அறம் பரப்பிய ஆசாரியர்கள்

அறம் பரப்பிய ஆசாரியர்கள்   🙏                               
 --------------------------------------------------------                                             

நூலாசிரியர். சல்லேகன சமாதி அடைந்த, பூஜ்ய ஸ்ரீ கஜபதிசாகர் மகராஜுக்கு நமோஸ்து🙏                            

நூல் வெளிவர தங்கள்  உழைப்பை நல்கி அறப்பெருமையை ஆற்றிய அனைத்து நல் உள்ளங்களுக்கு வணக்கம்! 🙏                          

--------------------------------------------------------                                            

 சிறு சிறு தொடராக பதிவிட்டால் அனைவரும் படித்து ஆன்ம  நலம் பெறமுடியும் என்பதால் பதிவிடுகிறேன். 🙏  
              
--------------------------'---------------''------------                                            
வேதங்கள்  நான்கு.                    
----------------------------------------------       

ஜைன அறநூல்களின் 'பெரும்  பிரிவுகள்' அல்லது 'மகா அதிகாரங்களே' வேதங்கள் ஆகும். அவை நான்கு. நான்கு வேதங்களும் வடமொழியில் 'பிரதமானு யோகம்' 'கரணானு யோகம்' 'சரணானு யோகம்' 'திரவ்யானு யோகம்'   என்று அழைக்கப்படுகின்றன.       *                'பிரதம'   என்றால்  தொடக்கமற்ற தீக்காட்சியாளன்.அவனுக்காக அறநூல் பிரிவு பிரதமானு யோகம் என்று கோமடசாரம் முதல் வேதத்தில் விளக்குகிறது. முதல் வேதத்தில் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள், பன்னிரண்டு சக்கரவர்த்திகள், ஒன்பது பலதேவர்கள், ஒன்பது வாசுதேவர்கள் ஒன்பது பிரதி வாசுதேவர்கள் மகேஸ்வர கணதரர், சீவகன், ஜம்புநாமர் முதலிய நல்லோர்களின் சரித்திரங்கள் கூறப்படுகின்றன.தத்துவ ஞானிகளுக்குப் பெரியோர்களின் சரித்திரம் எடுத்துக்காட்டாகும் அமைகிறது. தீய, நல்ல எண்ணங்களின் பயனடையும் அவர்கள் அறிகிறார்கள்.                                   *         கரணானுயோகம் என்ற இரண்டாம் வேதத்தில்  உலகில் அமைப்பு  விளக்கப்படுகிறது.                     சரணானுயோகம்  என்ற மூன்றாம் வேதத்தில் இல்லறம் துறவறங்கள்  விளக்கப்படுகின்றன..  நான்கு வேடங்களில் தலை சிறந்ததான திரவ்யானு யோகம் என்ற நான்காம் வேதத்தில் ஆறு பொருள்கள், ஏழு தத்துவங்கள் ஊழ்வினை நிலைகள் முதலியன விளக்கப்படுகிறது படுகின்றன.(வளரும்)⁠⁠⁠⁠ 


 ~~~~~~~~~~~2~~~~~~~~~~~~~                                           

 1.பிரதமானு யோகம்.                
-------------------------------------------            .       

ஜினசேனாசாரியரால்  வடமொழியில் இயற்றப் பபட்டுள்ள மகாபுராணம் தீர்த்தங்கரர்கள், சக்கரவர்த்திகள் முதலானவர்களின் சரித்திரங்களைக் கூறுகிறது. மாபெரும் பெரியோர்களின் புகழ்மிக்க வரலாறுகள் அடங்கியது அல்லது மாபெரும் பெரியோர்களான தீர்த்தங்கரர்களால் கூறப்பட்ட வரலாறுகள் அடங்கியது அல்லது மாபெரும் நன்மையான வீடுபேற்றை அடைய துணை செய்வது எனும் பொருளில் புராணம் என்று அழைக்கப் படுகிறது. மகாபுராணமே முதல் வேதம் ஆகும். அதன் தமிழாக்கமான ஸ்ரீ புராணமும் முதல் வேதமாகிறது. இதில் கூறப் பட்டுள்ள நல்லறக் கதைகள் வீடுபேறடையும் வழிகளைக் கூறுவனவாக அமைகின்றன. பிறவிச் சுழற்சியில் வெறுப்பும் அச்சமும் கொள்ளச் செய்கிறது இந்நூல்.                                   .                   அறம் பொருள் இன்பங்களைக் கூறுவதே கதை என்று கூறப்படுகிறது. அறத்தின் பயனைக் கூறப் பொருளும் இன்பமும் கூட விளக்கப்பட வேண்டும்.  பொருள், இடம், காலம், வீட்டு நெறி, எண்ண நிலை (பாவம்),உயர்ந்தபயன், கதை ஆகிய ஏழு உறுப்புகளை யுடையதே நல்ல கதையாகும்.                             .   பொருள்: உயிர்ப் பொருள்,உருவப் பொருள், தருமப் பொருள், அதருமப் பொருள், ஆகாயப் பொருள், காலப் பொருள் என ஆறாகும். இடம்; மேல், கீழ், நடு  ஆகிய மூன்றுலகமும் இடம் ஆகும்.  காலம்; இறந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் மூன்றுமே காலம் ஆகும். வீட்டு நெறி;  தீர்த்தங்கரருடைய வரலாறே வீட்டு நெறறியாகும் ; எண்ண நிலை;  வினைகளின் தணிவும்  தணிவொடு அழிவும்  அல்லது அழிவிள் விளைவாகத் தோன்றும்  உணர்வு  நிலையே பாவம்  எனப்படும்  எண்ண  நிலை  ஆகும். பயன்:-  வீடு பேறு .


------------------------3------------------------

  உலகம் தோற்றக் கேடற்றது.

             இந்த உலகம் தோற்றமும் அழிவும் இல்லாதது. சிலர் உலகம் யாராவது ஒருவரால் படைக்கப் பட்டதாகவே இருக்க முடியும் என்கின்றனர். அப்படியானால் உலகைப் படைத்த அவரும் ஒருவரால் படைக்கப் பட்டவராகவே இருக்க முடியும். உலகைப் படைத்தவரைப் படைத்தவரும் கூட ஒருவரால் படைக்கப் பட்டவராகவே இருக்க வேண்டும். மேலும் அவரும் வேறு ஒருவரால் படைக்கப் பட்டவராகவே இருக்க வேண்டும். இப்படியே முடிவின்றிக் கூறவேண்டி வரும். அது முடிவு பெறாமை எனும் குற்றமாகும்.

                 உலகில் எதுவும் காரணப் பொருள் இல்லாமல் செய்யப் படுவதில்லை. எடுத்துக் காட்டாக மண் இல்லாமல் பானை அமையாது. அதனால் உலகைப் படைத்தவனாகக் கருதப் படும் ஈசுவரனும் காரணப் பொருள் இல்லாமல் உலகை எப்படிப் படைக்க முடியும்? இதற்கு ஈசுவரன் முதலில் காரணப் பொருளைப் படைத்துவிட்டே  பின் உலகைப் படைத்தான் என்றால் அதுவும் சரியில்லை. இங்கும் முடிவு பெறாமை எனும் குற்றமே வருகிறது. எப்படியெனில் காரணப் பொருளைச் செய்வதற்கும் மற்றொரு காரணப் பொருள் தேவைப் படுகிறது. காரணப் பொருள் தனக்குத் தானாகவே அதாவது இயற்கையாகவே கிடக்கிறது என்றால் உலகமும் அவ்வாறே தனக்குத் தானாகவே அமைகிறது. அதைப் படைக்க எவரும் தேவை இல்லை என்று கருத வேண்டும்.(வளரும்)🙏

----------------------4-----------------------------

 காலப் பிரிவுகள்

         வளர்பிறை  தேய்பிறையையும் , தேய்பிறை  வளர்பிறையையும், ஒன்றையொன்று தொடர்வது போல்  தொடக்கமற்ற காலத்திலிருந்தே  'உத்சர்ப்பிணியும்'(ஏறு காலமும்) 'அவசர்ப் பிணியும்'(இறங்கு காலமும்) ஒன்றை யொன்று தொடர்ந்து வருகின்றன.

        ஏறுகாலம் மக்களது குறைந்த அகவையாகிய 16 ஆண்டும், குறைந்த உயரமாகிய ஒரு முழத்தோடும் தொடங்கி முடிவில் மூன்று பல்லம் அகவையும் 6000 வில் உயரத்தையும் அடையும் காலமாகும். இதற்கு ஏறு காலத்தின் கால அளவாகிய பத்துக் கோடாகோடி கடற்காலம் ஆகிறது. மேருமந்தர புராணத்தில் கடற்காலம் இவ்வாறு விளக்கப் பட்டிருக்கிறது.  'எண்பத்து நான்கு நூறாயிரம்' ஆண்டுகள் கொண்டது ஒரு பூர்வாங்கம். எண்பத்து நான்கு நூறாயிரம் பூர்வாங்கள்  கொண்டது ஒரு 'பூர்வம்'.  எண்ணிக்கையில்லா பூர்வங்கள் கொண்டது ஒரு 'பல்லம்' .  பல்லம் பத்துக் கோடாகோடி கொண்டது ஒரு  'கடற்காலம்' .

         இறங்கு காலம் மக்களது மூன்று பல்லம் அகவையும் 6000 வில் உயரத்தோடும் தொடங்கி மெல்ல மெல்லக் குறைந்து குறைந்து பத்துக் கோடாகோடி கடற்கால முடிவில் 16 ஆண்டு அகவையிலும் ஒரு முழ உயரத்திலும் முடிகிறது.

      பலமில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்திருந்த விலங்குகள் அமெரிக்காவில் அப்பொழுது  உருகி ஓடிய தார் வெள்ளத்தில் மூழ்கி மடிந்தன. அவை வெளியே எடுக்கப்பட்டு கலிபோர்னியா திறந்தவெளி பொருட்காட்சிச்  சாலையில் வைக்கப் பட்டிருக்கின்றன. அவ்விலங்குகள் யானையை விழுங்கும் மிகப் பெரிய உடலுடையன என்று கூறப் படுகிறது. இது மேற்கூறிய கருத்தை உறுதி செய்கிறது.      

      இந்த ஏறுகாலமும் இறங்கு காலமும் கூடிய இருபது கோடாகோடி கடற்காலம் கொண்டது  கல்பகாலம்  என்று கூறப் படுகிறது. கடந்த காலத்தின் வரம்பின்மையால் அத்தகைய கல்ப காலங்கள் வரம்பில்லாதன  கழிந்திருக்கின்றன என்று அறியலாம். இதை உணர்த்தவே  ஸ்ரீபுராணம் நமி தீர்த்தங்கரர் சரித்திரத்தின் தொடக்கத்தில் திரவிய ஷேத்திர கால பவ பாவ பரிவர்த்தன வகைப் பிறவிச் சுழற்சிகள் கூறப்படுகின்றன.  (வளரும்)


-------------------------5-------------------------

        எடுத்துக் காட்டாகப் பவ அல்லது பிறவிவகை பரிவர்த்தனத்தை இங்கு நோக்குவோம். பரிவர்த்தனம் பரியாட்டம் என்று மேருமந்தரத்தில் கூறப்படுகிறது.

