seevagachinthamani - 2





நாமகள் இலம்பகம்



#30
நா வீற்றிருந்த புல_மா_மகளோடு நன் பொன்
பூ வீற்றிருந்த திரு_மா_மகள் புல்ல நாளும்
பா வீற்றிருந்த கலை பார் அற சென்ற கேள்வி
கோ வீற்றிருந்த குடி நாட்டு அணி கூறல் உற்றேன்

#31
காய் மாண்ட தெங்கின் பழம் வீழ கமுகின் நெற்றி
பூ மாண்ட தீம் தேன் தொடை கீறி வருக்கை போழ்ந்து
தேமாங்கனி சிதறி வாழை பழங்கள் சிந்தும்
ஏமாங்கதம் என்று இசையால் திசை போயது உண்டே

#32
இலங்கல் ஆழியினான் களிற்று ஈட்டம் போல்
கலங்கு தெண் திரை மேய்ந்து கண மழை
பொலம் கொள் கொன்றையினான் சடை போல் மின்னி
விலங்கல் சேர்ந்து விண் ஏறி விட்டு ஆர்த்தவே

#33

தேன் நிரைத்து உயர் மொய் வரை சென்னியின்
மேல் நிரைத்து விசும்பு உற வெள்ளி வெண்
கோல் நிரைத்தன போல் கொழும் தாரைகள்
வான் நிரைத்து மணந்து சொரிந்தவே

#34
குழவி வெண் மதி கோடு உழ கீண்டு தேன்
முழவின் நின்று அதிர் மொய் வரை சென்னியின்
இழியும் வெள் அருவி திரள் யாவையும்
குழுவின் மாட துகில் கொடி போன்றவே

#35
இலங்கு நீள் முடி இந்திரன் மார்பின் மேல்
விலங்கி வீழ்ந்த முத்தாரமும் போன்றவை
நலம் கொள் பொன்னொடு நல் மணி சிந்தலால்
கலன் பெய் பேழை கவிழ்த்தவும் போன்றவே

#36
வள்ளல் கைத்தல மாந்தரின் மால் வரை
கொள்ளை கொண்ட கொழு நிதி குப்பையை
உள்ளம் இல்லவர்க்கு ஊர்-தொறும் உய்த்து உராய்
வெள்ளம் நாடு மடுத்து விரைந்ததே

#37
மையல் யானையின் மு மதம் ஆர்ந்து தேன்
ஐய பொன் அசும்பு ஆடி அளைந்து உராய்
செய்ய சந்தனம் தீம் பழம் ஆதியா
நைய வாரி நடந்தது நன்று-அரோ

#38
வீடு இல் பட்டினம் வௌவிய வேந்து என
காடு கையரி கொண்டு கவர்ந்து போய்
மோடு கொள் புனல் மூரி நெடும் கடல்
நாடு முற்றியதோ என நண்ணிற்றே

#39
திரை பொரு கனை கடல் செல்வன் சென்னி மேல்
நுரை எனும் மாலையை நுகர சூட்டுவான்
சரை எனும் பெயர் உடை தடம் கொள் வெம் முலை
குரை புனல் கன்னி கொண்டு இழிந்தது என்பவே

#40
பழம் கொள் தெங்கு இலை என பரந்து பாய் புனல்
வழங்க முன் இயற்றிய சுதை செய் வாய் தலை
தழங்குரல் பம்பையில் சாற்றி நாடு எலாம்
முழங்கு தீம் புனல் அகம் முரிய மொய்த்தவே

#41
வெலற்கு அரும் குஞ்சரம் வேட்டம் பட்டு என
தலை தலை அவர் கதம் தவிர்ப்ப தாழ்ந்து போய்
குல தலை மகளிர்-தம் கற்பின் கோட்டகம்
நிலை படா நிறைந்தன பிறவும் என்பவே
#42
கவ்வையும் கடும் புனல் ஒலியும் காப்பவர்
செவ்வன் நூறு_ஆயிரம் சிலைக்கும் பம்பையும்
எ எலா திசைகளும் ஈண்டி காரொடு
பவ்வம் நின்று இயம்புவது ஒத்த என்பவே
#43
மாமனும் மருகனும் போலும் அன்பின
காமனும் சாமனும் கலந்த காட்சிய
பூமனும் அரிசி புல் ஆர்ந்த மோட்டின
தாம் இனம் அமைந்து தம் தொழிலின் மிக்கவே
#44
நெறி மருப்பு எருமையின் ஒருத்தல் நீள் இனம்
செறி மருப்பு ஏற்று இனம் சிலம்ப பண்ணுறீஇ
பொறி வரி வராலினம் இரிய புக்கு உடன்
வெறி கமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே
#45
சேறு அமை செறுவினுள் செந்நெல் வால் முளை
வீறொடு விளைக என தொழுது வித்துவார்
நாறு இது பதம் என பறித்து நாள்செய்வார்
கூறிய கடைசியர் குழாம் கொண்டு ஏகுவார்
#46
முலை தடம் சேதகம் பொறிப்ப மற்று அவர்
குலைத்து உடன் பதித்தலின் குதித்த வாள் கயல்
புலத்து-இடை கவரி கன்று ஊட்ட போந்த பால்
நிலத்து-இடை பாய்ந்து அவை பிறழும் நீரவே
#47
பால் சுவை அறிந்து அவை பழன தாமரை
மேல் செல பாய்தலின் வெரீஇய வண்டு இனம்
கோல் தொடி நுளைச்சியர் முத்தம் கோப்பவர்
ஏற்றிய மாலை தேன் இரிய பாய்ந்தவே
#48
இரிந்த தேன் குவளையின் நெற்றி தைவர
முரிந்து போது அவிழ்ந்து கொங்கு உயிர்க்கும் முல்லையின்
அரும்பு சேர்ந்து அணி ஞிமிறு ஆர்ப்ப வாய் பதம்
விருந்து எதிர்கொண்ம் என தழுவி வீழ்ந்தவே
#49
வள முடி நடுபவர் வரம்பு இல் கம்பலை
இள மழை முழக்கு என மஞ்ஞை ஏங்கலின்
அளமரு குயிலினம் அழுங்கி பூம் பொழில்
உளம் மெலி மகளிரின் ஒடுங்கும் என்பவே
#50
வளை கையால் கடைசியர் மட்டு வாக்கலின்
திளைத்தவர் பருகிய தேறல் தேங்குழி
களிப்ப உண்டு இள அனம் கன்னி நாரையை
திளைத்தலின் பெடை மயில் தெருட்டும் செம்மற்றே

மேல்

#51
கண் என குவளையும் கட்டல் ஓம்பினார்
வண்ண வாள் முகம் என மரையின் உள் புகார்
பண் எழுத்து இயல் பட பரப்பி இட்டனர்
தண் வயல் உழவர்-தம் தன்மை இன்னதே
#52
நித்தில பந்துடன் ஈன்று பாதிரி
ஒத்த பூ உடற்றிய நாவின் நாகினால்
தத்து நீர் நாரை மேல் எறிய தண் கடல்
பைத்து எழு திரை என பறவை ஆலுமே
#53
சொல் அரும் சூல் பசும் பாம்பின் தோற்றம் போல்
மெல்லவே கரு இருந்து ஈன்று மேல் அலார்
செல்வமே போல் தலை நிறுவி தேர்ந்த நூல்
கல்வி சேர் மாந்தரின் இறைஞ்சி காய்த்தவே
#54
மீன் கணின் அளவும் வெற்று இடங்கள் இன்மையால்
தேன் கண கரும்பு இயல் காடும் செந்நெலின்
வான் புகழ் களிறு மாய் கழனி ஆக்கமும்
ஊன் கணார்க்கு உரைப்ப அரிது ஒல் என் சும்மைத்தே
#55
ஆய் பிழி விருத்து வண்டு அயிற்றி உண்டு தேன்
வாய் பொழி குவளைகள் சூடி மள்ளர்கள்
தேய் பிறை இரும்பு தம் வலக்கை சேர்த்தினர்
ஆய் செந்நெல் அகன்ற காடு அரிகுற்றார்களே
#56
வலி உடை கைகளால் மலர்ந்த தாமரை
மெலிவு எய்த குவளைகள் வாட கம்பலம்
பொலிவு எய்த பூம் பொய்கை சிலம்பி பார்ப்பு எழ
மலை பட அரிந்து கூன் குயம் கை மாற்றினார்
#57
வாளையின் இனம் தலை இரிய வண்டு அலர்
தாள் உடை தாமரை கிழிய வண் சுமை
கோள் உடை இளையவர் குழாம் கொண்டு ஏகலில்
பாளை வாய் கமுகு இனம் பழங்கள் சிந்துமே
#58
சோர் புயல் முகில் தலை விலங்கி தூ நிலம்
மார்பு கொண்டு ஆர்ந்து அது நரல வண் சுளை
ஆர்புறு பலா பழம் அழிந்த நீள் களம்
போர்பினால் மலிந்து உடன் பொலிந்த நீரவே
#59
ஈடு சால் போர் பழித்து எருமை போத்தினால்
மாடு உற தெளித்து வை களைந்து கால் உறீஇ
சேடு உற கூப்பிய செந்நெல் குப்பைகள்
கோடு உயர் கொழும் பொனின் குன்றம் ஒத்தவே
#60
கரும்பு கண் உடைப்பவர் ஆலை-தோறெலாம்
விரும்பி வந்து அடைந்தவர் பருகி விஞ்சிய
திருந்து சாறு அடுவுழி பிறந்த தீம் புகை
பரந்து விண் புகுதலின் பருதி சேந்ததே
#61
கிணை நிலை பொருநர் தம் செல்லல் கீழ் பட
பணை நிலையாய் செந்நெல் பகரும் பண்டியும்
கணை நிலை கரும்பினில் கவரும் பண்டியும்
மண நிலை மலர் பெய்து மறுகும் பண்டியும்
#62
மல்லல் அம் தெங்கு இளநீர் பெய் பண்டியும்
மெல் இலை பண்டியும் கமுகின் மேதகு
பல் பழுக்காய் குலை பெய்த பண்டியும்
ஒல்கு தீம் பண்டம் பெய்து ஒழுகும் பண்டியும்
#63
கரும் கடல் வளம் தர கரையும் பண்டியும்
நெருங்குபு முதிரையின் நிறைந்த பண்டியும்
பெரும் கலி பண்டிகள் பிறவும் செற்றுபு
திருந்தி எ திசைகளும் செறிந்த என்பவே
#64
கிளி வளர் பூ மருது அணிந்து கேடு இலா
வள வயல் வைகலும் இன்னது என்ப தேன்
துளியொடு மது துளி அறாத சோலை சூழ்
ஒளி அமை இருக்கை ஊர் உரைக்க நின்றவே
#65
சேவல் அன்னம் தாமரையின் தோடு அவிழ்ந்த செவ்வி பூ
காவில் கூடு எடுக்கிய கவ்வி கொண்டு இருந்தன
தா இல் பொன் விளக்கமா தண் குயில் முழவமா
தூவி மஞ்ஞை நன் மணம் புகுத்தும் தும்பி கொம்பரோ
#66
கூடினார் கண் அம் மலர் குவளை அம் குழி-இடை
வாடு வள்ளை மேல் எலாம் வாளை ஏற பாய்வன
பாடு சால் கயிற்றில் பாய்ந்து பல் கலன் ஒலிப்ப போந்து
ஆடு கூத்தி ஆடல் போன்ற நாரை காண்ப ஒத்தவே
#67
காவி அன்ன கண்ணினார் கயம் தலை குடைதலின்
ஆவி அன்ன பூம் துகில் அணிந்த அல்குல் பல் கலை
கோவை அற்று உதிர்ந்தன கொள்ளும் நீரர் இன்மையின்
வாவி யாவும் பொன் அணிந்து வானம் பூத்தது ஒத்தவே
#68
பாசவல் இடிப்பவர் உலக்கை வாழை பல் பழம்
ஆசினி வருக்கை மா தடிந்து தேம் கனி உதிர்த்து
ஊசல் ஆடும் பைம் கமுகு தெங்கின் ஒண் பழம் பரீஇ
வாச தாழை சண்பகத்தின் வான் மலர்கள் நக்குமே
#69
மன்றல் நாறு இலஞ்சி மேய்ந்து மா முலை சுரந்த பால்
நின்ற தாரையால் நிலம் நனைப்ப ஏகி நீள் மனை
கன்று அருத்தி மங்கையர் கலம் நிறை பொழிதர
நின்ற மேதியால் பொலிந்த நீர மாட மாலையே
#70
வெள்ளி போழ் விலங்க வைத்து அனைய வாய் மணி தலை
கொள் பவளம் கோத்த அனைய கால குன்றி செம் கண
ஒள் அகில் புகை திரண்டது ஒக்கும் மா மணி புறா
கிள்ளையோடு பால் உணும் கேடு இல் பூவை பாடவே
#71
காடி உண்ட பூம் துகில் கழும ஊட்டும் பூம் புகை
மாட மாலை மேல் நலார் மணி குழலின் மூழ்கலின்
கோடு உயர்ந்த குன்றின் மேல் குழீஇய மஞ்ஞை-தம் சிறகு
ஆடும் மஞ்சினுள் விரித்து இருந்த வண்ணம் அன்னரே
#72
கண் உளார் நும் காதலர் ஒழிக காமம் ஈங்கு என
உள் நிலாய வேட்கையால் ஊடினாரை ஆடவர்
வண்ண மேகலைகளை பற்ற அற்று உதிர்ந்தன
எண் இல் பொன் சுடு நெருப்பு உக்க முற்றம் ஒத்தவே
#73
கோட்டு இளம் தகர்களும் கொய் மலர தோன்றி போல்
சூட்டு உடைய சேவலும் தோணி கோழி ஆதியா
வேட்டவற்றின் ஊறு உளார் வெருளி மாந்தர் போர் கொளீஇ
காட்டி ஆர்க்கும் கௌவையும் கடியும் கௌவை கௌவையே
#74
இறு நுசுப்பின் அம் நலார் ஏந்து வள்ளத்து ஏந்திய
நறவம் கொப்புளித்தலின் நாகு புன்னை பூத்தன
சிறகர் வண்டு செவ்வழி பாட மாடத்து ஊடு எலாம்
இறைகொள் வானின் மீன் என அரம்பை முலையின் இருந்தவே
#75
விலக்கு இல் சாலை யாவர்க்கும் வெப்பின் மு பழ சுனை
தலை தணீர் மலர் அணிந்து சந்தனம் செய் பந்தரும்
கொலை தலைய வேல் கணார் கூத்தும் அன்றி ஐம்பொறி
நில தலைய துப்பு எலாம் நிறை துளும்பும் ஊர்களே
#76
அடிசில் வைகல் ஆயிரம் அற புறமும் ஆயிரம்
கொடி அனார் செய் கோலமும் வைகல்-தோறும் ஆயிரம்
மடிவு இல் கம்மியர்களோடு மங்கலமும் ஆயிரம்
ஒடிவு இலை வேறு ஆயிரம் ஓம்புவாரின் ஓம்பவே
#77
நல் தவம் செய்வார்க்கு இடம் தவம் செய்வார்க்கும் அஃது இடம்
நல் பொருள் செய்வார்க்கு இடம் பொருள் செய்வார்க்கும் அஃது இடம்
பெற்ற இன்பம் விழைவிப்பான் விண் உவந்து வீழ்ந்து என
மற்ற நாடு வட்டம் ஆக வைகும் மற்ற நாடு-அரோ
#78
கண் வலை காமுகர் என்னும் மா படுத்து
ஒள் நிதி தசை தழீஇ உடலம் விட்டிடும்
பெண் வலை படாதவர் பீடின் ஓங்கிய
அண்ணல் அம் கடி நகர் அமைதி செப்புவாம்
#79
விண் புகு வியன் சினை மெலிய பூத்தன
சண்பகத்து அணி மலர் குடைந்து தாது உக
வண் சிறை குயிலொடு மயில்கள் மாறு கூஉய்
கண் சிறைப்படு நிழல் காவு சூழ்ந்தவே
#80
கை புனை சாந்தமும் கடி செய் மாலையும்
மெய் புனை சுண்ணமும் புகையும் மேவிய
நெய்யொடு குங்குமம் நிறைந்த நாணினால்
பொய்கைகள் பூம் படாம் போர்த்த போன்றவே
#81
கடி நல கரும்பொடு காய் நெல் கற்றையின்
பிடி நலம் தழீஇ வரும் பெரும் கை குஞ்சரம்
அடி நிலை இருப்பு எழு அமைந்த கல் மதில்
புடை நிலை வாரிகள் பொலிந்த சூழ்ந்தவே
#82
சல சல மு மதம் சொரிய தம் தம்முள்
கொலை மருப்பு இரட்டைகள் குளிப்ப பாய்ந்து இரு
மலை திளைப்பன என நாகம் ஆன்ற போர்
குலவிய நிலைக்களம் கோலம் ஆர்ந்தவே
#83
முத்து உடை வெண் மருப்பு ஈர்ந்து மொய்கொள
பத்தியில் குயிற்றிய மருங்கில் பல் வினை
சித்திர கிம்புரி வைரம் சேர்த்துநர்
ஒத்து இயல் இடங்களும் ஒழுங்கு நீண்டவே
#84
ஓடு தேர் சாரிகை உகு பொன் பூமியும்
ஆடகம் ஆற்றும் தார் புரவி வட்டமும்
கேடக வாள் தொழில் இடமும் கேடு இலா
கோடு வெம் சிலை தொழில் இடமும் கூடின்றே
#85
புடை நகர் தொழில் இடம் கடந்து புக்க பின்
இடை நகர் புறம் பணை இயம்பும் ஓசை ஓர்
கடல் உடைந்தது என கலந்தது அ கடல்
மடை அடைத்து அனையது அ மாக்கள் ஈட்டமே
#86
சிந்துர பொடிகளும் செம்பொன் சுண்ணமும்
சந்தன நீரோடு கலந்து தையலார்
பந்தொடு சிவிறியில் சிதற பார் மிசை
இந்திரவில் என கிடந்த வீதியே
#87
பாத்தரும் பசும்பொன்னின் மாடத்து உச்சி மேல்
தூ திரள் மணி குடம் நிரைத்து தோன்றுவ
பூத்தன வேங்கை மேல் பொலிந்து கார் நினைந்து
ஏத்தரும் மயில் குழாம் இருந்த போன்றவே
#88
நெடும் கொடி நிழல் மதி நெற்றி தைவர
உடம்பு வேர்த்து இன மழை உரறி நோக்கலின்
நடுங்குபு நல் வரை மாடத்து உச்சியில்
அடங்கி வீழ்ந்து அருவியின் அழுவ போன்றவே
#89
பொன் சிறு தேர் மிசை பைம்பொன் போதகம்
நல் சிறார் ஊர்தலின் நங்கைமார் விரீஇ
உற்றவர் கோழி மேல் எறிந்த ஒண் குழை
மற்று அ தேர் உருள் கொடா வளமை சான்றவே
#90
மாலையும் பசும்பொனும் மயங்கி வார் கணை
கோல் எய்யும் குனி சிலை நுதலினாரொடு
வேல் இயல் ஆடவர் விரவி விண்ணவர்
ஆலயம் இது என ஐயம் செய்யுமே
#91
கல் சுணம் செய்த தோள் மைந்தர் காதலால்
நல் சுண பட்டு உடை பற்ற நாணினால்
பொன் சுணத்தால் விளக்கு அவிப்ப பொங்கிய
பொன் சுணம் புறம்பணை தவழும் பொற்பிற்றே
#92
நலத்தகு நானம் நின்று இடிக்கும் நல்லவர்
உலக்கையால் உதிர்ந்தன தெங்கின் ஒண் பழம்
நிலத்து அவை சொரிதலின் வெரீஇய மஞ்ஞை போய்
கலத்து உயர் கூம்பின் மேல் ஆடும் கௌவைத்தே
#93
இட்ட எள் நிலம்படா வகையில் ஈண்டிய
முட்டு இலா மூ_அறு பாடை மாக்களால்
புள் பயில் பழு மரம் பொலிவிற்று ஆகிய
மட்டு இலா வள நகர் வண்ணம் இன்னதே
#94
தங்கு ஒளி நித்தில தாமம் சூடிய
வெம் களி இள முலை வேல் கண் மாதரார்
பைங்கிளி முன்கை மேல் கொண்டு பார்ப்பு எனும்
கொங்கு அலர் தாமரை கிடங்கு கூறுவாம்
#95
கோள் சுறா இனத்தொடு முதலை குப்பைகள்
ஆள் பெறா திரிதர அஞ்சி பாய்வன
மோட்டு இறா பனி கிடங்கு உழக்க மொய்த்து எழுந்து
ஈட்டறா புள் இனம் இரற்றும் என்பவே
#96
சிறை அன பெடையினோடு ஊடி சேவல் போய்
அறு பத வண்டு இனம் ஆர்ப்ப தாமரை
உறைவது குழுவின் நீங்கி யோகொடு
கறை அற முயல்வது ஓர் கடவுள் ஒத்ததே
#97
அரும் பொனும் வெள்ளியும் மணியும் அல்லது
கரும் கலம் தோய்வு இலா காமர் பூம் துறை
குரும்பை மென் முலையின் மேல் குலாய குங்குமம்
விருந்து செய்திட வெறி மேனி சேந்ததே
#98
பட்டவர் தப்பலின் பரவை ஏந்து அல்குல்
அட்டு ஒளி அரத்தம் வாய் கணிகை அல்லது
மட்டு உடை மண மகள் மலர்ந்த போதினால்
கட்டு உடை காவலின் காமர் கன்னியே
#99
நிரை கதிர் நித்திலம் கோத்து வைத்த போல்
விரை கமழ் கமுகின் மேல் விரிந்த பாளையும்
குரை மது குவளைகள் கிடங்கில் பூத்தவும்
உரையின் ஓர் ஓசனை உலாவி நாறுமே
#100
தாய் முலை தழுவிய குழவி போலவும்
மா மலை தழுவிய மஞ்சு போலவும்
ஆய் முகில் தழீஇ அசும்பு அறாத நெற்றிய
சேய் உயர் மதில் வகை செப்புகின்றதே

