Merumanthira kaviyam story - மேருமந்திர காவிய கதை



மேருமந்திர காவிய கதை



தமிழாசிரியரும் எனது நண்பருமான திரு ல. ராஜேந்திரன் அவர்கள் Jain United News Centre  (JUNC.) Whatsapp குழுவில் தினமும் தொடராக பதிந்து வந்ததின் தொகுப்பு. 

நன்றிகள் பல.



வாமன முனிவரின் தத்துவக் காவியம் - 1


சமணர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளவிடற் கரியது. முதல்காப்பியமாக மலர்ந்தது சிலப்பதிகாரம். முதன்முதலில் விருத்தப்பாவால் படைக்கப்பட்டது சீவக சிந்தாமணி. இக்காப்பியத்திலிருந்து ஒரு அகப்பை முகர்ந்தே இராமாயணத்தை இயற்றியதாகக் கம்பர் கூறுகிறார். காப்பிய இலக்கியத்திற்கு பாதை வகுத்தவர்கள் சமணர்களே என்றால் மிகையன்று.

சூளாமணி, நீலகேசி ஆகிய காப்பிய வரிசையில் இடம்பெறுவது மேருமந்திர புராணமாகும். சமண தீர்த்தங்கரர்களில் பதின்மூன்றாவது தீர்த்தங்கரர் விமல தீர்த்தங்கரர். அவரின் கண தரர்கள் மேரு, மந்திரர் வரலாற்றைக் கூறும் நூலே மேரு மந்திர புராணமாகும்.

இதனை இயற்றியவர் வாமன முனிவர். நீலகேசிக்கு உரை வகுத்த வரும் இவரே எனச் சொல்லப்படுகிறது. மேரு, மந்திரர் இருவரையும் கதை மாந்தர்களாகக் கொண்டிருந்தாலும் கிளைக் கதைகளும் இதில் உள்ளன.

வாமன முனிவர் வரலாற்றிடையே தத்துவக் கருத்துக்களை அதிகமாக இடம்பெறச் செய்துள்ளார். நம்மவர்கள் இதனைச் சமய சாரம் என்றே அழைப்பர். ஒருவர் செய்யும் நற்செயலோ அல்லது தீச்செயலோ அது பிறவி தோறும் தொடரும் என்னும் நம் மதத்தின் கொள்கையைப் பறைசாற்றும் விதமாக மேரு மந்திர புராணத்தைப் படைத்துள்ளார்.

நோயாளிக்கு மருந்து கொடுக்கும் போது இனிப்பு கலந்து கொடுப்பது இயல்பு. அதுபோல் இக்காப்பியத்தில் கதையினைப் புகட்டி நமக்கு இக்காப்பியத்தை இயற்றியுள்ளார் வாமன முனிவர். நாளை முதல் மேரு, மந்திரர் வரலாற்றையும், சமண தத்துவக் கருத்துக்களையும் இப்பதிவில் காணலாம்...

எனது முந்தைய தொடர்களுக்கு நீங்கள் அனைவரும் தந்த வரவேற்பு தான், இந்த புதிய தொடருக்கான உத்வேகத்தையும், உற்சாகத்தையும் அளிக்கிறது என்றால் அது மிகையாகாது.


------------
வாமன முனிவரின் தத்துவக் காவியம் - 2


வைசயந்தன் முக்திச் சருக்கம்

 குற்றங்கள் அறவே களைந்தவனும் குறைகளை நீக்கியவனும் நற்குணங்களைக் கொண்டிருப்பவனும் தனது மெய்ஞானத்தால் உலகத்தில் வியாபித்துள்ள உயிர், உயிரற்றவை ஆகிய ஒன்பது பொருள்களின் தன்மையை தனது திருமொழியால் எடுத்துரைத்த விமல தீர்த்தங்கரரின் பாதங்களை வணங்கி இந்நூலை தொடங்குகிறார் வாமன முனிவர்.

நல்லோர்கள் போய வழி நாலடிப் போனாலும் பொல்லாங்கு நீங்கி புகழும், புண்ணியமும் வந்து சேரும்  என்று அவையடக்கத்துடன் கூறுகிறார் மேரு, மந்திரர் மேற்கொண்ட தூய வழியை கூறும் எனக்கு எவ்வித இடையூறும் உண்டாகாது என அவையடக்கத்துடன் தொடங்குகிறார்.

நாவலம் தீவில் மேற்கு விதேகத்தைச் சேர்ந்த கந்தமாலினி நாட்டில் உள்ள நகரம் வீத சோகம் .
இங்கு மூவுலக நாதனாகிய பகவான் எழுந்தருளியுள்ள சமவ சரணம் என்னும் ஆலயம் உள்ளது. இந்த நாடானது நாடு அல்ல, நாட வளம் தரும் நாடு( குறள் 739)
என்னும் குந்தகுந்தர் கூறும் வண்ணம் அமைந்திருந்தது.

இங்குள்ள மக்களோ ஒழுக்கம், விரதம், அடக்கம் ஆகியவற்றில் மேன்மை பெற்றிருந்தனர். மேலும், கல்வி, கேள்விகளில் சிறந்தவராய்த் திகழ்ந்தனர். ஆடவரோ பிறர் பெண்டிரை நோக்காத பேராண்மை உடையவராய்த் திகழ்ந்தனர்.

இந் நகரமானது குபேரனின் அளகாபுரிக்கு நிகரற்றதாய் விளங்கியது. இந்நகரைச் சுற்றிலும் 360 ஜினாலயங்கள் உண்டு. விண்ணுலகமானது இம்மண்ணுலகில் நிலை பெற்றுவிட்டதோ என்று நாடோர் போற்றும் வண்ணம் திகழ்ந்தது.வைசயந்தன் என்னும் மன்னன் இத்தகு சிறப்புடைய நாட்டை ஆண்டு வந்தான்.-

-----------

வாமன முனிவரின் தத்துவக் காவியம் - 3


வைசயந்தன் முக்திச் சருக்கம்- 2


வைசயந்த மன்னன் பற்றி கூறுவதைப் பார்ப்போம்

 ஆறு தீ நயம் அகன்ற காட்சியான்,
ஆறு நன்னயம் அமர்ந்த மாட்சியான்,
ஆறு தொல் பகை அடர்ந்த சூழ்ச்சியான்,
ஆறில் ஒன்று கொண் டகன்ற வேட்கையான்
 மேரு பு - 42

 தீ நயங்களாவன.

1. காமம்,
2. குரோதம்,
3. உலோபம்,
4. மோகம், .
5. மதம்,
6. மாற்சரியம்

 நன்னயம் ஆறு.

1. தேவ பூஜை,
2. குருபூஜை,
3. சுவாத்யாயம்,
4. சம்யமம்,
5. தவம்,
6. தானம்.

தனது திறமையால் கொடிய பகைகளை வென்றவன், மக்களின் வருவாயிலிருந்து ஆறில் ஒன்றை வருவாயாகப் பெற்றவன். அவன் தந்திரத்தால் பகைவர்களை வென்றவனேயன்றி கொடிய யுத்தம் செய்து அரசாட்சி செய்யவில்லை. இவனிடம் பூமகளும், கலைமகளும் பகை மறந்து தஞ்சம் புகுந்து ஒருங்கே இருந்தனர்.

இவனது பட்டத்தரசி சர்வ ஸ்ரீ, இவளுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு சஞ்சயந்தன் எனப் பெயர் சூட்டினான். சர்வஸ்ரீக்கு மற்றுமொரு ஆண் குழந்தை பிறக்கவே அதற்கு சயந்தன் எனப்பெயரிட்டான் வைசயந்தன்.

சஞ்சயந்தன் குமரப் பருவம் எய்தவே அவனுக்கு மணம் முடித்தான் மன்னன். மணமான சஞ்சயந்தனுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

வைசயந்த மன்னன் முறை தவறாது ஆட்சி செய்து வரும் நாளில், நகர்ப்புறத்தே உள்ள வனத்தில் சுயம்பு நாமர் என்னும் தீர்த்தங்கர பகவானது சமவ சரணம் வந்தடைந்ததாக காவலர்கள் கூறினர்.

அதைக் கேட்ட வைசயந்த மன்னன் மகிழ்ந்தான். வறியவன் பெற்ற செல்வம் போல் கருதினான். அமைச்சர் பெருமக்களுடன் முனிவரைக் காணப் புறப்பட்டான்.
------------

வாமன முனிவரின் தத்துவக் காவியம் - 4


வைசயந்தன் முக்திச் சருக்கம் - 3


பாரத பூமியில் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே தீர்த்தங்கரர் தோன்றுவர். இவ்வாறு கோடானு கோடி காலங்களில் தீர்த்தங்கரர்கள் தோன்றியுள்ளனர். அவர்களை நாம் கடந்த காலத்தீர்த்தங்கரர் என்போம்.

பின்னர் நிகழ்காலத் தீர்த்தங்கரர்கள் தோன்றினர். இவர்கள் நிகழ்காலத் தீர்த்தங்கரர்கள் 24 பேர் .மேலும், 24 பேர் தோன்ற உள்ளனர் அவர்கள் எதிர்காலத் தீர்த்தங்கரர்கள் ஆவர்.

ஆனால், விதேக சேத்திரத்தில் எப்போதும் தீர்த்தங்கரர்கள் இருப்பர். அவ்வகையில் வைஜயந்தன் ஆட்சிக்காலத்தில் அறம் பகர்பவராக இருந்தவர் சுயம்பு தீர்த்தங்கரர் ஆவார். அவரைக் கண்டு வணங்கவே வைசயந்த மன்னன் புறப்படுகையில் பகவானைத் துதிக்கத் தொடங்கினான்.

பூமாலை அணியாத பகவானே உன் திருமேனியானது ஆசைகளைத் துறந்தவன் நீ என்பதை உணர்த்தும் உனது உடல் உருவம் அவ்வாறு தோன்றினாலும் உனது திருவுருவத்தை உள்ளத்தினால் போற்றிப் புகழ்பவர் சிலரே எனக் கூறலாம்.

பூமாலை முதலாய புனையாத திருமூர்த்தி,
 காமாதி வென்றுயர்ந்த கடவுளென் றறையுமே, காமாதி வென்றுயர்ந்த கடவுளென் றறைந்தாலம்,
கோமான் நின் திருவுருவம் கொண்டு வப்பர் அரியரே
(மேரு .ம .பு. - 64)

விளக்கை அகத்தே கொண்ட பளிங்கு போல் விரியும் தன்மையுடைய மூன்று ஒளிகளைப் பெற்ற நின் திருமேனியானது அளவிடற்கரிய ஆற்றல் மிக்க ஞான ஒளியானது அகத்தே உள்ளது என்பதை உணர்த்துகிறது.
(மூன்று ஒளி - மன, வசன, காயம்) உள்ளிருக்கும் ஒளியை உடல் தெரிவித்தாலும், மாறுபட்ட குணங்களை வென்றவரே உம்மை வணங்கி உயர்பவர் ஒரு சிலரே எனலாம். ஒரு சிலரே எனலாம்.

 குற்றங்கள் நீங்கி அனைத்துயிர்களிடத்தும் அருள் பொழிந்து நிற்கும் உனது ஒப்பற்ற திருமேனியானது குறையேதுமின்றித் தன்னுள் நிறைந்து நின்ற நால்வகையான குணங்களின் ஆற்றலை அறிவிக்கும். (அனந்த ஞானம், தர்சன , சுக, வீர்யம்) அத்தகு ஆற்றலை அந்த அற்புதப் பொன்மேனி வெளிப்படுத்தினாலும் தெய்வத்தாமரை மேல் உலா வருகின்ற உன்னை விரும்பித் துதிப்பார் சிலரே என்று பலவாறாக போற்றினான் மன்னன்.

பின்னர் முனிவரை வணங்கி , உலகத்தில் நிலைத்துள்ள உயிர் ஒன்பது பொருள்களின் இயல்பு எத்தகையது என வேண்டினான்.

சுயம்பு நாமர் கூறத் தொடங்கினார்.
உயிர், உயிரல்லது, ஊற்று, செருப்பு, கட்டு, உதிர்ப்பு, வீடு ஆகியவை ஏழு தத்துவங்கள் ஆகும். இவற்றோடு புண்ணியம் , பாபம் இரண்டையும் சேர்த்து ஒன்பது பதார்த்தங்கள் என்பர்.

உயிர், வீட்டுயிர் ;மாற்றுயிர் என இருவகைப்படும்.
எண்வகை வினைகளை முற்றிலும் ஒழித்து முக்தி அடைந்த உயிரே வீட்டுயிர் எனப்படும். இது அறிவுமயமானது. காட்சி மயமானது எனவும் கூறலாம். மாற்றுயிரானது ஐம்பொறிகள், மூன்று உட்கரணங்கள், உயிர்ப்பு ஆயுள் என்னும் பத்து வகையான பிராணன்களில் பிறவி நிலைக்கேற்றவாறு நான்கு முதல் பத்துப் பிராணன்களைப் பெற்றதாகும். ( வீட்டுயிர் -மோட்ச ஜீவன், மாற்றுயிர்-சம்சார ஜீவன்)
---------------


வாமன முனிவரின் தத்துவக் காவியம் - 5


வைஜயந்தன் முக்திச் சருக்கம் - 1


வீட்டுயிரானது எண்வகைக் கொடிய வினைகளை கெட்டு ஒழிந்தவுடனே எப்போதும் அழிவற்ற எண்வகைக் குணங்களைக் கொண்டு புடம் போட்ட பொன் போல் வீட்டுலகில் நிலைத்து ஒளிரும்.

எண்வகை வினைகள்.

1. ஞானா வரணியம்,
2. தரிசனா வரணியம்,
3. மோகனீயம்,
4. அந்தராயம்,
5. வேதனியம்,
6. ஆயுஷ்யம், .
7. நாமம்,
8. கோத்திரம்.

எண்வகை குணங்கள்..

1.கடையிலா ஞானம்,
2. கடையிலா காட்சி, 3.கடையிலா வீரியம், 4.கடையிலா இன்பம், 5.நாமமின்மை , 6.கோத்திரமின்மை, 7..ஆயுளின்மை, 8..அந்தராயங்களின்மை

மாற்றுயிரானது பிறவியில் உழன்று ஐந்து பரியட்டங்களில் சிக்கும். இதனால் மூவுலகங்களிலும் பிறப்பு, இறப்புகளை எய்தி வினையின் சேர்க்கையால் நான்கு பிறவிகளில் சுற்றிக் கொண்டே இருக்கும்.(பரியட்டம் ஐந்து பொருள், இடம் .காலம், எண்ணம், தோன்றி மறையும் செயல் )

மனித பிறவியிலிருந்து நீங்கிய உயிரானது நான்கு கதிகளில் ஏதேனும் ஒன்றை அடையும்.தேவ கதியில் உள்ள உயிரானது அதனுடைய வினைக்கேற்ப மனிதனாகவோ , விலங்காகவோ பிறக்கலாம்.

ஆனால், நரகனாவதில்லை. ஆனால், நரக கதியில் உள்ள உயிர்கள் மனிதனாகவோ, விலங்காகவோ பிறக்கலாம். ஒரு போதும் தேவனாக பிறக்க இயலாது.

நற்காட்சியினையுடைய விலங்குகளும், மனிதர்களும் அணு விரதங்கள் ஐந்தினை மேற்கொண்டாலும், கொள்ளாவிட்டாலும் சௌதர்ம கல்பம் முதலாக அச்சுத கல்பம் வரையிலும் அவரவர் தகுதிக்கேற்ப அடைவார்கள்.

அணு விரதத்தை ஏற்றவர்கள் பவணலோகம் முதல் அச்சுத கல்பம் வரையிலும், விலங்குகள் சகஸ்ர ராகா ல்பம் வரையிலும் முறைப்படி அடைவார்கள்.

 கொடிய மனமுடைய ஆடவர் ஏழாம் நரகில் சென்று பிறப்பர். பெண்கள் ஆறாம் நரகம் செல்வர்.

விலங்குகள் ஐந்தாம் நரகிலும், பறக்கும் உயிரினங்கள் மூன்றாம் நரகிலும் தவழ்ந்து செல்லும் உயிரினங்கள் இரண்டாம் நரகம் வரையிலும், மனம் இல்லாதவை முதல் நரகம் வரையில் பிறக்கக் கூடும்.

ஒன்று முதல் நான்கு நரகங்களில் உள்ள உயிர்கள் அடுத்த பிறவியில் மனிதனாகப் பிறந்து தவம் இயற்றி வினைகளை அகற்றி முக்தி அடைய இயலும்.
----------- 

வாமன முனிவரின் தத்துவக் காவியம் - 6


வைஜயந்தன் முக்திச் சருக்கம்-1


 ஒன்று முதல் நான்கு நரகங்களில் உள்ள உயிர்கள் அடுத்த பிறவியில் மனிதனாகப் பிறந்து தவம் இயற்றி வினைகளை வென்று இறுதியாக முத்தி அடையும்.

5 ஆம் நரக உயிர்கள் மனிதனாகப் பிறவி எடுத்தாலும் முக்தி அடைய முடியாது.

ஆறாம் நரக உயிர்கள் விலங்கு கதியில் தான் பிறக்கலாமேயன்றி மனித கதியில் பிறக்காது.

ஏழாம் நரக உயிர்கள் விலங்கு கதியில் பிறக்கலாம் ஆனால் , மனித கதியில் பிறக்க முடியாது.

ஓர் உயிரானது தான் செய்த பயனை மற்றொரு பிறவியில் அனுபவிக்க நேரிடும். எனவே, தான் செய்த வினைகளுக்கேற்ப இன்ப, துன்பங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதை உணர வேண்டும்.

 உயிரிலிருந்து வேறுபட்டவைகளே உயிரற்றவை என்பதை உணர்க. அவை தான் புத்கலமாகும்.இவை நாற்றம், சுவை, ஊறு, நிறம் முதலியவற்றைப் பெற்றிருக்கும்.

இவை பிறவியில் சுழலும் உயிர்களைப் பற்றிக் கொள்ளும் வினைகளுக்கு மூலப்பொருள்களாய் அமையும். இப்பொருள்கள் முக்கூட்டுத் தன்மை கொண்டவை. சேர்தல், முழுமை அடைதல், பிரிதல் ஆகிய மூன்று செயல்களை கொண்டிருப்பதால் மூன்று உலகங்களிலும் காணப்படுகின்றன.

 உயிர் புத்கலங்களின் இயக்கத்திற்கு காரணமாகவும், நிலையான இருப்பிற்கும் துணைக் காரணமாக இருப்பவை தர்மம், அதர்மங்களாகும்.

மீன் நீந்துவதற்கு நீர் துணையாகிறது. அதுபோல் உயிரும், உயிரற்றவையும் இயங்க தர்மம் துணைக் காரணமாகிறது. பொருள்கள் நிலை பெற்று இருப்பதற்குக் துணைக் காரணமாக அதர்மத் திரவியம் உள்ளது.

இத் திரவியம் இல்லையெனில் மண்ணுலகமும், மண்ணுலகில் உள்ள பொருள்களும்
தேவர் உலகமும் நரகமும் நிலை பெற்று இருக்க இயலாது. உலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் தங்குவதற்கு இடம் தருவது ஆகாயம் ஆகும்.

 அதே போன்று அவற்றுடன் தொடர்பு கொண்டு இருப்பது காலம் ஆகும். புத்கலம், தர்மம், அதர்மம், ஆகாயம், காலம் ஆகிய ஐந்தும் உயிரற்ற பொருள்கள் ஆகும்.

---------------

வாமன முனிவரின் தத்துவக் காவியம் - 7


வைஜயந்தன் முக்திச்சருக்கம் - 1


உயிர்கள் அனைத்திற்கும் நன்மையான செயல்களைச் செய்தல் , அவற்றின் மீது அன்பு செலுத்துதல், தூய சிந்தனையோடு மனம், வாக்கு, காயம் ஆக எந்த ஜீவனுக்கும் கெடுதல் புரியாது நற்செயல்கள் செய்தலே புண்ணியமாகும்.

இதற்கு மாறாக தீய எண்ணங்களோடு தீச்செயல்கள் புரிதலை பாவம் என்கிறோம்.

 மேற்கூரிய புண்ணியம், பாவம் இரண்டும் உயிரில் கலைத்தலையே ஊற்று என்கிறோம்.

மூவகை குப்தி, ஐவகை சமிதி, பத்து அறங்கள், பன்னிரு சிந்தனைகள் , இருபத்திரண்டு துன்பங்களைப் பொறுத்து வென்று, சலனமற்ற நிலையில் தியானம் செய்தல் ஆகிய இவற்றால் வருகின்ற வழியைத் தடை செய்வதையே செறிப்பு என்கிறோம

மூவகை குப்தி :

 மனவடக்கம் மொழியடக்கம் மெய்யடக்கம்
-------------------------------------
ஐவகை சமிதி.

1. ஈர்யா சமிதி எவ்வுயிர்க்கும் தீங்கு நேரா வண்ணம் நடத்தல்,

2 பாஷா சமிதி
இன் சொற்கள் பேசுதல்

3 ஏஷணா சமிதி
தூய உணவை ஏற்றல்.

4. ஆதாந நிக்ஷேப சமிதி
 பொருள்களை எடுக்கும் போதும், வைக்கும் போதும் உயிர்களுக்கு துன்பம் நேரா வண்ணம் கையாளுதல்,

5 உத்ஸர்க்க சமீதி
 சிறுநீர், மலங்களை நுண்ணுயிர்கள் இல்லாவிடத்து கழித்தல்.
------------------------------------
 பத்தற தர்மங்கள்.

 1.உத்தமப் பொறை
 உயிர்கள் மீது அன்பு காட்டுதல் துன்பம் ஏற்படின் பொறுத்தல்.

 2 .உத்தம மென்மை.
ஆத்மனிடம் கடினமான எண்ணமோ, கர்வமோ கொள்ளாதிருத்தல்.

3. உத்தம நேர்மை.
 மனிதன் எப்பொழுதும் நேர்மையையும் தூய்மையான எண்ணத்தையும் கடைபிடித்தல்.

4. உத்தம வாய்மை.
 ஒரு பொருளின் தன்மையை உயர்த்தியோ, தாழ்த்தியோ கூறாதிருத்தல்.

5 உத்தமத் தூய்மை
தூய மனத்தோடு இருத்தல்.

6. உத்தம அடக்கம் ஐம்புலன்களை தம் விருப்பத்தில் செல்லாதவாறு தடுத்தல்.

7 உத்தம தவம்
 மனதை கட்டுப்படுத்துதல்.

8. உத்தமத் தியாகம்.
 விடுவது என்றுபொருள் அதாவது ஒருவர் தனக்குரியவற்றை அடுத்தவர்க்கு தானமாகக் கொடுத்தல். அதுமட்டுமின்றி பிறர்க்கு கொடுத்ததை மீண்டும் நினைத்துப் பார்த்தல் கூடத் தவறு.

 9. உத்தமத் துறவி.
இது என்னுடையது என்ற எண்ணம் எலலாத் தீமைகளுக்கும் காரணமாகும். அவைகளை முற்றிலுமாகத் துறத்தல். அகப்பற்று, புறப்பற்று என இரண்டாகும். சினம், கர்வம், விருப்பு, வெறுப்பு போன்ற அகத்தில் தோன்றும் மாசுகளைக் களைதல். வீடு, நிலம், பொன் இவைகளைத் துறத்தல் புறப்பற்றாகும்.

10. உத்தம பிரமசரியம்.
ஒரு துறவி 100 வயதான பெண்ணைக் கூட கண்டு தனிமையில்  உரையாடக் கூடாது.
இவை பத்தற தர்மங்களாகும்.

-------------

வாமன முனிவரின் தத்துவ காவியம் - 8

வைஜயந்தன் முக்திச்சருக்கம் - 1

பன்னிரு சிந்தனைகள்

மோட்ச மார்க்கத்தில் செல்ல நினைப்பவர்கள் இவற்றை இடைவிடாது சிந்தித்தல் வேண்டும்.

 1. நிலையாமைச் சிந்தனை:
பொருள்கள் அனைத்தும் நிலையற்றவை என உணர்தல் வேண்டும்.

2. அரணின்மைச் சிந்தனை:
பெற்றோர், உற்றார், உறவினர் எவராலும் தம்மை மரணத்திலிருந்து ் காத்தல் அரிது என சிந்தித்தல் வேண்டும்.

3. பிறவித் துன்பச் சிந்தனை :
நாற்கதிகளில் உழலும் உயிர் துன்பம் அடைதல் உண்டு என நினைத்தல் வேண்டும்.

4. பிறிதின்மைச் சிந்தனை :
ஒருவருடைய பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணி துன்பங்களில் எவராலும் பங்கு கொள்ள முடியாது எனக் கருத வேண்டும்.

5. உறவின்மைச் சிந்தனை:
உடல் வேறு, உயிர் வேறு என உணர்தல் வேண்டும்.

6. உவர்ப்புச் சிந்தனை :
 இந்த உடல் அசுத்தமானது அருவருப்பானது என எண்ண வேண்டும்.

7. ஊற்றுச் சிந்தனை: ஆசையே எல்லா பிறவிகளுக்கும் காரணம் என அடிக்கடி சிந்திக்க வேண்டும்.

8.செறிப்பு சிந்தனை. உயிர்களிடத்து புதிய வினைகள் வராமல் தடுப்பதே செறிப்புச் சிந்தனையாகும்.

9. உதிர்ப்புச் சிந்தனை:
 வினைகள் பயனைத் தந்து கழிவதற்கு முன்னரே தானம், தவம், சீலம் முதலியவற்றால் நீக்குதலே உதிர்ப்புச் சிந்தனை.

10. உலகச் சிந்தனை :
 உலகின் அமைப்பை எப்போதும் கருதுதல் உலகச் சிந்தனை.

11. ஞானம் பெறலரிதுச் சிந்தனை. மும்மணிகளின் மேன்மையைக் கருதி அவற்றினால் உயர்வை அடைய முடியும் என நினைத்தல்.

12. அறச் சிந்தனை:
 அருகப் பெருமானது அறவுரைகளே நமக்கு நன்மை தருபவை என சிந்திக்க வேண்டும்.

--------------

வாமன முனிவரின் தத்துவக் காவியம் - 9


வைஜயந்தன் முக்திச்சருக்கம் - 1


மேலும் 22 துன்பங்கள் கூறப்படுகிறது. இத் துயரங்களை பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும் இவற்றை பரிஷஹஜயம்  என்று கூறுவர். அவை,

1. பசி
2. தாகம்
3. குளிர் 
4. வெப்பம்
5. கொசு, ஈ எறும்பு போன்றவற்றின் கடி
6. ஆடையின்மையால் ஏற்படும் இன்னல்களை பொறுத்தல்.
7. புலன் இன்பத் தூண்டல்
8 பெண்
9. நடத்தல்
10. ஆஸனம்,
11. வெற்றுத் தரை
 12. மிகை கண்டு, வெகுளல்
13. துயர்
14. யாசித்தல்
15. ஆகாரம் கிடைக்காமை
16. வியாதி
17. புல்
முதலானவைகளால் ஊறு,
18. அழுக்கு 19.புகழ்ச்சி
20 . அறிந்திருந்தல்
21. அறியாமை
22. நம்பிக்கையின்மை

இவற்றை சலனமற்ற நிலையில் தியானம் செய்தால் வினைகள் வருகின்ற வழியைத் தடை செய்ய முடியும் இதையே செறிப்பு என்பர்.

 மேற்கூறிய முறைகளில் ஏற்கனவே முற்பிறவிகளில் கலந்துள்ள வினைகளைச் அழியச் செய்வதை உதிர்ப்பு என்கிறோம் உலகம் முழுவதும்

பரவியுள்ள கார் மண வர்க்கணைகள் உயிரினுடைய மோக உணர்வால் உயிரோடு இடையறாது ஒன்றி நிற்பதையே கட்டு என்கிறோம். அவை:

1. ஞானாவரணீயம்
2. தர்சனா வரணியம்
3 மோகனீயம்
4. அந்தராயம்
5. வேதனீயம்
6. ஆயுள்
7. நாமம்
 8. கோத்திரம்

 என்பன இவற்றில் மோகனீய கர்மம் மிகவும் கொடியது. இதன் காலம் கோடா கோடி கடன் காலமாகும். ஞானா வரணியம், தர்சணா வரணீயம், வேதனீயம், அந்தராயம் ஆகிய இக்கர் மங்களின் காலம் உயர்ந்த கால அளவு முப்பது கோடா கோடி கடற் காலம் எனலாம்.

 நாமம், கோத்திரம் ஆகிய இரு கர்மங்களின்  காலம் இருபது காலமாகும்.
ஆயுள் கர்மத்தின் அதிக கால அளவு முப்பத்து மூன்று கடற் காலம் ஆகும். இந்த எட்டு கர்மங்கள் ஒவ்வொன்றுக்கும் குறைந்த கால அளவு ஒரு முகூர்த்த காலத்திற்குட்பட்டதாகும்.

அதாவது ஆயுள் கர்மத்தின் அதிக கால அளவு முப்பத்து மூன்று கடற் காலம் ஆகும். இந்த எட்டு கர்மங்கள் ஒவ்வொன்றுக்கும் குறைந்த கால அளவு ஒரு முகூர்த்த காலத்திற்குட்பட்டதாகும். அதாவது அவ்வளவு குறைந்த காலத்தில் அவ்வினைகளை வென்று உதிர்க்கச் செய்யலாம்.
---------------------

வாமன முனிவரின் தத்துவக் காவியம் - 10


வைஜயந்தன் முக்திச்சருக்கம் - 1


இந்த பிறவியானது ஆசை, செற்றம், மயக்கமெனும் மூன்று குற்றங்களால் நான்கு கதிகள் ஐம்புலன்கள், ஆறு வகையான பிறப்புகளில் பழவினை பற்றித் திரியும் ஏழு வழிகளில் சேர்ந்துள்ள எட்டு வினைகளுடன் உயிருக்குண்டான சுழற்சியாகும் என்றார்.

மேலும் மைந்தர்களைப் பார்த்து கூறத் தொடங்கினார் மன்னர்.
அடியில் ஏழு கயிறு அகலமும் உச்சியில் ஒரு கயிறு அகலமும் இடைப்பகுதியில் ஒரு கயிறு அகலமும், மேல் பாதியில் உச்சிக்கும் மையப்பகுக்கு இடையில் ஐந்து கயிறு அகலமும் மொத்த உயரம் பதினான்கு கயிறும் உடைய அழிவற்ற இந்த உலகப் பகுதியில் நாம் பிறந்தும், இறந்தும் உழன்ற நாட்கள் எண்ணற்றவை என்பதை நினைவில் கொள்க.

மேலும், எலும்புகளை நரம்பினால் இணைத்து இரத்தத்திலே தோய்த்து இறைச்சியை மேலே பதித்து வெளிப்புறத்தைத் தோலால் மூடி, அழுக்குடன் புழுக்கள் நெளியும் ஒன்பது வாயில்களுடன் கூடிய நிணம் மிக்க உடலாகிய குடிசையின் மீது மாறாத பற்றுடையவர் மனிதர்கள் அற்ப அறிவும் இழிந்த தன்மையும் உடையவராவர் என்பதை அறிவீராக என்றான்.

என்பினை நரம்பில் பின்னி உதிரம் தோய்த்து இறைச்சி மெய்த்திப்  புன்புறம் தோலின்மூடி அழுக்கொடு புழுக்கள் சோரும்
ஒன்பது வாயிற் றாய ஊன் பயில் குரம்பை தன் மேல்
அன்பறா மாந்தர்கண்டாய் அறிவினால் சிறிய நீரார்
மே ம .பு. 116

இவ்வுலகத்தில் பிறந்து இறந்து துயரம் அடையும் மக்களை துன்பத்திலிருந்து காப்பது ஜின தர்மத்தைக் காட்டிலும் உயர்ந்தது எதுவுமில்லை என்றான் மன்னன் வைஜயந்தன்.
இவற்றையெல்லாம் கேட்ட சஞ்சயந்தனும், சயந்தனும் அரசை ஏற்க இயலாது என்றனர்.

அடுத்து, இவ்வாட்சிப் பொறுப்பினை சஞ்சயந்தனின் மகனான வைசயந்தனிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர், மூவரும் சுயம்பு நாமத் தீர்த்தங்கரை கண்டு வணங்கி நிர்வாணத் துறவேற்றனர்.

தூய அருந்தவத்தில் மூழ்கினார் வைஜயந்தர். காதிவினைகளை வென்றார். கேவல ஞானமடைந்தார். அவரது கேவல ஞான பூஜையை நடத்திட தேவர்கள் வந்தனர்.
-------------

வாமன முனிவரின் தத்துவக் காவியம் - 11


வைசயந்தன் முக்திச்சருக்கம் - 1


வைசயந்தன் முனிவர் முக்தியடைந்ததைக் காண தேவர்கள் வந்தனர். முனிவர்க்காக கேவல ஞான பூஜையைத் தேவர்கள் சிறப்பாகச் செய்தனர். இதனைக் காண பவண லோகத்திலிருந்து தரணேந்திர தேவன் தன் மனைவியர் புடைசூழ பூஜைப் பொருள்களுடன் அங்கு வந்தான்.

அவனின் பேரழகுத் தோற்றத்தைக் கண்ட ஜயந்த முனிவர் (வைஜயந்த முனிவரின் இரண்டாவது மகனான ஜயந்த முனிவர் ) மனம் மயங்கினார். தானும் தரணேந்திரன் போல் அழகிய உருவம் பெற வேண்டுமென எண்ணினார்.

வீடுபேற்றை எண்ணிய முனிவர் இவ்வாறு தாழ்ந்து போனார். என்னே மதியீனம் அரிசியை விடுத்து உமியை விரும்பியவனின் கீழ் நிலைக்கு ஆளானார் ஜயந்த முனிவர்.

 ஐம்பொறிகளால் ஆகிய இன்பமானது பிறவிச் சுழற்சியில் சிக்க வைக்கும் என உணர்ந்த ஜயந்த முனிவர் அவ்வின்பத்தையே விரும்பினார். இது எவ்வாறெனின் நஞ்சினை அழுத மென்று உண்ட ஒருவன் அது நஞ்சென்று உணர்ந்து துப்பிய பின் அதனை உண்டதற்கு ஒப்பாகிறது பாருங்களேன்.

ஐந்து தலைகளை உடைய நாகத்தின் நஞ்சானது சிறிது துன்பம் தந்து இறக்கச் செய்யுமே தவிர, மறுபிறவிக்குத் தொடராது. ஆனால், ஐம்பொறிகளால் ஏற்படும் நஞ்சானது பல பிறவிகளுக்கும் தொடரும் என்பதை ஜயந்த முனிவர் மறந்தார். அதன் விளைவாக பவண லோகத்தில் தரணேந்திரனாக ஜயந்தர் பிறந்தார்.

ஐந்தலை அரவம் தன்வாய் ஐந்துடன் கலந்த நஞ்சில்
துன்பம் ஓர் கடிகை யல்லால் துஞ்சினால் தொடர்ந்தி டாதாம்
ஐம்பொறி அரவம் தன்வாய் ஒன்றினால் ஆய நஞ்சு
துஞ்சினால் அனேக காலம் தொடர்ந்து நின்று அடுங்கள் கண்டீர்
மே ம .பு 138

வைசயந்த முனிவனானவர் எஞ்சிய அகாதி கர்மங்கள் நான்கினையும் வென்று, மூன்றுலகும் தொழுது நிற்க மேல் நோக்கிச் சென்று வீட்டுலகு எய்தினார். சயந்தனோ அமரனாகிப்பவண லோகத்தை அடைந்தான்.

இனி, சஞ்சயந்த முனிவருடைய வரலாற்றைக் கூறத் தொடங்குகிறார்.
வைசயந்தன் முக்திச் சருக்கம் முற்றுப் பெற்றது.

----------------

வாமன முனிவரின் தத்துவக் காவியம் -12


சஞ்சயந்தன் முக்திச்சருக்கம் - 2


ஐந்தாம் கதியடைந்த வைசயந்த பகவானுக்கு இறுதி அஞ்சலி செய்த தேவர்கள் தமது இருப்பிடம் சென்றனர். சஞ்சயந்த முனிவரும் இரவு பகல் பாராது தியானத்தில் ஆழ்ந்தார்.

சஞ்சயந்த முனிவரின் தவத்தின் மகிமையால் விலங்குகள் தங்கள் பகை மறந்தன. அவைகளின் உள்ளங்களிலே அமைதி குடி கொண்டன.

சஞ்சயந்த முனிவர் இவ்வாறு தவம் ஏற்றுவரும் காலத்தில் வித்துத் தந்தன் என்னும் விஞ்சையர் வேந்தன் தன் மனைவியுடன் வானத்தில் சென்றான்.

சஞ்சையந்த முனிவர் தவம் செய்யும் இடத்திற்கு வரும்போது அவனுடைய வானம் மேலே செல்லாமல் நின்றது.

பல பிறவிகளில் தொடர்ந்து வந்த கோபத்தால் அம்முனி வரை தன் விமானத்தில் தூக்கிக் கொண்டான். பரத கண்டத்தை நோக்கி செலுத்தினான்.

சண்ட வேகை என்னும் ஐந்து ஆறுகள் கலக்கும் இடத்தின் நடுப்பகுதிக்குச் சென்றான். அதற்கு மேல் விமானம் செல்லவில்லை. கோபமுற்ற விஞ்சையன் முனிவரைத் தாக்கத் தொடங்கினான்.

இவை அனைத்தும் தான் முற்பிறவியில் செய்த வினைகளே என சஞ்சயந்த முனிவர் நினைத்தார். தியானத்தில் ஆழ்ந்தார். விஞ்சையனோ முனிவரை அவ்விடத்திலேயே விட்டு விட்டு தனது நகரத்தை அடைந்தான்.

அங்குள்ளோர் நம்பும்படி முனிவரையே பற்றித் தவறாகக் கூறினான். அவர்களிடம், அரக்கன் ஒருவன் இங்கே வந்திருக்கின்றான். அவன் பிணங்களையேத் தின்பவன். இரவு நேரங்களில் நம்மை வருத்தி விழுங்குவதற்காகக் காத்துள்ளான்.

எனவே அவனுக்குத் தொல்லை கொடுப்போம் என அனைவரையும் அழைத்து வந்தான். அவர்களும் அச்சம் கொண்டு முனிவரைத் தாக்கத் தொடங்கினர்.
விஞ்சையன் கொடுஞ் சொற்களையும் கூறத் தொடங்கினான்.

முனிவரோ எண்வினைகளையும் கெடுத்து சுக்கிலத் தியானம் என்னும் வாளினை ஏந்தித் துன்பம் தருகின்ற வினையாகிய பகைவர்களை அழிக்க தியானத்தில் நிலைத்தார் .

வித்துத் தந்தனோ விடாமல் முனிவர்க்கு தொல்லைகள் கொடுத்தான். முனிவரோ, பிரமதத்த குணத்தானம் என்னும் ஆறாம் குணத்தானத்திலிருந்து அப் பிரம்மதத்த குணத்தானம் என்னும் ஏழாம் குணத்தானத்தையும் எய்தினார்.

மேலும், வித்துத் தந்தன் துயரங்கள் கொடுத்தாலும் வினைகளின் படைத் தலைவர்களாகிய பதினாறு பிரகிருதிகளை வென்றார். சுக்கில தியானத்தில் நிலைத்து நின்றார். மாயப் போர் புரியும் மோகனீயம் என்னும் மன்னனுடைய மக்களாகிய எண்மரும் ஒன்றுபட்டுச் சோர்வின்றி போர் புரிந்து இறுதியில் ஒழிந்து போக அடுத்து வந்த நபும்சக வேதம் என்னும் வினைப் பிரகிருதியும் அழிந்தவுடன், பெண் வேதம் என்னும் வினைப் பிரகிருதியும் அழிந்தவுடன், பெண் வேதம் என்னும் வினையானது வியக்கும் வண்ணம் அறுவினைகளின் துணையுடன் தோன்றித் தாக்க அவரும் அறுவருடன் மடிந்தாள்.

ஆனால், அப்போது தப்பிய ஆண் வேதம் ம என்னும் வினைப்பகைவன் நின்று போர் புரிய இறுதியில் அவனும் மாண்டான்.

மாயப் போர் அரசன் மக்கள் வந்து எண்மர் தம்முள் ஒன்றிக்

கயக்கறப் பொருது மாயக் காய்ந்தலி மாய்ந்த பின்னை

வியக்க வந்து ஒருத்தி வீழ்ந்தாள் மெல்லியர் அறுவரோடும்

உயப் பிழைத் தொருவன் நின்றான் ஒருங்குபோர் தொடங்கி மாய்ந்தான்.

மே.ம.பு. 166
------------------

வாமன முனிவரின் தத்துவக் காவியம் - 13


சஞ்சயந்தன் முக்திச்சருக்கம் - 2


சஞ்சயந்த முனிவன் தூய்மை ஒளி சிறக்கும் சுக்கில தியான வாளெடுத்துச் சற்றும் தளராமல் பத்தாம் குணத்தானத்தை எய்திய போது பசலை, நித்திரை என்னும் வினைப் பகுதிகளை விலக்கினான்.

மேலும், தரிசனாவரணீயம் என்னும் நான்கு பகைவர்கள் தோன்றவே அவர்களை ஒழிக்க முயலும் போது ஞானாவரணியம் என்னும் ஐவரும் அந்தராயம் என்னும் ஐவருடன் ஒன்று கூடி அதாவது பதினான்கு? வினைப் பகைவர்களும் தாக்கினர்.

அப்படிச் சேர்ந்து தாக்கிய அவர்கள் அனைவரும் ஒரு கணத்தில் ஒருங்கே மாய்ந்தனர் காதி கர்மங்களாகிய நான்கு அரசுகள் அடியோடு ஒழியவே, முனிவர்க்கு கடையிலா அறிவு  முதலிய நான்கு ஒப்பற்ற தன்மைகள் வந்து சேர்ந்தன.

இதனைக் கண்ணுற்ற மூவுலக தேவர்களும் விரைந்து வந்து கற்பக மலர்களைச் சொரிந்தனர். இதனைக் கண்ணுற்ற வித்துத் தந்தன் திகைப்பும் துயரமுற்று மயங்கி வீழ்ந்தான்.

அப்போது தரணேந்திரன் அங்கு வந்து சேர்ந்தான்.( சென்ற பிறவியில் ஜயந்தனாக இருந்தவன். தவநெறியில் மாறுபட்டவன் ) வீடு பேறு பெற்ற சஞ்சயந்த முனிவரே சென்ற பிறவியில் தன் அண்ணனாக இருந்தவர் என்பதை உணர்ந்து கொண்டான்.