             நரகர்களின் குறைந்த அகவை 10,000 ஆண்டுகள். அதில் எத்தனை கணங்கள் இருக்கின்றனவோ அத்தனை முறை 10,000 ஆண்டுகள் அகவையோடே நரகனாகப் பிறந்து பிறகு ஒவ்வொரு கணமாக அதிக அகவையை அடைந்து 33 கடற்காலத்தில் எத்தனைக் கணங்கள் உண்டோ அத்தனையையும்  வரிசையாக நரகில் பிறந்து   முடித்து அதேமாதிரி நரர், தேவர், விலங்கு பிறவிகளின் குறைந்த அகவையில் தொடங்கி அதிக அகவை வரை கணம் கணமாக அகவையை வரிசையாக உயர்த்திக் கொண்டே  உயர்ந்த அகவைவரை பிறத்தல் ஒரு பிறவிப் பரியட்டமாகும். நரகரும் தேவரும் அடுத்த பிறவியில் முறையே நரகரும் தேவரும் ஆகார் என்பதை நினைவிற் கொள்ளவேண்டும். வரிசை தப்பி வெவ்வேறு அகவைகளில் பிறவி வகைகளில் எடுக்கும் பிறவிகள் கணக்கில் சேரா. இத்தகைய ஐவகைப் பரியட்டங்களையும் ஒவ்வோர் உயிரும் எண்ணிக்கையில்லா முறை நிறைவேற்றி இருக்கிறது என்று கூறப்படுகிறது. இவ்வாறு கால வரம்பின்மையை ஜைனம் நம் ஊகத்திற்குக் கொண்டு வருகிறது. 

         இப்பொழுது நடைபெறுவது இறங்கு காலமாகிய 'அவசர்ப்பிணி' காலமாகும். ஏறுகாலத்தைப் போன்றே இதிலும் ஆறு உட்பிரிவுகள் கூறப் படுகின்றன. முதற்காலம் நான்கு கோடா கோடி  கடற்காலம் கொண்டது. இரண்டாம் காலம் மூன்று கோடாகோடி கடற்காலமாகும். மூன்றாம் காலம் இரண்டு கோடாகோடி கடற்காலமாகும். நான்காம் காலம்  42 ஆண்டுகள் குறைந்த ஒரு கோடாகோடி கடற்காலமாகும். நாம் வாழும் இந்தக் காலம் 21 ஆயிரம் ஆண்டுகள் கொண்ட ஐந்தாம் காலமாகும். இது தொடங்கி  இதுவரை ஏறக்குறைய 2510 ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆறாம் காலம் 21,000 ஆண்டுகள் ஆகும்.
                               (வளரும்)


--------------------------6-----------------------

     முதல்  மூன்று காலங்களிலும் பத்து வகை க் கல்ப விருஷங்கள் மக்களின் தேவைகளை நிறைவு செய்கின்றன. கல்ப விருஷங்கள் தாவர வகையல்ல. மிக்க செழிப்பான மண்ணே மர உருவில் அமைந்து அம் மக்களின் தேவைகளை நிறைவு செய்கின்றன என்று மகாபுராணத்தில் கூறப்பட்டிருக்கிறது. அது எப்படி பாண்டம் துணி முதலியவற்றை அளிக்கும் என்ற கேள்விக்கு இடமில்லை. இயற்கை பலவாறாகும். இயற்கை பற்றித் தருக்கம் செய்ய இடமில்லை. எப்படி இக் காலத்திலும் பருவங்களுக்கேற்பப் பல்வேறு வகை மரங்கள்பல்வேறு வகைப் பழங்களைத் தந்து உயிரினங்களுக்கு நன்மை செய்கின்றனவோ  அதேபோல் கல்ப விருஷங்களும் பலவற்றைத் தந்து நன்மை   செய்கின்றன என்றறிய வேண்டும்  என்றும் மகாபுராணத்தில் கூறப்பட்டிருக்கிறது.

      அக்காலங்களில் பாரத நாட்டில் வாழும் மக்கள் உழைப்பின்றி வாழ்க்கை நடத்தியதால் அவர்கள் போகபூமி மக்கள் என்றும் நம் பாரதநாடு போகபூமி என்றும் கூறப்பட்டிருக்கிறது.

     இக்காலத்திலும் அறிவியலார்கள் கஞ்சி சத்து, கொழுப்பு சத்து, ப்ரோடீன் சத்துக்களை சூரிய வெப்பம் குளோரோபைல் என்ற இலைப் பச்சை, செழிப்பு மண் ஆகியவற்றிலிருந்து இயற்றி அந்தந்தத் தானியத்தில் உள்ள விகிதத்தில் கூட்டி அந்தந்தந் தானிய உருளை இயந்திரத்தால் இயற்றினால் எந்தத் தானியத்தையும் செயற்கையில்  செய்யலாம் என்கிறார்கள்.
                 ...(வளரும்)....

---------------------------7---------------------

2. கரணானு யோகம்

            ஒரு மனிதன் தன் கால்களைப் பரப்பிக் கொண்டு கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு நிற்பதைப் போன்று அமைகிறது, உலகத்தின் உருவம், இதன்  பின்புறம் எங்கும் ஏழு கயிறு கனம் உடையது. உயரம் பதினான்கு கயிறுகளாகும். முன் பக்கத்தின் அடிப்பாகத்தின் அகலம் ஏழு கயிறு ஆகும்.  அது குறைந்து கொண்டே வந்து  நடு உலகில் ஒரு கயிறு அகலத்திற்குச் சுருங்கி மறுபடியும் விரிந்து கொண்டே சென்று நடுவிலிருந்து மூன்றறை கயிறு உயரத்தில் ஐந்து கயிறு அகலமாகிறது. மறுபடியும் குறைந்து கொண்டே சென்று உச்சியில் ஒரு கயிறு அகலத்திற்குச் சுருங்கி விடுகிறது. இதன் கன அளவு 343 கயிறு கனம் என்று கூறப்படுகிறது.

             Colebrook என்பவர் தேவன் ஒருவன் கணத்துக்கு 20,57,152 யோஜனைகள் வேகத்தில் விமானத்தில் பறந்து சென்றால் அவன் ஆறு மாதங்களில் செல்லும் தூரம் ஒரு கயிறு என்று கூறியிருக்கிறார். ஒரு மகா யோஜனை 2000 மைல்கள் என்று கூறப்படுகிறது. கண்ணை மூடித் திறக்கும்  நேரத்திற்குள் எண்ணத் தொலையாத கணங்கள்  இருக்கின்றன என்று கூறப் படுகிறது. எண்ணத் தொலையாத எண் என்பது நம்மால் எழுதிப் படிக்க முடியாத எண்ணாகும்.

          அறிவியலார் ஒரு  செகண்டிற்கு  3,00,000 மீட்டர் வேகத்தில் செல்லுகின்ற ஒளி, ஒரு வருஷத்தில் அடையும் தூரத்தை ஒளி வருட தூரம் என்று கணக்கிடுகின்றனர். விண் மீன்களால் சூழப்பட்ட நாம் வாழும் நடு உலகத்தின் விட்டம் ஆயிரக் கணக்கான மில்லியன் ஒளி வருஷ நீளமுடையது என்று அறிவியலார் கருதுகின்றனர். அந்த நீளம் ஒரு கயிறு நீளத்தில் அடங்குகிறது. இதிலிருந்து நம் உலகத்தின் அளவை ஒருவாறு ஊகிக்கலாம்.


 ----------------------------8----------------------

         ஒரு கயிறு விட்டமுடைய  உலகத்தையே அறிகின்ற அறிவியலார் தேவ நரக உலகங்களை அறிய முடியாது. வானுலக இடப்பரப்பின் உயர்வே வானவர்களின் இன்ப வாழ்க்கைக்குக் காரணம். அதேபோல் நரகர் வாழும் இடத்தின் அருவருக்கத் தக்க நிலைமையே அவர்களின் துன்ப வாழ்க்கைக்குக் காரணம். நரக உலகின் ஒரு பிடி மண்ணை நாம் வாழும் பூமிக்குக் கொண்டு வந்தால் நூற்றுக் கணக்கான மைல் பரப்புகளில் வாழும் உயிரினங்கள் எல்லாம் நசித்துவிடும் என்று கூறப் படுவதிலிருந்து இதனை உய்த்துணரலாம்.

           முதல் வேதத்தில் கூறப்பட்டிருப்பது போன்று இக் காலத்தில் வானவர்கள் ஏன் வரவில்லை என்றால் அவர்கள் போற்றக்கூடிய மேன்மை தங்கிய பெரியோர்கள் இக் காலத்தில் இப்பூவுலகில் இல்லாமல் இருப்பதே காரணம் என்று கூறப் படுகிறது.

      நாம் வாழ் உலகமும் கீழாக ஏழு நரக பூமிகளும் , வானுலகத்தின் உச்சியில்  'சித்த சிலா' என்ற எட்டாம் பூமியும் இருப்பதாகக் கூறப் படுகன்றது. ஆகாயத்துச் சந்திர சூரியர்கள் போன்று தேவர்கள் மேலுலகத்தில் விமானங்களில் வாழ்பவராவார்கள்.

      ஆகாயம் வரம்பின்றி அல்லது எங்கும் பரவி இருப்பது. அதன் நடுப் பாகத்தில் ஆகாயத்தின் வரம்பில் எண்ணின் ஒரு பங்களவு உடைய உலகம் இருக்கிறது. உலகமும் ஒவ்வொரு பூமியும் மூன்று வாத வளையங்களால்  சூழப் பட்டிருக்கின்றன. வாத வளையங்கள் Atmosphere போன்றது.,.

---------------------------9----------------------- 

     நடு உலகின் நடுவில் ஜம்பூதீபம் இருக்கிறது. ஜம்பூதீபத்தில் தான் நம் பரத கண்டம் இருக்கிறது. ஜம்பூதீபத்தின் விட்டம் 1,00,000 யோஜனைகள் ஆகும். இதைச் சுற்றி இரண்டு இலட்சம் யோஜனை அகலமுடைய இலவண அதாவது உப்பு சமுத்திரம் இருக்கிறது. இலவண சமுத்திரத்தைச் சூழ்ந்து அதைவிட இரட்டிப்பு அகலமுடைய அதாவது 4,00,000 யோஜனை அகலமுடைய தாதகீகண்டதீபம் இருக்கிறது. அதைவிட இரட்டிப்பு அகலமுடைய காலோததி சமுத்திரத்தால் அது சூழப்பட்டு  இருக்கிறது. அதைச் சூழ்ந்து அதைவிட இரட்டிப்பு அகலமுடைய புஷ்கரார்த்ததீபம் இருக்கிறது. அதன் மத்தியில் வட்ட வடிவில் மானுஷோத்திர பர்வதம் சுற்றிலும் இருப்பதால் அந்தத்தீபம் இரண்டாகப் பிரிக்கப் படுகிறது. அதற்கு உட்புறத்தில் உள்ள இரண்டரை தீபங்களில் தான் மக்கள் வாழ முடியும். அதற்கு அப்பால் மக்கள் செல்லவும்  இயலாது. வாழவும் இயலாது. புஷ்கரார்த்ததீபத்திற்கு அப்பாலும் எண்ணிக்கை யில்லா தீப சமுத்திரங்கள் ஒன்றையொன்று சூழ்ந்திருக்கின்றன. கடைசி தீபம்   சுயம்பூரமண தீபம் என்று கூறப்படுகிறது.

