோதை நல்லார் இள முலை பொறியும் ஆர்ந்து
சிலை வைத்த மார்பின் தென்னன் திரு மணி பன்றி நோக்கி
தலை வைத்தது அம்பு தானும் தரணி மேல் பாதம் வைத்தான்
#2191
வில் திறல் விசயன் என்பான் வெம் கணை செவிட்டி நோக்கி
ஒற்றுபு திருத்தி கைம்மேல் உருட்டுபு நேமி சேர்ந்து ஆங்கு
உற்ற தன் சிலையின்-வாய் பெய்து உடு அமை பகழி வாங்க
இற்று வில் முறிந்து போயிற்று இமைப்பினில் இலங்கித்திட்டான்
#2192
குண்டலம் இலங்க வாங்கி குனி சிலை உறையின் நீக்கி
கொண்டு அவன் கொழும் பொன் தாரும் ஆரமும் மிளிர ஏறி
கண்டு கோல் நிறைய வாங்கி காதுற மறிதலோடும்
விண்டு நாண் அற்றது ஆங்கே விசயனும் வீக்கம் அற்றான்
#2193
உளை வனப்பு இருந்த மான் தேர் ஒளி முடி மன்னர் எல்லாம்
வளை வனப்பு இருந்த தோளாள் வரு முலை போகம் வேண்டி
விளை தவ பெருமை ஓரார் வில் திறல் மயங்கி யாரும்
களைகலார் பொறியை ஆங்கு ஓர் ஆறு நாள் கழிந்து அன்றே
#2194
பனை கை யானை மன்னர் பணிய பைம்பொன் முடியில்
கனைக்கும் சுரும்பு ஆர் மாலை கமழ மதுவும் தேனும்
நனைக்கும் கழலோன் சிறுவன் நாம வெள் வேல் வலவன்
நினைக்கலாகா வகையான் நேரார் உயிர் மேல் எழுந்தான்
#2195
காரின் முழங்கும் களிறும் கடலின் முழங்கும் தேரும்
போரின் முழங்கும் புரவி கடலும் புகை வாள் கடலும்
சீரின் முழங்கும் முரசும் அலறும் சிறு வெண் சங்கும்
நீரின் முழங்க முழங்கும் நீல யானை இவர்ந்தான்
#2196
கல்லார் மணி பூண் மார்பின் காமன் இவனே என்ன
வில்லார் கடல் அம் தானை வேந்தர் குழாத்துள் தோன்ற
புல்லான் கண்ணின் நோக்கி புலி காண் கலையின் புலம்பி
ஒல்லான் ஒல்லான் ஆகி உயிர்போயிருந்தான் மாதோ
#2197
புலி யாப்புறுத்தி கொண்டேன் போக்கி விட்ட பிழைப்பும்
வலியார் திரள் தோள் மதனன் அவனை பிழைத்த பிழைப்பும்
நலியும் என்னை நலியும் என்ன களிற்றின் உச்சி
இலையார் கடக தட கை புடைத்து மெய் சோர்ந்து இருந்தான்
#2198
மை பூத்து அலர்ந்த மழை கண் மாழை மான் நேர் நோக்கின்
கொய் பூம் கோதை மடவார் கொற்றம் கொள்க என்று ஏத்த
பெய் பூம் கழலான் வேழத்து இழிந்து பிறை போல் குலாய
செய் பூண் சிலை நாண் எறிந்தான் சேரார் நாள் உக்கனவே
#2199
கனிபடு மொழியினாள் தன் காரிகை கவற்ற வந்து
குனி சிலை தோற்ற மன்னர் கொங்கு கொப்புளிக்கும் நீல
பனி மலர் காடு போன்றார் படர் சிலை தொடாத வேந்தர்
இனிதினின் மலர்ந்த ஏர் ஆர் தாமரை காடு போன்றார்
#2200
போர் தகல் விசும்பில் வந்து பொறித்திரி பன்றி மூன்றும்
நீர்த்தக புணர்ந்த போதில் நெடும் தகை மூன்றும் அற்று
சூர்த்துடன் வீழ நோக்கி சுடு சரம் சிதற வல்லான்
ஓர்த்து ஒன்றே புணர்ப்ப நாடி ஒரு பகல்-காறும் நின்றான்
 
 
#2201
பொறியின் மேல் ஏறல் தேற்றான் நாணினால் போதல் செய்யான்
நெறியின் வில் ஊன்றி நிற்ப நிழல் மணி பன்றி அற்று
மறியுமோ என்று முன்னே மணி முடி சிதறி வீழ்ந்த
செறி கழல் மன்னர் நக்கு தீய தீ விளைத்து கொண்டார்
#2202
சிரல் தலை மணிகள் வேய்ந்த திருந்து பொன் திகிரி செம்பொன்
உரல் தலை உருவ பன்றி இடம் வலம் திரிய நம்பன்
விரல் தலை புட்டில் வீக்கி வெம் சிலை கணையோடு ஏந்தி
குரல் தலை வண்டு பொங்க குப்புற்று நேமி சேர்ந்தான்
#2203
ஒள் அழல் வைர பூணும் ஒளிர் மணி குழையும் மின்ன
ஒள் அழல் கொள்ளி வட்டம் போல் குலாய் சுழல பொன் ஞாண்
ஒள் அழல் நேமி நக்க மண்டலம் ஆக நின்றான்
ஒள் அழல் பருதி மேல் ஓர் பருதி நின்று அதனை ஒத்தான்
#2204
அரும் தவ கிழமை போல இறாத வில் அறாத நாண் வாய்
திருந்தினார் சிந்தை போலும் திண் சரம் சுருக்கி மாறாய்
இருந்தவன் பொறியும் பன்றி இயல்தரும் பொறியும் அற்று ஆங்கு
ஒருங்கு உடன் உதிர எய்தான் ஊழி தீ உருமொடு ஒப்பான்
#2205
இலங்கு எயிற்று ஏனம் ஏவுண்டு இரு நிலத்து இடித்து வீழ
கலங்கு தெண் திரையும் காரும் கடு வளி முழக்கும் ஒப்ப
உலம்புபு முரசம் கொட்டி ஒய்யென சேனை ஆர்ப்ப
குலம் பகர்ந்து அறைந்து கோமான் கோவிந்தன் கூறினானே
#2206
வான் ஒருவன் தோன்றி மழை என முழங்கி சொல்லும்
தேன் உடை அலங்கல் வெள் வேல் சீவகன் என்னும் சிங்கம்