மேல்

#101
மாற்றவர் மற படை மலைந்து மதில் பற்றின்
நூற்றுவரை கொல்லியொடு நூக்கி எறி பொறியும்
தோற்றமுறு பேய் களிறு துற்று பெரும் பாம்பும்
கூற்றம் அன கழுகு தொடர் குந்தமொடு கோண்மா
#102
வில் பொறிகள் வெய்ய விடு குதிரை தொடர் அயில் வாள்
கல் பொறிகள் பாவை அனம் மாடம் அடு செம் தீ
கொல் புனை செய் கொள்ளி பெரும் கொக்கு எழில் செய் கூகை
நல் தலைகள் திருக்கும் வலி நெருக்கும் மர நிலையே
#103
செம்பு உருகு வெம் களிகள் உமிழ்வ திரிந்து எங்கும்
வெம்பு உருகு வட்டு உமிழ்வ வெம் நெய் முகத்து உமிழ்வ
அம்பு உமிழ்வ வேல் உமிழ்வ கல் உமிழ்வ ஆகி
தம் புலங்களால் யவனர் தாள்படுத்த பொறியே
#104
கரும் பொன் இயல் பன்றி கத நாகம் விடு சகடம்
குரங்கு பொரு தகரினொடு கூர்ந்து அரிவ நுண் நூல்
பரந்த பசும்பொன் கொடி பதாகையொடு கொழிக்கும்
திருந்து மதி தெவ்வர் தலை பனிப்ப திருந்தின்றே
#105
வயிர வரை கண் விழிப்ப போன்று மழை உகளும்
வயிர மணி தாழ் கதவு வாயில் முகம் ஆக
வயிரம் அணி ஞாயில் முலை வான் பொன் கொடி கூந்தல்
வயிர கிடங்கு ஆடை மதில் கன்னியது கவினே
#106
செம்பொன் மழை போன்று அடி-தொறு ஆயிரங்கள் சிந்தி
பைம்பொன் விளை தீவில் நிதி தடிந்து பலர்க்கு ஆர்த்தி
அம் பொன் நிலத்து ஏகு குடி அக நகரம் அதுதான்
உம்பர் உலகு ஒப்பது அதன் தன்மை சிறிது உரைப்பாம்
#107
துப்பு உறழ் தொண்டை செ வாய் தோழியர் காம தூதின்
ஒப்ப ஒன்று ஆதி ஆக ஆயிரத்தோர் எட்டு ஈறா
செப்பி தம் செம்பொன் அல்குல் நலம் வரைவு இன்றி விற்கும்
உப்பு அமை காம துப்பின் அவர் இடம் உரைத்தும் அன்றே
#108
குங்குமம் மெழுகி சார்பும் திண்ணையும் குயிற்றி உள்ளால்
தங்கும் மென் சாந்தத்தோடு தாமமும் தாழ நாற்றி
எங்கும் நல் சுவர்கள்-தோறும் நாடகம் எழுதி ஏற்ப
பொங்கு மென் மலர் பெய் சேக்கை பொலிந்து விண் புகற்சி உண்டே
#109
தூசு சூழ் பரவை அல்குல் சுமக்கலாது என்ன வீழ்த்த
காசு சூழ் கோவை முத்தம் கதிர் முலை திமிர்ந்த சாந்தம்
வாச நல் பொடிகள் மாலை வண்டு உண வீழ்ந்த முற்றம்
ஆசைப்பட்டு அரசு வைக அரும் கடி கமழும் அன்றே
#110
அம் சிலம்பு ஒலியோடு அல்குல் கலை ஒலி அணிந்த முன்கை
பஞ்சி மெல் விரலில் பாணி பண் ஒலி பவழ செ வாய்
அஞ்சி நேர்ந்து உயிர்க்கும் தேன் சேர் குழல் ஒலி முழவின் ஓசை
துஞ்சல் இல் ஓசை தம்மால் துறக்கமும் நிகர்க்கலாதே
#111
தேன் உலாம் மது செய் கோதை தேம் புகை கமழ ஊட்ட
வான் உலாம் சுடர் கண் மூடி மாநகர் இரவு செய்ய
பால் நிலா சொரிந்து நல்லார் அணிகலம் பகலை செய்ய
வேனிலான் விழைந்த சேரி மேல் உலகு அனையது ஒன்றே
#112
இட்ட நூல் வழாமை ஓடி யோசனை எல்லை நீண்டு
மட்டுவார் மாலை வேய்ந்து சதுக்கங்கள் மலிந்த சும்மை
பட்டமும் பசும்பொன் பூணும் பரந்து ஒளி நிழற்றும் தீம் தேன்
அட்டும் தார் அணிந்த மார்பர் ஆவணம் விளக்கல் உற்றேன்
#113
மணி புனை செம்பொன் கொட்டை வம்பு அணி முத்த மாலை
கணி புனை பவழ திண் காழ் கம்பல கிடுகின் ஊன்றி
அணி நிலம் மெழுகி சாந்தின் அகில் புகைத்து அம் பொன் போதில்
திணி நிலம் அணிந்து தேம் கொள் ஐயவி சிதறினாரே
#114
பொன் சொரி கதவு தாளின் திறந்து பொன் யவன பேழை
மின் சொரி மணியும் முத்தும் வயிரமும் குவித்து பின்னும்
மன் பெரும் பவழ குப்பை வால் அணிகலம் செய் குப்பை
நன் பகல் இரவு செய்யும் நன் கலம் கூப்பினாரே
#115
விழு கலம் சொரிய சிந்தி வீழ்ந்தவை எடுத்துக்கொள்ளா
ஒழுக்கினர் அவர்கள் செல்வம் உரைப்பரிது ஒழிக வேண்டா
பழ குலை கமுகும் தெங்கும் வாழையும் பசும்பொன்னாலும்
எழில் பொலி மணியினாலும் கடை-தொறும் இயற்றினாரே
#116
மூசு தேன் இறாலின் மூச மொய் திரை இயம்பி யாங்கும்
ஓசை என்று உணரின் அல்லால் எழுத்து மெய் உணர்த்தல் ஆகா
பூசு சாந்து ஒருவர் பூசிற்று எழுவர் தம் அகலம் பூசி
மா சனம் இடம் பெறாது வண் கடை மலிந்தது அன்றே
#117
மெய் அணி பசும்பொன் சுண்ணம் மேதகு நான நீரின்
ஐதுபட்டு ஒழுகி யானை அழி மதம் கலந்து சேறாய்
செய் அணிகலன்கள் சிந்தி மாலையும் மதுவும் மல்கி
வெய்து அடி இடுதற்கு ஆகா வீதிகள் விளம்பல் உற்றேன்
#118
முழவு அணி முது நகர் முரசொடு வளை விம
விழவு அணி மகளிர் தம் விரை கமழ் இள முலை
இழை அணி ஒளி இள வெயில் செய விடு புகை
மழை என மறையின பொலிவினது ஒருபால்
#119
குடையொடு குடை பல களிறொடு நெரி தர
உடை கடல் ஒலியினொடு உறுவார் பலி செல
முடியொடு முடியுற மிடைதலின் விடு சுடர்
கொடி உடை மழை மினின் குலவியது ஒருபால்
#120
பூத்தலை வாரண போர் தொழில் இளையவர்
நா தலை மடி விளி கூத்தொடு குயில் தர
காய்த்துறு தமனிய துகளொடு கடி கமழ்
பூ துகள் கழுமிய பொலிவினது ஒருபால்
#121
மைந்தரோடு ஊடிய மகளிரை இளையவர்
அம் துகில் பற்றலின் காசு அரிந்து அணி கிளர்
சுந்தர நில மிசை சொரிதலின் மின் அணிந்து
இந்திர திருவிலின் எழிலினது ஒருபால்
#122
வளை அறுத்து அனையன வால் அரி அமை பதம்
அளவு அறு நறு நெய்யொடு கறி அமை துவை
விளைவு அமை தயிரொடு மிசை குவிர் விரையும்-மின்
உள அணி கலம் எனும் உரையினது ஒருபால்
#123
வரை நிரை அருவியின் மதம் மிசை சொரிவன
புரை நிரை களிறொடு புனை மணி இயல் தேர்
விரை நிரை இவுளியொடு இளையவர் விரவுபு
குரை நிரை குளிர் புனல் ஆற்றினது ஒருபால்
#124
வரி வளை அரவமும் மணி முழவு அரவமும்
அரி வளர் கண்ணியர் அணிகல அரவமும்
புரி வளர் குழலொடு பொலி மலி கவினிய
திரு விழை கடி மனை திறவிதின் மொழிவாம்
#125
பாவை அன்னவர் பந்து புடைத்தலில்
தூவி அன்னம் வெரீஇ துணை என்று போய்
கோவை நித்தில மாட குழாம் மிசை
மேவி வெண் மதி தன்னொடு இருக்குமே
#126
திருவ நீள் நகர் செம்பொனின் நீடிய
உருவ ஒண் கொடி ஊழின் நுடங்குவ
பரவை வெம் கதிர் செல்வன பன் மயிர்
புரவி பொங்கு அழல் ஆற்றுவ போன்றவே
#127
இழை கொள் வெம் முலை ஈரம் உலர்த்துவார்
விழைய ஊட்டிய மேதகு தீம் புகை
குழை கொள் வாண் முகம் சூழ் குளிர் அம் கதிர்
மழையுள் மா மதி போன்ம் என தோன்றுமே
#128
செம்பொன் கண்ணி சிறார் களைந்திட்டவும்
அம் பொன் மாலை அவிழ்ந்து உடன் வீழ்ந்தவும்
தம் பொன் மேனி திமிர்ந்த தண் சாந்தமும்
வம்பு உண் கோதையர் மாற்றும் அயல்-அரோ
#129
வேரி இன் மெழுக்கு ஆர்ந்த மென் பூ நிலத்து
ஆரி ஆக அம் சாந்தம் தளித்த பின்
வாரி நித்திலம் வைப்ப பொன் பூவொடு
சேரி-தோறு இது செல்வத்து இயற்கையே
#130
கருனை வாசமும் கார் இருள் கூந்தலார்
அருமை சான்ற அகில் புகை வாசமும்
செருமி சேர்ந்து கண்ணீர் வர தேம் பொழில்
உரிமை கொண்டன ஒண் புறவு என்பவே
#131
நறையும் நானமும் நாறும் நறும் புகை
விறகின் வெள்ளி அடுப்பின் அம் பொன் கலம்
நிறைய ஆக்கிய நெய் பயில் இன் அமுது
உறையும் மாந்தர் விருந்தொடும் உண்பவே
#132
பாளை மென் கமுகின் பழம் மெல் இலை
நீள் வெண் மாடத்து நின்று கொண்டு அம் நலார்
ஆளிய மொய்ம்பர்க்கு அளித்து அணி சண்பகம்
நாள்செய் மாலை நகை முடி பெய்பவே
#133
எழுது வாள் நெடும் கண் இணை அம் நலார்
மெழுகு குங்கும மார்பு-இடை வெம் முலை
உழுது கோதையும் சாந்தும் உவந்து அவை
முழுதும் வித்தி விளைப்பர் திளைப்பவே
#134
குஞ்சி மேல் அனிச்ச மலர் கூட்டுணும்
அம்_சில்_ஓதியர் அம் மலர் சீறடி
மஞ்சு தோய் மணி மாடத்து மல்கு பூம்
பஞ்சி மேலும் பனிக்கும் பனிக்குமே
#135
தூமமே கமழும் துகில் சேக்கை மேல்
காமமே நுகர்வார் தம் காதலால்
யாமமும் பகலும் அறியாமையால்
பூமி மாநகர் பொன் உலகு ஒத்ததே
#136
அரவு கான்றிட்ட அம் கதிர் மா மணி
உரவு நீர் முத்தும் உள்ளுறுத்து உள்ளன
இரவல் மாந்தர்க்கும் இன்னவை ஈவது ஓர்
புரவு பூண்டனர் பொன் நகர் மாந்தரே
#137
முல்லை அம் குழலார் முலை செல்வமும்
மல்லல் மாநகர் செல்வமும் வார் கழல்
செல்வர் செல்வமும் காணிய என்பர் போல்
எல்லியும் இமையார் இமையாததே
#138
முழவும் சங்கமும் முன்றில் முழங்குவ
விழவும் வேள்வும் விடுத்தல் ஒன்று இன்மையால்
புகழலாம் படித்து அன்று இது பொன்னகர்
அகழ்தல் மா கடல் அன்னது ஓர் சும்மைத்தே
#139
திங்கள் முக்குடையான் திரு மாநகர்
எங்கும் எங்கும் இடம்-தொறும் உண்மையால்
அம் கண் மாநகர்க்கு ஆக்கம் அறாதது ஓர்
சங்க நீள் நிதியால் தழைக்கின்றதே
#140
தேன்தலை துவலை மாலை பைம் துகில் செம்பொன் பூத்து
ஞான்றன வயிர மாலை நகு கதிர் முத்த மாலை
கான்று அமிர்து ஏந்தி நின்ற கற்பக சோலை யார்க்கும்
ஈன்று அருள் சுரந்த செல்வத்து இராசமாபுரம் அதாமே
#141
வேக யானை மீளி வேல் வெய்ய தானை ஐய கோல்
மாகம் நீள் மணிமுடி மாரி வண் கை மாசு இல் சீர்
ஏக ஆணை வெண்குடை இ நகர்க்கு மன்னவன்
நாக நீர நல் நகர் நன்மை தன்னம் செப்புவாம்
#142
நீள் நிலம் வகுத்து நீர் நிரந்து வந்து இழிதர
சேண் நிலத்து இயற்றிய சித்திர சுருங்கை சேர்
கோள் நிலத்து வெய்யவாம் கொடும் சுற தடம் கிடங்கு
பூண் நிலத்து வைத்தது ஓர் பொற்பினில் பொலிந்ததே
#143
இஞ்சி மாகம் நெஞ்சு போழ்ந்து எல்லை காண ஏகலின்
மஞ்சு சூழ்ந்து கொண்டு அணிந்து மாக நீண்ட நாகமும்
அஞ்சு நின்னை என்றலின் ஆண்டு நின்று நீண்ட தன்
குஞ்சி மாண் கொடி கையால் கூவி விட்டது ஒத்ததே
#144
முத்து மாலை முப்புரி மூரி மா மணி கதவு
ஒத்த நான்கு கோபுரம் ஓங்கி நின்று ஒளிர்வன
சத்தி நெற்றி சூட்டிய தாம நீள் மணிவணன்
தத்து ஒளி மணிமுடி தாமம் நால்வ போலுமே
#145
சங்கு விம்மு நித்திலம் சாந்தொடு ஏந்து பூண் முலை
கொங்கு விம்மு கோதை தாழ் கூந்தல் ஏந்து சாயலார்
இங்கித களிப்பினால் எய்தி ஆடும் பூம் பொழில்
செம் கண் இந்திரன் நகர் செல்வம் என்னது அன்னதே
#146
வெள்ளி யானை மென் பிடி மின் இலங்கு பைம்பொனால்
துள்ளும் மான் ஒருத்தலும் செம்பொன் அம் பொன் மான் பிணை
உள்ளு காமம் உள் சுட வேந்தன் ஆங்கு உறைவது ஓர்
பள்ளிமாட மண்டபம் பசுங்கதிர்ப்ப வண்ணமே
#147
கோழ் அரை மணி மடல் கூந்தல் நெற்றி ஏந்திய
மாழை அம் திரள் கனி மா மணி மரகதம்
சூழ் குலை பசும் கமுகு சூலு பாளை வெண்பொனால்
ஊழ் திரள் மணி கயிறு ஊசல் ஆட விட்டதே
#148
மென் தினை பிறங்கலும் மிளிர்ந்து வீழ் அருவியும்
குன்று அயல் மணி சுனை குவளை கண் விழிப்பவும்
நின்று நோக்கு மான் பிணை நீல யானை மன்னவன்
கன்று காமம் வெஃகிய காமர் காம பூமியே
#149
தீம் குயில் மணந்து தேன் துஞ்ச வண்டு பாண் செய
வேங்கை நின்று பொன் உகுக்கும் வெற்பு உடுத்த சந்தனம்
ஓங்கு பிண்டி சண்பகம் ஊழி நாறு நாகமும்
நீங்க நீங்கும் இன் உயிர் நினைப்பின் நின்று இளஃகுமே
#150
முத்தம் வாய் புரித்தன மொய் கதிர் பசும்பொனால்
சித்திரத்து இயற்றிய செல்வம் மல்கு பன் மணி
பத்தியில் குயிற்றி வான் பதித்து வைத்த போல்வன
இ திறத்த பந்து எறிந்து இளையர் ஆடு பூமியே

