seevagachinthamani - 10



9 சுரமஞ்சரியார் இலம்பகம்

 
#1995
வாள் இரண்டு மாறுவைத்த போல் மழை கண் மாதரார்
நாள் இரண்டு சென்ற என்று நைய மொய்கொள் காவினுள்
தோள் இரண்டும் அன்ன தோழர் தோன்றலை புணர்ந்த பின்
தாள் இரண்டும் ஏத்தி நின்று தையல் நாமம் வேண்டினார்
#1996
பாடு வண்டு இருந்த அன்ன பல் கலை அகல் அல்குல்
வீடு பெற்றவரும் வீழும் வெம் முலை விமலை என்று
ஆடுவான் அணிந்த சீர் அரம்பை அன்ன வாள்_நுதல்
ஊடினும் புணர்ந்தது ஒத்து இனியவள் உளாள்-அரோ
#1997
அம்பு ஒர் ஐந்து உடைய காமன் ஐயன் என்ன அந்தணன்
நம்பு நீரர் அல்லர் நன் குரங்கு நீரர்-ஆயினும்
தம் குரவர் தாம் கொடுப்பின் நெஞ்சு நேர்ந்து தாழ்வர் தாம்
பொங்கு அரவ அல்குலார் என புகன்று சொல்லினான்
#1998
அற்றும் அன்று கன்னி அம் மடந்தைமார் அணி நலம்
முற்றினாரை நீடு வைப்பின் மூள்கும் வந்து பாவமும்
குற்றம் மற்றும் ஆகும் என்று கோதை சூழ்ந்து கூறினார்க்கு
உற்று அடுத்து அயா உயிர்த்து ஒழிதல் யார்க்கும் ஒக்குமே
#1999
மது குடம் விரிந்த மாலையாரொடும்
புது கடி பொருந்துதி புக்க ஊர் எலாம்
விதி கிடை காணலாம் வீதி மா நகர்
மதி கிடை முகத்தியோர் மடந்தை ஈண்டையாள்
#2000
ஆடவர் தனது இடத்து அருகு போகினும்
நாடி மற்று அவர் பெயர் நயந்து கேட்பினும்
வீடுவல் உயிர் என வெகுளும் மற்று அவள்
சேடியர் வழிபட செல்லும் செல்வியே
 
 
#2001
காமனே செல்லினும் கனன்று காண்கிலாள்
வேம் எனக்கு உடம்பு எனும் வேய் கொள் தோளியை
ஏமுறுத்து அவள் நலம் நுகரின் எந்தையை
யாம் எலாம் அநங்கமாதிலகன் என்றுமே
#2002
தாசியர் முலைகள் தாக்க தளை அவிழ்து உடைந்த தண் தார்
வாசம் கொண்டு இலங்கும் முந்நூல் வலம்பட கிடந்த மார்ப
பேசிய பெயரினாளை பேதுறாது ஒழிவேன்-ஆகில்
ஆசும் அன்பு இலாத புன் பெண் கூந்தல் யான் அணைவல் என்றான்
#2003
வண்டு தேன் சிலை கொள் நாணா மா தளிர் மலர்கள் அம்பா
கொண்டவன் கோட்டம் தன்னுள் கொடியினை கொணர்ந்து நீலம்
உண்டது காற்றி ஆண் பேர் ஊட்டுவல் உருவ காமன்
கண்ட பொன் படிவம் சார்ந்து கரந்து இரு நாளை என்றான்
#2004
இழை-கண் வெம் முலை இட்டு இடை ஏந்து அல்குல்
மழை கண் மாதரை மாலுறு நோய்செய்வான்
முழை-கண் வாள் அரி ஏறு அன மொய்ம்பினான்
உழை கணாளர்க்கு உரைத்து எழுந்தான்-அரோ
#2005
சோரும் காரிகையாள் சுரமஞ்சரி
ஆரம் சூடிய அம் முலை பூம் தடம்
தாரும் மார்பமும் தண்ணென தோய்வதற்கு
ஓரும் உள்ளம் உடன்று எழுகின்றதே
#2006
கடைந்த பொன் செப்பு என கதிர்த்து வீங்கின
வடம் சுமந்து எழுந்தன மா கண் வெம் முலை
மடந்தை-தன் முகத்த என் மனத்தின் உள்ளன
குடங்கையின் நெடியன குவளை உண்கணே
#2007
ஏத்தரும் மல்லிகை மாலை ஏந்திய
பூ தலை கரும் குழல் புரியினால் புறம்
யாத்து வைத்து அலைக்கும் இ அருள் இலாள் நலம்
காய்த்தி என் மனத்தினை கலக்குகின்றதே
#2008
சில் அரி கிண்கிணி சிலம்பும் சீறடி
செல்வி-தன் திரு நலம் சேரும் வாயில் தான்
அல்லல் அம் கிழவன் ஓர் அந்தணாளனாய்
செல்லல் யான் தெளிதகவு உடைத்து என்று எண்ணினான்
#2009
அணங்கு அரவு உரித்த தோல் அனைய மேனியன்
வணங்கு நோன் சிலை என வளைந்த யாக்கையன்