     எண்ணிக்கையில்லா எண்ணிலும் பல பிரிவுகள் உள. அவை எல்லாம் உலக அமைப்பை விவரிக்கும் நூல்களான 'திலோய பண்ணத்தி' 'ஜம்பூத்வீபபண்ணத்தி' 'திரிலோக சாரம்'  முதலிய நூல்களில் கூறப் படுகின்றன. அதனால் கணிதம் இடம் பெறுகிறது. கரணம் என்ற சொல்லுக்குக் கணிதம் என்றும் கூறப்படுகிறது.

     உலகின் நடுவில் ஒரு கயிறு  சதுரத்தில் பதினான்கு கயிறு உயரமுடைய 'த்ரஸநாளி' என்ற குழாய் போன்ற இடம் இருக்கிறது. 'த்ரஸ் நாளிக்குள் தான் நகரும் உயிர் வகைகள் எல்லாம் வாழ்கின்றன.அதற்கு வெளியே உள்ள உயிரினங்கள் ஒரு பொறி படைத்த நுண்ணுயிர்களே. உலகில் நுண்ணுயிர்கள் இல்லாத இடமே இல்லை. 

--------------------------10----------------------

     சர்வார்த்த சித்தி என்ற தேவ விமானத்திற்கு மேலேதான் சித்தசிலை இருக்கிறது. சித்தியடைந்த உயிர்கள் சித்தசிலைக்கு மேலுள்ள உலகின் உச்சியை அடைகின்றனர். சித்தி அடைந்த ஒவ்வொரு உயிரும் தன் கடைசி மனித உடலின் அளவில் சற்றுக் குறைந்து இருக்கும். அவற்றின் உயரம் வெவ்வேறானாலும்  எல்லா சித்தர்களின் தலைகளும் சம உயரத்திலேயே உலகுச்சியில் இருக்கும். அவர்களின் உயரங்களின் வேற்றுமைகளுக்கேற்ப கால் புறத்திலேயே  வேறு பாடு காணப்படும். உயர்வும் தாழ்வுமாகிய நிலைகளுக்குக் காரணமான கோத்திர கர்மம் என்ற வினை நீக்கத்தினாலேயே சித்தர்கள் லேசு பளுவின்மையாகிற அகுருலகு குணத்தை அடைகிறார்கள். அவர் இலேசாகவே இருந்தால் உயிர்ப் பரப்பு எல்லாம் உலகுச்சியை அடைந்து  வடிவில் தட்டையாகி விடுவார். பளுவாக இருந்தால் அவர் உலகுச்சியை அடைய முடியாது. இந்த இரண்டு தன்மைகளும் அற்றநிலை இருப்பதால் தான் அவர்கள்  தங்களின் கடைசி மனித உடல் வடிவில் அங்கே இருக்கிறார்கள். பகவான் பாகுபலியின் உயரம் 525 வில். மகாவீரரின் உயரம்  7 முழம். இதற்குள் பிற சித்தர்களின் உயரங்கள் அடங்குகின்றன.

     சித்தர்களெல்லாம் அருவம் . ஆகையால்  அவர்கள் விளக்குகள்  ஒளி போல ஒருவரை ஒருவர் ஊடுருவி தனி உரிமையுடன் இருப்பர்.

      ஜம்பூதீவத்தை அடுத்து இருக்கும் தாதகீ கண்டம் முதலானவையும் நாம் வாழ்பூமி போன்ற கோளங்களாகவும் அவை ஒன்றையொன்று சூழ்ந்திருப்பதாகவும் கூறப் படுகின்றன. அவை ஒன்றையொன்று சுற்றி வரும் பாதையாகக் கருதிக் கொண்டால் இன்றைய வானியல் கருத்துடன் ஒத்துப் போகிறது என்று ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றனர். இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள இன்றைய வானியலின் அறிவு நமக்கு வேண்டும். கோள் என்ற சொல், வட்டம் என்றும் கோளம் என்றும் பொருள் படுகிறது.

                                 (வளரும்)

---------------------12--------------------------
     நிதானத்தோடு ஐந்து   
     இறப்பும் இன்றி
     முடித்தார்,
     பதானம் அறுத்தார்
     எனல்.

     பின்  தன் நிலை இங்ஙனம் இருத்தல் வேண்டும் என்ற நினைவுடன் கூட ஐந்து அதிசாரங்களும் இல்லாமல் சல்லேகனை முடித்தவர்கள் பஞ்ச பரியட்டங்களை அறுத்தவர் ஆவர்.

          ஐந்து பரியட்டங்களில்
பிறவிப் பரியட்டம் முதல் வேதத்தில் விளக்கப் பட்டது. ஒவ்வொரு பரியட்டமும் முடிவிலாப் பிறவிச் சுழற்சி வகைகளை விளக்குவதாகும். பஞ்ச பரியட்டங்களை அறுத்தவர் என்பதால் அந்நிலை மாறி விரைவில் வீடுபேறடைவர் என்று பொருள்.

            நற்காட்சியே வீடுபேற்றின் முதற்படி. ஒருவர் வடக்கிருத்தல் நோற்பதால் தான் அடைந்துள்ள நற்காட்சியை இழந்து விடாமல் காப்பாற்றி மறுபிறப்பிற்கும் கொண்டு செல்லுகிறார். ஆகவே இது 'பண்டித மரணம்' என்று கூறப்படுகிறது. மறுபடியும் பிறக்காத வீடு பேற்றைத் தரும் இறப்பைப் 'பண்டித பண்டித மரணம்' என்று கூறுவர். நற்காட்சி இல்லாதவர்களும் கூட சல்லேகனை இறப்பால் நற்கதி அடைவர். இது மகாபலன் சரித்திரத்தில் அறிய முடிகிறது.

        ஜினர்களும் முனிவர்களும் எல்லா உயிர்களிடத்தும் அன்புடையவர் ஆவர். அண்மையில் வீடுபேறடையாதவர்களும் வீடு பேறே அடைய முடியாதவர்களுக்கும் கூட
நன்மை அடைய வழி கோறுவர். விலங்கினங்களுக்கு நேரடியாக நன்மையைச் செய்ய முடியாததால் அவற்றிற்க்கு இரக்கம் காட்டவும் நமக்கு அறமுரைக்கிறார்கள்.

இல்லறத்தார் நாள் கடமைகள்:

      (1) ஜினர் சித்தர்களின்
             சிறப்பியற்றல்

      (2) ஆசாரியார்
            உபாத்தியாயர்
            சாதுக்களின் பக்தி

      (3) அறநூல்களைப்
            படித்தல், கேட்டல்,
            வினவல், கூறல்
            முதலியன

      (4) இல்லறத்தார்
            ஒழுக்கம்
            கடைப்பிடித்தல்

      (5) வேண்டுதல்
            வேண்டாமை
            இலாமையாகிற
            சமநிலை வகிக்க
            முயலுதலாகிய    
            சாமாயிகம் செய்தல்

      (6) ஆகாரதானம்
            முதலியவற்றைச்
            செய்தல்
                     

         ------------------------13-------------------------

துறவறம்:

     யாருக்குப் பிறவிச் சுழற்சியில் அச்சம் தோன்றுகிறதோ அவர் அதைக் கடக்க எண்ணிச்  சுற்றத்தார்களுக்கு அறிவித்து அவர்களிடம் விடை பெறுகிறார். ஒரு முனிவரை அணுகி, தன் ஆடை முதலியவற்றைத் துறந்து, துறவேற்று துறவியாகிறார். துறவி உயிர்களை ஓம்ப மயிற் பிஞ்சத்தையும், சுத்தி செய்து கொள்ள கமண்டலமும், படிப்பதற்காக அறநூலும் தவிர யாதொன்றையும் வைத்துக் கொள்வதில்லை. அவர் ஐம்பெரும் நோன்புகளையும் அவற்றுக்கு உறுதுணை ஆயினவற்றையும் உள்ளம் மொழி உடல் அடக்கங்களால் ஒழுகுதல், உற்ற நோய் நோன்றல், குற்றங்கள் நேராமல் காத்தல், நேர்ந்த குற்றங்களுக்குக் கழுவாய் இயற்றல்,இறைவனை வாழ்த்தல், வேண்டுதல் வேண்டாமை இலாமையாகிற சமநிலை வகிக்க உயிர்த் தன்மையில் தோய்தல் முதலாகிய ஆறு தினசரி கடமைகளை ஆற்றுகிறார். பன்னிரண்டு வகைத் தவங்களைச் செய்கிறார். இப் பன்னிரண்டு தவங்களில் தலைசிறந்தது தியான தவமாகும். இதை அடையவே  பிற பதினோரு தவங்களும் மேற்கொள்ளப் படுகின்றன. தியானம் என்பது சிந்தனையே ஆகும். வீடு பேற்றிற்கு உதவுவன நற்சிந்தனையாகிய தருமத்   தியானமும் தூய சிந்தனையான சுக்கிலத் தியானமுமே ஆகும்.

     நடைபெறும் ஐந்தாம் காலத்தில் தூய சிந்தனையாகிய சுக்கிலத் தியானம் உண்டாகாது. வீடு பேறும் அடைய முடியாது. பண்பு நிலைகளில் ஏழாம் பண்பு நிலை வரையே உயர முடியும். அங்கு உயர்தர நற்சிந்தனையாகிய தருமத் தியானமே உண்டாகும். அது பற்றி இங்குச் சிறிது விளக்கப்படும்.

    (1)  ஜினர் கட்டளைப்படி அற நூல்களில் கூறப்பட்டுள்ள தத்துவங்களைச் சிந்தித்தல்(ஆக்ஞாவிசயம்)

    (2) தன்னுடைய மற்றும் பிறருடைய அறியாமை பற்றியும் வினைகள் நீங்கும் வழிகளையும் சிந்தித்தல்(உபாயவிசயம்)

    (3) வினைகளின் விளைவுகளைப் பற்றிச் சிந்தித்தல்(விபாக விசயம்)

    (4) உலகின் வடிவம், உயிரின் வடிவம் அவற்றின் இயற்கை முதலியவற்றைப் பற்றிச் சிந்தித்தில் (சமஸ்தான விசயம்)

    இதன் கீழ் மேலும் பிண்டஸ்தம், பதஸ்தம்,ரூபஸ்தம், ரூபாதீதம் என்ற நான்கு சிந்தனைகள் கூறப் படுகின்றன.