அவரைப் பணிந்து வணங்கினான். சஞ்சயந்த முனிவர்க்கு வித்துத் தந்தன் செய்த தீவினைகளை அவதி ஞானத்தால் உணர்ந்தான் தரணேந்திரன்.

இதனால் வித்துத் தந்தனைத் தாக்கினான். மற்றவர்களை நாக பாசத்தால் நடுக்கடலில் தள்ளுவேன் எனவும் கூறினான். அவர்களோ நாங்கள் அறியாமல் செய்துவிட்டோம்.

எங்களுக்கு முனிவர் ஒரு அரக்கன் எனக் கூறிவித்துத் தந்தன் பொய்யுரைத்து ஏமாற்றி விட்டான். அவன் மேல் கோபத்தைக் காட்டுங்கள் என்று கூறினர்.

தரணேந்திரன் வித்துத் தந்தனை நாக பாசத்தால் கட்டினான். அந்நேரத்தில் சஞ்சயந்த முனிவரின் பரிநிர்வாண பூஜையில் கலந்து கொண்ட ஆதித்யா பன் என்னும் கல்பவாசி தேவன் ஒருவன் வந்தான். தரணேந்திரனைக் கண்டான். அவனைப் பார்த்துக் கூறுவான். ஆதி தீர்த்தங்கரரான

புரு என்னும் இடப தீர்த்தங்கரர் துறவேற்று வரும் காலத்தில் நமி, விநமி என்னும் இருவர் அவரைக் காண வந்திருந்தனர். அவர்கள் அவரை நோக்கி நாடு, செல்வங்களை பிறர்க்கு என்று நிறைய வழங்கியுள்ளீர்கள். அப்போது நாங்கள் இல்லை.

நீங்கள் மற்றவர்களுக்கு வழங்கியது போல் நாடு, நகரம், செல்வங்களை எங்களுக்கும் வழங்குங்கள் என்றனர். அவ்வாறு வழங்காவிட்டால் இங்கிருந்து செல்லவும் மாட்டோம் என்றனர்.

இக்காட்சியைக் கண்ட நீ துறவேற்று தவம் செய்யும் பகவானுக்கு இடையூறு செய்யாதீர், இவ்விடம் விட்டுச் செல்லுங்கள் என்றாய்.

---------------

வாமன முனிவரின் தத்துவக் காவியம் -14


சஞ்சயந்த முனிவரின் முக்திச்சருக்கம - 2


தொடர்ச்சி - 3

 விநமி,நமி ஆகிய இருவரும் நீங்கள் கூறியதைக் கேட்காமல் இருந்தனர். உடனே, பகவானிடம் என்ன தான் வேண்டுமென்கிறீர்கள்? எனக் கேட்க .

அவர்களோ, பகவான் அனைவருக்கும் வேண்டியதைக் கொடுத்துள்ளார். அவற்றைப் பெறவே நாங்கள் இங்கு வந்துள்ளோம் என்றனர்.

 துறவு நிலையில் உள்ள பகவானிடம் என்ன இருக்கும் என அவர்கள் உணரும்படி எடுத்துக் கூறினீர்கள்.

 மூவுலகத்திற்கும் தலைவனான பகவானிடம் ஒன்றுமில்லை என்று கூறும் நீங்கள், பைத்தியக்காரர் போலும் என்றனர்.

நீரோ கோபம் கொள்ளாது நாடனைத்தும் பரதனுக்குரியவை அவனிடம் பெற்றுக்கொள்ளுங்கள் என்றாய்.

 அவர்களோ, இதைக் கூறவே உங்களை அனுப்பி வைத்தார்களா? எனக் கேட்டனர். அதுமட்டுமின்றி மேலோர் போற்றும் பகவானிடமிருந்து சிறிய பொருளையேனும் பெற்றால் போதுமென்று கூறினர். மற்றவர்களிடமிருந்து உலகத்தையே பெற்றாலும் பகவானிடமிருந்து பெற்றதற்கு ஈடாகுமோ என்றனர்.

 உடனே நீ பகவானிடம் சென்று ஏதோ கேட்பது போல் பாவனை செய்து திரும்பினாய். அவர்களிடம் நீ பகவான் உங்களுக்கு வேண்டியதைக் கொடுத்து விடு என்று கூறினார் என்றாய். நீயும் அவர்கள் விரும்பியவாறே நாடு, நகரங்கள் என கொடுத்தருளினாய்.

நாட்டில் உள்ளவர்களையும் இவர்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் எனவும் ஆணையிட்டாய்.அத்தகு வி நமி குலத்திலே பிறந்தவன் தான் இந்த வித்துத் தந்தன் என்பதை அறிவாயாக எனதரணேந்திரனுக்கு கூறி முடித்தான் கல்ப வாசி தேவன்.

தரணேந்திரனே, நஞ்சை தருகின்ற மரமானாலும் தன்னால் நடப்பட்டதை எவராய் இருந்தாலும் அழிப்பரோ? ஆகவே, உங்களால் நிலைக்கச் செய்த விஞ்சையர் குலத்தை நீங்களே அழிக்க நினைப்பது தர்மமாகுமா? எனக் கேட்டான் ஆதித்யாபன்

வீத சோகத்தில் ஆட்சி செய்த வைஜயந்த மன்னனின் மகனாவான் சஞ்சயந்தன்.அவனோ வினைகளை ஒழித்து மா முனிவனாக இருந்தான். அவன் எனது அண்ணனுமாவான். அவருக்கு துன்பம் செய்தவர் யாராக இருந்தாலும் விடமாட்டேன் என்று கூறினான் தரணேந்திரன்.

 கல்ப வாசி தேவன் தரணேந்திரனை நோக்கிக் கூறுவான்.
-------------------- 

வாமன முனிவரின் தத்துவக் காவியம் -  15


சஞ்சயந்தன் முக்திச் சருக்கம் (தொடர்ச்சி - 3 )


 தரணேந்திரனே கேள், நஞ்சை தருகின்ற மரமானாலும் தன்னால் நடப்பட்டதென்றால் எப்படிப்பட்டவரும் அழிக்கத் துணிவார்களா ?ஆகவே, உங்களால் உருவாக்கப்பட்ட விஞ்சையர் குலத்தை நீங்களே அழிக்கலாமா?

இல்லை தேவனே.வீத சோகத்தில் ஆட்சி செய்த வைசயந்த மன்னனின் மகனே சஞ்சயந்தனாவான். அவன் துறவேற்று வினைகளை மா முனியானான். அவனோ, எனது அண்ணன். அவருக்கு துன்பமிழைத்தவர் எவராக இருந்தாலும் அவர்களை அழிப்பேன் என்றான் தரணேந்திரன்.

கல்ப வாசி தேவன் தரணேந்திரனை நோக்கி கூறுவான் ,தரணேந்திரனே இந்த சஞ்சயந்தன் இப்பிறவியில் அண்ணனாக பிறந்ததை மட்டும்தான் நீ அறிந்துள்ளாய்.

இதற்கு முன்னர் எத்தனை பிறப்புகள் எடுத்திருப்பார் யார் அறிவார்?எனவே, கோபம் கொண்டு தீவினையைச் சேர்க்க வேண்டாம்.

 உண்மையை உள்ளவாறு அறிந்தால், இவ்வுலகத்திலுள்ளவர்கள் அனைவரும் நமது உறவினர்களே அன்றி வேறில்லை என்பதைத் தெரிந்து கொள்.

உனக்கி வன் தமைய னாய பிறப்பு நீயறிந்தது ஒன்றே
உனக்கு முன் இவனும் ஆய பிறப் பெண்ணின்
உரைக்க லாற்றா
வினைக்கு வித்திட்ட
வேண்டா வெகுளியைப்
பெருக்க மெய்ம்மை
நினைத்திடில் சுற்றமன்றி நின்றவர் இல்லை கண்டாய்
(மே - ம.பு - 207)

கடலலையினால் மாறி மாறித் திரளும் மணலைப் போலவும், வீசும் காற்றினால் வினாடிக்கு ஓர் இடம் மாறும் சருகுகளைப் போலவும், நமது நிழல் நம்மை விட்டு விலகாதது போலவும், அது போல நம்மிடம் வினைப் பயனால் மாறி மாறி வருவதன்றி உறவு முறை நம்மிடம் என்றும் நிலைத்ததில்லை.

 மின்னலைப் போல அளவற்ற முறைகள் பிறந்தும், இறந்தும் உழல்கின்ற உயிர்களுக்குள் உறவில்லாதவை இம்மூவுலகிலும் இல்லை. அப்படியே தொடர்ந்தாலும் உறவுகள் நிலையானவையல்ல.

ஒரு பிறவியில் நெருங்கிய உறவானவர் அடுத்த பிறவியில் பகைவராகவும், பகைவரே மறுபிறவியில் நண்பராகவும், இதுபோல் பகை, உறவு, நட்பு என்ற சுழற்சியில் மாறி மாறித் தோன்றுவர். எனவே எவரும் ஒரே நிலையில் இருப்பார்கள் என எண்ணாதே.

உற்றவ ரேஉறு  பகைஞர் ஆகுவர்
செற்றவ ரேசிறந் தாரு  மாகுவர்
மற்றவ ரேமறித் திரண்டு மாகுவார்
அற்றவர் ஒருவர் இங்கு யாருமில்லையே _ (மே.ம.'பு - 210)

சுற்றமும், பகையும் என்று நிலைப்பன அல்ல என்பதை உணர்ந்தவர்கள் மெய்யறிவாளர்கள் அவர்கள் மனிதப் பிறவியை ஆசையையும், செற்றத்தையும் அடியோடு நீக்கிச் சமநிலையில் நிற்பர்.

இதுவரை கணக்கற்ற பிறவிகளில் இந்த அருந்தவனாகிய சஞ்சயந்தன் உனக்குப் பகைவளாக இருந்த துண்டு மேலும் இந்த வித்துத் தந்தன் உறவாக இருந்தான். இந்நிலையில் உறவோ, பகையோ எதுவும் நிலையானதல்ல. இதற்கு முன்பு எடுத்த பிறவிகள் அனைத்திலும் வித்துத் தந்தன் உனக்குப் பகைவன் இல்லை.

சஞ்சயந்தன் உனக்கு உறவாயும் இருந்ததில்லை. நீ இப்படி விருப்பு, வெறுப்புடன் இருப்பாயானால் முற்பிறவிகளில் இருந்த பகை உறவுக்கு நீ செய்யப் போவது என்ன? ஆராய்ந்து சொல் எனவே அமைதியாய் இருப்பாயாக என கல்ப வாசி தேவன் தரணேந்திரனுக்கு கூறினான்.

------------------

வாமன முனிவரின் தத்துவக் காவியம் - 16


 சஞ்சயந்தனின் முக்திச் சருக்கம் தொடர்ச்சி - 4


ஆகவே, தரணேந்திரனே வித்துத் தந்தனை விடுதலை செய்க. முற்பிறவியில் இவனுக்கும் முனிவருக்கும் தோன்றிய கொடிய, அதாவது எலும்பினுள் ஊடுருவிய பகைமையே
இந்நிலைக்குக் காரணமாகும்.

ஆதலால் நமது உண்மையான பகைக்குக்கு காரணம் வெகுளியே காரணமாகும். மேலும் நமக்கு வரும் தீமைகளுக்கு நாம் செய்த வினைகளே காரணமாகின்றன.
 இத்தீவினையே அன்புடையவர்களைப் பகைவனாக மாற்றுகிறது. ஆகவே சினமே இகழத்தக்கதாகும்.

அடுத்து இந்த வித்துத் தந்தன் அரசனுக்கு செய்த கொடுமைக்கு காரணம் இவன் செய்த  தீமைகளே காரணமாகிறது
வித்துத் தந்தன் ஒவ்வொரு பிறவியிலும் வைராக்கியத்தால் சஞ்சயந்தனுக்கு துன்பம் தந்து விண்ணுலகு அடையச் செய்தான்.

அதற்கெல்லாம் நீ என்ன செய்யப் போகிறாய்?
சஞ்சயந்த முனிவர் இவன் செய்த கொடுமைகளைப் பொறுத்ததால் வீடுபேறடைந்தார்.

விஞ்சையன் செய்த தீமைகள் சஞ்சயந்த முனிவர்க்கு நன்மையாகவே முடிந்தன.
அதனால் தீராப் பழியைத் தேடிக் கொண்டான் விஞ்சையன்.

இவற்றை நோக்கும்போது விஞ்சையன் செய்த தீமை கொடிய தீமையாய் இருந்தாலும் சஞ்சயந்த முனிவருக்கு நன்மையாகவே முடிந்தது.

இவற்றையெல்லாம் கேட்ட தரணேந்திரன் முற்பிறவிகளில் விஞ்சையன் செய்த கொடுமைகளை எடுத்துக் கூறுக என்றான்.

தரணேந்திரனே உன்னுடைய கோபத்தீயை அருளாகிய நீரால் தணியச் செய்து பகவானை வணங்குக. அனைத்தையும் கூறுகிறேன் என்றான் கல்ப வாசி தேவன்.

இதனால் தரணேந்திரனின் கோபம் தணிந்தது.

மேலும் ஆதித்யா பன் சொல்லுவான், தரணேந்திரனே வீடு பெற்ற முனிவனும், நீயும், நானும் இந்த வித்துத் தந்தனை விரும்பியவர்களாய் இருந்த பிறவி முதல் இன்று வரை நிகழ்ந்தவற்றை ஒன்று விடாமல் கூறுகின்றேன் கேட்பாயாக என்று கூறத் தொடங்கினான்.

 சஞ்சயந்தன் முக்திச் சருக்கம் நிறைவுற்றது.

------------ 


பத்திரமித்திரன் அறங் கேள்விச் சருக்கம் -3 (1)


உலகின் மையப் பகுதியான மேரு மலையில் சம்புத் தீவு இருந்தது. அத்தீவினிலே பரத கண்டத்தில் சீயமாபுரம் என்னும் நகரம் இருந்தது. இந்நகரை சீயசேனன் என்பவன் ஆண்டு வந்தான். இவனது மனைவி இராமதத்தையாவாள்.
இவனது அமைச்சன் ஸ்ரீபதி என்பவனாவான்.

இவன் நான்கு வேதங்கள், அறுவகை நீதி நூல்கள் பதினெட்டு புராணங்கள் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தவன்.
ஆகவே, மக்கள் இவனை சத்திய கோடன் என்றே அழைக்கும் படி நடந்து கொண்டான்.

அதே நாட்டில் பத்ம சண்டம் என்னும் நகரில் புலவர்களை ஆதரிக்கும் வள்ளல் சுதத்தன் என்னும் வணிகன் வாழ்ந்து வந்தான். இவனது மனைவி சுமித்திரையாவாள்.

தன்னை நோக்கி வருபவரின் வறுமையை நீக்கி வந்தான். இதனால் எமது குறை தீரும் வண்ணம் பிறந்தஇவனது புகழ்மிக்க பெயர் பத்திரமித்திரன் எனச் சூட்டி அனைவர்க்கும் அறிவித்தான்.

தன்னுடைய வருமானம் குறையவே வணிகத்தை பெருக்கும் எண்ணத்தோடு பண்டங்களை ஏற்றிக்கொண்டு அயல்நாடு சென்றான்.
பெரும் செல்வத்தையும் ஈட்டினான்.

ஒருவனது புண்ணிய வினையானது பயன் தரத் தொடங்கினால், கணக்கற்ற செல்வங்கள் வந்து சேரும் என அருகப் பெருமான் அருளியுள்ளார். அதற்கு எடுத்துக் காட்டு பத்திரமித்திரனே எனக் கூறலாம்.

புண்ணியம் உதயம் செய்த போழ்தினில்
எண்ணி லாத பொருட் குவை யாவையும்
நண்ணும் என்றருள் நாதன் உரையினுக்கு
அண்ண லே எடுத் தீடது வாயினான்.
(மே.ம.பு.- 238)

பெரும் பொருள்களோடு அவன் சீயமாபுரம்  வந்து சேர்ந்தான். அங்குள்ள வணிகர்கள் அவனை எதிர்கொண்டழைத்தனர்.
அந்நகரின் சிறப்பை உணர்ந்த பத்திரமித்திரன் அங்கேயே தங்க முடிவு செய்தான். அந்நகரின் அமைச்சன் சத்திய கோடன் நேர்மையும், நாணயமும் மிக்கவன் என்பதைக் கேள்விப்பட்டான்.

 தான் சேர்த்து வந்த இரத்தினங்களை செப்பும் பேழையில் வைத்து முத்திரையிட்டு அதை அமைச்சனிடம் தந்தான். அமைச்சனும் யாரும் அறியா வண்ணம் வாங்கி வைத்துக் கொண்டான்.

 நான் வரும் வரை தங்கள் பாதுகாப்பில் வைத்திருங்கள் தன் நகரான பத்ம சண்டம் செல்கிறேன். வந்தவுடன் பெற்றுக் கொள்கிறேன் எனக் கூறிச் சென்றான்.
----------------------



பத்திரமித்திரன் அறங் கேள்விச் சருக்கம் _ (தொடர்ச்சி - 2)


 பத்மசண்டம் சென்ற பத்திரமித்திரன் தன் சுற்றத்தாருடன் சீயமாபுரம் வந்து சேர்ந்தான். அமைச்சரைச் சந்தித்தான்.

 அய்யா, நான் தந்த செப்புப் பேழையைத் தருக எனக் கேட்டான்.


 அவனோ, நடுநிலைத் தவறினான். தனது புகழ் கெடவும் , மேலான அறிவு கெட்டதோடு, இணையற்ற மனிதப் பிறப்பின் மாண்பையும் கெடுத்துக் கொண்டான்.செப்பினுள் உள்ள இரத்தினங்கள் மேல் கொண்ட பற்றின் காரணத்தால் தகுதியில்லாதவற்றைக் கூறத் தொடங்கினான

்.யார் நீ? எங்கு இருக்கின்றாய்? எங்கே போகின்றாய்? என அமைச்சன் பத்திரமித்திரனை நோக்கி கேள்விக் கணைகளைத் தொடுத்தான்.

 தங்களிடம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள் என இரத்தினச் செப்புப் பேழையைத் தந்தேனே என்றான்.

 அமைச்சனோ, என்ன அது? விவரமாகச் சொல் எனக் கேட்டான். நீ என்ன பைத்தியமா? எனவும் கேட்டான். நான் என்றுமே உன்னைக் கண்டதில்லை. அதற்குச் சான்று உள்ளதோ? என்றும் கேட்டான்.

 உயர்ந்தவனே மிகவும் நன்று. சத்தியக் கோடராகிய உம்மைத் தவிர வேறு சான்று இல்லை. இப்படிச் சான்று கேட்பாய் என அறியாமல் இருந்து விட்டேனே, என்றான் பத்திரமித்திரன்.

 கண நேரத்தில் கண்களை மூடிக்கொண்டு கதறும் வண்ணம் பிணமாக மாறக் கூடிய நிலையில்லாத வாழ்க்கையில் நாட்டம் கொண்டு உண்மை அணிகளான உயர் அறிவு, புகழ் இவை கெடு மாறு இந்த செல்வத்தின் மீது ஆசை கொள்வது எவ்வளவு அறியாமை

ஒருவர் செய்த நன்றியைச் சிதைப்பதும், நம்பியவர்களை மோசம் செய்வதும், பிறர் மனை மேல் ஆசை கொண்டு சேர்ந்து மகிழ்வதும் ஆகிய இது போன்ற செயல்களை செய்வோர் அடையும் பழியினை உணர மாட்டீரா.

 பிறர் பொருள் மேல் ஆசை கொள்வதும், அதைப் பறித்துக் கொள்வதும், பிறருக்குக் கொடுப்பதும், மாற்றி விடுவதும் ஆகிய செயல்கள் பாபம் அல்லவா? மற்றும் பேழையை கவர்ந்ததோடு அதன் மீது கொண்ட ஆசையினால் நீதிக்கும் புறம்பானவற்றை பேச வேண்டாம் என பத்திரமித்திரன் பேசி முடித்தான்.


பிறர்பொருள் வைத்தல் கோடல் பிறர்தமக் கீதல் மாற்றல் / மறமென அன்று சொன்ன வாய்மொழி மறந்திட் டீரோ / திறமவது உரைக்க வேண்டாம் செப்புக் கொண் டிருப்ப தன்றி /முறை முறை பித்த னாக்கி முடிந்தனீர் மோகத் தாலே _ (மே.ம.பு _260)

--------------------  

 பத்திரமித்திரன் அறங் கேள்விச் சருக்கம் _ (தொடர்ச்சி .3) 


பத்திரமித்திரன் கூறியதைக் கேட்ட சத்திய கோடன் கோபமுற்று அவனை அடித்துத் துரத்தினான். 

பத்தி ரமித்திரனோ தெருவில் செல்வோரிடம் எல்லாம் முறையிட்டான்.

 சத்திய கோடனை உத்தமன் என நினைத்தேன் அவனோ என்னை பைத்தியக்காரனாக்கி விட்டான். 

என் மணிச் செப்புப் பேழையை சத்திய கோடனிடம் ஒப்படைத்தேன். அவனோ, என்னை ஏமாற்றி விட்டான் என அரசனிடம் கூறினான்.

 உடனே, அரசன் அமைச்சரிடம் வணிகன் நிலை பற்றிக் கேட்டான்.

 அரசே, அவன் ஒரு பைத்தியக்காரன். அவனைப் பார்த்ததும் இல்லை என்றான் சத்திய கோடன் .

அவனாகவே மணிச் செப்பை கொடு என்றான். இப்போது என்னை திருடன் எனவும் கூறி வருகிறான் என்றான் அமைச்சன் .

  திருட்டினால் வரும் தீமைகளை எடுத்துரைத்தவனான நானே அவ்வாறு செய்வேனா என மன்னனிடம் சொன்னான் அமைச்சன் .

அரசனும், மக்களும் அமைச்சன் கூறுவதை உண்மை என நம்புகின்றனரே என பத்திரமித்திரன் நினைத்தான். 

அமைச்சன் தன் ஏவலாளர்கள் மூலமாக பத்திரமித்திரனை அடித்து துரத்தினான்.

 பத்திரமித்திரன் புலம்பி வருதலைக் கவனித்த அரசி முன்னுக்குப்பின் பிழையில்லாமல் கூறுவதால் உண்மை இருக்க வேண்டும் என நினைத்தாள்.

அரசனிடம் இவ் வணிகனின் புலம்பலைக் கேட்காமல் இருப்பது நல்லதல்ல என்றாள்.

 அப்படியென்றால் நீயே கேட்டறிக என்றான் அரசன்.

 வேந்தனே, அமைச்சனுடன் சூதாடுவதற்கு அனுமதி தருக என்றாள் அரசி.சத்திய கோடனைசூதிலே வென்று, உண்மையை நிலைநாட்டுகிறேன் என்றும் கூறினாள்.

 சூது தொடங்கியது.அரசியிடம் சூதாடிய அமைச்சன் பல பொருள்களை இழந்தான். இறுதியாக பூணூலையும், மோதிரத்தையும் அமைச்சனை வைக்கச் செய்து அரசி வென்றாள்.

இராமதத்தை அமைச்சனிடம் வென்ற பூணூலையும், மோதிரத்தையும் செவிலித்தாயான நிபுணமதியிடம் கொடுத்தாள் அவளை அமைச்சனின் கருவூலத் தலைவனிடம் அனுப்பி வைத்தாள். 

நிபுணமதி பூணூலையும், மோதிரத்தையும் கருவூலத் தலைவனிடம் காட்டினாள்.

 வணிகனின் செப்புப் பேழையை அமைச்சர் வாங்கி வரச் சொன்னார்.

 இது மிகவும் அவசரம் எனவும் எனக் கூறினாள் நிபுணமதி.

கருவூலத் தலைவன் அவற்றைப் பெற்றுக்கொண்டு வணிகனின் இரத்தினப் பேழையை நிபுணமதியிடம் கொடுத்தான். 


நிபுணமதி அதனை அரசியிடம் ஒப்படைத்தாள் .அரசி, அரசனிடம் பேழையைக் கொடுத்தாள். 

--------------------- 

 பத்திரமித்திரன் அறங் கேள்விச் சருக்கம் _ 3

 (தொடர்ச்சி) 

அரசன் அமைச்சன் செயல்களைக் கண்டு வெறுப்புற்றான். அவனின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 அமைச்சனுக்கு நகரின் மையப்பகுதியில் முப்பது சாட்டை அடிகள் தண்டனையானது. மூன்று சட்டிகள் எருதின் சாணம் கரைக்கப்பட்டு அவன் தலை மேல் ஊற்றப்பட்டது.

 இவை நாபி மன்னன் (ரிஷப பகவானின் தந்தை) காலத்தில் கொடுக்கப் பட்ட தண்டனைகளாகும். அமைச்சன் நாட்டை விட்டே துரத்தப்பட்டான். 

அன்று காலை தேவன் என அமைச்சனைப் புகழ்ந்தவர்கள் பிற்பகலில் பேயன்என இகழ்ந்தனர்.

 எனவே, மற்றவர் பொருள் மேல் ஆசை கொண்டால் துன்பம் உண்டாகும். ஆசையே உயர்ந்தது உறுதியானது என்று ஆசை கொண்டவர்களை அதுவே அவர்களைத் துன்பக் கடலில் தள்ளும் பிறப்பினைத் தரும்.

 ஆசையை ஒழிப்பதே தனது ஆசை என்றிருப்பவர்களை அவ்வாசையானது நீங்கித் துன்பக் கடலிலிருந்து நீக்கிப் பிறவி சூழலிருந்து விடுபட வைக்கும். இதை உணருங்கள்.

பற்றினைப் பற்றி னாலே பற்றெனப் பற்றி னாரைப் / பற்றுதான் இடும்பை நீருள் பரியட்டம் தன்னை ஆக்கும் / பற்றினைப்  பற்றி லாமை பற்றெனப் பற்றி னாரைப் / பற்று விட்டு இடும்பை நீருள் பரிய ட்டம் ஒழிக்கும் கண்டீர் _ (மே.ம.பு 323)

 மோகனீய கர்மத்தால் உண்டாகும் ஆசையே பிறவிக்கு நல்லதோர் வித்து. அந்த ஆசைதான் மற்ற வினைகளையும் சேர்க்கக் கூடும். வீடு பேறடைய தடையாவதும் ஆசைதான். அதுவே உயிர்களுக்கு பெரும் பகையாகும். ஆசையே விலங்கு, நரகக் கதிக்குக் காரணமாகின்றது. அறத்தை நீக்குவதோடு, கொடிய தீவினையை சேர்ப்பதற்கும் துணையாகிறது. மூவுலகிலும் சக்தி வாய்ந்தது நிறைவு பெறாதது ஆசையே எனலாம்.இவ்வாசையை ஒழித்தவர்களே முனிவர்கள் ஆவார்கள்.

 மோகமே நிறையா நிறையாயது / மோகமே மூவுலகின் வலியது / மோகமே முனிமைக்கிடை யூறது / மோகமில்லவர் நல்ல முனிவரே. _(மே.ம.பு.326)

வானவில் மறைவது போல் அமைச்சனிடமிருந்த செல்வமும் ,சுற்றமும் அவனை விட்டு நீங்கின. நாட்டை விட்டு அமைச்சன் வெளியேறிய போது மக்கள் ஆசையினால் வரும் கேட்டைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள்.


இதனால் அமைச்சன் அரசன் மீது கோபம் கொண்டான்.
 இழந்த செல்வங்களை எப்போது பெறுவோம் என எண்ணத் தொடங்கினான். 

----------------  

பத்திரமித்திரன் அறங் கேள்விச் சருக்கம் - 3

தொடர்ச்சி..

துயருற்ற அமைச்சன் மன்னன் மற்றும் பத்திரமித்திரன் ஆகிய இருவர் மீதும் அளவற்ற கோபம் கொண்டான். இதனால் பாவகர்மமானது அவன் உயிரோடு இறுகி அவனது வாழ்வும் முடிந்தது.

ஒளியுடன் எரியும் விளக்கானது அணைந்தால் இருள் சூழ்வது போல் மனித வாழ்வு முடிந்தவுடனே விலங்குப் பிறவுக்குரிய வினை செயல்படத் துவங்கியது. அவன்  சீயசேய மன்னனது கருவூலத்திலே அகந்தன் என்னும் பாம்பாகப் பிறந்தான்.

 ஆகவே, அமைச்சனைப் போல் ஆசையும், செற்றமும் கொள்ளாது அவற்றை விலக்குங்கள். அவற்றால் அமைச்சன் பல பிறவி எடுத்து அல்லலுற்றான். ஒருவனுக்கு அளவற்ற செல்வம் இருந்தாலும் அவற்றால் நிறைவடையாமல் பிறர் செல்வத்தின் மீது ஆசை கொண்டு அதை அடைய முயல்வது களவாகும்.

களவானது காரியக் களவு, காரணக் களவு என்று இருவகைப்படும்.

மிகுந்த செல்வம் பெற்றிருந்து மற்றவரின் செல்வத்தைக் கவர நினைத்தால் காரியக் களவாகும்.

இல்லாமை காரணமாக மற்றவர்கள் செல்வத்தைத் திருடுவது காரணக் களவு எனப்படும்.

காரியக் களவில் ஈடுபடுவோர் நேர்மையிலிருந்து நழுவியராவர், தாங்கள் மற்றவர்களிடமிருந்து தாங்கள் பெறுவதை அதிகமாகப் பெறுவர், மற்றவர்க்கு கொடுப்பதை குறைவாகக் கொடுப்பர். 
இத்தகு இழிசெயலைச் செய்யாமல் இருக்க மாட்டார்கள். நல்ல செயல்களில் செல்ல முயற்சி செய்ய மாட்டார்கள்.

 காரணக் களவில் ஈடுபடுபவர் பொருளாசையால் நீரிலே செல்லும் மீனைப் போல அவர்கள் செல்லும் வழியை அறிய முடியாது, கன்னம் முதலியவற்றால் திருடத் துணிவர், திருட்டு நூலில் கூறியவாறு உடலை ஒடுக்கி நுழைந்து கொள்ளையடிப்பர்.

இருவகைக் களவில் ஈடுபடுவோர் தாங்கள் சேர்த்து வைத்துள்ள செல்வத்தையும் இழப்பர். அழகு, புகழ், தயவு, சுற்றம் முதலியவற்றையும் இழக்கச் செய்யும், இறுதியில் உயிருக்கே ஊறு விளையும்.

 பெருமை, ஆக்கம் நல்ல கதியில் செல்லுதல் ஆகியவற்றை ஒழித்துத் திருமகளின் அருளும் கிடைக்காது. களவு செய்வோர்க்கு அதிகமானத் தண்டனைகளும் வழங்கப்படும். 

களவுத் தொழிலில் ஈடுபடுவோர் மறு பிறவியில் நரகத்தே செல்வர். விலங்கு பிறவி எய்துவர். ஒரு வேளை உணவுக்கும் வழியற்ற வறுமை இல்லத்திலே பிறப்பர். பிச்சை எடுத்தாலும் யாரும் தர மாட்டார்கள். ஈன்ற தாயே வெறுப்பர். எனவே களவை எவரும் செய்யற்க. 


அமைச்சன் இரு களவுகளையும் செய்தமையால் அமைச்சர் பதவியையும், பெருஞ்செல்வத்தையும் இழந்தான்.மன்னன் வஞ்சம் நிறைந்த அமைச்சனின் செயலைக் கண்டு வருந்தினான். துமிலன் என்னும் அந்தணனை அமைச்சராக்கி, நடுநிலை தவறாது ஆட்சி செய்து வந்தான் மன்னன்.

----------------- 


பத்திரமித்திரன் அறங் கேள்விச் சருக்கம் -3

தொடர்ச்சி

ஒரு நாள் பத்திரமித்திரன் அதிங்கவனம் என்னும் காட்டிற்குச் சென்றான். அங்குள்ள விமல காந்தாரம்  என்னும் மலையில் வரதர்மா என்னும் முனிவரைக் கண்டு வணங்கினான். 
அவரிடம் வினைகள் நீங்கச் செய்யும் அற தர்மத்தை அருளுங்கள் என்றான்.

அவர் நற்காட்சி, நல் ஞானம், நல்லொழுக்கம்  ஆகிய மும்மணிகளைஅணிந்தவர்மன , வசன , காயங்களில் அடக்கத்தையும் ஐவகையான சமிதிகளையும் ஏற்று ஒழுகியவர். 

முன்னும், பின்னும் பார்த்து நடத்தல் (ஈர்யா)

அளவோடு இன் சொற்களைப் பேசுதல் ( பாஷணா )

உணவை அறிந்து அளவோடு உண்ணுதல் (ஏஷணா)

பொருள்களைக் கையாளும் போது கவனமாகக் கையாளுதல் நுண்ணுயிர்களுக்கும் ஊறுவிளைவிக்காமல் கவனமாக இருத்தல் (நி ஷேப )

மலம், சிறுநீர் சோதித்துக் கழித்தல் (உத் சர்க்க)

 ஆகியவை ஐவகை சமிதிகளாகும்.

இல்லறத்தில் நிற்போர் உயிர்களிடத்து அன்பு செலுத்துதல்,
 ஞானத்தைத் தரும் ஆகமங்களைத் தருதல்
 இருக்க இடம் அளித்தல்,
 நால்வகைத் தானங்களைத் தருதல்,
பகவானை பூசையுடன் வணங்குதல்,
இறைவன் அருளிய அறங்களை ஐயமின்றி உணர்தல்,
உயர் ஒழுக்கங்களை மேற்கொண்டால் பிறிவிப் பிணியைப் போக்கும் மருந்தாகும்.

நான்கு வகை தானங்கள்.

1. அபய தானம் : உயிர்களிடத்து அன்பு காட்டுதல், அண்டி வருவோர்க்கு இருக்க இடம் அளித்தல், அவர்களுக்கு தேவையான உதவிகளை யும் செய்தல்.

(2) ஆகம தானம்:  காட்டி உயிருக்கு பாதுகாப்பு தரும் , துக்கம் கெடுக்கும் நல்ல நூல்களைவழங்குதலும் அந்நூல் கருத்துகளை எடுத்துரைப்பதேயாகும். 

3. அன்னதானம் : (ஆகார தானம்)
வறுமையில் வாடுவோர் , பணியாளர்கள், முதியவர்கள், ஊனமுற்றோர் போன்றோர்க்கு உணவு வழங்குதல் அன்னதானமாகும்.

 4.ஒளஷத தானம்,
 வறுமை நிலையில் உள்ளவர்களுக்கும், நோயாளிகளுக்கும், மூப்படைந்தவர்களுக்கும் மருந்துகளைக் கொடுத்தல் இவை அனைத்திலும் மேலானது முனிவர்க்கு ஆகார தானமளித்தல் மேன்மையானதாகும்.

ஊன் உண்பவர்களுக்கு அளிக்கும் தானம் இடைநிலை எனவும், ஊன் உண்பவர்க்கு அளிக்கும் தானம் கடைநிலை தானம் எனப்படும். தக்கார்க்கு அளித்தலே சிறந்ததானமாகும்.

ஊன், தேன், கள் இவற்றுடன் தாங்கள் விரும்பும் மற்றவைகளையும் கொடுப்பது தானம் என்றும், தேவைப்பட்டால் தன் உடல் உறுப்புகளையோ தன்னையோ கொன்று தனது ஊனை மற்றவர்க்கு அளிக்கவும் துணிந்தவர்கள் தங்கள்  மனம் போல் செய்வர். 


அடுத்து கர்மங்களை வென்ற இறைவனின் தன்மைகளைத் தனதுள்ளத்தே நினைத்து பூசை செய்தல் பூசையாகும். 

------------ 


பத்திரமித்திரன் அறங் கேள்விச் சருக்கம் - 3

தொடர்ச்சி.. 

இறைவனையும், முனிவனையும், இறைவனால் அருளப்பட்ட நூலையும் உணர்ந்து கொள்ளுதலே நற்காட்சி எனப்படும். 

நற்காட்சியினால் வீட்டுலகம் கிட்டும். மேலும் அக்காட்சியானது எண்வகைச் செருக்குகள் , மும்மூடம், ஆறு அவிநயம் ஆகியவற்றையும் நீக்கி அறத்தை விளக்கிக் கூறுதல் முதலிய எண்வகைத் தன்மைகளைப் பெற்று நிறைபெறும் என முனிவர் பத்திரமித்திரனுக்கு கூறினார்.


 எண்வகைச் செருக்குகள்: 


1. ஞானம் : நானே அறிவில் உயர்ந்தவன். என்னைப்போல் எவரும் இல்லை என நினைக்கும் ஞான மதம்.

 2. பூஜா மதம்:  பூஜைகளை செய்வதிலும், முனிவர்களை ஆதரிப்பதிலும் தானே சிறந்தவன் என எண்ணும் பூஜாமதம்

3. தனது குலமே (தந்தை வழி) உயர்ந்தது என எண்ணுதல்

4. தனது ஜாதியே உயர்ந்தது என கர்வம் கொள்ளுதல் (தாய் வழி வருவது) 

5. தானே பல சாலி எனவும். எனவும்.மேலும் சுற்றம் முதலிய வலிமையுடையவன் எனச் செருக்கடையும் பல மதம். 

6. நானே பணக்காரன் என அகந்தை கொள்ளும் செல்வ மதம்.

7. தியானம், தவம், விரதம் , உபவாசம் முதலியவைகளைக் கடைபிடிப்பதில் எனக்கு நிகரானவர் எவருமிலர் என எண்ணுவது மதம்

8. அழகில் சிறந்தவன் என எண்ணுவது வனப்பு மதமாகும் இந்த எண்வகைச் செருக்கு களும் நற் காட்சியாளரிடம் இருக்கக்கூடாது.

மும் முடங்கள் :-

1. லோக மூடம் : மலையிலிருந்து விழுதல், நெருப்பில் பாய்ந்தும், ஆறு, குளங்களில் குளித்தால் புண்ணிய முண்டாகுமென்றும், மோட்சம் அடையலாம் எனக் கருத்துதல் லோகமூடம்.

2. தேவ மூடம் : வாழ்விப்பர் தேவர் என மயங்குதல் தேவ மூடமாகும்.

3. பாசண்டி மூடம்: மித்யா துறவியரைப் போற்றுதல் பாசண்டிமூடம்.

இம்மூன்று மூடங்களும் நற் காட்சியாளரிடம் இருக்கலாகாது

ஆறு அவிநயம் 

பணியக்கூடாத வரைப்பணிதல்   அவிநயமாகும்.

1. மித்யா தேவன் 2.மித்யா ஆலயம் 
3. மித்யா சாஸ்திரம்
4. மித்யா குரு 
5. மித்யாதபம்
 6. மித்யா தபஸ்வி

 என்னும் பொய்க் காட்சி உடைய தேவன், பொய்க் காட்சி உடைய நூல்களை  பொய் தபத்தைக் கைக்கொள்வதும் ஆகிய இந்த ஆறும் அவிநயம் ஆகியவற்றையும் நீக்கி அறத்தை விளக்கிக் கூறுதல் முதலிய எண்வகைத் தன்மைகளைப் பெற்று நிறைவு பெறும் என முனிவர் கூறினார்.

இறைவனும் முனியும் நூலும் யாதுமோர் குற்ற மில்லா 
நெறியினைத் தெளிதல் காட்சி யாம்அது நிறுத்தும் வீட்டில்
இறுகும் எண் மயம்மும் மூடம் ஆறு தீவினை மின்றி
 நெறி விளக் குறுத்தல் ஆதி எட்ட ங்கம் நிறைந்த தென்றான்.


மே.ம.பு. 355

------------------ 

பத்திரமித்திரன் அறங் கேள்விச் சருக்கம் - 3

தொடர்ச்சி..

முனிவர் மேலும் கூறலானார்.. 
அணு விரதங்கள் - 5,
குண விரதங்கள்- 3
சிட்சா விரதங்கள் - 4 ஆகிய பன்னிரு விரதங்களை மேற்கொள்ள வேண்டுமென்றார். 

அணு விரதங்கள் :

1. கொல்லாமை  எவ்வுயிர்க்கும் இன்னல் செய்யாமை. மேலும் மன, மொழி, செயல்களால் உயிர்களுக்கு ஊறு செய்தலைக் களைய வேண்டும். இல்லறத்தார், துறவறத்தார் ஆகிய இருவரும் கொல்லாமையை உயர் நெறியாக ஏற்க வேண்டும்

2. பொய்யாமை (வாய்மை) பொய் பேசுதலை என்று விலக்குதல், சாதுக்கள் பேசும் உண்மையே கூட பிற உயிர்க்கு தீங்கு தருமோ என நினைத்து அத்தகைய உண்மை பேசாது மெளனமாயிருப்பர். இதுவே வாய்மை என்னும் மகா விரதமாகும்.

3. கள்ளாமை.
பிறர்க்கு உரிய பொருளை அதற்குரியவர் விரும்பிக் கொடுக்கும் போது அவருக்குத் தெரியாமல் எடுத்துக்கொள்ளுதலோ பிறர் அறியாதவாறு அபகரித்த லோ கூடாது இவையே கள்ளாமை எனப்படும்.

4. பிறனில் விழையாமை :
தன் மனையின்றி பிற பெண்களிடம் சிற்றின்பம் நுகர நினையாமல் இருத்தல்

5. மிகு பொருள் விரும்பாமை:
தீய செயல்களுக்கு காரணமாய் அமைகிறது.இது எனக்கு என்னுடையது அடைய வேண்டும் என்ற பரிக்கிரஹங்களைக் களைதல் வேண்டும். தேவைக்கு மேல் பொருள்களை அடைய நினைத்தலையும் தவிர்த்தல் வேண்டும்.

குண விரதங்கள் -3

 1.திசைவிரதம் :
திக்குகளில் செல்லுதலை வரையறை செய்து கொள்ளல். 

2.தேச விரதம் :
விரதம் மேற்கொண்ட ஒருவர் ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கே மட்டுமே செல்வேன் என நியமம் எடுத்துக் கொள்ளல். 

3. அனர்த்த தண்டவிரதம் 
( பொருளற்ற செயல்களை விடுதல்) 
இது ஐந்து வகைப்படும். 
1. பயனில சிந்தித்தல் 
2 . பயனில் உரைத்தல் 
3. பயனில செய்தல் 
4. இம்சைக்குரிய பொருள்களை வழங்குதல். 5. தீய சாஸ்திரங்களைப் படித்தாலும், உரைத்தலும்.
 சிட்சா விரதம். 

சிட்சா எனில் பயிற்சி எனப் பொருள்படும்.