பிணங்கும் நூல் மார்பினன் பெரிது ஓர் பொத்தகம்
உணர்ந்து மூப்பு எழுதினது ஒப்ப தோன்றினான்
#2010
வெண் நரை உடம்பினன் விதிர்த்த புள்ளியன்
நுண் நவிர் அறுவையன் நொசிந்த நோக்கினன்
கண் நவிர் குடையினன் கைத்தண்டு ஊன்றினன்
பெண் நலம் காதலின் பேயும் ஆயினான்
#2011
யாப்பு உடை யாழ் மிடறு என்னும் தோட்டியால்
தூப்பு உடையவள் நலம் தொடக்கும் பாகனாய்
மூப்பு எனும் முகபடாம் புதைந்து முற்று_இழை
காப்பு உடை வள நகர் காளை எய்தினான்
#2012
தண்டு வலியாக நனி தாழ்ந்து தளர்ந்து ஏங்கி
கண்டு கடை காவலர்கள் கழற முகம் நோக்கி
பண்டை இளம்-கால் உவப்பன் பாலடிசில் இ நாள்
கண்டு நயந்தார் தருவ காதலிப்பன் என்றான்
#2013
கையின் தொழுதார் கழிய மூப்பின் செவி கேளார்
மையலவர் போல மனம் பிறந்த வகை சொன்னார்
பைய நடக்க என்று பசிக்கு இரங்கி அவர் விடுத்தார்
தொய்யில் முலையவர்கள் கடை தோன்றல் நனி புக்கான்
#2014
கோதையொடு தாழ்ந்து குழல் பொங்கி ஞிமிறு ஆர்ப்ப
ஓத மணி மாலையொடு பூண் பிறழ ஓடி
ஏதம் இது போ-மின் என என்னும் உரை ஈயான்
ஊத உகு தன்மையினொடு ஒல்கியுற நின்றான்
#2015
கச்சு விசித்து யாத்த கதிர் முலையர் மணி அயில் வாள்
நச்சு நுனை அம்பு சிலை நடுங்க உடன் ஏந்தி
அச்சமுறுத்து அமுது புளித்த ஆங்கு தம தீம் சொல்
வெச்சென்றிட சொல்லி விரி கோதையவர் சூழ்ந்தார்
#2016
பாவம் இது நோவ உரையன்-மின் முது பார்ப்பார்
சாவர் தொடினே கடிது கண்ட வகை வண்ணம்
ஓவியர்-தம் பாவையினொடு ஒப்பு அரிய நங்கை
ஏவல் வகை கண்டு அறிதும் என்று சிலர் சொன்னார்
#2017
கைய வளை மைய குழல் ஐ அரிய வாள் கண்
நையும் இடை வெய்ய முலை நங்கை ஒரு பார்ப்பான்
உய்வது இலன் ஊழின் முது மூப்பினொடும் வந்தான்
செய்வது உரை நொய்தின் என சேறும் எழுக என்றாள்
#2018
மாலை பல தாழ்ந்து மது பிலிற்றி மணம் கமழும்
கோல அகில் தேய்வை கொழும் சாந்தம் முலை மெழுகி
பாலை மணி யாழ் மழலை பசும்பொன் நிலத்து இழிவாள்
சோலை வரை மேல் இழியும் தோகை மயில் ஒத்தாள்
#2019
சீறடிய கிண்கிணி சிலம்பொடு சிலம்ப
வேறுபடு மேகலைகள் மெல்லென மிழற்ற
சேறுபடு கோதை மிசை வண்டு திசை பாட
நாறு மலர் கொம்பர் நடை கற்பது என வந்தாள்
#2020
வந்த வரவு என்னை என வாள் கண் மடவாய் கேள்
சிந்தை நலிகின்ற திரு நீர் குமரி ஆட
வந்தில் அதின் ஆய பயன் என்னை மொழிக என்றாள்
முந்தி நலிகின்ற முது மூப்பு ஒழியும் என்றான்
#2021
நறவு இரிய நாறு குழலாள் பெரிது நக்கு
பிறரும் உளரோ பெறுநர் பேணி மொழிக என்ன
துறை அறிந்து சேர்ந்து தொழுது ஆடுநர் இல் என்றாற்கு
அறிதிர் பிற நீவிர் என ஐயம் இலை என்றான்
#2022
செத்த மரம் மொய்த்த மழையால் பெயரும் என்பார்
பித்தர் இவர் உற்ற பிணி தீர்த்தும் என எண்ணி
அத்தம் என மிக்க சுடர் அம் கதிர் சுருக்கும்
மொய்த்த மணி மாட மிசை அத்தக அடைந்தாள்
#2023
வடிவம் இது மூப்பு அளிது வார் பவள வல்லி
கடிகை துவர் வாய் கமலம் கண்ணொடு அடி வண்ணம்
கொடிது பசிகூர்ந்து உளது கோல் வளையினீரே
அடிசில் கடிது ஆக்கி இவணே கொணர்-மின் என்றாள்
#2024
நானம் உரைத்து ஆங்கு நறு நீர் அவனை ஆட்டி
மேனி கிளர் வெண் துகிலும் விழு பொன் இயல் நூலும்