மேல்

#151
வைத்த பந்து எடுத்தலும் மாலையுள் கரத்தலும்
கைத்தலத்தின் ஓட்டலும் கண்ணி நெற்றி தீட்டலும்
பத்தியில் புடைத்தலும் பை அரவின் ஆடலும்
இ திறத்த பந்தினோடு இன்பம் எல்லை இல்லையே
#152
கூற்றம் அன்ன கூர் நுதி குருதி வான் மருப்பு-இடை
சீற்றம் உற்ற மன்னர் தம் சென்னி பந்து அடிப்பன
ஊற்று இருந்த மு மதத்து ஓடை யானை பீடுசால்
காற்று இயல் புரவி தேர் கலந்து கௌவை மல்கின்றே
#153
கவ்வை அம் கருவி சூழ்ந்து கண் படுக்கும் மாடமும்
தெவ்வர் தந்த நீள் நிதி செம்பொன் மாடமும்
மவ்வல் அம் குழலினார் மணி கலம் பெய் மாடமும்
இ வலந்த அல்லவும் இடங்கள் எல்லை இல்லையே
#154
பூத்த கோங்கும் வேங்கையும் பொன் இணர் செய் கொன்றையும்
காய்த்து நின்று கண் தெறூஉம் காமர் வல்லி மாதரார்
கூத்து அறாத பள்ளியும் கொற்றம் அன்ன மங்கையர்
ஏத்தல் சான்ற கோயிலும் இடைப்படுத்து இயன்றவே
#155
கந்து மா மணி திரள் கடைந்து செம்பொன் நீள் சுவர்
சந்து போழ்ந்து இயற்றிய தட்டு வேய்ந்து வெண்பொனால்
இந்திரன் திருநகர் உரிமையோடு இ வழி
வந்து இருந்த வண்ணமே அண்ணல் கோயில் வண்ணமே
#156
ஆடலின் அரவமும் அங்கை கொட்டி நெஞ்சு உண
பாடலின் அரவமும் பணை முழவு அரவமும்
கூடு கோல தீம் சுவை கோல யாழ் அரவமும்
வாடல் இல்ல ஓசையால் வைகல் நாளும் வைகிற்றே
#157
நச்சு நாகத்தின் ஆர் அழல் சீற்றத்தன்
அச்சம் உற்று அடைந்தார்க்கு அமிர்து அன்னவன்
கச்சு உலாம் முலையார்க்கு அணங்கு ஆகிய
சச்சந்தன் எனும் தாமரை செம் கணான்
#158
வண் கையால் கலி மாற்றி வை வேலினால்
திண் திறல் தெவ்வர் தேர் தொகை மாற்றினான்
நுண் கலைக்கு இடனாய் திரு_மா_மகள்
கண்களுக்கு இடன் ஆம் கடி மார்பனே
#159
கோதை நித்திலம் சூழ் குளிர் வெண்குடை
ஓத நீர் உலகு ஒப்ப நிழற்றலால்
தாதையே அவன் தாள் நிழல் தங்கிய
காதலால் களிக்கின்றது இ வையமே
#160
தருமன் தண் அளியால் தனது ஈகையால்
வருணன் கூற்று உயிர் மாற்றலின் வாமனே
அருமையால் அழகின் கணை ஐந்து உடை
திருமகன் திரு மா நில மன்னனே
#161
ஏனை மன்னர் தம் இன் உயிர் செற்ற வேல்
தானை மன்னரில் தான் இமில் ஏறு அனான்
தேனை மாரி அன்னான் திசை காவலன்
வானம் தோய் புகழான் மலிவு எய்தினான்
#162
செல்வற்கு இன்னணம் சேறலில் தீம் புனல்
மல்கு நீர் விதையத்து அரசன் மகள்
அல்லி சேர் அணங்கிற்கு அணங்கு அன்னவள்
வில்லின் நீள் புருவத்து எறி வேல் கணாள்
#163
உருவும் சாயலும் ஒப்ப உரைப்பதற்கு
அரிய-ஆயினும் அ வளை தோளி கண்
பெருகு காரிகை பேசுவல் பெண் அணங்கு
அரிய தேவரும் ஏத்து அரு நீரளே
#164
எண்ணெயும் நானமும் இவை மூழ்கி இருள் திருக்கிட்டு
ஒள் நறும் துகில் கிழி பொதிந்து உறை கழித்தன போல்
கண் இருண்டு நெறி மல்கி கடை குழன்ற கரும் குழல்கள்
வண்ண போது அருச்சித்து மகிழ்வு ஆனா தகையவே
#165
குழவி கோட்டு இளம் பிறையும் குளிர் மதியும் கூடின போல்
அழகுகொள் சிறு நுதலும் அணி வட்ட மதி முகமும்
தொழுதற்கு வரம் கொடுக்கும் தொண்டை வாய் தூ முறுவல்
ஒழுகு பொன் கொடி மூக்கும் உருப்பசியை உருக்குமே
#166
வண் சிலையை வனப்பு அழித்து வார்ந்து ஒழுகி நிலம் பெறா
நுண் கருமை கொண்டு ஒசிந்து நுதல் இவர்ந்து போந்து உலாய்
கண் கூடா கடை புடைத்து கைவல்லான் எழுதிய போல்
பண்பு ஆர்ந்த கொடும் புருவம் பழிச்சு ஆனா படியவே
#167
சேல் அனைய சில் அரிய கடை சிவந்து கரு மணி அம்
பால் அகத்து பதித்து அன்ன படியவாய் முனிவரையும்
மால் உறுப்ப மகிழ் செய்வ மாண்பில் நஞ்சும் அமிர்தமுமே
போல் குணத்த பொரு கயல் கண் செவி உற போந்து அகன்றனவே
#168
மயிர் எறி கத்தரிகை அனையவாய் வள்ளை வாடு
உயிர் செகுத்து முன் ஒன்றி பின் பேராது உரு அமைந்த
செயிர் மகர குண்டலமும் திளைப்பு ஆனா வார் காதும்
வயிரவில் முகம் சூடி வண்ணம் வீற்று இருந்தனவே
#169
ஈனாத இளம் கமுகின் மரகத மணி கண்ணும்
ஆனாதே இருள் பருகும் அரு மணி கடைந்ததூஉம்
தான் ஆகி இருளொடு ஓர் தாமரை பூ சுமந்து அன்ன
கான் ஆர்ந்த திரள் கழுத்து கவின் சிறை கொண்டு இருந்ததே
#170
மணி மகரம் வாய் போழ்ந்து வாழ் முத்த வடம் சூழ்ந்து ஆங்கு
அணி அரக்கு ஆர் செம் பஞ்சி அணை அனைய ஆடு அமை தோள்
துணி கதிர் வளை முன் கை தொகு விரல் செங்காந்தள்
மணி அரும்பு மலர் அங்கை குலிகம் ஆர் வனப்பினவே
#171
தாம செப்பு இணை முகட்டு தண் கதிர் விடு நீல
மா மணி தாபித்தன போல் மனம் பருகு கரும் கண்ண
ஏமுற அடி பரந்து இளம் பிறை வடம் சூடி
ஆம் அணங்கு குடியிருந்து அம் சுணங்கு பரந்தனவே
#172
அம் கை போல் வயிறு அணிந்த வலம் சுழி அமை கொப்பூழ்
கங்கையின் சுழி அலைக்கும் கண் கொளா நுடங்கு இடையை
உண்டு என தமர் மதிப்பர் நோக்கினார் பிறர் எல்லாம்
உண்டு இல்லை என ஐயம் அல்லது ஒன்று உணர்வு அரிதே
#173
மன் நாக இணை படமும் தேர் தட்டு மதி மயக்கி
பொன் ஆல வட்டமும் போல் கலை இமைக்கும் அகல் அல்குல்
கொன் இளம் பருதியும் குறு முயலின் குருதியும் போன்று
இன் அரத்த பட்டு அசைத்து இந்திரற்கும் புகழ்வு அரிதே
#174
வேழ வெண் திரள் தட கை வெருட்டி மற்று இளம் கன்னி
வாழை தண்டு என திரண்டு வால் அரக்கு உண் செம் பஞ்சி
தோழமை கொண்டு என மென்மை உடையவாய் ஒளி திகழ்ந்து
மாழை கொள் மணி மகரம் கௌவி வீற்று இருந்தனவே
#175
பக்கத்தால் கவிழியவாய் மேல் பிறங்கா பாண்டில் ஆ
ஒக்க நன்கு உணராமை பொருந்திய சந்தினவாய்
நெக்கு பின் கூடாது நிகர் அமைந்த முழந்தாளும்
மக்களுக்கு இல்லாத மாட்சியின் மலிந்தனவே
#176
ஆடு தசை பிறங்காது வற்றாது மயிர் அகன்று
நீடாது குறுகாது நிகர் அமைந்த அளவினவாய்
சேடு ஆவ நாழிகையின் புடை திரண்டு தேன் நெய் பெய்
வாடாத காம்பே போல் கணைக்கால் இன் வனப்பினவே
#177
பசும்பொன் செய் கிண்கிணியும் பாடகமும் பாடு அலைப்ப
நயந்து எரி பொன் சிலம்பு முத்து அரி பெய்து அகம் நக
இயைந்து எழிலார் மணி ஆமை இளம் பார்ப்பின் கூன் புறம் போல்
அசைந்து உணர்வு மடிந்து ஒழியும் அடி இணை புகழ்வார்க்கே
#178
அரக்கு இயல் செங்கழுநீர் அக இதழ் போல் உகிர் சூடி
பரப்பு இன்றி நுதி உயர்ந்து பழிப்பு அற திரண்டு நீண்டு
ஒருக்குற நெருங்கி பொன் ஒளி ஆழி அகம் கௌவி
திரு கவின் கொள் மெல் விரல்கள் தேன் ஆர்க்கும் தகையவே
#179
என்பொடு நரம்பு இன்றி இலவம் பூ அடர் அனுக்கி
இன்புற வரம்பு உயர்ந்து இரு நிலம் உற புல்லி
ஒன்பதின் சாண் நடப்பினும் ஒரு காதம் என்று அஞ்சும்
மென் பஞ்சி சீறடியும் மேதக்க விழைவினவே
#180
இ உருவு நெஞ்சு என்னும் கிழியின் மேல் இருந்து இலக்கித்து
அ உருவு நினைப்பு என்னும் துகிலிகையால் வருத்தித்து
கவ்விய தன் நோக்கினால் கண் விடுத்து காதல் நீர்
செவ்விதில் தெளித்து ஆனா காம பூ சிதறினான்
#181
மெய் பெறா எழுத்து உயிர்க்கும் மழலை வாய் இன் முறுவல்
தையலாள் நெடும் தடம் கண் வலைப்பட்டு சச்சந்தன்
ஐயுறான் அணங்கு எனவே அகத்து அடக்கி செல்கின்றான்
மொய் அறா களி யானை முழங்கி தேன் இமிர் தாரான்
#182
வண்டு இனம் முகபடாம் அணிந்து வார் மதம்
உண்டு உகுத்திடு களிற்று உழவன்-தன் மகள்
பெண்டிர்-தம் பெரு நலம் கடந்து பெற்ற பேர்
விண்டலர் கோதைக்கு விசயை என்பவே
#183
அரு மணி மரகதத்து அம் கண் நாறிய
எரி நிற பொன் இதழ் ஏந்து தாமரை
திருமகள் இவள் என திலக வெண்குடை
பெருமகன் கோயிலுள் பேதை வைகுமே
#184
கலம் புரி அகல் அல்குல் தாயர் தவ்வையர்
சிலம்புரி திருந்து அடி பரவ செல்பவள்
வலம்புரி சலஞ்சலம் வளைஇயது ஒத்தனள்
குலம் புரிந்து அனையது ஓர் கொடியின் நீர்மையள்
#185
இன் அகில் கொழும் புகை உயிர்க்கும் ஈர்ம் குழல்
மென் மலர் கோதை தன் முலைகள் வீங்கலின்
மின் உருக்குறும் இடை மெலிய மெல்லவே
கன்னி தன் திரு நலம் கனிந்தது என்பவே
#186
முந்து நாம் கூறிய மூரி தானை அ
கந்து கொல் கடா களி யானை மன்னவன்
பைம் தொடி பாசிழை பரவை ஏந்து அல்குல்
தந்தை-மாட்டு இசைத்தனன் தனது மாற்றமே
#187
மருமகன் வலந்தது மங்கை ஆக்கமும்
அரு மதி சூழ்ச்சியின் அமைச்சர் எண்ணிய
கருமமும் கண்டவர் கலத்தல் பான்மையில்
பெருமகன் சேர்த்தினார் பிணை அனாளையே
#188
பொன் அம் கொடி அமிர்து அனாளும் பொன் நெடும் குன்று அனானும்
அனங்கனுக்கு இலக்கம் ஆகி அம்பு கொண்டு அழுத்த விள்ளார்
இனம் தமக்கு எங்கும் இல்லார் இயைந்தனர் என்ப முக்கண்
சினம் திகழ் விடையினானும் செல்வியும் சேர்ந்தது ஒத்தே
#189
காதலால் காம பூமி கதிர் ஒளி அவரும் ஒத்தார்
மாதரும் களிறு அனானும் மாசுண மகிழ்ச்சி மன்றல்
ஆதரம் பெருகுகின்ற அன்பினால் அன்னம் ஒத்தும்
தீது இலார் திளைப்பின் ஆமான் செல்வமே பெரிதும் ஒத்தார்
#190
தன் அமர் காதலானும் தையலும் மணந்த-போழ்தில்
பொன் அனாள் அமிர்தம் ஆக புகழ் வெய்யோன் பருகியிட்டான்
மின் அவிர் பூணினானை வேல் கணார்க்கு இயற்றப்பட்ட
மன்னிய மதுவின் வாங்கி மாதரும் பருகியிட்டாள்
#191
பவழ வாய் பரவை அல்குல் என்று இவை பருகும் வேலான்
கவழம் ஆர் களிறு போன்றான் காதலி கரும்பை ஒத்தாள்
தவழ் மது கோதை மாதர் தாமரை பூ அது ஆக
உமிழ் நகை வேலினானும் ஒண் சிறை மணி வண்டு ஒத்தான்
#192
பளிக்கு அறை பவழ பாவை பரிசு என திகழும் சாயல்
களி கயல் பொருவ போன்று கடை சிவந்து அகன்ற கண்ணாள்
ஒளி கவின் கொண்ட காமத்து ஊழுறு கனியை ஒத்தாள்
அளித்து அயில்கின்ற வேந்தன் அம் சிறை பறவை ஒத்தான்
#193
துறு மலர் பிணையலும் சூட்டும் சுண்ணமும்
நறு மலர் கண்ணியும் நாறு சாந்தமும்
அறு நிலத்து அமிர்தமும் அகிலும் நாவியும்
பெறு நிலம் பிணித்திட பெரியர் வைகினார்
#194
துடி தலை கரும் குழல் சுரும்பு உண் கோதை தன்
அடித்தலை சிலம்பினோடு அரவ மேகலை
வடி தலை கண் மலர் வளர்த்த நோக்கமோடு
அடுத்து உலப்பு அரிது அவர் ஊறில் இன்பமே
#195
இழை கிளர் இள முலை எழுது நுண் இடை
தழை வளர் மது மலர் தயங்கு பூம் சிகை
குழை முக கொடியொடு குருதி வேலினான்
மழை முகில் மாரியின் வைகும் என்பவே
#196
படு திரை பவழ வாய் அமுதம் மாந்தியும்
கொடி வளர் குவி முலை தடத்துள் வைகியும்
இடியினும் கொடியினும் மயங்கி யாவதும்
கடி மண கிழமை ஓர் கடலின் மிக்கதே
#197
கப்புர பசும் திரை கதிர் செய் மா மணி
செப்பொடு சிலதியர் ஏந்த தீவிய
துப்பு உமிழ்ந்து அலமரும் காமவல்லியும்
ஒப்பரும் பாவை போன்று உறையும் என்பவே
#198
மண் அகம் காவலின் வழுக்கி மன்னவன்
பெண் அரும் கலத்தொடு பிணைந்த பேர் அருள்
விண்ணகம் இருள் கொள விளங்கு வெண் மதி
ஒள் நிற உரோணியோடு ஒளித்தது ஒத்ததே
#199
குங்கும தோளினானும் கொழும் கயல் கண்ணினாளும்
தங்கிய காதல் வெள்ளம் தணப்பு அற பருகும் நாளுள்
திங்கள் வெண்குடையினாற்கு திரு இழுக்குற்ற வண்ணம்
பைம் கதிர் மதியில் தெள்ளி பகர்ந்து எடுத்து உரைத்தும் அன்றே
#200
களிறு அனான் அமைச்சர்-தம்முள் கட்டியங்காரன் என்பான்
ஒளிறு வாள் தடக்கையானுக்கு உயிர் என ஒழுகும் நாளுள்
பிளிறு வார் முரசின் சாற்றி பெரும் சிறப்பு இயற்றி வேந்தன்
வெளிறு இலா கேள்வியானை வேறு கொண்டு இருந்து சொன்னான்