                                 (வளரும்)

----------------------14-------------------------- 

         சிந்தனை செய்வோன்  இந்த நடு உலகளவுள்ள கடலையும் அதன் நடுவில் ஜம்பூத்வீபம் அளவுடைய 1000 இதழ்களுடைய பொன் வண்ணத் தாமரை மலரையும் அதன் மீதுள்ள சிங்காதனத்தில் தானே அமர்ந்து வினைகளை அழிக்கத் தயாராக இருப்பதாக எண்ண வேண்டும். இதற்கு 'பார்தவிதாரண' என்று பெயர். பிறகு தன் தொப்புள் இடத்தில் மேல் நோக்கியுள்ள தாமரை மலரின் இதழ்களில் உயிரெழுத்துக்கள் வரையப் பட்டிருப்பதிலிருந்து தன் இதயத்தில் இருக்கும் கீழ் நோக்கியுள்ள எட்டு வினைகளை குறிப்பிடும் எட்டு இதழுடைய தாமரை மலரை எரிப்பதாக எண்ணவேண்டும். பிறகு அந்தத் தீ வெளியே பரவித் தன் உடலையும் தன் தொப்புளிடத்தில் உள்ள தாமரையையும் எரித்து விட்டுத் தானே அடங்கியதாகவும் எண்ண வேண்டும். இது 'அக்னிதாரணா'. பிறகு அந்த யோகி பெரும் புயற் காற்று வீசித் தன் உடற் சாம்பலை எல்லாம் அடித்துக்கொண்டு சென்று நீக்கி விட்டதாக எண்ண வேண்டும். இது 'பவன்தாரணா'  அடுத்து 'ஜலதாரணா'  அதில் அவன் கணத்த மழை பெய்வதையும் அம்மழை  எஞ்சியுள்ள உடல் எரிந்த சாம்பலையும் கழுவித் தூய்மைப் படுத்தியதாக எண்ணவேண்டும். கடைசி ' தத்வரூபவதி தாரணையில்' யோகி தன் ஏழு தாதுக்களால் இயன்ற உடல் அற்றவனாக நிலா ஒளி போன்று வரம்பில் அறிவால் ஒளிருபவனாக எண்ண வேண்டும். இது 'பிண்டஸ்த தியானம்' ஆகும்.

    பதஸ்த தியானத்தில் ஐம்பெரும் குருக்களின் மந்திரங்களை அரஹந்த ஸித்த முதலாகியவற்றை சிந்தக்க வேண்டும்.

      ரூபஸ்தி தியானத்தில் ஜினரை அவரின் சமவசரணம் முதலிய எல்லா மகிமைகளுடன் சிந்திக்க வேண்டும்.

   ரூபாதித தியானத்தில் உயிரை முழுவதும் உணர்வுத் தன்மையனாகப் பேரினப மயனாக தூய்மையாளனாக அருவியாகச் சிந்திக்க வேண்டும்.

                            ( வளரும்.) 


-----------------------15--------------------------

      அரஸமருவமகந்தம்
      அவ்வத்தம் சேதணா 
      குணமஸத்தம்
      காண
      அலிங்கக்கஹணம் ஜீவ
      மணித் திட்ட
      ஸண்டாரை.

  "பவ்வியனே! நீ உயிரை சுவையற்றதாக, நிறமற்றதாக, மணமற்றதாக, தொட்டுணர முடியாததாக, உணர்வுப் பண்புடையதாக, ஒலிக்காததாக, எந்த அடையாளத்தைக் கொண்டும் அறிய முடியாததாக மற்றும் குறிப்பிட்ட எந்த வடிவமும் இல்லாததாக எண்ணி அறிவாயாக!"

    சுருக்கமாக மெய்த் துறவியின் இலக்கணம் இவ்வாறு கூறப்ப்டுகிறது.

 குற்றம் விட்டார் குத்தி
 மூன்றுடை யார்த்தி
 யீர்ந்தடினுஞ்
 செற்றம் விட்டார்
 திருமேனி யெல்லாம் பெரு
 மாசுவிம்ம
 வற்ற விட்டார்வினை
 மாசுதிர்ப் பார்பிண்டி 
 வாமனல்லாற்
 சுற்றம் விட்டார் திசை 
 சூழ்துகி லார்நற் தொழு
 தெய்வமே!.

     4.  திரவ்யானுயோகம்.

     மீண்டும் துண்டுபட இயலாத Subparticles களின் தொகுப்பான உருவப் பொருளின் ஆய்வினைத் தொடங்கின அறிவியல் வல்லுநர்கள் உருவப்பொருள் இருக்க இடத்தின் தேவையை உணர்ந்து இடம் தரும் பொருளான SPACE என்ற ஆகாயப் பொருளையும், நாம் நடமாட பாதை உதவுவது போல் ஒளி, ரேடியோ, டெலிவிஷன் முதலிய அலைகளின் எல்லாப் பக்கப் படர்ச்சிக்குத் துணைக் காரணமாக ஈதர் என்ற தருமப் பொருளையும் அவ்வாறே Sub partcles மற்றும் அணுத்திரள்கள் ஒன்றை யொன்று கூடி நிலைத்தற்குத் துணைக் காரணமாக Electro-magnetic and gravitational field என்ற அதருமப் பொருளையும் உருவப் பொருள்களின் மாற்றங்களுக்குத் துணைக் காரணமாக  Real time என்ற காலப் பொருளையும், அறிவிற்கு life என்றழைக்கப்படும் உயிரையும் ஊகித்து அறிந்தனர்.

    அறிவியலார்கள் ஈதர் அதாவது தருமப் பொருள் நகராமல் ஒரே இடத்தில் நிலையாக நிற்கும் பொருள் என்பதையும் அது வரம்புடை உலகம் அமைந்திருக்க உதவுவதையும் அறியாமல் அதனது ஆற்றலை அளவை செய்ய முயன்று தோற்றனர். அதனால் எல்லா அருவப் பொருள்களுள் இருப்பை ஏற்காது கைவிட்டனர்.

     ஆனால் இப்பொழுது மிக்க புகழ் படைத்த பால் டைரக் போன்றோர் உலகம் பரவிய ஈதர் போன்ற பொருளின் இருப்பைச் சுட்டுகின்றனர்.


                              (வளரும்)

------------------------16-------------------------
          ஆகையால் துணைக் காரணங்களாகிய SPACE, ETHER, FIELD, REAL TIME ஆகியவைகள் இன்றி உலகம் அமையாது என்றாகிறது. உலகம் அமைந்திருப்பதால் அவற்றின் இருப்புப் பெறப்படுகிறது. அருவப் பொருள்களின் இருப்பை ஏற்பதே போதுமானது உயிரின் இருப்பையும் ஏற்பதற்கு! உலகம் வரம்புடையதா வரம்பற்றதா என்ற வினாவிற்கு ஐன்ஸ்டீன் அவர்கள் உலகம் வரம்புடைய தென்றார். ஐன்ஸ்டீன் அவர்களுக்கு 500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருந்த வாமன முனிவர் தம் மேருமந்தர புராணத்தில் வரம்புடைய உலகமே அமையும் என்பதைக் காட்டி விளக்கியிருக்கிறார்.

 அளவதாம் பொருள் உலகத்துக்கு இல்லையேல்
அளவில் ஆகாயத்தில் அணுக்களோடு உயிர்
அளவளாவின்றியே அகன்று போயபின்
உளவல கட்டு வீடு உலகத் தோடுமே!

    இப்பொருளிலிருந்து ஒன்றும் தோன்றாமையும் அதாவது மண்ணின்றிப் பானை அமையாமையும், வரம்பில்லாக் காலம் கழிந்த பின்னரும் பொருள்கள் உள்ளமையால் உள்ள பொருள்கள் அழியாமையும், பொருள்கள் மற்றும் உலகின் தோற்றம் அழிவின்மைகள் வெளியாகின்றன. அதனால்தான் சீவக சிந்தாமணியின் ஆசிரியரான திருத்தக்கதேவர் 'மூவா முதலா உலகம்' என்றார்.

     உலகில் வரம்பில்லா எண்ணிக்கை கொண்ட உயிர்களும் வரம்பில்லா எண்களிரண்டின் பெருக்கல் தொகைக்கு ஈடான உருவப் பொருள் பரமாணுக்களும், ஒரு தருமப் பொருள்  ஒரு அதருமப் பொருள்  ஒரு  ஆகாயப் பொருள் மற்றும்  எண்ணிக்கையல்லாத கால அணுக்களும் இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கையில் ஏற்றமோ குற்றமோ அடையாமல் நிலைத்திருக்கும் இந்த ஆறு வகைப் பொருள்களால் இயன்றதே உலகம்...



                             (வளரும்)

---------------------------17----------------------
பொருள் என்றால் என்ன ?

      பொருளே ஆற்றல், ஆற்றலே பொருள். பொருள் அல்லது ஆற்றலின் இயற்கை ஓயாமல் உருமாற்றங்களை அடைந்து செயல் படுவதாகும். அதனால் பொதுப் பண்பும் ஒவ்வொரு பொருளின் ஆற்றல் மற்றும் செயல் வகைகளுக்கேற்ப அமையும் சிறப்புப் பண்பும் உடைமை வெளியாகின்றன.

        பொருள் கணம் கணம் தோறும் ஓயாமல் உருமாற்றமடைந்து கொண்டே நீடித் திருத்தலாகிய நிலைபேறும் (Existence) சுயமாற்றங்களை அடைந்து செயல்படும் தன்மையும் (Functionality) உருவ மாறுதலை அடைவதாகிய மாறுந்தன்மை (Change ability) பயனுடைய செயலாற்றித்தன் இருப்பைத் தெரிவித்தலாகிய அறிவிக் குரிய தன்மையும் ( Knowability) பரவி இருத்தலாகிய இடப் பரப்பும் உடைமையும் (Spatiality) என்றென்றும் தன் தன்மையிலேயே இருத்தலாகிய மாறாத் தன்மையும் (Unalterability) ஆகியவை எல்லாப் பொருள்களுக்கும் பொருந்தும் பொதுப் பண்புகள்.

சிறப்புப் பண்புகள்

     உணர்வாற்றலே உயிர். உயிர் செயல்படுவதால் ஏற்படும் உணர்வின் வகை மாற்றங்களே அறிவு, காட்சி, இன்பம், ஆற்றல் நான்கும். ஒவ்வொருவருடைய அறிவிலும் இன்பத்திலும் வேற்றுமைகள் இருப்பதே அப்பண்புகளின் வரம்பில்லாத் தரங்களை அறிவிக்கின்றன. ஒவ்வொரு தரமும் அப்பண்பின் நிலையே ஆவதால் உயிரின் பண்புகள் வரம்பில்லாதன ஆகின்றன.