பால் நலம் கொள் தீம் கிளவி பவித்திரமும் நல்க
தான் அமர்ந்து தாங்கி அமை தவிசின் மிசை இருந்தான்
#2025
திங்கள் நலம் சூழ்ந்த திரு மீன்கள் என செம்பொன்
பொங்கு கதிர் மின்னு புகழ் கலங்கள் பல பரப்பி
இங்கு சுவை இன் அமுதம் ஏந்த மிகு சான்றோன்
எங்கும் இலை இன்ன சுவை என்று உடன் அயின்றான்
#2026
தமிழ் தழிய சாயலவர் தங்கு மலர் தூ நீர்
உமிழ் கரகம் ஏந்த உரவோன் அமர்ந்து பூசி
அமிழ்து அனைய பஞ்ச முக வாசம் அமைத்து ஆய்ந்த
கமழ் திரையும் காட்ட அவை கண்டு கவுள் அடுத்தான்
#2027
வல்லது எனை என்ன மறை வல்லன் மடவாய் யான்
எல்லை எவன் என்ன பொருள் எய்தி முடி-காறும்
சொல்லு-மினும் நீவிர் கற்ற காலம் என தேன் சோர்
சில்லென் கிளி கிளவி அது சிந்தையிலன் என்றான்
#2028
இன்னவர்கள் இல்லை நிலத்து என்று வியந்து ஏத்தி
அன்னம் அன மெல் நடையினாள் அமர்ந்து நோக்க
பின்னை இவள் போகுதிறம் பேசும் என எண்ணி
தன்னம் சிறிதே துயின்று தாழ அவள் நக்காள்
#2029
கோல மணி வாய் குவளை வாள் கண் மடவாளை
சால முது மூப்பு உடைய சாமி முகம் நோக்கி
காலும் மிக நோம் சிறிது கண்ணும் துயில்குற்றேன்
ஏலம் கமழ் கோதை இதற்கு என் செய்கு உரை என்றான்
#2030
மட்டு விரி கோதை மது வார் குழலினாள் தன்
பட்டு நிணர் கட்டில் பரிவு இன்றி உரைக என்றாள்
இட்ட அணை மேல் இனிது மெல்லென அசைந்தான்
கட்டு அழல் செய் காம கடலை கடையலுற்றான்
#2031
காலையொடு தாழ்ந்து கதிர் பட்டது கலங்கி
மாலையொடு வந்து மதி தோன்ற மகிழ் தோன்றி
வேல் அனைய கண்ணியர் தம் வீழ் துணைவர் திண் தோள்
கோல முலையால் எழுதக்கூடியதை அன்றே
#2032
ஏந்து மலர் சேக்கை அகில் வளர்த்த இடு புகையும்
ஆய்ந்த மலர் கோதை அமிர்து உயிர்க்கும் நறும் புகையும்
கூந்தல் அகில் புகையும் துகில் கொழும் மென் நறும் புகையும்
வாய்ந்த வரை மழையின் உயர் மாடத்து எழுந்தனவே
#2033
ஆசு இல் அடு பால் அமிர்தம் சிறிய அயின்று அம் பூம்
காசு இல் கடி மாலை கலம் நொய்ய மதி கவற்கும்
தூசு நறும் சாந்து இனிய தோடு இவைகள் தாங்கி
மாசு இல் மடவார்கள் மணி வீணை நரம்பு உளர்ந்தார்
#2034
பூம் சதங்கை மாலை புகழ் குஞ்சி பொரு இல்லார்
வீங்கு திரள் தோளும் தட மார்பும் விரை மெழுகி
தீம் கரும்பு மென்று அனைய இன் பவள செ வாய்
தேன் கொள் அமிர்து ஆர்ந்து செழும் தார் குழைய சேர்ந்தார்
#2035
பொன் அறையுள் இன் அமளி பூ அணையின் மேலான்
முன்னிய தன் மன்றலது முந்துற முடிப்பான்
மன்னும் ஒரு கீத மதுரம்பட முரன்றாற்கு
இன் அமிர்தமாக இளையாரும் அது கேட்டார்
#2036
மன்மதன் மணி குரல் மருட்டும் என்று மால் கொள்வார்
இன்னது இன்று இயக்கரின் இயக்க வந்தது என்று தம்
பின்னும் முன்னும் நோக்குவார் பேது சால எய்துவார்
கன்னி தன் மனத்து இழைத்த காளை நாமம் வாழ்த்துவார்
#2037
கொம்பின் ஒத்து ஒதுங்கியும் குழங்கல் மாலை தாங்கியும்
அம்பின் ஒத்த கண்ணினார் அடி கலம் அரற்றவும்
நம்பி தந்த கீதமே நயந்து காண ஓடினார்
வெம்பு வேட்கை வேனிலானின் வேறு அலானும் ஆயினான்
#2038
தாம மாலை வார் குழல் தடம் கணார்க்கு இடம் கழி
காமன் அன்ன காளை தன் கருத்தொடு ஒத்தது ஆகலான்
மா மலர் தெரியலான் மணி மிதற்று-இடை கிடந்த