மேல்

#201
அசைவு இலா புரவி வெள்ளத்து அரிஞ்சயன் குலத்துள் தோன்றி
வசை இலாள் வரத்தின் வந்தாள் வான் சுவை அமிர்தம் அன்னாள்
விசையையை பிரிதல் ஆற்றேன் வேந்தன் நீ ஆகி வையம்
இசை பட காத்தல் வேண்டும் இலங்கு பூண் மார்ப என்றான்
#202
அண்ணல் தான் உரைப்ப கேட்டே அடு களிற்று எருத்தின் இட்ட
வண்ண பூம் தவிசு தன்னை ஞமலி மேல் இட்டது ஒக்கும்
கண் அகல் ஞாலம் காத்தல் எனக்கு என கமழும் கண்ணி
மண் அகம் வளரும் தோளான் மறுத்து நீ மொழியல் என்றான்
#203
எழுதரு பருதி மார்பன் இற்று என இசைத்தலோடும்
தொழுது அடி பணிந்து சொல்லும் துன்னலர் தொலைத்த வேலோய்
கழி பெரும் காதலாள்-கண் கழி நலம் பெறுக வையம்
பழி படா வகையில் காக்கும் படு நுகம் பூண்பல் என்றான்
#204
வலம்புரி பொறித்த வண் கை மதவலி விடுப்ப ஏகி
கலந்தனன் சேனை காவல் கட்டியங்காரன் என்ன
உலந்தரு தோளினாய் நீ ஒருவன் மேல் கொற்றம் வைப்பின்
நிலம் திரு நீங்கும் என்று ஓர் நிமித்திகன் நெறியில் சொன்னான்
#205
எனக்கு உயிர் என்ன பட்டான் என் அலால் பிறரை இல்லான்
முனை திறம் உருக்கி முன்னே மொய் அமர் பலவும் வென்றான்
தனக்கு யான் செய்வ செய்தேன் தான் செய்வ செய்க ஒன்றும்
மனக்கு இனா மொழிய வேண்டா வாழியர் ஒழிக என்றான்
#206
காவல குறிப்பு அன்றேனும் கருமம் ஈது அருளி கேண்மோ
நாவலர் சொல் கொண்டார்க்கு நன்கு அலால் தீங்கு வாரா
பூ அலர் கொடியனார் கண் போகமே கழுமி மேலும்
பாவமும் பழியும் உற்றார் பற்பலர் கேள் இது என்றான்
#207
பெரும் பெயர் பிரமன் என்னும் பீடினால் பெரிய நீரான்
அரும்பிய முலையினாளுக்கு அணி முகம் நான்கு தோன்ற
விரும்பி ஆங்கு அவளை எய்தான் விண்ணகம் இழந்தது அன்றி
திருந்தினாற்கு இன்று-காறும் சிறு சொல்லாய் நின்றது அன்றே
#208
கை மலர் காந்தள் வேலி கண மலை அரையன் மங்கை
மை மலர் கோதை பாகம் கொண்டதே மறுவது ஆக
கொய் மலர் கொன்றை மாலை குளிர் மதி கண்ணியாற்கு
பெய் மலர் அலங்கல் மார்ப பெரும் பழி ஆயிற்று அன்றே
#209
நீல் நிற வண்ணன் அன்று நெடும் துகில் கவர்ந்து தம்முன்
பால் நிற வண்ணன் நோக்கில் பழி உடைத்து என்று கண்டாய்
வேல் நிற தானை வேந்தே விரி புனல் தொழுனை ஆற்றுள்
கோல் நிற வளையினார்க்கு குருந்து அவன் ஒசித்தது என்றான்
#210
காமமே கன்றி நின்ற கழுதை கண்டு அருளினாலே
வாமனார் சென்று கூடி வருந்தினீர் என்று வையத்து
ஈமம் சேர் மாலை போல இழித்திடப்பட்டது அன்றே
நாம வேல் தட கை வேந்தே நாம் இது தெரியின் என்றான்
#211
படு பழி மறைக்கல் ஆமோ பஞ்சவர் அன்று பெற்ற
வடு_உரை யாவர் பேர்ப்பார் வாய் பறை அறைந்து தூற்றி
இடுவதே அன்றி பின்னும் இழுக்கு உடைத்து அம்ம காமம்
நடுவு நின்று உலகம் ஓம்பல் நல்லதே போலும் என்றான்
#212
ஆர் அறிவு இகழ்தல் செல்லா ஆயிரம் செம் கணனானும்
கூர் அறிவு உடைய நீரார் சொல் பொருள் கொண்டு செல்லும்
பேர் அறிவு உடையை நீயும் பிணை அனாட்கு அவலம் செய்யும்
ஓர் அறிவு உடையை என்றான் உருத்திரதத்தன் என்பான்
#213
அளந்து தாம் கொண்டு காத்த அரும் தவம் உடைய நீரார்க்கு
அளந்தன போகம் எல்லாம் அவர் அவர்க்கு அற்றை நாளே
அளந்தன வாழும் நாளும் அது எனக்கு உரையல் என்றான்
விளங்கு ஒளி மணிகள் வேய்ந்து விடு சுடர் இமைக்கும் பூணான்
#214
மூரி தேம் தாரினாய் நீ முனியினும் உறுதி நோக்கி
பாரித்தேன் தரும நுண் நூல் வழக்கு அது ஆதல் கண்டே
வேரி தேம் கோதை மாதர் விருந்து உனக்காக இன்பம்
பூரித்து ஏந்து இளைய கொங்கை புணர்க யான் போவல் என்றான்
#215
இனமாம் என்று உரைப்பினும் ஏதம் எணான்
முனம் ஆகிய பான்மை முளைத்து எழலால்
புன மா மலர் வேய் நறும் பூம் குழலாள்
மனமாம் நெறி ஓடிய மன்னவனே
#216
கலை ஆர் துகில் ஏந்து அல்குலும் கதிர் சூழ்
முலை ஆர் தடமும் முனியாது படிந்து
உலையா திருவின் அமிர்து உண்டு ஒளி சேர்
மலை ஆர் மணி மார்பன் மகிழ்ந்தனனே
#217
விரி மா மணி மாலை விளங்கு முடி
திரு மா மணி சிந்து திளைப்பினர் ஆய்
எரி மா மணி மார்பனும் ஏந்து_இழையும்
அரு மா மணி நாகரின் ஆயினரே
#218
நறவு ஆர்ந்தது ஓர் நாகு இளம் தாமரை வாய்
உற வீழ்ந்தது ஓர் ஒண் மணி போன்று உரவோன்
அறவு ஆக்கிய இன்பம் அமர்ந்த இருள்
கறை வேல் கணினாள் கனவு உற்றனளே
#219
பஞ்சி அடி பவள துவர் வாய் அவள்
துஞ்சும் இடை கனவு மூன்று அவை தோன்றலின்
அஞ்சி நடுங்கினள் ஆய்_இழை ஆயிடை
வெம் சுடர் தோன்றி விடிந்ததை அன்றே
#220
பண் கெழு மெல் விரலால் பணை தோளி தன்
கண் கழூஉ செய்து கலை நலம் தாங்கி
விண் பொழி பூ மழை வெல் கதிர் நேமிய
வண் புகழ் மால் அடி வந்தனை செய்தாள்
#221
இம்பர் இலா நறும் பூவொடு சாந்து கொண்டு
எம் பெருமான் அடிக்கு எய்துக என்று ஏத்தி
வெம் பரி மான் நெடும் தேர் மிகு தானை அ
தம் பெருமான் அடி சார்ந்தனள் அன்றே
#222
தான் அமர் காதலி தன்னொடு மா_வலி
வானவர் போல் மகிழ்வுற்ற பின் வார் நறும்
தேன் என பால் என சில் அமிர்து ஊற்று என
கான் அமர் கோதை கனா மொழிகின்றாள்
#223
தொத்து அணி பிண்டி தொலைந்து அற வீழ்ந்தது எண்
முத்து அணி மாலை முடிக்கு இடன் ஆக
ஒத்து அதன் தாள் வழியே முளை ஓங்குபு
வைத்தது போல வளர்ந்ததை அன்றே
#224
வார் குழை வில் இட மா முடி தூக்குபு
கார் கெழு குன்று அனையான் கனவின் இயல்
பார் கெழு நூல் விதியால் பயன் தான் தெரிந்து
ஏர் குழையாமல் எடுத்து உரைக்கின்றான்
#225
நன் முடி நின் மகனாம் நறு மாலைகள்
அன்னவனால் அமரப்படும் தேவியர்
நல் முளை நின் மகன் ஆக்கம் அதாம் என
பின்னதனால் பயன் பேசலன் விட்டான்
#226
இற்று அதனால் பயன் என் என ஏந்து_இழை
உற்றது இன்னே இடையூறு எனக்கு என்றலும்
மற்று உரையாடலளாய் மணி மா நிலத்து
அற்றது ஓர் கோதையின் பொன்_தொடி சோர்ந்தாள்
#227
காவி கடந்த கண்ணீரொடு காரிகை
ஆவி நடந்தது போன்று அணி மாழ்க
பாவி என் ஆவி வருத்துதியோ என
தேவியை ஆண் தகை சென்று மெய் சார்ந்தான்
#228
தண் மலர் மார்புறவே தழீஇயினான் அவள்
கண் மலர் தாள் கனவின் இயல் மெய் எனும்
பெண் மயமோ பெரிதே மடவாய்க்கு என
பண் உரையால் பரவி துயர் தீர்த்தான்
#229
காதலன் காதலினால் களித்து ஆய் மலர்
கோதை அம் கொம்பு அனையார் தம் குழாம் தொழ
தாது உகு தாமம் அணிந்து அகில் விம்மிய
போது உகு மெல் அணை பூ மகள் சேர்ந்தாள்
#230
பண் கனிய பருகி பயன் நாடகம்
கண் கனிய கவர்ந்து உண்டு சின்னாள் செல
விண் கனிய கவின் வித்திய வேல் கணி
மண் கனிப்பான் வளர தளர்கின்றாள்
#231
கரும்பு ஆர் தோள் முத்தம் கழன்று செ வாய் விளர்த்து கண் பசலை பூத்த காமம்
விரும்பு ஆர் முலை கண் கரிந்து திங்கள் வெண் கதிர்கள் பெய்து இருந்த பொன் செப்பே போல்
அரும்பால் பரந்து நுசுப்பும் கண்ணின் புலன் ஆயிற்று ஆய்ந்த அனிச்ச மாலை
பெரும் பாரமாய் பெரிது நைந்து நல் சூல் சலஞ்சலம் போல் நங்கை நலம் தொலைந்ததே
#232
தூம்பு உடை நெடும் கை வேழம் துற்றிய வெள்ளிலே போல்
தேம்பு உடை அலங்கல் மார்பில் திருமகன் தமியன் ஆக
ஓம்படை ஒன்றும் செப்பாள் திருமகள் ஒளித்து நீங்க
ஆம் புடை தெரிந்து வேந்தற்கு அறிவு எனும் அமைச்சன் சொன்னான்
#233
காதி வேல் மன்னர் தங்கள் கண் என வைக்கப்பட்ட
நீதி மேல் சேறல் தேற்றாய் நெறி அலா நெறியை சேர்ந்து
கோது இயல் காமம் என்னும் மதுவினில் குளித்த ஞான்றே
ஓதிய பொறி அற்றாய் ஓர் அரும் பொறி புனைவி என்றான்
#234
அந்தரத்தார் மயனே என ஐயுறும்
தந்திரத்தால் தம நூல் கரை கண்டவன்
வெம் திறலான் பெரும் தச்சனை கூவி ஓர்
எந்திர ஊர்தி இயற்று-மின் என்றான்
#235
பல் கிழியும் பயினும் துகில் நூலொடு
நல் அரக்கும் மெழுகும் நலம் சான்றன
அல்லனவும் அமைத்து ஆங்கு எழு நாள் இடை
செல்வது ஓர் மா மயில் செய்தனன் அன்றே
#236
பீலி நல் மா மயிலும் பிறிது ஆக்கிய
கோல நல் மா மயிலும் கொடு சென்றவன்
ஞாலம் எல்லாம் உடையான் அடி கைதொழுது
ஆலும் இ மஞ்ஞை அறிந்து அருள் என்றான்
#237
நல் நெறி நூல் நயந்தான் நன்று நன்று இது
கொல் நெறியில் பெரியாய் இது கொள்க என
மின் நெறி பல் கலம் மேதக பெய்தது ஓர்
பொன் அறை தான் கொடுத்தான் புகழ் வெய்யோன்
#238
ஆடு இயல் மா மயில் ஊர்தியை அ வழி
மாடமும் காவும் அடுத்து ஓர் சில் நாள் செல
பாடலின் மேன்மேல் பயப்பய தான் துரந்து
ஓட முறுக்கி உணர்த்த உணர்ந்தாள்
#239
பண் தவழ் விரலின் பாவை பொறி வலம் திரிப்ப பொங்கி
விண் தவழ் மேகம் போழ்ந்து விசும்பு-இடை பறக்கும் வெய்ய
புண் தவழ் வேல் கண் பாவை பொறி இடம் திரிப்ப தோகை
கண்டவர் மருள வீழ்ந்து கால் குவித்து இருக்கும் அன்றே
#240
காதி வேல் வல கட்டியங்காரனும்
நீதியால் நிலம் கொண்ட பின் நீதி நூல்
ஓதினார்-தமை வேறு கொண்டு ஓதினான்
கோது செய் குண கோதினுள் கோது அனான்
#241
மன்னவன் பகை ஆயது ஓர் மா தெய்வம்
என்னை வந்து இடம் கொண்ட அஃது இரா பகல்
துன்னி நின்று செகுத்திடு நீ எனும்
என்னை யான் செய்வ கூறு-மின் என்னவே
#242
அருமை மா மணி நாகம் அழுங்க ஓர்
உருமு வீழ்ந்து என உட்கினரா அவன்
கருமம் காழ்த்தமை கண்டவர் தம்முளான்
தருமதத்தன் என்பான் இது சாற்றினான்
#243
தவளை கிண்கிணி தாமரை சீறடி
குவளையே அளவுள்ள கொழும் கணாள்
அவளையே அமிர்து ஆக அ அண்ணலும்
உவள் அகம் தனது ஆக ஒடுங்கினான்
#244
விண்ணினோடு அமிர்தம் விலை செல்வது
பெண்ணின் இன்பம் பெரிது என தாழ்ந்து அவன்
எண்ணம் இன்றி இறங்கி இ வையகம்
தண் அம் தாமரையாளொடும் தாழ்ந்ததே
#245
தன்னை ஆக்கிய தார் பொலி வேந்தனை
பின்னை வௌவில் பிறழ்ந்திடும் பூ மகள்
அன்னவன் வழி செல்லின் இ மண் மிசை
பின்னை தன் குலம் பேர்க்குநர் இல்லையே
#246
திலக நீள் முடி தேவரும் வேந்தரும்
உலக மாந்தர்கள் ஒப்ப என்று ஓதுப
குலவு தார் மன்னர்க்கு யான் இது கூறுவன்
பலவும் மிக்கனர் தேவரின் பார்த்திவர்
#247
அருளுமேல் அரசு ஆக்கும்-மன் காயுமேல்
வெருள சுட்டிடும் வேந்து எனும் மா தெய்வம்
மருளி மற்று அவை வாழ்த்தினும் வையினும்
அருளி ஆக்கல் அழித்தல் அங்கு ஆபவோ
#248
உறங்கும்-ஆயினும் மன்னவன் தன் ஒளி
கறங்கு தெண் திரை வையகம் காக்குமால்
இறங்கு கண் இமையார் விழித்தே இருந்து
அறங்கள் வௌவ அதன் புறம் காக்கலார்
#249
யாவர்-ஆயினும் நால்வரை பின்னிடின்
தேவர் என்பது தேறும் இ வையகம்
காவல் மன்னவர் காய்வன சிந்தியார்
நாவினும் உரையார் நவை அஞ்சுவார்
#250
தீண்டினார்-தமை தீ சுடும் மன்னர் தீ
ஈண்டு தம் கிளையொடும் எரித்திடும்
வேண்டில் இன் அமிர்தும் நஞ்சும் ஆதலான்
மாண்டது அன்று நின் வாய் மொழி தெய்வமே