 சாமாயிகம், புரோஷ தோபவாசம் ,

போகோபபோக பரிமாண விரதம், அதிதிசம் விபாகம் ஆகிய நான்கும் சிட்சா விரதங்களாகும்

1. சாமாயிகம் - மனதில் தோன்றும் தீய எண்ணங்களை அகற்றி சமதா பாவம் கொண்டு ஆன்ம நலம் தரும் நற்சிந்தனையில் ஈடுபடுதல்.

2. புரோஷ தோபவாசம் : அஷ்டமி, சதுர்த்தசி, நாட்களில் விரதம் ஏற்றல்.

3. உபபோக கோப பரிமாண விரதம் : ஒரு முறை பயன்படுத்தக்கூடியவை  உணவு, சந்தனம் , தாம்பூலம்)போகப் பொருள். பலமுறை பயன்படுத்தக்கூடியவை உபபோகப் பொருள். கட்டில், பாய், ஆடை

4 .வையா விருத்தம் (அ) அதிதி சம்விபாகம்  துறவியரை ஓம்புதல் ஆகிய இவைகளை மேற்கொள்ளுமாறு பத்திரமித்திரனிடம் வரதமர் அருளினார்.

பெரிய கொலை பொய்களவு பிறர் மனையில் ஒருவல் 
பொருள் வரைதல் மத்தம்மது புலைசு உண வின் நீங்கல்  
பெரிய திசை தண்டம் இரு போகம் வரைந்தாடல் 
மரீஇய சிக்கை நான்கும் இவை மனை அறத்தார் சீலம்  
மே.ம.பு 356

பத்திரமித்திரன் அறங் கேள்விச் சருக்கம் நிறைவுற்றது. 

------------------  

பூரண சந்திரன் அரசியற் சருக்கம் (4) 


பத்திரமித்திரன் வரதர்ம முனிவரை வணங்கிசீய மாபுரம் நகரத்திற்கு வந்தான். 

தனது ஆற்றலுக்கேற்ப விரத ஒழுக்கங்களை மேற்கொண்டான்.

தனது செல்வங்களை வறியவர்களுக்கு வாரி வழங்கினான். இதனைக் கண்ட அவனது தாய் மகனே, பொருள்இல்லையென்றால் உன் மனைவியேஉன்னை வெறுப்பாள். எனவே, பொருளை வீணாக்காதே என்றாள்.

 ஆனால், பத்திரமித்திரன் செவிமடுக்கவில்லை. தன் மகனையே  அழித்தால் மட்டுமே தனதுசெல்வத்தைப் பாதுகாக்கலாம் என நினைத்தாள். அமைதி இழந்தாள்.இத்தகு தீய எண்ணத்தோடே மாய்ந்தாள். 

மறு பிறவியில் ஓர் வனத்தில் புலிக்குட்டியாகப் பிறந்தாள்.

அவ்வாறு புலிக்குட்டியாகப் பிறந்த அவள் நிலையானது, இருளற்ற இறைவனது ஆலயத்தில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கில் மயங்கி விழுந்து மடிந்த வீட்டில் பூச்சியினைப் போலிருந்தது என்கிறார் வாமன முனிவர்.

° ..... இருள் இலாத் தேவர் கோயிற்கு இட்டதோர் விளக்கின் மேலே /மருளினால் விட்டில் பாய்ந்து மரித்ததே போல்வ தொன்றே - மே - ம.பு.362)

 ஒரு நாள் வனத்தின் அழகைக் காணபத்திரமித்திரன் அங்கு வந்தான். அங்கே, புலியானது அவனை நோக்கி ஓடி வந்தது அவனைத் தாக்கியது அவன் மாண்டான். அப் புலியே அவனது முற்பிறவி தாயாவாள். வறியவர்க்கு பொருள் கொடுப்பதைக் கண்டு வெகுண்ட தாய் புலியாகப் பிறந்தாள்.அவள் போன்று கொடியவளாய் இராமல் அருளுடன் வாழ்தலே நன்று. எண்ணற்ற பிறவிகளில் அன்னையாகவும், ஏனைய உறவினர்களாகவும் இல்லாதவர்கள் எவருமே இல்லை. 

ஊனை உண்டு வாழ்பவர் கொடிய மனத்தவராய் தங்கள் மக்களையே கொன்று வாழ்கிறார்கள் என நீதியை எடுத்துரைத்த சுபத்திரை யானவள் தானே தனது மகனைக் கொன்றாள். தின்றாள்

 விதி விரித்த வலையில் சிக்காதவர் எவருமிண்டோ. நீதியறிந்தும் இந்நிலைக்கு ஆளாகி விட்டாள் என்பதை உணருங்கள். 

புலியினால் மடிந்த பத்திரமித்திரன் அரசி இராமதத்தையின் மேல் கொண்ட அன்பின் காரணமாக அவளுக்கு மகனாய்ப் பிறந்தான். மன்னன் மகிழ்ந்தான். பாலகன் சிம்மச்சந்திரன் அனைத்து கலைகளையும் கற்றான்.உரிய வயதில் ராஜகுமாரியரை மணம் முடித்து வைத்தான் மன்னன்.  

அரசி இராமதத்தை மற்றுமோர் ஆண் மகனைப் பெற்றாள். 


ஒரு நாள் அரசன் சீ யசேனன் தன் கருவூலத்திற்குச் சென்றான்.ஆங்கே முற்பிறவியில் அமைச்சனான சத்திய கோடன் பாம்பாக மாறி அரசனைத் தீண்டினான். இதனால் அரசியும், அவனது மைந்தர்களும் துயருற்றனர்.


---------------- 

பூரணச் சந்திரன் அறங் கேள்விச் சருக்கம் - 4 

தொடர்ச்சி 

சீயசேன மன்னனை கருவூலத்திலிருந்த நாகம் தீண்டியது. அவனைக் காப்பாற்ற கருட தண்டனென்னும் மந்திரவாதியை வரவழைத்தனர். அவன் தனது மந்திரத்தால் அரசனைக் காப்பாற்ற முயன்றான். இருப்பினும் மன்னன் இறந்தான்.

வெகுண்ட மந்திரவாதி தன் மந்திர சக்தியால் ஊரில் உள்ள பாம்புகளை வரச் செய்தான். நெருப்பு மூட்டி இதிலே நுழைந்து செல்லுங்கள். குற்றமற்றவராயின் இந் நெருப்பிலிருந்து மீள்வீர். இல்லையெனின் இறந்துபோவீர்கள் என்றான். 

அனைத்துப் பாம்புகளும் தீயில் நுழைந்தன. உயிருடன் மீண்டு வந்தன. இறுதியில் முற்பிறவியில் அமைச்சனாக இருந்து இப்பிறப்பிலே அகமந்தனான நாகம் தீயிலே இறங்கி எரிந்து சாம்பலானது.

அதுவே, மறு பிறவியில் சமரீ என்னும் விலங்காகப் பிறந்தது. நாகம் கடித்து இறந்த சீயசேன மன்னன் சல்லகீ என்னும் காட்டிலே அசனிகோடம் என்ற பெயருடன் யானையாகப் பிறந்தான்.

மன்னன் இறந்தமையால் இராமதத்தை துயரமுற்றாள். அவளுக்கு ஆன்றோர்கள் உலகின் நிலையற்ற தன்மையை எடுத்துரைக்கலாயினர்.
அரசியே, இவ்வுலகில் தோன்றியவை கெடுதலும், ஈன்ற தாயர் தன் குழவியை விட்டு இறத்தலும், கல்வியில் சிறந்த ஆன்றோர்களும் மறைந்து போவதும் உலகில் தோன்றிய நாள் முதல் நடைபெற்று வரும் நிகழ்ச்சியாகும்.

தோன்றிய நிலையா துடனே கெடலும் 
ஈன்ற தாயரும் ஈட்டு வைத்து ஏகலும் 
ஆன்ற வர் அழி வெய்தலும் வையகம்  தோன்றின அன்று தொடங்கின அல்லவோ
மே.ம.பு. - 387

மேலும் கேள், நமது செல்வங்கள் கூட அழியக்கூடியவைதான். இவ்வுலகில் துன்புறாதவர் எவருமிலர். போரிலே வென்ற மன்னர்கள் கூட கூற்றுவனிடம் தோற்றவர்கள் தான். இப்போது நாம் இறந்தவர்களுக்காக அழுவதைப் போல் எத்தனைப் பிறவிகளில் பிறந்து இழந்த சுற்றத்தை எண்ண முடியுமா? இவர்களில் யாருக்காக நாம் அழ முடியும்?

இறந்தவர்க் இரங்கி நாமும் அழுது மேல் இன்று காறும்
பிறந்தநம் பிறவி தோறும் பெற்ற சுற்றத்தை எண்ணில்
இறந்தநாள் அலகை ஆற்றாது எவருக்கென்று அழுதும் என்னத் 
திறம் தெரிந்து உணர்ந்து தேவி சிறிது போய்த் தேறினாளே மே.ம.பு.389


ஆன்றோர்கள் கூறி முடிக்கவே, இராமதத்தை மனம் தேறி அமைதி அடைந்தாள். 

------------------- 

பூரணச் சந்திரன் அரசியற் சருக்கம் - 4 (தொடர்ச்சி) 


ஆன்றோர்களின் அறிவுரையால் தெளிவடைந்த இராமதத்தை தன் மைந்தர்களை அழைத்தாள


மூத்த மகனான சிம்மச்சந்திரனை முடி சூட்டி அரசனாக்கினாள்.
இளைய மகன் பூரண சந்திரனை இளவரசனாக பதவியேற்கச் செய்தாள்

.சீயசேன மன்னன் இறந்த செய்தியைக் கேள்வியுற்ற சாந்திமதி, இராணி மதி என்னும் இரு பெண் துறவியர்  இராமதத்தையைக் காண வந்தனர். 

அவர்கள் அவளைப் பார்த்து சல்லகீ வனத்திலே உம்முடைய அரசன் அசனிகோடம் என்னும் யானையாகப் பிறந்துள்ளான். ஆகவே நீ அவனை நினைத்து வருந்தினால் அவனால் வர இயலுமா? மன்னனை இழந்து விட்டோம் என்ற துன்பத்திலேயே இருக்க வேண்டாம். இதனால் ஆர்த்தத் தன்மையைஅடைந்து விலங்கு பிறவியை எடுக்க நேரிடும் என்பதை உணர்க.வாழ்வு நிலையற்றது என்றறிந்து திருவறத்தினை மேற்கொள்வாயாக என்றனர். 

இதனால் தூய பரிணாமமே ஏற்படும்.ஆகவே, அறத்தின் வித்தாகிய நோன்பு, விரதங்களை ஏற்று ஒழுகு என்றனர். அரிய தவத்தை மேற்கொள்வதே சிறந்ததுஎன நினைத்தாள் இராமதத்தை

 தன் மூத்த மகனான சிம்மச் சந்திரனை அழைத்து அறிவுரைகள் கூறத் தொடங்கினாள். மகனே, செல்வங்களும் சுற்றங்களும் நீர்க்குமிழியைப் போல் மறையும் தன்மை உடையவை எனவே திருவறத்தை மறவாமல் கடைப்பிடி. என் மனமானது துறவறத்தை ஏற்கத் துணிகிறது என்று கூறினாள் இராமதத்தை .

அன்னையே தங்களின் துறவறத்திற்கு காரணம் யாது? 
நான் ஏதேனும் தங்களுக்கு துன்பம் இழைத்து விட்டேனா? எனவும் கேட்டான்.
 மகனே வீணாக எதையும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம் என்றாள

்.துறவு ஏற்றாள். இளவரசன் பூர்ண சந்திரனும் அன்னையின் துறவு நிலை கண்டு வணங்கினான். சிம்மச்சந்திரன் வருந்தினான்.

 அந் நகர்க்கு பூரண சந்திர முனிவர் என்பவர் வந்துள்ளதாகக் கேள்விப்பட்டான். 

அவரை அட்டமங்கலங்களை ஏந்தி எதிர்கொண்டான். அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். ஆசனத்தில் அமரச் செய்தான். தன் ஆடையால் அவர் பாதத்தில் படிந்திருந்த, தூசுகளை நீக்கினான். கலச நீரால் பாதத்தைத் தூய்மைப்படுத்தினான். எண் வகைப்பொருள்களை க் கொண்டு அர்ச்சித்தான். பின்னர் நால்வகை உணவுகளை அளித்தான். முனிவரை வணங்கினான்.

 பின்னர் அவரிடம், எனது பிறவிப் பிணிக்கு முடிவு உண்டோ ?அருளுக என்றான்.

பூர்ணச் சந்திர முனிவர் கூறத் தொடங்கினார். மன்னனே கேட்பாயாக பான்மையுடைய தூய உயிர்களுக்கு உரிய தவத்தினால் பிறவிக்கு முடிவு கிடைக்கும். பான்மையும், தவமும் இல்லையெனில் பிறவி சுழற்சி உண்டு.

குலையிலே உள்ள சிறிய பிஞ்சுகள் முற்றிக் காயாகி பழமானாலும் முற்றிய குலையை அறுத்து இலைகளைப் போட்டு மூடி வைத்தால் விரைவில் கனியும் . அதுபோல் பவ்வியத்துவம் உடைய உயிர்கள் இயல்பிலேயே துறந்து பயன் எய்தும் ஆற்றலுடையதாயினும் குற்றமற்ற அந்த பவ்வியத்துவம் உடைய உயிர்கள் பிறருடைய தூண்டுதல் காரணமாக விரைந்து துறவு பூண்டு முறையான பன்னிரு தவங்களைத் தாங்கிக் கனிந்து வீடெய்தும்.


 பான்மையின் பரிசு என் என்னிற் பழுத்த லுக் காற்றல் பிந்தி/ ஈனமாய்ப் பெருகி வந்த இலையிடைக் கனியும் இவ்வாறு / ஊனம் ஒன் றிலாத பான்மை உயிரிடை க் கனியும் வீட்டைத் /தானை்பன் னிரண்டின் மெய்ம்மைத் தவத்திலை யடுத்த போழ்தே மே.ம.பு410)_  

--------------- 

பூரணச் சந்திரன் அரசியற் சருக்கம் _ (4) தொடர்ச்சி 



உண்மையானத் தவமானது வினைகளை வென்ற இறைவனைப் போல் நிர்வாண நிலை அடைந்து, மனம், மொழி, செயல்களால் தூய்மையடைதல்.

 அகப்புறப் ளை ஏற்று மும்மணிகளை தாழ்வின்றித் தரித்து அதிலே நிலைத்திருக்க வேண்டும் என்பதை அறிவாயாக


. அகத்தவம் ஆறு. 


1 .பிராயச்சித்தம் :( கழுவாய்) துறவறத்தை ஏற்கும் துறவியர் தான் அறியாது செய்த தவறுகளுக்கு பரிகாரம் காணல்


.2 விநயம் (பணிவு) மும்மணியிடத்தும் அவற்றை ஏற்று ஒழுகும் துறவியரிடத்தும் பணிவாக நடத்தல் .


(3) வையா விருத்தியம்: துறவிகளுக்கு ஏற்படும் நோய் முதலிய துயரங்களைப் போக்க தொண்டு புரிதல்.


(4) ஆகமம் பயிற்சி: வினைகள் விலகச் செய்வதற்கு காரணமான நூல்களைக் கற்பதும் மற்றவர்களுக்கு எடுத்துரைப்பதும் சுவாத்யாயம் ஆகும்.

(5) வி யுத்சர்க்கம் : (பற்று விடல்)அகப்புறப் பற்றுகளைத் துறத்தல்.

( 6 ) தியானம் : ஆர்த்த, ரெளத்திரமெனும் தீய தியானங்களைக் களைந்து, சுக்கிலத் தியானத்தில் ஈடுபடுதல். 


(ஆ) புறத்தவங்கள் (6) 



அனசனம் உண்ணாநோன்பு வினைகளும் ,வேட்கைகளும் விலக பொறிகளும் மனமும் வயப்பட, நால்வகை உணவையும் விடுதல்.


(2) ஆவமோதர்யம் : உணவை குறைவாக உண்ணல் உணவினால் ஐம்பொறிகளின் செயல்பாடுகள் அதிகரிக்கும். உணவை விட்டால் உடல் தளரும் ஆகவே உணவின் அளவை பைய பையக் குறைத்தல்

.(3) விருத்தி பரிசயக்யானம் ;  உணவு ஏற்க இருக்கும்  முனிவரானவர் இத்தனை தெரு, வீடு என நிர்ணயம் செய்து கொண்டு நியமம் எடுத்துக் கொள்ளல

்.(4) ரசபரித்தியாகம் ; சத்தான உணவுப்பொருள்களைக் களைதல் .(நெய் போன்றவை) 

(5)வி விக்தசய்யானம் : தியானத்திற்கு இடையூறாகும் எனக் கருதி மகளிர் இல்லாத இடத்தில் வாழ்தல் .

( 6 ) காயக் லேசம் : உடலை வருத்திக் கொள்ளல்.மழை, வெயில், பனி என காலம் வேறுபாடு கருதாது தவம் செய்தல்

ஆகிய இவைகளை அடியோடு நீக்கிமேலும்


 பத்துஅறங்களையும் ஏற்றல் வேண்டும்.


1 உத்தமப் பொறை - சினம் வந்தபோது பொறுமையைக் கையாள்வது.


2) உத்தம மென்மை. _ கர்வமின்றி இருத்தல

3) உத்தம நேர்மை _ சிந்தனை, சொல், செயல்களில் நேர்மையாய் நடத்தல் .

4 ) உத்தமத் தூய்மை ._ தூய்மையான உள்ளத்துடன் இருத்தல்.ஐம்பொறி ஆசைகளை வெல்லுதல்.

5) உத்தம வாய்மை _ பொருளின் தன்மையை உணர்ந்து உள்ளவாறு உரைத்தல் .

6 ) உத்தம அடக்கம் : நால்வகை கஷாயங்கள் கழிந்த நிலையே உத்தம அடக்கம்.( சினம், கர்வம், வஞ்சனை, பேராசை ( உலோபம்), ஆகிய கஷாயங்கள் )

 7 உத்தமத் தவம். தவ நிலையில் நிற்றல் -அகத்தவம், புறத் தவங்களை ஏற்று ஒழுகுதல் .

8 உத்தமத் துறவு. இது என்னுடையதுஎன்ற எண்ணத்தை விடுதல்அகப்பற்று வஞ்சனை, கர்வம், பேராசை, துன்பம் - முதலிய அகப் பற்றுகளைக் களைதல். புறப்பற்று __ வீடு, நிலம் .பொன், வெள்ளி .ஆகியவைகள் மீது பற்றுகளைக் களைதல் வேண்டும

.9 உத்தமத் தியாகம் : கொடைப் பொருளாகக் கொடுப்பவைதானமாகும். கொடுத்த பொருள்களை முற்றிலும் நினைத்தல், எண்ணுதல் கூட தவறு. இதுவே தியாகமாகும

10 உத்தமபிரமசரியம். பெண் ஆசையை அறவே விடுதல் பிரமசரியமாகும். 


பன்னிரு தவங்களை 


ஏற்றல் வேண்டும். இவற்றை துவாதசானு ப்ரேட்சை என்பர். மோட்ச மார்க்கத்தில் செல்ல விழைபவர் இவற்றை மேற்கொள்ள வேண்டும். 

1 நிலையாமை _உலகில் உள்ள பொருள்கள் நிலையற்றவை என உணர்தல் வேண்டும்.

 2. உறவின்மைச் சிந்தனை : பெற்றோர், உறவினராலும் மரணத்திலிருந்து காப்பாற்ற முடியாது எனச் சிந்தித்தல். 

3. பிறவித் துன்பச் சிந்தனை - நாற்கதிகளில் ஏற்படும் துயரங்களை நினைத்தல் வேண்டும்.

 (4) பிறிதின் மைச் சிந்தனை : தன் இறப்பில் எவரும் பங்கு கொள்ள இயலாது என உணர்தல் 

.5 .உயிர், உடல் வேறு வேறானவை - இரண்டிற்கும் தொடர்பில்லை எனக் கருத வேண்டும். 

6. உவர்ப்புச் சிந்தனை - உடல் அழுக்குடையது எனச் சிந்தித்தல் 

.7. ஊற்றுச் சிந்தனை . ஓர் உயிருக்கு எல்லா துன்பங்களுக்கும் காரணம் ஆசையே ஆணிவேர் என நினைத்த ல் ஊற்றுச் சிந்தனை.

8. செறிப்புச் சிந்தனை.- உயிரிடத்து புதிய வினைகள் வராது தடுத்தல் செறிப்புச் சிந்தனை.

 9. உதிர்ப்புச் சிந்தனை : வினைகள் பயனைக் கொடுத்துத் தாமாகக் கழியும் எனக் கருதாது அவை பயனைத் தருதற்கு முன்னரே தவம், தியானம், சீலம் முதலியவற்றால் அவற்றை நீக்கினால் உயிர்க்கு நன்மை தரும் என எண்ணுதல்.

 10. உலகச் சிந்தனை. _ உலகின் அமைப்பை இடைவிடாது சிந்தித்தல்

 11. ஞானம் பெற லரிதுச் சிந்தனை:- மும்மணிகளின் மேன்மையை நினைத்தல்


 12. அருகப் பெருமானது அறவுரைகளே நம்மை கரையேற்றக்கூடிய தெப்பமாகும் என சிந்தித்தல் வேண்டும். ஆகவே இவற்றைக் கடைபிடித்து வாழ்வாயாக எனச் சிம்மச்சந்திரனுக்குமுனிவர் பூர்ணச் சந்திரர்  கூறி முடித்தார்.

---------------- 

பூரணச் சந்திரன் அரசியற் சருக்கம் _ 4

(தொடர்ச்சி)

 முனிவர் கூறியதைக் கேட்ட அரசன் இந்த உடலை நான் என்றும் சுற்றம் மற்றும் ஏனையசெல்வங்களையும் என்னுடையவை என மயங்கிக் கிடந்துள்ளேன்.

 இதனால் நான்கு கதிகளிலும் உழன்றுள்ளேன். உண்மையை உணர்ந்தேன். இவற்றிலிருந்து நீங்கினாலன்றி வினைகள் விலகாது .உயிரின் இயல்பை உணர்ந்து அதன் தன்மையில் பொருந்தினால் வினைகள் விலகும். 

மேலும் இம்மண்ணுலகத்திலும், விண்ணுலகத்திலும் எடுத்த பிறவிகளில் புலன்களின் உணர்வுகளில் பொருந்தியமையால் இன்பமடைந்து புதிய சுவை இல்லை என அறிந்தும் மீண்டும் அதே சுவைக்காக அலைவது ஒரு தடவை வாயிலிருந்து மென்று சுவைத்த உணவை துப்பியதை மீண்டும் வாயிலிட்டுச் சுவைப்பதற்குச் சமமாகும்.

 இதையெல்லாம் சிந்திப்போமாயின் , நாம் எதையும் உணராத கிணற்றுத் தவளைக்குச் சமமாகின்றோமே என எண்ணினான்.

 பெறுதற்கரிய மானிடப் பிறப்பினை எய்திய நாம் தவத்தினை ஏற்றால் பிறவிகள் தொடராது என உணர்ந்த சிம்மச்சந்திரன் தன் தம்பி பூரணச்சந்திரனை நோக்கிச் சொல்லத் தொடங்கினான்.

பெண்கள் மேல் ஆசை கொண்டவர்களுக்கு தொடரும் பிறவியில் நல்ல சுகம் கிட்டாது. 

எனவே நல்ல தவத்தினை மேற்கொள்க . அவ்வாறு தவம் மேற்கொண்டால் அவர்களை விட்டு திருமகளும் பிரியாமல் இணைந்தே இருப்பாள். இதனால் அவர்களுக்கு புகழும் பெருமையும் பரவி நிற்கும். பகைவர்கள் கூட பணிந்து நிற்பர்.

 பேராசையும், சினமும் . கடுஞ்சொல் பேசுதலும், மகளிரிடம் மயங்குதலும் ஆகிய இத்தகைய பண்புடைய மன்னர்களின் செல்வம் அழிந்துவிடும்.

 மேற்கூறியவற்றிலிருந்து விலகி இருக்கும் மன்னர்களின் செல்வமானது வளரும்.

 சிம்மச்சந்திர வேந்தன் இவைகளையெல்லாம் கூறி தன் தம்பி பூர்ணச் சந்திரனுக்கு முடி சூட்டினான். 

பின்னர் பல மன்னர்களுடன் துறவு ஏற்று முறைப்படி முடிகளைந்து முழு நிர்வாணமாக நின்றான் சிம்மச்சந்திரன். அவன் தவம் என்னும் உத்தமப் பெண்ணைத் தனதாக்கிக் கொண்டான். 


கர்மங்கள் கழியும் பொருட்டு ஆசையை அகற்றினான். தியானம், வீட்டு நெறி விளக்கம் இவற்றை அடைவதற்கு ஏதுவாக உண்ணா நோன்புடனிருத்தல் முதல் புறத் தவத்தை ஏற்றான். உணவு மிகுமானால் ஐம்பொறிகளின் உணர்வுகள் மேலோங்கும் எனக்கருதி கொஞ்சம் கொஞ்சமாக உணவின் அளவையும், கால நீட்டிப்பையும் ( நாள் , வாரம், மாதம்) செய்து வந்தான். இவற்றால் ஐம்பொறிகளின் ஆற்றல் அடங்கும் என்ற விருப்பத்துடன் ஓரளவு உணவை ஏற்றல் என்னும் இரண்டாவது புறத்தவத்தினை மேற்கொண்டார். (ஆவமோதுரியம்) 

------------------ 


பூரணச் சந்திரன் அரசியற் சருக்கம் - 4  

(தொடர்ச்சி) 


சிற்றுயிர்களுக்கு ஊறு நேரா வண்ணமிருக்கஎங்கும் செல்வதைத் தவிர்த்தார். 

 இன்று எந்த உணவு ஏற்பது குறிப்பிட்ட எல்லைக்கு மேல்   ்செல்லுதலில்லைஎன நியமனம் எடுத்துக் கொள்ளல் விருத்தி சங்கமம் என்ற மூன்றாவது புறத்தவத்தில் பொருந்தினார்.

நாவின் சுவையில் மனத்தைச் செலுத்தாது அளவோடு நிற்றல் ரசப்பரித்தியாகம் எனும் புறத்தவத்தை மேற்கொண்டார். 

. சுடுகாடு, வீடு, வனம், மலைக்குகை ஆகிய எந்த இடமாக இருந்தாலும் கவலையடையாது முனிவன் தங்கியிருக்கும் விவித்தசையாசனம் என்னும் ஐந்தாவது புறத்தவத்திலிருந்தார்.

 மூன்று பருவங்களிலும் வெட்ட வெளியிலில் தவம் ஏற்றுகாயக்கிலேசம் என்னும் ஆறாவது தவத்தில் பொருந்தினார்.

 மும்மணிகளை மேற்கொண்டோரின் செயல்களில் மாசு ஏற்பட்டால் அம் மாசினை பெரிய ஞானிகளால் வகுக்கப்பட்ட பிராயச்சித்தம் என்னும் அகத்தவத்தை ஏற்றார்.

முனி களைக் கண்டு பணிவுடையவராயிருத்தலாகிய விநயதவத்தில் பொருந்தினார். 

முதியவர், இளையவர், நலிந்தவர், நல்லுணர்வோடு கூடிய அறத்தினை மேற்கொண்டவர்களுக்கும் ஏற்படும் நோய் , துன்பம் ஆகியவற்றையும் களைதல் எனும் வையா விருத்தம் எனும் தவத்தினையும் மேற்கொண்டார்.

 உடலில் உள்ள மனத்தகத்தே மேலான சிந்தனையையும், அச் சிந்தனையை வெளிப்படுத்தும் எழுத்துக்களால் அமைந்த கனிந்த சொற்களை வாயினால் வெளிப்படுத்தலும் அவற்றை ஆர்வமாய் செவி வழியாய் ஏற்றலும், கேட்டவற்றை உள்ளத்தால் சிந்தித்து ண ர்த்தலும், அதில் நம்பிக்கைக் கொண்டு அதன்படி ஒழுகி உயர்நிலை அடைதலும் ஆகிய இவற்றை எல்லாம் அளிக்கும் மிகச்சிறந்த நூல்களைக் கற்றலாகிய ஸ்வாத்தியாயம் என்னும் அகத்தவத் தவத்தினை மேற்கொண்டார்.

 யாக்கைக் கண் இச்சை நி ற்கும் எழுத்தின் மேல் பழுத்த சொல்லை / வாக்குநின் றுமிழும் அச்சொல் வசத்ததாம் செவியும் உள்ளம் / நோக்கும் அப் பொருளின் மெய்ம்மை நுகர்ந்தெ ழும் தெளிவு இவற்றை | ஆக்கும் நல் லொழுக்கில் சால அருந்தவன் விரும்பிச் சென்றான். _ மே.ம.பு.432

ஆர்த்தம், ரெளத்திரம் எனும் தீய சிந்தனைகளை அடியோடு ஒழித்து உயிரைப் பிறவிச் சுழலில் சிக்காது தருமச்சசுக்கிலத் தியானத்தில்  நிலைத்து நின்றார்.
மேலும் வி யுத்சர்க்கம் என்னும் அகத்தவத்தினை மேற்கொண்டு விபுல மதி என்னும் ஞானத்தையும் பெற்றார். 

அகப்புறப் பற்றுகளை நீக்கிய முனிவர் தவ வலிமையால் விண்ணில் செல்லும் சாரணர்த்தன்மையைப் பெற்றார்._ 

---------------- 

பூரணச் சந்திரன் அரசியற் சருக்கம் - 4 

 (தொடர்ச்சி)

சிம்மச்சந்திர முனிவர் சாரணத் தன்மை பெற்று ஆகாயமார்க்கமாக வரும் நாளில் ... 

அவரது தம்பியான பூரணச்சந்திரனின் மனமானது மகளிரின் அழகிலே மயங்கிக் கிடந்தது. அதாவது மகளிர் இன்பத்திலே மயங்கிக் கிடந்தான். 

இசைக்கு மயங்கும் அசுணப் பறவை போன்றும், பெண் இன்பத்தில் பற்று வைக்கும் பாம்புகளைப் போலவும், கட்புல இன்பக் கவர்ச்சியால் விளக்கிலே விழும் விட்டிலைப் போன்றும் பூரணச் சந்திரன் மயங்குவதைக் கண்ட அவனது தாய் இராம தத்தை முனிவரைக் கண்டு வணங்கினாள். 

பெண்கள் மேல் கொள்ளும் பற்றை நீக்கி துறந்துயர்ந்த இறைவனே உன்னை வணங்குகின்றேன்.

பெரு வேந்தர்களின் செல்வமும் ஒரு நாள் நீர்க் குமிழியைப் போல் நீங்கும் என்பதை உணர்ந்து துறவை மேற்கொண்டவரே உம்மை வணங்குகின்றேன் என வணங்கி நின்றாள்.

 அவளுக்கு சிம்மச் சந்திர முனிவர் அருளுரை வழங்கினார்.
முனிவரே நான் கூறுவதை மனங்கொள்ளுங்கள் என இராமதத்தை பூரணச் சந்திரனைப் பற்றி சொல்லத் தொடங்கினாள். 

அவனைச் சுற்றிலும் பெண்கள் சூழ்ந்திருந்தனர். எந்நேரமும் அவர்களோடு இணைந்திருப்பதிலே நாட்டம் கொண்டிருந்தான்.
நான் அவனிடம், புண்ணியம் செய்தவர்க்கன்றி அரச செல்வமும், விண்ணுலக இன்பமும் கிட்டாது.மேலும் திருமகள் புண்ணியம் செய்யாதவர்களைப் பற்றி சிந்திக்கவும் மாட்டாள்

மேலும் " வடிவமும், வனப்பும், நல்ல பொலிவும், புகழும், பகைவரை வெல்லும் திறனும் , விரும்பிய செல்வங்கள் வந்து சேர்வதும், இன்பமும் ஆகிய இவையனைத்தும் அறத்தினால் மட்டுமே கிட்டும் என எடுத்துரைத்தேன். 

விளை நிலத்தில் நல்ல விதைகளை விதைத்தாலன்றிப் பயிர்கள் தோன்றுவதில்லை.மலை முகடுகளில் மழை பெய்தால் தான் நீர் அருவிகள் கொட்டும். இவற்றைப் போல் புண்ணியத்திற்கு காரணமாகிய விரத சீலங்களை மேற்கொள்க என்றேன். 

அவ்வாறு செய்யவில்லையெனில் இல்லற இன்பம் கூட நில்லாமல் போகும்.
நீ முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் மட்டுமே இப்போது ஆட்சியும், அரச செல்வமும் கிட்டியுள்ளது.

மேலும் செல்வம் நிலைக்க வேண்டின் புண்ணியம்செய்வாயாக  என்றேன். இவற்றை ஏற்று அவன் நடந்து கொள்வானோ எனக் கேட்டாள். 


இறைவனது நல்லறத்தை பூரணச் சந்திரன் ஏற்பான் நீ கவலைப்படாதே என்றார் முனிவர்.

 அவன் அறத்தை ஏற்பதற்குக் காரணமாக நான் கூறும் இக்கதையை அவனுக்கு நீ கூறுவாயாக என முனிவர்  சொல்லத் தொடங்கினார். 

பூரணச் சந்திரன் அரசியற் சருக்கம்  நிறைவுற்றது.

---------------------------  

 பூரணச் சந்திரன் அரசியற் சருக்கம் - 4 

 (தொடர்ச்சி)

சிம்மச்சந்திர முனிவர் சாரணத் தன்மை பெற்று ஆகாயமார்க்கமாக வரும் நாளில் ... 

அவரது தம்பியான பூரணச்சந்திரனின் மனமானது மகளிரின் அழகிலே மயங்கிக் கிடந்தது. அதாவது மகளிர் இன்பத்திலே மயங்கிக் கிடந்தான். 

இசைக்கு மயங்கும் அசுணப் பறவை போன்றும், பெண் இன்பத்தில் பற்று வைக்கும் பாம்புகளைப் போலவும், கட்புல இன்பக் கவர்ச்சியால் விளக்கிலே விழும் விட்டிலைப் போன்றும் பூரணச் சந்திரன் மயங்குவதைக் கண்ட அவனது தாய் இராம தத்தை முனிவரைக் கண்டு வணங்கினாள். 


பெண்கள் மேல் கொள்ளும் பற்றை நீக்கி துறந்துயர்ந்த இறைவனே உன்னை வணங்குகின்றேன். 


பெரு வேந்தர்களின் செல்வமும் ஒரு நாள் நீர்க் குமிழியைப் போல் நீங்கும் என்பதை உணர்ந்து துறவை மேற்கொண்டவரே உம்மை வணங்குகின்றேன் என வணங்கி நின்றாள்.

 அவளுக்கு சிம்மச் சந்திர முனிவர் அருளுரை வழங்கினார்.
முனிவரே நான் கூறுவதை மனங்கொள்ளுங்கள் என இராமதத்தை பூரணச் சந்திரனைப் பற்றி சொல்லத் தொடங்கினாள். 

அவனைச் சுற்றிலும் பெண்கள் சூழ்ந்திருந்தனர். எந்நேரமும் அவர்களோடு இணைந்திருப்பதிலே நாட்டம் கொண்டிருந்தான்.
நான் அவனிடம், புண்ணியம் செய்தவர்க்கன்றி அரச செல்வமும், விண்ணுலக இன்பமும் கிட்டாது.மேலும் திருமகள் புண்ணியம் செய்யாதவர்களைப் பற்றி சிந்திக்கவும் மாட்டாள்

மேலும் " வடிவமும், வனப்பும், நல்ல பொலிவும், புகழும், பகைவரை வெல்லும் திறனும் , விரும்பிய செல்வங்கள் வந்து சேர்வதும், இன்பமும் ஆகிய இவையனைத்தும் அறத்தினால் மட்டுமே கிட்டும் என எடுத்துரைத்தேன். 

விளை நிலத்தில் நல்ல விதைகளை விதைத்தாலன்றிப் பயிர்கள் தோன்றுவதில்லை.மலை முகடுகளில் மழை பெய்தால் தான் நீர் அருவிகள் கொட்டும். இவற்றைப் போல் புண்ணியத்திற்கு காரணமாகிய விரத சீலங்களை மேற்கொள்க என்றேன். 

அவ்வாறு செய்யவில்லையெனில் இல்லற இன்பம் கூட நில்லாமல் போகும்.
நீ முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் மட்டுமே இப்போது ஆட்சியும், அரச செல்வமும் கிட்டியுள்ளது.

மேலும் செல்வம் நிலைக்க வேண்டின் புண்ணியம்செய்வாயாக  என்றேன். இவற்றை ஏற்று அவன் நடந்து கொள்வானோ எனக் கேட்டாள். 
இறைவனது நல்லறத்தை பூரணச் சந்திரன் ஏற்பான் நீ கவலைப்படாதே என்றார் முனிவர்.

 அவன் அறத்தை ஏற்பதற்குக் காரணமாக நான் கூறும் இக்கதையை அவனுக்கு நீ கூறுவாயாக என முனிவர்  சொல்லத் தொடங்கினார். 


பூரணச் சந்திரன் அரசியற் சருக்கம்  நிறைவுற்றது.

---------------- 

 நால்வரும் சுவர்க்கமேறின சருக்கம்  5


தொடர்ச்சி


இந்த உடல் நிலையற்றது என்று உணர்ந்த யானை ( சிம்மசேனன் ) சினம், செருக்கு, வஞ்சனை, ஆசை ஆகியவைகளை நீக்கியது.
விருப்பு, வெறுப்புகளைக் களைந்து இன்ப துன்பங்களைச் சமமாக பாவித்து மாதம் இருமுறை , மாதம் ஒருமுறை என உபவாசம் ஏற்றது.இலைகளையும், சருகுகளையும் உணவாகக் கொண்டது. 

தனது உண்ணா நோன்பினை முடிக்கும் நோக்கத்துடன் யூபகேசரி என்னும் ஆற்றில் நீர் அருந்தச் சென்றது.
சேற்று மண்ணிலே கால் அழுந்தியது.விடுபட முடியாமல் செயலற்று நின்றது. 

அந்நேரத்தில் முற்பிறவியில் சத்திய கோடன் பாம்பாகப் பிறந்து, சமீரி என்னும் விலங்காகி இப்போது கோழிப் பாம்பாகப் பிறந்து  யானையைக் கடித்தான்.

யானையோ (சிம்மசேனன் ) கோபமோ, வெறுப்போ அடையவில்லை. யானை சாந்த உணர்வோடு உயிர் துறந்தது. 
அசனிகோடம் என்னும் யானை சக்திக்கு ஏற்ற விரதங்களை நோற்றதினால் தேவர் உலகில் ஸ்ரீதரன் என்னும் தேவனாகப் பிறந்தது.

தேவர்கள் ஸ்ரீதரனை வணங்கினார்கள்.
 அப்போது ஸ்ரீதரனுக்கு முற்பிறவியில் யானையாகப் பிறந்து அற்ப தவத்தினால் இத்தகு நிலை அடைந்துள்ளேன் என உணர்ந்தான்.

 பின்னர் நறுமண நீரில் நீராடி,ஜினபகவானை வணங்கினான்.
அவன் செய்த நல்வினைப் பயனால் தேவ மாதர்களுடன் இன்புற்று வாழ்ந்து வந்தான்.
நல்லவர்கள் கூறிய அறவுரை கேட்டு பகவானை வணங்கி வந்தான். 

இறைவனே| நாட்டிற்குக் காவலாக அமைந்த காட்டிலே யானையாகப் பிறந்து உனது பாதங்களைச் சேர்ந்தேன். அதன் பயனால் சகஸ்ரரா
கல் பத்தில் தேவனாகியுள்ளேன்.

நிழல் போல நீங்காது உனது திருவடி அடைந்தோர், சம்சார கடலைக் கடப்பர்.
உனது திருநாமத்தை எண்ணாதவர்கள் முக்தி உலகத்தை ஒரு நாளும் அடைய மாட்டார்கள். இவ்வாறு பலவிதமாக இறைவனைத் துதித்தான்.


ஸ்ரீதரனை தேவமாதர்கள் சூழ்ந்தனர். இணையற்ற இன்பத்தை எய்தி அதிலே மூழ்கினான். அத்தகைய கல் பலோகத்தின் இயல்பைக் கேட்பாயாகில் சொல்லுகின்றேன் என சிம்மச்சந்திர முனிவர் சொல்லத் தொடங்குகிறார்.-

---------------- 


கல்ப வாசியர் முதல் நரகம் வரையிலும் அடுத்த இரட்டையர் இரண்டாம் நரகிலும் அடுத்த நான்கில் உள்ளோர் மூன்றாம் நரகம் வரையிலும் அடுத்த நான்கில் உள்ளோர் நான்காம் நரகம் வரையிலும் கடைசி மேல் நான்கில் உள்ளோர் ஐந்தாம் நரகம் வரையிலும் தமது அவதி ஞானத்தால் அறியும் ஆற்றல் உடையவர்கள் ஆவர்.

நவக்கிரைவேயகத் தேவர்கள் ஆறாம் நரகம் வரையிலும் நவாணு திசை , பஞ்சாணுத்ரத் தேவர்கள் ஏழாம் நரகம் வரையிலும் அறியும்ஆற்றலுடையவர்கள்

சர்வார்த்த சித்தி தேவர்கள் திரச நாளிகை முழுவதும் அறியும் அவதி ஞானம்உடையவர்கள்.

 முதல் இரண்டு கல்ப வாசி தேவர்கள் தேவ மங்கையர்களுடன் கூடி இன்புறுவர்.

 இவர்கள் அவர்களின் மேனியைத் தொட்டே மகிழ்வர். 

அடுத்த நான்கு கல்ப வாசி தேவர்கள் கண்களால் கண்டே இன்ப டைவர்.

 அடுத்த நான்கில் உள்ளோர் பெண்களின் இனிய வார்த்தைகளைக் கேட்டே இன்பமடைவர்.

 மற்ற நான்கில் உள்ளோர் மனதால் எண்ணிய அளவிலே இன்புறுவர். 

அக மிந்திரதேவர்களின் நிலையோ இவர்களின் நிலையை விட உயர்ந்தது. இவ்வுலகில் பெண்கள் பிறப்பதும் இல்லை. இருப்பதுவும் இல்லை. எனவே, இத் தேவர்கள் ஏற்றத்தாழ்வு இன்றிய உயரிய இன்பம் நுகர்வர்.

 இவ்வளவு சிறப்புடைய தேவர் உலகில் 12வது கல்பமாகிய சகஸ்ரராகல் பத்தில் இருப்பதை ஸ்ரீதரன் உணர்ந்தான

இவனுடைய ஆயுள் பதினாறு கடலுக்குச் சற்று மேம்பட்டதாகும

பதினாறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மனதினால் நினைத்து அமுது உண்டான்.