கான் உடை அலங்கல் மார்பின் கட்டியங்காரன் என்னும்
வேல் மிடை சோலை வேழத்து இன்னுயிர் விழுங்கும் என்றான்
#2207
விஞ்சையர் வெம் படை கொண்டு வந்தாய் என
அஞ்சுவலோ அறியாய் எனது ஆற்றலை
வெம் சமம் ஆக்கிடின் வீக்கு அறுத்து உன்னொடு
வஞ்சனை வஞ்சம் அறுத்திடுக என்றான்
#2208
சூரியன் காண்டலும் சூரியகாந்தம் அஃது
ஆர் அழல் எங்ஙனம் கான்றிடும் அங்ஙனம்
பேர் இசையான் இசை கேட்டலும் பெய்ம் முகில்
கார் இடி போல் மதனன் கனன்றிட்டான்
#2209
கால் படையும் களிறும் கலிமாவொடு
நூல் படு தேரும் நொடிப்பினில் பண்ணி
நால் படையும் தொகுத்தான் மக்கள் நச்சு இலை
வேல் படை வீரர் ஒர் நூற்றுவர் தொக்கார்
#2210
வில் திறலான் வெய்ய தானையும் வீங்குபு
செற்று எழுந்தான் படையும் சின மொய்ம்பொடு
மற்று அவர் மண்டிய வாள் அமர் ஞாட்பினுள்
உற்றவர்க்கு உற்றது எலாம் உரைக்குற்றேன்
#2211
அத்த மா மணி வரை அனைய தோன்றல
மத்தகத்து அருவியின் மணந்த ஓடைய
முத்து உடை மருப்பின் முனை-கண் போழ்வன
பத்தியில் பண்ணின பரும யானையே
#2212
கோல் பொரு கொடும் சிலை குருதி வெம் படை
மேலவர் அடக்குபு வேழம் ஏறலின்
மால் இரு விசும்பு-இடை மணந்த ஒண் கொடி
கால் பொரு கதலிகை கானம் ஒத்தவே
#2213
குடை உடை நிழலன கோலம் ஆர்ந்தன
கிடுகு உடை காப்பின கிளர் பொன் பீடிகை
அடி தொடைக்கு அமைந்தன அரவ தேர் தொகை
வடிவு உடை துகில் முடி வலவர் பண்ணினார்
#2214
கொய் உளை புரவிகள் கொளீஇய திண் நுகம்
பெய் கயிறு அமைவர பிணித்து முள்ளுறீஇ
செய் கயிறு ஆய்ந்தன சிலையும் அல்லவும்
கை அமைத்து இளைஞரும் கருவி வீசினார்
#2215
பறந்து இயல் தருக்கின பரவை ஞாட்பினுள்
கறங்கு என திரிவன கவரி நெற்றிய
பிறந்துழி அறிக என பெரிய நூலவர்
குறங்கு எழுத்து உடையன குதிரை என்பவே
#2216
கொல் நுனை குந்தமும் சிலையும் கூர் நுதி
மின் நிலை வாளோடு மிலேச்சர் ஏறலின்
பொன் அரி புட்டிலும் தாரும் பொங்குபு
முன் உருத்து ஆர்த்து எழ புரவி மொய்த்தவே
#2217
மாலையும் கண்ணியும் மணந்த சென்னியர்
ஆலுபு செறி கழல் ஆர்க்கும் காலினர்
பாலிகை இடை அற பிடித்த பாணியர்
சாலிகை உடம்பினர் தறுகணாளரே
#2218
போர் மயிர் கேடகம் புளக தோற்பரம்
வயிர் மயிர் கிடுகொடு வள்ளி தண்டையும்
நேர் மர பலகையும் நிரைத்த தானை ஓர்
போர் முக புலி கடல் புகுந்தது ஒத்ததே
#2219
பார் நனை மதத்த பல் பேய் பருந்தொடு பரவ செல்லும்
போர் மத களிறு பொன் தேர் நான்கரை கச்சம் ஆகும்
ஏர் மணி புரவி ஏழ் ஆம் இலக்கம் ஏழ் தேவ கோடி
கார் மலி கடல் அம் காலாள் கற்பக தாரினாற்கே
#2220
நிழல் மணி புரவி திண் தேர் நிழல் துழாய் குனிந்து குத்தும்
அழல் திகழ் கதத்த யானை ஐந்தரை கச்சம் ஆகும்
எழில் மணி புரவி ஏழ் ஆம் இலக்கம் ஏழ் தேவ கோடி
கழல் மலிந்து இலங்கும் காலாள் கட்டியங்காரற்கு அன்றே
#2221
குலம் கெழு மகளிர் தம் கோலம் நீப்பவும்
அலங்கு உளை புரவியும் களிறும் மாளவும்
நிலமகள் நெஞ்சு கையெறிந்து நையவும்
புலமகன் சீறினன் புகைந்தது எஃகமே
#2222
குணில் பொர குளிறின முரசம் வெள் வளை
பணை பரந்து ஆர்த்தன பம்பை வெம்பின
இணை இல எழுந்த தாழ் பீலி எங்கணும்
முணையினால் கடலக முழக்கம் ஒத்தவே
#2223
முடி மனர் எழுதரு பருதி மொய் களிறு
உடை திரை மா கலம் ஒளிறு வாள் படை
அடு திறல் எறி சுறா ஆக காய்ந்தன
கடல் இரண்டு எதிர்ந்தது ஓர் காலம் ஒத்ததே
#2224
அரும் கணை அடக்கிய ஆவ நாழிகை
பெரும் புறத்து அலமர பிணித்த கச்சினர்
கரும் கழல் ஆடவர் கரு வில் வாய் கொளீஇ
சொரிந்தனர் கணை மழை விசும்பு தூர்ந்ததே
#2225
நிணம் பிறங்கு அகலமும் தோளும் நெற்றியும்
அணங்கு அரும் சரங்களின் அழுத்தி ஐயென
மணம் கமழ் வரு புனல் மறலும் மாந்தரின்
பிணங்கு அமர் மலைந்தனர் பெற்றி இன்னதே
#2226
கழித்தனர் கனல வாள் புகைந்து கண்கள் தீ
விழித்தன தீந்தன இமைகள் கூற்று என
தெழித்தனர் திறந்தனர் அகலம் இன்னுயிர்
அழித்தனர் அயிலவர் அரவம் மிக்கதே
#2227
பொரும் களத்து ஆடவர் பொருவில் பைம் தலை
அரும் பெறல் கண்ணியோடு அற்று வீழ்வன
கரும் கனி பெண்ணை அம் கானல் கால் பொர