சாம கீதம் மற்றும் ஒன்று சாமி நன்கு பாடினான்
#2039
கள்ள மூப்பின் அந்தணன் கனிந்த கீத வீதியே
வள்ளி வென்ற நுண் இடை மழை மலர் தடம் கணார்
புள்ளுவம் மதிமகன் புணர்த்த ஓசை மேல் புகன்று
உள்ளம் வைத்த மா மயில் குழாத்தின் ஓடி எய்தினார்
#2040
இனி சிறிது எழுந்து வீங்கி இட்டு இடை கோறும் நாங்கள்
என கொறுகொறுப்ப போலும் இள முலை பரவை அல்குல்
கனி பொறை மலிந்த கமர் கற்பக மணி கொம்பு ஒப்பாள்
பனி பிறை பூணினான் தன் பாண் வலை சென்று பட்டாள்
#2041
அடி கலம் அரற்ற அல்குல் கலை கலந்து ஒலிப்ப வந்து
முடிப்பது என் பெரிதும் மூத்தேன் முற்று இழை அரிவை என்ன
வடி கணாள் நக்கு நாணி தோழியை மறைந்து மின்னு
கொடி குழாத்து-இடை ஓர் கோல குளிர் மணி கொம்பின் நின்றாள்
#2042
இளையவன் காணின்-மன்னோ என் செய்வீர் நீவிர் என்ன
விளை மது கண்ணி மைந்தர் விளிக என தோழி கூற
முளை எயிற்று இவளை யாரும் மொழிந்தனர் இல்லை என்றோ
உளைவது பிறிதும் உண்டோ ஒண் தொடி மாதர்க்கு என்றான்
#2043
வாய்ந்த இ மாதர் சுண்ணம் சீவகன் பழித்த பின்றை
காய்ந்தனள் என்று கூற காளை மற்று இவட்கு தீயான்
மாய்ந்தனன் போலும் என்ன மாதரார் ஒருங்கு வாழ்த்தி
ஆய்ந்தனம் ஐயன் உய்ந்தான் அறிந்தனம் அதனை என்றார்
#2044
காலுற்ற காமவல்லி கொடி என கலங்கி நங்கை
மாலுற்று மயங்க யாங்கண் மட கிளி தூதுவிட்டேம்
சேலுற்ற நெடும் கண் செ வாய் தத்தை-தன் செல்வம் கண்டே
பாலுற்ற பவள செ வாய் தத்தையால் பரிவு தீர்ந்தேம்
#2045
அன்பு ஒட்டி எமக்கு ஓர் கீதம் பாடு-மின் அடித்தியாரும்
முன் பட்டது ஒழிந்து நுங்கள் முகவியர் முனிவு தீர்ந்தார்
பொன் தொட்டேம் யாமும் நும்மை போகொட்டோம் பாடல் கேளாது
என் பட்டுவிடினும் என்றார் இலங்கு பூம் கொம்பொடு ஒப்பார்
#2046
பாடுதும் பாவை பொற்பே பற்றி மற்று எமக்கு நல்கின்
ஆடு அமை தோளினீர் அஃது ஒட்டுமேல் கேள்-மின் என்ன
நாடி யார் பேயை காண்பார் நங்கைகாள் இதுவும் ஆமே
ஆடுவது ஒன்றும் அன்று இ ஆண்மகன் உரைப்பது என்றார்
#2047
பட்டு உலாய் கிடந்த செம்பொன் பவளமோடு இமைக்கும் அல்குல்
ஒட்டினாள் அதனை ஓராது உலம் பொரு தோளினானும்
பட்ட வாள் நுதலினாய்க்கு பாடுவல் காமன் தந்த
தொட்டிமை உடைய வீணை செவி சுவை அமிர்தம் என்றான்
#2048
வயிர வில் உமிழும் பைம் பூண் வன முலை மகளிர்-தம்முள்
உயிர் பெற எழுதப்பட்ட ஓவிய பாவை ஒப்பாள்
செயிர் இல் வாள் முகத்தை நோக்கி தேன் பொதிந்து அமுதம் ஊற
பயிர் இலா நரம்பின் கீதம் பாடிய தொடங்கினானே
#2049
தொடி தோள் வளை நெகிழ தொய்யில் முலை மேல்
வடி கேழ் மலர் நெடும் கண் வார் புயலும் காலும்
வார் புயலும் காலும் வளை நெகிழு நம் திறத்தது
ஆர்வமுறும் நெஞ்சம் அழுங்குவிக்கும் மாலை
#2050
ஐது ஏந்து அகல் அல்குல் ஆவித்து அழல் உயிரா
கை சோர்ந்து அணல் ஊன்றி கண்ணீர் கவுள் அலைப்ப
கண்ணீர் கவுள் அலைப்ப கையற்று யாம் இனைய
புண் ஈரும் வேலின் புகுந்ததால் மாலை
 
 
#2051
அவிழ்து ஏந்து பூங்கோதை ஆகத்து அலர்ந்த
முகிழ்ந்து ஏந்து இள முலை மேல் பொன் பசலை பூப்ப
பொன் பசலை பூப்ப பொரு கயல் கண் முத்து அரும்ப
அன்பு உருகும் நெஞ்சம் அழுங்குவிக்கும் மாலை