 எட்டு மாதங்களுக்கு ஒரு முறை மூச்சு விடும் ஆற்றலைப் பெற்றிருந்தான்.

 இவனுடைய உயரம் நான்கரை முழமாகும்.

 நினைத்த அளவில் மலையாகவும் , அணுவாகவும் மாறக் கூடிய ஆற்றலைப் பெற்றிருந்தான். 

அவன் செய்த நல்வினைப் பயனால் இத்தகு ஆற்றல்களை உடையவனாகத் திகழ்ந்தான். 

சத்திய கோடனுக்குப் பின் சிம்மசேன மன்னனிடம்அமைச்சராக  இருந்த தமிலன் தனது வாழ்நாள் முடிந்து சல்லகி வனத்திலே குரங்காகப் பிறந்திருந்தான்.

 அவன் அ சனிகோட யானை மேல் அன்பு கொண்டிருந்தான். அந்த யானையானது கொடிய பாம்பு கடித்து இறந்தது.


 யானை மேல் கொண்ட அன்பின் காரணமாக குரங்கன் (தமிலன்) கோழிப் பாம்பைக் (சத்திய கோடனை) கொன்றது. அந்த பாம்பானது அது செய்த பாப வினைகளால் மூன்றாம் நரகத்தில் சென்று பிறந்தது. 

------------------- 

நால்வரும் சுவர்க்கமேறின சருக்கம் _ 5 ன் தொடர்ச்சி
.மூன்றாம் நரகம் அடைந்த கோழிப் பாம்புஅடைந்த கணக்கற்ற துயரங்களை கூறத்  தொடங்கினார் சிம்மச்சந்திர முனிவர்

 பிராணிகளின் தசைகள் நிரப்பிய குழி எவ்வாறு நாறுமோ அதைக் காட்டிலும் நாற்றமுடைய இடத்தில் நரக சரீரம் பெற்று போய்ப் பிறந்தான்.

 ஆயுதங்கள் நிரம்பிய நரக பூமியில் தலைகுப்புற விழுந்தான். 

அவனை அங்குள்ளோர் தடி வாள் கொண்டு தாக்கினர்.கல் செக்கிலே இட்டு அரைத்தனர். முள் நிறைந்த  இலவ மரத்திலே முள்ளின் மீது மாறி மாறி இழுத்துத் தேய்த்தார்கள். மேலும் சிலர் இவனை சீழ் நிறைந்த குழியிலே தள்ளினர் நெருப்புக் குழியிலே  தள்ளினர். தாகத்தால் நாக்கை நீட்டியவனுக்கு நச்சு நீர் கொடுத்தனர். அதனால் அவன் மூச்சடங்கி விழுந்தாலும் இறக்காமல் ஆயுள் முழுமையும் துயருற்றான். 

அவனது ஆயுளாகிய ஏழு கடற் காலத்தளவும் இத்தகு துன்பங்களை அடைந்தான். (கோழிப் பாம்பாகிய அமைச்சன் சத்திய கோடன்) நரகத்தில் உள்ள நிழலில் தங்க நினைத்தால் அது அழலை உமிழும் .இவ்வாறு கோழிப் பாம்பானது பட்ட துயரங்களை எடுத்துரைக்க இயலாது.

 அசனி கோட யானை பாம்பினால் கடிபட்டு மரணமடைந்து தேவலோகம் சென்றது.

 அந்த யானையின் உடலில் இருந்த தந்தங்களை நரியன் என்னும் வேடன் பிரித்து எடுத்துச் சென்றான்.

அத் தந்தங்களை தனமித்திரன் என்னும் வணிகனுக்கு விற்றான் நரியன்.

அவ்வணிகன் தந்தங்களையும், முத்துக்களையும் நகரத்து வேந்தன் பூரணச்சந்திரனுக்கு கொடுத்து பெரும் பொருள் பெற்றான்.

அரசன் அவற்றை தன் பொன்னாலாகிய கட்டில்களுக்கு கால்களாக அமைத்தான்.முத்துகளை மாலையாக அணிந்து பெண்களோடு இன்புற்று வந்தான். 

சிம்மச்சந்திர முனிவர் இராமதத்தையை நோக்கி, வினை வயத்தால் ஏற்படும் துயரங்களை கேட்டறிந்து அவற்றிலிருந்து மீளுங்கள். நல்லறத்தை உமது மகனுக்கு எடுத்துரையுங்கள் எனவும் கூறினார். 

இவ் வரலாற்றை அவனுக்குக் கூறுங்கள் என முனிவர் கூறவே,

 இராமதத்தை அவரை வணங்கி தன் நகர் வந்தடைந்தாள்.

அவள் கூறிய வரலாற்றைக் கேட்ட மன்னன் வருந்தினான்.

 மகனே, உன் தந்தை ஜின தருமத்தை உணராததால் விலங்கு கதி அடைந்தான் விலங்கு கதியில் தவத்தில் ஒழுகியமையால் விண்ணுலகில் தேவனாகப் பிறந்தான். 

ஆகவே, நல்லறமே நன்மை பயக்கும் என்பதை உணருங்கள் என அரசனுக்கு இராமத்தைக் கூறினாள்.

மேலும் கேளுங்கள், கடும் பற்றினால் சத்திய கோடன் சமரீ என்னும் விலங்காகவும், கோழிப் பாம்பாகவும் பிறந்து நரகத்தை அடைந்து பல துன்பங்களில் உழல்கின்றான்.


 எனவே, பிறவிக்குக் காரணமான இந்த வாழ்விற்கு அஞ்சி ,பகையும் , பற்றும் நீங்கி நல்லறத்தை ஏற்பாயாக என்றாள் இராமதத்தை .

-------------------- 

நால்வரும் சுவர்க்கமேறின சருக்கம் 5 ன் தொடர்ச்சி

 பூரணச்சந்திரனுக்கு நல்ல எண்ணம் தோன்றியவுடனே பெண்களின் மேல் கொண்ட காம உணர்வானது அகன்றது.
மகளிரின் மேல் காதலும், மிகுந்த பொருளைச் சேர்த்தலும்  ஆகிய இவைகள் நரகத்திலே வீழ்த்தும் என்பதை உணர்ந்தான்.

நன்னெறியிலிருந்து விலகுதலும், முரணற்ற மித்யாத்வ வழியில் செல்வது நிலையற்ற மித்யாத்வத்திற்கே வழியாகும் என்பதை உணர்ந்தான். அன்று முதல் பூரணச்சந்திரன் ஜினபகவானை சிரசில் வைத்து வணங்கினான்.

 மனம், மொழி, செயல்களால் ஒன்றினான். அருகர், சித்தர், சாது, தர்மம் ஆகிய நான்கு மங்கலங்களை இடையறாது சிந்தித்தான்.
அனைத்துயிர்களிடத்தும் அன்பு கொண்டான்.

இராமதத்தை உயர் நோன்புகளை நோற்றாள். பூரணச் சந்திரனே தனக்கு மகனாக பிறக்க வேண்டுமெனக் கருதி ஆயுள் முடிய மகா சுக்ர கல்பத்தே பாகப்பிரபன் என்றும் தேவனாகத் தோன்றினாள்.

இத்தேவனது ஆயுட்காலம் பதினாறு கடற் காலமாகும். பதினாறு ஆண்டிற்கு ஒரு முறை அமுதம் உண்டு, பதினாறு பருவங்களுக்கு ஒரு முறை மூச்சுயிர்த்தும் , நான்கு நரகங்கள் வரை அறியும் ஆற்றலையும் பெற்றிருந்தான்.

பூரணச்சந்திரனும் சுக்ர கல்பத்தில் வைடூரியப் பிரமன் என்னும் பெயருடன் தோன்றினான்.
இவனும் ஐந்து முழ உயரமுடையவனாகவும் திகழ்ந்தான்.
சிம்மச்சந்திர முனிவர் தன் தவத்தினால் கஷாயத் தன்மைகளைக் களைந்து மேன்மையுற்றார். நால்வகை தியானங்களில் ஆன்ம தியானத்தில் உயர்ந்து நின்றார்.

இவர் ஆயுள் முடிந்து நவக்கிரை வேயகத்தில் பிரிதீங்கர தேவனாகப் பிறந்தார். அங்கே 31 கடற் காலம் ஒப்பற்ற தேவ சுகம் எய்தினார். 
இவ்விதமாக சிம்மசேனன், இராமதத்தை, சிம்மச்சந்திரன், பூரணச்சந்திரன் ஆகிய நால்வரும் சுவர்க்க வாழ்வை எய்தினர்.

அமைச்சன் சத்திய கோடன் மட்டும் கொடிய விலங்குகதிகளில் உழன்று துன்புற்றான்.


 நால்வரும் சுவர்க்கமேறின சருக்கம்  நிறைவுற்றது

-------------

மன்னனும், தேவியும், மைந்தனும் சுவர்க்கம் புக்க சருக்கம் - 6 .

சுவர்க்க மேறின அந் நால்வரும் மீண்டும் மண்ணுலகில் தோன்றிய வரலாற்றை தரணேந்திரனுக்கு ஆதித்யாபன் கூறத் தொடங்கினான்.

பாகப்பிரப தேவன் தன் ஆயுள் முடியப் போவதை உணர்ந்து வருந்தினான்.
இழிபிறவியான பன்றியானாலும் தான் எவ்வளவு துன்பமடைந்தாலும் தன் மரணம் கண்டு வருந்தும்.
ஆகவே, தேவனாக இருப்போர் இறக்க நேர்ந்தாலும் துன்பமடையாமல் இருப்பரோ? விண்ணுலக தேவரானாலும் அவர்களின் ஆயுள் முடிவதும் இயற்கையே.

மேலும், ஒவ்வொரு கணமும் மாறும் இயல்புடைய இவ்வுடம்பைப் பற்றி அறிந்தவர் அதற்காக வருந்துபவர் அறிவற்றவரே யாவர். உடன் சேர்ந்தவை பிரியும் காலத்தும் புதியன சேரும் போதும் அவற்றின் இயல்பினை  உணர்ந்து அதற்காக நல்லறிவுடையோர் வருந்துவதோ மகிழ்வதோ இல்லை. 

கணங்கணங் தோறும் வேறாம் உடம்பினைக் கண்டு பின்னும்  மணந்துடன் பிரிந்த வற்றுக் கிரங்குவர் மதியி லாதார்  புணர்ந்தவை பிரியும் போழ்தும் புதியவந் தடையும் போழ்தும் உணர்ந்து று கவலை காதல்  உள்புகா ருள்ள மிக்கார்
மே.ம.பு.568

அறம், பொருள், இன்பம் மூன்றனுள் அறத்தினாலே பொருள், இன்பம் இரண்டும் வந்து சேரும். நம்மை விட்டு நீங்கியவை எவ்வளவு வருந்தினாலும் வந்து சேராது. அதற்காக நாம் வருந்தி உயிர் நீத்தாலும் மீண்டும் பிறந்து பெருந் துன்பத்தையே தரும்.

எனவே நல்வினையாகிய புண்ணியத்தையே அளிக்கும் அறத்தை ஆற்றி இறைவனது திருவடிகளைச் சிறப்புடன் வழிபடுவாயாக என்று அறிவுறுத்தினார்கள்

அறம் பொருளின் பமூன்றில் ஆதியா லிரண்டு மாகும்
இறந்ததற் கிரங்கி னாலும் யாதொன்றும் பின்னை யெய்தா பிறந்துழி பெரிய துன்பம் பிணிக்குநல் வினையை யாக்கும்
அறம் புணர்ந்து இறைவன் பாதம் சிறப்பினோ டடைக வென்றார்.
மே.ம.பு.569

மற்றைய தேவர்களின் அருளுரைக் கேட்ட தேவன் முற்பிறவி நிதானத்தால் மண்ணுலகில் வந்து தோன்றினான். 
தேவஆயுள் முடியப் பெற்ற பாகரப்பிரபன் (இராமதத்தை) விந்தையர் நாட்டில் தரணி திலகம் என்னும் நகரத்தில் ஸ்ரீதரை என்னும் பெண்ணாகப் பிறந்தாள். அவளை அளகை நகரத்து அரசன் தருசகன் என்பவன் மணந்து கொண்டான்.

முற்பிறவியில் தனது இளைய மகன் பூரண சந்திரனே மறு பிறவியிலும் மகனாகபிறக்க வேண்டும்என்று நினைத்ததைப் போலவே ஸ்ரீதரை (இராமதத்தை) வயிற்றிலே யசோதரை என்னும் பெண்ணாகப் பிறந்தான். 

முன்பு வாருணி என்னும்அந்தணப்  பெண்ணாகவும், அடுத்த பிறவியில் பூரணச்சந்திரன் மகனாகவும், அதன் பின்கல்ப உலகத்து தேவனாகவும் தோன்றிய வைடூரியப் பிரபன் ஸ்ரீதரைக்கு மகளாகப் பிறந்தாள்.அவளே யசோதரை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

---------------- 

மன்னனும் தேவியும் மைந்தனும் சுவர்க்கம் புக்க சுருக்கம் -6  

தொடர்ச்சி... 

யசோதரையை சூர்யவர்த்தன் என்பவன் மணந்து கொண்டான். அவன் நல் ஒழுக்கமுடையவன். முன்பு சகஸ்ரரா கல்பத்தில் ஸ்ரீதர தேவனாக இருந்தவனே விண்ணுலக வாழ்வை நீத்து யசோதரை வயிற்றில் கிரண வேகன் என்னும் திருநாமத்துடன் பிறந்தான்.

கிரண வேகன் வளர்ந்து வரும் நாளில் சூரிய வர்த்தன் வாழ்வின் நிலையற்ற தன்மையைப் பற்றிச் சிந்தித்தான்.
யானைகளுக்கு அரசனாக இருந்தாலும் அதனுடைய கால்கள் சேற்றிலே சிக்கினால் அவ் யானையால் அரசனுக்கு பயனேதுமில்லை. 

அதுபோல் நமது அறியாமையால் சேர்ந்த கொடிய பாபத் துன்பச் சேற்றில் வீழ்ந்த போது அதிலிருந்து மீள ஒரு மார்க்கமும் நமக்கு இருக்காது எனப் பலவாறு நினைத்து விஜயார்த்த மலையிலிருந்து இறங்கி மண்ணுலகிற்கு வந்தான்.
அரிச்சந்திரன் என்னும் முனிவரைக் கண்டு வணங்கினான். 

அவரிடம் எட்டு வினைகளின் தன்மையை விளக்கமாகக் கூறுங்கள் என வேண்டினான்.
முனிவர் மன்னனை நோக்கி சொல்லத் தொடங்கினார்.

ஞானாவரணீயம் என்னும் கர்ம உயர் ஞானத்தையும், தர்சனா வரணீயம் என்னும் கர்மக் காட்சியையும், இருள் போலச் சூழ்ந்து மறைத்து விடும்.

புண்ணிய பாபம் என்னும் வேதனீய கர்மங்கள் வாளாயுதத்தின் இரண்டு பக்கங்களில் ஒன்றில் அமுதத்தையும், மற்ற ஒன்றில் நஞ்சினையும் பூசி நாக்கிலே படியுமாறு வைத்தற்கு நிகராகும்.

மோகனீய கர்மம் பைத்தியம் பிடித்தது போன்ற ஒரு மயக்கத்தை உண்டு பண்ணும்.


ஆயுள் கர்ம வினையானது பெரிய விலங்குக்குச் சமமாகும்.

பல்வேறு வகையான ஓவியங்களை வரையும் சித்திரக் காரியைப் போன்றது நாமகர்மம்.

உயர்வு தாழ்வுகளை அளிப்பது தான் கோத்திர கர்மம், அது சிறிய பெரிய பாத்திரங்களைச் செய்யும் குயவனைப் போன்றது.

அந்தராய கர்மம் என்பது சேர்த்த செல்வத்தை யாரும் கவராமலும் சேர்த்தவனுக்கும் பயன் தராதபடியும் காவல் புரியும் காவல்காரனைப் போன்றது என்றார்.

மேலும், மோகனீய கர்மமானது வினைகளுக்கெல்லாம் அரசன்.

அடுத்து நமது பேதமையினாலாகிய ஆசை, குரோதம், மயக்கம் இவைகளால் பாப கர்மங்கள் வந்து சேரும் அந்த கர்மங்களினால் நாற்பிறவிகளில் அடையக் கூடிய அறுவகை உடல்களில் ஒன்றையேற்று ஐவகைப் பொறிகளில் எவற்றைப் பெறுகின்றோமோ அவற்றின் புலன்களில் பொருந்தி முறைப்படி, ஆசை, கோபம் இவற்றைப் பெற்று நான்கு கதிகளில் மீண்டுச் சிக்கிச் சுழல வேண்டும். இது தான் நடப்பதெனக் கூறினார்

மேலும் முனிவர் தொடர்கிறார்.. 

நல்லுணர்வு பெற்ற பான்மையாளர்கள் மாறி மாறி சுற்றச் செய்யும் இந்த நிலையற்ற சுழற்சியை வென்று நிலையான தன்மை எய்துவர்.

பான்மையற்றவர்கள் சுழற்சியில் சிக்கித் தவிப்பர் என முனிவர் கூறவே தனது அரசாட்சியை தன் மகன் கிரண வேகனிடம் ஒப்படைத்து துறவேற்றான் சூரிய வர்த்தன்.

-------------------------- 

மன்னனும் தேவியும் மைந்தனும் சுவர்க்க புக்க சருக்கம - 6 ன் 

தொடர்ச்சி

 மன்னனின் பட்டத்தரசி யசோதரையும், அவள் அன்னை ஸ்ரீதரையும் குணவதி ஆர்யாங்கனையிடம் துறவேற்றனர். அவர்கள் அங்கம், பூர்வம் என்னும் ஆகமம் பிரிவுகளைக் கற்றுணர்ந்தனர். சிங்க நிஷ்க்ரீடம் என்னும் நோன்பினை ஏற்றனர்.

கிரண வேகன் இந்த  இல்லற வாழ்வானது துன்பம் தரத்தக்கது என உணர்ந்து சித்தாயனம் என்னும் ஆலயத்தை அடைந்தான்.
அவ்வாலயத்தில் ஜின பகவானை மலர்களைத் தூவி வணங்கித் துதித்து, போற்றவும் செய்தான்.

இறைவனே! நீ எங்களுடைய சாதாரண அறிவினால் அறிதற்கரிய மிக உயர்ந்த கேவல அறிவினை யுடையவன். நீ ஐம்பொறிகளால் உண்டாகும் இன்பங்களை வென்றவன். மாசற்ற உனது குணங்களை வாழ்த்துதற்கும் நான் தகுதியற்றவன். உயிர் முதலாகிய அறுவகைத் திரவியங்களும் மாறுதலற்ற அவற்றின் அடிப்படை இயல்பினால் ஒன்றுதான். ஆனால் தோற்றம் அழிவு மாறுதல் இயல்பினால் பலவாகத் தோன்றும் என்னும் பொருள்களின் தன்மைகளைக் கூறினாய்.

இவ்வாறு உனது வாலறிவினால் அறிந்து கூறிய இந்தத் திரவிய உண்மைகள்
வினைகளுடன் உழல்வோருக்கு விளங்காதன போலும்.
மேலும், ஒவ்வொரு பொருளும் அப்பொருள்களின் மாறாத் தன்மைகளை நோக்கும்போது அவை அழியக்கூடியவையல்ல.

ஆனால் அதே பொருள்கள் மற்றப் பொருள்களின் தொடர்பால் மாற்றமடைந்து அழியும் தன்மையுடையவை என்றாய். அதாவது அநித்யமானதாகும் என்றாய். நிலையாக நின்ற நீ கூறிய பொருளின் நிலைத்த நிலையற்ற உண்மைகளை அனுதினமும் உணர்பவர்களுடைய வினைகள் ஒழியும் எனவும் கூறினாய்.

நீ பெற்ற ஆற்றல்களையும் நானும் பெற்றதாக உணர்கிறேன். மூன்றுலகத்திற்கும் தலைவனே அடியவனாகிய எனது வினைகள் தீரும் வண்ணம் அறத்தினை அருளுக என்றான். உன் பாத கமலங்களை நான் அடைந்தமையால் கடலில் மூழ்கியவன் கரை சேர்ந்த நன்மையை அடைந்துள்ளேன் என நினைத்தான் கிரண வேகன். 

அரிச்சந்திரன் என்னும் முனிவரை பணிந்து வணங்கினான்.


ஒவ்வொரு பொருளும் நிலையானவை. அவை தோன்றுவதோ கெடுவதோ இல்லையென்றால் அக் கொள்கைப்படி இந்த நிலையற்ற சம்சார வாழ்விற்கு முடிவில்லாமல் மோட்சத்தின் வாழ்வும் இல்லையென்றாகும். எனவே இவற்றை எல்லாம் அறிந்து உணர்த்தும் இறைவனும், அவனால் அருளப்படும் ஆகமங் களும் இல்லாது போகும்.

------------------- 

மன்னனும் தேவியும் மைந்தனும் சுவர்க்கம் புக்க சருக்கம்

6 ன் தொடர்ச்சி

.அனைத்துமே நிலையானவை என்று கூறினால் அக்கொள் கைப்படிவினைகளைச் செய்வதோ, அவற்றின் பயன்களை அடைவதோஇல்லை என்பதைத்தெளிக.

 ஒன்றைப் பற்றி ஞானத்தால் அறிவதோ மீண்டும் அவற்றைப் பற்றிச் சிந்திப்பதோ இல்லை. 

இதனால் நாம் அறிந்த ஆறு இட்டங்களும் முரணாகும்.(ஆறு இட்டங்களாவன.ஆப்தேட்டம், ஆகமே ட்டம், சம்சாரரேட்டம், மோட்ே சட்டம், கர்ம பலசம்ப ந் தேட்டம், பிரத்திய பஞ்சானே ட்டம்)

 பொருள்கள் மாறாதவை என்றால் கடன் கொடுத்தவன் அதனைத் திரும்பப்பெற மாட்டான். கடன் பெற்றவனும் திரும்பத் தர மாட்டான். (இதனால் உலக நடைமுறை நியதி இராது)

 பெண்கள் பெற்றெடுத்த குழந்தைகள் வளர மாட்டார்கள், (இதனால் உடல் வளர்ச்சி இராது) 

ஓர் ஆகமத்தை எடுத்து உரைத்து முடிக்க மாட்டார்கள் (இதனால் நூல் விளக்கம் இராது) எனவே மூன்று திட்டங்களும் மாறுபட்டுப் போகும்

.(மூன்று திட்டங்கள் 1 வோகப்ரவர்த்தி.2புருஷ ப்ரவர்த்தி  3. ஆகமப்ரவர்த்தி என்பன.)பொருள்கள் எப்போதும் நிலையானது என்று சொல்பவனுடையக் கூற்றே முரணாகும்.

 மேலும் பிறரால் கொள்ளப்பட்ட கொள்கைகளான இட்டம் ஆறு, திட்டம் மூன்று ஆக இந்த ஒன்பதோடுமாறுபாட்டைப் பெறுவதால்  அனைத்தும் நிலையான வை என்று சொல்பவன் அவன் போக்கிலேயே போகட்டும்.

 ஒவ்வொரு பொருளும் நிலையானவைஎன்று கூறுவது நித்திய வாதம்.

உலகில் தோன்றிய பொருள்கள் நிலைத்திருப்பன அல்ல.

அவை முக் கூட்டுநிலை அடைகின்றன தோன்றுதல், வளர்தல்,மாய்தலாகும்.

உயிர்ப்பொருள்கள் இத்தகு மாற்றங்கள் அடைகின்றன. புத்தலப் பொருட்களும் இத்தகு நிலைகளை அடைகின்றன.

 நித்திய வாதத்தைஏற்றுக் கொண்டால் முக்கூட்டு நிலைஇல்லை என்றாகி விடும். 

2அநித்திய வாதம் : அனைத்தும் நிலையற்றவைஎன்று கொண்டவனுடைய எண்ணம், சொல் அவனால் அநித்தியமாகக் கருதப்படும் பொருள், அதைப் பற்றி ஒருவன் எழுப்பும் வினா இந் நான்கும் அக்கணமே அழியும். 

அதன் பின் அனைத்தும் நிலையானது என்று எவ்வாறு கூற முடியும்.ஒவ்வொரு கணமும் பொருள்கள் தோன்றி அழிவதே அநித்யம் என்றால் ஒரு பொருள் நிலைத்திருக்கும், நிலையில்லை என்றால் ஒவ்வொரு கணமும் தோன்றி அழிந்தவனது கேட்டினை ஒருவனால் உணர்ந்து கூற இயலுமா?இயலாதா!


ஒருவனால் கூற இயலும் என்றால் ஒரு விளக்கு அவிந்து (அணைந்து,) போன பிறகும், அவ்வொளியே சிறிது நேரம் இருளை நீங்கச் செய்யும் என்ற மேற்கோளைக்காட்டி அது போல் இருந்து மறைந்து விட்டவனே சொல்வான் எனில், அது நித்தியம், அநித்தியம் என்னும் தத்துவத்தை ஒட்டியதாகும்..

------------------- 


மன்னனும், தேவியும், 

மைந்தனும சுவர்க்கம் புக்க சருக்கம் - 6 

ன் தொடர்ச்சி.

முதலில் தோன்றியவனது சிந்தனையும், அடுத்த கணத்தில் தோன்றியவனுடைய சிந்தனையும் வெவ் வேறானது எல்லாம் அநித்தியம் என்ற கருத்தை ஏற்கத்தக்கதாகும்

ஆனால் முன்பின் தோன்றிய இருவருடைய கருத்தும் ஒன்றாக ஒத்திருந்தால், தோற்றம் என்பது ஒன்று இருக்கின்ற படியால் அப்படிக் கூறியவன் நித்தியத்தையும் ஏற்றவனாவான்.

நீர் நிலையில் உள்ள கொக்கு தனக்கேத்த உணவை ஏற்று மற்றதை நீக்குதல் போல், புத்தனாக விரும்புவன் பத்துக் குணங்களைக் ஏற்று, நிர்வாணமடைய வேண்டு
மென்ற ஆர்வத்தோடு மீண்டும் புத்தனாகப் பிறந்து ஞானத்தை அடைவானாயின் நித்திய தத்துவம்  ஏற்கப்பட்டதாகும்.

நெருப்பில் நன்கு காய்ந்த மண் ஓட்டில் விழுந்த நீர்த்துளியைப் போல், பெற்ற பாவனையோடு ஒருவன் மாய்ந்து போனால் அப்படி மாய்ந்தவன் இல்லாதவனேயாவான்.

அப்படி இருக்க அவர்கள் கூறும் பாழாகிய நிர்வாணத்திற்குரியவன் யாராக இருக்க முடியும்.

ஆகவே இவ் வேறுபாடுகளை உணராமல் அனைத்தும் அநித்தியம் என்போர் புத்தனாகிய இறைவனையும் அநித்தியமாகும்படி செய்து அந்த அநித்திய வாதிகளால் கூறப்பட்ட ஆகமங்களும் நிலையன்றி ஒழிந்த பின், பிறகு எப்படி அநித்தியத் தத்துவத்தைச் சாதிக்க முடியும். 

ஆகவே, அனைத்தும் நிலையற்றவை என்ற அநித்திய வாதமும் ஏற்கத்தக்கதல்ல. அப்படி ஏற்றுக் கொண்டால் புண்ணியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைத்தவன் அதைச் செய்ய முடியாது. ஏற்கனவே பாவ புண்ணியங்களைச் செய்தவனால் அதன் பயனை நுகரவும் முடியாது. மேலும், ஒன்றைப் பற்றி அது  இத்தன்மைத்து என்று சிந்தித்து உணரும் அறிவானது அந்த அநித்தியத் தத்துவத்தால் இல்லாது போகும், 

அப்படி என்றால் இருள் நீங்குமாறு ஏற்றப்பட்ட விளக்கு இது தான் என்று அறிவால் மீண்டும் உணர்வதும் மயக்கமே யாகும்

இட்டங்கள் ஆறும் இல்லாது போனால், கொள்கை ஏதுமின்றி ஒழிந்து,, சொல்லும் மாறுபட்டு, மூன்று இட்டங்களும் முரண்பட்டுத்  தெளிவில்லாமல் எல்லாம் அநித்தம் என்பவனுடைய, அநித்தியத் தத்துவப்படி அனைத்தும் மேன்மையும் அழிவதாக.. 


இந்த சம்சார வாழ்வை ஒழித்து வீடு பெறும் மேலோர் கூறும் ஒரு நோக்கில் பொருள்கள் அநித்தியமாகும் என்பதே அறமாகும்.

------------------ 

மன்னனும் தேவியும் மைந்தனும் சுவர்க்கம் புக்க சருக்கம் - 6 

தொடர்ச்சி. 

அவாச்சிய வாதம்.

மொழியால் பொருள்களின் தன்மையை அறியவோ, அறிவிக்கவோ முடியாததை அவாச்சியம் என்பர். இவ்வாதத்தை ஏற்றுக் கொண்டால் இவ்வுலகத்தார் கூறுபவை பொய் என்றாகிவிடும். ஆகமங்களும் உண்மையைக் கூறவில்லை . யாராலும் உண்மையை க் கூற இயலாது என்றாகிவிடும்.

மொழி பொருளின் முழுத் தன்மையையும் உரைக்கும் ஆற்றல் அற்றதாக இருக்கலாமே ஒழிய பொருள்களைப் பற்றிய தன்மைகளை  மொழியால் உரைக்கவே இயலாது என்பது ஏற்புடையது அல்ல.
இனிப்பு  என்ற சொல்லைக் கூறியவுடன், அதன் தன்மை ஒரளவு உணர்ந்தாலும் சுவை தன்மையை முற்றிலும் உணர்ந்ததாக கூற முடியாது. 

எனவே ஒரு வகையில் இனிப்பு என்ற சொல்லானது அவாச்சியமாகவும் வேறொருப் பார்வையில் முழுமையாக விளக்கும் ஆற்றலற்ற தாகவும் இருக்கலாம். இவ்வுலகில் அமைந்த வார்த்தைகள் அனைத்தும் குறிக்கும் பொருள் ஏதுமில்லை. அவை வெறும் சொற்களே பொருள் ஏதுமில்லை. அவை வெறும் சொற்களே என்றால், இவ்வுலகத்தவர் கூறும் அனைத்தும் பொய்யாகும்.ஆகமங்களும் உண்மையை உரைக்க மாட்டா. அறிவும் மாறுபட்டதே யாகும்.

எனவேஉலகத்து ஆகமங்களோடு அவாச்சியவானவன் மாறுபட்டு உள்ளான

பின்ன வாதம் : 

இனி குணம் வேறு, அந்தக் குணமுடைய பொருள் வேறு, இரண்டிற்கும் தொடர்பே இல்லை என்னும் பின்ன வாதத்தால், இவ்விரண்டும் வெவ்வேறாக இருந்து பின்பு இரண்டும் ஒன்று சேர்த்ததாகக் கொள்ள வேண்டும்.

உயர் ஞானத்துடன் காட்சி முதலிய ஆன்ம குணங்கள் ஆன்மாவை விட்டுப் பிரிந்து வேறு இடத்திலிருப்பதாகவும் அமையும். குணங்கள் பொருளின் இயல்பு என்றும் மறுக்கப்படுவதால் குணங்கள் வேறு இடத்தில் சேர்ந்தும், பிரிந்தும் செயல்படுவதாகும். 

எனவே உயிரிடத்தில் அசேதன குணங்கள் இருப்பதாகும். இப்படிப் பார்த்தால் தனக்கே யுரிய குணத்தோடு ஒரு பொருளும் உலகில் இல்லை என்றாகிவிடும்

பொருள் வேறு, அதன் தன்மைவேறு என்று சொல்வார்களேயானால், உயிரினுடைய எவ்வித முயற்சியுமின்றி செற்றம், மயக்கம், ஆசை போன்ற வினைக்கட்டிற்கான காரணங்கள் நீங்கிவிடப் பந்தமோ, வீடோ இல்லாது கிணற்றிலிட்டகல்லைப் போல் கலக்க மில்லாத நிலையில் ஆன்மா இருக்கும். 

அப்படியெனில் தவம் முதலிய வற்றால் பெறுவதற்கு என்ன இருக்கின்றது? உடலில் இருக்கும் உயிரைப் போல்
குணங்களும்  அவற்றையுடைய பொருளும் தனித்தனியாகப் பிரிந்து விடும் என்பதைக் கண்டிருந்தால் அவை தனித்தனியானவை என்னும் வாதம் ஏற்புடைய தாகும். 

நம்முடைய அறியா இயல்பால் சொல்லளவில் குணமும், அதையுடைய பொருளும் வேறு போலத்தோன்றினாலும் அவை ஒன்றேமாகும்.
சொல்லை மட்டும் வைத்துப் பொருள் கொண்டால், நாம் கூறும் மங்கை, மடந்தை மாது என்று ஒரு பொருள் பற்றிக் கூறும் சொற்களுக்குத் தனித்தனியே பொருள் இருக்க வேண்டும். 

அப்படி இல்லையேல் இதனால் குணம் குணி இவை ஒன்றே பிரிக்க முடியாதவை என்பதாம்.-


 அபின்ன வாதம் பற்றி..
-----------------

மன்னனும், தேவியும், மைந்தனும் சுவர்க்கம் புக்க சருக்கம் - 6 

ன் தொடர்ச்சி.

அபின்ன வாதம்.

பொருளில் இருந்து குணத்தைப் பிரிக்க முடியாது என்பதே அபின்ன வாதமாகும். இதனை ஏற்றால் வீடுபேறே இல்லாது போகும்.
வீட்டுயிர், மாற்றுயிர் என்ற வேறுபாடு இல்லாமல் போகும்.

அனைத்தும் ஒன்றே என்னும் அபின்ன வாதியின் நூலைக் கற்பவனும் அனைத்தும்  பின்னமே என்பானது நூலைக் கற்பவனும் ஒன்று பட்டவர்களே. அவர்களால் கூறப்படும் வீடு பற்றிய முடிவும் ஒன்றேயாகும். அனைத்தும் ஒன்றே என்றுரைக்கும் அபின்ன வாதியானவன் மழை, தீ, வெயில் முதலியவற்றில் இருந்து வேறு இடத்திற்குசெல்வது ஏன்?

பசி என்றால் மண்ணை உண்ணாமல் சோற்றுக்கு வருந்தி பசியால் உறங்குவதேன்? இரண்டும் ஒன்றானால் உறங்குவதும் ஒதுங்குவதும் ஏன்? இவற்றை எல்லாம் பார்க்கும் போது ஒரு நோக்கில் அபின்னம், ஒரு நோக்கில் பின்னமாகும்.
அதை விடுத்து அபின்னமே என்று சாதித்தல் மயக்கமாகும்.

எண்ணற்ற நீர் நிறைந்த மண் அகல்களில் தனித்தனியே  தோன்றும் சந்திரனைப் போலவும், ஒவ்வொரு பாத்திரத்னுள்ளே இருக்கும் வெற்றிடம் அதாவது ஆகாயம் போலவும், உயிர் பலவாகத் தோன்றினால் சந்திரனைப் போல், ஆகாயத்தைப் போல் ஒரே ஆத்மாதான் பலவாகத் தோன்றுகிறது என்று கூறினால், சந்திர பிம்பம் எல்லா அகல்களிலும் வேறுபாடின்றி தோன்றுவது போல்.

உடலிலுள்ள உயிரும் மாறுபாடின்றி அதாவது ஆயுள், அறிவு முதலியவற்றில் வித்தியாசமில்லாமல் இன்ப துன்ப முதலியவற்றில் எல்லா உயிர்கள் மட்டும் சமமாக இருக்குமானால் கூறிய மேற்கோள் பொருந்தும்.

 மாறுபடுவதால் அந்த உவமைகள் ஏற்புடையதல்ல. நீர்க் குடங்களில் தோன்றும் தாக்குதல்களால் நீர் தளும்பும்போது, நீரில் தோன்றக் கூடிய சந்திர பிம்பமும் அசையும். அது போல் ஏதோஒரு தீய தன்மையால் ஞானம் முதலிய பண்புகள் ஒரு சில இடங்களில் பொருந்தியும் பொருந்தாமலும் போகலாம். 

எப்படி நீர் அசைவால் சந்திரனுடைய உருவம் நீரில் அசைந்தாலும் விண்ணில் உள்ள சந்திரனுக்கு எவ்வித அசைவும் தோன்றாது என்றால் இந்த மேற்கோள் இன்ப துன்பங்கள் உடலுக்கேஉயிர்க்கு அல்ல.

அப்படியென்றால் ஒவ்வோர் உயிரும் முற்பிறவியில் செய்த புண்ணிய பாபங்களின் பயன்களை ஏற்று, பிறத்தல், இறத்தல் என்பது இல்லாது போகும். நீர் உள்ள குடத்தின் மேலே விண்ணிலிருக்கின்ற சந்திரன் நிலைத்திருக்க, நீரில் தோன்றும் உருவமும் அப்படியே நீங்காது இருக்கும் என்றால், உன்னுடைய அபின்னவாதத்தின் படி பரமாத்மன் நிலைத்திருக்க ஒவ்வொரு உடலிலுள்ள அவனது சாயையும் மறையாது இருக்க வேண்டும். 

அப்படி இன்றிப் பரமாத்ம சாயை என்னும் உயிர் ஒழிய, உடல் பிணமாவதால் உனது தத்துவம் பிழை பட்டதாகும்
சந்திரனையும், நீரில் தோன்றும் அதனுடைய சாயலையும் போன்ற இரண்டு உயிர்களைக் கண்டதில்லை. அப்படியே இரண்டு உயிர்கள் நிற்குமானால் அபின்ன வாதம்  உனது மேற்கோள் படி நிலைக்காது.

உடலானது அடியோடு மறந்து போக, உயிர் மட்டும் நிற்குமானால் அபின்னவாதியாகிய உன்னால் சொல்லப்படுவது ஏற்புடைய தாகும்.
உலகியலுக்கு மாறுபடாப் பலவகைகளில் பொருள்களின் நித்திய, அநித்திய தன்மைகளை எடுத்துரைத்தும் இதனை அறிந்து உணராது எனது அநித்தியக் கொள்கையில் பிடிவாதமாக நின்று அனைத்தும் ஒன்றே எனச் சாதித்தால் அத் தன்மை, பிறவிக் குருடனுக்கு பேரிருளே இவ்வுலகமாகும். 

நீயும் அத்தகையவனே உன்னால் யாரால் தேற்ற இயலும், இயலாது என்பதாம்.

---------------------- 

மன்னனும், தேவியும், மைந்தனும் சுவர்க்கம் புக்க சருக்கம் - 6 ன்
 தொடர்ச்சி

சூனிய வாதம்

அனைத்தும் சூனியமே என்பவனுடைய சூனியமென்ற தத்துவம் நிற்காது. அவனே இல்லையெனில் அவன் கூறும் சூனிய வாதமும் எங்கே இருக்க முடியும்?எல்லாம் சூனியம் என்று கூறுபவனும் சூனியமாக வேண்டும். சூனியம் பொருள் முன்னே இருந்திருக்குமா? முன்னே இல்லையென்றால் அதைப் பற்றிக் கூற வேண்டியதே இல்லை. முன்பு இருந்து பிறகு இல்லாது போனதற்குச் சர்வ சூனியம் என்ற வாதம் பொருந்தாது.

ஒன்று தோன்றுவதும் பிறகு மறைவதும் ஆகிய தோற்ற மறைவுகள் பொருளைப் பற்றித் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாகும். இவை இரண்டும் இல்லை. அனைத்தும் சூனியம் என்றால் நேரில் காணும் உலகியல் நடைமுறைக்கு மிகவும் முரணாகும். 

கிரணவேக வேந்தனே  ஆறு இட்டங்களையும் மூன்று திட்டங்களையும் புறக்கணித்து தனது கொள்கையும் ஒழித்து, முரண்பட்டுத் தனது பேச்சே தனக்கு மாறாக அமைத்த தீ நெறிகள் ஆறு கூறினேன் இனி தூய  நன்னெறியைக் கூறுகின்றேன்கேட்பாயாக!

 ஸ்யாத் வாதம்.

நிலையற்ற ஒரு பொருளைக் குறிக்கும் ஒன்றைப் பற்றிய  சொல்லும் இல்லை. அப்பொருளுக்கு அறிவும் இல்லை. அதனால்  பெறும் பயனும் ஒன்றுமில்லை. அதற்கு நிலைத்தன்மையும் உண்டாவதில்லை. 

நிலையான ஒரு பொருளுக்குள்ள நிலையான குணத்தினால், அதை உணரும் மனமும், அது குறித்த சொல்லும் மாறுபடாமல் எப்போதும் உறுதியாக நிலைத் திருக்கும். அப்பொருளேமாறும் பண்புடையதாக இருப்பதால், அது பற்றிய சிந்தனையும், சொல்லும் மாறுபடுவதால் அது நிலையற்றதாகின்றது.

எனவே ஒரு பொருளானது நிலையற்ற, நிலையான தன்மையையும் பெற்றுள்ளது என்பதை உணரலாம். ஒரு பொருள் இந்த நிச்சய மாறுபடும் குணங்கள் முடிவற்றதாகும். உயிர் முதலிய பொருள்கள் அடையும் நிச்சய, மாறுபட்ட நிலைகளை எடுத்துரைக்க இயலாது.

அப்படி விவரிக்க நிலையை உயிர் முதலிய பொருள்கள் ஒரு நோக்கில் சொல்லால் விளக்க இயலாத நிலைகளைப் பெற்றவையாகும். உயிர் முதலிய பொருள்களிடத்து அந்தந்தபொருள்களுக்கு உரிய இயல்புத் தன்மைகளும், மற்ற பொருள்களின் மாற்றுத் தன்மைகளும் அவ்விருவகைகளில் அறிவு முதலியவற்றின் பின்னமாக இருப்பதால் அந்த நோக்கில் பின்னமாக ஏற்கப்படும். 


இனி உயிர் முதலிய பொருள்கள் அவற்றின் அன்வயகுணம், விபாப குணம், வெல்லப்படுதல் முதலியவற்றைக் கேட்டுப் பிறர்க்கு உரைப்பாயாக.

----------------------- 

மன்னனும் தேவியும் மைந்தனும் சுவர்க்க புக்க சருக்கம் - 6 

ன் தொடர்ச்சி.