இரும் கனி சொரிவன போன்ற என்பவே
#2228
பணை முனிந்து ஆலுவ பைம்பொன் தாரின
கணை விசை தவிர்ப்பன கவரி நெற்றிய
துணை அமை இளமைய தோற்றம் மிக்கன
இணை மயிர் புரவியோடு இவுளி ஏற்றவே
#2229
கூர் உளி முகம் பொர குழிசி மாண்டன
ஆர் ஒளி அமைந்தன ஆய் பொன் சூட்டின
கார் ஒளி மின் உமிழ் தகைய கால் இயல்
தேரொடு தேர் தம்முள் சிறந்து சேர்ந்தவே
#2230
அஞ்சனம் எழுதின கவளம் ஆர்ந்தன
குஞ்சரம் கூற்றொடு கொம்மை கொட்டுவ
அஞ்சன வரை சிறகு உடைய போல்வன
மஞ்சு இவர் குன்று என மலைந்த வேழமே
#2231
மா கடல் பெரும் கலம் காலின் மாறுபட்டு
ஆக்கிய கயிறு அரிந்து ஓடி எங்கணும்
போக்கு அற பொருவன போன்று தீப்பட
தாக்கின அரசு உவா தம்முள் என்பவே
#2232
விடு சரம் விசும்பு-இடை மிடைந்து வெய்யவன்
படு கதிர் மறைந்து இருள் பரந்தது ஆயிடை
அடு கதிர் அயில் ஒளி அரசர் மா முடி
விடு கதிர் மணி ஒளி வெயிலின் காய்ந்தவே
#2233
பூண் குலாம் வன முலை பூமி தேவி தான்
காண்கலேன் கடியன கண்ணினால் எனா
சேண் குலாம் கம்பலம் செய்யது ஓன்றினால்
மாண் குலாம் குணத்தினால் மறைத்திட்டாள்-அரோ
#2234
கலை கோட்ட அகல் அல்குல் கணம் குழையார் கதிர் மணி பூண்
முலை கோட்டால் உழப்பட்ட மொய் மலர் தார் அகன் மார்பர்
மலை கோட்ட எழில் வேழம் தவ நூறி மத யானை
கொலை கோட்டால் உழப்பட்டு குருதியுள் குளித்தனரே
#2235
மண மாலை மடந்தையர் தம் மெல் விரலால் தொடுத்து அணிந்த
இணர் மாலை இரும் குஞ்சி ஈர்ம் குருதி புனல் அலைப்ப
நிண மாலை குடர் சூடி நெருப்பு இமையா நெய்த்தோரில்
பிண மாலை பேய் மகட்கு பெரு விருந்து அயர்ந்தனரே
#2236
தோலா போர் மற மன்னர் தொடி தோள்கள் எடுத்து ஓச்சி
மேல் ஆள் மேல் நெருப்பு உமிழ்ந்து மின் இலங்கும் அயில் வாளால்
கால் ஆசோடு அற எறிந்த கனை கழல் கால் அலை கடலுள்
நீல நீர் சுறா இனம் போல் நெய்த்தோருள் பிறழ்ந்தனவே
#2237
கருவி ஊடு உளம் கழிந்து கணை மொய்ப்ப கதம் சிறந்து
குருவி சேர் வரை போன்ற குஞ்சரம் கொடி அணிந்த
உருவ தேர் இற முருக்கி உருள் நேமி சுமந்து எழுந்து
பருதி சேர் வரை போல பகட்டு இனம் பரந்தனவே
#2238
மாலை வாய் நெடும் குடை மேல் மத யானை கை துணிந்து
கோல நீள் கொழும் குருதி கொள வீழ்ந்து கிடந்தன
மேலை நீள் விசும்பு உறையும் வெண் மதியம் விசும்பு இழுக்கி
நீல மாசுணத்தோடு நிலத்து இழிந்தது ஒத்தனவே
#2239
அஞ்சன நிறம் நீக்கி அரத்தம் போர்த்து அமர் உழக்கி
இங்குலிக இறுவரை போன்று இன களிறு இடை மிடைந்த
குஞ்சரங்கள் பாய்ந்திடலின் குமிழிவிட்டு உமிழ் குருதி
இங்குலிக அருவி போன்று எவ்வாயும் தோன்றினவே
#2240
குஞ்சரம் தலை அடுத்து கூந்தல்மா கால் அணையா
செஞ்சோற்றுக்கடன் நீங்கி சினவுவாள் பிடித்து உடுத்த
பஞ்சி மேல் கிடந்து உடை ஞாண் பதைத்து இலங்க கிடந்தாரை
அஞ்சி போந்து இன நரியோடு ஓரி நின்று அலறுமே
#2241
காதலார்க்கு அமிர்து ஈந்த கடல் பவழ கடிகை வாய்
ஏது இலா புள் உண்ண கொடேம் என்று வாய் மடித்து
காது அணிந்த பொன் தோடும் குண்டலமும் நக நகா
வீ ததைந்த வரை மார்பர் விஞ்சையர் போல் கிடந்தனரே
#2242
குடர் வாங்கு குறுநரிகள் கொழு நிண புலால் சேற்றுள்
தொடர் வாங்கு கதநாய் போல் தோன்றின தொடி திண் தோள்
படர் தீர கொண்டு எழுந்த பறவைகள் பட நாகம்
உடனே கொண்டு எழுகின்ற உவண புள் ஒத்தனவே
#2243
வரையோடும் உரும் இடிப்ப வளை எயிற்று கொழும் குருதி
நிரை உளை அரி நல் மா நிலம் மிசை புரள்வன போல்
புரை அறு பொன் மணி ஓடை பொடி பொங்க பொருது அழிந்து
அரைசோடும் அரசுவா அடு களத்து ஆழ்ந்தனவே
#2244
தடம் பெரும் குவளை கண் தாழ் குழலார் சாந்து அணிந்து
வடம் திளைப்ப புல்லிய வரை மார்பம் வாள் புல்ல
நடந்து ஒழுகு குருதியுள் நகா கிடந்த எரி மணி பூண்
இடம்படு செ வானத்து இளம் பிறை போல் தோன்றினவே
#2245
காளம் ஆகு இருளை போழ்ந்து கதிர் சொரி கடவுள் திங்கள்
கோள் அரா விழுங்க முந்நீர் கொழும் திரை குளித்ததே போல்
நீள் அமர் உழக்கி யானை நெற்றி மேல் தத்தி வெய்ய
வாளின் வாய் மதனன் பட்டான் விசயன் போர் விசயம் பெற்றான்