   பொறிகளால் அறியப்படும் ஆற்றலே உருவப்பொருள். அதன் வகை மாற்றங்களே சுவை, ஒளி, ஊறு, நாற்றம் நான்கும் ஊற்றுப் பண்பின் வகைகளான 'ஸ்நிக்தம்' 'ரூஷம்' இரண்டும் ஸ்நிக்த ரூஷத்வகுண நிமித்தோ வித்யுத்  அதாவது ஸ்நிக்த ரூஷங்களின் கூட்டுறவின் விளைவே மின்னல் என்று பூஜ்யபாத ஆசாரியரால் கூறப்படுவதால் அவ்விரண்டும் பாஸிடிவ், நெகடிவ் மின்னாற்றல் வகைகளாகின்றன. 

        பிற பொருள்களின் சிறப்பாற்றல் அதனதன் துணைக்காரணமாகும் தன்மையே ஆகும். எடுத்துக் காட்டாக இடம் தரும் ஆற்றலுடைய ஆகாயம்.

                     ( வளரும்)

----------------------------18-----------------------
அறம்:

தம்மோ வத்துஸஹாவோ கமாதி பாவோய தய விஹோ தம்மோ,
ரயணத்தயம் சதம்மோ ஜீவாணம் ரக்கணம் தம்மோ.

  உயிரின் இயல்பே அறம். உத்தமஷமை முதலாகிய அதாவது பொறுமை, மென்மை, நேர்மை, வாய்மை, அவாஇன்மை, ஒழுக்கம், தவம், கொடை, ஒன்றின்மை, மெய்ப் பொருளில் தோய்தல் ஆகிய அறம்(ஒழுக்கம்) பத்தும் உயிரின் இயற்கையே.  நற்காட்சி,  நல்லறிவு, நல்லொழுக்கம் ஆகிய மும்மணிகளும் உயிரின் இயற்கையே. உயிர்களைக் காத்தலும் உயிரின் இயற்கையே என்பதாம்.

         பொருள்களின் மீது காமம், வெகுளி மயக்கங்களை அடைதல் உயிரின் குற்றம், உயிரின் விகாரம். அதன் இயற்கை அது அல்ல. ஏனெனில் அவை வீடுபேறடைந்த உயிர்களிலும் முற்றத் துறந்தோர்களிடத்தும் காணப் படவில்லை.

        ஆகையால் தூய உயிரின் இயற்கையில் ஒழுகுதலே அதாவது அறிவதிலும் காண்பதிலுமே நிலைத்தலே அல்லது வேண்டுதல் வேண்டாமை இன்றி அறிவுக் காட்சிகளிலே நிலைத்தலே ஒழுக்கம் ஆகும். அதனால் ஒழுக்கமும் அறம் என்றே கூறப்படுகிறது.

  இந்த அக ஒழுக்கமே வீடு பேற்றை அளிப்பது. ஆனால் புற ஒழுக்கங்களாகிய உற்ற நோய் போன்றலாகிய தவம் ஒன்றின்மை முதலியன அக ஒழுக்கத்தை அடைய இன்றியமையாதன. அக ஒழுக்கத்தோடு கூடிய புற ஒழுக்கமே உபசார வழக்கின்படி புறஒழுக்கம் என்ற பெயர் பெறுகிறது.

         இதுகாறும் நான்கு வேதங்களைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டோம். இனி, இவற்றின் விரிவை ஆசாரியர் வாயிலாக அறிவோம்.....

                                (வளரும்)

-----------------------------19----------------------- 

அறம் பரப்பிய ஆசாரியர்கள் அங்கம், பூர்வம்

         பிராம்மணமும் சமணமும் பாரத நாட்டின் இரண்டு பண்பாடுகள் ஆகும். பிராம்மணம் பிரம்ம வித்தையில் ஈடுபாட்டைக் காட்டும் நெறி. உயிரைப் பேரா இயற்கையில் அடைவிக்கும் நெறி- வேண்டுதல் வேண்டாமை போற்றும் நடுவு நிலைநெறி-சமணம் என்று அழைக்கப் படுகிறது.

      'சமண' என்ற பாகதச் சொல் தமிழில் சமணம் என்று வழங்குகிறது. வட மொழியில் 'ஸ்ரமண' என்று வழங்குகிறது. 'ஸ்ரம' என்ற சொல்லுக்கு நோற்றல்- முயலுதல் என்று பொருள். வீடு பேறடைய உற்ற நோய் நோற்றலை அது குறிக்கிறது.

ஸமஸத்து பந்துவக்கோ ஸமஸுஹ
துக்கோ பஸம்ஸ-ணிந்த ஸமோ
ஸமலோட்ட கஞ்சணோ புண ஜீவிய
மரணே ஸமோ ஸமணோ

       ' யார் பகைவர் உறவினர்களிடை நடு நிலைமை போற்றுகிறாரோ, இன்ப துன்பங்களில் பொது நோக்கு காட்டுகிறாரோ, புகழ்ச்சி இகழ்ச்சிகளில் வேற்றுமை இன்றி பாராட்டுகிறாரோ, இரும்பையும் பொன்னையும் ஒன்றாகக் கருதுகிறாரோ, வாழ்வையும் இறப்பையும் ஒன்று போல் ஏற்கிறாரோ அவரே சமணர் ஆவார்' என்பதாம்.

         பொதுவாக, பேரா வியற்கை அடைய நோற்கையில் தாமே வந்தடையும் தெய்வீகப் பேறுகளில் விருப்போ அல்லது நோற்றலின் போது ஏற்படும் இடையூறுகளில் வெறுப்போ அடையாத நடுவுநிலைமையாளனே சமணன் எனலாம். அச்சமண அருளாளர்கள் அறம் பரப்பிய வரலாற்றை இத் தொடரில் காணலாம்.

                          (வளரும்)

-----------------------------20----------------------- 

     பகவான் மகாவீரர் வரம்பில் அறிவை(கேவல ஞானம்) பெற்று 30 ஆண்டுவரை அறவுரை ஆற்றி கி.மு. 527ல் வீடு பேறடைந்தார். அவர்தம் அறுவுரைகளைக் கௌதம கணதரர் சூத்திரங்களில் அமைத்தார். அவற்றின் தொகுப்பே பன்னிரண்டு அங்கங்கள் ஆகும்.

      அங்கம் என்றால் உறுப்பாகும். எப்படி இரண்டு கைகள், இரண்டு தோள்கள்(புயம்), இரண்டு கால்கள்(பாதம்), இரண்டு  தொடைகள், ஒரு முதுகு, ஒரு வயிறு,ஒரு மார்பு, ஒரு தலை ஆகிய பன்னிரண்டு மனித உடலின் சிறப்புறுப்புகளோ அவ்வாறே பன்னிரண்டு அங்கங்களும் அறிவு உடலின் சிறப்பு உறுப்புகள் (அங்கங்கள்) ஆகும். பன்னிரண்டு அங்கங்களாவன:

1. ஆசாரங்கம்: துறவிகளின் ஒழுக்கத்தை விரிவாகக் கூறுகிறது.

2. சூத்ரக்கிருதாங்கம்: இது பல்வகை அடக்கம் துறவு ஒழுக்கத்தில் குறை ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய கழுவாய் வகைகள், சமண மற்றும் பிற அறங்களின் முடிவுகளையும் விளக்குகிறது.

3. ஸ்தானாங்கம்:  'ஸ்தானம்' என்றால் எண் வரிசை. உயிரின் பண்பு அறிவைப் பொறுத்து ஒன்று; அறிவும் காட்சியும் இரண்டு; உயிர் பயனுடை செயல் ஆற்றுகையில் அதில் ஓயாமல் ஏற்படும் புதிய உருவத் தோற்றமும் பழைய நிலை அழிவும் பொருளின் நிலை பேற்றுத் தன்மையும் ஆகிய முக்கூட்டுத் தன்மையால் மூன்று; தேவ நரக மனித விலங்குப் பிறவிகளை யொட்டி நான்கு; (வினை)உதய நிலைமை (பாவம்), அடக்கநிலைமை, (முன்னிரண்டும்) கலந்த நிலைமை, அழிந்த நிலைமை  மற்றும் இயற்கை நிலைமைகளால் ஐந்து முதலாகிய விளக்கங்களைக் கூறுகிறது  இது.

4. ஸமவாயாங்கம்: இது பொருள்,இடம், கால, நிலைமை வகையால் பொருத்தத்தை விளக்குகிறது. எடுத்துக் காட்டாகப் பொருள் வகையால் தருமப் பொருள், அதருமப் பொருள், உயிர் எனவும், இட வகையால் ஒவ்வொன்றின் பரப்பு உலகப் பரப்பளவு எனவும் விளக்குகிறது,

5. வியாக்யா பிரஜ்ஞப்தி அங்கம்: இஃது உயிர் உயிரல்ல பொருள்களின் தொடர்பை 60,000 வினா- விடைகளில் விளக்குகிறது.

                      (வளரும்)

-------------21-----------

6. ஞாத்ரு தர்மகதா அங்கம் :  இஃது தீர்த்தங்கரர்களின் அறவிளக்கம். கணதரர்களின் ஐயங்களின் நீக்கம் மற்றும் பற்பல கதைகளை விளக்குகிறது.

7. உபாஸகாத்யயன அங்கம்:  இஃது இல்லறத்தை விரிவாகக் கூறுகிறது.

8. அந்த கிருத தசா அங்கம்:
 இஃது ஒவ்வொரு தீர்த்தங்கரர் காலத்திலும் பொறுத்தற்கறிய மாபெரும் கொடுமைகளைத் தாங்கி நோற்று முக்தியடைந்த பத்துப் பத்துத் துறவிகளின் கதைகளைக் கூறுகிறது.

9. அனுத்தரோப பாதிக தச அங்கம்:  இஃது ஒவ்வொரு தீர்த்தங்கரர் காலத்திலும் மாபெறும் கொடுமைகளைப் பொறுத்து நோற்று விஜய வைஜயந்த முதலான வானுலகெய்திய துறவிகளின் கதைகளைக் கூறுகிறது.

10. பிரச்ன வியாகரண அங்கம்: இஃது ஒருதலைக் கருத்து(ஒருமைக் கொள்கை) வாதிகளின் கொள்கைகளை மறுத்து ஆறு பொருள்கள், ஏழு தத்துவங்கள் முதலியவற்றை நிலை நாட்டி நல்வினை தீவினைப் பயன் விளக்கக் கதைகளையும் கூறுகிறது.

11. விபாகசூத்ர அங்கம்:  நல்வினை தீவினைகளால் ஏற்படும் விளைவுகளை விளக்குகிறது.

12. திருட்டிவாத அங்கம்: இஃது பரிகர்மம், சூத்திரம், பிரதமானுயோகம், பூர்வம் மற்றும் சூளிகை என்ற ஐந்து பிரிவுகளுடையது.