மேல்

#251
வேலின் மன்னனை விண்ணகம் காட்டி இ
ஞாலம் ஆள்வது நன்று எனக்கு என்றியேல்
வாலிது அன்று என கூறினன் வாள் ஞமற்கு
ஓலை வைத்து அன்ன ஒண் திறல் ஆற்றலான்
#252
குழல் சிகை கோதை சூட்டிக்கொண்டவன் இருப்ப மற்று ஓர்
நிழல் திகழ் வேலினானை நேடிய நெடும் கணாளும்
பிழைப்பிலான் புறம் தந்தானும் குரவரை பேணல் செய்யா
இழுக்கினார் இவர்கள் கண்டாய் இடும்பை நோய்க்கு இரைகள் ஆவார்
#253
நட்பு-இடை குய்யம் வைத்தான் பிறர் மனை நலத்தை சேர்ந்தான்
கட்டு அழல் காம தீயில் கன்னியை கலக்கினானும்
அட்டு உயிர் உடலம் தின்றான் அமைச்சனாய் அரசு கொன்றான்
குட்ட நோய் நரகம் தம்முள் குளிப்பவர் இவர்கள் கண்டாய்
#254
பிறை-அது வளர தானும் வளர்ந்து உடன் பெருகி பின் நாள்
குறைபடு மதியம் தேய குறு முயல் தேய்வதே போல்
இறைவனா தன்னை ஆக்கி அவன் வழி ஒழுகின் என்றும்
நிறை மதி இருளை போழும் நெடும் புகழ் விளைக்கும் என்றான்
#255
கோள் நிலை திரிந்து நாழி குறைபட பகல்கள் மிஞ்சி
நீள் நிலம் மாரி இன்றி விளைவு அஃகி பசியும் நீடி
பூண் முலை மகளிர் பொற்பில் கற்பு அழிந்து அறங்கள் மாறி
ஆணை இ உலகு கேடாம் அரசு கோல் கோடின் என்றான்
#256
தார் பொலி தருமதத்தன் தக்கவாறு உரப்ப குன்றில்
கார்த்திகை விளக்கு இட்டு அன்ன கடி கமழ் குவள பந்தார்
போர்த்த தன் அகலம் எல்லாம் பொள்ளென வியர்த்து பொங்கி
நீர் கடல் மகர பேழ் வாய் மதனன் மற்று இதனை சொன்னான்
#257
தோளினால் வலியர் ஆகி தொக்கவர் தலைகள் பாற
வாளினால் பேசல் அல்லால் வாயினால் பேசல் தேற்றேன்
காள மேகங்கள் சொல்லி கருனையால் குழைக்கும் கைகள்
வாள் அமர் நீந்தும்-போழ்தின் வழு வழுத்து ஒழியும் என்றான்
#258
நுண் முத்தம் ஏற்றி ஆங்கு மெய் எல்லாம் வியர்த்து நொய்தின்
வண் முத்தம் நிரை கொள் நெற்றி வார் முரி புருவம் ஆக்கி
கண் எரி தவழ வண் கை மணி நகு கடகம் எற்றா
வெண் நகை வெகுண்டு நக்கு கட்டியங்காரன் சொன்னான்
#259
என் அலால் பிறர்கள் யாரே இன்னவை பொறுக்கும் நீரார்
உன் அலால் பிறர்கள் யாரே உற்றவற்கு உறாத சூழ்வார்
மன்னன் போய் துறக்கம் ஆண்டு வானவர்க்கு இறைவன் ஆக
பொன் எலாம் விளைந்து பூமி பொலிய யான் காப்பல் என்றான்
#260
விளைக பொலிக அஃதே உரைத்திலம் வெகுள வேண்டா
களைகம் எழுகம் இன்னே காவலன் கூற்றம் கொல்லும்
வளை கய மடந்தை கொல்லும் தான் செய்த பிழைப்பு கொல்லும்
அளவு அறு நிதியம் கொல்லும் அருள் கொல்லும் அமைக என்றான்
#261
நில தலை திரு_அனாள் தன் நீப்பரும் காதல் கூர
முலை தலை போகம் மூழ்கி முகிழ் நிலா முடி கொள் சென்னி
வெலற்கு அரும் தானை நீத்த வேந்தனை வெறுமை நோக்கி
குலத்தொடும் கோறல் எண்ணி கொடியவன் கடிய சூழ்ந்தான்
#262
கோன் தமர் நிகளம் மூழ்கி கோட்டத்து குரங்க தன் கீழ்
ஏன்ற நன் மாந்தர்க்கு எல்லாம் இரு நிதி முகந்து நல்கி
ஊன்றிய நாட்டை எல்லாம் ஒரு குடை நீழல் செய்து
தோன்றினான் குன்றத்து உச்சி சுடர் பழி விளக்கு இட்ட அன்றே
#263
பருமித்த களிறும் மாவும் பரந்து இயல் தேரும் பண்ணி
திரு மிக்க சேனை மூதூர் தெருவு-தொறும் எங்கும் ஈண்டி
எரி மொய்த்த வாளும் வில்லும் இலங்கு இலை வேலும் ஏந்தி
செரு மிக்க வேலினான் தன் திருநகர் வளைந்தது அன்றே
#264
நீள் நில மன்ன போற்றி நெடு முடி குருசில் போற்றி
பூண் அணி மார்ப போற்றி புண்ணிய வேந்தே போற்றி
கோள் நிலை குறித்து வந்தான் கட்டியங்காரன் என்று
சேண் நிலத்து இறைஞ்சி சொன்னான் செய்ய கோல் வெய்ய சொல்லான்
#265
திண் நிலை கதவம் எல்லாம் திருந்து தாழ் உறுக்க வல்லே
பண்ணுக பசும்பொன் தேரும் படு மத களிறும் மாவும்
கண் அகன் புரிசை காக்கும் காவலர் அடைக என்றான்
விண் உரும் ஏறு போன்று வெடிபட முழங்கும் சொல்லான்
#266
புலி பொறி போர்வை நீக்கி பொன் அணிந்து இலங்குகின்ற
ஒலி கழல் மன்னர் உட்கும் உரு சுடர் வாளை நோக்கி
கலிக்கு இறை ஆய நெஞ்சின் கட்டியங்காரன் நம் மேல்
வலித்தது காண்டும் என்று வாள் எயிறு இலங்க நக்கான்
#267
நங்கை நீ நடக்கல் வேண்டும் நன் பொருட்கு இரங்கல் வேண்டா
கங்குல் நீ அன்று கண்ட கனவு எல்லாம் விளைந்த என்ன
கொங்கு அலர் கோதை மாழ்கி குழை முகம் புடைத்து வீழ்ந்து
செம் கயல் கண்ணி வெய்ய திருமகற்கு அவலம் செய்தாள்
#268
மல் அலைத்து எழுந்து வீங்கி மலை திரண்டு அனைய தோளான்
அல்லல் உற்று அழுங்கி வீழ்ந்த அமிர்தம் அன்னாளை எய்தி
புல்லி கொண்டு அவலம் நீக்கி பொம்மல் வெம் முலையினாட்கு
சொல்லுவான் இவைகள் சொன்னான் சூழ் கழல் காலினானே
#269
சாதலும் பிறத்தல்-தானும் தம் வினை பயத்தின் ஆகும்
ஆதலும் அழிவும் எல்லாம் அவை பொருட்கு இயல்பு கண்டாய்
நோதலும் பரிவும் எல்லாம் நுண் உணர்வு இன்மை அன்றே
பேதை நீ பெரிதும் பொல்லாய் பெய் வளை தோளி என்றான்
#270
தொல்லை நம் பிறவி எண்ணில் தொடு கடல் மணலும் ஆற்றா
எல்லைய அவற்றுள் எல்லாம் ஏதிலம் பிறந்து நீங்கி
செல்லும் அ கதிகள் தம்முள் சேரலம் சேர்ந்து நின்ற
இல்லினுள் இரண்டு நாளை சுற்றமே இரங்கல் வேண்டா
#271
வண்டு மொய்த்து அரற்றும் பிண்டி வாமனால் வடித்த நுண் நூல்
உண்டு வைத்து அனைய நீயும் உணர்வு இலா நீரை ஆகி
விண்டு கண் அருவி சோர விம்மு உயிர்த்து இனையை ஆதல்
ஒண்_தொடி தகுவது அன்றால் ஒழிக நின் கவலை என்றான்
#272
உரிமை முன் போக்கி அல்லால் ஒளி உடை மன்னர் போகார்
கருமம் ஈது எனக்கும் ஊர்தி சமைந்தது கவல வேண்டாம்
புரி நரம்பு இரங்கும் சொல்லாய் போவதே பொருள் மற்று என்றான்
எரி முயங்கு இலங்கு வாள் கை ஏற்று இளம் சிங்கம் அன்னான்
#273
என்பு நெக்கு உருகி உள்ளம் ஒழுகுபு சோர யாத்த
அன்பு மிக்கு அவலித்து ஆற்றா ஆருயிர் கிழத்தி-தன்னை
இன்பம் மிக்கு உடைய கீர்த்தி இறைவனது ஆணை கூறி
துன்பம் இல் பறவை ஊர்தி சேர்த்தினன் துணைவி சேர்ந்தாள்
#274
நீர் உடை குவளையின் நெடும் கண் நின்ற வெம் பனி
வார் உடை முலை முகம் நனைப்ப மாதர் சென்ற பின்
சீர் உடை குருசிலும் சிவந்து அழன்று ஓர் தீ திரள்
பார் உடை பனி கடல் சுடுவது ஒத்து உலம்பினான்
#275
முழை முகத்து இடி அரி வளைத்து அன்ன மள்ளரில்
குழை முக புரிசையுள் குருசில் தான் அகப்பட
இழை முகத்து எறி படை இலங்கு வாள் கடல்-இடை
மழை முகத்த குஞ்சரம் வாரியுள் வளைத்தவே
#276
அயிலினில் புனைந்த வாள் அழன்று உருத்து உரீஇ உடன்
பயில் கதிர் பரு மணி பன் மயிர் செய் கேடகம்
வெயில் என திரித்து விண் வழுக்கி வந்து வீழ்ந்தது ஓர்
கயில் அணி கதிர் நகை கடவுள் ஒத்து உலம்பினான்
#277
மாரியின் கடும் கணை சொரிந்து மள்ளர் ஆர்த்த பின்
வீரிய குரிசிலும் விலக்கி வெம் கணை மழை
வாரியில் கடிந்து உடன் அகற்ற மற்ற வன் படை
பேர் இயல் பெரும் களிறு பின்னி வந்து அடைந்தவே
#278
சீற்றம் மிக்க மன்னவன் சேர்ந்த குஞ்சரம் நுதல்
கூற்றரும் குருதி வாள் கோடு உற அழுத்தலின்
ஊற்று உடை நெடு வரை உரும் உடன்று இடித்து என
மாற்றரும் மத களிறு மத்தகம் பிளந்தவே
#279
வேல் மிடைந்த வேலியும் பிளந்து வெம் கண் வீரரை
வான் மயிர் செய் கேடகத்து இடித்து வாள் வலை அரிந்து
ஊன் உடை குருதியுள் உழக்குபு திரிதர
தேன் மிடைந்த தாரினான் செங்களம் சிறந்ததே
#280
உப்பு உடைய மு நீர் உடன்று கரை கொல்வது
ஒப்பு உடைய தானையுள் ஒரு தனியன் ஆகி
இப்படி இறைமகன் இரும் களிறு நூற
அ படையுள் அண்ணலும் அழன்று களிறு உந்தி
#281
நீடகம் இருந்த நிழல் நேமி வலன் ஏந்தி
கேடகம் அறுப்ப நடு அற்று அரவு சேர்ந்து ஆங்கு
ஓடு கதிர் வட்டம் என ஒய் என உலம்பி
காடு கவர் தீயின் மிகை சீறுபு வெகுண்டான்
#282
நெய் முகம் அணிந்து நிழல் தங்கி அழல் பொங்கி
வை முகம் அணிந்த நுதி வாள் அழல வீசி
மை முகம் அணிந்த மத யானை தவ நூறி
கை முதல் துணிந்து களிறு ஆழ அது நோனான்
#283
மாலை நுதி கொண்டு மழை மின் என இமைக்கும்
வேலை வலன் ஏந்தி விரி தாமம் அழகு அழிய
சோலை மயிலார்கள் துணை வெம் முலைகள் துஞ்சும்
கோல வரை மார்பின் உறு கூற்று என எறிந்தான்
#284
புண் இடம் கொண்ட எஃகம் பறித்தலின் பொன் அனார் தம்
கண் இடம் கொண்ட மார்பில் தடாயின காது வெள் வேல்
மண் இடம் கொண்ட யானை மருப்பு இடை இட்டு அம்ம
விண் இடம் மள்ளர் கொள்ள மிறைக்கொளி திருத்தினானே
#285
ஏந்தல் வேல் திருத்த யானை இரிந்தன எரி பொன் கண்ணி
நாந்தக_உழவர் நண்ணார் கூற்று என நடுங்கி மள்ளர்
சாய்ந்த பின் தறுகண் ஆண்மை கட்டியங்காரன் வேழம்
காய்ந்தனன் கடுக உந்தி கப்பணம் சிதறினானே
#286
குன்றம் மார்பு அரிந்து வெள் வேல் குடுமி மா மஞ்ஞை ஊர்ந்து
நின்ற மால் புருவம் போல நெரி முறி புருவம் ஆக்கி
கொன்று அவன் வேழம் வீழ்ப்ப மற்ற போர் களிற்றில் பாய்ந்து
நின்ற மா மள்ளர்க்கு எல்லாம் நீள் முடி இலக்கம் ஆனான்
#287
நஞ்சு பதி கொண்ட வள நாக அணையினான் தன்
நெஞ்சு பதி கொண்டு படை மூழ்க நிலம் வீசும்
மஞ்சு தவழ் குன்று அனைய தோள் ஒசித்து மாத்தாள்
குஞ்சரங்கள் நூறி கொலை வாள் ஒடித்து நின்றான்
#288
ஆர் அமருள் ஆண் தகையும் அன்ன வகை வீழும்
வீரர் எறி வெம் படைகள் வீழ இமையான் ஆய்
பேர் அமருள் அன்று பெரும் தாதையொடும் பேரா
போர் அமருள் நின்ற இளையோனின் பொலிவு உற்றான்
#289
போழ்ந்து கதிர் நேமியொடு வேல் பொருது அழுந்த
தாழ்ந்து தறுகண் இணைகள் தீ அழல விழியா
வீழ்ந்து நில மா மகள் தன் வெம் முலை ஞெமுங்க
ஆழ்ந்து படு வெம் சுடரின் ஆண் தகை அவிந்தான்
#290
தோய்ந்த விசும்பு என்னும் தொல் நாட்டு அகம் தொழுது புலம்பு எய்தி மைந்தர் மாழ்க
ஏந்து முலையார் இனைந்து இரங்க கொடும் கோல் இருள் பரப்பவே ஏ பாவம்
ஆய்ந்த குருகுலமாம் ஆழ் கடலின் உள் முளைத்த அற செங்கோலாய் கதிரினை
வேந்தர் பெருமானை சச்சந்தனை மந்திரி மா நாகமுடன் விழுங்கிற்று அன்றே
#291
பால் அருவி திங்கள் தோய் முத்த மாலை பழிப்பின் நெடும் குடை கீழ் பாய் பரி மான் தேர்
கோல் அருவி வெம் சிலையான் கூர் வாளொடு மணி கேடகமும் மறமும் ஆற்றி
வால் அருவி வாமன் அடி தாமரை மலர் சூடி மந்திர மென் சாந்து பூசி
வேல் அருவி கண்ணினார் மெய்க்காப்பு ஓம்ப வேந்தன் போய் விண்ணோர்க்கு விருந்து ஆயினானே
#292
செம் தீ கரும் துளைய தீம் குழல் யாழ் தேம் தேம் என்னும் மணி முழவமும்
தந்து ஆங்கு இளையார் மெல் விரல்கள் தீண்ட தாம் தாம் என்று இரங்கும் தண்ணுமைகளும்
அம் தீம் கிளவியார் ஐஞ்ஞூற்றுவர் அவை துறைபோய் ஆடல் அரம்பை அன்னார்
எந்தாய் வெறு நிலத்து சேர்தியோ என்று இனைந்து இரங்கி பள்ளி படுத்தார்களே
#293
மடை அவிழ்ந்த வெள்ளி இலை வேல் அம்பு பாய மணி செப்பகம் கடைகின்றவே போல்
தொடை அவிழ்ந்த மாலையும் முத்தும் தோய்ந்த துணை முலையின் உள் அரங்கி மூழ்க காமன்
படை அவிழ்ந்த கண் பனி நீர் பாய விம்மா பரு முத்த நா மழலை கிண்கிணியினார்
புடை அவிழ்ந்த கூந்தல் புலவு தோய பொழி மழையுள் மின்னு போல் புலம்பினாரே
#294
அரிமான் ஓர் மெல் அணை மேல் மஞ்ஞை சூழ கிடந்து ஆங்கு வேந்தன் கிடந்தானை தான்
கரி மாலை நெஞ்சினான் கண்டான் கண்டே கைதொழுதான் கண்ணீர் கலுழ்ந்து உகுத்த பின்
எரி மாலை ஈமத்து இழுதார் குடம் ஏனை நூறும் ஏற்ப சொரிந்து அலறி எம்
பெருமானே எம்மை ஒளித்தியோ என்னா பெரிய கண்ணீர் சொரிந்து அலறுவார்
#295
கையார் வளைகள் புடைத்து இரங்குவார் கதிர் முலை மேல் ஆரம் பரிந்து அலறுவார்
நெய்யார் கரும் குழல் மேல் மாலை சிந்தி நிலத்து இடுவார் நின்று திருவில் வீசும்
மையார் கடி பிணையும் வார் குழையும் களைந்திடுவார் கையால் வயிறு அதுக்குவார்
ஐயாவே என்று அழுவார் வேந்தன் செய்த கொடுமை கொடிது என்பார் கோல் வளையினார்
#296
பானாள் பிறை மருப்பின் பைம் கண் வேழம் பகு வாய் ஓர் பை அணல் மா நாகம் வீழ்ப்ப
தேன் ஆர் மலர் சோலை செ வரையின் மேல் சிறு பிடிகள் போல துயர் உழந்து தாம்
ஆனாது அடியேம் வந்து அ உலகினில் நின் அடி அடைதும் என்று அழுது போயினார் எம்
கோனார் பறிப்ப நலம் பூத்த இ கொடி இனி பூவா பிறர் பறிப்பவே
#297
செம் கண் குறுநரி ஓர் சிங்க ஏற்றை செகுத்து ஆங்கு அதன் இடத்தை சேர்ந்தால் ஒப்ப
வெம் கண் களி யானை வேல் வேந்தனை விறல் எரியின் வாய் பெய்து அவன் பெயர்ந்து போய்
பைம் கண் களிற்றின் மேல் தன் பெயரினால் பறை அறைந்தான் வேல் மாரி பெய்தால் ஒப்ப
எம் கணவரும் இனைந்து இரங்கினார் இருள் மனத்தான் பூமகளை எய்தினானே
#298
களி முக சுரும்பு உண் கோதை கயில் எருத்து அசைந்து சோர
வளி முக சுடரின் நில்லா மனத்தொடு மயங்கி இப்பால்
சுளி முக களிறு அனான்-தன் சொல் நய நெறியில் போய
கிளி முக கிளவிக்கு உற்றது இற்று என கிளக்கல் உற்றேன்
#299
எஃகு என விளங்கும் வாள் கண் எறி கடல் அமிர்தம் அன்னாள்
அஃகிய மதுகை தன்னால் ஆய் மயில் ஊரும் ஆங்கண்
வெஃகிய புகழினான் தன் வென்றி வெம் முரசம் ஆர்ப்ப
எஃகு எறி பிணையின் மாழ்கி இறுகி மெய்ம்மறந்து சோர்ந்தாள்
#300
மோடு உடை நகரின் நீங்கி முது மரம் துவன்றி உள்ளம்
பீடு உடையவரும் உட்க பிணம் பல பிறங்கி எங்கும்
காடு உடை அளவை எல்லாம் கழுகு இருந்து உறங்கும் நீழல்
பாடு உடை மயில் அம் தோகை பைபய வீழ்ந்தது அன்றே