#2246
மன்மதன் என்னும் காளை மணி ஒலி புரவி தேர் மேல்
வில் மழை சொரிந்து கூற்றின் தெழித்தனன் தலைப்பெய்து ஆர்ப்ப
கொன் மலி மார்பன் பொன் தேர் கொடும் சிலை அறுப்ப சீறி
பொன் வரை புலியின் பாய்ந்து பூமி மேல் தோன்றினானே
#2247
நெற்றி மேல் கோல்கள் மூன்று நெருப்பு உமிழ்ந்து அழுந்த எய்ய
சுற்றுபு மாலை போல தோன்றல் தன் நுதலில் சூடி
பொற்றது ஓர் பவழம் தன் மேல் புனை மணி அழுத்தி ஆங்கு
செற்று எயிறு அழுந்த செ வாய் கௌவி வாள் உரீஇனானே
#2248
தோளினால் எஃகம் ஏந்தி தும்பி மேல் இவர கையால்
நீள மா புடைப்ப பொங்கி நிலத்து அவன் கவிழ்ந்து வீழ
கீள் இரண்டு ஆக குத்தி எடுத்திட கிளர் பொன் மார்பன்
வாளினால் திருகி வீசி மருப்பின் மேல் துஞ்சினானே
#2249
நனை கலந்து இழியும் பைம் தார் நான்மறையாளன் பைம்பொன்
புனை கல குப்பை ஒப்பான் புத்திமாசேனன் பொங்கி
வனை கல திகிரி தேர் மேல் மன்னரை குடுமி கொண்டான்
கனை எரி அழல் அம்பு எய்த கண்_நுதல்_மூர்த்தி ஒத்தான்
#2250
செண்பக பூம் குன்று ஒப்பான் தேவமாதத்தன் வெய்தா
விண் புக உயிரை பெய்வான் வீழ்தரு கடாத்த வேழம்
மண் பக இடிக்கும் சிங்கம் என கடாய் மகதர் கோமான்
தெண் கடல் தானை ஓட நாணி வேல் செறித்திட்டானே
 
 
#2251
சின்ன பூ அணிந்த குஞ்சி சீதத்தன் சினவு பொன் வாள்
மன்னருள் கலிங்கர் கோமான் மத்தகத்து இறுப்ப மன்னன்
பொன் அவிர் குழையும் பூணும் ஆரமும் சுடர வீழ்வான்
மின் அவிர் பருதி முந்நீர் கோளொடும் வீழ்வது ஒத்தான்
#2252
கொடும் சிலை உழவன் மான் தேர் கோவிந்தன் என்னும் சிங்கம்
மடங்கரும் சீற்ற துப்பின் மாரட்டன் என்னும் பொன் குன்று
இடந்து பொன் தூளி பொங்க களிற்றொடும் இறங்கி வீழ
அடர்ந்து எறி பொன் செய் அம்பின் அழன்று இடித்திட்டது அன்றே
#2253
கோங்கு பூத்து உதிர்ந்த குன்றின் பொன் அணி புளகம் வேய்ந்த
பாங்கு அமை பரும யானை பல்லவ தேச மன்னன்
தேம் கமழ் தெரியல் தீம் பூம் தாரவன் ஊர்ந்த வேழம்
காம்பிலிக்கு இறைவன் ஊர்ந்த களிற்றொடு மலைந்தது அன்றே
#2254
கொந்து அழல் பிறப்ப தாக்கி கோடுகள் மிடைந்த தீயால்
வெந்தன விலை இலாத சாமரை வீர மன்னன்
அந்தரம் புதைய வில்-வாய் அரும் சரம் பெய்த மாரி
குந்தத்தால் விலக்கி வெய்ய கூற்று என முழங்கினானே
#2255
மற்றவன் உலோகபாலன் வயங்கு பொன் பட்டம் ஆர்ந்த
நெற்றி மேல் எய்த கோலை பறித்திட உமிழ்ந்த நெய்த்தோர்
உற்றவன் களிற்றில் பாய தோன்றுவான் உதயத்து உச்சி
ஒற்றை மா கதிரை நீட்டி ஒண் சுடர் இருந்தது ஒத்தான்
#2256
கொடு மரம் குழைய வாங்கி கொற்றவன் எய்த கோல்கள்
நெடு மொழி மகளிர் கோல நிழல் மணி முலைகள் நேர்பட்டு
உடன் உழ உவந்த மார்பம் மூழ்கலில் சிங்கம் போல
கடல் மருள் சேனை சிந்த காம்பிலி மன்னன் வீழ்ந்தான்
#2257
பொன் நிற கோங்கம் பொன் பூம் குன்று என பொலிந்த மேனி
நல் நிற மாவின் மேலான் நலம் கொள் தார் நபுலன் என்பான்
மின் நிற எஃகம் ஏந்தி வீங்கு நீர் மகதையார் கோன்
கொன் நிற களிற்றின் நெற்றி கூந்தல்மா பாய்வித்தானே
#2258
ஏந்தல் தன் கண்கள் வெய்ய இமைத்திட எறிதல் ஓம்பி
நாந்தக உழவன் நாணி நக்கு நீ அஞ்சல் கண்டாய்
காய்ந்திலேன் என்று வல்லே கலின மா குன்றின் பொங்கி
பாய்ந்தது ஓர் புலியின் மற்று ஓர் பகட்டின் மேல் பாய்வித்தானே
#2259
கை படை ஒன்றும் இன்றி கை கொட்டி குமரன் ஆர்ப்ப
மெய் படை வீழ்த்தல் நாணி வேழமும் எறிதல் செல்லான்
மை படை நெடும் கண் மாலை மகளிர் தம் வனப்பின் சூழ்ந்து
கை படு பொருள் இலாதான் காமம் போல் காளை மீண்டான்
#2260
மண் காவலை மகிழாது இவண் உடனே புகழ் ஒழிய
விண் காவலை மகிழ்வீர் நனி உளிரோ என விபுலன்
வண் காரிருள் மின்னே உமிழ் நெய் வாயது ஓர் அயில் வாள்
கண் காவல கழுகு ஓம்புவது உயரா நனி வினவும்
#2261
வீறு இன்மையின் விலங்காம் என மத வேழமும் எறியான்
ஏறு உண்டவர் நிகர் ஆயினும் பிறர் மிச்சில் என்று எறியான்
மாறு அன்மையின் மறம் வாடும் என்று இளையாரையும் எறியான்
ஆறு அன்மையின் முதியாரையும் எறியான் அயில் உழவன்
#2262
ஒன்று ஆயினும் பல ஆயினும் ஓர் ஓச்சினுள் எறிய