பரிகர்மம்: வானவியலும் அண்ட வியலும் ஆகும்.

சூத்ரக்ருதம்: இது 363 வகை ஏகாந்த சமயங்களை விளக்குகிறது. 

பிரதமானுயோகம்: இது 21 தீர்த்தங்கரர்கள், 12 சக்கரவர்த்திகள், 9 பலதேவர்கள், 9 வாசுதேவர்கள், 9 பிரதி வாசுதேவர்கள் முதலியோரின் கதைகளைக் கூறுகிறது.

சூலிகை: இது நீர் மேல் நடத்தல், பூமியை ஊடுருவிச் செல்லல், மறைதல், உருவ மாறுதல்  மற்றும் வானில் செல்லும் வழி வகைகளைக் கூறுகிறது.

                          
  (வளரும்)

--------------22-----------

   பூர்வம் 14 வகை: 1உத்பாத பூர்வம்(உயிர், உருவப் பொருள், காலம் முதலிய)பொருள்களின் செயலால் விளையும் (புதிய உருவம்) தோன்றல், (பழைய உருவம்)அழிதல், (பொருள்) நிலைத்தல், ஆகிய முக் கூறுபட்ட நிலைமைகளின் விளக்க (Self-modification of sustances)த்தைக் கூறுகிறது இப்பூர்வம்.

   2. ஆக்ராயணீ பூர்வம் : பொருள்களை விளக்க அவற்றின் பண்புகளைக் கூறவேண்டும். அப் பண்புகளை ஒருங்கே ஒரே சொல்லால் கூற இயலாது. ஒவ்வொன்றாகவே கூற இயலும். (மொழிக்குரிய ஆற்றல் அவ்வளவே) இம்முறைக்கு 'நய வாதம்' என்று பெயர். பொருள்களின் ஒரு பண்பைச் சுட்டும் போது பிற பண்புகளும் அப்பொருளில் இருக்கின்றன என்பதைத் தெளிவுபடுத்த அப் பண்பைச் சுட்டும் சொல்லுக்கு முன் (ஸ்யாத்) 'ஒரு வகையால்' என்ற அடைமொழி தேவைப் படுகிறது. அடைமொழியோடு கூறாத நயம் துர்நயம் ஆகும். இவற்றை இப் பூர்வம் விளக்குவதுடன் ஐந்து அத்தி காயங்கள், ஆறு பொருள்கள், ஏழு தத்துவங்கள் முதலியவற்றையும் விளக்குகிறது.

     3. வீர்யானுவாத பூர்வம்:  உயிரது ஆற்றல் உயிரல்லது ஆற்றல் முதலியன கூறுகின்றது இப் பூர்வம்.

      4. அஸ்தி நாஸ்தி ப்ரவாத பூர்வம் : உயிர்ப் பொருள் தன் பொருள் வகையாலும், தன் இடப் பரப்பாலும், தன் மாற்றத்தாலும், தன் நிலைத்தல் தன்மையாலும் உண்டு. பிற பொருளாலும், பிற இடத்தாலும், பிற மாற்றங்களாலும் பிறவற்றின் நிலைத்தல் தன்மையாலும் இல்லை. தன் தன்மையால் உண்டு, பிற தன்மையால் இல்லை என்று அடுத்தடுத்தும், இவ்விரண்டையும் ஒருங்கே (ஒரே சொல்லால்) உரைக்க இயலாமை முதலாகிய ஏழு வகையான விளக்கும் முறைகளைக் (சப்தபங்கி) கூறுகிறது. இவ்வாறே பிற பொருள்களையும் விளக்குகிறது.

       5. ஞான ப்ரவாத பூர்வம்: மதி அறிவு, சுருத அறிவு, அவதி அறிவு முதலான ஐவகை நல்லறிவுகளையும் குமதி அறிவு, குசுருத அறிவு, குவவதி அறிவு ஆகிய மூன்று புல்லறிவு வகைகளையும் விளக்குகிறது.

                               (வளரும்)

---------------23---------

  6. சத்ய ப்ரவாத பூர்வம் : பத்து வகை உண்மைப் பேச்சுகளையும் பலவகைப் பொய்க் கூற்றுகளையும் மற்றும் பன்னிரண்டு மொழிகளையும் விளக்குகிறது.

7. ஆத்மப்ரவாத பூர்வம்: உயிர்ப் பொருளின் உண்மை நிலையை நாட்டுகிறது.

8. கர்மப்ரவாத பூர்வம்: எட்டு வகை வினைகளின் ஊற்று,கட்டு,செறிப்பு, உதிர்ப்புகளை விளக்குகிறது.

9. ப்ரத்யாக்யான பூர்வம் : உயிர் வதை ஏற்படும் பொருள்களை விலக்கல், பட்டினி கிடத்தல் வகை முதலான கூறுகிறது.

10. வித்யானுவாத பூர்வம்:  700 நுண்கலைகளையும், 500 பெருங்கலைகளையும் வித்தைகளையும் அடையும் வகை, ஆருடம், சோதிடம் முதலியவற்றை விளக்குகிறது.

11. கல்யாணவாத பூர்வம்:  கதிரவன் திங்கள் விண்மீன்களின் இயக்கம், அவற்றின் விளைவாக ஏற்படும் பயன்களை விளக்குகிறது.

12. பிராணாவாத பூர்வம்: மருத்துவம் உடற்பாதுகாப்பு முதலியவற்றை விளக்குகிறது.

13. கிரியவிசால பூர்வம்: காவியம் இசைக் கலைகளை விளக்குகிறது.

14. லோக பிந்து சாரா பூர்வம் : எட்டுவித உலக நடைமுறைகளையும் வீடு பேறு மற்றும் அதன் பேரின்ப விளக்கமும் கூறுகிறது. இந்நூல்களின் பரப்பு பலகோடி பதங்களாகும். பதம் பொருள் முடிந்த சொற்றொடரைக் குறிக்கிறது.

           இவற்றுள் அடக்கப் படாத நூல்கள் 14 வகைகளாகும். அவை : வேண்டுதல் வேண்டாமை யாகிற சம பாவனை விளக்கம், 24 தீர்த்தங்கரர்களின் வாழ்த்து, குற்றங்கடிதல் முறை, அடக்க விதிகள், பூசனை விதிகள், துறவொழுக்கம், உற்ற நோய் நோன்றல் வகை,  துறவிகள் பிறரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை, துறவளிக்கும் முறை, தவறுகளை நீக்கும் முறை(கழுவாய்), வானவனாக இயற்ற வேண்டிய நோன்பு வகைகள் முதலியன இவற்றில் அடங்குகின்றன.

                               (வளரும்)

--------------------------24--------------------- 

     மகாவீரருக்குப் பின்...

      பகவான் மகாவீரரின் வழிவழி வந்த துறவரசர்கள் இயற்றிய அறநூல்கள் யாவும், பன்னிரண்டாம் அங்கத்தின் ஐம்பெரும் பிரிவுகளில் ஒன்றான பதினான்கு பூர்வங்களிலிருந்து திரட்டியவைகளே ஆகும். மற்ற பதினொரு அங்கங்கள் முழுமையாகத் திகம்பரர் களிடம் இல்லை. ஆனால் சுவேதாம்பர துறவரசர்களால் ஐந்தாம் நூற்றாண்டில் வரிவடிவில் கொண்டு வரப்பட்ட பதினொரு அங்கங்கள் இருக்கின்றன. அதனால் பன்னிரண்டு அங்கங்களும் இருக்கின்றன என்பது மேல் நாட்டறிஞர் தம் கருத்தாகும்.

       பகவான் மகாவீரர் வீடு பேறடைந்த அதே நாளில் கௌதம கணதரர் வரம்பில் அறிவைப் பெற்று பன்னிரண்டு ஆண்டுகள் அறவுரை ஆற்றி கி.மு. 515ல் வீடு பேறடைந்தார்.

      அவர் வீடு பேறடைந்த நாளன்றே சுதர்ம கணதரர் வரம்பில் அறிவராகி பன்னிரண்டு ஆண்டுகள் அறம் விளக்கி வீடுபேறடைந்தார்.

      அவர் வீடு பேறடைந்த நாளன்றே ஜம்பு சுவாமி வரம்பில் அறிவு பெற்று முப்பத்தெட்டு ஆண்டுகள் வரை அறம் விளக்கிப் பேராவியற்கை எய்தினார்.

     இவ்வாறு பகவான் மகாவீரரின் வீடுபேற்றிற்குப் பிறகு அறுபத்து இரண்டு ஆண்டுகள் வரை இம் மூவரும் அறம் விளக்கினர்.

     அதற்குப் பிறகு விட்ணு, நந்திமித்திரர், அபராஜிதர், கோவர்த்தனர், பத்திரபாகு ஆகிய ஐவர் நூறு ஆண்டுகள் கௌதம கணதரர் இயற்றிய பன்னிரண்டு அங்கங்களை முழுமையாக விளக்கி வந்தனர்.

      அவர்களுக்குப் பின்  பன்னிரண்டு அங்கங்களில் நான்கு பூர்வங்களைத் தவிர்த்துப் பிறவற்றைக் கூறி வந்தவர் தசபூர்வதரர்கள் ஆவர். அவர்கள்: விசாகாச்சாரியார், புரோஷ்டிலர்,ஷத்திரியர்,ஜயசேனர், விஜயர்,புத்தி லிங்கர்,தேவர், தருமசேனர்,நாகசேனர், சித்தார்த்தர், த்ருதிஷேணர் ஆவர்.

     அவர்களுக்குப் பிறகு பதினொரு அங்கங்களை அறிந்தவர் நஷத்திரர், ஜயபாலர், பாண்டவர், துருதிசேனர் மற்றும் கம்சர் ஆவர்.

      பத்து, ஒன்பது, எட்டு அங்கம் அறிந்தவர் சுபத்திரர், யசோபத்திரர் (இரண்டாம்) பத்திரபாகு, லோகாசார்யர் ஆவர்.

        லோகா சார்யர் கி.பி. 38 வரை அறம் விளக்கினார். அவருக்குப் பின் வந்தவர்கள் ஆசாரங்கம் ஒன்றையும் 12 ஆம் அங்கத்தில் சில பகுதிகளையுமே அறிந்திருந்தனர்.