மேல்

#301
மஞ்சு சூழ்வதனை ஒத்து பிண புகை மலிந்து பேயும்
அஞ்சும் அ மயானம் தன்னுள் அகில் வயிறு ஆர்ந்த கோதை
பஞ்சி மேல் வீழ்வதே போல் பல் பொறி குடுமி நெற்றி
குஞ்சி மா மஞ்ஞை வீழ்ந்து கால் குவித்து இருந்தது அன்றே
#302
வார் தரு தடம் கண் நீர் தன் வன முலை நனைப்ப ஏல் பெற்று
ஊர் கடல் அனைய காட்டுள் அச்சம் ஒன்றானும் உள்ளாள்
ஏர் தரு மயில் அம் சாயல் இறைவனுக்கு இரங்கி ஏங்கி
சோர் துகில் திருத்தல் தேற்றாள் துணை பிரி மகன்றில் ஒத்தாள்
#303
உண்டு என உரையில் கேட்பார் உயிர் உறு பாவம் எல்லாம்
கண்டு இனி தெளிக என்று காட்டுவாள் போல ஆகி
விண் தொட நிவந்த கோயில் விண்ணவர் மகளின் சென்றாள்
வெண்_தலை பயின்ற காட்டுள் விளங்கு_இழை தமியள் ஆனாள்
#304
இருள் கெட இகலி எங்கும் மணி விளக்கு எரிய ஏந்தி
அருள் உடை மனத்த ஆகி அணங்கு எலாம் வணங்கி நிற்ப
பொரு கடல் பருதி போல பொன் அனான் பிறந்த-போழ்தே
மருள் உடை மாதர் உற்ற மம்மர் நோய் மறைந்தது அன்றே
#305
பூம் கழல் குருசில் தந்த புதல்வனை புகன்று நோக்கி
தேம் கமழ் ஓதி திங்கள் வெண் கதிர் பொழிவதே போல்
வீங்கு இள முலைகள் விம்மி திறந்து பால் பிலிற்ற ஆற்றாள்
வாங்குபு திலகம் சேர்த்தி திலகனை திருந்த வைத்தாள்
#306
கறை பன்னீர் ஆண்டு உடன் விடும்-மின் காமர் சாலை தளி நிறும்-மின்
சிறை செய் சிங்கம் போல் மடங்கி சேரா மன்னர் சினம் மழுங்க
உறையும் கோட்டம் உடன் சீ-மின் ஒண் பொன் குன்றம் தலை திறந்திட்டு
இறைவன் சிறுவன் பிறந்தான் என்று ஏற்பார்க்கு ஊர்-தோறு உய்த்து ஈ-மின்
#307
மாடம் ஓங்கும் வள நகருள் வரம்பு இல் பண்டம் தலை திறந்திட்டு
ஆடை செம்பொன் அணிகலங்கள் யாவும் யாரும் கவர்ந்து எழு நாள்
வீடல் இன்றி கொள பெறுவார் விலக்கல் வேண்டா வீழ்ந்தீர்க்கு
கோடி மூன்றோடு அரை செம்பொன் கோமான் நல்கும் என அறை-மின்
#308
அரும் பொன் பூணும் ஆரமும் இமைப்ப கணிகள் அகன் கோயில்
ஒருங்கு கூடி சாதகம் செய்து ஒகை அரசர்க்கு உடன் போக்கி
கரும் கை களிறும் கம்பலமும் காசும் கவிகள் கொள வீசி
விரும்ப பிறப்பாய் வினை செய்தேன் காண இஃது ஓஒ பிறக்கும் ஆ
#309
வெம் வாய் ஓரி முழவு ஆக விளிந்தார் ஈமம் விளக்கு ஆக
ஒவ்வா சுடுகாட்டு உயர் அரங்கில் நிழல் போல் நுடங்கி பேய் ஆட
எவ்வாய் மருங்கும் இருந்து இரங்கி கூகை குழறி பாராட்ட
இவ்வாறு ஆகி பிறப்பதோ இதுவோ மன்னர்க்கு இயல் வேந்தே
#310
பற்றா மன்னன் நகர் புறமால் பாயல் பிணம் சூழ் சுடுகாடால்
உற்றார் இல்லா தமியேனால் ஒதுங்கல் ஆகா தூங்கு இருளால்
மற்று இ ஞாலம் உடையாய் நீ வளரும் ஆறும் அறியேனால்
எற்றே இது கண்டு ஏகாதே இருத்தியால் என் இன் உயிரே
#311
பிறந்த நீயும் பூம் பிண்டி பெருமான் அடிகள் பேர் அறமும்
புறந்தந்து என்பால் துயர் கடலை நீந்தும் புணை மற்று ஆகா-கால்
சிறந்தார் உளரேல் உரையாயால் சிந்தாமணியே கிடத்தியால்
மறம் கூர் நும் கோன் சொல் செய்தேன் மம்மர் நோயின் வருந்துகோ
#312
அந்தோ விசயை பட்டன கொண்டு அகங்கை புறங்கை ஆனால் போல்
கந்தார் களிற்று தம் கோமான் கழிய மயில் ஓர் மயில் ஊர்ந்து
வந்தாள் போல புறம் காட்டுள் வந்தாள் தமியே என மரங்கள்
சிந்தித்து இரங்கி அழுவன போல் பனி சேர் கண்ணீர் சொரிந்தனவே
#313
அடர் பொன் பைம் பூண் அரசு அழிய அரும் பொன் புதல்வன் பெற்று இருந்த
இடர் கொள் நெஞ்சத்து இறைவியும் இரும் கண் ஞாலத்து இருள் பருகி
சுடர் போய் மறைய துளங்கு ஒளிய குழவி மதி பெற்று அகம் குளிர்ந்த
படர் தீர் அந்தி அது ஒத்தாள் பணை செய் கோட்டு படா முலையாள்
#314
தேன் அமர் கோதை மாதர் திருமகன் திறத்தை ஓராள்
யான் எவன் செய்வல் என்றே அவலியா இருந்த-போழ்தில்
தான் அமர்ந்து உழையின் நீங்கா சண்பக மாலை என்னும்
கூனியது உருவம் கொண்டு ஓர் தெய்வதம் குறுகிற்று அன்றே
#315
விம்முறு விழும வெம் நோய் அவண் உறை தெய்வம் சேர
கொம்மென உயிர்த்து நெஞ்சில் கொட்புறு கவலை நீங்க
எம் அனை தமியை ஆகி இ இடர் உற்றது எல்லாம்
செம் மலர் திருவின் பாவாய் யான் செய்த பாவம் என்றாள்
#316
பூவினுள் பிறந்த தோன்றல் புண்ணியன் அனைய நம்பி
நாவினுள் உலகம் எல்லாம் நடக்கும் ஒன்றாது நின்ற
கோவினை அடர்க்க வந்து கொண்டு போம் ஒருவன் இன்னே
காவி அம் கண்ணினாய் யாம் மறைவது கருமம் என்றாள்
#317
சின் மணி மழலை நாவின் கிண்கிணி சிலம்பொடு ஏங்க
பன் மணி விளக்கின் நீழல் நம்பியை பள்ளி சேர்த்தி
மின் மணி மிளிர தேவி மெல்லவே ஒதுங்குகின்றாள்
நன் மணி ஈன்று முந்நீர் சலஞ்சலம் புகுவது ஒத்தாள்
#318
ஏதிலார் இடர் பல் நூறு செய்யினும் செய்த எல்லாம்
தீது இல ஆக என்று திரு முலை பால் மடுத்து
காதலான் பெயர் சுமந்த கதிர் மணி ஆழி சேர்த்தி
கோதை தாழ் குழலினாளை கொண்டு போய் மறைய நின்றாள்
#319
நல் வினை செய்து இலாதேன் நம்பி நீ தமியை ஆகி
கொல் வினை மாக்கள் சூழ கிடத்தியோ என்று விம்மா
புல்லிய கொம்பு தான் ஓர் கருவிளை பூத்ததே போல்
ஒல்கி ஓர் கொம்பு பற்றி ஒரு கணால் நோக்கி நின்றாள்
#320
நாளொடு நடப்பது வழுக்கி மின்னொடு ஊர்
கோளொடு குளிர் மதி வந்து வீழ்ந்து என
காளக உடையினன் கந்து நாமனும்
வாளொடு கனை இருள் வந்து தோன்றினான்
#321
வாள் கடைந்து அழுத்திய கண்ணினார்கள் தம்
தோள் கடைந்து அழுத்திய மார்பன் தூங்கு இருள்
நீள் சுடர் நிழல் மணி கிழிப்ப நோக்கினான்
ஆள் கடிந்து அணங்கிய அணங்கு காட்டுளே
#322
அருப்பு இள முலையவர்க்கு அனங்கன் ஆகிய
மருப்பு இளம் பிறை நுதல் மதர்வை வெம் கதிர்
பரப்புபு கிடந்து என கிடந்த நம்பியை
விருப்பு உள மிகுதியின் விரைவின் எய்தினான்
#323
புனை கதிர் திரு மணி பொன் செய் மோதிரம்
வனை மலர் தாரினான் மறைத்து வண் கையால்
துனை கதிர் முகந்து என முகப்ப தும்மினான்
சினை மறைந்து ஒரு குரல் சீவ என்றதே
#324
என்பு எழுந்து உருகுபு சோர ஈண்டிய
அன்பு எழுந்து அரசனுக்கு அவலித்து ஐயனை
நுன் பழம் பகை தவ நூறுவாய் என
இன் பழ கிளவியின் இறைஞ்சி ஏத்தினாள்
#325
ஒழுக்கு இயல் அரும் தவத்து உடம்பு நீங்கினார்
அழிப்ப அரும் பொன் உடம்பு அடைந்தது ஒப்பவே
வழுக்கிய புதல்வன் அங்கு ஒழிய மா மணி
விழு தகு மகனொடும் விரைவின் ஏகினான்
#326
மின் அடு கனை இருள் நீந்தி மேதகு
பொன் உடை வள நகர் பொலிய புக்க பின்
தன் உடை மதி சுட தளரும் தையலுக்கு
இன் உடை அருள் மொழி இனிய செப்பினான்
#327
பொருந்திய உலகினுள் புகழ் கண் கூடிய
அருந்ததி அகற்றிய ஆசு இல் கற்பினாய்
திருந்திய நின் மகன் தீதின் நீங்கினான்
வருந்தல் நீ எம் மனை வருக என்னவே
#328
கள் அலைத்து இழிதரும் களி கொள் கோதை-தன்
உள் அலைத்து எழு தரும் உவகை ஊர்தர
வள்ளலை வல் விரைந்து எய்த நம்பியை
வெள் இலை வேலினான் விரகின் நீட்டினான்
#329
சுரி முக வலம்புரி துவைத்த தூரியம்
விரி முக விசும்பு உற வாய் விட்டு ஆர்த்தன
எரி முக நித்திலம் ஏந்தி சேந்த போல்
கரி முக முலையினார் காய் பொன் சிந்தினார்
#330
அழுகுரல் மயங்கிய அல்லல் ஆவணத்து
எழு கிளை மகிழ்ந்து எமது அரசு வேண்டினான்
கழி பெரும் காதலான் கந்து நாமன் என்று
உழிதரு பெரு நிதி உவப்ப நல்கினான்
#331
திருமகன் பெற்று என செம்பொன் குன்று என
பெரு நல நிதி தலை திறந்து பீடு உடை
இரு நிலத்து இரவலர்க்கு ஆர்த்தி இன்னணம்
செரு நிலம் பயப்பு உற செல்வன் செல்லுமே
#332
நல் உயிர் நீங்கலும் நல் மாண்பு உடையது ஓர்
புல் உயிர் தன்னொடு நின்றுழி புல்லுயிர்
கல் உயிர் காட்டில் கரப்ப கலம் கவிழ்த்து
அல்லல் உற்றாள் உற்றது ஆற்ற உரைப்பாம்
#333
பொறி அறு பாவையின் பொம்மென விம்மி
வெறி உறு கோதை வெறு நிலம் எய்த
இறு முறை எழுச்சியின் எய்துவது எல்லாம்
நெறிமையில் கூற நினைவின் அகன்றாள்
#334
பெரு மகற்கு ஆக்கம் பிறழ்வு இன்றி கேட்டே
திருமகள் தான் இனி செய்வதை எல்லாம்
ஒரு மனத்து அன்னாய் உரை எனலோடும்
தெரு மரு தெய்வதம் செப்பியது அன்றே
#335
மணி அறைந்து அன்ன வரி அறல் ஐம்பால்
பணி வரும் கற்பின் படை மலர் கண்ணாய்
துணி இருள் போர்வையில் துன்னுபு போகி
அணி மணல் பேர் யாற்று அமரிகை சார்வாம்
#336
அமரிகைக்கு ஓசனை ஐம்பது சென்றால்
குமரி கொடி மதில் கோபுர மூதூர்
தமர் இயல் ஓம்பும் தரணி திலகம்
நமர் அது மற்று அது நண்ணலம் ஆகி
#337
வண்டார் குவளைய வாவியும் பொய்கையும்
கண்டார் மனம் கவர் காவும் கஞலிய
தண்டாரணியத்து தாபத பள்ளி ஒன்று
உண்டு ஆங்கு அதனுள் உறைகுவம் என்றாள்
#338
பொருள் உடை வாய் மொழி போற்றினள் கூற
மருள் உடை மாதர் மதித்தனள் ஆகி
அருள் உடை மாதவர் அ திசை முன்னி
இருள்-இடை மின்னின் இலங்கு_இழை சென்றாள்
#339
உருவ மா மதி வாள் முகத்து ஓடிய
இருவிலும் எறி மா மகர குழை
திருவிலும் இவை தே மொழி மாதரை
பொரு இல் நீள் அதர் போக்குவ போன்றவே
#340
சிலம்பு இரங்கி போற்று இசைப்ப திருவில் கை போய் மெய் காப்ப
இலங்கு பொன் கிண்கிணியும் கலையும் ஓங்க எறி வேல் கண்
மலங்க மணி மலர்ந்த பவள கொம்பு முழு மெய்யும்
சிலம்பி வலந்தது போல் போர்வை போர்த்து செல்லுற்றாள்
#341
பஞ்சி அடர் அனிச்சம் நெருஞ்சி ஈன்ற பழமால் என்று
அஞ்சும் மலர் அடிகள் அரம் கண்டு அன்ன அரும் காட்டுள்
குஞ்சித்து அசைந்து அசைந்து குருதி கான்று வெய்து உயிரா
வஞ்சி இடை நுடங்க மயில் கை வீசி நடந்ததே
#342
தடம் கொள் தாமரை தாது உறை தேவியும்
குடங்கை போல் உண் கண் கூனியும் கூர்ம் பரல்
கடங்களும் மலையும் கடந்து ஆர் புனல்
இடம் கொள் ஆற்றகம் எய்தினர் என்பவே
#343
எல்லை எய்திய ஆயிர செம் கதிர்
மல்லல் மா கடல் தோன்றலும் வைகிருள்
தொல்லை நல்வினை முற்பட தோன்றிய
அல்லல் வெவ்வினை போல அகன்றதே
#344
நுணங்கு நுண் கொடி மின் ஓர் மழை மிசை
மணம் கொள் வார் பொழில் வந்து கிடந்தது ஒத்து
அணங்கு நுண் துகில் மேல் அசைந்தாள்-அரோ
நிணம் கொள் வை நுதி வேல் நெடும் கண்ணினாள்
#345
வைகிற்று எம் அனை வாழிய போழ்து என
கையினால் அடி தைவர கண் மலர்ந்து
ஐயவோ என்று எழுந்தனள் ஆய் மதி
மொய் கொள் பூமி முளைப்பது போலவே
#346
தூவி அம் சிறை அன்னமும் தோகையும்
மேவி மென் புனம் மான் இனம் ஆதியா
நாவி நாறு எழில் மேனியை கண்டுகண்டு
ஆவித்து ஆற்றுகிலாது அழுதிட்டவே
#347
கொம்மை வெம்முலை போதின் கொடி அனாள்
உம்மை நின்றது ஓர் ஊழ்வினை உண்மையால்
இம்மை இ இடர் உற்றனள் எய்தினாள்
செம்மை மாதவர் செய் தவ பள்ளியே
#348
வாள் உறை நெடும் கணாளை மாதவ மகளிர் எல்லாம்
தோள் உற புல்லுவார் போல் தொக்கு எதிர்கொண்டு புக்கு
தாள் உறு வருத்தம் ஓம்பி தவ நெறி படுக்கல் உற்று
நாள் உற திங்கள் ஊர நல் அணி நீக்குகின்றார்
#349
திருந்து தகர செம் நெருப்பில் தேன் தோய்த்து அமிர்தம் கொள உயிர்க்கும்
கரும் காழ் அகிலின் நறும் புகையில் கழுமி கோதை கண் படுக்கும்
திருந்து நான குழல் புலம்ப தேனும் வண்டும் இசை புலம்ப
அரும் பொன் மாலை அலங்கலோடு ஆரம் புலம்ப அகற்றினாள்
#350
திங்கள் உகிரில் சொலிப்பது போல் திலகம் விரலில் தான் நீக்கி
பைம்பொன் மகர குண்டலமும் பாவை கழுத்தின் அணிகலமும்
வெம் கண் வேந்தற்கு அமிர்து ஆகி வேல் கண் பாவை பகை ஆய
அம் கண் முலையின் அணி முத்தும் அரும் பொன் பூணும் அகற்றினாள்