உயிரினது உண்மையான இயல்பு, அதாவது அன்வய குணம் யாதெனில் சம்சாரத்தில் இருக்கும் போதும், வீட்டில் நிற்கும் போதும் நீங்காது உடன் நிற்கும் மிகச் சிறந்த ஆற்றலைப் பற்றித் தொடர்ந்து எழும் ஞானம் முதலியவைகள் உயிரின் அன்வய குணம் என்று கூறலாம்.

சம்சார வாழ்வில் மட்டும் வீடு பெறுங்காலத்து நில்லாது நீங்கி விடும் மாறுபட்ட தன்மைகளான விருப்பு,வெறுப்புகள் அதாவது இராகத் துவேஷங்களே வேறுபட்டவெதிரேக குணங்களாகும்.

 தங்கமானது தன் தன்மையில் மாறுபடாமல் இருந்து பல்வேறு உருவங்களை அடைகிறது.

 சங்கிலி, வளையல், மோதிரம் என உருமாற்றம் செய்யப்பட்டாலும் நிறம், குணங்களிலிருந்து மாறுபடாது. 

அது போல் உயிரானது நால் வகைக் கதிகளில் பிறந்தாலும் நின்றாலும் தன் இயல்புத் தன்மையில் மாற்றம் அடையாது.எனவே பொருளும், அதன் இயல்புத் தன்மையும் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து வேறு இடங்களில் இருக்க முடியாது. இருக்கவுமில்லை.

 ஆகையால் உயிர் முதலிய பொருள்களின் இயல்பான ஞானாதி குணங்கள் பிரித்தற்கியலா அபின்னமாகும். 

அறிவற்ற அசேதனப் பொருள்களில் சேதனத் தன்மையும், சேதனப் பொருள்களில் அசேதனத் தன்மையும், உருவப் பொருள்களில் உருவமற்ற பொருள்களின் தன்மையும் இல்லாததால் அந்த அளவில் சூனியமாகும் என்று கூறுகின்றேன்.

நித்தியம் முதலாகக் கூறப்பட்ட அறுவகை மாறுபட்ட தன்மைகளும் ஒரே பொருளில் உள்ளதை உய்த்துணர்ந்தால், தலைவன்முதலாகிய ஆறு இட்டங்களும், உலக முறை முதலாகிய மூன்று திட்டங்களும் பொருந்தி நிற்கும்.

அறுவகைத் தன்மைகளும் ஒரு பொருட்கே உரியவை என்றறிவது உண்மையாகும்.மேலும் இறைவனால் கூறப்பட்ட ஏழு பங்க நயங்களைப் பார்ப்போம்

சப்த பங்கி

வேந்தனே !இருப்பு, இருப்பின்மை, இருப்பு இருப்பின்மை, உரைக்கொணாமை, இருப்பு உரைக் கொணாமை, இருப்பின்மைஉரைக் கொணாமை, இருப்பு இருப்பின்மை உரைக்கொணாமை ஆகிய இந்த ஸப்த பங்கி எனப்படும் ஏழையும் ஒரு பொருளிடத்தே பொருத்திப் பார்த்தல் நன்மையாகும்.

தனித்தனியாகக் கருதினால் தீ நயம் ;அதாவது மித்யா நயமாகும்.நிலையானது எனப்பட்டதற்கே நிலையற்ற தன்மை இல்லாது போனால் இவ்வுலக முழுதும் நிலையான அப்பொருளே இருக்க முடியும். 

உண்டு என்ற பொருளுக்கு இல்லை என்ற தன்மை எவ்வாறுஅப்பொருளே இருக்க முடியும். உண்டு என்ற பொருளுக்கு இல்லை என்ற தன்மை எவ்வாறு அமையுமெனில், மலர் அணிந்த அழகிய மனைவியென்பவள் அவள் கணவனுக்கு மகளாக ஆக முடியாதல்லவா?


உண்டெனப் பட்ட தற்கே இல்லையா முருவ மின்றேல் /உண்டெனப் பட்ட வொன்றே யாமிந்த வுலக மெல்லாம் /உண்டெனப் பட்ட தற்கே யில்லை மாறென் னென்னில்/வண்டுணுங் கோதை யாவாள் மகளிலா வுருவ மன்றோ. - மே.ம.பு.-705.

--------------- 


மன்னனும் தேவியும் மைந்தனும் சுவர்க்கம் புக்க சருக்கம் - 6 

ன் தொடர்ச்சி.

உறவு முறையில் தன் மகனுக்குத் தந்தையாயிருப்பவன் தன் தந்தைக்கு மகன் முறையாகிறான். தன் மனைவிக்கு கணவனாகவும். பேரனுக்குப் பாட்டனாகவும் மாறுகின்றான். இப்போது அவனை யாரென்று அழைப்பது? தந்தையா? மகனா? கணவனா? பாட்டனா? இப்படித்தான் ஒரு பொருளிடம் முரண்பட்ட பல குணங்கள் பொதிந்துள்ளன என அறிதல் வேண்டும்.

ஒரு குடமானது நிலையானது என்றால் அது உலக மெங்கும் நிறைந்திருக்க இயலுமா? அப்படி இல்லை அது வைக்கப்பட்ட இடத்தில் உள்ளது என்றால்  அந்த இடத்தில் மட்டும் உள்ளதாகும். மற்ற இடங்களில் இராததால் இடத்தை வைத்து நோக்கும் போது இல்லததால் நாஸ்தியாகும்.

இவ்வாறு பொருள் கொள்ளவில்லை என்றால் முழுதும் குடம் இருப்பதாக அமைந்துவிடும். இதனால் ஒவ்வொரு பொருளும், தன் பொருள், தன் இடம், தன் காலம், தன் பாவம் இவற்றால் அஸ்தியாகவும், பிற பொருள். பிற இடம், பிற இடம் இவற்றால் நாஸ்தியாகவும் அமையும்.

இந்தப் பொருள் என்று நம்மால் சுட்டிக் காட்டப்பட்ட ஒரு பொருளுக்கு அது என்று சுட்டப்பட்ட வேறு பொருளின் தன்மையும் இருக்குமானால் இப்பொருள் அப்பொருள் என்று தன்மையால் எப்படி வேறுபடுத்தி அறிய இயலும்?

ஒரு பொருளுக்கு மற்றொரு பொருளின் தன்மை இல்லாதிருந்தால் இது, அது எனச் சுட்டுகின்றோம். ஒவ்வொரு பொருளுக்கும் சாதாரண தன்மைகளுடன் சிறப்புக் குணமும் இல்லையேல் பொருள் கெட்டுப்போகும், அப்படிக்  கெட்ட பிறகு உண்டு என்பதும் இல்லை என்பதும் இயலாது சூனியமாகும்.

உயிரானது நிலைத்திருப்பதாலும், ஞானம் முதலிய குணங்களினாலும் அக்குணங்களுக்குக் குணமாகிய நிலைத்த பொருளாகும் என்றால், அந்த நிலைத்த பொருளுக்கு மாறாகிய அதாவது நிலையற்ற ஞானமற்ற பொருள்களின் தன்மைகள் எல்லாம் நிலைத்த பொருளிடத்தில் இல்லாமையால் அந் நிலையில் அப்பொருள் இல்லாததாகும்.

எனவேஉயிர் நாத்தி என்றுபொருள்படும் இவ்வாறு ஏழு யவகைப் பங்கிகளும் ஒரு பொருளில் அமையவும் வாய்ப்பு உண்டு. எனவே இருப்பு இன்மை என்னும் இரண்டுமே ஒரு பொருளின் தன்மையாகும்.
மூன்றாவதான இருப்பின்மையை ஒரே சமயத்தில் கூறலாம். இவ்வாறு இருப்பு, இன்மையால் காணப்படுகின்ற பொருள்களை ஒரே சொல்லால் விளக்க இயலாமையால் சொல்லொணாமை எனப்படும் இது நான்காவதாகும்.

மேலும், இருப்பு , இன்மை, இருப்பின்மை (அஸ்தி, நாஸ்தி, அஸ்தி நாஸ்தி) இம் மூன்றுடன் முறையாகச் சொல்லொணாமை என்பதைத் தனித் தனியே சேர்த்துப் பார்க்கும் போது ஒரே பொருளில் இந்த ஏழும் அமையும். 
இதுவரை கூறிய ஸப்த பங்கிகள் என்னும் ஏழு தன்மைகளும் ஒவ்வொரு பொருளுக்கும் பொருந்தி அமைவதாகும்.

இவ்வாறு பொருத்திப் பார்த்ததைத் தவிர்த்து, ஒரு பொருளுக்கு ஒரு தன்மை தான் உண்டு எனப் பார்த்தால், பொருள்களின் உண்மை இயல்பு வெளிப்படாது, மாறுபட்டு தீ நயமாகி அதாவது மித்யா நயமாகி தடுமாறச் செய்து பிறவியைப் பெருக்கும்.


 உள்ளதை உள்ளவாறு உணர்ந்தால் வீட்டினை அளிக்கும்.

------------------- 

சக்ராயுதன் முக்திச் சருக்கம் -7 வது சருக்கம். 


பரதக்ஷேத்திரத்தில் இருக்கும் தரும கண்டத்தில் அழகு மிக்க சக்கரம் என்னும் நகரம் இருந்தது. இந்நகரை அபராசிதன் என்பவன் ஆண்டு வந்தான்.இவனது பட்டத்தரசி வசுந்தரி என்பவளாவாள். இவர்கள் இவ்வாறு இல்லறம் நடத்தி வருகையில் அமர உலகில் வாழ்ந்த சிம்மச்சந்திரனேவசுந்தரியின் வயிற்றில் மகனாகப் பிறந்தான். இவனுக்கு சக்ராயுதன் எனப் பெயரிட்டனர். 


தனது மகன் குமார பருவ மெய்தியதை உணர்ந்த அபராஜித வேந்தன் சித்திர மாலை என்னும் அரச குமாரியைத் திருமணம் செய்து வைத்தான். இவர்களுக்கு முன்னம் காபிட்ட கல்பத்து தேவனாக இருந்த கிரணவேகன் ஆயுள் முடிந்து சக்ராயுதனுக்கு மகனாகப் பிறந்தான்.


 அவனுக்கு வஜ்ராயுதன் எனப் பெயரிட்டனர். சக்ராயுதன் தன் மகன் வஜ்ராயுதனுக்கு மணம் முடிக்க நினைத்தான்.பிருதிவி திலக நகரத்தின் வேந்தன் அதிவேகனின் மகளான இரத்தின மாலை யை மணம் முடித்துவைத்தான்.முன்னம் யசோதரையாகி, பின்பு அமர உலகில் காபிஷ்ட கல்பதேவ ஆயுள் முடிந்து இரத்தினமாலை வயிற்றில் இரத்தினாயுனாகப் பிறந்தான். 


அபராஜித வேந்தன் தனது மகன், மகனுக்கு மகன், அவன் மகன் இவ்வாறு ஒன்று சேர்ந்து ஆனந்த வாழ்க்கை நடத்தும் காலத்தில் ஒரு மா முனிவரைச் சந்தித்தான்.


 அவரிடம் தீவினைகள் ஒழிய நல்வழி காட்டுங்கள் என்றான்.


வேந்தனே !வினைகளின் உண்மை இயல்புகளையும் உயிரின் தன்மையையும், வீடு பேற்றின் மேன்மையையும், வினைகள் பந்திக்கும் திறனையும் நல்லறிவினால் உள்ளவாறு உணர்ந்து ஓரளவாவது பற்றினை நீக்கி நன்னெறியினைச் சேர்ந்து வினைகள் நீங்கத்தக்க தூய விருப்பு வெறுப்பற்ற தன்மையோடு பொருந்தினால் உயிர் மாறுபட்ட இயல்புகளும் வினைகளும், அடியோடு உயிரை விட்டு ஒழியும், வீடும் எய்தும் என்றார் முனிவர்.



வினைஉயிர் கட்டு வீட்டின் மெய்ம்மையை யறிந்து தேறித்/ தினை யனைத் தானும் பற்றில் செறிவிலா நெறியை மே வித்/ தனைவினை நீங்கி நின்ற தன்மைய னாக நோக்க / வினை எனைத் தானும் நீங்கும் விசாரங்க ளோடு மென்றான்.- 

--------------- 

சக்ராயுதன் முக்திச் சருக்கம் - 7 ன்
தொடர்ச்சி
.
மாமுனிவரின் அறவுரையைக் கேட்ட அபராஜிதன் தன் மகன் சக்ராயுதனிடம் ஆட்சியை ஒப்படைத்தான்.
சக்ராயுதன் மற்ற மன்னர்களால் வெல்ல முடியாத வலிமை மிக்க அரசனாய்த்  திகழ்ந்தான்.

 ஐம்பொறிகள் மூலமாக அனுபவிக்கும் போகங்களை நெருப்பிலிடப்பட்ட விறகுக்குச் சமம் எனக் கருதி வெறுத்தான். மேலும், மேலும் பொறி வழி இன்பம் பெற முயல்வோர் அறிவற்றவராவர் என நினைத்தான். வினைப் பயனால் வரும் இன்பங்களை நீக்க தவத்தை மேற்கொண்டால் கர்மங்களை நீக்கி முடிவிலா சுகம் நிலை பெறும் எனக் கருதினான்.
அபராஜித முனிவரிடம் சென்று துறவேற்றான்.

வினைகள் அகல பிரதிமா யோகத்தில் நின்று பதினைந்து நாட்கள், ஒரு மாதம் என உபவாசம் நோற்று மிக்க மகிழ்ச்சியுடன் ஆத்ம பாவனையில் பொருந்தினான். 
நீர்வேட்கை, பசி, பிணி, வேண்டிப் பெறும் உணவு, விரும்பியதைப் பெறாமை, யோகத்திலிருத்தல், ஆகாரத்திற்காகச் செல்லுதல், தரையில் படுத்துறங்கல், ஆடையில்லாமை, காட்சியின்மை, ஞானம் தோன்றாமை, அறியார் தரும் துன்பம், மனம் தடுமாறிக் கலங்கிதரும் துன்பம், மனம் தடுமாறிக் கலங்கி அகத்துன்பங்கள் பதின் மூன்றையும் பொறுத்து வெற்றி பெற்றான்.

வெப்பம், குளிர், மாசுணர்வு, புகழ்ச்சி, இகழ்ச்சி, கடும் ஏச்சு, கொலையுணர்வு, கடித்தல், குத்தல், தினவு, பெண் ஆசைக் குறிப்பு ஆகிய ஒன்பது வகையான புறத் துன்பங்களையும் ஒருங்கே பொறுத்து வென்றான்.

அறுவகைப் பொருள்களில் உயிர் சேதனமாகும். மற்றவை அசேதனங்களாகும். அவற்றுள் உயிரும், புத்கலமும் இடம் மாறக் கூடியவை. மற்றவை நிலைத்திருக்கவும், ஒன்றையொன்று சார்ந்திருக்கவும், உயிரும், புத்கலமும் பல விபாவ மாற்றங்கள் எய்தியும், மற்றவை மாற்ற மேது மின்றியும், புத்கலப் பொருள் மட்டும் உருவமுடைய தாய் மற்றவை உருவமற்றதாய்  இத் தன்மைகள் உடைய ஆறு வகைப் பொருள்கள் ஒன்று சேர்ந்து உலகமாகியும் ஒவ்வொன்றும் தன் தன் குண மாற்றத்தில் வேறுபடாது நிற்கும் தன்மையையும் தனது தியானத்தால் சிந்தித்து நின்றான்.

பரமாணுவினால் மற்ற பொருள்கள் அளிக்கப்பட்டால், உயிர், தர்மம், அதர்மம் ஆகிய மூன்றும் அங்கியப் பிரதேசமாகும். புத்கலப் பரமாணுவும், கால அணுவும் ஒரே பிரதேசமாகும்.ஆகாயம் அனந்த பிரதேச மாகும். ஒன்றோடு ஒன்று சேராத பரமாணு ஏகப் பிரதேசியாய் நிச்சய காலம் ஒன்றே ,விவகார காலம் மூன்றாகும்.அவை இறப்பு எதிர்வு நிகழ்வு என்பன.
இவையல்லாமல் ஏறு காலம், இறங்கு காலம் அனந்த காலமாகும

மேலும் நீங்காத சம்சாரப் பிறப்பில் இருக்கும் கர்பம், உபபாதம், சம்மூர்ச்சனை ஆகிய மூன்று பிறப்பிடங்களையும் சிந்தித்திருந்தான்.
மேலும் வினைகளின் உதயம், அவற்றின் கழிவு இவற்றால் ஆன்மா எய்தும் பயன்களை சிந்தித்தான். வீடு பேறடைவதற்கான மும் மணிகளின் நற்பயன்களையும், மித்யாத்துவத்தால் விளையும் துன்பங்களையும் அதற்குக் காரணமான தீக்காட்சி பேதைமை இவற்றின் விளைவுகள் பற்றியும் சக்ராயுத முனிவர் சிந்தித்தார். 

வச்சிராயுத வேந்தனும் இரத்தின மாலையின் மேல் வைத்திருந்த காதலையும் வெறுத்து  நல்லறிவு பெற்ற நாம் அவை நம்மை விட்டு நீங்கும் முன்பே தவத்தில் தோய்ந்து வீட்டின்பத்தை அடைவோம் எனத் துணிந்தான்.


தனது மகன் இரத்தினாயுதனுக்கு முடி சூட்டினான்.

------------------- 

சக்ராயுதன் முக்திச் சருக்கம் - 7 ன் 

தொடர்ச்சி.

வச்சிராயுதவேந்தன் தன் மகனை நோக்கி சொல்லத் தொடங்கினான்.

 அஞ்ஞானத்தினால் ஆசை வலையில் சிக்குவோர்களை கொடிய நஞ்சு போன்ற பாப வினையானது துன்பம் தந்து உயிரை வாட்டும்.

யானை மீது உலா வந்த மன்னர்களும் அவர்கள் செய்த நல்வினைஅழியுங் காலத்தில் பகைவரிடமே பணியாளர் ஆயினர் என்பதை நீ அறிவாய் அல்லவா?

அழகிய மகளிர் தங்கள் கால்களை வருடிடமதயானை மேல் துயில் கொண்ட அரசர்களும் தனது பாபவினையால் கண நேரத்தில் நிலை மாறிப் புழுதி நிறைந்தவெறும் நிலத்தில் செத்தவர்களைப் போல் கிடப்பதையும் கண்டிருக்கின்றாய் அல்லவா?

அமுதம் போன்ற உணவை பொன் கலத்திலே ஏந்தி மகளிரே வேண்டவும் வெறுப்புடன் உண்டவர்கள் புண்ணியம் நீங்கிய காலத்து உடைந்து போன மட்பாண்டத்தை ஏந்தி ஊர்தோறும் எளிய உணவை இரந்துண்ணும் நிலையை அடைவர்.

கடல்விளை அமிர்தம் அன்ன கவளம் பொற் கலத்தில் காமத்/ துடியிடை மகளிர் ஏந்தத் துயரமுற்று அரிதின் உண்டார் / உடைஅகல் கையின் ஏந்தி ஊர்தொறும் புக்குப் பெற்ற/வடகினை அமர்ந்துண் பார்கள் நல்வினை அவிந்த காலை. - மே.ம.பு.796.

 பால் நுரை போன்ற ஆடை அணிந்த மகளிர் நல்வினை நீங்கிய காலத்து கந்தல் துணி உடுத்தக் கூடிய காலத்தை அடைவர் ஆகவே,செல்வம் எவரிடத்தும் நிலையான தல்ல என்பதை உணர்க

 வச்சிராயுத வேந்தன் தன் மகனான இரத்தினா யுதனுக்குக் கூறி தன் தந்தை சக்ராயுத முனிவர் இருக்குமிடம் சென்றான்.

 அவரது பாதங்களைப் பணிந்து அடிகளே வினைப் பயன்களைக் கண்டு அஞ்சுகிறேன்  நிலையான வீட்டுலகை அடைய விரும்புகிறேன் என்றான்.

இழி குலத்தில் பிறந்திருந்தாலும் மிக்க பலம் உடையவராக இருந்தால் இந் நிலவுலகத்திற்கு மன்னராவர்.செல்வங்களும் அவர்களை வந்து சேரும்

மலை போல் உயர் குலத்தில் பிறந்திருந்தாலும் பலம் இல்லாதவராயின் நிலனுறப் பணிந்து, பகைவர்களை அண்டிப் பிழைக்கும் அடிமைகளாகி விடுவர் 


வினைகளால் சூழப்பட்ட சம்சார வாழ்வை சிந்திக்குந்தோறும் நடுக்க மேற்படுகிறது. ஆகவே, ஆன்ம சிந்தனையோடு தவ மேற்று வினைகளை வெல்வதற்காக வீட்டுலகை அடைய உறுதி பூண்டு வந்திருக்கின்றேன் என்றான். 

------------------- 

சக்ராயுதன் முக்திச் சருக்கம் - 7 ன்.

தொடர்ச்சி.

அரசனே !மேலானபொறுமை, மனதை ஐம்பொறியில் அடக்கும் சம்யமம், விருப்பு,வெறுப்பற்ற ஆன்மவுணர்வு, உயர் ஒழுக்கம், உயிரினங்களைப் போற்றும் உணர்வு, நமர், பிறர் என்னும் வேறுபாடுகளைக் களைதல் மா தவமாகும்.

அத்தகு சிறப்புடைய தவத்தை ஏற்று நடப்பாயாக என முனிவர் கூறவே வச்சிராயுத மன்னன் துறவேற்றான்.

 அபராஜிதன், அவன் மகன் சக்ராயுதன், அவன் மைந்தன் வஜ்ராயுதன் ஆகிய மூவரும் இவ்வுலகை ஆள்வதை தூசு என  நினைத்து துறந்தார்கள். அதனால் அவர்கள் உலக உயிர்கள் துதிக்கும் உன்னத நிலையை அடைந்தார்கள்.

 சக்ராயுத முனிவர் தனியாக ஒரு மலையுச்சியை அடைந்து சுக்கில தியானம் என்னும் ஜோதியால் வினை இருளைஅழிக்கலுற்றார்

மேலும் சுக்கிலத் தியான முறையால் மனம், மொழி,செயல் அடக்கத்துடன் ஐம்புல ஆசைகளில் மனதை செலுத்தாது சித்த பகவானின் வடிவத்தை புருவங்களின் மையத்தில் மூக்கின் முனையில் பொருந்தச்செய்தார்.

 அதனால் மனம் அலையாது உறுதியான ஒரு நிலையடைந்து தூய மும்மணிகளால் பாவிக்க அவரிடமிருந்த ஏழு வகையான கொடிய வினைகள் அகன்றன. மேலும், மோகனீய முப்பத்தேழு கர்மங்கள் அழிய அவரிடமிருந்த எஞ்சிய பதினாறு வினைகள் பறந்தோடிற்று.

 மேகங்களிலிருந்து விடுபட்ட கதிரவன் போல் அனந்த நான்மைகள் எய்திடவே அக்கணமே நால் வகைத் தேவர்களும்சக்ராயுத முனிவரைப்  புகழ்ந்து பாடலாயினர்.
காதி நான்மை கடந்தோய்நீ கடையில் நான்மை அடைந்தோய்நீ / வேதம் நான்கும் விரித்தோய்நீ விகல நான்மை இரித்தோய்நீ / கேத நான்மை கெடுத்தோய் நீ கேடில் இன்பக் கடலோய்நின்/பாத கமலம் பணி வாரே உலகம் பணிய வருவாரே - மே.ம.பு.807. 

மேலும் சம்சாரப் பிறப்பை அழித்தவன், அனைத்து உயிர்களுக்கும் அபயமளிப்பவன், செற்றம், செருக்கு, காமம் இவற்றை ஒழித்து காலனைவென்ற உனது பாதங்களைஅடைந்தவர் நீ அடைந்த உயர் நிலையை எய்துவர் என்று பலவாறு போற்றித் துதித்தனர்.

 இதனால் அவரிடமிருந்த எண்பத்தைந்து அகாதி வினைகளும் அகன்றன.இதனால் உலகுச்சியை அடைந்தார். தேவர்கள் அவருக்கு பரி நிர்வாண பூஜையை முடித்தனர். அங்கிருந்த வச்சிராயுத முனிவரும் பூஜையை முடித்து தவவனம் சென்றார்.

முற்பிறவியில் பத்திரமித்திரனாக இல்லறத்தில் சிறந்து மறு பிறவியில் சிம்மச் சந்திரனாகப் பிறந்து உயர்ந்த தவம் புரிந்து அகமிந்திர அமரனாகி, மீண்டும் மனிதனாகப் பிறந்து குறைவில்லா தவ மேற்று பிறவியை ஒழித்த சக்ராயுதன் முன் சென்றறியாத முக்தி உலகை அடைந்தான்.


 சக்ராயுதன் முக்திச் சருக்கம் நிறை வுற்றது

------------------------

வச்சிராயுதன் அணுத்தரம் புக்க சருக்கம் - 8

 இரத்தினாயுதன் மங்கையருடன் மகிழ்ந்திருந்த இன்ப வாழ்வைப் பற்றி இனிக் காண்போமாக.

அவன் நல்லறத்தின் பால் வெறுப்புற்று, அதைக் கேட்ட அளவில் நெருப்பிடைப்பட்ட ஆமை போல் துன்புற்றான்
தான் எய்திய அரசும், இன்பமும், சுற்றமும், ஆயுளும் அழியக் கூடியதல்ல என்ற மனப்பான்மையுடன்  இருந்தான்.
தான் பெற்ற இன்பங்கள் அனைத்தும் தனது புண்ணியத்தின் பயனே எனக் கருதினான்.

தேவ வாழ்வும், குற்றமற்ற வீடு பேறும் இறப்பவர் மீண்டும் பிறப்பர் என்பதோ இல்லை என்றும் பேசி வந்தான். செல்வங்களை
அனுபவிக்காமலும் இன்பத்தை அனுபவிக்காமலும் துறவை மேற்கொண்டு பெரிய இன்பம் வேண்டி வருந்துதல் நரியானது நீரில் கண்ட மீனைக் கவ்விப் பிடிக்க வாயில் வைத்திருந்த இறைச்சியை இழந்ததைப் போன்றதாகும் எனக் கூறி வந்தான்.

இவ்வாறு இரத்தினாயுதன் வாழ்ந்து வரும் காலத்தில் வச்சிர தந்தன் என்னும் முனிவர் மனோகரம் என்னும் மலர் வனத்தில் முனி சங்கத்தோடு வந்த டைந்தார். அம்முனிவர், தம் சங்கத்தில் உள்ள சாதுக்களுக்கும் அறவுரை கேட்க வந்த இல்லறத்தாருக்கும் உயிர்கள் மாறி மாறி மூவுலகங்களிலும் பொருந்தி நிற்கின்ற நிலையைத் தெளிவாக எடுத்துரைத்தார். 

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து ஆகியவரிசையில் பொறிகளைப் பெற்ற நிலைகளில் வாழும் உயிர்களில் தொடு உணர்வாகிய ஒன்றை மட்டும் பெற்ற உயிர்கள் நீர், மரம். நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய இந்த ஐந்தையும் உடலாக எய்தி வாழும். நத்தை சங்கு, சிப்பி தொடுவுணர்வோடு சுவை யுணர்வுடைய இரு இந்திரிய உயிர்களாகவும்
எறும்பு, பட்டுப் பூச்சு கேட்டல் உணர்வோடு மூன்று இந்திரிய உயிராகும். 

தும்பி, வண்டு, அந்து போன்றவை அவற்றுடன் பார்க்கும் சக்தி பெற்று நான்கு உயிர்களாகும்.
பசு, மனிதர், நரகர், தேவர் ஆகியோர் மனம் ஐந்தாவது பொறியைப் பெற்று ஐம்பொறி உயிர்களாகவும் அறியப்படும்.
நிலத்தை உழுவதாலும், பள்ளத்தைதோண்டுவதாலும், பள்ளத்தைத் தூர்த்தலாலும், நெருப்பு எரிதலாலும் ஆகிய இவற்றால் மண்ணுயிர்கள் மாயும். வெப்பத்தைக்  குறைத்தல், நெருப்பை அவித்தல் ஆகியவற்றால் நெருப்பை உடலாகப் பெற்றவை அழியும்.

-------------------

வச்சிராயுதன் அணுத்தரம் புக்க சருக்கம் -8 ன்

 தொடர்ச்சி. 

நீரைக் கலக்கினாலும், சூடேற்றுவதாலும், பூமியை நீரால் நனைப்பதாலும் நீர் உடலிகள் இறக்க நேரிடும்.
மலையில் மோதும் சூறாவளியாலும், சுழற்காற்றாலும் காற்று உடலிகள் மாயும். 
எரியும் தீ, கொடியவெயில் பெருமழை,பெருங்காற்று , கூரிய ஆயுதங்கள் தாக்குதலினாலும் மரங்களை உயிராக உடைய உயிரினங்கள் அழிந்து விடும்.

மேலும், வெண்நிறச் சங்கும், மகர மீன்களும், பாப வினை உதயத்தால் அவைகள் தம் முடிவை அடையும். ஊன் உண்போரும் போர் வீரர்களும், ஞான மற்றவர்கள் செய்யும் வேள்வியினால் உயிரினங்கள் உடலை நீத்து மரணமடையும்.
துன்பமெய்தும் விலங்கு பிறவியில் பிறப்போர் அகமும், புறமும் உண்மையானத் துறவை மேற்கொள்ளாமல், மாயத் தன்மையோடு தவவேடத்தை மேறகொண்டோர் விலங்கு கதிகளில் பிறப்பர்.

மித்யாத்வ வினை உதயமாகுமானால் ஏகேந்திரியத்திலும், வினைகளின் குறை பாட்டால் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து ஆகிய ஜீவகதிகளில் தோன்றி விலங்குப் பிறவியை அடைவர். அது மட்டுமின்றி மனம், மெய், மொழிகளினால் உயர் ஞானத்தை அடையாதவர் விலங்கு கதியில் பிறப்பர்.

நீதியிலிருந்து வழுவுவோரும், நிலை தடுமாறி அடுத்தவர் செல்வத்தை அபகரிப்போரும் விலங்காவர். புண்ணியமோ, பாவமோ இல்லை என்றும், உயிர் என்ற ஒன்று இல்லை என மறுப்போரும், இறந்தவர்கள் பிறப்பர் எனவும், விண்ணுலகம், வீடும் இல்லை என்று எதிர்வாதம் புரிவோரும் விலங்கு கதியில் உழல்வர்.

பிறர் மனைவியை விரும்பு வோரும், வேறு ஆடவரைச் சேரும் மகளிரும், நீதியை கெடுத்த அரசனும் ஆகிய இவர்களெல்லாம் விலங்கு கதியில் பிறப்பர் என்று வச்சிர தந்த முனிவர் தமது சங்கத்தை சேர்ந்த முனிவர்களுக்கு விலங்கு கதியின் தன்மைகளை எடுத்துரைத்தார்.

அதனைக் கேட்ட இரத்தினாயுதனுடைய மேக விஜயம் என்னும் பெயருடைய யானைக்கு முற்பிறவி நினைவு தோன்றியது.(ஜாதிஸ் மரணம் ) முற்பிறவியில் தான் யார் எனக் கருதி ஊன் உண்ணும் பழக்கத்தைக் கை விட்டது. இச்செய்தியை அரசனிடம் சென்று பாகர்கள் கூறினர். அமைச்சர்களிடம் அதற்கு என்ன நேர்ந்ததுஎன அரசன் கேட்டான்.

அமைச்சர்களோ, அரசே அதற்கு நோய் இல்லை, முற்பிறவி நினைவால், அவ்வாறு உள்ளது என்றனர். அதனின் முற்பிறவி நினைவை அறிய, தாங்கள் பாகர்கள் மூலமாக ஊன் கலவாத உணவைத் தாருங்கள் என்று கூறினர்.
அவ்உணவை யானை உண்ணு மேயானால் ஐயத்திற்கு இடமின்றி முற்பிறவி நினைவு உள்ளது என்பது உண்மையாகும் என்றனர்.

அரசனும் அவ்வாறே செய்கஎன பாகர்களுக்கு ஆணையிட்டான்.
அவ்வுணவை அது உண்ணவே வியப்படைந்த அரசன் மலர் வனத்தில் இருந்த மாமுனிவரைக் கண்டு யானைக்கு என்ன நேர்ந்தது எனப் பணிவுடன் கேட்டான். 
முனிவர் கூறத் தொடங்கினார்...

--------------- 
 வச்சிராயுதன் அணுத்தரம் புக்க சருக்கம் - 8 ன் 

தொடர்ச்சி.

 இப் பரத கண்டத்தில் உள்ள அத்தினாபுர நகரத்தை பிரதி பத்திரன் என்பவன் ஆண்டு வந்தான். அவனது பட்டத்தரசி வசுந்தரி. இவர்களுக்கு ப்ரீதிங்கரன் என்னும் மகன் பிறந்தான்.


மன்னனின் அமைச்சன் சித்திரமதி.அவளது மனைவி கமலியாவாள். இவர்களின் புத்திரன் விசித்திரமதியாவான்.


 ப்ரீதிங் கரனும், விசித்திர மதியும் இணை பிரியா நண்பர்களாய் இருந்தனர்.


 இவர்கள் இல்லறத்தை வெறுத்து நல்லறத்தில் நாட்டம் கொண்டு தருமருசி என்னும் முனிவரைக் கண்டு ஜின தீட்சயை ஏற்கத் துணிந்தனர்.


முனிவர் இவர்களுக்கு நல்லறம் அமைக எனக்கூறி தவத்தை மேற்கொள்ளச் செய்தார்.


ப்ரீதிங்கரனும், விசித்திர மதியும் துறவேற்று அயோத்தி நகரத்தின் புறத்தேயுள்ள மலர் வனத்தில் தங்கினர்.


ஒரு நாள் ப்ரீதிங்கர முனிவர் ஆகாரம் ஏற்பதற்காக அந் நகரினுள் சரியையாகச் சென்றார்.


 அப்போது புத்திசேனை என்னும் விலை மாதின் இல்லத்தின் வழியாகச் சென்றார். 


புத்திசேனை முனிவரை எதிர் கொண்டு அடிகளே ! மா முனிவர்களுக்கு மிகச் சிறந்த தானம் தருதற்குத் தகுதியான உயர் குலத்தில் தோன்றுவது எவ்வாறு? எனக் கேட்டாள்.

ப்ரீதிங்கர முனிவர் அவளை நோக்கி சொல்லத் தொடங்கினார்,


 நம் மனதை நன்னெறியின் பால் செலுத்த வேண்டும், ஞானிகளைப் போற்ற வேண்டும், எவ்வுயிரிடத்தும் அன்பு கொள்ள வேண்டும், ஊன், தேன், கள் ஆகிய வற்றை உண்ணக் கூடாது, உண்மையான ஆன்ம குணத்தில் நிற்றல் வேண்டும், வஞ்சனைஇல்லாத மனத்துடையவராய் இருத்தல் ஆகிய இவையே உயர் குலத்திற்கு உதிப்பதற்கான காரணங்களாகும் என்று முனிவர் அருளினார்.


 தன்னை நிந்தித்தல் தக்கோர்ப் பழிச்சுதல் தயாவோ டொன்றி/இன்னுயிர்க் கருளை ஈதல் புலைசுதேன் கள்ளின் மீண்டு/மன்னிய குணத்தின் நிற்றல் மாயமில் மனத்த ராதல் / பன்னருங் குலத்தைப் பண்ணும் பான் மைக்கு நிமித்தம் என்றான். - மே.ம.பு. 852  


முனிவரின் அருளறங்களைக் கேட்ட புத்தி சேனைஅன்று முதல் ஊன், தேன், மது ஆகிய வற்றை உண்பதில்லை என விரதமேற்றாள்.


 பின்னர், ப்ரீதிங்கர முனிவர் விசித்திர முனிவர் இருக்குமிடம் வந்து சேர்ந்தார்.
-------------- 

வச்சிராயுதன் அணுத்தரம் புக்க சருக்கம் - 8  ன் 

தொடர்ச்சி. 

ஆகார தானத்திற்காக சென்ற தாங்கள் ஏன் தாமதமாக வருகிறீர்கள்? என விசித்திரமதி, ப்ரீதிங்கர முனிவரைப் பார்த்துக் கேட்டார்.

 தான் ஒரு விலை மாது கேட்டகேள்விக்கு விடை கூறினேன்.மேலும்,அறத்தின் தன்மையை எடுத்துரைத்தேன் என்று கூறினார். 

அதைக் கேட்ட விசித்திரமதி முனிவர் உள்ளத்தே காம உணர்வு தோன்ற வெளிப்படுத்தாமல் அவள் இருக்குமிடம்,பெயர் ஆகியவற்றைக் கேட்டறிந்து கொண்டார்.

தீவினை உதயத்தால் அடுத்த நாள் தான் ஆகாரத்திற்காகப்போவதாகக் கூறி  நகரத்திற்குச் சென்றார். 

அவள் வீட்டருகே முனிவர் வர புத்தி சேனை நேற்று வந்த முனிவர் இவர் எனக் கருதி விரதத்தினால் ஏற்படும் பயன்களைக் கூறுக எனக் கேட்டாள்.

 விசித்திரமதி முனிவர் விரதத்தின் மேன்மையைக் கூறாமல் மோகத்தை ஏற்படுத்தும் கதைகளைக் கூறினார். 
அவளோ
 நேற்று வந்த முனிவர் இவரல்லர் என அறிந்து கொண்டாள்.

 காம வயப்பட்டோர் அடைந்த தீமைகளை எடுத்துரைத்தாள். தன் தவறை உணராத முனிவர்க்கு மேலும் சில அறிவுரைகளைச் சொல்லத் தொடங்கினாள்.

எலும்பும், தோலும், ஈரலும், சதையும், குடலும்,வெறுக்கத்தக்க கழிவுப் பொருள்களும், மூளையும் இவற்றுடன் இரத்தமும், நரம்பும் கொழுப்பும் ஆன இவ் உடலை இவற்றைத் தனித் தனியாகப் பார்த்தால் காறித் துப்புவர்.

இத் தகைய பொருள்களின் கூட்டுச் சேர்க்கையாகிய குப்பையைப் போன்ற இந்த உடலுக்கு ஆசைப்படுவது ஏன்? எனக் கேட்டாள். 

எலும்புதோல் ஈருள் வெண்ணஞ்சு ஊன்குடர் மலங்கள் மூளை / கவந்த நெய்த்தோர் நரம்பு வழுப்பிவை வேறு கண்டால்/விலங்கிமேல் சேர லின்றி வெறுத்துமிழ்ந்து உவர்த்துப் போவார் / கலந்திவை கிடந்த குப்பை கண்டுகா முறுவ தென்னோ.மே.ம.பு.857.

 மேலும் அவள் கூறுவாள், அறிவினால் உள்ளத்தெழும் காம உணர்வும், ஆண் பெண் உள்ளன்போடு பேசுதலினாலும், ஒரு வரோடு ஒருவர் பார்த்தலினால் ஏற்படும் அன்பினாலும், மகிழ்ச்சியினாலும், பொய்க் கோபமாகிய ஊடலும் ஆகிய ஐந்தினாலும் காமம் ஏற்படுவதில் தவறில்லை. அப்பிடியில்லாமல் ஆண், பெண் சேர்ந்து பெறும் இன்பம் பிணத்தோடு கூடுதற்குச் சமமாகும்.விருப்ப மற்ற என்னைஅடைய நினையாதே என்றாள்.

அதைக் கேட்ட முனி வரோ இன்பம் பிணத்தோடு சேர்ந்து பெறுதற்குச் சமமாகும் என்றால் அப்படிச் சேர்வதில் தவறில்லையே என்றான். முனிவனின் கீழ்மை நிலையை எண்ணிஅவள் விலகிப் போனாள்.

மோ கனீய கர்மத்தினால் பிணமாகிய நாற்றத்தில் வெறுப்படையாது அந்த உடல் இன்பத்தில் மூழ்கியவர்கள் அற்பத்தனமான அறிவற்றவரேயாவர்.

ஊன் உண்ணும் பறவைகள் விரும்பும்,இந்த நாற்றமிக்க உடலைச் சேர்வதால் இன்பம் கிடைக்கும் என்று எண்ணி கீழ் நிலைஎய்தினான் முனிவன்.  தவத்திலிருந்து வழுவிக் கேடு அடைந்தான்.


 அழுக்கடைந்த சரீரத்தின் மேல் ஆசை வைத்துப் பிறப்பை ஒழித்து உயரிய நிலை அடைய வேண்டிய முனிவன் தவ நிலையிலிருந்து நழுவினான்.

---------------------- 

வச்சிராயுதன் அணுத்தரம் புக்க சருக்கம் - 8 -ன் 
தொடர்ச்சி.

 விசித்திரமதி கணிகையை அடையும் நோக்கத்தோடு அத்தினபுர நகரத்திற்குச் சென்றான்.
அந்நகர அரசன் கந்த மித்திரனிடம் சமையல்காரனாக வேலை செய்து வந்தான். அவ் அரசன் விரும்பும் ஊன் உணவையும் செய்து தந்தான்.

கந்த மித்திரனின் உதவியோடு தான் விரும்பிய புத்திசேனையை அடைந்தான். அவளுக்காக மாபெரும் தவத்தை விட்டு ஊன் உணவை சமைத்தமையால் மனிதப் பிறிவியிலிருந்து இழிந்து உனது பட்டத்து யானை யாகப் பிறந்துள்ளான்.

நான் இவ்வுலக இயல்பை விளக்கும் திரிலோக பிரஜ்ஞப்தி என்னும் ஆகமத்தை விரித்துரைத்ததை இந்த யானைக்கேட்டமையால் விசித்திரமதி என்னும் முனிவனாக இருந்ததை ஜாதிஸ் மரணத்தால் உண்மையான நல்லறிவால் உணர்ந்துள்ளது. அதனால் தான் யானை இவ்வாறு உள்ளது என்றார்
மேலும், பெண்களால் எய்தும் பயன்கள் இத் தன்மையதே என்பதை உணர்க என்றார்.

 மேலும் அரசனே | துன்பந்தரக் கூடிய ஆசை என்னும் நோய்க்குட்பட்டால் அவர்கள் தீப்போன்ற நரகத்தில் சென்று பிறப்பர். பிறவிக் கடக்க வேண்டு மென்றால் பன்னிரு தவங்களில் நின்று வீடு பேறு எய்த முடியும்.
வேந்தனே! நிலையற்ற பொறி இன்பங்களுக்கு ஆட்பட்டு ஆன்ம இன்பத்தைப் புறக்கணித்து மயங்கிக் கிடத்தல் எதற்குச் சமம் என்றால் மதிப்பு மிக்க இரத்தினத்தை நீக்கி மின்னுகின்ற கண்ணாடிக் கல்லைப் பெற்றதற்கு இணையாகும். மேலும், ஈன்ற தாயை விட்டு மனைவியை மட்டும் போற்றுதலுக்கு ஈடாகும் என்றார். 