#2052
பாடினான் தேவ கீதம் பண்ணினுக்கு அரசன் பாட
சூடக மகளிர் சோர்ந்து செருக்கிய மஞ்ஞை ஒத்தார்
ஆடக செம்பொன் பாவை அந்தணன் புகழ்ந்து செம்பொன்
மாடம் புக்கு அநங்கன் பேணி வரம் கொள்வல் நாளை என்றாள்
#2053
மடல் அணி பெண்ணை ஈன்ற மணி மருள் குரும்பை மான
உடல் அணி ஆவி நைய உருத்து எழும் முலையினாளும்
அடல் அணி தோழிமாரும் ஆர்வத்தில் கழும இப்பால்
கடல் அணி திலகம் போல கதிர் திரை முளைத்தது அன்றே
#2054
பொன் இயல் மணியும் தாரும் கண்ணியும் புனைந்து செம்பொன்
மின் இயல் பட்டம் சேர்த்தி ஆன் நெய் பால் வெறுப்ப ஊட்டி
மன் இயல் பாண்டில் பண்ணி மடந்தை கோல் கொள்ள வையம்
இன் இயல் பாவை ஏற்ப தோழியோடு ஏறினாளே
#2055
ஆடவர் இரிய ஏகி அம் சொல்லார் சூழ காமன்
மாடத்துள் இழிந்து மற்று அ வள்ளலை மறைய வைத்து
சூடு அமை மாலை சாந்தம் விளக்கொடு தூபம் ஏந்தி
சேடியர் தொழுது நிற்ப திருமகள் பரவும் அன்றே
#2056
பொன் நிலம் சென்னி புல்ல இட முழந்தாளை ஊன்றி
மின் அவிர் மாலை மென் பூம் குழல் வல தோளில் வீழ
கன்னி அம் கமுகின் கண் போல் கலன் அணி எருத்தம் கோட்டி
தன் இரு கையும் கூப்பி தையல் ஈது உரைக்கும் அன்றே
#2057
தாமரை செம் கண் செ வாய் தமனிய குழையினாய் ஓர்
காமம் இங்கு உடையேன் காளை சீவகன் அகலம் சேர்த்தின்
மா மணி மகரம் அம்பு வண் சிலை கரும்பு மான் தேர்
பூ மலி மார்ப ஈவல் ஊரொடும் பொலிய என்றாள்
#2058
மட்டு அவிழ் கோதை பெற்றாய் மனம் மகிழ் காதலானை
இட்டு இடை நோவ நில்லாது எழுக என ஏந்தல் தோழன்
பட்டிமை உரைத்தது ஓராள் பரவிய தெய்வந்தான் வாய்விட்டு
உரைத்திட்டது என்றே வேல் கணாள் பரவி மீண்டாள்
#2059
அடி இறைகொண்ட செம்பொன் ஆடக சிலம்பினாள் அ
கடி அறை மருங்கில் நின்ற மைந்தனை கண்டு நாணி
வடியுறு கடைக்கண் நோக்க நெஞ்சு துட்கென்ன வார் பூம்
கொடி உற ஒசிந்து நின்றாள் குழை முக திருவோடு ஒப்பாள்
#2060
இலங்கு பொன் ஓலை மின்ன இன் முகம் சிறிது கோட்டி
அலங்கலும் குழலும் தாழ அரு மணி குழை ஓர் காதில்
கலந்து ஒளி கான்று நின்று கதிர்விடு திருவில் வீச
நலம் கனிந்து உருகி நின்றாள் நாம வேல் காமர் கண்ணாள்
#2061
எரி மணி கலாபத்து இட்ட இந்திர நீலம் என்னும்
ஒரு மணி உந்தி நேரே ஒரு கதிர் உமிழ்வதே போல்
அரு மணி பூணினாள் தன் அம் வயிறு அணிந்த கோல
திரு மயிர் ஒழுக்கம் வந்து என் திண் நிறை கவர்ந்தது அன்றே
#2062
தேறினேன் தெய்வம் என்றே தீண்டிலேன்-ஆயின் உய்யேன்
சீறடி பரவ வந்தேன் அருள் என தொழுது சேர்ந்து
நாறு இரும் குழலினாளை நாகு அணை விடையின் புல்லி
கோல் தொடுத்து அநங்கன் எய்ய குழைந்து தார் திவண்டது அன்றே
#2063
கலை புறம் சூழ்ந்த அல்குல் கார் மயில் சாயலாளும்
மலை புறம்கண்ட மார்பின் வாங்கு வில் தட கையானும்
இலை புறம் கொண்ட கண்ணி இன் தமிழ் இயற்கை இன்பம்
நிலைபெற நெறியின் துய்த்தார் நிகர் தமக்கு இலாத நீரார்
#2064
குங்குமம் குயின்ற கும்மை குவி முலை குளிர்ப்ப தைவந்து
அம் கலுள் மேனி அல்குல் காசு உடன் திருத்தி அம் பொன்
பொங்கு பூம் சிலம்பில் போர்த்த பூம் துகள் அவித்து மாதர்
கொங்கு அலர் கோதை சூட்டி குழல் நலம் திருத்தினானே
#2065