மேல்

#351
பஞ்சி அனைய வேய் மென் தோள் பகு வாய் மகரம் கான்றிட்ட
துஞ்சா கதிர் கொள் துணை முத்தம் தொழுதேன் உம்மை என துறந்து
அஞ்சி வருத்து நுசுப்பினாள் வளை கை உடைத்து மணி காந்தள்
அஞ்ச சிவந்த மெல் விரல் சூழ் அரும் பொன் ஆழி அகற்றினாள்
#352
பூ பெய் செம்பொன் கோடிகமும் பொன் ஆர் ஆலவட்டமும்
ஆக்கும் மணி செய் தேர்த்தட்டும் அரவின் பையும் அடும் அல்குல்
வீக்கி மின்னும் கலை எல்லாம் வேந்தன் போகி அரம்பையரை
நோக்கி நும்மை நோக்கான் நீர் நோவது ஒழி-மின் என துறந்தாள்
#353
பிடி கை போலும் திரள் குறங்கின் அணியும் நீக்கி பிணை அன்னாள்
அடி கிண்கிணியும் அம் சிலம்பும் விரல் மோதிரத்தோடு அகற்றிய பின்
கொடி பூத்து உதிர்ந்த தோற்றம் போல் கொள்ள தோன்றி அணங்கு அலற
உடுத்தாள் கல் தோய் நுண் கலிங்கம் உரவோன் சிறுவன் உயர்க எனவே
#354
பால் உடை அமிர்தம் பைம்பொன் கலத்து-இடை பாவை அன்ன
நூல் அடு நுசுப்பின் நல்லார் ஏந்தவும் நேர்ந்து நோக்கா
சேல் அடு கண்ணி காந்தள் திரு மணி துடுப்பு முன் கை
வால் அடகு அருளி செய்ய வனத்து உறை தெய்வம் ஆனாள்
#355
மெல் விரல் மெலிய கொய்த குள நெல்லும் விளைந்த ஆம்பல்
அல்லியும் உணங்கும் முன்றில் அணில் விளித்து இரிய ஆமான்
புல்லிய குழவி திங்கள் பொழி கதிர் குப்பை போலும்
நல் எழில் கவரி ஊட்ட நம்பியை நினைக்கும் அன்றே
#356
பெண்மை நாண் வனப்பு சாயல் பெரு மட மாது பேசின்
ஒண்மையின் ஒருங்கு கூடி உருவு கொண்ட அனைய நங்கை
நண்ணிய நுங்கட்கு எல்லாம் அடைக்கலம் என்று நாடும்
கண்ணிய குலனும் தெய்வம் கரந்து உரைத்து எழுந்தது அன்றே
#357
உறுதி சூழ்ந்து அவண் ஓடலின் ஆயிடை
மறுவில் வெண்குடை மன்னவன் காதல் அம்
சிறுவன் தன்மையை சேர்ந்து அறிந்து இ வழி
குறுக வம் என கூனியை போக்கினாள்
#358
நெஞ்சின் ஒத்து இனியாளை என் நீர்மையால்
வஞ்சித்தேன் என வஞ்சி அம் கொம்பு அனாள்
பஞ்சி மெல்லடி பல் கலன் ஆர்ப்ப சென்று
இஞ்சி மாநகர் தன் இடம் எய்தினாள்
#359
தானும் தன் உணர்வில் தளர்ந்து ஆற்றவும்
மானின் நோக்கி வரும் வழி நோக்கி நின்று
ஆனியம் பல ஆசையில் செல்லுமே
தேன் இயம்பும் ஓர் தேம் பொழில் பள்ளியே
#360
மட்டு அவிழ் கோதை வாள் அன உண்கண் மயில் அன்னாள்
கட்டு அழல் எவ்வம் கைம்மிக நீக்கி களிகூர
விட்டு அகல்வு ஆற்றா வேட்கையின் ஓடும் பொழுது இப்பால்
பட்டதை எல்லாம் பல்லவர் கேட்க பகர்கு உற்றேன்
#361
கூற்றம் அஞ்சும் கொல் நுனை எஃகின் இளையானும்
மாற்றம் அஞ்சும் மன்னிய கற்பின் மடவாளும்
போற்றி தந்த புண்ணியர் கூடி புகழோனை
சீற்ற துப்பின் சீவகன் என்றே பெயர் இட்டார்
#362
மேகம் ஈன்ற மின் அனையாள் தன் மிளிர் பைம் பூண்
ஆகம் ஈன்ற அம் முலை இன் பால் அமிர்து ஏந்த
போகம் ஈன்ற புண்ணியன் எய்த கணையே போல்
மாகம் ஈன்ற மா மதி அன்னான் வளர்கின்றான்
#363
அம் பொன் கொம்பின் ஆய்_இழை ஐவர் நலன் ஓம்ப
பைம்பொன் பூமி பல் கதிர் முத்து ஆர் சகடமும்
செம்பொன் தேரும் வேழமும் ஊர்ந்து நிதி சிந்தி
நம்பன் செல்லும் நாளினும் நாளும் நலம் மிக்கே
#364
பல் பூம் பொய்கை தாமரை போன்றும் பனி வானத்து
எல்லார் கண்ணும் இன்புற ஊரும் மதி போன்றும்
கொல்லும் சிங்க குட்டியும் போன்று இ உலகு ஏத்த
செல்லும் மன்னோ சீவகன் தெய்வ பகை வென்றே
#365
மணியும் முத்தும் மாசறு பொன்னும் பவளமும்
அணியும் பெய்யும் மாரியின் ஏற்பார்க்கு அவை நல்கி
கணிதம் இல்லா கற்பகம் கந்துக்கடன் ஒத்தான்
இணை வேல் உண்கண் சுநந்தையும் இன்ப கொடி ஒத்தாள்
#366
சாதி பைம்பொன் தன் ஒளி வௌவி தகை குன்றா
நீதி செல்வம் மேன்மேல் நீந்தி நிறைவு எய்தி
போதி செல்வம் பூண்டவர் ஏத்தும் பொலிவினால்
ஆதி காலத்து அந்தணன் காதல் மகன் ஒத்தான்
#367
நனம் தலை உலகில் மிக்க நல் நுதல் மகளிர் தங்கள்
மனம் தளை பரிய நின்ற மதலை மை ஆடுக என்றே
பொன் அம் கொடி இறைஞ்சி நின்று பூமகள் புலம்பி வைக
அனங்கனுக்கு அவலம் செய்யும் அண்ணல் நற்றாய் உரைத்தாள்
#368
முழவு என திரண்ட திண் தோள் மூரி வெம் சிலையினானும்
அழல் என கனலும் வாள் கண் அ வளை தோளினாளும்
மழலை யாழ் மருட்டும் தீம் சொல் மதலையை மயில் அம் சாயல்
குழை முக ஞானம் என்னும் குமரியை புணர்க்கல் உற்றார்
#369
அரும் பொனும் மணியும் முத்தும் காணமும் குறுணி ஆக
பரந்து எலா பிரப்பும் வைத்து பைம்பொன் செய் தவிசின் உச்சி
இருந்து பொன் ஓலை செம்பொன் ஊசியால் எழுதி ஏற்ப
திருந்து பொன் கண்ணியாற்கு செல்வியை சேர்த்தினாரே
#370
நாமகள் நலத்தை எல்லாம் நயந்து உடன் பருகி நல் நூல்
ஏ முதல் ஆய எல்லா படை கல தொழிலும் முற்றி
காமனும் கனிய வைத்த புலம் கரை கண்டு கண் ஆர்
பூமகள் பொலிந்த மார்பன் புவி மிசை திலகம் ஒத்தான்
#371
மின் தெளித்து எழுதி அன்ன விளங்கும் நுண் நுசுப்பின் நல்லார்
பொன் தெளித்து எழுதி அன்ன பூம் புற பசலை மூழ்கி
குன்று ஒளித்து ஒழிய நின்ற குங்கும தோளினாற்கு
கன்று ஒளித்து அகல வைத்த கறவையில் கனிந்து நின்றார்
#372
விலை பகர்ந்து அல்குல் விற்கும் வேலினும் வெய்ய கண்ணார்
முலை முகந்து இளையர் மார்பம் முரிவிலர் எழுதி வாழும்
கலை இகந்து இனிய சொல்லார் கங்குலும் பகலும் எல்லாம்
சிலை இகந்து உயர்ந்த திண் தோள் சீவகற்கு அரற்றி ஆற்றார்
#373
வான் சுவை அமிர்த வெள்ளம் வந்து இவண் தொக்கது என்ன
தான் சுவை கொண்டது எல்லாம் தணப்பு அற கொடுத்த பின்றை
தேன் சுவைத்து அரற்றும் பைம் தார் சீவககுமரன் என்ற
ஊன் சுவைத்து ஒளிறும் வேலாற்கு உறுதி ஒன்று உரைக்கல் உற்றான்
#374
நூல் நெறி வகையின் நோக்கி நுண்ணிதின் நுழைந்து தீமை
பால் நெறி பலவும் நீக்கி பருதி அம் கடவுள் அன்ன
கோன் நெறி தழுவி நின்ற குணத்தொடு புணரின் மாதோ
நால் நெறி வகையில் நின்ற நல் உயிர்க்கு அமிர்தம் என்றான்
#375
அறிவினால் பெரிய நீரார் அருவினை கழிய நின்ற
நெறியினை குறுகி இன்ப நிறை கடல் அகத்து நின்றார்
பொறி எனும் பெயர ஐ வாய் பொங்கு அழல் அரவின் கண்ணே
வெறி புலம் கன்றி நின்றார் வேதனை கடலுள் நின்றார்
#376
கூற்றுவன் கொடியன் ஆகி கொலை தொழில் கருவி சூழ்ந்து
மாற்ற அரும் வலையை வைத்தான் வைத்ததை அறிந்து நாமும்
நோற்று அவன் வலையை நீங்கி நுகர்ச்சியில் உலகம் நோக்கி
ஆற்றுற போதல் தேற்றாம் அளியமோ பெரியமே காண்
#377
பேர் அஞர் இடும்பை எல்லாம் பிளந்திடும் பிறப்பு நீக்கும்
ஆர் அமிர்து அரிதில் பெற்றாம் அதன் பயன் கோடல் தேற்றாம்
ஓரும் ஐம்பொறியும் ஓம்பி உள பகல் கழிந்த பின்றை
கூர் எரி கவரும்-போழ்தில் கூடுமோ குறித்த எல்லாம்
#378
தழங்கு குரல் முரசின் சாற்றி தத்துவம் தழுவல் வேண்டி
செழும் களியாளர் முன்னர் இருள் அற செப்பினாலும்
முழங்கு அழல் நரகின் மூழ்கும் முயற்சியர் ஆகி நின்ற
கொழும் களி உணர்வினாரை குணவதம் கொளுத்தல் ஆமோ
#379
பவழ வாய் செறுவு தன்னுள் நித்திலம் பயில வித்தி
குழவி நாறு எழுந்து காளை கொழும் கதிர் ஈன்று பின்னா
கிழவுதான் விளைக்கும் பைம் கூழ் கேட்டிரேல் பிணி செய் பன் மா
உழவிர்காள் மேயும் சீல வேலி உய்த்திடும்-மின் என்றான்
#380
சூழ் கதிர் மதியம் அன்ன சுடர் மணி பூணினானும்
வீழ் தரு கதியின் நீங்கி விளங்கு பொன் உலகத்து உய்க்கும்