விலையிலா  மணியை விட்டுக் காசத்தை மேவ லன்றித்
தலைவனாய்த் தாயை விட்டுத் தன்னடி யாளை ஓம்பல்,
நிலையிலா போகம் மே.ம.பு.870

 நான் இதுவரை ஆன்மாவிற்கு நல்ல பலனைத் தரும் உயர் குணத்தைப் போற்றாது வாழ்ந்து விட்டேன். இனியும் நான்கொடிய நரகத்தில் வீழ்ந்து துடிக்கச் செய்யும் வாழ்வை தொடரமாட்டேன் என்றான்.
தீவினைப் பயன்களை உணர்ந்த அவன் தன் மகனுக்கு முடிசூட்டி துறவேற்றான்.

அரசன் வஜ்ராயுதவேந்தன் துறவு ஏற்று சென்றதை அறிந்த இரத்தின மாலை மகன் இரத்தினாயுதன் மேல் கொண்ட பாசத்தால் துறவேற்கவில்லை.

மகனும் துறவேற்றான் என்றவுடன் இரத்தினமாலையும் துறவு கொண்டு ஆர்யாங் கனையாகி மனத்தின் மாசை நீக்க விரதங்களைக் கைக் கொண்டாள்.

--------------------- 

நிரையத்துள் அறவுரைச் சருக்கம் - 10. 

பாப கர்மத்தினால் இரண்டாம் நரகம் சென்றவனைக் கண்டேன். என்னைத் தெரிகிறதா? எனக் கேட்டேன்.


பல பிறவிகளுக்கு முன் நான் மதுரை என்னும் பெண்ணாகவும், நீ எனக்கு வாருணி என்னும் மகளாகவும் இருந்தாய். பிறகு நான் அரசி இராம தத்தையாகவும், நீ எனது மகன் பூரணச் சந்திரனாகவும் இருந்தாய்.


பின்னர் முறைப்படி நாம் இருவரும் தவம் செய்தமையால் மகா சுக்ர கல்பத்தில் தேவர்களாய்ப் பிறந்தோம். மேலும், விஞ்ஞையர் உலகில் சீதரை என்னும் பெண்ணாகப் பிறந்தேன். நீ என் வயிற்றில் யசோதரை என்னும் மகளாய்ப் பிறந்தாய். பிறகு நீ ஆர்யாங்கனையாகி நோற்று, என்னுடன் காபிஷ்ட கல்பத்தில் தேவனாகப் பிறந்தாய்.

நான் மண்ணுலகில் இரத்தின மாலையாகப் பிறந்தேன். நீயோ இரத்தினாயுதன் என்னும் மகனாகப் பிறந்தாய். நாம் இருவரும் தவம் புரிந்து அச்சுத கல்பத்து தேவரானோம். மறுபடியும் மண்ணுலகில் அயோத்தி நகரத்தில் பல தேவனாகவும், வாசு தேவனாகவும் பிறந்தோம்.
நான்  செய்த தவத்தின் வலிமையால் லாந்தவ கல்பத்தில் தேவன் ஆனேன். நீ செய்த தீவினையால் இந்தத் துன்பமான நரகத்தில் வந்து பிறந்துள்ளாய். 

நீ இங்கிருப்பதை அறிந்து உனக்கு நன்மை தரும் அறத்தினை உணர்த்தவே இங்கு வந்துள்ளேன் என்றான். முற்பிறவிகளைத் தன் இயல்பால் உணர்ந்த அவன் என்னை வணங்கினான். 


அவனுக்கு ஆறுதல் கூறி இந்திர வைபவமானாலும் யாருக்கும் நிலையானதல்ல. துன்பந்தரும் நரகத்தில் வீழாதவர்களும் இல்லை என்றேன். நாற்கதியில் உழலும் உயிர்களுக்கு செல்வங்கள் சேர்வதும், நீங்குவதும் இயல்பான  ஒன்றே. இதற்காக கவலைப்பட வேண்டாம்.முன்பு அனுபவித்த இன்பங்கள் இப்போது இல்லையே என ஏங்காதே. 


உனக்கு கீழேயுள்ள நரகங்களில் உள்ள உயிர்கள்படும் துன்பங்கள் அளவற்றவை. நீ அதனை அறிந்தால் இத் துன்பங்கள் உனக்கு எளிதாகும்.
நரகங்கள் ஏழின் பெயர்களைக் கூறுகிறேன் கேட்பாயாக.


1. இரத்தினப் பிரபை
2. சக்கரப் பிரபை
3. வாலுகாப்பிரபை
4. பெரியதாகிய பங்கப் பிரபை
5. தூமப் பிரபை
6. தமப்பிரபை
7. தமத்தமப் பிரபை என்பனவாகும்.

 நீ இருப்பதோ இரண்டாம் நரகமான சக்கரப் பிரபையில் உள்ளாய். இத் துன்பங்கள் அனைத்தும் நீயே உண்டாக்கிக் கொண்டதே. நாம் பெறுகின்ற துன்பங்களுக்கு பிறரே என எண்ணுவது மடமையாகும். அதனால் குரோதமே வளரும்.


---------------------- 

நிரையத்துள் அறவுரைச் சருக்கம்

தொடர்ச்சி.


 நரகங்களில் உள்ள படலங்கள் நாற்பத்தொன்பது ஆகும். முதல் படலத்தில் பதின் மூன்று படலங்களும், மற்ற ஒவ்வொரு  நரகத்தில் இரண்டு இரண்டு படலங்கள் குறைய கடைசி ஏழாம் நரகத்தில் ஒரு படலம் மட்டும் உண்டு. இந்த ஏழு நரகங்களில் எண்பத்து நான்கு இலட்சம் இருப்பிடங்கள் உள்ளன. ஐந்தாம் நரகத்தில் முக்கால் பாகம் கடுமையான வெப்பமும், அதன் கீழ் ஏழாம் நரகம் வரையிலும் கடுங்குளிரும் உள்ளன. நரகத்தில் உள்ளோர் அவரவர் செய்த வினைகளுக்கேற்ப துன்பங்களை அடைவர்.


அங்கே உள்ளவர் மேலே எழும்பியும், தலை கீழாக விழுந்தும் துன்பமடைவர்.
ஊனையோ, தேனையோ உண்டவர் உருக்கிய செம்பை (செம்பு - உலோகம்) வாயில் ஊற்றி குடிக்கும் நிலைக்கு உள்ளாக்கப்படுவர். பிறர் மனைவியை அடைந்தவர் நெருப்பில் காய்ச்சப்பட்ட உருவத்தைக் கட்டித் தழுவி அலறித் துடிப்பர். 


பதவியினால் பிறர் பொருளைக் கவர்ந்தவர் முட்கள் நிரம்பிய தடியால்  தாக்கப்படுவர். வலை முதலான கருவிகளால் மீன் முதலானவற்றைப் பிடித்தவரும், உண்டவரும் கழுவில் ஏற்றப்படுவர் என்பது உண்மை. அது மட்டுமின்றி ஊனை விலைக்கு வாங்கி உண்டவர் சீழ் நிரம்பிய குழிக்குள் தள்ளப்படுவர்.


பொய்யுரைத்து பிறர் பொருளைக் கவர்ந்தவர் கூரிய ஊசியினால் குத்தப்பட்டு துன்புறுத்தப்படுவர். மேலும், தவமுனிகளைப் பழிப்போர்களின் வாயில் நஞ்சும் இரத்தமும் கொதிக்கக் கொதிக்க ஊற்றப்படும். 
நெருப்பிட்டு ஊரைக் கொளுத்தியவர்களுக்கு தண்டனை கல் செக்கில் தள்ளப்பட்டு எண்ணெய் ஆட்டப்படுவது போல் ஆட்டப்படுவார்கள்.


கொலை, களவுபுரிந்தோர், பொய்யுரைத்தோர், கடும் பற்றுடையவர் ஆகிய இவர்களை மலை மேல் ஏற்றப்பட்டு கீழே தள்ளப்படுவார்கள். கற்பை விற்ற பெண்கள் நெருப்பிலிட்டு கொளுத்தப்படுவார்கள்.


இவ்வாறு பல்வேறு தீவினை புரிந்தோர் அவர்களது துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும். 



ஆகவே இத்தகு கொடிய நரகத்திலிருந்து உன்னைக் காக்கவே இங்கு வந்துள்ளேன் என வாசு தேவனுக்கு பலதேவன் கூறினான்.

--------------- 


நிரையத்துள் அறவுரைச் சருக்கம
தொடர்ச்சி

உனது துன்பங்கள் நீங்குமாறு அறத்தின் பயனை சொல்கின்றேன் கேட்பாயாக எனக் கூறத் தொடங்கினான்.


உன் மீது கோபமுற்றவர் மீது சினம் கொள்ளாதே. இவை முன் வினைப் பயன் என எண்ணி அமைதி கொள்க. கோபமுற்றால் கொடிய பாபங்கள் வந்து சேரும். அதனால் வினைகள் வந்து சேரும்.அவற்றால் விலங்குப் பிறவியிலே பிறந்து அல்லல் பட நேரிடும். 


அருகப் பெருமான் முதலாக ஐவர் வணக்கத்தை மேற்கொண்டால் பிறவிச் சுழலிருந்து விடுபடலாம்.
முக்தியைத் தரும் நற்காட்சியை கைக் கொள்ளாததால் நரகப் பிறவி அடைந்தாய்.


இக்கதியிலிருந்து விலக நீ கடும் பற்றுகளில் மனதை செலுத்தாதே. சினம், செருக்கு, மாயம், கடும் பற்று ஆகியவைகள் தீவினைகள் வந்து சேர்வதற்கான வழிகளாகும். இவை விலகினால் ஆத்மன் இன்பத்தை அடையும்.


இவற்றைக் கேட்ட அவன் நெருப்பிலே விழும் சருகுக்கு நிகராக அரச பதவியைத் துறந்தான். மெய்தவம் என்னும் அரச பதவியை அடைந்தான். அதாவது உண்மையான முனியாக தவத்தில் ஈடுபட்டான். மன வசன, காயங்கள் மூன்றையும் தர்ம தியானத்தில் செலுத்தினான்.மோகனீய கர்மங்களை நீக்கினான். முனிவர்கள் போற்றும் வண்ணம் தவத்தில் நின்று உடலை நீக்கி பிரம்மதத்து கல்ப தேவனானான்.


நமது தீய எண்ணங்களே நம்மை நரகத்துள் செலுத்தும், நல்வினைகள் அமர உலகத்துள் நிற்க வைக்கும், தனக்குள் தானே ஆன்மா செய்த யோகத்திற்கேற்ப நாற்கதிகளில் சுழலும் மயக்கத்திலிருந்து விடுபடாது, நிச்சய நயத்தால் சுத்தோப யோகத்தில் நிலைத்து நின்று வினைகளை அறவே ஒழித்து சித்த லோகத்தில் ஆன்மாவை செலுத்தும்.


தன்னுள்ளே நின்று
தன்னைத்தான் நரகத்துள் உய்க்கும்
தன்னுள்ளே நின்று தன்னைத் தான் துறக்கத்து வைக்கும்,
தன்னுள்ளே நின்று தன்னைத் தான் தடுமாற்றுள் உய்க்கும்
 தன்னுள்ளே நின்று தன்னைத் தான் சித்தி அகத்து வைக்கும்


மே.ம.பு.976.

------------------------------

நிரையத்துள் அறவுரைச் சருக்கம் - - - 

தொடர்ச்சி. 

பஞ்சாணுத்தரமென்னும் அகமிந்திர உலகில் இருந்த சிம்மசேன மன்னன் மண்ணுலகில் வச்சிராயிதன் என்னும் அரசனாகி பின்பு, சஞ்சயந்தனாகித் தோன்றி துறந்து சென்று தபோபலத்தால் வீடு வெற்றான்.

பின்னர் சயந்தனாக வளர்ந்து, நிலையில்லா இல்லற இன்பத்தை விரும்பி, வீட்டினைத் தரும் நற்காட்சியை விடுத்து பவண லோகத்து தலைவனே அதிதாருணன் என்னும் வேடன் ஏழாம் நரகத்தில் வீழ்ந்து அந்த ஆயுளும் நீங்க தாவரம், விலங்கு  எனப் பல பிறவி எடுத்து பூதரமணமென்னும் காட்டிலே கோசிருங்கனுக்கும் அவன் மனைவி சுங்கிக்கும் மிருகசங்கனாகப் பிறந்தான். 

அவன் தூய்மையற்ற தவத்தைமேற்கொண்டு வரும் நாளில் விண் வழியாக வரும் விஞ்ஞையன் தன் மனைவியுடன் வருவதைக் கண்டான். அக் கணமே தானும் அவனைப் போல் ஆக வேண்டுமென ஆசை கொண்டான். நல்ல சிந்தனையோடு தவத்தை மேற் கொண்டான்.

 அதனால் விஜயார்த்த மலையில் வட சேணியில் கனக பல்லவத்தில் விஞ்ஞையர் வேந்தனானான்.

வச்சிர தந்தன் என்னும் வித்தியாதரனுக்கும், வித்துப் பிரபைஎன்றும் பட்டத்தரசிக்கும் வித்துத் தந்தன் என்னும் பெயருடன் பிறந்தான்.

தீவினை உதயத்தால் சஞ்சயந்த முனிவர்க்கு துன்பங்கள் பல தந்தான்.

இவன் தான் பல பிறவிகளுக்கு முன் சிம்ம சேன மன்னனுக்கு சீபதி அமைச்சனாக (சத்தியகோஷன்) இருந்தான் என்பதை மனதில் கொள்.
சீபூதி அமைச்சனே அகந்தனப் பாம்பாகவும், சமரீ என்னும் மிருகமாகவும், கோழிப் பாம்பாகவும் பிறந்து, மூன்றாம் நரகம், நான்காம் நரகம் ஆகியவற்றில் அல்லல் உற்று அதன் பின் வேட னாகப் பிறந்து இறுதியில் ஏழாம் நரகத்தில் ஆழ்ந்து மீண்டும் பாம்பாகப் பிறந்து மறுபடியும் வெம்மை மிகு மூன்றாம் நரகத்தில் வீழ்ந்து, அதன் பின் சங்கிக்குப் புதல்வனாகி இப்போது வித்துத் தந்தனாக வந்துள்ளான்.

சிம்ம சேன மன்னன் மதயானையாகி சகஸ்ரரா கல்பத்து அமர னாகத் தோன்றி, அடுத்து கிரண வேகன் என்னும் விஞ்சை வேந்தனாகப் பிறந்து, பிறகு காபிட்ட கல்ப தேவனாய் அடுத்து மண்ணுலகில் வச்சிராயுதனாப் பிறந்து தவம் புரிந்து பஞ்சாணுத்தர அமரனாகி அதன் பின் இங்கு நிலைத்தப் புகழுடைய சஞ்சயந்தனாக அவதரித்தனன்.

------------------

நிரையத்துள் அறவுரைச் சருக்கம் 

 - தொடர்ச்சி. 

பிறவிதோறும் தொடர்ந்து வந்த தீவினையால் வித்துத் தந்தன் சஞ்சயந்த முனிவருக்குப் பெருங் கொடுமைகளைத் தந்தான்.

எனவே குரோதத்தால் ஏற்படும் துயரத்தைக் கூறுவதற்கு இந்த இருவருடைய வரலாறேபோதுமான தொன்றே என அறிவாயாக.ஆகவே வித்துத் தந்தன் மேல் கோபம் கொள்ளற்க . அவன் மீது கருணைக் காட்டி உன் நாக பாசத்தை விலக்கிக் கொள் வாயாக. இவ்வாறு ஆதித்யாபன் தரணேந்திரனிடம் கேட்டுக் கொண்டான்.

 மதிப்பிற்குரிய தேவா,என் மீது அன்பு கொண்டு அன்று நரகலோகம் வந்து தக்க அறிவுறைகளைக் கூறி என் துன்பம் களைந்தீர்.

இன்று முற்பிறவி வரலாற்றை உணரச் செய்தீர்.மிக்க நன்றி.

 ஆயினும் இந்த வித்யாதரர்கள் தமது வித்தை பலத்தால் எளியவர்களுக்கும், முனிவர்களுக்கும் துன்பம் தரும் வண்ணம் உள்ளனர். எனவே அவர்களின் வித்தைகளை அழிக்க வேண்டும் என்பதே என் கருத்தாகும் என்றான் தரணேந்திரன்.

 ஆதித்யாபன் அவர்களின் பிழைகளைப் பொறுத்தருள்க என்றான்.

 உங்கள் சொல்லுக்கு கட்டுப்படுகின்றேன். ஆனால் வித்தியாதரர்களின் வம்சத்தில் உள்ள ஆண்களின் வித்தைகள் பலிக்காமல் போகட்டும். சஞ்சயசந்த பட்டாரகரை தூய மனதோடு துதிக்கும் மகளிரின் வித்தைகள் கை கூடட்டும் என்று தரணேந்திரன் கூறினான்.

 அதன் பின்னர் சஞ்சயந்த மன்னர் வீடு பேறடைந்த இடமான அம் மலைக்கு இரி மந்தம் எனப் பெயரிட்டுஅம் மலைமேல் தரணேந்திரன் சஞ்சயந்த பட்டாரகருக்கு ஓர் ஆலயம் அமைத்தான்.

--------------------
 - பிறவி முடிச் சருக்கம்.

தரணே ந்திரன் சஞ்சயந்தருடைய பிரதிமையை பிரதிஷ்டை செய்தான். இன்னிசைக் கருவிகள் முழங்க தேவ மகளிர் நடனம் ஆட பவணர் தலைவனாகிய தரணே ந்திரன், 
அமலன் நீ அறிவன் நீ அருகன் நீ அசலன் நீ/விமலன்நீ வீரன்நீ வேரமில் ஒருவன் நீ/ துமிலன்நீ துறவன்நீ சுகதன்நீ சிவனும் நீ/ கமலன்நீ கருணை நீ கைவலச் செய்வன் நீ - மே.ம.பு.999. 

என பக்திப் பரவசத்தில் பலவாறாகத் துதி செய்து வணங்கிய பின் அவன் இருப்பிடம் சென்றான்.

 அதன் பின்னர் வித்துத் தந்தனின் குரோதம் ஒழிய வேண்டும்:அவனை நல்வழிப்படுத்த வேண்டும் என்று எண்ணிய ஆதித்யாபன் அவனுக்கு அறிவுரை கூறலானான்.வித்துத் தந்தன் அவன் கூறுவதைகேட்கத் துணிந்தான்.

 மனிதர்களுக்கு பெரிய உருவமுடைய யானைகள் கூட அவர்களின் கட்டளைகளுக்கு இணங்கிடக்கும். அந் நிலை அவ் யானைகளின் தீவினைப் பயனே என்பதை அறிக.வீட்டுலகில் நிற்பதும் அவர்கள் நல்வினைப் பயனால் விளையும் என்பதைஉணர்க.

 மிக்க நல் ஞானமுடையவர் தங்கள் பாப திரவ்ய கர்மங்கள் ஒழியுமாறு தங்கள் ஆகம ஞானத்தால் இல்லற இன்பத்தை நாடமாட்டார்கள். 

சினத்தால் மனம் போனவழிச் சென்று அதன் பயனால் பல பிறவிகள் எடுத்துள்ளாய். இனியாவது நல்லறத்தை ஏற்பாயாக என்றான்.

 துன்பமயமான இல்லறத்தில் எய்தும் இன்பமானது பரந்து எரியும் நெருப்பில் மலையைச் சுமந்து சென்ற ஒருவன் அம்மலையின் கீழ் உள்ள நிழலில் பெற்ற இன்பத்தைப் போன்றதாகும். விலங்கு கதியில் பெறும் இன்பமானது - நாற்புறமும் புலிகள் சூழ்ந்து நிற்க இடையில் நிற்கும் எளிய மான் மெல்லிய தளிர்களைச் சுவைத்துண்ணும் இன்பத்திற்கு இணையாகும் என்றான்.


நற்காட்சி உடையவர் நற்கதி அடைய முடியும். மனித கதியில் பிறந்த சிம்மசேன மன்னன் உன்னால் பல துன்பங்கள் அனுபவித்து இறுதியில் சஞ்சயந்த முனிவராகி முக்தி அடைந்தார்.

 உன்னால் அன்று ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்ட வணிகன் பத்திர மித்ரனே சக்ராயுத முனிவராகி முக்தியடைந்தார். 

நான் யார் தெரியுமா?

 நீ அமைச்சனாக இருந்த போது உன் வஞ்சகத்தைக் கண்டறிந்த அரசி இராமதத்தையே தான்.

ஆம் நான் இப்போது கல்ப வாசிதேவன். நமக்கு ஏற்படுகின்ற நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் நாமே தான் காரணம். இதற்கு முன்பு எடுத்த பிறவிகள் கணக்கிலடங்கா. இனியாவது மனம் திருந்து.நல்லறப் பாதையில் செல்க என்றான்

கோபம், செருக்கு பேராசை ஆகியவற்றைக் களைக. சஞ்சயந்த முனிவரின் திருவடிகளைப் பணிக சஞ்சலமற்ற புதிய பாதையில் செல்.


வித்துத்தந்தன் தன் தவறை உணர்ந்தான். சஞ்சயந்த பட்டாரகரின் பாத கமலங்களை வணங்கினான்.


ஆதித்யாபன் மன நிறைவுடன் தன் இருப்பிடம் சென்றான்.

------------------------- 

ஸ்ரீ விகாரச் சருக்கம்


சிம்மசேன மன்னன் வீடு பேறு அடைந்தான். ஸ்ரீபதியான வித்துத் தந்தனும்  நல்லறத்தை ஏற்று தனது இடம் சென்றான். அரசி இராமதத்தையும், அவளது மகன் பூரணச்சந்திரனும் தேவர்களானார்கள். இனி இவர்தம் வரலாற்றினைக் கூறுகின்றேன்.


இப்பரத கண்டத்தில் வட மதுரை என்னும் ஒரு நகரம் இருந்தது. அந்நகரின் வேந்தன் அனந்த வீரியன். பகை வேந்தர்கள் பலரை வென்றவன். அவனது பட்டத்தரசி மேருமாலினி என்பவளாவாள். இவளது மற்றொரு மனைவி அமிர்தமதி. இவர்களுக்கு ஆதித்யாபனும்,பவணேந்திரனும் பிள்ளைகளாகப் பிறந்தனர். இதனால் மன்னன் மக்களுக்கு மாரி போல் வாரி வழங்கினான்


குமாரர்கள் வாலிபப் பருவ மடைந்தனர். இருப்பினும் இவர்கள் காமனை வெற்றி கொண்டனர். அதாவது சிற்றின்பத்தில் நாட்டம் கொள்ள வில்லை. உடல் நிலையற்றது. உற்றார் உறவினர் பாதுகாக்க மாட்டார்கள். எனக்கு நானே துணை பிறர் அல்லர். 


எண்ணற்கரிய சாரமற்ற தன்மையையும், இவ்வுலக இயல்பினையும், வினைகள் வரும் உயிரிடத்து வரும் ஊற்றினையும், உடலின் அருவருக்கும் தன்மையையும், எண்ணங்களால் வரும் வினைகளைத் தடுத்தலையும், வினைகளை உதிர்க்கும் தன்மையையும், எண்ணங்களால் வரும் வினைகளைத் தடுத்தலையும், வினைகளை உதிர்த்தலையும், உண்மையான நற்காட்சி முதலியவற்றைப் பெறற்கருமையையும் ஆகிய பன்னிரண்டையும் சிந்தித்த வண்ணம் அவர்கள் இருந்தனர்.


அக்காலத்தே விமல தீர்த்தங்கரராகிய அருகப் பெருமான் ஸ்ரீவிஹாரமாகி (நான்கு அங்குல உயரத்தில்) உத்தர மதுரையில் ஓர் வனத்தில் எழுந்தருளினார். அதனால் தேவர்கள் இரண்டு யோசனை அகலமுடைய ஒப்பற்ற மண்டபம் ஒன்றைச் அமைத்தனர். அத்துடன் மூன்று யோசனை அகலத்தில் முத்துக்கள் பரப்பிய வீதியையும் அமைத்தனர்.


வாயு குமாரன் பூமியில் படிந்துள்ள நுண்ணிய தூசுகளை அகற்றினான். வருணனும் நீர்த்துளிகளைத் தூவச் செய்தான். தேவேந்திரனும், லௌ காந்திக தேவர்களும் இறைவன் எழுந்தருளும் காலம் எனக் கருதி வணங்கவே, பகவான் எழுந்தருளினார்.


இறைவன் ஸ்ரீ விஹாரம்செல்லுங் காலத்தில்  இனிய ஓசைகள் கேட்டன. விண்ணுலகத்திலிருந்து தேவர்கள் மலர் மழை பொழிந்தனர்.தேவர்கள்  நடனம் பிரிந்தனர்.இந்திரர்கள் இறைவனைப் புகழ்ந்து பாடினர்.


பகவானின் ஸ்ரீவிஹாரம் சென்ற போது ஊமையர் பேசும் ஆற்றல் பெற்றனர். முடவர் ஏறு போல் நடந்தனர்.பலரின் துன்பங்கள் நீங்கின. செவிடர்கள் கேட்கக் கூடிய ஆற்றலுடைவராயினர். சிலர் சினத்தை நீக்கினர். குருடர்கள் கண்ணொளிப் பெற்றனர்.


உயிரினங்கள் பகை மறந்தன ( பாம்பு, கீரி) இக் காட்சியைக் கண்டவர்கள் மேருமந்திரர்களிடம் போய்க் கூறினர். 


அவர்கள் கேட்ட அளவில் தங்கள் இடத்திலிருந்து இறங்கி ஏழடி தூரம் நடந்து வந்து பகவானை வணங்கினர். பகவான் இருப்பிடம் வந்த டைந்தனர். இரு அரசர்களும் இரண்டு சூரியனைப்போல் விளங்கினர்.



ஸ்ரீ விஹாரச் சருக்கம் நிறைவுற்றது.
----------------- 

சமவசரணச் சருக்கம் - 1


தேவர்களின் தலைவனான அருகப் பெருமானின், மானத் தம்பத்தைக் கண்ட அளவிலே அனைவரிடமும் இருந்த மித்யாத்வம் மறைந்தது. அரச குமாரர்கள் தங்களது பரிவாரங்களை விலகச் செய்து இறைவனது ஆலயத்தை அடைந்தனர்.


மூவுலக நாதனைத் தொழுதனர். 


யானை யிலிருந்து இறங்கி துளி சாலம் என்னும் மதிலைக் கடந்தனர். உட்புறமுள்ள பிராசாத பூமியைக் கண்டனர். மார்பளவு உயரமுடைய பலி பீடத்தைப் அடைந்து வணங்கி, பிராசாத நிலத்தின் மையப் பகுதியை அடைந்தனர். 


அங்கே நான்கு காத உயர முடைய நான்கு திக்குகளிலும் பன்னிரண்டு யோசனையுடைய மானத்தம்பங்கள், தோரணங்கள் முறைப்படி அமைய மதில்கள் சூழ, அட்ட மங்கலங்கள் அமைந்திருந்தன. 


அந்த மானத்தம்பங்களின் அடிப்பகுதியானது ஒரு காத உயரம் வயிரத்தினாலும் மையத்தில் இரண்டு காத உயரம் படிகத்தினாலும், மேலே ஒரு காத உயரம் வைடூரியத்தினாலும் அமைந்து கீழும், மேலும் ஆயிரம் ஆயிரம் பட்டைகளாகவும் அமைந்திருந்தது.


மேலும் அடிப்பகுதியிலும், உச்சியிலும் நாற்புறமும் துன்பத்தைப் போக்கும் சித்த பரமேட்டிகளின் பிரதிமைகள் காணப்படும்.


மானத் தம்பத்தின் உச்சியில் அமைந்திருந்த நான்கு முக பூதத்தின் மேல் இலக்குமி பாலைப் பொழிவது போல் வெண்ணிற யானைகள் இருக்க, இலக்குமி அமைந்திருந்த பலகையில் இரத்தின மயமான உறிகளில் அட்ட மங்கலங்கள் அமைந்திருந்தன.


மானத் தம்பங்களை மேரு, மந்திரர் இருவரும் வலம் வந்து வணங்கினர்.
மார்பளவு உயரமுடைய மதிலையும், நீல நிறமுடைய நீர் நிறைந்த அகழியையும் கண்டனர். அகழியில் உள்ள தாமரை மலரைக் கொய்தனர். பொன்னாலும், மணியாலும் இயன்றதான கோபுரத்தை அடைந்தனர்.



மதிலின் உட்புறத்தில் உள்ள ஒரு காத அகலமுடைய வல்லி வனத்தை அடைந்தார்கள்.

------------------- 

சமவசரணச் சருக்கம்
தொடர்ச்சி- 2 

வல்லிப் பூமியில் மண்டபங்களும், மலர்ப் பந்தல்களும், வயிரங்கள் மணலாக ஒளி உமிழும் வண்ணம் பூமியில் படிந்திருந்தன. அங்குள்ள வண்டுகள் ரீங்காரம் செய்வது பகவானைப் துதிப்பது போல் இருந்தது. மேலும் மல்லிகை, முல்லை, வனமல்லி, சிறு சண்பகம் போன்ற எண்ணற்ற மலர்கள் பூத்துக் குலுங்கும் வண்ணம் உள்ளன. அவற்றைக் கண்டவாரே மேரு மந்தரர் இருவரும் உதயதரம் என்னும் கோபுர வாயிலை அடைந்தனர்.

அக்கோபுரமோ மூன்று காத உயரமும், இரண்டு காத அகலமும், வாயிற்  புறமோ ஒரு காத அகலமும்  உடையதாய் விளங்கிற்று. அட்ட மங்கலங்களைப்  பெற்று நிலைக்கு ஒன்றாக மூன்று ஜினபிம்பங்கள் கொண்டாதாய் இருந்தன. உதயதர கோபுரத்தை வணங்கி அவர்கள் அங்குள்ள வன பூமியை அடைந்தார்கள்.

பல்வேறு நிறப் பூக்கள் பூத்துக் குலுங்கின. பல்வேறு தருக்களைப் பெற்று விளங்கியதால் வனபூமி என்னும் பெயரினைப் பெற்றிருந்தது. அந்த வன பூமியிலுள்ள மேடைகளில் மேடைக்கு இரண்டு வீதம் முன் கோபுரத்தின் உயர முடைய எட்டு கம்பங்கள் உண்டு. இந்தத் தூபிகள் எட்டோடு, வெண்ணிற முக்குடைகள் அமைந்த ஜின பிம்பங்களையுடைய சைத்ய விருட்சங்கள் எட்டாகும். 

அத்தருக்களுக்கு அருகே கற்பக விருட்சங்கள் எட்டு உள்ளன. அங்கே இருபத்து நான்கு தடாகங்கள் (குளங்கள் ) இருந்தன. இவை முக்கோண வடிவம், வட்டம், சதுரம் என்ற வடிவங்களில் இருக்கும். அங்கே செல்பவர் முதலில் நீராடியும், பின்னர் வாயை தூய்மை செய்தும், மூன்றாவதில் மலர்களைப்பறித்தும் மாந்தர்கள், தூபைகளை அடைந்து வணங்குவர்.

அங்கே கற்பக சோலையைக் காட்டிலும் இரண்டு பங்கு உயர முடையதாய் அசோகம், செண்பகம், தேக்கு, மா முதலிய மரங்கள் பெரிய வைகளாய் அமைந்திருந்தன. உதய தர கோபுரத்தின் உள்ளிலிருந்து ப்ரீதர கோபுரம் வரையில் பொன்னால் செய்யப்பட்ட நடனமாளிகைகள் உள்ளன. அவை மூன்று நிலைகளோடு எட்டெட்டு அரங்கங்களைக் கொண்டாதாய் இருக்கும். அதனுள் ஜோதிர் தேவியர் நடனமாடுவர். 

அவ்வன பூமியின் எல்லாப் பகுதிகளிலும், தேவலோகமும், போக பூமியும் ஒன்றாக வந்து சேர்ந்தது போல் தேவ மாதர்களும், மண்ணுலக மகளிரும் மாந்தரும் நிறைந்திருப்பர். 
அவ்வன பூமியில் குயில்கள் கூவவும், தும்பிக் கூட்டங்கள் (வண்டு) இசைப் பாடல்களைப் பாடவும், மயில்கள் நாட்டியமாடவும் , தேவ மகளிரும் கண்டோர் மகிழுமாறும்  நடனமாடுவர். இவ்வளவு சிறப்புடைய அவ்வனத்தின் பெருமையை எடுத்துரைத்தல் இயலாத ஒன்றாகும். 

வன பூமியை மேருமந்தரர் அடைந்தனர். சைத்ய விருட்சங்களினுடைய நான்கு கிளைகளில் சேர்ந்திருக்கும் அரியணை மேல் அமர்ந்துள்ள ஜின பகவானுக்கு  ஒப்பான படிமைகளையும் தூபிகளில் உள்ள ஜின பிம்பங்களைதரிசித்தனர்.

பின்னர், அவ் வனபூமியின் எல்லையில் அமைந்துள்ள பிரீதரம் என்னும் மதிலை அடைந்தார்கள்.

-------------- 


பிரீதரம் என்னும் மதில் உதயதர மதிலைக் காட்டிலும் இரண்டு மடங்கு உயரமும் ,அகலமும் உடையதாக விளங்கியது. மேலும், ஐந்து நிலைகளைக் கொண்ட அட்டாலைகளை உடைய தாகவும் இருந்தது.

அங்குள்ள கோபுரங்களோ நான்கு காத உயரமுடையதாகவும் ஐந்து நிலைகளையும்  கொண்டிருந்தது. அதன் உச்சியில் பொன்னாலாகிய கும்பமும், பொற்றாமரை மலரோடு பொன் மாவிலைகளும் காணப்பட்டன.

அக்கோபுர வாயிலை சமர, வைரோசனர் பவணர்களின் தலைவர்கள் கையிலே பிரம்புகளைக் கொண்டு காவல் புரிவர். கோபுரத்தின் உட்புறத்தில் துவஜ பூமியின் பிரதம வீதிகள் உள்ளன. அங்குள்ள நான்கு பெரு வீதிகளில் ஐந்து வில் உயரமும், ஐந்து வில் அகலமும் உடையதாய் வரிசைக்கு ஆயிரத்து எண்பது வீதம் நான்கு பகுதிகளிலும் நாற்பத்தாறு லட்சத்து அறுபத்தாயிரத்து அறு நூறு மேடைகள் இருந்தன. 

அதிலுள்ள பொன் கம்பங்களில் கொடிகள் பொருத்தப்பட்டிருந்தன.
சிங்கம்,யானை, பூ மாலை , அன்னம், கருடன், எருது, தாமரை, மகரமீன், சக்கரம் போன்ற சின்னங்கள் மதிலைச் சுற்றிலும் அமைந்திருந்தன. 

கொடிக் கம்பங்களில் நான்கு கோடியே அறுபத்தாறு லட்சத்து ஐம்பதாயிரம் கொடிகள் காணப்பட்டன. சுவர்களில் பவண தேவியரின் உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அத்தகு சிறப்புடைய துவஜ பூமியைக் கடந்து மேரு மந்திரர்கள் கல்யாணதரம் என்னும் கோபுரத்தையும், மதிலையும் அடைந்தார்கள். 

இம்மதில் உதயதர மதிலைப் போல் மூன்று மடங்கு பெரியது பல்வேறு மணிகள் இழைக்கப்பட்ட தலைச் சூட்டினை உடையதாய் வெண்ணிறக் கொடிகளோடு உட்புறத்தில் அட்டாலயங்களைக் கொண்டு காணப்பட்டன. இவைகள் தேவருலகம் போல் இருந்தன.

ஐந்து காதம் உயரம் உயர்ந்திருந்தது. அதன் வாயிற்புரத்தின் இரு பக்கங்களிலும் காண்பவரது அகப்பற்று பத்தினால் பெற்ற முன்பவங்கள் ஏழினைக் காட்டும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன.
இங்குள்ள நான்கு கோபுரங்களின் உட்புறத்தே சண சணவென ஒலியெழுப்பும் நான்கு சேமங்கலங்கள் காணப்பட்டன.

இக் கோபுரத்தின் உள்ளே லோக பால தேவர்களாகிய கல்ப வாசி தேவர்கள் காவல் புரிவர். அங்கே லோக பால தேவ மாதர்கள் நடனமாடுவர்.

அக்கோபுரத்தின் நான்கு வீதிகளின் முகப்பில் உள்ள பலி பீடங்கள் சித்த படிமங்களைத் தாங்கியவாறு இருக்கும்.
அங்கு வீதிக்கு ஒன்றாக நான்கு தடாகங்கள் காணப்படும். கிழக்கு வீதியில் உள்ள தடாகம் நந்தை எனப்படும். அந் நீரை தெளித்துக் கொண்டால் முற் பிறப்பை அறியலாம்.தெற்கே உள் ள குளத்து நீரை தெளித்துக் கொண்டவர்கள் தங்களின் ஏழு பிறவிகளை உணர்வார்கள். 

மேற்கு திசையில் உள்ள நீரைப் பார்த்தளவில் நினைத்தவற்றை யெல்லாம் நேரில் பார்க்க இயலும். வட புலத்தில் உள்ள குளத்து நீரானது அனைத்து நோய்களையும் தீர்க்கும் ஆற்றலுடையது.
மதிலின் உட்புறத்தே கற்பகச் சோலையைக் காணலாம். சோலையில் கற்பக மரங்கள் நிறைந்திருக்கும். 


அம்மரங்களின் கிளைகள் நிமிர்ந்து நிற்கும் தோற்றம் தன்னிடம் வந்து யாசிப்பவர்க்கு ஒன்று மில்லை எனக் கையைத் தூக்கிக் காட்டுவது போல் உள்ளது என வாமன முனிவர் கூறுகிறார்.

----------------- 



பூஜைக்கென வரும் தேவர் இச்சோலையின் அழகைக்கண்டு தமது எண்ணத்தையே மறப்பர். பகவானின் பெருமையை உணர்த்துவதற்காக தேவேந்திரனால் உருவாக்கப்பட்டதல்லவா? சமவசரணம்.

நீர் நிறைந்த தடாகத்தைக் காண்போர் இது பளிங்கு தரை எனக் கருதிகால் வைத்து கீழே விழுவர். இக்காட்சியைக் காணும் ஏனையோர் கை கொட்டிச் சிரிப்பர்.வேறு சிலரோ நீர் நிலையை படிகத்தினாலாகிய நிலம் என்று நினைத்து திரும்புவர்.பல்வேறு ஒளித்திரளைக் காண்போர் கண்ணாடிச் சுவர் என அனுமானித்துசெல்ல மாட்டார்கள்.

 ஒளி மிக்க மாடத்தைக் கண்டு அதில் தோன்றும் பிம்பங்களைப் பார்த்து யாரோ சிலர் தம்மைநோக்கி வருகிறார்கள் என நினைப்பர்.

ஒருவருடைய பேச் சொலிக்கு அவர்களுடைய குரலே மாற்றொலியாக வருவதைக் கண்டு அஞ்சுவர்.(எதிரொலி)

 கற்பக விருட்ச மியில் இசை மண்டபங்கள், மகளிர் ஆடும் நடன அரங்கமும், இளைஞர் விளையாடும் இடங்களும் தனித் தனியாக காணப்படும்.

 ஒரு புறம் கரும்புச்சாறு போல் இனிக்கும் ஆறுகளும், மற்றொருபுறம் தேனைச் சொரியும் தடாகங்களும் நிறைந்திருந்தன.எங்கும் பொன்னாலாகிய மதில்களே இருக்கும். இன்னும் கட்டில்கள், ஊஞ்சல்கள் எனப் பலவாறு அமைந்திருக்கும். இப்படிப்பட்ட கற்பக விருட்ச பூமியின் சிறப்பினை எடுத்து ரைக்க இயலாது.

ஒரே சிந்தைனையுடைய மாந்தர்கள் ஒரு புறமும்,பிறவிச் சுழற்சிக்கு வித்தான குற்றங்களைவிலக்கிய உபாத்தியாயர்களும், மற்றொரு  புறம் மெளன விரதம் மேற்கொண்ட மேலோர்கள் என அனைவரும் நின்றிருந்தனர்.

கோடை, மழை, பனி எனப் பருவகாலங்கள் கருதாது நல்லொழுக்கம் மேற்கொண்ட முனிவர்களும் இருந்தனர் அங்கே உக்கிர தவசியர், தீப்த தவசியர், தப்த தவசியர் என பல தவசியரும் அங்கே இருப்பர்.

வேறாரு புறத்தில் மகா தவத்தவர், கோர தவத்தரும் இருப்பர்.

மேலும், அங்கே மனம், மொழி, மெய்களை வென்ற முனிவரும், இன்னோர் இடத்தில் பட்ச உபவாசம்,மாத உபவாசம் கொண்டவரும் இருப்பர்.ரித்தி முனிவர், தர்மத்தை எடுத்தியம்பும் அரிய தவத்தவர் ஒரு புறம் இருப்பர்.

ஒரு நூலின் முதல், இறுதி, நடு ஆகிய இடங்களில் உள்ள ஒரு பதத்தின் மூலமாக அந்நூலை முழுமையும் அறியும் ஆற்றலுடைய கோஷ்ட புத்தியரும், முதலில் உள்ள ஒரு சொல்லைக்கொண்டு மூவிடங்களிலுமுள்ள அனைத்தையும் அறியும் பீஜபுத்தியரும், அடுத்து தங்கள் அதிசயமான மதியால் பன்னிரண்டு யோசனை தூரத்திலிருந்து வரும் மொழிகளை தனித்தனியே அறிந்து கொள்ளும் ஆற்றல் மிக்க சம்பின்ன மதிகளும் அங்கே இருப்பார்கள்.
------------------------ 



மூவகை ஞானங்களை உடைய முனிவர்களும் ருஜுமதி, விபுலமதி ஆகிய மனப்புடைய ஞானம் கொண்டோரும், அனகார கேவலிகளும் ஒரு புறமிருப்பர். அணுமா முதலிய ரித்திகளைப் பெற்ற முனிவர்களும், விண்ணில் செல்லக்கூடிய ஆற்றலைப்பெற்ற சாரண ரித்திகளும் அங்கே இருப்பர். 

அது மட்டுமின்றி அனுயோகங்கள் நான்கினைக் கற்றோரும், அதனை மற்றவர்களுக்கு எடுத்துரைப்போரும், கேட்போரும், தத்துவங்களைக் கற்று விளக்குபவரும், ஆகம நூல்களை கற்று உணர்ந்தோரும், சுக்கிலத் தியானத்தில் மூழ்கிய முனிவர்களும் இருப்பர்.