வென்று ஆயின மத வேழமும் உளவோ என வினவி
பொன் தாழ் வரை புலி போத்து என புனை தார் மிஞிறு ஆர்ப்ப
சென்றான் இகல் களிறு ஆயிரம் இரிய சின வேலோன்
#2263
புடை தாழ் குழை பெரு வில் உயர் பொன் ஓலையொடு எரிய
உடை நாணொடு கடி வட்டினொடு ஒளிர் வாளினொடு ஒருவன்
அடையா நிகர் எறி நீ என அதுவோ என நக்கான்
கிடை ஆயினன் இவனே என கிளர் ஆண் அழகு உடையான்
#2264
இன் நீரின திரை மேல் இரண்டு இள வெம் சுடர் இகலி
மின்னோடு அவை சுழன்று ஆயிடை விளையாடுகின்றன போல்
பொன் நாணினர் பொருவில் உயர் புனை கேடகம் திரியா
கொன் வாளினர் கொழும் தாரினர் கொடி மார்பினர் திரிந்தார்
#2265
விருந்து ஆயினை எறி நீ என விரை மார்பகம் கொடுத்தாற்கு
அரும் பூண் அற எறிந்து ஆங்கு அவன் நினது ஊழ் இனி எனவே
எரிந்து ஆர் அயில் இடை போழ்ந்தமை உணராது அவன் நின்றான்
சொரிந்தார் மலர் அர மங்கையர் தொழுதார் விசும்பு அடைந்தான்
#2266
நித்தில குப்பை போல நிழல் உமிழ்ந்து இலங்கும் மேனி
பத்தி பூண் அணிந்த மார்பின் பதுமுகன் பைம்பொன் சூழி
மொய்த்து எறி ஓடை நெற்றி மும்மத களிற்றின் மேலான்
கைத்தலத்து எஃகம் ஏந்தி காமுகன் கண்டு காய்ந்தான்
#2267
மாற்றவன் சேனை தாக்கி தளர்ந்த பின் வன்கண் மள்ளர்
ஆற்றலோடு ஆண்மை தோன்ற ஆருயிர் வழங்கி வீழ்ந்தார்
காற்றினால் புடைக்கப்பட்டு கடல் உடைந்து ஓட காமர்
ஏற்று இளம் சுறாக்கள் எங்கும் கிடந்தவை போல ஒத்தார்
#2268
தூசு உலாம் பரவை அல்குல் துணை முலை மகளிர் ஆடும்
ஊசல் போல் சேனை ஓட பதுமுகன் களிற்றை உந்தி
மாசில் சீர் மழையின் நெற்றி மா மதி நுழைவதே போல்
காய் சின களிற்றின் நெற்றி ஆழி கொண்டு அழுத்தினானே
#2269
பெரு வலி அதனை நோனான் பிண்டிபாலத்தை ஏந்தி
அரு வரை நெற்றி பாய்ந்த ஆய் மயில் தோகை போல
சொரி மத களிற்றின் கும்பத்து அழுத்தலின் தோன்றல் சீறி
கரு வலி தட கை வாளின் காளையை வெளவினானே
#2270
தீ முகத்து உமிழும் வேல் கண் சில் அரி சிலம்பினார்-தம்
காமுகன் களத்து வீழ கை விரல் நுதியின் சுட்டி
பூ முக மாலை மார்பன் பொன் அணி கவசம் மின்ன
கோமுகன் கொலைவல் யானை கூற்று என கடாயினானே
#2271
சாரிகை திரியும் யானை உழக்கலின் தரணி தன் மேல்
ஆர்கலி குருதி வெள்ளம் அரும் துகள் கழுமி எங்கும்
வீரிய காற்றில் பொங்கி விசும்பு போர்த்து எழுதப்பட்ட
போர் நிலை களத்தை ஒப்ப குருதி வான் போர்த்தது அன்றே
#2272
சென்றது தட கை தூணி சேந்த கண் புருவம் கோலி
நின்ற வில் குனிந்தது அம்பு நிமிர்ந்தன நீங்கிற்று ஆவி
வென்றி கொள் சரங்கள் மூழ்கி மெய் மறைத்திட்டு மின் தோய்
குன்றின் மேல் பவழம் போல கோமுகன் தோன்றினானே
#2273
பனி வரை முளைத்த கோல பருப்பு உடை பவழம் போல
குனி மருப்பு உதிரம் தோய்ந்த குஞ்சரம் கொள்ள உந்தி
கனி படு கிளவியார் தம் கதிர் முலை பொருது சேந்த
துனி வரை மார்பன் சீறி சுடு சரம் சிதறினானே
#2274
பன்னல் அம் பஞ்சி குன்றம் படர் எரி முகந்தது ஒப்ப
தன் இரு கையினாலும் தட கை மால் யானையாலும்
இன்னுயிர் பருகி சேனை எடுத்து கொண்டு இரிய ஓட்டி
கொன் முரண் தோன்ற வெம்பி கொலை களிற்று உழவன் ஆர்த்தான்
#2275
தருக்கொடு குமரன் ஆர்ப்ப தன் சிலை வளைய வாங்கி
ஒருக்கு அவன் கையும் வாயும் உளம் கிழித்து உடுவம் தோன்ற
சுருக்கு கொண்டிட்ட வண்ணம் தோன்றல் எய்திடுதலோடும்
மருப்பு இற களிறு குத்தி வயிரம் தான் கழிந்தது அன்றே
#2276
நித்தில மணி வண்டு என்னும் நெடு மத களிறு பாய
முத்து உடை மருப்பு வல்லே உடைந்து முத்து ஒழுகு குன்றின்
மத்தக யானை வீழ்ந்து வயிரம் கொண்டு ஒழிந்தது ஆங்கு
பத்திர கடிப்பு மின்ன பதுமுகன் பகடு பேர்த்தான்
#2277
பத்திர கடிப்பு மின்ன பங்கியை வம்பின் கட்டி
கொத்து அலர் தும்பை சூடி கோவிந்தன் வாழ்க என்னா
கை தலத்து எஃகம் ஏந்தி காளை போய் வேறு நின்றான்
மத்தக யானை மன்னர் வயிறு எரி தவழ்ந்தது அன்றே
#2278
மேகலை பரவை அல்குல் வெள் வளை மகளிர் செம் சாந்து
ஆகத்தை கவர்ந்து கொண்ட அணி முலை தடத்து வைகி
பாகத்தை படாத நெஞ்சின் பல்லவ தேய மன்னன்