வான் ஆர் கமழ் மதுவும் சாந்தும் ஏந்தி மது துளித்து வண்டும் சுரும்பும் மூசும்
தேன் ஆர் பூங்கோதாய் நினக்கு காமன் சிலை இரண்டும் செவ்வனே கோலி தந்தான்
தான் ஆர பண்ணி தடறு நீக்கி தண் குருதி தோய்த்து தகைமை சான்ற
ஊன் ஆர்ந்த ஓர் இணை அம்பும் தந்தான் என்னை உளன் ஆக வேண்டினானே
#2066
கள் நக்க கண்ணி கமழ் பூம் குழல் கரும்பு ஏர் தீம் சொலாள் கதிர் முலைகளின்
வண்ணக்கு வானும் நிலனும் எல்லாம் விலையே மழை மின்னும் நுசுப்பினாளை
பெண்ணுக்கு அணியாக வேண்டி மேலை பெரியோர் பெருமான் படைத்தான் என்று
புண் நக்க வேலான் புகழ நாணி பூ நோக்கி பூக்கு ஒசிந்த கொம்பு ஒத்தாளே
#2067
இறங்கிய மாதர்-தன்னை எரி மணி கடக கையால்
குறங்கின் மேல் தழுவி வைத்து கோதை அம் குருதி வேலான்
அறம் தலை நீங்க காக்கும் அரசன் யானாக நாளை
சிறந்த நின் நலத்தை சேரேன் ஆய்விடின் செல்க என்றான்
#2068
வில் இடு மணி செய் ஆழி மெல் விரல் விதியின் கூப்பி
நல் அடி பணிந்து நிற்ப நங்கை நீ நடுங்க வேண்டா
செல்க என சிலம்பு செம்பொன் கிண்கிணி மிழற்ற ஒல்கி
அல்குல் காசு ஒலிப்ப ஆயம் பாவை சென்று எய்தினாளே
#2069
பரு மணி பதம் கொள் நாக பை என பரந்த அல்குல்
எரி மணி பூணினானுக்கு இன் நலம் ஒழிய ஏகி
திரு மணி சிவிகை ஏறி செம்பொன் நீள் மாடம் புக்காள்
விரி மணி விளங்கும் மாலை வெம் முலை வேல் கணாளே
#2070
திருவில் தான் மாரி கற்பான் துவலை நாள்செய்வதே போல்
உருவிற்றாய் துளிக்கும் தேறல் ஓங்கு தார் மார்பன் தோழர்
பொருவிற்று ஆம் நம்பி காமதிலகன் என்று இருந்த-போழ்தில்
செருவில் தாழ் நுதலினாள் கண் மண திறம் செப்புகின்றார்
#2071
கனை கடல் அமுதும் தேனும் கலந்துகொண்டு எழுதப்பட்ட
புனை கொடி பூத்ததே போல் பொறுக்கலா நுசுப்பின் பாவை
நனை குடைந்து உண்டு தேக்கி நன் மணி வண்டு பாடும்
புனை கடி மாலை மாதர் திறத்து இது மொழிந்து விட்டார்
#2072
ஐயற்கு என்று உரைத்த மாற்றம் கேட்டலும் அலங்கல் நாய்கன்
வெய்ய தேன் வாய்க்கொண்டால் போல் விழுங்கலொடு உமிழ்தல் தேற்றான்
செய்வது என் நோற்றிலாதேன் நோற்றலாள் திறத்தின் என்று
மையல்கொண்டிருப்ப அப்பால் குமரி தன் மதியின் சூழ்ந்தாள்
#2073
பொற்பு அமை தாம கந்து பொருந்திய மின்னு போல
எல் பக எரியும் மாலை பவள தூண் பொருந்தி இன் நீர்
கற்பு எனும் மாலை வீசி நாண் எனும் களி வண்டு ஓப்பி
சொல் புகர் இன்றி தோழிக்கு அறத்தினோடு அரிவை நின்றாள்
#2074
வழி வளர் மயில் அம் சாயல் பவள பூம் பாவை அன்ன
கழி வளர் கயல் கண் நங்கை கற்பினை அறிந்து தோழி
அழி மது மாலை சேர்த்தி அடிபணிந்து ஆர வாழ்த்தி
பொழி மது புயல் ஐங்கூந்தல் செவிலியை பொருந்தி சொன்னாள்
#2075
நனை வளர் கோதை நற்றாய் நங்கைக்கு ஈது உள்ளம் என்று
சுனை வளர் குவளை உண்கண் சுமதிக்கு செவிலி செப்ப
கனை இருள் கனவில் கண்டேன் காமர் பூம் பொய்கை வற்ற
அனையது ஆம் கன்னி நீர் இன்று அற்றது ஆம் நங்கைக்கு என்றாள்
#2076
கெண்டையும் சிலையும் திங்கள் இளமையும் கிடந்து தேன் கொள்
தொண்டை அம் கனியும் முத்தும் தொழுதக அணிந்து தூங்கும்
குண்டலம் உடைய திங்கள் இது எனும் முகத்தி தாதை
வண் புகழ் குபேரதத்தன் கேட்டனன் மனைவி சொன்னாள்