மிகச் சிறிய இடமானாலும் உலக மன்னனுடைய மாபெரும் படைகளே வந்தாலும் அவர்கள் தங்குவதற்கு இடம் தந்து உதவி புரியும் பண்புடைய முனிவர்களும், உத்தம தான கர்த்தாக்கள் தங்களின் கைகளில் அளித்த அன்னத்தில் அவர்கள் ஏற்றது போக எஞ்சி நிற்கும் ஒரு சிறு அளவானது, இந்த உலக மக்கள் ஒன்று சேர்ந்து உண்டாலும், ஒரு பகல் முழுதும் குறையாமல் ஆற்றல் மிக்க மாமுனிவர்களும், ரத்தின த்ரயங்களுடன், கூறுவதற் குரியவராய் இருப்பர்.

புக்கஇடம் சக்கரன்தன் படையொதுங்கப் போதும்
மிக்கதவர் பாணிமிசை, மேயமிகை அடிசில்
புக்கு உலகம் உண்டிடினும், போதும் பகல் எல்லைத்
தக்க தவர்முதல் முனிவர் சாற்ற முடியார்
மே.ம.பு.1103.

 கற்பக விருட்ச பூமியில் இத்தகு சிறப்புப்பெற்ற முனிவர்கள் இருந்தார்கள். இப்படிப்பட்ட இடங்களைக் கடந்த அரசர்கள் இருவரும் ஜெயசிரயம் என்னும் இடத்தை அடைந்தனர்.
முத்து, பவழங்களும் பூமியில் படிந்திருந்தது இதனைக் கண்ட கவிஞர் சூரிய, சந்திரரின் ஒளிகளே மணல் பாதைகளாக இருப்பது போல் உள்ளது என்கிறார்.

அம்மண்டபத்தின் மேற்கூறையின்  உட்புறத்தில் சந்தனக் குழம்பாலும் வட்டமாக வரையப்பட்ட சூரிய, சந்திர வட்டங்கள் புஷ்கர தீபத்தில் சூரிய, சந்திரர் இருப்பது போல் இருந்தது என்கிறார்.
தரையில் வரையப் பட்ட தாமரை ஓவியங்களோ புஷ்கரத் தீவில் பூத்திருக்கும் தாமரைப் பூக்களைப் போல் காணப்படும். அவ்விடத்தே செல்லும் சிங்கம் போன்றவிலங்குகள் மட்டுமின்றி, மனிதர், தேவர் ஆகியோரும்  நலம் பல பெறுவர்.

அம் மண்டபத்திலே அவரவர் பெற்ற புண்ணிய, பாவங்களை எடுத்துக்காட்டு விதமாகவும், நன்னெறியிலிருந்து தீ நெறி மேற்கொண்டோர் வாழ்வில் அடைந்த துன்பங்களை விளக்கும் விதமாக சிற்பிகள் தங்கள் ஆற்றலை சிற்பத்தில் வடித்திருந்தனர்.

ஜெயசிரய மண்டபத்தில் கண்ணாடித் தம்பங்கள் உள்ளன. அவற்றில் இந்திர துவசக் கொடிகள் காணப்படும். அவை காற்றில் அசைவது அன்னப்பறவைகள் உலவுவது போல் இருந்தன. அக்கொடிகள் காற்றிலே அசையும். அவற்றில் உள்ள முத்து மாலைகளும், மணிகளும் ஒலிக்கும் ஒலியானது கடலின் மேல் வரும் கதிரவன் பவனி வரும் ரதத்தின் மணிகளும், மாலைகளும் குதிரைகளின் வேகத்தில் ஒலிக்கும் ஒலி போன்றதாகும்.

இதனைக் கடந்து சென்றால் மகோதய மண்டபம் தோன்றும். அது ஆயிரம் தூண்களைக் கொண்டதாய் இருக்கும். இது இறைவனது ஆலயத்தின் முன்புறத்திலே விளங்கியது. இந்த மகோதய மண்டபத்தில் ஒரு பீடம் உள்ளது. அது ஜினவாணியின் இருக்கையாகும்.(சரஸ்வதி) ஆகமக் கடலாகிய ஜினவாணியை வலப்புறத்திலே இருக்கச்செய்து, முனிவர்கள் தன்னைச் சூழ்ந்திருக்க, நடுவிலே சுருத கேவலி வீற்றிருப்பார். 

அவர் விண்மீன்கள்
சூழ்ந்திருக்கும் சந்திரனுக்கு நிகராய் , மழை மேகம் பயிர்களுக்கு உதவுவது போல் தனக்கு எவ்வித ஆர்வமும் இல்லாத பவ்வியர்களுக்கு உபதேசிப்பவராக உள்ளார்.

-------------------- 


மகோதய மண்டபத்தைச் சுற்றி எட்டு திக்குகளிலும் அழகான மண்டபங்கள் உள்ளன. அங்கே பலி பீடமும் இருந்தது. அது பூஜை செய்வோர்களால் பலி பிண்டங்களைக் கொண்டிருக்கும். இவற்றைக் கடந்தால் லதா மண்டபம் தொடரும். பலி பீடத்தின் தொலைவில் குபேர தேவர்கள் வாரி வழங்கும் இரு மண்டபங்கள் இருக்கும். இவை கொடைக்கர மண்டபம் என்று அழைக்கப்படும். குபேர மங்கையர் நாட்டியமாடும் சாலைகளும் உள்ளன.


அந்த ஏழாம் நிலமாகிய கிரகாங்கண பூமியின் மூலை திசைகளில் அழகு மிக்க தூபைகள் காணப்படும். அவற்றைக் காண்போர்க்கு வெற்றியைத் தருபவையாய் விளங்கும். மேலும், மத்தள வடிவில் காணப்படும் உலகத் தூபையும் உள்ளன. இவை மட்டுமின்றி பல்வேறு தூபைகள் உள்ளவாறு கொடைக்கர மண்டபம் இருக்கும்.


செளதர்மேந்திரனால் உருவாக்கப்பட்டதாக இருந்தாலும் அவனே வியப்படையும் வண்ணம் உள்ள சமவசரண பூமியின் சிறப்புகளை நான் எடுத்துரைக்க முற்பட்டது இயலாது என்றாலும் இயன்றவரை சொல்லுகிறேன் என வாமன முனிவர் தொடங்குகிறார்.


வட்ட வடிவமான சமவ சரணத்தின் விட்டமோ பன்னிரண்டு யோசனை.


1.பிரசாத சைத்ய பூமி, 2.காதிகா பூமி,
3.வல்லி பூமி, 
4.வன பூமி,
5.கொடி பூமி,
6.கல்பக விருட்சமி,
7. கிரகாங்கண பூமி.


ஆகிய ஏழு பூமிகளையும்,


1. உதய தரம், 
2 பிரீதி தரம்,
3.கல்யாண தரம்

 ஆகிய பொன்னாலும், வெள்ளியாலும் அமைக்கப்பட்ட மும்மதில்களையும் கடந்து மேரு, மந்திரர் ஆகிய இருவரும் ஸ்ரீ நிலையம் என்னும் ஆலயத்தை அடைந்தனர்.


மேலே கூறிய ஏழு பூமிகளும் படிப்படியாக உயர்ந்து கொண்டே செல்லும். இந்த இடம் இவ்வாறு இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தால் அது அவ்வாறே இருக்கும். 


இதைவிட அது அழகோ என எண்ணினால் அது அழகு பெறும். மனிதனுடைய ஆசைக்கு ஏற்றாற் போல் உயர்ந்த  பொருள் தாழ்ந்ததாகவும், தாழ்ந்தவை உயர்ந்தவையாகவும் தோன்றுவது போல், இந்த இடமானது அவரவர் மனநிலைக்கேற்ப உயர்ந்தவை தாழ்ந்தும், தாழ்ந்தவை உயர்ந்தும் விளங்கும் வண்ணம் இருக்கும். அதாவது இந்த இடமானது காண்போரை பிரமிக்கச் செய்யும்படி இருந்தது. 


இதனையே வாமன முனிவர், 


உச்சமே நீசமாய் நீசம் உச்சமாய்

இச்சையால் ஒருவனுக்கு இயலுமாறு போல்


உச்சமே நீசமாய் நீசம் உச்சமாய்
இச்சையின் படியினால் எங்கும் தோன்றுமே.
என்கிறார்.      மே.ம பு.1132. 

---------------------


இந்த ஸ்ரீநிலயமானது பதினான்கு காத அகலம் உடையதாய் விளங்கியது. அந்த நிலத்தின் மீது மேகலை போல் ஒன்றின் மீது ஒன்றாக திரிமேகலா பீடங்கள் ஒளியுடன் திகழ்ந்தன. அவற்றிலே வரண்டகக் கொடிகள் பொருந்தியிருந்தன. அங்கு உள்ள நிலைகள் வாயிற் காவலர்கள் போல் கம்பீரமாய் நின்றன. 

அங்கே உள்ள எண்ணிக்கைக்கு ஏற்றவாறே கோட்டங்களும் இருந்தன. இரண்டாம் பீடத்திலே எழுபத்தி நாலாயிரத்து இருநூற்றெழுபத்து ஒன்பது கொடிகளும், மூன்றாம் பீடத்திலே எழுபத்தோராயிரத்து ஐம்பத்தாறு கொடிகளும் அமைந்திருந்தன. 

மேலும் முதல் பீடத்தில் இரண்டு லட்சத்து எழுபத்தேழாயிரத்து தொளாயிரத்து இருபதாகும். இரண்டாம் படத்திலே இரண்டு லட்சத்து அறுபத்தாயிரத்து நானூறு கொடிகள் அமைந்திருந்தன. இவ்வாறு ஒவ்வொரு பீடத்து கூடங்களில் உள்ள கொடிகளின் எண்ணிக்கை இரட்டித்து காணப்பட்டன. 

ஸ்ரீ நிலய ஆலயத்தின் கோட்டங்களில் மண்டபங்களின் சோதியானது இரண்டு இளஞ்சூரியனது கதிர்போல் காணப்படும்.
முற்கூறப்பட்ட திரிமேகலா மண்டபங்களில் உள்ள கோபுரங்கள் மிக்க பேரழகுடனும் ஜினபிம்பங்கள், முக்குடை, வெண் கவரி ஆகியவைகளுடன் குற்ற மற்ற கண்ணாடியைப் போல் விளங்கின. 

அவை நான்கு பிம்பங்களையுடைய சதுர்முக பிம்பங்களைப் போல் இருந்தன. (மூன்று பீடங்களிலும் எழுபத்திரண்டு முக்கால தீர்த்தங்கரர்கள் )
அங்குள்ள மேடைகளில் முரசங்கள், நான்கு முகமுடைய சங்குகளும், சேமங்கலங்களும் காணப்படும். இவற்றால் எழுப்பப்படும் ஓசையானது முப்பது யோசனை தூரத்துக்குப் பரந்து கேட்கும். 

மேலும், ஸ்ரீ நிலையத்தில் வீணை முதலிய கருவிகளை ,ஏந்திய கந்தர்வ இந்திரர்களின் தேவிமார்கள் பாடும் மண்டபங்களும் அங்கிருந்தன. அப்பூமியில் அட்டமங்கலங்களும், வாயிற்படியில் மகர தோரணங்களும் வரிசையாக இருந்தன. ஸ்ரீ நிலையம் பிரகாசமாய் இருக்கும்.

ஸ்ரீ நிலையம் முன்னூற்று எழுபத்தைந்து நிலைகளையுடையது.
ஸ்ரீ நிலையத்தில்
மேடைகளின் எண்ணிக்கை மூவாயிரமாகும். அதனுள் பன்னிரு கோட்டங்கள் இருந்தன. அங்கு பன்னிரு கணங்கள் அமர்ந்திருந்தனர். நான்கு வழிகளுக்கு இடையே மூன்று மூன்றாக கோட்டங்கள் அமைந்திருந்தன.

 பவணர், வியந்தார், ஜோதிஷ்கர், கல்பவாசியர் ஆகிய நால்வகைத் தேவர்களோடு அவர்களது மனைவியரும் அமர்ந்திருந்தனர். மற்ற நான்கு கோட்டங்களில் முனிவர்கள், ஆர்யாங்கணைகள், மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் ஆங்கே அமர்ந்திருந்தன..

பன்னிரு கணங்களும் சூழ்ந்திருக்க அரியணைமேல் இறைவன் இருக்கும் இடமான ஸ்ரீ நிலையத்தை மேரு, மந்தரர்கள் அடைந்தனர்.

------------------------




மேரு மந்தர குமாரர்கள் இருவரும் ஸ்ரீ நிலையத்தின் உள்ளே சென்றனர்.அங்கே பகவான் தோன்றினான்.தோன்றவும் ....... 


இருவருடைய கைகளும் வணங்கின, மனம் மகிழ்ந்தன, சொற்கள் தடுமாறின, மேலும் அவர் களுடைய வினைகள் பகலவனைக் கண்ட இருள் போல் விலகின. அவர்கள் பகவானை வலம் வந்தனர்.இறைவனை வணங்கி, போற்றிப் பாடலாயினர்.


ஒரு மொழியாகிய திருமொழியே பதினெட்டுமொழியாகி உலகத்து உயிர்கள் அறியுமாறு உணரச்செய்தாய்,  மனம், வசனம், காய ஜோதிகளுடன், ஆயிரத்தெட்டு இலக்கணங்கள் பொருந்திய திருமேனி உடையவரே, இறைவனே உம்மைப் பணிந்தோருக்கும், சேரா தவர்க்கும் விருப்பு, வெறுப்புற்றவர் எனக் கருதாது அறத்தினை நல்கும் குணமுடையவரே அனைத்தும் பொருகட்கும் இறைவன் நீயே , மூவுலக கடவுளே எங்களுக்கு நீரே இறைவன்.


ஒருமொழியே பதினெட்டாய் உலகறிய இயம்பியதும் ஒளிகொள் மூன்றில்/திருமருவாய்த் திகழ்கின்ற திருமூர்த்தி அதன் அழகும் தேவநின்பால் / மருவினார்க்கும் அல்லவர்க்கும் ஒத்திருந்தும் அடைந்தவர்க்கு வார்த்தை நல்கும்/பெருமயமோ அதிசயமோ பிரான் நீயே மூவுலகோர் பிரான் ஆகின்றாய் மே. பு. 1192

மேலும் 

ஆதியாய் ஆதியிலாய் அந்தமாய் அந்தமிலாய் அடையாது எய்தும்/போதியாய் போதியிலாய்ப் புறத்தாய் எப்பொருளினுக்கும் அகத்தாய் மூன்று /சோதியாய் சோதிலாய்ச் சுருங்காதாய் பெருகாதாய்த் தோன்றா மாயா/நீதியாய் நீதியிலாய் நினைப்பரியாய் வினைப்பகை எம் இறைவன் நீயே !-  மே.ம.பு. 1199.


என இவ் வாறெல்லாம் பகவானைப் பாடவே அவர்களிடமிருந்த வினைப் பகைவர்கள் விலகினர்.


 பகவானே எங்களுக்கு பிறவிக் கடலைக் கடப்பதற்கு நன்மை மிகு நிர்வாணத் தெப்பமாகிய துறவினைஅருளுக என வேண்டினர். 


அவர்கள் தாங்கள் அணிந்திருந்த மணி முடிகள், கங்கணங்கள், அரை ஞாண்கயிறு, ஆடைகள் ஆகியவற்றை நீக்கினர்.தங்களது கைகளினால் பஞ்ச மந்திரத் தை உச்சரித்தவாறே துறவு நெறிப்படி மயிர் நீக்கினர்.தேவர்கள் அவற்றைப் பாற்கடலில் இட்டனர். 



அவர்களிடத்தே மகா விரதங்களும்,சீலாசாரங்களும் வந்தடைந்தன. அவற்றால் ஏழு வகையான ரித்திகளையும் பெற்றனர்

--------------------- 

சமவசரணச்  சருக்கம் = =

 = = தொடர்ச்சி===

அவர்கள் நான்கு துவர்ப்பசைகளையும் நீக்கினர், மேலும் மனத்தகத்தே தோன்றும் மாசுகளையும் அகற்றினர்.நல்லொழுக்கம் என்னும் நன்னீரில் குளித்து, ஆகாயத்தையே ஆடையாக உடுத்திக் கொண்டனர்.மகா தபமாகிய சந்தனத்தைப் பூசிக் கொண்டனர். ஞான குணங்களை அணிகளாகவும்,சீலாசாரங்களையே மலர் மாலையாகவும் அணிந்து கொண்டனர்.



 வினைகளை வென்ற வேந்தனான ஜினேஸ்வரனுக்கு இளவரசர்களாகி சுருத கேவலி பட்டம் பெற்று பகவானின் எதிரே வந்து நின்று வணங்கினார்கள்.


விமல நாத பகவானே ! உமது பாதத்திலே அடைந்து கிடக்கும் உலகத்தின் இயல் பினையும், உயிர் முதலாகிய பொருள்களின்தன்மைகளையும்  உள்ள படி அறியும் ஞானத்தையும், மித்யா நெறியையும், தீய வினைகள் மனதிலே கட்டுவதற்கேற்ற காரணத்தையும், இல்லற உயிர்களின் பல்வேறு பிறப்புகளையும், வீட்டின் தன்மையினையும் எங்களுக்கு அருளுக என இருவரும் வேண்டினர்.


 அப்போது எல்லா உயிர்களும் பயனுறும் வண்ணம் பகவானின் திவ்ய தொனி வெளிப்பட்டது.அத் திவ்ய தொனி  பன்னிரண்டு யோசனை எங்குள்ளவர்களும் கேட்கும் வண்ணம் இனிமையாய் ஒலித்தது.


கணதர பதவியைப் பெற்ற மேருமந்தரர்கள் மனோபல மென்னும் ரித்தியினால்பகவானின் திவ்ய தொனியை அனைவரும் அறியும்  வண்ணம் எடுத்துக் கூறலாயினர். 



இவ்வுலகின் உச்சியும், மத்தியும் ஒரு கயிறு அகலமாகும், தெற்கு வடக்கில் நீளம் ஏழுகயிறாகும். மத்தளம் போன்ற இடைப் பகுதியில் ஐந்து கயிறு அகலமாகும்.கீழ்ப் பகுதிஏழு கயிறு அகலமுடையதாய் ஏழுகயிறு உயரமாம், உலகின் மொத்த உயரம் பதினான்கு கயிறு அளவாகும். இவ்வுலகம் மூன்று வாதங்களால் சூழப்பட்டுள்ளது.


 அதாவது ஒருவர் தம் இரண்டு கால்களையும் அகட்டி வைத்துக் கொண்டு தம் இரண்டு கைகளாலும் இடையைப்பிடித்துக் கொண்டு நிமிர்ந்து நின்றால் அந்தத் தோற்றம் எப்படி இருக்குமோ அதுவே உலக உருவமாகும். 


அதோ லோகம் வேத்ராஸனம் போலவும்(வட மொழிச் சொல்லில் -ஆசனம் -இருக்கை) மத்யம லோகம் (நடு உலகம்) நிறுத்தி வைக்கப்பட்ட பாதி மிருதங்கத்தின் மேல் பகுதி போலவும், ஊர்த்தவ லோகம்(மேல் உலகம்) நிறுத்தி வைக்கப்பட்ட மிருதங்கம் போலவும்அதாவது  நடுப்பகுதியும், முடிப் பகுதியும் குறுகியும் இடைப் பகுதி சற்று அகன்றும் இருக்கும். இதுவேஉலக அமைப்பின் தோற்றமாகும்


---------------- 

சமவசரணச் சருக்கம்
தொடர்ச்சி 

முழம், வில், காதம் இம்மூன்று அளவுகளில் எதைக் கண்டாலும் ஏழு முடிந்தவுடன் பக்கத்துக்கு மூன்று மூன்றாகக் குறைந்து சென்று எழுகயிறு உயரத்தேயுள்ள மத்திய உலகில் குறைந்து நின்ற அகலம், மேல் அளவான ஒரு கயிறாகும்.


மூன்றரை முழம் சென்ற பிறகு அங்கு நான்கு முழம் விரிவாக, இவ்வளவில் பெருகிச் சென்று மூன்றரை கயிறு உயரத்தில் ஐந்து கயிறு அகலமாகி அதற்கு மேல் இதே அளவில் குறைந்து சென்று உச்சியில், ஒரு கயிறு அகலத்தில் அமையும்.


பொதுவாக உலகம் ஒன்று என்பது உண்மை. திரச நாளி அதன் வெளிப்புற உலகம் இரண்டாகவும், முதல், நடு கீழ் என மூன்றாகவும் உயிர்களின் கதியைக் கருதி உலகம் நான்காகும் என்பர் .


அத்திகாய நோக்கில் ஐந்தாகவும், அவற்றுடன் காலத்தைச் சேர்க்க ஆறாகவும், நாரகர், பவணர், மனிதர், சோதிடர், கல்பவாசியர், அகமிந்திரர், சித்தர் இவர்தம் இருப்பிட நோக்கில் ஏழாகவும் கூறப்படுகிறது. 


நிகோதம் சேர்த்து அதற்கு மேல் ஐந்து நரகங்கள் வரையில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கயிறு அளவு உயரமாக, மொத்தம் ஐந்து கயிறாகும், மிச்சமுள்ளது ஒரு கயிறு தான், மேருமலை அடி வரையுள்ள அந்த ஒரு கயிற்றில் மற்ற இரண்டு நரகங்களும் பவண லோகம் பத்தும் அமைந்திருக்கும்.


நடு உலகத்திற்கு மேல் ஒன்றரை கயிறு உயரம் வரை செளதர்ம ஈசான கல்பங்களும், அடுத்த ஒன்றரை கயிறு அளவில் சனத்குமார, மாகேந்திர கல்பங்களும், அதற்கு மேல் ஆறு யுகளங்கள் அரை அரை கயிறுகள் உடையதாய், எஞ்சிய ஒரு கயிறு உயரத்தில் ஒளிமயமான  அகமிந்திர உலகங்களும் சித்த உலகமும் அமைந்துள்ளன.



அடுத்து ஏழு நரகங்களில் இருக்கும் நாற்பத்தொன்பபது புரைகளில் ஒவ்வொன்றின் நடுவிலும் ஒவ்வொரு இந்திரகங்கள் அமைந்து அதைச் சூழ எண் திசைகளிலும், சேணி பந்தங்கள் வரிசையாக அமைந்துள்ளன.

-----------------------------

சமவசரணச் சருக்கம்
தொடர்ச்சி.\


முதல் நரகத்தில் முதல் புரையில் கோண திசைகளின் நாற்பத்தொன்பது சேணி பந்தங்களும், அடுத்து புரை தோறும்  திக்குக்கு ஒன்றாகக் குறைந்து சென்று, ஏழாம் நரகத்தில் திசைக்கு ஒன்று மட்டுமே சேணி பந்தங்களாகும்.


முதல் நரகத்தில் முப்பது லட்சங்கள் ஆவாசங்கள் (வாழிடங்கள்) உள்ளன. இதனை பிலங்கள் என்றுஅழைப்பர். முதல் நரகம் ரத்னப் பிரபை என்றழைக்கப்படும்.


இரண்டாம் நரகமான ஸர்க்காரப் பிரபை இருபத்தைந்து லட்சம் ஆவாசங்களும் கொண்டுள்ளது. மூன்றாவது நரகம் வாலுகாப் பிரபையாகும், இதில் பதினைந்து லட்ச ஆவாசங்கள் உள்ளன,


நான்காவது நரகமான பங்கப் பிரபையில் பத்து லட்சம் வாழிடங்கள் உள்ளன, ஐந்தாவது நரகம் தூமப்பிரபை மூன்று லட்சம் வாழிடங்களும், ஆறாவது நரகமான தமப் பிரபை ஒரு இலட்சம் வாழிடங்கள், ஏழாவது நரகமான மஹாதப் பிரபை ஐந்து வாழிடங்கள் கொண்டதாகவும் இருக்கும்.


 இந்த பவணலோகத்தில் அசுரர், நரகர், சொர்ண குமாரர், தீபகுமாரர், அக்னி குமாரர், உத்தி குமாரர், வாயு குமாரர், வித்யுக்குமாரர், மேகு குமாரர் போன்ற பத்து விதமாகிய பவண சமூகத்தினர் வாழ்வர்.


இவர்களில் நாககுமாரர்களின் ஆயுட்காலம்  மூன்று பல்லம், சொர்ண குமாரர்களுக்கு இரண்டரை பல்லமும், தீபகுமாரர் ஆயுள் இரண்டு பல்லமும் ஆகும். ஏனையவர்களுக்கு ஒன்றரை, ஒன்றரை உயர்ந்தபட்ச ஆயுளைக் கொண்டவராவர்.


நாக குமாரர்களின் உயரம் பதினைந்து வில் அளவாகும், மற்றவர்களின் உயரம் பத்து வில் ஆகும்.

மனிதர்களின் வாழிட மானது மேருமலையை மையத்தே கொண்டுள்ள இரண்டரை தீபங்களும், இரண்டு பெருங்கடல்களுமாம் இவைகள் அனைத்தின் அகலம் நாற்பத்தைந்து யோசனைகளாகும்.


மனிதர்கள் ஆரியரென்றும் மிலேச்சரென்றும் இருவகைப்படுவர். ஆரியர் அறத்தையே மேற் கொள்பவர். மிலேச்சர் தருமத்தை மேற்கொள்ளார் என ஆகமங்கள் கூறுகின்றன.

-------------------------- 


 = சமவசரணச் சருக்கம் = = =

 தொடர்ச்சி.

உட்புற தீபங்களில் வசிக்கும் மனிதர்கள் ஒரு கால்,வால், கொம்பு, நீண்ட காது என ஆகிய இவைகளைப் பெற்றவராகக் காணப்படுவர். அது மட்டுமின்றி சிங்கம், பன்றி, மான், குரங்கு ஆகிய பல்வேறு மிருகங்களின் முகங்களைக் கொண்டவராய் இருப்பர்.பழங்களையும், மண்ணையும் உணவாகத் தின்பர்.குகைகள், மரங்களில் வாழ்வர்.

இமவான், மகா இமவான்,நிடதம், நீலி அழகிய சிகரங்களையுடைய ருக்மி, சிகரி ஆகிய ஆறுகுல மலைகளை நடுவிலே கொண்ட நாடுகள் பலவும் பரதம் முதல் ஏழாகும்.

இவற்றில் தெற்கேயுள்ள பரதமும், வடக்கேயள்ள ஐராவதமும் ஆறு கால பேதங்களையுடையன எனலாம்.

நன்னற்காலம், நற்காலம், நற்றீக்காலம், தீநற்காலம், தீக்காலம், தீத்தீக்காலமும் என எண்ணப்பட்ட காலங்கள் ஏற்ற இறக்கத்தைஉண்டாக்கும் (உத்சர்ப்பிணி-ஏறு காலம்; அவசர்ப்பிணி - இறங்கு காலம்) 

ஏறு காலத்திலே (வளரும் காலத்திலே ) உள்ள மக்கள் உயரம் ஒரு முழமும், வாழும் காலங்களே பதினைந்து ஆண்டுகள் இந்நிலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து இறுதியில் உயரம் ஆறாயிரம் வில்லளவும், ஆயுள் மூன்றுபல்லமாகவும் அமையும். 

இறங்கு காலத்தில் முறையாகக் குறையத் தொடங்கி இறுதியில் ஒரு முழம் உயரம் பதினைந்து ஆண்டு ஆயுளை எய்துவர். இந்த இரு நிலைகளும் சேர்ந்ததே ஒரு கல்பமாகும்.

 இறங்கு காலத்தில் முதற்காலம் நான்கு கோடா கோடியும், இரண்டாம் காலம் மூன்று கோடா கோடியும். மூன்றாம் காலம் இரண்டு கோடா கோடிகளும், இறுதி நான்காம் காலம் நாற்பத்திரண்டாயிரம் காலம் குறைவாகவும், ஐந்து, ஆறு காலங்கள் முறையே இருபத்தோராயிரம் ஆண்டுகள் உடையவனாக இருக்கும்.

 பரதமும், ஐராவதமும் கரும பூமியாகவும், போக பூமியாகவும் இருவிதமான நிலையைஅடையும். முதல் மூன்று காலங்களில் போக பூமியாகவும், அடுத்த மூன்று காலங்களில் கரும பூமியாகவும் இருக்கும்.


 இறங்கு காலத்தின் மூன்றாம் பிரிவாகிய நற்றீக் காலத்தின் பிற்பகுதியிலும், நான்காம் காலமாகிய தீநற்காலத்திலும் கூறுதற்கரிய மனுக்களும், தீர்த்தங்கரர்களும், சக்கரவர்த்திகளும், பல தேவர்களும், வாசு தேவர்களும் அவர்களின் பகைவர்களான பிரதி வாசு தேவர்களும் மேலும், பல சரம தேக தாரிகளும் தோன்றுவர்.

-------------  

சமவசரணச் சருக்கம் 
தொடர்ச்சி 


போக பூமியில் உத்தர குரு, தட்சிண குரு என இரண்டு போக பூமிகள்  உள்ளன. இவை இரண்டும் உத்தம போக பூமிகளாகும். அரி வருடம், இரம்மியம் ஆகிய இவை இரண்டும் மத்திம போக பூமிகளாகும். ஹைவதம், ஜரண்ணியம் இவை கடைநிலையாகிய ஜகன்னியபோக பூமியாகும்.


உத்தம போக பூமியில் வாழ்வோர் மூன்று பல்லமும், மத்திம போகத்திலுள்ளர் இரண்டு பல்லமும், ஜகன்னிய பூமியில் வாழ்வோர் ஒரு பல்லமும் ஆயுளைக் கொண்டவராவர்.


இவர்களின் உயரம் முறையே ஆறாயிரம் வில்லும், நான்காயிரம் வில்லும், இரண்டாயிரம் வில்லுமாகும், அவ்வாறே அவர்கள் முறையே மூன்று நாள்களும், இரண்டு நாள்களும், ஒரு நாளும் இடை விட்டு தங்கள் பசி நீங்க அமுதம் உண்டு வாழ்வர். 



முன்பு கூறப்பட்ட பரதம், ஜராவதம் ஆகியவற்றில் தோன்றும் கால பேதத்தின் முதல் மூன்று காலங்களின் தன்மைகள், மூன்று வகையான போக பூமிகளுக்கும் உரியதாகும்.
தீ நற்காலத்தில் வாழ்பவர்களின் உயரம் ஐநூறு வில், ஆயுட் காலம் பூர்வ கோடி ஆண்டுகள் என்பர்.

தீக் காலத்தில் உயரம் ஏழு முழமும், ஆயுளோ நூற்றிருபது ஆண்டுகள் கொண்டவராவர். தீத்தீக் காலத்தில் இருப்போருடைய உயரம் இரண்டு முழமும், உயர்ந்த பட்ச ஆயுளோ ஐம்பது ஆண்டுகளே எனலாம்.

கர்ம பூமியில் கச்சா, சுகச்சா, மகாகச்சா, கச்சாவதி, ஆவர்த்தா, லாங்கலாவர்த்தா, புஷ்கலா, புஷ்கலாவதி ஆகிய நாடுகள் உள்ளன.
சீதோதா  நதியின் தென் கரையில் வத்சாவும், சுவத்சாவும், மாவச்சையும், வச்சகாவதியும், ரம்மியா, சுரம்மியா ஆகிய நாடுகளோடு ரமணீயா, மங்கலாவதி ஆகிய நாடுகளும் உள்ளன.



மேலும், சீதோதா  நதியின் தென்கரையில் பத்மா, சுபத்மா, மாபத்மா, பத்ம காவதி, சங்கா, நளினா குமுதா, சரிதா போன்ற நாடுகளும் உள்ளன.
இந்நதியின் வட கரையில் வப்ரா, சுவப்ரா, மாவப்ரா,வப்ரகாவதி, கந்தா, சுகந்தா, இவை மட்டுமின்றி கடலைப் பெற்ற கந்திலா, கந்தமாலினி போன்ற நாடுகளும் அமைந்துள்ளன.



 இவ்வாறு இந்த முப்பத்திரண்டு நாடுகளும் சீதா நதியின் வட கரையிலிருந்து வலமாக வரிசையாக அமைந்திருந்தன. இவைகள் வெள்ளியம் மலையாலும், இரண்டு சுல்லக நதிகளாலும் நன்மை மிகு கண்டங்கள் ஆறாக ஒவ்வொரு நாடும் பிரிந்திருந்தன.




 இங்கு வாழும் மக்கள் ஐநூறு வில் உயரமும், பூர்வ கோடி ஆயுளை உடையவராகவும், வினைகளை கெடுத்து வீடு பேற்றையும் எய்துவர்.

---------------- 

சமவசரணச் சருக்கம்


 தொடர்ச்சி.

அங்குள்ள வனங்கள், தடாகங்கள், மலைகள் அனைத்தும் இரத்தின பூமிகளின் மேல் நின்று விளங்கின.

நந்தீஸ்வர தீபத்தில் அஞ்சன பர்வதங்கள் நான்கு, ததிமுக பர்வதங்கள் பதினாறு, இரதிகர பர்வதங்கள் முப்பத்திரண்டு என்ற எண்ணிக்கையில் காணப்படுகின்றன. 

அங்குள்ள ஜினபகவான்களின் ஆலயங்கள் நூறுயோசனைஉயரம் கொண்டதாகவும், அகலம் ஐம்பது யோசனை கொண்டும் தோன்றும்.இவ்வாலயங்களின் முகப்பு மண்டபங்கள் மூன்று வாயில்களைக் கொண்டதாகத் திகழும்.இவையே கந்த குடி மண்டபங்களான பிரதம மண்டபங்கள் அல்லது பீடிகா மண்டபங்களாகும்.

கந்த குடி மண்டபங்களின் வாயில்களின் இரு பக்கமும் மாலைகளே சன்னல்களாய்க் காட்சி தரும்.அவற்றைச் சூழ்ந்து பாலிகை முதலிய நூற்றெட்டு மங்கலக் கருவிகள் மற்றும் பலவிதப் பொருள்களும் அங்குக் காணப்படும். 

ஆங்கே உழைக்கல மண்டபங்களும் இருக்கும் அங்கே உள்ள அரங்கங்களில் ஆடலும், பாடலும் நடைபெறும்,உழைக்கல மண்டபம் முழுவதும் வளர்ந்து (ஏறு காலம்) குறையும்(இறங்கு காலம்) காலங்களின் முதலிலும், முடிவிலும் வாழும் மனிதர்களின் சித்திரங்களும், தீர்த்தங்கரர்களின்தோற்றம் , உலகின் வடிவம், எண்ணற்ற கடல்களும், விஞ்சையர், தேவர் விலங்குகளின் தன்மைகளும் பலரும் அறியுமாறு வரையப் பட்டிருக்கும்.

 அங்கு தேவ உலகிலும், வீட்டுலகிலும் சான்றோர் எய்தும் மேன்மையும் வரையப் பட்டிருக்கும்.

 மேலும், ஒரு உயிர் அது செய்த நல்வினை , தீவினை யால் அவையடையும் விளைவுகளை விளக்கும் வண்ணம் வரையப் பட்டிருக்கும். 

உழைக்கல மண்டபத்தில் அமைந்துள்ள இக்காட்சிகளைக் காண்போர் நற்காட்சியைப் பெற்றவராவர்.அங்கு தூபையும், வைஜயந்த கொடியும் மானத் தம்பம் வரை தொடர்ந்து இருந்தது.


 கந்தகுடி மண்டபங்களின்எண்ணிக்கை நூற்றெட்டாகும்.அவை பலவிற்கள் இடை வெளிவிட்டுக் காணிப்படும். அங்கு ஜினபிம்பங்கள் ஐநூறு வில் அளவு கொண்டதாய் உள்ளன. 


ஆங்கே மூவுலக நாதனை வணங்க பூஜைப் பொருட்களோடு தேவ மாதரும், செளதர்மேந்திரன், மற்றும் தேவர்களும் தேவ வாத்தியங்கள் மிகுதியாக இசைக்க வந்து சேர்ந்தனர்.

--------------


 சமவசரணச் சருக்கம்

தொடர்ச்சி....

அவர்கள் இறைவனைத் தொழுது புறப்பட்டனர். கார்த்திகை, பங்குனி, ஆடி மாதங்களில் குற்றமற்ற வளர்பிறையில் அட்டமி முதல் எட்டு நாள்களுக்கு அந்த நந்தீஸ்வர தீபத்தில் தங்கியிருந்து பூஜையைத் தொடங்கினர்.


 சௌதர்மேந்திரன், சமரன் என்னும் பவணேந்திரனாகிய அசுரேந்திரன், ஈசான கல்பத்து இந்திரன், வை ரோசனன் ஆகிய நான்கு தேவர் தலைவர்களும் குழுக்களாகப் பிரிந்து இடை விடாது பூஜை செய்வார்கள்.


 பிரம்ம கல்பத்தின் எண் திசைகளிலும் உள்ள உலகாந்திக தேவர்கள் அங்கிருந்தவாறே , நந்தீஸ் வர பூஜா சிறப்புக்களை எல்லாம் மனதால் சிந்தித்து தியானித்துக் கொண்டிருப்பார்கள்.


அவர்கள் மிக்க வணக்கத்துடன்  இறைவனின் ஆலயத்தை வலம் வந்தபோது இறைவனின் திருவுருவத்தைக் கண்டு மகிழ்வோடு துதித்தனர்.
மனத்தூய்மையோடு இந்த நந்தீஸ்வர பூஜையைச் செய்யும் மாந்தர் மறு பிறவியில் தேவர்களாய்ப் பிறந்து தேவ இன்பம் நுகர்வர். அவர்கள் பின்பு மண்ணுலகில் பிறந்து தவ சீலர்களாகி, முக்தி அடையும் பேறு  பெறுவர் என்பதை உணர்தல் வேண்டும். 


எட்டு வகையான வியந்தர தேவர்களின் வாழிடம் இந்த மத்திம உலகமே ஆகும். முன்பு கூறப்பட்ட கணக்கற்ற தீவுகளும் பெருங்கடல்களும் அவற்றின் உறைவிடங்களாகும்.


ஜோதிஷ்க தேவர்கள் விண்ணில் இயக்கம் பெற்றிருப்பர். மானுடோத்திர மலையின் வெளிப்புறங்களில் இயக்கமின்றி நிலைத் திருப்பர்.


இவர்கள் சித்திரா பூமிக்கு மேல் எழுநூற்று தொண்ணூறு யோசனை உயரத்திற்கு மேல் இருப்பர். சித்திரா பூமியானது மத்திய உலகத்தின் கீழுள்ள நிலப் பகுதியாகும். இப்பூமியில் தான் சூரியனும், சந்திரனும், இருபத்து ஏழு நட்சத்திரங்களும் எண்ணற்ற தாரகைகளும் காணப்படும். 


அதற்கு மேல் புதன், வெள்ளி, வியாழன், செவ்வாய், சனி முதலானைவகள் உள்ளன. பவண, வியந்திர, ஜோதிஷ்க தேவர்களின் ஆயுள் பத்தாயிரம் ஆண்டுகளாகும்.



மத்திம உலகத்தில் உள்ள இரண்டரை தீபத்தில் நூற்று முப்பத்திரண்டு சந்திரர்களும். அதே அளவிலான சூரியர்களும் இயங்குகின்றனர். அதன் விவரமாவது:


அதோலக சமுத்திரத்தில்  இரண்டு சந்திரன் இரண்டு சூரியன் இலவண சமுத்திரத்தில் நான்கு நான்கு, தாதகி தீபத்தில் பன்னிரண்டு, பன்னிரண்டு ; அதோலக சமுத்திரத்தில் நாற்பத்திரண்டு, நாற்பத்திரண்டு, புஷ்கரவர தீபத்தில் எழுபத்திரண்டு, எழுபத்திரண்டு என அருக தேவனால் அருளப்பட்டுள்ளது.

--------------------

= = = சமவசரணச் சருக்கம் = = =

தொடர்ச்சி - 


இனி சொர்க்க லோகத்தின் இயல்பை சொல்லுவார், முன் மேற்கூறிய படலங்களில் இந்த்ரகங்களும், சேணி பந்தங்களும், புஷ்ப பிரகீர்ணங்களும் என்று குறிப்பிடப்படும் விமானங்கள் காணப்படும்.இவைகள் அமரர்கள் வாழிடங்களாகும்.


 நான்கு திசைகளிலும் வரிசையாக அறுபத்திரண்டு உள்ளன. சேணி பந்தங்களானவை , மேல் படலந்தோறும் திக்குக்கு ஒன்றாகக் குறைந்து கொண்டே போய் புகழ் பொருத்திய நவாணுதிசைஅகமிந்திர உலகில் திசைக்கு ஒன்றாக இருக்கும்.


இந்த்ரகம், சேணி பந்தம், பிரகீர்ணம் ஆகியவற்றின் எண்ணிக்கையைஅறிந்து கொள்ள, சௌதர்ம ஈசான கல்பம் முதல் விமானங்களின் எண்ணிக்கையை முறையாகச் சொல்கின்றார்.


 இங்குள்ள விமானங்களின் எண்ணிக் கை கீழ் வருமாறு: 1செளதர்ம கல்பத்தில் முப்பத்திரண்டு லட்சம்.2 ஈசான கல்பத்தில் இருபத்தெட்டு லட்சம்.3.சனத்குமார கல்பத்தில் பன்னிரண்டு லட்சம். 4. மா கேந்திர கல்பத்தில் எட்டு லட்சம் 5. பிரம்ம பிரம் மோத்திரத்தில் நான்கு லட்சம். அதற்கு மேல் இரண்டிரண்டு கல்பங்களில் இவ்வாறு பாதி அளவு அதாவது லாந்தவ காப்பிட்டகல்பத்தில் ஐம்பதினாயிரமும், சுக்ர மகா சுக்ர கல்பங்களில் நாற்பதினாயிரமும், சதார சகஸ்ராரங்களில் ஆறாயிரமும், ஆனத கல்பங்களில் நானூறும், ஆரண அச்சுதங்களில் முன்னூறும் உள்ளன. ஹேஷ்டி மத்திமத்திரயத்தில் நூற்றியேமும் மூன்று உபரிம கல்பத்தில் தொண்ணூற்று ஒன்றும் உள்ளன. மிகமேலான நவாணு திசையில் ஒன்பது விமானங்களும், பஞ்சாணுத் தரத்தில்ஐந்து விமானங்களும்  இருக்கின்றன. 