சேவகன் சிங்கநாதன் செருக்களம் குறுகினானே
#2279
புனை கதிர் மருப்பு தாடி மோதிரம் செறித்து பொன்செய்
கனை கதிர் வாளை ஏந்தி கால் கழல் அணிந்து நம்மை
இனையன பட்ட ஞான்றால் இறையவர்கள் நினைப்பது என்றே
முனை அழல் முளி புல் கானம் மேய்ந்து என நீந்தினானே
#2280
தார் அணி பரவை மார்பில் குங்குமம் எழுதி தாழ்ந்த
ஆரமும் பூணும் மின்ன அரு விலை பட்டின் அம் கண்
ஏர் பட கிடந்த பொன் ஞாண் இருள் கெட விழிப்ப வெய்ய
பூரணசேனன் வண் கை பொரு சிலை ஏந்தினானே
#2281
ஊன் அமர் குறடு போல இரும்பு உண்டு மிகுத்த மார்பில்
தேன் அமர் மாலை தாழ சிலை குலாய் குனிந்தது ஆங்கண்
மான் அமர் நோக்கினாரும் மைந்தரும் குழீஇய போருள்
கான் அமர் காமன் எய்த கணை என சிதறினானே
#2282
வண்டு அலை மாலை தாழ மது உண்டு களித்து வண் கை
புண் தலை வேலை ஏந்தி போர்க்களம் குறுகி வாழ்த்தி
கண்படு-காறும் எந்தை கட்டியங்காரன் என்றே
உண்டு ஒலை ஆர்க வேல் என்று உறுவலி தாக்கினானே
#2283
கூற்று என வேழம் வீழா கொடி நெடும் தேர்கள் நூறா
ஏற்றவர் தம்மை சீறா ஏந்திர நூழில் செய்யா
ஆற்றல் அம் குமரன் செல்வான் அலை கடல் திரையின் நெற்றி
ஏற்று மீன் இரிய பாய்ந்த எறி சுறா ஏறு போன்றான்
#2284
மாலை கண் ஆம்பல் போல மகளிர் தம் குழாத்தில் பட்டார்
கோல வாள் போருள் பட்டால் குறு முயல் கூடு கண்டு
சால தாம் பனிக்கும் பொய்கை தாமரை நீரர்-ஆயின்
ஞாலத்தார் ஆண்மை என்னாம் என நகா வருகின்றானே
#2285
முடி சடை முனிவன் அன்று கேள்வியில் கொண்ட வேல் கண்
மடத்தகை மகளிர் கோல வரு முலை உழக்க சேந்து
கொடி பல அணிந்த மார்பின் கோவிந்தன் வாழ்க என்று
நடத்துவான் அவனை நோக்கி நகா சிலை பாரித்தானே
#2286
போர்த்த நெய்த்தோரன் ஆகி புலால் பருந்து ஆர்ப்ப செல்வான்
சீர் தகையவனை கண்டு என் சினவு வேல் இன்னும் ஆர்ந்தின்று
ஊர்த்து உயிர் உன்னை உண்ண குறை வயிறு ஆரும் என்று ஆங்கு
ஆர்த்த வாய் நிறைய எய்தான் அம்பு பெய் தூணி ஒத்தான்
#2287
மொய்ப்படு சரங்கள் மூழ்க முனை எயிற்று ஆளி போல
அப்பு அணை கிடந்த மைந்தன் அரு மணி திருவில் வீசும்
செப்பு இள முலையினார் கண் சென்று உலாய் பிறழ சிந்தி
கைப்பட எடுத்திட்டு ஆடும் பொலம் கழற்காயும் ஒத்தான்
#2288
புனை கதிர் பொன் செய் நாணின் குஞ்சியை கட்டி நெய்த்தோர்
நனை கதிர் எஃகம் ஏந்தி நந்தன் வாழ்க என்ன நின்ற
வினை ஒளிர் காளை வேலை கடக்கலார் வேந்தர் நின்றார்
கனை கடல் வேலை எல்லை கடக்கலா-வண்ணம் நின்றார்
#2289
நின்ற அ படை உளானே ஒரு மகன் நீல குஞ்சி
மன்றல மாலை நெற்றி மழ களிறு அன்றி வீழான்
வென்று இயங்கு ஒளிறும் வெள் வேல் மின் என வெகுண்டு விட்டான்
சென்ற வேல் விருந்து செம் கண் மறவன் நக்கு எதிர்கொண்டானே
#2290
மான் வயிறு ஆர்ந்து நோக்கும் வெருவுறு மருளின் நோக்கின்
தேன் வயிறு ஆர்ந்த கோதை தீம் சொலார் கண்கள் போலும்
ஊன் வயிறு ஆர்ந்த வெள் வேல் ஒய் என பறித்து நக்கான்
கான் வயிறு ஆர்ந்து தேக்கி களி வண்டு கனைக்கும் தாரான்
#2291
விட்டு அழல் சிந்தி வெள் வேல் விசும்பின் வீழ் மின்னின் நொய்தா
கட்டு அழல் நெடும் கண் யாதும் இமைத்திலன் மகளிர் ஓச்சும்
மட்டு அவிழ் மாலை போல மகிழ்ந்து பூண் மார்பத்து ஏற்று
கட்டு அழல் எஃகம் செல்ல கால் நெறி ஆயினானே
#2292
கவி மதம் கடந்து காமர் வனப்பு வீற்று இருந்த கண்ணார்
குவி முலை நெற்றி தீம் தேன் கொப்புளித்து இட்ட பைம் தார்
செவி மத கடல் அம் கேள்வி சீவகன் கழல்கள் வாழ்த்தி
சவி மது தாம மார்பின் சல நிதி தாக்கினானே
#2293
குஞ்சரம் குனிய நூறி தடாயின குருதி வாள் தன்
நெஞ்சகம் நுழைந்த வேலை பறித்து வான் புண்ணுள் நீட்டி
வெம் சமம் நோக்கி நின்று மிறைக்கொளி திருத்துவான் கண்டு
அஞ்சி மற்ற அரசர் யானை குழாத்தொடும் இரிந்திட்டாரே
#2294
தோட்டு வண்டு ஒலியல் மாலை துடி இடை மகளிர் ஆய்ந்த
மோட்டு வெண் முத்தம் மின்னும் முகிழ் முலை உழுது சாந்தம்
கோட்டு மண் கொண்ட மார்பம் கோதை வாள் குளித்து மூழ்கி
கோட்டு மண் கொள்ள நின்றான் குருசில் மண் கொள்ள நின்றான்
#2295