#2077
செரு விளைத்து அனலும் வேலோய் சிறுமுதுக்குறைவி-தானே
பெரு வளைப்பு இட்டு காத்த கற்பு இது போலும் ஐயன்
கரி விளைத்து ஆய்ந்த சுண்ணம் காட்டினன் என்று கண்டாய்
திரு விளை தேன் பெய் மாரி பால்கடல் பெய்தது என்றாள்
#2078
கேட்பது விரும்பி நாய்கன் கிளைக்கு எலாம் உணர்த்தி யார்க்கும்
வேட்பன அடிசில் ஆடை விழு கலன் மாலை சாந்தம்
கோள் குறைவு இன்றி ஆக்கி குழுமியம் கறங்கி ஆர்ப்ப
நாள் கடி மாலையாற்கு நங்கையை நல்கினானே
#2079
பரியகம் சிலம்பு பைம்பொன் கிண்கிணி ஆர்ந்த பாதத்து
அரிவையர் ஆடல் மிக்கார் அரு மணி வீணை வல்லார்
உரிய நூற்றெண்மர் செம்பொன் ஒன்றரை கோடி மூன்று ஊர்
எரி அழல் முன்னர் நேர்ந்தேன் என் மகட்கு என்று சொன்னான்
#2080
மாசறு மணியும் முத்தும் வயிரமும் ஒளிரும் மேனி
ஆசறு செம்பொன் ஆர்ந்த அலங்கல் அம் குன்று அனானும்
தூசுறு பரவை அல்குல் தூ மணி கொம்பு அனாளும்
காசு அற கலந்த இன்ப கடலகத்து அழுந்தினாரே
#2081
பொன் வரை பொருத யானை புணர் மருப்பு அனைய ஆகி
தென் வரை சாந்து மூழ்கி திரள் வடம் சுமந்து வீங்கி
மின் வளர் மருங்குல் செற்ற வெம் முலை மணி கண் சேப்ப
தொல் நலம் பருகி தோன்றல் துறக்கம் புக்கவர்கள் ஒத்தான்
#2082
வரி கழல் குருசில் மார்பும் மடந்தை வெம் முலையும் தம்முள்
செரு செய்து திளைத்து போரில் சிலம்பு ஒலி கலந்த பாணி
அரி பறை அனுங்க ஆர்க்கும் மேகலை குரலோடு ஈண்டி
புரி குழல் புலம்ப வைகி பூ அணை விடுக்கலானே
#2083
மணி இயல் வள்ளத்து ஏந்த மது மகிழ்ந்து அனந்தர் கூர
அணி மலர் குவளை பைம் போது ஒரு கையின் அருளி அம் பொன்
பிணை அனாள் அருகு சேரின் பேதுறும் நுசுப்பு என்று எண்ணி
துணை அமை தோள்கள் தம்மால் தோன்றல்-தான் புல்லினானே
#2084
மல்லல் அம் கங்கை போலும் பலர் முயங்கு ஆர மார்பின்
புல்லன்-மின் போ-மின் வேண்டா என்று அவள் புலந்து நீங்க
முல்லை அம் கோதை ஒன்றும் பிழைப்பு இலேன் முனியல் நீ என்று
அல்லலுற்று அரத்தம் ஆர்ந்த சீறடி தொழுதிட்டானே
#2085
வட்டிகை பாவை நோக்கி மகிழ்ந்திருந்திலிரோ என்னா
தொட்டிமை உருவம் தோன்ற சுவரையே பொருந்தி நின்றாய்
கட்டழகு உடைய நங்கை நீ என கருதி கண்ணால்
ஒட்டி யான் நோக்கிற்று என்றான் ஒரு பிடி நுசுப்பினாட்கே
#2086
நுண் துகில் நெகிழ்ந்த அல்குல் மணி பரந்து இமைப்ப நொந்து
கண்களை இடுக கோட்டி காமத்தில் செயிர்த்து நோக்கி
குண்டலம் இலங்க கோதை கூந்தலோடு அவிழ்ந்து சோர
ஒண்_தொடி ஊடி நின்றாள் ஒளி மணி பூம் கொம்பு ஒப்பாள்
#2087
கிழவனாய் பாடி வந்து என் கீழ் சிறை இருப்ப கண்டேன்
எழுதிய பாவை நோக்கி இமை அவித்து இருப்ப கண்டேன்
ஒழிக இ காமம் ஓர் ஊர் இரண்டு அஃகம் ஆயிற்று என்று ஆங்கு
அழுத கண்ணீர்கள் மைந்தன் ஆவி போழ்ந்திட்ட அன்றே
#2088
அலங்கல் தாது அவிழ அம் செம் சீறடி அணிந்த அம் பூம்
சிலம்பின் மேல் சென்னி சேர்த்தி சிறியவர் செய்த தீமை
புலம்பலர் பொறுப்பர் அன்றே பெரியவர் என்று கூறி
இலங்கு வேல் கண்ணி ஊடல் இளையவன் நீக்கினானே
#2089
யாழ் கொன்ற கிளவியாள் தன் அமிழ்து உறழ் புலவி நீக்கி
காழ் இன்றி கனிந்த காம கொழும் கனி நுகர்ந்து காதல்