                            (வளரும்)

------------------------------25-----------------
        கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த குணதரர் என்பவருக்கு ஐந்தாம் பூர்வத்தின் 'பேஜ்ஜ தோஸ' பாகுடத்தின் அறிவு இருந்தது. அவர் அவ்வறிவை மறையாமல் பாதுகாக்க 180 பாகத சூத்திர காதைகளால், தீக்காட்சி, தீயொழுக்கம் மயக்க வினைகளின் ஊற்று, கட்டு,செறிப்பு, உதிர்ப்பு வகைகளைக் கரணலப்திகளோடு விளக்கிக் கசாயபாகுடம் என்ற நூலை இயற்றினார். அதில் காணப்படும் 53 மிகை சூத்திரக் காதைகள் அவர்தம் மாணவத் துறவிகளின் இணைப்பு (இடைச்செருகல்) எனக் கருதப் படுகிறது. யதிவிருடபரின் சூர்ணி சூத்திரம் மேற்கூறிய மிகை காதைகளை விளக்காததைச் சான்றாகக் காட்டித் தம் கருத்துக்கு அரண் செய்கின்றனர். கி.பி.9 ஆம் நூற்றாண்டில் சூர்ணி சூத்திரங்களின் எண்ணிக்கை 7009 ஆகும். இவற்றின் உரையாக 60000 வடமொழிச் செய்யுள் கொண்டு வீரசேனரும்  ஜினசேனரும் இயற்றிய ஜெய தவளம் திகழ்கிறது.

     லோகாசாரியரை அடுத்து, ஒரு அங்கம் அறிந்த துறவரசர்களாக அர்கத்பலி, மாகநந்தி, தரசேனர், பஷ்பதந்தர், பூதபலி ஆகியோர் திகழ்கின்றனர். இவர்களுள் தரசேனர் கி.பி 106 வரை வாழ்ந்தவர். இவர் ஆக்ராயணீய பூர்வத்தில் வரும் 'மகா கம்மப்பயடி' பாகுடம் அறிந்தவர். அதை நூலாக வடித்துப் பாதுகாக்க இரண்டு மாணவத் துறவிகளை தன்னிடம் அனுப்பி வைக்குமாறு மகிமா நகரத்தில் கூடிய தென்னாட்டுத் துறவரசர் குழுக்களின் கூட்டத்திற்குச் செய்தி விடுத்தார். அவர்களும் ஆய்ந்து தேர்ந்து இரண்டு சிறந்த மாணவத் துறவிகளான புட்பதந்தரையும் பூதபலியையும் அனுப்பினர். அவர்கள் தரசேனர் தவமியற்றி வந்த கிர்நார் மலைக்குகையை அடைந்து அவரிடம் கற்றனர்.

       பின்னர் புட்பதந்தர் வனவாசி நாட்டிற்கும் பூதபலி தென் மதுரைக்கும் திரும்பினர்.

      புட்பதந்தர் 177 பாகத சூத்திரங்களை இயற்றி குல்லகன் ஜிநபாலிதனுக்குக் கற்பித்து அவனை மதுரையிலிருக்கும் பூதபலியிடம் அனுப்பினார். அவர் ஆறு அதிகாரங்களில் (காண்டம்) நூலை இயற்றி ஆனித் திங்கள் பஞ்சமியன்று பூசித்தார்.

                         ( வளரும்)

-----------------------------26------------------

     புட்பதந்தரின் 117 சூத்திரங்களுடன் 5 காண்டங்கள் 6000 சூத்திரங்கள் ஆகும். இவற்றில் உயிர், பிறவி வகைகள், பண்பு நிலை கள், யார் யார் எவ்வித வினைகளை அடைவர், பயன் நுகர் அளவு, வினைத் திரள்களின் அளவு முதலியன விளக்கப்படுகின்றன. ஆறாவது காண்டத்தில் வினை வகைககள், அவை நிலைத்திருக்கும் (செயல் படுதல் உள்பட) காலம்,பயன்தரும் வினை அணுத்திரள்களின் எண்ணிக்கை ஆகியவை விரிவாகக் கூறப்படுகின்றன. சூத்திரங்களின் எண்ணிக்கை 40,000 என்று கூறப்படுகிறது. முதல் ஐந்து காண்டங்களுக்கு 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த வீரசேனர் 72,000 செய்யுள் கொண்ட பாகத சமஸ்கிருதம் கலந்த மணிப்பிரவாள நடையில் தவளம் என்ற பெயரால் உரை வகுத்துள்ளார். இதற்கு முன்னரும் சிலர் உரைகள் இயற்றிய வரலாறு கூறப்படுகிறது. ஆறாவது காண்டம் மகாபந்தம் என்றும் மகா தவளம் என்றும் கூறப் படுகிறது. இந்த ஆறு காண்டமும் சேர்ந்தது 'ஷட் கண்டாகமம்' ஆகும். இதை ஜினபாலிதன் புட்பதந்தரிடம் சேர்ப்பிக்கும் செயல் முடிவடைந்ததால் மகிழ்ச்சியுற்று அவரும் 'ஜேஷ்ட பஞ்சமி' யன்று பூசித்தார். அந்நாளே இன்றும் "சுருத பஞ்சமி" என்று கொண்டாடப் படுகிறது.

       ஆசாரியர்கள் சிறந்த நாடுகளிலும் நற்குடிகளிலும் பிறந்து தூய வாழ்க்கை நடத்திய வர்கள். துறவொழுக்க உயர்வால் குழுத் தலைவரானவர்கள், பதினான்கு வித்தைகளிலும் நூல் இயற்றுவதிலும் தேர்ச்சி பெற்றவர்கள், மேருமலை போன்று கலக்கமற்றவர்கள், வீரமுடையவர்கள், சிங்கம் போன்று அச்சமில்லாதவர்கள், அமைதியே  உருவாக உடையவர்கள், அகப் பற்று, புறப்பற்றுகளை அறவே நீக்கியவர்கள். ஐவகை ஒழுக்கங்களை குறையின்றி ஒழுகுபவர்கள், பிற துறவிகளையுப் ஒழுகச் செய்பவர்கள், தம் உயிர் நினைப்பிலே மிகுந்த ஈடுபாடுடையவர்கள், அறவுரை ஆற்றுபவர்கள். மற்றும் துறவளிப்பவர்கள்.....

                   (வளரும்)

-----------------------------27-------------------

 ததாஹி மூல தந்த்ரஸ்ய
          கர்த்தா தீர்த்தங்கர:
           ஸ்வயம்
ததோ அப்யுத்தர தந்த்ரஸ்ய
            கௌதமாக்ய 
            கணாக் ராணி:
உத்த ரோத்தர தந்த்ரஸ்ய
             கர்த்தாரோ
             பஹவ: கிராமத்
ப்ராமண ம்தே அபி ந :
             ஸர்வே
             சர்வக்ஞோக்த்
             யனுவாதின :1

         இவற்றால் நாம் அறிவது வாலறிவன் அறவுரையையே கணதரர் ஆசாரியர் முதலியோர் விளக்கினர். தாமாக ஏதொன்றையும் புதிதாகக் கூறவில்லை என்பதாம்.

         ஜம்பு சுவாமிக்குப் பின் சுதகேவலிகள் ஐவர் (விஷ்ணு, நந்திமித்திரர், அபராஜிதர், கோவர்த்தனர், பத்திரபாகு), பத்துப் பூர்வங்கள் வரை அறிந்த விசாகாச்சாரியார் முதலிய பதினோரு பேர்கள்; 11அங்கங்களை அறிந்த நஷத்திரர் முதலாகிய ஐவர், சில அங்கங்களையே அறிந்த சுபத்திரர் முதலிய நால்வர். ஒரே அங்கம் உணர்ந்த ஐவர் (அர்ஹத்பலி) மாகநந்தி, தரசேனர், புஷ்பதந்தர், பூதபலி ஆகியோர் 621 ஆண்டுகள் வரை அறவுரை ஆற்றினர். பூதபலியோடு மகாவீரர் வீடுபேறடைந்து 683 ஆண்டுகள் முடிந்தன.

            ஜம்பு சுவாமிக்குப் பிறகு திகம்பர சுவேதாம்பர குருபரம்பரை மாறுபட்டு மறுபடியும் பத்திரபாகு சுதகேவலி காலத்து இணைகிறது. அதனால் பத்திரபாகு சுதகேவலிகள் இரு தரப்பினரின் மதிப்பையும் பெற்றவர் என்பது அறியப் படுகிறது. அவருக்குப் பிறகு மறுபடியும் இரண்டும் முற்றிலுமாகப் பிரிந்து தனித்தனியாகி விடுகின்றன. திகம்பர குருகுலம் பத்திரபாகு சுதகேவலிகளை முதன்மையாகக் கொண்டிருக்கிறது. திகம்பர குருகுலம் மூல சங்கம் என்ற பெயர் தாங்கிற்று. தேவ, சேன,  தேசீய முதலிய ஏழு கணங்களும் மூல சங்கத்தின் உட்பிரிவுகளே.

         திகம்பர சுவேதாம்பர பிரிவினைக்குப் பின் 70 ஆண்டுகள் கடந்த பிறகு இரண்டையும் ஒன்று பிணைக்கும் நோக்கத்தோடு யாப்பனீய சங்கம் தோன்றிற்று. இது கர்னாடக தமிழ் நாடுகளின் தொண்டு. இதில் பல சிறந்த ஆச்சாரியார்கள் தோன்றி பல சிறந்த நூல்களை இயற்றியுள்ளார்கள்.

                        (வளரும்)⁠⁠⁠⁠

-----------------------------28--------------------

       பல ஆசாரியர்கள் காலம் வரை அங்க பூர்வ சுத அறிவு ஒலி வடிவிலேயே குரு மாணவ தலைமுறை வழியாகப் பரப்பப்பட்டு வந்தது. அதன் விளைவாக சுத அறிவு பெரும்பாலும் மறைவுற்றது. குணதர ஆச்சாரியர் மேலும் சுத அறிவு குன்றாமல் காக்க  வரிவடிவில் முதல் முதலில் எழுதினார்.

--------------------------------------------------
1. பூமலிய சோகி னீழற்
         பொலிந்த
         வெம்மடிகள்
          முன்னாள்
       ஏம மா முத னூல் 
        சொல்லக்
             கணதரரியன்ற 
              பாவாற்
         றாமொரு வழிநூல் 
          சொல்லக்
                சார்புநூல்
                 பிறருஞ்
                 சொல்ல
            தோமிலா மூன்று 
             நூலுந்
                   துவமெனவு
                   தித்தவன்றே
             (சூடாமணி நிகண்டு)
                      மேற்கூறிய வடிமொழிப் பாக்களின் கருத்தும் இதுவே.