இங்குஇந்திரர்களும் , சாதாரண தேவர்களும், தாயத்திங் கரும் (த்ராயத்ரிம்சரும்) பிரதி இந்திரர்களும், உலக பால தேவர்களும், தண்ட நாயகர்களும், ஆனீகதேவர்களும், பிரகீர்ணகதேவர்களும், கில் விழியர்களும் ஆகிய பத்து விதமான தேவர்களும், பூவுலக அரசர்களும், பெரியோர்களும் இவர்களே யல்லாமல் மந்திரிகளும் மேற்சட்டை போலச் சூழ்ந்திருப்பர்.



கடையிலா அறிவையும், கடையிலா காட்சியையுமுடைய சித்த பரமேட்டிகள் பொருந்தி நிற்கும், சித்த உலகமானது, உலகத்தின் மத்தியில் எட்டு யோசனை பாகுல்யத்தைப் பெற்று நிறைவெய்தி , ஈற்றில் ஈயின் இறகு அளவாகக் குறுகி குடையானது விரிந்திருப்பதைப் போல விளங்கி, இரண்டரை தீபத்தின் விஸ்தீர்ணமாகிய நாற்பத்தைந்து லட்சம் யோசனை பெற்று, பான்மையரால் வணங்குதற்குரிய மேன்மை பெற்றதாக விளங்குகிறது.
------------ 

 சமவசரணச் சருக்கம்
தொடர்ச்சி 

நல்ஞானம் ஐந்தாகும், 

1. மதிஞானம்

ஐந்து இந்திரியங்கள், மனம் இவற்றினால் உண்டாகும் அறிவே மதி ஞானமாகும்.

2. சுருத ஞானம்

ஆகமங்களைப் படித்தோ, பிறர் படிக்கக் கேட்டோ அறிதல்.

3. அவதிக்ஞானம்

திரவ்ய, க்ஷேத்ர, கால, பாவங்களில் அளவோடு உருவமுள்ள பொருள்களை  மெய்யாக அறிதலே அவதிக் ஞானம் என்பர்.

4. மனப்பர்ய ஞானம்

மற்றவர்களுடைய மனத்தில் உள்ள உருவமுடைய பொருள்களை ஸ்பஷ்டமாக அறிதலே மனப்பர்ய ஞானமாகும்.

5. கேவலஞானம் 

முக்காலத்தின் அனைத்துப் பொருள்களையும் அதன் பர்யாயங்களையும் ஒருங்கே அறியும் ஞானத்திற்கு கேவல ஞானம் (முழுதுணர்ஞானம் ) என்று பெயர்.


குணத்தானங்கள் பதினான்கு வகைகளாக அமையும். இவை இறைவனால் சொல்லப்பட்ட திவ்யதொனிகளாகும். பிறகு கணதரர்கள் பன்னிரு பரமாமகங்களாகக் கூறியுள்ளனர். அவர்களால் உருவாக்கப்பட்ட ஆகம நூல்கள் (பன்னிரண்டு அங்கம், பதினான்கு பூர்வம்) சுருத ஞானப் பிரமாணமாகும்.


வினைகளால் வேறுபட்ட தீய அறிவும் தீய சுருதங்களும், தீயதை அறிவதும், ஓதுவதும் மித்யா ஞானங்களாகும். அவை மூடம், ஐயம் , விபரீதம் என மூன்றாகும்.

சஞ்சி (மனமுடைய) பஞ்சேந்திரிய உயிர்கள் தவிர மற்ற உயிர்கள் எல்லாம் தீய ஞானத்தையே பெற்றுள்ளன.


ஐம்பொறிகளைப் பெற்ற உயிர்கள்  பொருள் இன்பங்களிலிருந்து விடுபடாமல் உயர் அறத்தை மேற்கொள்ளாமல் மயங்கிக் கிடப்பது மூடமாகும். உண்மையை உணராது பலவிதமாகப் பொருள் கொள்வது ஐயமாகும். உண்மைக்கு நேர்மாறாக உணர்தலும், சொல்வதும், செயல்படுவதும் விபரீதமாகும்.


விருப்பு, வெறுப்பு கொண்டவர்களைக் கடவுள் என்றும், பாப காரியங்கள் செய்வோரை நற்பண்பு உடையவர்கள் என்றும், பிறவியில் வைராக்கிய உணர்வில்லாத ஆசையை வளர்க்கும் நெறியே சம்சாரத்தை நீக்கக் கூடியதென்றும், உயிர் பலி செய்தல் அறமென நினைத்தலும், காதி வினைகளுக்கு உட்பட்டு உழன்று கிடப்பவர்களை இவ்வுலகத்தின் இறைவர்கள் என நம்புவதும் தவறு.



மேலும், உலகத்தில் விகார தன்மைகள் இல்லாதவனுடைய நற்செயல்களைத் தீயவை என்றும், இல்லற வாழ்விலிருந்து நீங்கிய துறவியர் நன்னெறி பொருந்தாதவரை மாமுனிவர்களென்றும், கொடுஞ்செயல் புரிவோரை தலைவர்கள் என்றும், விவகார நிச்சய நயங்கள் பொருந்திய உயிர் முதலிய பொருள்கள் எதுவும் உலகில் இல்லை எல்லாமே சூன்யம் என நம்புவது மித்யாத்வமே எனலாம். மேலும்..

------------------ 
சமவசரணச் சருக்கம்
தொடர்ச்சி.

ஞானத்தினால் வீடு பேறு அடைய முடியும், சீலத்தினாலும் முக்தி பெறலாம் என நம்புவதும் மித்யாத்வமே ஆகும். உயிரானது எப்போதும் முக்திக்கு உரியது என்றும், அஞ்சானமே நல்லது என்றும் நம்புவதும் ஆகிய இவை போல் பிறவும் மித்யாத்வ  நெறியாகும்.

அப்போது அரசர்கள், மேரு மந்தர கணதரர்களிடம் வினையாகிய பகைவர்கள் ஆத்மனிடத்திலே மிகுதியாக வந்து சேர்கிறார்கள் அதற்கு காரணம் என்ன? என வினவினர்.

ஞானாவரணீயம் முதலிய எண் வகை வினைகளும் அவை அவை வந்து சேர்வதற்கான நிமித்தங்களைப் பெறும் உயிரில் வந்து சேர்வது ஊற்று எனப்படும். அவை அதிகாஸ்வரம், ஈனாஸ்வரம் எனப்படும் ஊற்றுக்குப் பின் பந்தமாகும்.

இனி ஊற்றுக்கான நிமித்திங்களைக் கூறுகிறார்.
அருகனால் அருளப்பட்ட பரமாகமகங்களைப் பழித்தலும், அவற்றை அழித்து, தேவையற்றதை இணைத்தலும், அவற்றின் பொருளை வேறுபட உணர்த்தலும், சுருத குருக்களை இடித்துப் ரைப்பதும், ஆகமங்களை மறைத்து விடுவதும், தீய நூல்களில் ஆர்வங் கொள்ளுதல், சினம், செருக்கு, ஆசை, வஞ்சனை முதலிய தீய கஷாயங்களில் விருப்புற்று, நல் ஞானத்தின் மேல் வெறுப்படைவது ஆகிய இவை பெருகி வளர்வதால் ஞானாவர்ணீயம், தர்சனா வரணியம் முதலிய வினைகள் மிகுதியாக ஆன்மாவைப் பந்திக்கும்.

தனது உயிரோடு மற்ற உயிர்களையும் கொலை செய்தலும், கொடிய கருவிகளால் இன்னுயிர்களை வேட்டை யாடுதல், அவற்றை தீயிட்டு துன்புறுத்துதல், அவற்றின் உறுப்புகளைத் துண்டித்தல், கொலை செய்வோருக்கு தேவையான கொலை கருவிகளைக் கொடுத்தல், பிற உயிர்கள் நடுங்குமாறு கொடுந்துயரங்களைச் செய்தல், இவற்றால் இடர்தரும் அசாதா வேதனீயம் உயிரை பந்திக்கும்.


மேலே கூறப்பட்ட கொடிய பண்புகள் இல்லாமல், உயிர்களிடம் அருள் கொண்டு ஏழு நற்பண்புகளைப் பெற்ற நல்ல மனம் படைத்தவர்கள் உயிர்கள் மாட்டுத் தோன்றும் துன்பங்களைப் போக்கி, அவற்றை உபசரித்து, அறியாமையால் வந்து சேரும் துன்பங்களை அடியோடு நீக்கினால் மிகச் சிறந்த சுகங்களை அளிக்கும் சாதா வேதனீய வினையானது அவர்களுக்கு வந்து சேரும்.
------------



= சமவசரணச் சருக்கம் = 

தொடர்ச்சி -

 ஜின பகவானது ஆலயம், அவனால் அருளப்பட்ட ஆகமங்கள், அறநெறிகள் ஆகியவற்றிற்கு வேறுபட்டு மெய்ப்பொருளை அறியாமல், மாறுபட்ட பொருள்களைக் கூறி, அருகனின் பெருமைகளை உணராமல், ஆசை ,சினம் கொண்ட கடவுளர்களையே வணங்குதல் ஆகியவை நன்னெறியை மயங்கச் செய்யும் தர்சன  மோகனீய கர்மங்கள் பந்திப்பதற்கு காரணமாகின்றன. 

அவை யாவன - நல்லவர்கள் மீது பழி கூறுதல், குற்றங்காணுதல்.அரஹந்தபகவானும் நம்மைப் போல் உணவு, உடைகளுடன் வாழ்கிறார் என்று குறை கூறத்துணிதல். புலால் உண்ணலாம், துன்பங்களை மறக்க புலனின்பங்களில் ஈடுபடலாம் எனக் கூறுதல்.ஜிந தர்மத்தால் பயனில்லை என்றல், இதனைக கடை பிடித்தால் அசுரர் ஆவர் என்று குறை கூறுதல்.தேவர்கள் கள் குடிப்பர், புலால் உண்பர், உயிர் பலி செய்யவும் துணிவர் என்று கூறி வருபவை அனைத்தும் தர்சன மோகனீய கர்மங்களாகும்.

 கஷாயங்களின் உதயத்தினால் சாரித்திர மோகனீய கர்மம் உண்டாகிறது.நல்லொழுக்கத்தை அழிப்பது, உடலுடன் இயங்கும், நிற்கும் உயிரினங்களுக்கு துன்பங்களைத் தருதல், அவைகளை அவற்றின் கூட்டங்களிலிருந்து பிரித்தல் ஆகிய இது போன்ற தீச் செயல்களால் நீங்காத பகை, ஆகை மயக்கம் ஆகிய இருபத்தைந்து விதமான  ஒழுக்கத்தை அழிக்கும் ஆகிய இவற்றால் சாரித்திர மோகனீய கர்மம் வரும். 

அனாதி காலமாக உயிரின் பண்பை மயங்கச்செய்யும் எட்டு வித வினைகளின் உதயத்தாலும், பொருட்பற்றின் காரணமாகவும் கொலை, களவு, பொய் ஆகியவற்றை விரும்பி மிக்க தொழில் பற்று ஆகியவற்றை நீக்காத காரணங்களால் நரகாயுள் கிட்டும். 


இவைகளிலிருந்து விலகினால் நற்கதி எய்தலாம். வஞ்சனை மனத்துடன்  சொல் வேறு, செயல் வேறு பட்டு, நல்ல ஒழுக்கங்களை மேற் கொள்ளாமையாலும்,மும் மூடங்களாகிய மித்யாத்வ வினைகளின் உதயத்தாலும், குறை நிறை உயிர்களான விலங்கு கதிகளில் சென்று பிறப்பர்.
-------------------- 

சமவசரணச் சருக்கம் = = = 

தொடர்ச்சி. 

மும்மணிகள் பால் விருப்பம் கொண்டு அவற்றை ஏற்று ஒழுகுதலும், நடு நிலைமையும், மிக்க அருளும், உண்மைத் தன்மையும், மனம் கலங்கா தர்ம, சுக்ல தியான பாவனையும், மா முனிவர்களுக்கு நால் வகைத் தானங்களை அளிப்பதாலும் போக பூமியில் மனிதர்களின் ஆயுள் வந்து சேரும்.


மேலே கூறியவை ஏற்று ஒழுகவில்லையேல் விலங்கு பிறவிக்குக் காரணமாகும். 

தர்மம் செய்வதில் ஆர்வம் கொள்வதினாலும், உயர் நற்காட்சியினாலும்,இல்லற  சுகத்தில்  பற்றின்மையாலும் , சமதா பாவனை யாலும் தேவேந்திர பதவி கிட்டும். தர்ம கண்டங்களில் வீடு பெறும் உயர்ந்த மக்கள் ஆயுளைத் தரும் வினையானது பந்திக்கும்.

இத்தகு உயர் கொள்கைகளில் பொருந்தாதவர் கர்ம பூமியில் விலங்காய்ப் பிறப்பர்.மேலும், ஒன்று முதல் நான்கு பொறிகளைக் கொண்ட உயிரினங்களின் நிலையையும் எய்துவர்.ஒரு பொறி உயிர்களான வாயு, நெருப்புயிராகவும் பிறப்பர்.

இவையேயன்றி விரதமில்லாத நற்காட்சி, தீமை கலந்த ஞானமற்ற ஒழுக்கம், புலனின் பங்களில் ஆர்வமுற்றுமேற்கொள்ளும் பூஜை, தபம், விரதம் முதலியவை, அதே நிலையுடைய மனம், சொல், செயல், அடக்கங்கள், ஜவகை சமிதிகள், பன்னிரு சிந்தனைகள், பத்தற தர்மங்கள்,தபங்கள் ஆகியவை உயர்ந்த, இடைப்பட்ட தாழ்ந்த தேவ ஆயுள் வினையை பந்திக்கச் செய்யும்.

இவை தவிர நற்காட்சியில்லாத மித்யாத்துவம் கூடிய விரத ஒழுக்கங்களாலும் மேலே கூறிய ஆயுள் வினை பந்திக்கும்.

 நற் குணங்களை ஏற்காமல், தீய கதைகளைக் கூறுதல், நல்ல கதைகளை விட்டொழிப்பது, தீய ஒழுக்கங்களை கடை பிடித்த  ல்,துயரமடைதல்,விருப்பு வெறுப்பினால் மனம், சொல், செயல் மாறுபடுவதும், தீமை பயக்கும் சிரிப்பும் ஆகிய ஒழுக்கத் தன்மைகள் அசுப நாம கர்மம் பந்திக்கக் காரணங்களாகும்.


நற்காட்சி, குறைவற்றவிநயமும் அதிசாரங்கள் இல்லாத சீல விரதங்களும் நலமிக்க ஞான உபயோகமும், சம் வேகமும் ஆற்றலுக்கேற்ப தவம், தியாகங்களும்,நந்நெறியறிந்து  சாது சமாதியும்,வையா விருத்தியும் ஆவச்சமும் ஆகிய இவற்றைத் தளராது செய்யும்  பண்பும், வஞ்சனை கலவாத அறப்பிரச்சாரமும் அறத்தின்பால் தளராத ஆர்வமும், அருக பக்தி, பிரவசன பக்தி, ஆசாரிய பக்தி, பகுசுருத பக்தி ஆகிய பதினாறு பாவனைகளால் தீர்த்தங்கர நாம மகா புண்ணிய கர்மம் பந்தமாகும் இப்போது கூறிய குணங்களில் நற்குணங்களினாலே நற்குண பாவனைகளாலே இவ்வுலக உயிர்களுக்கு சுப நாம கர்மங்கள் உயிர்களிடத்தே சேரும்.

--------------------------- 

சமவசரணச் சருக்கம்
 தொடர் ச்சி

மற்றவர்களைப் பழித்துத் தன்னைப் புகழ்ந்து கொள்வதும், மற்றவர்களிடம் உள்ள நல்ல குணங்களைக் கெடுத்து மாறான தீய தன்மைகளைக் பெருக்கிக் கொள்வதும், கெட்ட ஒழுக்கங்களைக் புகழ்தலும், பெரியோர்களையும் அவர் தம் நல்லொழுக்கங்களை  வெறுத்தலும் ஆகிய இவற்றால் நீச கோத்திரத்தில் வினைகள் பந்திக்கும்.

தீய செயல்களிலிருந்து விலகுதலும், அரகந்தர், சித்தர்களை வணங்கும் ஆசாரியர் முதலியோர்களை வணங்குவதும், தன் புகழை விரும்பாமலும், மா முனிவர்கள் ஆகாரத்திற்கு வருவதை எதிர் நேரக்குதலும், அக்காலம் கடந்த பின் உணவை உண்பதும், கொல்லாமை முதலிய அறங்களைப் போற்றுவதும், தன் அழகிற்கு மயங்காமையும் ஆகிய உயர் ஒழுக்கங்களால் உலகம் விரும்பும் உயர் கோத்திரமானது பாவிக்கும்.

எப்போதும் சின முடையவனாகவும், கொலை முதலிய கொடுமைகளைச் செய்தும், மற்றவர் செய்யும் தான தர்மங்களைத் தடுத்தும், தன் சொல் கேட்டு பிறர் நடக்கவில்லை யென்றால் வெகுண்டும் , ஊன், தேன், மது முதலியவற்றை உண்டும், பிறர் வளர்ச்சி கண்டு அதனை அபரிக்கக் கருதுதலும், துன்புறுத்தலும் ஆகிய இவற்றால் ஐந்து வகைப்பட்ட அந்தராய கர்மங்கள் பந்திக்கும்.

சொல்லப்பட்ட இந்தச் சேதனா மனோபாவங்கள் மனம், சொல், செயல்களால் உயிரிடத்துச் சேரும் தன்மைகளை மனத்தினால் நினைத்தலும் இயலா, சொல்லவும் சொற்கள் போதா என்று மேருமந்தர கணதரர்கள் கூறவும், கேட்டுக் கொண்டிருந்த பன்னிரு கணத்தவர்களும் அவர்களை வணங்கித் துதித்தவர்கள் தங்களைச் சேர்ந்த வினைகளை வெல்லும் முயற்சியை மேற்கொண்டனர்.

அந்தந்த கதிகளுக்கான ஆயுளும் செயல், மனமும்மற்ற பொறிகளும் மூச்சும் ஆகிய பிராணன்கள் அழிவது மரணம் எனப்படும்
உயிரானது, தான் சேர்த்துக் கொண்ட வினையுடன் வேறு கதியில் சேருவதைப் பிறப்பு என்கிறோம்.


இவ்வாறு மரணத்திற்கும் மீண்டும் பிறப்பதற்கும் எடுத்துக் கொள்ளப்படும் நேரம் ஒன்று அல்லது இரண்டு மூன்று சமயங்கள் ஆகும்.

----------------------- 


சமவசரணச் சருக்கம் 
தொடர் ச்சி....

 மேற்கூறிய பிறப்பானது மூன்று வகையாகும்.

1. உபபாதம்
2. சம்மூர்ச்சனை. 
3. கர்ப்பம். 

உபபாத பிறப்பில் தேவர்களும்,நரகர்களும் பிறப்பர். மனிதர்கள் சராயு பலத்துடன் கூடிய கர்ப்பம் பிறவியை அடைவர்.
சராயு படலத்துடன் பிறக்கும் விலங்குகளும் முட்டைகளில் பிறப்பதும், குட்டிகளாகப் பிறப்பதும் கர்ப்ப வகையில் அடங்கும்.

ஒன்று முதல் நான்கு பொறி உயிர்கள் சம்மூர்ச்சனா பிறப்பினவாகும்.  விலங்குகளில் ஐம்பொறி உடையன சில சம்மூர்ச்சனா பிறப்பில் அமையும். உயிர்களில் மனம் உடையவை; மனம் அற்றவை என இருவகைகள் உண்டு. தோல் செவியுடையவைகள் அனைத்தும் உபதேசத்தைக் கேட்கும் தன்மையைப்  பெற்ற மனம் உடைய உயிர்களாகும்.

துளைக் காதுகளை உடைய உயிர்களில் சில மனம் உடைய உபதேசத்தை ஏற்கக் கூடியத் தன்மை பெற்றனவாகவும், சில மனம் அற்றவைகளாகவும் உள்ளன. மனம் உடைய ஜீவன்களால் மட்டுமே நல்லறத்தை ஏற்கும் நிலையை எய்த முடியும். உயிர் தன் வாழ்நாளில் சேர்த்துள்ள வினைக்கட்டுகளை முழுமையாக நீக்குதலே வீடுபேறு எனப்படும்.
அத்தகைய  தூய நிலையை மனிதப் பிறவியில் மட்டுமே எய்த முடியும்.

இவ்வாறான அறவுரையை மேரு,மந்தர கணதரர்கள் விரிவாகவும், தெளிவாகவும் எடுத் துரைத்தனர். விமல தீர்த்தங்கரரின் பன்னிரு கணங்களில் ஐம்பத்தைந்து பேர், மற்ற தவ முனிகள் அறுபத்து எட்டாயிரம் பேர். மற்றும் நவ சம்யதர் மூன்று இலட்சத்து அறுபத்து நான்காயிரம் பேர்களும், ஒரு இலட்சத்து மூவாயிரம் ஆர்யாங்கனைகளும் சிராவகியர் நான்கு இலட்சம் பேர்களும், சிராவகர்கள் இரண்டு இலட்சம் பேர்களும் இருந்தனர்.

சமவ சரணத்தில் எண்ணற்ற தேவ தேவியரும் எண்ணிக்கைக்குட்பட்ட பிராணிகளும் அறம் கேட்கும் நற்பேறு பெற்ற ஜீவன்களாவர். 

முதன்மைக் கணதரர் மேரு மந்தரர் ஆகிய இருவரும் நான்கு அனுயோக ஆகமங்களை அனைவருக்கும் உபதேசித்து அருளிய பின்னர், தம் வினைகளை வெல்ல பன்னிரு கணங்களிலிருந்து பிரிந்து அடர்த்தியான காட்டின் மத்தியில் உள்ள  ஒரு மலையின் உச்சிக்குச் சென்று தவத்தில் மூழ்கினர்.
------------------

சமவசரணச் சருக்கம்

தொடர்ச்சி..

தன்னை அறுப்பவனுக்கும்  குளிர் நிழலைத் தரும் மரத்தைப் போலவும் தேய்த்து அரைத்த போதும் குளிர்ந்த குழம்பைத் தரும் சந்தனக் கட்டை போலவும், தொடர்ந்து துன்பங்களைச் செய்பவர்களுக்கும் அவர்கள் பயனடையுமாறு அறமுரைக்கும் தன்மையுடன் உத்தமப் பொறை என்னும் தர்மத்தை அவ்விருவரும் குறையாது போற்றி ஒழுகினர்.


வரைப்பினும் குளிர்ப்பைச் செய்மரத்தின் நீழலும்
அரைப்பினும் சீதமாம் சந்தம் போலவும்
நிரைத்து நின்று இதாத
 செய்தவர்க்கும் இன்பமாம்
உரைக்கண் நின்று உத்தமப் பொறை யோடு ஓம்பினார்.

மே.ம.பு.- 1359 - 

உத்தம அமைதி கொண்ட அவர்கள், பணிவுடை யவர்களாய் உலக உயிர்கள்  அனைத்தையும் சமமாக மதித்தனர், நற்சிந்தனை யாளர்களுக்கு நல்லறத்தைப் போதித்தனர். பஞ்சைப் போன்ற மென்மை உள்ளம் கொண்டவராகவும், கபட மற்ற மேன்மைத் தன்மை கொண்டவராகவும் விளங்கினர்.


பற்று, பகை, மயக்கம் ஆகியவை இவர்க்கு இன்மையால் சத்திய தர்மத்தை ஏற்றனர், ஒதுக்கப்பட்ட பயனற்ற புலன் இன்பங்களின் பால் சோர்வு நேர்ந்த காலத்தும் மனம் செல்லாத உறுதித் தன்மையான உத்தமத் தூய்மை என்னும் தர்மத்தில் நிலைத்து நின்றனர். 


ஆர்வமும் செற்றமும்
 மயக்கம் இன்மையால்
ஆருயிர்க்கு உறுதி அல்லாத சொல் இலார்
ஓர்விடத்து புலத்தின் மீட்டு உளம்
சோர் விடத்தும் செலர் தூய ராயினர்.


மே.ம.பு. 1361

சமவசரணச் சருக்கம்
தொடர்ச்சி

மனம் மற்றும் ஐம்பொறி நுகர்ச்சிகளில் ஈடுபாட்டினைத் தடுத்து நீக்கியும், அறு வகை உயிர்களையும் அருளோடு  உபசரித்தும், தாம் மேற்கொண்டுள்ள அகப்புறத்தவங்கள் பன்னிரண்டையும் குறைவின்றி ஏற்றும், எதிலும் பற்றுகளை துறந்து நிற்கும் உத்தம ஆகிஞ்சன்யம் என்னும் தர்மத்தில் பொருந்தியும் பான்மையாளர்களுக்குப் பரமாகமங்களை விளக்கியருளும் சாஸ்திர தானமாகிய உத்தமத் தியாகத்திலும் பொருந்தி நின்றார்கள். 


பெண்களை விருப்பத்தோடு நோக்குதல், தேவையின்றி அவர்களைப் புகழ்தல், அவர்கள் சமைத்த உணவை விரும்பி உண்ணுதல், அவர்கள் இருக்கும் இடத்தில் தங்கியிருத்தலும், அவர்களின் இனிய பேச்சை விரும்புதலும், அவர்களோடு நகைச் சுவையாக உரையாடுதலும், அவர்களின் விருப்பத்தை எதிர் பார்ப்பதும், ஆகிய இத்தகு செயல்களில் இருந்து விலகி நிற்றலும் ஆகிய உத்தம பிரம்மசரியத்தை ஏற்பதில் உறுதியோடு நின்றனர்.


மாதரைப் புகழ்தல்
 பார்த்தல் மற்று அவர் அட்டதென்றால்
 ஆதரித்து உண்டல் புக்க
வவ்வகத் துறைதல்
அஞ்சொல்
மேதகக் கேட்டல் மேவிச் சிரித்திடல் விழைவு நோக்கல்
ஏதமின்றி இவற்றின் நீங்கி
 இலங்கும் உள்ளத்தரானார்.

மே.ம.பு. 1363.

மேரு மந்தரர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லுங்கால் முன்னும், பின்னும் நுகர்த்தளவு கூர்ந்து நோக்கி எத்தகைய உயிர்களும் துன்புறுமாறு செல்ல மாட்டார்கள். இனிய மொழிகளையும் அளந்தே பேசுவர், அனைத்து உயிர்களிடத்தும் விருப்பு, வெறுப்பின்றி  இன்முகம் கொண்டு பேசுவர், உணவை அளவோடு உண்பர், 


தங்களது  பொருள்களை எடுப்பதிலும், வைப்பதிலும் கவனம் கொள்வர், மல ஜலங்களைக் கழிப்பதிலும் எச்சரிக்கை உணர்வோடு நீக்குவர்.


முன்நுகத்தளவு நோக்கி முன்பு பின் பிரியச் செல்லார் 
இன்சொலும் பிறந்தமக்கு மிதத்தன அன்றிச்
சொல்லார் 



அன்பு நீத்து உயிரை ஓம்பி
அளவு அமைந்து உண்பர் யார்க்கும் 
துன்புறக் கோடல்
வைத்தல் மலங்களைத்
துறத்தல் செய்யார்.

மே.ம.பு. 1364

உட்காரும் போதும், படுக்கும் போதும், நிற்கும் போதும் நடக்கும் போதும், கை கால்களை மடக்கி நீட்டும் நேரங்களிலும் மற்ற எந்த உயிர்க்கும் தொல்லைகள் தரா வண்ணம் கவனத்துடன் செயல்படுவர்.(காய குப்தி)


 பான்மையாளர்களுக்கு நல்லறங்களை உரைப்பதன்றி வேறு பேசார் (வாக்கு குப்தி)


 தனது உயர் ஒழுக்கத்துக்குத் துணையாக மேலோர் அளிக்கும் ஆகாரத்தையே உணவாக ஏற்பர். இருபத்திரண்டு விதமான தொல்லைகள் என்னும் பாவை மார்களை வெறுத்து நீக்கினார்கள். (மன குப்தி) 


இருத்தலே  கிடத்தல் நிற்றல் இயங்குதல் முடக்கல் நீட்டல்
திருத்தி எவ்வுயிர்க்கும் தீமை செறிந்திடாது ஒழுக்கம் ஓம்பி
உரைத்து உயிர்க்கு உறுதிமார்க்கம் ஓம்பு கொடுப்பிற்

பரித்தக பாவை மாரைப் பற்றுஅறத் துறத் திட்டாரே

மே.ம.பு. 1365 


= = = சமவசரணச் சருக்கம் = = =

 (தொடர்ச்சி) 


நன்மை, தீமைகளை உணர்ந்த மேரு மந்தர கணதரர்கள் மூவுலக நாதனாகிய விமலனின் திருவடிகளைப் போற்றியும், பஞ்சபரமேட்டிகளை வணங்கியும், தங்களுடைய சிறு பிழைகளுக்கும் பிராயச்சித்தம் புரிந்தும் ,தங்களது உடம்பு விடத்தக்கதே என உணர்ந்தனர்.


கோடை காலத்திலே அவர்கள் மேல் மரங்கள் மலர்களைத் தூவி வணங்கின. பனிக்காலத்திலே தாமரை மலர்கள் கூம்பியிருந்தாலும் இவர்களின் மனமானது செந்தாமரை போல் மலர்ந்திருந்தன. மழைக்காலத்தே மேகமானது மழைமொழிந்து அபிஷேகம் செய்தது. அதாவது இவர்கள் முக்காலத்திலும் தளரா யோகத்திலே நின்றனர்.


மலைகள், காடுகள் எனஎதனைப்  பற்றியும் கவலையுறாது ஆத்ம தியானத்தில் பொருந்தினர். 


மேலும், வன வசன, காயங்களை ஒரு முகப்படுத்தி தியானத்தைப்புரிந்தனர்.


 உடலும், உயிரும் வேறு வேறானவை என்பதை உணர்ந்தனர்.உடலின் தன்மையை உணர்ந்த அவர்கள் வினைகளை சுக்கில தியானம் என்னும் நெருப்பினால் பொசுக்கினர். அவர்களிடமிருந்த அந்தராய, தரிசன,சாரித்திரத்திற்கு எதிரான மோகனீய வினைகளையும் நீக்கினர். இவற்றால் ஆன்மாவிலிருந்து வெளிப்படும் கடையிலா இன்பம் கிட்டும் எனக் கருதி சலனமின்றி நின்றார்கள். 


அக்கணமே அனாதி காலமாக உயிரிடத்த இருந்த வினைகள் ஒழிந்த அக்கணம், உருவம், ஒலி, ஊறு, மணம், சுவை இவை எதுவுமின்றி இந்திரியங்களால் அறிதற்கரிய மிக நுட்பமாகி பளுவற்று மேல் நோக்கி எழும் தன்மையினால் சென்று மீண்டும் வராத உலகமாகிய சித்த உலகத்தில் நிற்கின்ற தியானத்தை ஏற்றனர்.


உயிர் முதலாகிய பொருள்களின் தன்மைகள் , குணங்கள் ஒன்று சேர்ந்துள்ள திரவியங்கள்  ,நிலைமைகளையும் அவற்றின் சிறப்புத் தன்மைகளையும், நிச்சய விவகார நிலைகளையும் ,சுருத ஞான பலமுடைய அவ்விருவரும் நன்கு சிந்தித்து, நெருங்குதற்கரிய பதினைந்து வகைப் பிரமாதங்களை நீக்கி, அப்பிரமதத்த குணநிலையிலே இருந்து சபக சிரேணி என்னும் குணநிலை முறையிலே முறையாக முன்னேறினர்.



அதனால் அவர்களிடம் காட்சி  வினைகளாகிய ஏழுவினைகளும்  ஒழிந்தன. அவர்களிருவரும் அபூர்வ கரணம் என்னும் அடுத்த நிலையை அடைந்தனர்.  அந்நிலையில் எஞ்சிய வினைகள் விலகின. அம் முனிவர்கள் சுக்கில தியானத்தில் நின்று அனியட்ட கரணம் ,அனிவ்ருத்திகரணம் என்னும் இரு நிலையையும் எய்தினர்.அடுத்த பல கணங்கள் செல்லவே கடைசி சமயத்தில் பதினாறு வினைகளை வென்று ஒழித்தனர்.


 சமவசரணச் சருக்கம் = = = 

-தொடர்ச்சி-

மிகக் குரோதம், மானம், மாயம், லோபம் என்னும் நான்கு வகை வினை மூலங்கள், அப்பிரத்தியாக்யான,பிரத்தியாக்கியான கணத்தினால் ஆகும் எண்வகை வினைகளையும் நீக்கி, பெருமையுடன் எழுந்த முதல் சுக்கிலத் தியானத்தை மேலும் உறுதியாக்கி அடுத்த சில கணங்களில் கொல்லன் உலையில் இரும்பை உருக்கும் நெருப்பைப் போல் சேர்ந்திருக்கும் நபும்சக வேதம் என்னும் வினையையும் கெடுத்து அதன்பின் ஸ்திரிவேதம் என்னும் வினையானது அழிந்த பின் இரதி, ஹாஸ்யம் , பயம், உவர்ப்பு அரதி சோகம் என்னும் அறுவகை வினைகள் நீங்கின 


மேலும் புருட வேதத்தையும் வென்று அவர்கள் அனிவிருத்திகரணம் என்னும் குண நிலையை எய்தினர்.


மோகனீய வினைகளையும் தீர்த்துக்கட்டி எல்லையற்ற தூய ஆன்ம பரிணாமத்தை எய்தினார்கள். தூய சிந்தனை உடையவர்களாய் இரண்டாம் சுக்கில தியானத்துடன்க்ஷீண கஷாய குண நிலையில் நின்று நித்திரை, பிரசலை என்னும்  இருவினைகளையும் விலக்கினர். 


அவர்கள் தரிசனா வரணீய வினைகளையும், ஐந்து ஞானவரணீய வினைகளையும், அந்தராய வினைகள் ஆக பதினான்கு வினைகளையும் ஒருங்கே நீக்கினர்.


 அவர்களிடமிருந்த காதி வினைகள் அடியோடு ஒழிய அனந்த நான்மைகள் ஒளி வீசின. அவதி ஞானத்தால் அனைத்தும் அறிந்த அமரர்கள் விரைந்து வந்தனர். 

 = சமவசரணச் சருக்கம் = = = 

-தொடர்ச்சி-

மிகக் குரோதம், மானம், மாயம், லோபம் என்னும் நான்கு வகை வினை மூலங்கள், அப்பிரத்தியாக்யான,பிரத்தியாக்கியான கணத்தினால் ஆகும் எண்வகை வினைகளையும் நீக்கி, பெருமையுடன் எழுந்த முதல் சுக்கிலத் தியானத்தை மேலும் உறுதியாக்கி அடுத்த சில கணங்களில் கொல்லன் உலையில் இரும்பை உருக்கும் நெருப்பைப் போல் சேர்ந்திருக்கும் நபும்சக வேதம் என்னும் வினையையும் கெடுத்து அதன்பின் ஸ்திரிவேதம் என்னும் வினையானது அழிந்த பின் இரதி, ஹாஸ்யம் , பயம், உவர்ப்பு அரதி சோகம் என்னும் அறுவகை வினைகள் நீங்கின 

மேலும் புருட வேதத்தையும் வென்று அவர்கள் அனிவிருத்திகரணம் என்னும் குண நிலையை எய்தினர்.

மோகனீய வினைகளையும் தீர்த்துக்கட்டி எல்லையற்ற தூய ஆன்ம பரிணாமத்தை எய்தினார்கள். தூய சிந்தனை உடையவர்களாய் இரண்டாம் சுக்கில தியானத்துடன்க்ஷீண கஷாய குண நிலையில் நின்று நித்திரை, பிரசலை என்னும்  இருவினைகளையும் விலக்கினர். 

அவர்கள் தரிசனா வரணீய வினைகளையும், ஐந்து ஞானவரணீய வினைகளையும், அந்தராய வினைகள் ஆக பதினான்கு வினைகளையும் ஒருங்கே நீக்கினர்.

 அவர்களிடமிருந்த காதி வினைகள் அடியோடு ஒழிய அனந்த நான்மைகள் ஒளி வீசின. அவதி ஞானத்தால் அனைத்தும் அறிந்த அமரர்கள் விரைந்து வந்தனர். 

 சமவசரணச் சருக்கம் = = =

 - தொடர்ச்சி - 


தேவர்கள் பெருமை மிக்க மேருமந்தர  கேவலிகளின் பாதங்களை வணங்கினர்.


 அப்போதே செ ளதர்மேந்திரன் ஐவகை  அதிசயங்களை நிகழ்த்தினான்.1அசோக மரம் 2 ஒற்றை வெண் குடை 3. அரியணையும் ,வெண் கவரிகளும் 4 பூமழை5. துந்துபி முழக்கம். ஆகியவை நிகழ்த்திக் காட்டினான். 


உடனே பான்மையாளர்களின் செவிகளிலே திவ்ய தொனி ஒலித்தது. அப்போது விண்ணதிரதேவர்கள் அவ்விருவரையும் வாழ்க வாழ்க என்று வாழ்த்தி ஜெய கோஷம் எழுப்பினர்.



நால் வகை தேவர்களும் மேருமந்தரர்களின் பாதம் பணிந்து  வாழ்த்தினர். மேலும், அவர்கள் துதிக்கவும் தொடங்கினர்.


 பகவான்களே உங்களது  பாதங்கள் மா முனிவர்களின் மனதில் தங்கக் கூடியவை.பான்மையாளர்களின் வருத்தம் நீங்குமாறு அற அமுதத்தை வழங்கவும் செய்கின்றீர் ஆகவே உம்மை வணங்குவதில் பெருமைப்படுகின்றோம்.


 அந் நிலையில் மேரு மந்தரர் இருவரும் மிக உயர்ந்த அயோகி கேவலி நிலையினை அடைந்தனர். அவர்களிடம் எஞ்சிய அகாதி வினைகள் (85) அனைத்தும் நீங்கின.அக் கணமே அவர்கள் இருவரும் முக்தி அடைந்தனர்.அமரர்கள் பரிநிர்வாண பூஜையைச் சிறப்பாகச் செய் தனர்.


இவர்களில் முன்னவரான மேருவானவர், முதலில் மதுரை பிறகு இராமதத்தை அடுத்து பாஸ்கர ப்ரபதேவன் , அதன் பின் விஞ்ஞையர் உலகில் சீதரை (ஸ்ரீதரை) என்னும் பெண், தொடர்ந்து காபிட்ட கல்பத்து தேவன்,மேலும் ரத்னமாலை பிறகு அச்சுத கல்பத்து தேவன் அப்புறம் வீத பயன் என்னும் பல தேவன், பின்பு லாந்தவ கல்பத்து ஆதித்யாபதேவன் இறுதியில் மேருவாகப் பிறந்து நன்மை மிகு வீடு பெற்று அகதி வேந்தனாகினான்.


 இரண்டாமவரான மந்தரன் முதலில் வாருணி பிறகு பூரணச் சந்திரன், அடுத்து அமரன் தொடர்ந்து யசோதரை, மீண்டும் தேவன் பின்னர் இரத்தினாயுதன் பின்பு அச்சுத கல்பத்து தேவன், பிறகு விபீடணன் என்னும் வாசு தேவன், அடுத்து அழல் மிக்க நரகத்தில் நரகன், பிறகு ஸ்ரீதாமா என்னும் அரசன், மறு பிறவியில் பிரம்ம கல்பத்து தேவன், அதன் பின் சயந்தன் என்னும் அரச குமாரன், அப்புறம் தரணேந்திரன் தொடர்ந்து மந்தரன் என்னும் இராஜ குமாரனாய்ப் பிறந்து இறுதியாக மூவுலகத்து வேந்தனாக முக்தி எய்தினான்.


சமவசரணச் சருக்கம் 

தொடர்ச்சி.....


இவ்வாறக அரசி இராம தத்தையானவள் பல்வேறு பிறவிகளில் பிறந்து இறுதியில் மேருவாகப் பிறந்து வீடு பேறடைந்தார். அவளது இளைய மகன் பூர்ணச் சந்திரன் பல பிறவிகளில் உழன்று இறுதியாக மந்தரராகப் பிறந்து நல்லறங்களை கடை பிடித்தமையால் இறுதியில்  முக்தி அடைந்தார்.


 பவ்யர்களே, இக் காப்பியத்தினால் சினத்தின் விளைவு, பிறப்புக்களின் இயல்பு, வினைகளின் தன்மை, ஆசையின் விளைவு, உயிர் முதலிய பொருள்களின் இயல்பு, வீட்டுலகின் இயல்பு, நல்லறத்தின் இயல்பு ஆகியவை  கூறப்பட்டுள்ளதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். 



இனையது வெகுளியின் இயல்பு மாற்றியல்பு
இனையது வினைகளின் இயல்பு பற்றியல்பு 
 இனையது பொருளினது இயல்பு வீட்டியல்பு
இனையது திருவறத்து இயல்பு தானுமே

 மே.ம பு.-1404. 


மேலும், நல்லறத்தைக் காட்டிலும் நன்மை செய்பவரில்லை, கொடிய தீச்செயலைக் காட்டிலும் தீமை தரவல்லது மில்லை இந்த இரண்டு நெறிகளையும் நன்கு சிந்தித்து நாள் தோறும் பாப காரணங்களாகிய விருப்பு வெறுப்பாகிய குற்றங்கள் நீங்குமாறு அறநெறியினைச் சேருங்கள். 


அறமலது உறுதி செய்வார்கள் தாம் இலை
மறமலாது இடர்செய வருவதும் இலை
நெறியிவை இரண்டையும் நினைந்து நித்தமும்
 குறுகுமின் அறநெறி குற்றம் நீங்கவே

 மே.ம.பு.1405


அது மட்டுமின்றி ஆற்ற வேண்டியது நல்லறம், நீக்க வேண்டியது சினம், ஆராய்ந்து கைக்கொள்ள வேண்டியது உயர் ஞானம், குறைவின்றி கடைப்பிடிக்க வேண்டியது உயர் ஒழுக்கமே ஆகிய இவைகளை தவறாது கடை பிடித்து திருவறத்தில் நின்றால் பிறவியாகிய கொடிய  நோயானது நம்மை அண்டாது.


ஆக்குவது ஏதெ னின் அறத்தை ஆக்குக போக்குவது ஏதெனின்
வெகுளி போக்குக
நோக்குவது ஏதெனின் ஞானம் நோக்குக
 காக்குவது ஏதெனின் விரதம் காக்கவே

மே.ம.பு.1406

எங்குள அறத்தினோரும் இனிதூழி வாழ்க என்றும் எங்கும் நின்று நிலவுக ஜினவறம்.

No comments:

Post a Comment