ஊழ் வினை துரத்தலானும் உணர்வு சென்று எறித்தலானும்
ஆழ் கடல் புணையின் அன்ன அறிவரன் சரண் அடைந்தான்
#381
காட்சி நல் நிலையில் ஞான கதிர் மணி கதவு சேர்த்தி
பூட்சி சால் ஒழுக்கம் என்னும் வயிர தாழ் கொளுவி பொல்லா
மாட்சியில் கதிகள் எல்லாம் அடைத்த பின் வரம்பு இல் இன்பத்து
ஆட்சியில் உலகம் ஏற திறந்தனன் அலர்ந்த தாரான்
#382
நல் அறத்து இறைவன் ஆகி நால் வகை சரணம் எய்தி
தொல் அற கிழமை பூண்ட தொடு கழல் காலினாற்கு
புல் அற நெறி கண் நின்று பொருள்-வயின் பிழைத்தவாறும்
இல்லறத்து இயல்பும் எல்லாம் இருள் அற கூறி இட்டான்
#383
எரி முயங்கு இலங்கு வை வேல் இளையவர் குழாத்தின் நீங்கி
திரு முயங்கு அலங்கல் மார்பின் சீவகன் கொண்டு வேறா
விரி மலர் கண்ணி கட்டி விழைதக வேய்ந்த போலும்
தெரி மலர் காவு சேர்ந்து பிறப்பினை தெருட்டல் உற்றான்
#384
பூவையும் கிளியும் மன்னர் ஒற்று என புணர்க்கும் சாதி
யாவையும் இன்மை ஆராய்ந்து அம் தளிர் பிண்டி நீழல்
பூ இயல் தவிசின் உச்சி பொலிவினோடு இருந்த-போழ்தில்
ஏ இயல் சிலையினானை இ பொருள் கேண்மோ என்றான்
#385
வையகம் உடைய மன்னன் சச்சந்தன் அவற்கு தேவி
பை விரி பசும்பொன் அல்குல் பைம்_தொடி விசையை என்பாள்
செய் கழல் மன்னன் தேர்ந்து தேவியை பொறியில் போக்கி
மையல் கொள் நெஞ்சில் கல்லா மந்திரி விழுங்கப்பட்டான்
#386
புலம்பொடு தேவி போகி புகற்கு அரும் காடு நண்ணி
வலம்புரி உலகம் விற்கும் மா மணி ஈன்றது என்ன
இலங்கு இழை சிறுவன் தன்னை பயந்து பூம் தவிசின் உச்சி
நலம் புரி நங்கை வைத்து நல் அறம் காக்க என்றாள்
#387
வானத்தின் வழுக்கி திங்கள் கொழுந்து மீன் குழாங்கள் சூழ
கானத்தில் கிடந்ததே போல் கடல் அகம் உடைய நம்பி
தானத்து மணியும் தானும் இரட்டுற தோன்றினானே
ஊனத்தில் தீர்ந்த சீர்த்தி உத்திரட்டாதியானே
#388
அரும் தவன் முந்து கூற அலங்கல் வேல் நாய்கன் சென்று
பொருந்துபு சிறுவன் கொண்டு பொலிவொடு புகன்று போக
திருந்திய நம்பி ஆர தும்மினன் தெய்வம் வாழ்த்திற்று
அரும் பொனாய் கேண்மோ என்றான் அலை கடல் விருப்பில் கொண்டாள்
#389
கரியவன் கன்னற்கு அன்று பிறப்பினை தேற்றி ஆங்கு அ
பெரியவன் யாவன் என்ன நீ என பேசலோடும்
சொரி மலர் தாரும் பூணும் ஆரமும் குழையும் சோர
திரு மலர் கண்ணி சிந்த தெருமந்து மயங்கி வீழ்ந்தான்
#390
கற்பகம் கலங்கி வீழ்ந்த வண்ணம் போல் காளை வீழ
சொல் பகர் புலவன் வல்லே தோன்றலை சார்ந்து புல்லி
நல் பல குழீஇய தம்மால் நவை அற தேற்ற தேறி
கல் புனை திணி திண் தோளான் கவலை நீர் கடலுள் பட்டான்
#391
இனையை நீ ஆயது எல்லாம் எம்மனோர் செய்த பாவம்
நினையல் நீ நம்பி என்று நெடும் கண் நீர் துடைத்து நீவி
புனை இழை மகளிர் போல புலம்பல் நின் பகைவன் நின்றான்
நினைவு எலாம் நீங்குக என்ன நெடும் தகை தேறினானே
#392
மலை பக இடிக்கும் சிங்கம் மடங்கலின் முழங்கி மா நீர்
அலை கடல் திரையின் சீறி அவன் உயிர் பருகல் உற்று
சிலையொடு பகழி ஏந்தி கூற்று என சிவந்து தோன்றும்
இலை உடை கண்ணியானை இன்னணம் விலக்கினானே
#393
வேண்டுவல் நம்பி யான் ஓர் விழுப்பொருள் என்று சொல்ல
ஆண் தகை குரவீர் கொண்ம்-மின் யாது நீர் கருதிற்று என்ன
யாண்டு நேர் எல்லை ஆக அவன் திறத்து அழற்சி இன்மை
வேண்டுவல் என்று சொன்னான் வில்_வலான் அதனை நேர்ந்தான்
#394
வெவ்வினை வெகுண்டு சாரா விழு_நிதி அமிர்தம் இன் நீர்
கவ்விய எஃகின் நின்ற கயக்கம் இல் நிலைமை நோக்கி
அவ்வியம் அகன்று பொங்கும் அழல் படு வெகுளி நீக்கி
இ இயல் ஒருவற்கு உற்றது இற்றென கிளக்கல் உற்றான்
#395
வான் உறை வெள்ளி வெற்பின் வாரணவாசி மன்னன்
ஊன் உறை பருதி வெள் வேல் உலோகமாபாலன் என்பான்
தேன் உறை திருந்து கண்ணி சிறுவனுக்கு அரசு நாட்டி
பால் நிற குருகின் ஆய்ந்து பண்ணவர் படிவம் கொண்டான்
#396
வெம் சினம் குறைந்து நீங்க விழு தவம் தொடங்கி நோற்கும்
வஞ்சம் இல் கொள்கையாற்கு பாவம் வந்து அடைந்தது ஆக
குஞ்சரம் முழங்கு தீயில் கொள்கையின் மெலிந்து இ மூதூர்
மஞ்சு தோய் குன்றம் அன்ன மாட வீட்டு அகம் புகுந்தான்
#397
உரை விளையாமை மைந்தன் கேட்கிய உவந்து நோக்கி
வரை விளையாடு மார்பன் யார் அவன் வாழி என்ன
விரை விளையாடும் தாரோய் யான் என விரும்பி தீம் பால்
திரை விளை அமிர்தம் அன்ன கட்டுரை செல்க என்றான்
#398
பூ தின்று புகன்று சேதா புணர் முலை பொழிந்த தீம் பால்
நீத்து அற செல்ல வேவித்து அட்ட இன் அமிர்தம் உண்பான்
பாத்தரும் பசும்பொன் தாலம் பரப்பிய பைம்பொன் பூமி
ஏத்தரும் தவிசின் நம்பி தோழரொடு ஏறினானே
#399
புடை இரு குழையும் மின்ன பூம் துகில் செறிந்த அல்குல்
நடை அறி மகளிர் ஏந்த நல் அமிர்து உண்ணும்-போழ்தின்
இடை கழி நின்ற என்னை நோக்கி போந்து ஏறுக என்றான்
கடல் கெழு பருதி அன்ன பொன் கலத்து எனக்கும் இட்டார்
#400
கை கவி நறு நெய் பெய்து கன்னல் அம் குடங்கள் கூட்டி
பெய் பெய் என்று உரைப்ப யானும் பெரும் கடல் வெள்ளி குன்றம்
பெய்து தூர்க்கின்ற வண்ணம் விலா புடை பெரிதும் வீங்க
ஐயன் அது அருளினால் யான் அந்தணர் தொழிலன் ஆனேன்
#401
சுரும்பு உடை அலங்கல் மாலை சுநந்தையும் துணைவன்-தானும்
விரும்பினர் எதிர்கொண்டு ஓம்ப வேழ வெம் தீயின் நீங்கி
இருந்தனன் ஏம முந்நீர் எறி சுறவு உயர்த்த தோன்றல்
கரும்பு உடை காளை அன்ன காளை நின் வலைப்பட்டு என்றான்
#402
நிலம் பொறுக்கலாத செம்பொன் நீள் நிதி நுந்தை இல்லம்
நலம் பொறுக்கலாத பிண்டி நான் முகன் தமர்கட்கு எல்லாம்
உலம் பொறுக்கலாத தோளாய் ஆதலால் ஊடு புக்கேன்
கலம் பொறுக்கலாத சாயல் அவர் உழை நின்னை கண்டேன்
#403
ஐயனை கண்ணில் காண யானை_தீ அதகம் கண்ட
பை அணல் நாகம் போல வட்க யான் பெரிதும் உட்கி
தெய்வம்-கொல் என்று தேர்வேற்கு அமிர்து உலாய் நிமிர்ந்ததே போல்
மொய் குரல் முரசம் நாணும் தழங்கு குரல் முழங்க கேட்டேன்
#404
கோட்டு இளம் திங்கள் சூழ்ந்து குலவிய திருவில் போல
மோட்டு ஒளி முத்தம் சூழ்ந்து முருகு கொப்பளிக்கும் தாரோய்
கேட்டு அள பரிய சொல்லும் கிளர் ஒளி வனப்பும் நின்னை
சேட்டு இளம் சிங்கம் அன்னாய் சாதகம் செய்த என்றான்
#405
கோள் இயங்கு உழுவை அன்ன கொடும் சிலை உழவன் கேட்டே
தாள் இயல் தவங்கள் தாயா தந்தை நீ ஆகி என்னை
வாள் இயங்கு உருவ பூணோய் படைத்தனை வாழி என்ன
மீளி அம் களிறு அனாய் யான் மெய்ந்நெறி நிற்பல் என்றான்
#406
மறு அற மனையின் நீங்கி மா தவம் செய்வல் என்றால்
பிற அறம் அல்ல பேசார் பேரறிவு உடைய நீரார்
துறவறம் புணர்க என்றே தோன்றல் தாள் தொழுது நின்றான்
நறவு அற மலர்ந்த கண்ணி நல் மணி வண்ணன் அன்னான்
#407
கை வரை அன்றி நில்லா கடும் சின மடங்கல் அன்னான்
தெவ்வரை செகுக்கும் நீதி மனத்து அகத்து எழுதி செம்பொன்
பை விரி அல்குலாட்கும் படு கடல் நிதியின் வைகும்
மை வரை மார்பினாற்கும் மனம் உற தேற்றி இட்டான்
#408
அழல் உறு வெண்ணெய் போல அகம் குழைந்து உருகி ஆற்றாள்
குழல் உறு கிளவி சோர்ந்து குமரனை தமியன் ஆக
நிழல் உறு மதியம் அன்னாய் நீத்தியோ எனவும் நில்லான்
பழவினை பரிய நோற்பான் விஞ்சையர் வேந்தன் சென்றான்





No comments:

Post a Comment