               கல்யாண் முனி
        
       சிகந்தர் (அலெக்ஸாண்டர்) சிந்து நதியைக் கடந்து தட்சசீலத்தை நெருங்கிய பொழுது காடுகளில் பல திகம்பர முனிகள் இருப்பதைக் கண்டார். அவர் ஆசாரியர் தௌலாமஸ் (திருதிசேன்) என்பவரைச் சார்ந்து தன் நாட்டில் அறவுரை ஆற்ற திகம்பரமுனிவர் ஒருவரைத் தன்னுடன் அனுப்புமாறு வேண்டினார். அத் துறவோர் குழுவில் இருந்த கல்யாண் முனிகள் அதை ஏற்று, சிகந்தர் தன் தாய் நாட்டிற்குத் திரும்பிச் சென்ற பொழுது, அவர் கூடவே சென்றார். வழியில் பாபிலோனில் சிகந்தர் நோய்வாய்ப் பட்டார். கல்யாண் முனிகளிடம் அறவுரை கேட்டு உடலை நீத்தார். சிகந்தர் முன்னரே இட்ட கட்டளைப்படி அவரது தளபதி , கல்யாண் முனிகளை ஏதென்ஸ் நகருக்கு அழைத்துச் சென்றார். அங்குக் கல்யாண முனிவர் பல ஆண்டுகள் வரை அறவுரை ஆற்றி அகவை முடிவுற்று உடலை நீத்தார். மன்னர்களுக்கு அளிக்கப்படும் பெரும் சிறப்புகளுடன் கல்யாண் முனிவரின் உடல் எரிக்கப்பட்டது. பின்னர் கல்யாண் முனிவரின் அடிச் சுவடிகளின் சின்னம் ஒரு பாறைமீது பொறிக்கப்பட்டது. இவ்வாறு புளூடார்க் எழுதிய புராதன இந்தியா நூலில் கூறப் பட்டிருக்கிறது.

                            (வளரும்)


-------------------------------29-----------------

                   குணதரர்.

       குருகுலப் பட்டியலில் இவர் பெயர் காணப்படவில்லை. அருகத்பலி ஏற்படுத்திய துறவோர் குழுப் பிரிவுகளில் ஒன்று குணதரர் பிரிவு என்று கூறப்படுகிறது. குணதரர் கி. மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று கூறப் படுகிறது.

         இவர் ஞானப்பிரவாத பூர்வத்தின் பத்தாவது அதிகாரம் மூன்றாம் பிரிவின் "பேஜ்ஜ தோஸ"  பாகுடத்தை கற்றறிந்தவர். "பேஜ்ஜ" என்றால் அவா, "தோஸ" என்றால் வெகுளி. மயக்க வினையின் உட் பிரிவுகளான காம வெகுளிகளே பிறவிக் கடலில் உழலும் உயிர்களின் பெரும் பகைவர். காம வெகுளி மயக்கங்கள் உண்டாதல் அவற்றின் விளைவான வினைக்கட்டு, வினைக்கட்டை அடக்கல்      அழித்தல் மற்றும் புதிய வினை செறிப்பு வகை முதலியவற்றைப் பற்றி 180 பாகத மொழி நூற்பா காதைகளில் விளக்கி இருக்கிறார்.

     இவரது நூல் பெஜ்ஜ தேஸே பாகுடம் என்றும் கஷாய பாகுடம் என்றும் அழைக்கப் படுகிறது. இந்நூலுக்கு மேலும் விளக்கம் தரும் வகையில் 53 நூற்பாக்களை இயற்றினார். நூற் பாவில் பொருள் செறிவு, குறைந்த எழுத்துக்கள், ஐயமின்மை,(கொள்கைத்)துணிவு, பயனுடையக் கருத்து, மேன்மை, குற்றமின்மை, உண்மை ஆகிய நூற்பாத் தன்மைகள் இருக்கின்றன. இவரது நூலுக்கு சூர்ணி சூத்திரங்கள்6000 மும் எழுதப் படாதிருந்தால், புரிந்து கொள்வது அரிது. இவரே நூற்பா இயற்றும் வழி வகுத்தவர் என்று கூறப்படுகிறது. இவற்றால் இவர் சுருங்கக் கூறுதலில் வல்லுனர் என்பது பெறப் படுகிறது. இவர் அறத்தின் மேலிட்ட அன்பு மேலிட்டாலும் மேலும் சுத அறிவு குன்றிவிடாமற் காக்கவும் வரிவடிவம் தந்தார். இதுவே முதல் வரிவடிவில் வந்த சுத நூலாகும். குணதரர் கஷாய பாகுடத்தை இயற்றி ஆர்யமன்ஷீ மற்றும் நாகஹஸ்தி முனிகளுக்குக் கற்பித்தார்.

       கஷாய  பாகுடமே ஆசார்ய குந்தகுந்தரின் நூல்களுக்கு அடிப்படை என்று சமய சார நூலின் இந்தி உரையாசிரியரான ஜெயசந்திரர் தன் உரை முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

                          (வளரும்)

----------------------------31---------------------
   'குந்தகுந்தர் சீமந்தர சுவாமிகளிடமிருந்து தூய உயிர்த் தன்மைகளை அறிந்து அதைப் பரப்பியிராவிட்டால் துறவிகள் எங்கிருந்து நல்லறிவைப் பெறமுடியும் ? என்று 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தேவசேனர் தம் நூலான சாரித்திர சாரத்தில் குறிப்பிட்டுள்ளார். இது அவர் விதேகம் சென்ற செய்தியை வெளியிடுகிறது.

         குந்தகுந்தரது நூல்கள் சௌரசேனி பாகத மொழியில் இயற்றப்பட்டவை. அவர் இயற்றிய நூல்கள் பஞ்சாஸ்திகாயம், பிரவசன சாரம், சமய சாரம், நியம சாரம், பாரஸ அனுவேக்கா, எட்டுப் பாகுடங்கள் மற்றும் பக்திகள்.

         நற்காட்சிக்குப் பொருளான உயிர் உயிரல்லவற்றையும் விளக்கி வீடு பேற்றின் வழியைக் கூறுவன பிரவசன சாரம் பஞ்சாஸ்திகாயம் மற்றும் நியமசாரம். பல பொருள்களின் தனித் தனித் தன்மைகளை அறிந்துதான் ஏற்கவேண்டிய பொருளைக் குறிக் கொண்டு பிற  பொருள்களை நீக்கி விடுதல்  பகுத்தறிவு (பேத விஞ்ஞானம்) எனப்படும்.  சமய சாரம் அதற்கு வழி காட்டியாகித் தன் உயிர்த் தன்மையிலேயே இடைவிடாது ஒழுகும் வழிகளைக் கூறுகிறது. குறைந்த அறிவாற்றல் உடையவர்களுக்கு இவற்றை விளக்குவன எட்டு பாகுடங்கள்.

                      (வளரும்)

-----------------------------30--------------------
    குந்த குந்தாசாரியார்
                     *
மங்கலம் பகவான் வீரோ
     மங்கலம் கௌதமோ
     கணீ
மங்கலம் குந்தகுந்தார்யோ
      ஜைனதர்மோஸ்து
      மங்கலம்!

     ' மங்கலம்' என்ற வட மொழிச் சொல் தீவினை நீக்கத்தை அல்லது நன்மை விளைவைக் குறிப்பிடுகிறது. பகவான் மகாவீரரையும் கௌதம கணதரரையும் அடுத்து குந்த குந்தாசாரியரையும் நன்மைக்குக் காரணமாக ஏற்று, ஒவ்வொரு நற்செயல்கள் இயற்றப்படும் முன் போற்றப்படுதலே குந்தகுந்தரின் பெருமைக்குச் சான்றாகும்.

  'கஷாய பாகுடமும் ', 'ஷட்கண்டாகமும்' உயிரும் உயிரல்லதும் இணைந்து நிற்கையில் ஏற்படும் மாற்றங்களான 'குணஸ்தானம்', 'மார்கணா ஸ்தானம்', காமம், வெகுளி, மயக்கம் முதலியவற்றை விளக்குவன. வீடுபேறு அடைந்த உயிர்களுக்கு இவை கிடையாது என்று கூறுவதோடு அவை நின்று விடுகின்றன. தூய உயிர்த் தன்மையில் இடைவிடாது ஒழுகுதலே அவா நீங்கித் தூய்மை எய்தி வீடுபேறு அடையும் வழியாகும். அதனால் தூய உயிரின் தன்மைகளை விளக்கிய குந்த குந்தரே வீடுபேறடைவதற்குச் சிறந்த வழிகாட்டி ஆனார். அதனால்தான் பகவான் மகாவீரரின் அறவுரை கேட்டு அதை நூற்பா வடிவில் அமைத்த கௌதம கணதரருக்குப் பின் அவர் போற்றப் படுகிறார்.

      குந்தகுந்தர் மூல சங்கத்தைச் சார்ந்தவர். அவருக்குப் பின் வந்த குரு பரம்பரையினர் தங்களைக் குந்தகுந்தர் வழியினர் என்று கூறிப் பெருமை கொள்கின்றனர். அவர் காலம் முதல் நூற்றாண்டு என்று வரலாற்று அறிஞர் பலர் கருதுகின்றனர்.

    தென்னாட்டைச் சார்ந்த குண்டக்கல் அருகில் இருக்கும் கௌண்டகுந்தபுரத்தில் பிறந்தவர். அவரது தந்தை பெயர் கர்மண்டு. தாயார் பெயர் சிரீமதி. துறவு ஏற்கையில் பத்மநந்தி என்று அழைக்கப்பட்டார் என்று தோன்றுகிறது. பின்னர் தான் பிறந்த ஊரின் பெயராலேயே குந்தகுந்தர் என்று அழைக்கப் பட்டார். அவரது குரு ஜினசந்திரர். அவருக்கு ஏலாசாரியார், 'வக்ரக் கிரீவர்','கிருத்த பிரஞ்சர்' என்ற பெயர்களும் வழங்கின.

                           (வளரும்)

----------------------------31---------------------
   'குந்தகுந்தர் சீமந்தர சுவாமிகளிடமிருந்து தூய உயிர்த் தன்மைகளை அறிந்து அதைப் பரப்பியிராவிட்டால் துறவிகள் எங்கிருந்து நல்லறிவைப் பெறமுடியும் ? என்று 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தேவசேனர் தம் நூலான சாரித்திர சாரத்தில் குறிப்பிட்டுள்ளார். இது அவர் விதேகம் சென்ற செய்தியை வெளியிடுகிறது.

         குந்தகுந்தரது நூல்கள் சௌரசேனி பாகத மொழியில் இயற்றப்பட்டவை. அவர் இயற்றிய நூல்கள் பஞ்சாஸ்திகாயம், பிரவசன சாரம், சமய சாரம், நியம சாரம், பாரஸ அனுவேக்கா, எட்டுப் பாகுடங்கள் மற்றும் பக்திகள்.

         நற்காட்சிக்குப் பொருளான உயிர் உயிரல்லவற்றையும் விளக்கி வீடு பேற்றின் வழியைக் கூறுவன பிரவசன சாரம் பஞ்சாஸ்திகாயம் மற்றும் நியமசாரம். பல பொருள்களின் தனித் தனித் தன்மைகளை அறிந்துதான் ஏற்கவேண்டிய பொருளைக் குறிக் கொண்டு பிற  பொருள்களை நீக்கி விடுதல்  பகுத்தறிவு (பேத விஞ்ஞானம்) எனப்படும்.  சமய சாரம் அதற்கு வழி காட்டியாகித் தன் உயிர்த் தன்மையிலேயே இடைவிடாது ஒழுகும் வழிகளைக் கூறுகிறது. குறைந்த அறிவாற்றல் உடையவர்களுக்கு இவற்றை விளக்குவன எட்டு பாகுடங்கள்.

                      (வளரும்)


No comments:

Post a Comment