எரி மணி குப்பை போல இருள் அற விளங்கும் மேனி
திரு மணி செம்பொன் மார்பின் சீவகன் சிலை கை ஏந்தி
அரு மணி அரசர் ஆவி அழல் அம்பின் கொள்ளை சாற்றி
விரி மணி விளங்கு மான் தேர் விண் தொழ ஏறினானே
#2296
கரு வளி முழக்கும் காரும் கனை கடல் ஒலியும் கூடி
அரு வலி சிங்க ஆர்ப்பும் ஆங்கு உடன் கூடிற்று என்ன
செரு விளை கழனி மள்ளர் ஆர்ப்பொடு சிவணி செம்பொன்
புரி வளை முரசம் ஆர்ப்ப போர் தொழில் தொடங்கினானே
#2297
அரசர் தம் முடியும் பூணும் ஆரமும் வரன்றி ஆர்க்கும்
முரசமும் குடையும் தாரும் பிச்சமும் சுமந்து மாவும்
விரை பரி தேரும் ஈர்த்து வேழம் கொண்டு ஒழுகி வெள்ள
குரை புனல் குருதி செல்ல குமரன் வில் குனிந்தது அன்றே
#2298
கேழ் கிளர் எரி கண் பேழ் வாய் கிளர் பெரும் பாம்பினோடும்
சூழ் கதிர் குழவி திங்கள் துறுவரை வீழ்வதே போல்
தாழ் இரும் தட கையோடும் தட மருப்பு இரண்டும் அற்று
வீழ் தர பரந்த அப்பு நிழலில் போர் மயங்கினாரே
#2299
ஆடவர் ஆண்மை தோற்றும் அணி கிளர் பவழ திண் கை
நீடு எரி நிலை கண்ணாடி போர்க்களத்து உடைந்த மைந்தர்
காடு எரி கவர கல் என் கவரிமா விரிந்த வண்ணம்
ஓட கண்டு உருவ பைம் தார் அரிச்சந்தன் உரைக்கின்றானே
#2300
மஞ்சு இவர் மின் அனார் தம் வால் அரி சிலம்பு சூழ்ந்து
பஞ்சி கொண்டு எழுதப்பட்ட சீறடி பாய்தல் உண்ட
குஞ்சி அம் குமரர் தங்கள் மறம் பிறர் கவர்ந்து கொள்ள
அஞ்சி இட்டு ஓடி போகின் ஆண்மை யார் கண்ணது அம்மா
 
 
#2301
உழை இனம் உச்சி கோடு கலங்குதல் உற்ற-போதே
விழைவு அற விதிர்த்து வீசி விட்டு எறிந்திடுவது ஒப்ப
கழலவர் உள்ளம் அஞ்சி கலங்குமேல் அதனை வல்லே
மழை மினின் நீக்கி இட்டு வன்கண்ணர் ஆபர் அன்றே
#2302
தன் புறம்தந்து வைத்த தலைமகற்கு உதவி ஈந்தால்
கற்பக மாலை சூட்டி கடி அர மகளிர் தோய்வர்
பொற்ற சொல் மாலை சூட்டி புலவர்கள் புகழ கல் மேல்
நிற்பர் தம் வீரம் தோன்ற நெடும் புகழ் பரப்பி என்றான்
#2303
பச்சிரும்பு எஃகு இட்டு ஆங்கு படையை கூர்ப்பு இடுதலோடும்
கச்சையும் கழலும் வீக்கி காஞ்சன தளிவம் வாய்க்கு இட்டு
அச்சு உற முழங்கி ஆரா அண்ணல் அம் குமரன் கையுள்
நச்சு எயிற்று அம்பு தின்ன நாள் இரை ஆகல் உற்றார்
#2304
வட திசை எழுந்த மேகம் வலன் உராய் மின்னு சூடி
குட திசை சேர்ந்து மாரி குளிறுபு சொரிவதே போல்
படர் கதிர் பைம்பொன் திண் தேர் பாங்குற இமைப்பின் ஊர்ந்தான்
அடர் சிலை அப்பு மாரி தாரை நின்றிட்டது அன்றே
#2305
அற்று வீழ் தலைகள் யானை உடலின் மேல் அழுந்தி நின்ற
பொற்ற திண் சரத்தில் கோத்த பொரு சரம் தாள்கள் ஆக
தெற்றி மேல் பூத்த செந்தாமரை மலர் போன்ற செம் கண்
மற்று அ தாது உரிஞ்சி உண்ணும் வண்டு இனம் ஒத்த அன்றே
#2306
திங்களோடு உடன் குன்று எலாம் துளங்கி மா நிலம் சேர்வ போல்
சங்கம் மத்தகத்து அலமர தரணி மேல் களிறு அழியவும்
பொங்கு மா நிரை புரளவும் பொலம் கொள் தேர் பல முறியவும்
சிங்கம் போல் தொழித்து ஆர்த்து அவன் சிறுவர் தேர் மிசை தோன்றினார்
#2307
சந்தனம் சொரி தண் கதிர் திங்கள் அம் தொகை தாம் பல
குங்கும கதிர் குழவி அம் செல்வனோடு உடன் பொருவ போல்
மங்குல் மின் என வள்ளல் தேர் மைந்தர் தேரொடு மயங்கலின்
வெம் கண் வில் உமிழ் வெம் சரம் மிடைந்து வெம் கதிர் மறைந்ததே
#2308
குருதி வாள் ஒளி அரவினால் கொள்ளப்பட்ட வெண் திங்கள் போல்
திருவ நீர் திகழ் வலம்புரி வாய் வைத்து ஆங்கு அவன் தெழித்தலும்
பொருவில் கீழ் வளி முழக்கினால் பூமி மேல் சனம் நடுங்கிற்றே
அரவ வெம் சிலை வளைந்ததே அண்ணல் கண் அழல் உமிழ்ந்ததே
#2309
கங்கை மா கடல் பாய்வதே போன்று காளை தன் கார் முகம்
மைந்தர் ஆர்த்து அவர் வாய் எலாம் நிறைய வெம் சரம் கான்ற பின்
நெஞ்சம் போழ்ந்து அழல் அம்பு உண நீங்கினார் உயிர் நீள் முழை
சிங்க ஏறுகள் கிடந்த போல் சிறுவர் தேர் மிசை துஞ்சினார்
#2310
நிவந்த வெண்குடை வீழவும் வேந்தர் நீள் விசும்பு ஏறவும்
உவந்து பேய் கணம் ஆடவும் ஓரி கொள்ளை கொண்டு உண்ணவும்
கவந்தம் எங்கணும் ஆடவும் களிறு மாவொடு கவிழவும்