தாழ்கின்ற தாம மார்பன் தையலோடு ஆடி விள்ளான்
ஊழ் சென்ற மதியம் வெய்யோன் ஒட்டி ஒன்றாயது ஒத்தான்
#2090
பச்சிலை பட்டும் முத்தும் பவளமும் இமைக்கும் அல்குல்
நச்சு இலை வேல் கண் மாதர் நகை முக முறுவல் மாந்தி
இச்சையும் குறிப்பும் நோக்கி எய்வதே கருமம் ஆக
கை சிலை கணையோடு ஏந்தி காமன் இ கடையை காப்பான்
#2091
கடிப்பிணை காது சேர்த்தி சிகழிகை காதம் நாற
தொடுத்து அலர் மாலை சூட்டி கிம்புரி முத்தம் மென் தோள்
அடுத்து அணிந்து ஆகம் சாந்தின் அணிபெற எழுதி அல்குல்
உடுத்த பொன் கலாபம் தைவந்து ஒளி வளை திருத்தினானே
#2092
இலங்கு வெள் அருவி குன்றத்து எழுந்த தண் தகர செம் தீ
நலம் கிளர் அகிலும் தேனும் கட்டியும் நன்கு கூட்டி
புலம்பு அற வளர்த்த அம் மென் பூம் புகை அமளி அங்கண்
விலங்கு அரசு அனைய காளை வெள்_வளைக்கு இதனை சொன்னான்
#2093
கருமம் நீ கவல வேண்டா கயல் கணாய் பிரிவல் சில் நாள்
அருமை நின் கவினை தாங்கல் அது பொருள் என்று கூற
பெரும நீ வேண்டிற்று அல்லால் வேண்டுவ பிறிது ஒன்று உண்டோ
ஒருமை நின் மனத்தின் சென்றேன் உவப்பதே உவப்பது என்றாள்
#2094
நாணொடு மிடைந்த தேன் கொள் நடுக்குறு கிளவி கேட்டே
பூண் வடு பொறிப்ப புல்லி புனை நலம் புலம்ப வைகேன்
தேன் மிடை கோதை என்று திருமகன் எழுந்து போகி
வாள் மிடை தோழர் சூழ தன் மனை மகிழ்ந்து புக்கான்
#2095
புரவியும் களிரும் நோக்கி பொன் நெடும் தேரும் நோக்கி
இரவினும் பகலும் ஓவாது என் மகன் யாண்டையேன் என்று
அழுத கண்ணீரினாலே கை கழீஇ அவலிக்கின்ற
மெழுகு எரி முகந்தது ஒக்கும் தாய் மெலிவு அகற்றினானே
#2096
ஒற்றரும் உணர்தல் இன்றி உரை அவித்து உறுப்பினாலே
சுற்றத்தார்க்கு உரைப்ப ஈண்டி தொக்கு உடன் தழுவிக்கொள்வார்
எற்றுவார் இனைந்து சோர்வார் நம்பியோ நம்பி என்னா
உற்று உடன்று அழுத கண்ணீர் கால் அலைத்து ஒழுகிற்று அன்றே
#2097
கந்துகன் கழற கல்லென் கடல் திரை அவிந்த வண்ணம்
வந்தவர் புலம்பு நீங்க மறை புறப்படும் என்று எண்ணி
எந்தை-தான் இறந்த நாள் இன்று என நகர் இயம்பி யாரும்
அந்தம் இல் உவகை-தன்னால் அகம் குளிர்ப்பு எய்தினாரே

#2098
செம் கயல் மழை கண் செ வாய் தத்தையும் மகிழ்ந்து தீம் சொல்
எங்கையை சென்று காண்-மின் அடிகள் என்று இரந்து கூற
மங்கல வகையில் சேர்ந்து மது துளி அறாத மாலை
கொங்கு அலர் கண்ணி சேர்த்தி குங்குமம் எழுதினானே

#2099
தீவினை உடைய என்னை தீண்டன்-மின் அடிகள் வேண்டா
பாவியேன் என்று நொந்து பரிந்து அழுது உருகி நைய
காவி அம் கண்ணி ஒன்றும் கவலல் யான் உய்ந்தது எல்லாம்
நாவியே நாறும் மேனி நங்கை நின் தவத்தின் என்றான்

#2100
அன்னம் மெல் நடையும் நோக்கும் சாயலும் அணியும் ஏரும்
மின்னின் நுண் நுசுப்பும் வெய்ய முலைகளும் முகமும் தோன்ற
என் மனத்து எழுதப்பட்டாய்-ஆயினும் அரிவை கேளாய்
உன்னை யான் பிரிந்த நாள் ஓர் ஊழியே போன்றது என்றான்

#2101
இளையவள் மகிழ்வ கூறி இன் துயில் அமர்ந்து பின் நாள்
விளை பொருள் ஆய எல்லாம் தாதைக்கே வேறு கூறி
கிளையவர் சூழ வாமான் வாணிகன் ஆகி கேடு இல்
தளை அவிழ் தாமம் மார்பன் தன் நகர் நீங்கினானே
 


No comments:

Post a Comment