சிவந்த சீவகசாமி கண் புருவமும் முரி முரிந்தவே
#2311
பொய்கை போர்க்களம் புற இதழ் புலவு வாள் படை புல் இதழ்
ஐய-கொல் களிறு அக இதழ் அரசர் அல்லி தன் மக்களா
மையில் கொட்டை அம் மன்னனா மலர்ந்த தாமரை வரிசையால்
பைய உண்ட பின் கொட்டை மேல் பவித்திர தும்பி பறந்ததே
#2312
கலை முத்தம் கொள்ளும் அல்குல் கார் மழை மின் அனார்-தம்
முலை முத்தம் கொள்ள சாந்தம் அழிந்து தார் முருகு விம்மும்
மலை முத்தம் கொள்ளும் மார்பின் மன்னனும் கண்டு காய்ந்தான்
சிலை முத்தம் கொள்ளும் திண் தோள் செம்மலும் தீயின் சேந்தான்
#2313
தன் மதம் திவண்ட வண்டு தங்கிய காட்டுள் வேழம்
பின் மதம் செறித்திட்டு அஞ்சி பிடி மறந்து இரிந்து போகும்
வெல் மத களிற்று வெய்ய அசனி வேகத்தின் மேலான்
மின் உமிழ் மாலை வேந்தன் வீரற்கு விளம்பினானே
#2314
நல்வினை உடைய நீரார் நஞ்சு உணின் அமுதம் ஆகும்
இல்லையேல் அமுதும் நஞ்சாம் இன்னதால் வினையின் ஆக்கம்
கொல்வல் யான் இவனை என்றும் இவன் கொல்லும் என்னை என்றும்
அல்லன நினைத்தல் செல்லார் அறிவினால் பெரிய நீரார்
#2315
அகப்படு பொறியினாரை ஆக்குவார் யாவர் அம்மா
மிகப்படு பொறியினாரை வெறியரா செய்யலாமோ
நகை கதிர் மதியம் வெய்தா நடுங்க சுட்டிடுதல் உண்டே
பகை கதிர் பருதி சந்தும் ஆலியும் பயத்தல் உண்டே
#2316
புரி முத்த மாலை பொன் கோல் விளக்கினுள் பெய்த நெய்யும்
திரியும் சென்று அற்ற-போழ்தே திரு சுடர் தேம்பின் அல்லால்
எரி மொய்த்து பெருகல் உண்டோ இருவினை சென்று தேய்ந்தால்
பரிவு உற்று கெடாமல் செல்வம் பற்றி யார் அதனை வைப்பார்
#2317
நல் ஒளி பவள செ வாய் நல் மணி எயிறு கோலி
வில் இட நக்கு வீரன் அஞ்சினாய் என்ன வேந்தன்
வெல்வது விதியின் ஆகும் வேல் வரின் இமைப்பேன் ஆயின்
சொல்லி நீ நகவும் பெற்றாய் தோன்றல் மற்று என்னை என்றான்
#2318
பஞ்சி மெல் அடியினார்-தம் பாடகம் திருத்தி சேந்து
நெஞ்சு நொந்து அமுத கண்ணீர் துடைத்தலின் நிறைந்த கோல
அஞ்சன கலுழி அம் சேறு ஆடிய கடக வண் கை
வெம் சிலை கொண்டு வெய்ய உரும் என முழங்கி சொன்னான்
#2319
இல்லாளை அஞ்சி விருந்தின் முகம் கொன்ற நெஞ்சின்
புல்லாளன் ஆக மறம் தோற்பின் என புகைந்து
வில் வாள் அழுவம் பிளந்திட்டு வெகுண்டு நோக்கி
கொல் யானை உந்தி குடை மேலும் ஓர் கோல் தொடுத்தான்
#2320
தொடுத்த ஆங்கு அ அம்பு தொடை வாங்கி விடாத முன்னம்
அடுத்து ஆங்கு அ அம்பும் சிலையும் அதன் நாணும் அற்று
கடுத்து ஆங்கு வீழ கதிர் வான் பிறை அம்பின் எய்தான்
வடி தாரை வெல் வேல் வயிரம் மணி பூணினானே
#2321
அம்பும் சிலையும் அறுத்தான் என்று அழன்று பொன் வாள்
வெம்ப பிடித்து வெகுண்டு ஆங்கு அவன் தேரின் மேலே
பைம்பொன் முடியான் பட பாய்ந்திடுகு என்று பாய்வான்
செம்பொன் உலகின் இழிகின்ற ஓர் தேவன் ஒத்தான்
#2322
மொய் வார் குழலார் முலை போர்க்களம் ஆய மார்பில்
செய்யோன் செழும் பொன் சரம் சென்றன சென்றது ஆவி
வெய்தா விழியா வெருவ துவர் வாய் மடியா
மை ஆர் விசும்பின் மதி வீழ்வது போல வீழ்ந்தான்

#2323
கட்டியங்காரன் என்னும் கலி அரசு அழிந்தது ஆங்கு
பட்ட இ பகைமை நீங்கி படை தொழில் ஒழிக என்னா
கொட்டினர் முரசம் மள்ளர் ஆர்த்தனர் குருதி கண்ணீர்
விட்டு அழுது அவன்-கண் ஆர்வம் மண்மகள் நீக்கினாளே

#2324
ஒல்லை நீர் உலகம் அஞ்ச ஒளி உமிழ் பருதி-தன்னை
கல் என கடலின் நெற்றி கவுள் படுத்திட்டு நாகம்
பல் பகல் கழிந்த பின்றை பல் மணி நாகம் தன்னை
வல்லை வாய் போழ்ந்து போந்து ஓர் மழ கதிர் நின்றது ஒத்தான்

#2325
கோட்டு மீன் குழாத்தின் மள்ளர் ஈண்டினர் மன்னர் சூழ்ந்தார்
மோட்டு மீன் குழாத்தின் எங்கும் தீவிகை மொய்த்த முத்தம்
ஆட்டு நீர் கடலின் ஆர்த்தது அணி நகர் வென்றி மாலை
கேட்டு நீர் நிறைந்து கேடு இல் விசையை கண் குளிர்ந்த அன்றே

#2326
அணி முடி அரசர் மாலை அழல் நுதி வாள்கள் என்னும்
மணி புனை குடத்தின் நெய்த்தோர் மண்ணு நீர் மருள ஆட்டி
பணை முலை பைம்பொன் மாலை பாசிழை பூமி தேவி
இணை முலை ஏகம் ஆக நுகரிய எய்தினானே


No comments:

Post a Comment